- உஸ்... சத்தம் போடு -
எனக்கு என்னிடம்
மிகவும் பிடித்தது
என் குரல்
ஆனால்
அது முக்கியமல்ல
எப்போதிருந்து பிடிக்கிறது
என் சொல்கிறேன்
அதுதான் முக்கியம்
ஒருநாள்
பேசியதற்காக
நாக்கில் சூடு வைத்தார்கள்
என்றாவது
பேசுவேன் என்பதற்காக
கழுத்தை நெரித்தார்கள்
இனியெப்போதும்
பேசக்கூடாது என்பதற்காக
வாயில் அமிலத்தை ஊற்றினார்கள்
அப்போதுதான்
புத்தி வந்ததெனக்கு
இந்த உலகில் நான்
முதலாவதாகவும் முழுமையாகவும்
நேசித்து
பாதுகாத்து
பரப்ப வேண்டியது
என் குரலைத்தான்
அதுதான் என் அடையாளம்
நான் சொல்லப்போவதுதான்
என் வரலாறு
எந்த உயரத்திற்கும்
அது கேட்க வேண்டும்
எவர் உயரத்தையும்
அது அசைக்க வேண்டும்
எப்போதெல்லாம்
அதிகாரம் ஒன்றை அழிக்க
நினைக்கிறதோ
அப்போதெல்லாம்
அரிதாரம் பூசி ஆக்ரோஷம்
கொள்ள வேண்டும்
யுத்தங்களை முறியடிக்க
சத்தங்களைத் தயார் செய்வோம்
வானிடிக்க பேசுவோம்
வானமே இடிந்தாலும்
பாடுவோம்...
0 comments:
கருத்துரையிடுக