பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 01, 2024

மா.அரங்கநாதனின் 'சித்தி'

 

💙தினம் ஒரு கதை 1/30💙

   சித்தி என்பது நபரையோ உறவையோ குறிக்கவில்லை. இங்கே சித்தி என்பது, முழுமையைக் குறிக்கிறது, தன்னிறைவைக் குறிக்கிறது, ஒரு மனிதன் அவன் அவனுக்காகவே ஆத்மார்த்தமாகச் செய்யும் செயலைக் குறிக்கிறது. இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்.

   இங்கு செய்யப்படுகின்ற எந்த ஒரு செயலுக்கு ஒரு நோக்கம் உண்டு; ஆனால் சமயங்களில் அச்செயலின் நோக்கம் என்பதே அந்தச் செயலை செய்வதுதான் என்பதனை சிலரே அறிந்துள்ளார்கள் . அந்தச் செயலை, செய்வது தவிர்த்து அந்தச் செயலை செய்வதற்கு வேறெந்த காரணமும் தேவையில்லை. இதனைத்தான் தன் சித்தி சிறுகதையில் சொல்லியிருக்கிறார் மா.அரங்கநாதன்.

   ஓடுவதில் ஆர்வம் உள்ள நாயகனை ஒரு காவலாளி சந்திக்கின்றார். அவரும் ஒரு காலத்தில் ஓடியவராக தன்னை அறிமுகம் செய்து கொண்டார். நாயகனை, பெரியவர் ஒருவரை சென்று சந்திக்கும்படி சொல்கிறார். நாயகனும் சந்திக்கின்றான். அப்பெரியவர் நாயகனுக்கு ஓடுவதற்கான பயிற்சிகளைக் கொடுப்பதோடு சில ஏற்பாடுகளையும் செய்கிறார். நாயகனும் மெல்ல மெல்ல பல இடங்களில் தன் ஓட்டத்தை நிருபித்து வெற்றி பெறுகிறான் (அவன் வரையில் அவன் ஓடுகிறான் அவ்வளவே) . இந்த ஓட்டம்  ஒலிம்பிக் தங்கத்தை பெற்று தரும் என்று பெரியவர் முதல் பலரையும் எதிர்ப்பார்க்க வைக்கிறது.

  ஆனால் அவ்வாறு, எதன் மீதும் நாயகனுக்கு விருப்பமோ ஆசையோ எதிர்பார்ப்போ இருக்கவில்லை. அவனுக்கு தெரிந்தது எல்லாம் ஓடுவது. அது மட்டுமே அவனை ஒரு முழுமையான மனிதனாக வைத்திருப்பதாக நினைக்கிறான். ஓடுவதைத் தவிர அது கொடுக்கும் எந்தப் புகழும் பிரபலமும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. அவன் ஓடுவதை; ஓடுவதற்காகவே ஓடுகிறான் ! அவ்வளவுதான்.

அவனுக்கு வழிகாட்டியாக இருந்து அவன் மூலமாக விளையாட்டு துறையில் சாதனையை நிகழ்த்தும் எண்ணமும், ஒலிம்பிக் போட்டியில் தங்கத்தை பெறலாம் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்த பெரியவர் இப்போது நாயகனை புரிந்து கொண்டதும் அவன் மீது கோவப்படுகின்றார்.      அவரால் அதைத்தான் இப்போது அவனுக்கு செய்ய முடிகிறது.

அதனைத்தான் எழுத்தாளர் தனது கதையின் முடிவில் வைக்கிறார். ஆனால் அங்கு அந்தக் கதை முடிந்தாலும் நம் வாசிப்பின் வழி அச்சிறுகதை நம்மை வேறொரு இடத்திற்கு; சுய விசாரணைக்கு அழைத்துச் செல்கிறது. நீங்கள் தவறாது வாசித்துப் பாருங்கள்.

“எனக்கு ஓட மட்டுமே தெரியும். அதிலே எனக்கு கிடைப்பதுதான் நான் ஓடுவதற்கு காரணம். நான் எனக்காகவே ஓடுகிறேன். ஓட்டத்தின் சிறப்புத்தான் அதன் காரணம். எனக்கு வேறெதுவும் தெரியாது” என நாயகன் சொல்கிறான்.

எந்த விளைவையும் எதிர்ப்பாராது, நாமும் நமக்கு விரும்பிய ஒன்றை விரும்புகிறோம் என்பதற்காகவே அதனை செய்யத்தோன்றுகிறது.


#தினம்_ஒரு_கதை 1/30
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்