பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 20, 2012

பயணிப்பவனின் பக்கம் 4


வெள்ளைக் காகிதங்கள்



கடந்த வருட இறுதியில் எழுத்தாளர் ஒருவரைப் பற்றிய நினைவுகளைத் தூசி தட்டும் வாய்ப்பு கிடைத்தது. நான் கெடா சுங்கைப் பட்டாணியில் இருந்த சமயம் அந்த எழுத்தாளர் ‘மீண்டும்’ மலேசியா வந்திருந்தார். யார் ஏற்பாடு என்றெல்லாம் அக்கரைக் காட்டவில்லை நான். அவர் வந்துச் சென்ற சில தினங்களில் பத்திரிக்கை எழுத்துகளிலும் சில நபர்களில் வார்த்தைகளிலும் காரசாரமாக வாழ ஆரம்பித்தார் அந்த எழுத்தாளர். அந்த வாரம் நடந்த கெடா மாநில எழுத்தாளர் சங்க சந்திப்புக் கூட்டம் நடந்து முடிந்த பின் கூட்டம் கூடியது. பொதுவாகவே சில இலக்கியக் கூட்டங்கள் எப்படியென்றால்; கூட்டம் முடிந்து வீடு செல்லத்தயாரானப் பின்னர்தான் உண்மையான இலக்கிய கூட்டம் உருவாகும். விடியவிடிய நடக்கும் இந்தக் கூட்டம் சில சமயம் ‘குடி’ய 'குடி’ய-வும் நடந்திருக்கின்றது.

‘அதெப்படிங்க... மலேசிய இலக்கியம் தழைக்கலைன்னு சொல்லியிருந்தாக்கூட பரவாலை...ஆனா... மலேசிய இலக்கியம் இன்னும் முளைக்கலைன்னு சொல்லலாம்..? தப்புதானே... நம்மலும் வெக்கமில்லாம இவங்களையெல்லாம் மலேசியாவுக்குக் கூட்டி வந்து மாலை மரியாதை செய்யறோம்...’

இது ஒட்டுமொத்த இலக்கியவாதிகளில் குற்றச்சாட்டு இல்லை. ஒரு சிலரில் மனவருத்தமும் ஒரு சிலரின் குறுஞ்செய்திக் கவலையும். எழுதுபவர்கள் மட்டும் எழுத்தாளர்கள் இல்லை...இப்படி எட்டுகட்டி சொல்பவர்கள்கூட தங்களை அப்படித்தான் சொல்கின்றார்கள் என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன். இப்படி அந்த எழுத்தாளர் பேசியக்கூட்டத்திற்குச் செல்லாத ஒருவர்; சென்ற ஒருவரிடம் அதைப் பற்றித் தெரிந்து உள்ளம் பொங்கி மேற்சொன்னபடி புகார் குறுஞ்செய்தியை அனுப்பிகொண்டிருந்தார். அவரின் உள்ளம் இரண்டு நாள் முன்னதாகவே பொங்கியிருந்தால் அவரும் அந்த எழுத்தாளரின் நிகழ்ச்சிக்கு சென்று உண்மை நிலவரத்தை புரிந்திருப்பார். ஒரு வேலை கோலாலும்பூர் தலைநகருக்கும் கெடா சுங்கைப் பட்டாணி சிறுபட்டிணத்திற்கும் 5 மணிநேர பேருந்துப்பயண இடைவேளை என்பதால் இம்மாதிரி தவறானப் புரிதலுக்கு சிலசமயம் பஞ்சம் வருவதில்லை. இதில் தற்போதைய சந்தோஷம் என்னவென்றால்...

“தம்பி முயற்சி செய்து பாருங்க.... உங்களால் மாதம் ஒரு சின்ன இலக்கியக் கூட்டம் ஏற்பாடு செய்ய முடிந்தால் கட்டாயம் ஒவ்வொரு மாதமும் நான் வந்து கலந்துக்கறேன்... நான்கு ஐந்து பேராகா இருந்தாலும் பரவாலை... இன்றைய இளையத்தலைமுறையிடம் இலக்கியத்தைக் கொண்டுசெல்ல சின்னதா ஏதும் செய்ய முடிந்தால் நல்லதுதான்” எனச் சொல்லி இலக்கியம் குறித்து ஒவ்வொரு மாதமும் இப்படிப் பயணிக்கத் தயாராகும் கெடாவைச் சேர்ந்த பாலமுருகன் கேசவன் போன்றோர் குறைவுதான். இந்தக் குறைவின் அர்த்தம் குறைவிற்கும் குறைவான குறைந்த குறைவு எனப்பொருள். அதற்கான களம் இயற்கையாகவே தொடங்க ஆரம்பித்து விட்டது கூடிய விரைவில் அது தொடரும்.

தொடக்கத்தில் மேற்சொன்னக் குற்றச்சாட்டுக்குச் சொந்தமானவர் எழுத்தாளர் பிரபஞ்சன். இதன் உண்மையை ஆராயும் முன்பாக இவர் மீது தவறான எண்ணம் வளர்ந்தது என்னுள். இது எந்த அளவுக்கு என் வளர்ச்சியைத் தடைசெய்யும் என நான் உணர்ந்திருக்கவில்லை. உடன் இருந்தவர்களும் அதனை உணர்த்தும் நிலையில் இல்லை. இருந்திருக்கலாம் ஒருவேளை அந்த சங்கம் சரியாகச்செயல்பட்டிருந்தால்...........

“சங்கம் சரியா இயங்கலைன்னு நீ பார்த்தியா...”

“மன்னிச்சிடுங்க.. சங்கம் அமோகமா வளர்ந்து பல இளம்தலைமுறைப் படைப்பாளர்களை வளர்த்திருப்பதை நான் கவனிக்கலை மறுபடியும் மன்னிச்சிடுங்க...”

0 0 0

சமீபத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் மலேசியா வந்திருந்தார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாடு என நினைக்கின்றேன். அவரைச் சந்தித்து இலக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்குப் பேட்டியெடுக்க நானும் உடன் செல்லவேண்டி இருந்தது. அவரை சந்திக்க மனமில்லாததாலும் முன்னமே அவரைப் பற்றிய எண்ணத்தின் வருகையாலும் செல்வதைத் தவிர்த்தேன். பின் வேறு வழியில்லாமையால் ‘ குரல் பதிவுக் கருவியை’ கையிலும் கடுப்பை மனதிலும் சுமந்துகொண்டுச் சென்றேன்.

அவர் தங்கியிருக்கும் விடுதிக்குச் சென்றோம். மிகுந்த மரியாதையுடன் எங்களிடம் உரையாடினார். கேட்கும் கேள்விகளுக்குத் தேவைக்கு அதிகமானப் பதில்களையும் கொடுத்தார். அவர் பேச்சில் இருந்து அவரின் படைப்புகளை இதுவரையில் படிக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி எழத்தொடங்கியது. எந்த ஒரு படைப்பாளி குறித்தும் மூன்றாம் தர வாக்குமுலத்தை வைத்து மட்டுமே அவரையும் அவரது படைப்புகளையும் எடைபோடுவதும் உதாசினப்படுத்துவமும் நமது அறியாமையே என அப்போது புரிந்தது.

வழக்கம் போல் சம்பளத்தின மறுநாள் புத்தகக்கடைக்குச் சென்றிருந்தேன். எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகங்கள் மூன்றினை வாங்கிய என்னைக் கண்டதும் கடைக்காரருக்கு மகிழ்ச்சிதான். அவர் வைத்திருந்த சுஜாதா புத்தகங்களைக் காலி செய்த புண்ணியவானும் விற்பதற்கு சில புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்திய பாக்கியசாலியும் நான்தான். அங்குதான் பிரபஞ்சன் எழுதிய ‘நேற்று மனிதர்கள்’ புத்தகத்தை வாங்கினேன். வாங்கிய புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்திடும் பழக்கமில்லை எனக்கு. அதற்கென ஒரு நேரம் வரும் என நம்புகின்றவன் நான். அதற்காக “என்னது காந்தி செத்துட்டாரா” என்ற கட்சியா என கேட்காதிங்க...! எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.

வழக்கம் போல் பிரபஞ்சன் புத்தகத்தை தவிர வாங்கிய எஸ்.ரா வின் புத்தகங்களைப் படித்து முடித்தேன். இரண்டு வாரங்களுக்கு முன் அதிகாலை 2.30க்கு வேலைக்கு செல்ல வேண்டியக் கட்டாயம். அன்றையத் தினம் சரியாகத் தூங்கியிருக்கவில்லை. வேலை காலை 6 மணிவரை என்பதால்; அவ்வபோது வரும் தூக்கத்தைத் தவிர்க்க அவசரமாக தேடியக் கைக்கு ‘நேற்று மனிதர்கள்’ கிடைத்தார்கள். கையில் புத்தகத்துடன் மனதில் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வேலைக்குச் சென்றேன். அதிகாலை 4 மணிக்கு வழக்கம் போல நித்திரை என்னை பத்திரப்படுத்த வந்ததை உணர்த்து ‘நேற்று மனிதர்கள்’களைத் திறந்தேன்.

மொத்தம் 17 சிறுகதைகள் கொண்ட புத்தகத்தை படிக்கபடிக்க அப்போதையெ தூக்கம் மட்டுமட்டுமல்ல; அன்றையத் தூக்கத்தையும் இழந்திருந்தேன். குறிப்பாக ‘கருணையினால்தான்’ கதையை படித்து முடித்ததும் என்னையறியாமலே அழத்தொடங்கினேன். சிறுவயதில் சினிமா பட நாயகன் அழும்போது அழுத அழுகைக்கும் இன்றைக் கதையைப் படித்து அழுத அழுகைக்கும் என்ன வித்தியாசம்...

முன்னது அறியாத வயது...! ஏமாற்றிவிடலாம்...

பின்னது அறிந்த வயது...! புரியவைக்கலாம்...

‘கருணையினால்தான்’ சிறுகதை வலியால் துடிதுடித்து இறந்து கன்றுகுட்டியை ஒரே மூச்சில் சாகடிக்கலாம் என்ற வகையைச் சார்ந்தது. அப்பாவிச் சிறுவன் ஒருவன் சந்தர்ப்பச் சூழலால் கொலை செய்கின்றான். வருந்துகின்றான். தான் செய்தது பாவம் என கண்ணீர்விடுகின்றான். சில தவறானத் தரப்பினரால் பாதுகாக்கப்பட்டு ஒரு சமயம் காவல்துறையினரிடம் கைதாகிகின்றான். அவனுக்கும் அவனைக் கைதுசெய்த குழுவில் உள்ள ஒரு போலிஸுக்கும் பேச்சு வார்த்தை ஆரம்பமாகின்றது. அவன் பேச்சு அவன் செய்த நியாயத்தையும் தான் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பற்றியும் உணரவைக்கின்றது. தான் செய்த கொலைக்கான தண்டனையை ஏற்க அவன் தயாராக இருந்தாலும் அவன் மீது சுமத்தப்பட்டிருக்கும் மற்ற பொய்யானக் குற்றச்சாட்டுகளில் இருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது. அணுஅணுவாய் அவன் சித்திரவதை செய்யப்படுவான்; என்ற எண்ணம் எழுகின்றது அந்த போலிஸுக்கு. அவனைக் காப்பாற்ற ஒரே வழிதான் என்பதை அறிந்து, அவனை சுடுகின்றான் போலிஸ். கடைசி வரி ‘ஒரு சிறுவனைக் காப்பாற்றிவிட்ட நிம்மதி தேவாவுக்கு(போலிஸுக்கு)மனம் மட்டும் அழுதுக்கொண்டிருந்தது’ என கதை முடிகின்றது.

அழுத கண்ணால்; பொறுக்காத கைவிரல் உடனே குறுந்தகவல் அனுப்பத் தொடங்கியது.

“வணக்கம் அண்ணெ, பிரபஞ்சனின் கருணையினால்தான் கதையைப் படித்தேன். கண்ணைக் கலங்கச் செய்தது”

காலை 6 மணிக்கு அனுப்பியக் குறுஞ்செய்திக்கு மதியம் பதில் வந்தது;

“அது பிரபஞ்சனின் முக்கியமான கதைகளில் ஒன்று”

ஏனோத் தெரியவில்லை கண்ணீர் கொடுத்த கதையைக் குறித்து பகிர ஆசைபட்டேன். கண்முன்னே பாலமுருகன் கேசவன் தெரிந்தார். பதிலும் அனுப்பினார். என்னைப் போன்ற வளரவேண்டி முயற்சிப்பவர்கள் கண்ணுக்கு ஒரு சிலரே தெரிகின்றார்கள். அதில் எனக்கு தெரிந்த இருவரில் ஒருவர் இவர் மற்றொருவர் நவீன். ஏன் இவர்கள்தான் என யோசித்தால் இரண்டு பதில் கிடைக்கலாம்..

1. முன்னவர்கள் என யாரும் இருக்கவில்லை....

2. முன்னவர்கள் எனப்படுகின்றவர்கள் யாரையும் அழைக்கவில்லை....

தொடர்ந்து மற்ற கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். கதைகளில் இவர் கையாண்ட வரிகள் மேலும் என்னைக் கவர்ந்தன. அவற்றில் சில கவிதைகளாகவும் பல நேரம் கதைகளை நகர்த்தும் நங்கூரமாகவும் (நங்கூரம் நகருமா.... கதைகளைப் படித்தால் தெரியும்...). அதன் வாங்கியங்கள் கதைகளின் ஆதாரங்களாகவும் அலட்சியத்தின் அறிமுகங்களாகவும் தெரிகின்றன.

கணவன் மனைவி உறவு குறித்த கதையொன்றின் முடிவு ஆச்சர்யத்தில் இருந்தாலும்; நடைமுறைக்கும் உதவும் வகையில் இருந்தது. இரண்டு ஆண்டு பிரிவுக்கு பிறகு வரும் கணவனுக்கு அதிர்ச்சி. மனக்கசப்பால் இருந்த மனைவி இன்று வேறு ஒருவனுடன் மனதாலும் இணைந்து வாழ்கின்றாள். அவமானம் தாங்காது தற்கொலைக்கு வெளியூர் செல்கின்றான் இவன். உள்ளூரில் இருந்தாலும் இறந்தாலும் .. மனைவியின் செயலால் இவன் அவமானப்படுவதை இவன் விரும்பவில்லை. இடையில் ஓரு வசனம் வருகின்றது;

“ஏங்க.. என் முகத்தை நீங்களும்.... உங்க முகத்தை நானும் பார்த்துகிட்டே எவ்வளவு காலம் இருக்கிறது...நமக்கொரு குழந்தை ஏன் இல்லே... மூணு வேளையும் இட்லியே தின்னுக்கிட்டு இருக்கற மாதிரி ஐயோ...”

மனைவி சொல்லும் இந்த இட்லி உதாரணமே சொல்லிவிடுகின்றது. அவர்களுக்குள் உண்டாகியிருக்கும் பிரச்சனையை. தற்கொலைக்கு தயாரானவன் வெளியூர் விடுதியொன்றில் ஒரு பெண்ணை சந்திக்கின்றான். கணவனால் விபச்சாரம் செய்கின்றவள் அவள். அன்றைய இரவு கட்டிலில் நடக்கவேண்டிவை மாறி மொட்டை மாடியில் நடந்தன உரையாடல்களாக. வாழ்க்கையும் உலகமும் ஒரு பொண்ணோட முடிஞ்சி போறது இல்லை என்பது போன்ற அவளின் உரையாடல் இவனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது. இறுதி உரையாடல்;

வாடிப்போன மல்லிகைச் சரத்தை எடுத்து எறிந்தாள்...

“பாவம்”

“எது?”

“பூக்கள்தான்”

“வாடிப்போச்சி. அது கடமையை முடிச்சிட்டது. புதுசா எனக்குன்னு பூ பூத்து தயாரா கடையில் காத்துகிட்டு இருக்குங்க....” என்றாள்.

இந்த வாக்கியங்கள் எனக்கு கலீல் ஜிபரான் சொன்ன கதை ஒன்றை நினைவுப்படுத்தியது...

தான் தூய்மையாக படைக்கப்பட்டதாகவும்; தூய்மையாகவே என்றும் இருப்பேன் எனவும்; அசிங்கம் என்னை தொட நேர்ந்தால் எரிந்து சாம்பலாவேன் எனவும் சொன்னதாம் ஒரு வெள்ளைத்தாள். அவ்வழியே வந்த கறுப்பு மையிடம் தனது வெண்மையைப் புகழ்ந்து.; தன் கற்பைப் பறைசாற்றி சிரித்ததாம்; முறையே பல வண்ணங்களில் அருகிள் வந்த பேனாக்களை விரட்டி; தன் வெண்மை;கற்பு;பரிசுத்தம் போன்று சொன்னதையே திரும்ப திரும்பச் சொன்னதாம் அந்த வெள்ளைத்தாள்; எந்த பேனாவும் அருகிள் வராமல் போனது; இறுதிவரை அந்த வெள்ளைத்தாள் வெண்மையாக; பரிசுத்தமாக;கற்போடு;தூய்மையாக இருந்ததாம்...அதே சமயம் வெற்றுத்தாளாகவும்.

இப்படி வெண்மை; கற்பு; பரிசுத்தம் எனப் பேசி....வெற்றுத்தாளாக இருப்பதைவிட வலித்தாலும் பரவாயில்லை அனுபவங்கள் அவசியம்தான் என சொல்லும் நபர்களில் நானும் ஒருவன்.



நன்றி
இதழ் 28
ஏப்ரல் 2011

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்