பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 02, 2024

புதுமைப்பித்தனின் 'புதிய நந்தன்'

 

💙தினம் ஒரு கதை 2/30💙


  “நீங்கள் எழுத நினைக்கும் கதைகளை எப்போதோ புதுமைப்பித்தன் எழுதிவிட்டார்! நாம் இன்னொரு விதமாக அக்கதைகளை எழுத முயல வேண்டும்..” என்பதை ஒவ்வொரு புதிய எழுத்தாளருக்கும் சொல்கிறேன்.

அதன் வழி அவர்கள் தவறாது  புதுமைப்பித்தனின் சிறுகதைகளை வாசிப்பார்கள் எனவும் நம்புகிறேன். பெரும்பாலானவர்கள் இந்த நம்பிக்கையை வீணடிப்பதில்லை.

ஜாதிய கொடுமைகளில் இருந்து மீளவே மதம் மாறினோம்/மாறுகின்றோம் என்று; இன்றுவரை பலர் சொல்லக் கேட்கிறோம். ஆனால் அப்படி மதம் மாறியவர்களே தங்களின் ஜாதிய அடையாளத்தைக் கெட்டியாக பிடித்து கொண்டு இன்னொரு மனிதனை தனக்கு கீழாக பார்த்து புறக்கணிப்பதைப் பற்றி வெளிப்படையாக யாரும் பேசுவதில்லை.

அப்படியான போலி மனோபாவத்தைக் கொண்டவர்களின் முகத்தில் அறைவது போன்ற சிறுகதையை புதுமைப்பித்தன் 1934ஆம் ஆண்டிலேயே மணிக்கொடி இதழில் எழுதியிருக்கிறார்.

இச்சிறுகதை எழுதப்பட்டு தொன்னூறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இந்த மனநிலை கொண்டவர்கள் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அவர்களிடம் தன் ஜாதியின் மீதான பற்று பக்தியைவிடவும் மேலோங்கியே இருக்கிறது.

“எங்கள் மதத்தில் ஜாதி பார்க்கமாட்டோம் வா” என்று யாராவது கூப்பிட்டால், எனக்கு முன்னே உங்களுடன் இணைந்தவர்கள் இன்னமும் ஏன் ஜாதிய அடையாளத்தைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என கேட்டுவிடத் தோன்றுகிறது.

அடிமையாய் இருந்து பழகியவர்களே அதிலிருந்து வெளிவர விரும்பாது இருக்கும் துயரம் இந்தத் தீண்டாமையில்தான் இருக்கிறது.
“ஏய், என்னை தொடாதே..!”, ‘ஐயோ…சாமி நீங்க எங்களைத் தொடக்கூடாதுங்க!” என இருவருமே சொல்லிப்பழகிய பிறகு மாற்றத்தை விரும்புகிறவர்களின் நிலைதான் என்ன என்ற கேள்வியைச் இச்சிறுகதை எழுப்பிவிடுகிறது.

இத்தனை ஆண்டுகள் ஆனப்பின்னும் இச்சிறுகதை ஒரு பேசுபொருளாக இருப்பதற்கு யாரைத்தான் நாம் குறை சொல்ல..?

நிச்சயம் நீங்கள் வாசிக்க வேண்டிய சிறுகதைதான்.

#தினம்_ஒரு_கதை 

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்