பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 02, 2024

- வாசிப்பின் கொண்டாட்டம் –




(பொறுப்பு துறப்பு - 

தினமும் பக்கம் பக்கமாக வாசித்து எழுதுகின்றவர்களுக்கு மத்தியில் இதனை எழுத கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. மற்றபடி வாசிப்பின் சுவையைக் கொஞ்சமும் உணராமல் தங்களை எழுத்தாளர்கள் எனவும் படைப்பாளிகள் எனவும் ஊடக வெளிச்சத்தில்  சிரித்தபடி நிற்பவர்கள் பற்றி எந்த அக்கறையும் இல்லாமலே இதனை எழுதுகிறேன் )


பொம்மி பிறந்ததும் நெருங்கிய நண்பர்கள் இப்படி சொன்னார்கள், “உனக்கு குழந்தை பிறந்திருச்சி.. இனிமேல் நீ எப்படி புத்தகங்களைப் படிப்பன்னு பாக்கறோம்.. நேரமே கிடைக்காது இனி உனக்கு….”


அவர்கள் சொன்னது உண்மைதான். ஆனால் அந்த உண்மை தலைகீழாக என்னிடம் நடக்கிறது. இன்னும் கூடுதலாக புத்தகங்களை வாசிக்க முயல்கிறேன். முன்பு வரை என் தனிப்பட்ட காரணங்களுக்குகாக வாசித்தேன். ஆனால் இப்பொழுது, என் பொம்மிக்கு நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யவேண்டும் என்ற கூடுதல் கவனத்தோடும் கூடுதல் கொண்டாட்டத்தோடும் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன். எழுதுகிறேன். பேசுகிறேன். அவள் வளர்ந்து வரும் சமயத்தில் அது அவளுக்கும் புலப்படும்.


2024-ம் ஆண்டு தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் வாசித்த புத்தகங்களை மீண்டும் ஒருமுறை எடுத்துப் பார்க்கிறேன். ஆச்சர்யமாக இருந்தது. வாசித்த புத்தகங்களை முதற்கட்டமாக அடுக்கும் சிறு புத்தக அடுக்கு நிறைந்திருந்து. வழக்கமாக ஓராண்டில் வாசித்த புத்தகங்களை கைக்கு எட்டிய சிறிய அலமாரியில் அடுக்கி வைத்து அடுத்த ஆண்டில் அவற்றை அதற்குரிய இடங்களில் தனித்தனியே அடுக்குவேன்.


கடந்த ஆறு மாதங்களில் வாசித்த புத்தகங்களைப் பார்க்கலாமா?


நாவல்கள்

1. தாரா – ம.நவீன்

2. கரிப்புத் துளிகள் – அ.பாண்டியன்

3. கையறு – கோ.புண்ணியவான்

4. ஆழம் – சி.முத்துசாமி

5. பிறிதொரு நாள் – ரெ.விஜயலெட்சுமி

6. வாழும் மாமலை – அமிதாவ் கோஷ் (தமிழாக்கம் கண்ணன்)

7. பனியரசி – ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் (தமிழாக்கம் சூ.ம.ஜெயசீலன்)


சிறுகதைகள்

8. தேவதைகளற்ற வீடு – கே.பாலமுருகன்

9. முரண் – ந.பச்சைபாலன்

10. இளந்தமிழன் சிறுகதைகள் – இளந்தமிழன்

11. மிட்டாய்க் கதைகள்  - கலீல் கிப்ரன் (தமிழாக்கம் என்.சொக்கன்)


கவிதைகள்

12. துப்பாக்கிக்கு மூளை இல்லை – எம்.ஏ.நுஃமான்

13. அகப்பறவை – பூங்குழலி வீரன்

14. மங்கிய நீலப் புள்ளி – சந்துரு

15. வாடியது கொக்கு – ஹைக்கு கவிதைகள்


பிற

16. எழுத்தாளராக இருப்பது எப்படி – ஆர்.அபிலாஷ்

17. மேடைப் பேச்சின் பொன்விதிகள் – செல்வேந்திரன்

18. இலக்கியமும் இலக்கியவாதிகளும் -  வண்ணநிலவன்

19. பெருங்கனவு காணத் துணியுங்கள் – அங்கூர் வரிக்கூ (தமிழாக்கம் நந்தினி)

20. படிப்பது சுகமே ! -  வெ.இறையன்பு

21. On Writing Well – William Zinsser

22. How to enjoy your life and your job -  Dale Carnegie


மேற்கொண்டு, வாசித்த சில புத்தகங்களைப் பொதுப்பட்டியலில் சேர்க்க முடியாது. அது முழுக்க முழுக்க என் அகம் சார்ந்த தேடலுக்காக நான் வாசிப்பது. அது வேண்டாம். அதனால்தான் அவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. மேற்சொன்ன கணக்கிலேயே வைத்து கொள்வோம்.


இவை தவிர (புத்தகங்களாக அல்லாமல்) வாசித்த சிறுகதைகள் கட்டுரைகள் கவிதைகளும் உள்ளன. 


மற்றபடி அடுத்த ஆறு மாதங்களுக்கான ‘புத்தக வாசிப்பு’ பட்டியலையும் தயார் செய்துள்ளேன். வாசிக்கும் போது மனம் அந்தப் பட்டியலை பின்பற்றுமா அல்லது அதன் தன் விருப்பப்படி புத்தகங்களைத் தேர்ந்தெடுக்குமா என இப்போது தெரியவில்லை. ஆனாலும் நாம் திட்டமிடலை தள்ளிப்போடவும் தவிர்த்துவிடவும் கூடாதுதானே.


பட்டியலை வாசிக்க எனக்கே அச்சர்யமாக இருக்கும் விடயம் என்னவெனில், இந்த ஆறுமாதங்களில் எப்பொழுதும் என் வாசிப்பு பட்டியலில் இருக்கும் எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருசஷணனின் புத்தகங்கள் இல்லை. அவர்களின் இணைய தளத்தில் தினம் வாசித்தாலும் புத்தகமாக தொகுத்தவற்றை வாசிப்பதில்தானே முழுமை இருக்கிறது.


இவ்வாண்டு தொடக்கத்தில். மாதம் ஒரு நாவலை வாசிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அதன் படி ஒவ்வொரு மாதமும் ஒரு நாவல் என வந்து; கூடுதலாக ஏழு நாவல்களாக அவை அமைந்துவிடடன.


வாசிப்பில் ஒரு ரகசியம் இருக்கிறது. Size doesn’t matter ! என சொல்வார். ஆனால் வாசிப்பில் அந்த சைஸும் ஒரு மேட்டர்தான் !.


எடுத்த உடனே இருநூறு முன்னூறு பக்க புத்தகங்களையோ பேருக்கு வாசிக்கிறேன் என ஐநூறு ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவலை திறந்து வைத்து உட்கார்ந்தீர்கள் என்றால் நீங்கள் தொலைந்தீர்கள். உங்களால் ஐம்பது பக்கங்களைக் கூட வாசித்து கடக்க முடியாது. கண்கள் வலிக்கும், காதுக்குள் சத்தம் கேட்டு தொந்தரவு செய்யும், முதுகு வலிக்கும், வாசிப்பதைவிட முக்கியமான வேலைகள் இருப்பதை மூளை நினைவுப்படுத்தும். ஆக எச்சரிக்கை அவசியம்.


முதலில் ஐம்பது பக்க புத்தகங்களை வாசிக்க தொடங்குங்கள். சிறுகதைப் புத்தகத்தில் தினம் ஒரு சிறுகதை என வாசியுங்கள். கவிதைத் தொகுப்பில் தினம் சில பக்கங்களில் உள்ள கவிதைகளை வாசியுங்கள்.


வாசிப்பின் சுவையை நம் மனம் உணரவேண்டும். அதை ஒரு தொந்தரவாக அது நினைத்துவிடக்கூட்டது. என் வாசிப்பு பட்டியலைப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் சில அதிக பக்கங்கள் உள்ள புத்தகங்களுக்கு பின் குறைந்த பக்கங்கள் கொண்ட புத்தகங்களை நான் வாசிப்பேன். அது நம் வாசிப்பில் சோர்வு தட்டாமல் இருக்க உதவும்.


கூடுதலாக; குறைந்த பக்கங்கள் கொண்ட புத்தகத்தை நம்மால் சீக்கிரமே வாசிக்க முடியும். (ஆனால் உண்மையில் பத்து-பதினைந்து பக்கங்களைக் கூட இங்கு பலர் வாசிக்க உயிரை பணையம் வைப்பது போல கற்பனை செய்து கொள்கிறார்கள் என்பது வேறு விசயம்) . அப்படி வாசித்து முடித்ததும் நமக்கு கிடைக்கும் மனநிறைவை நாம் கொண்டாட வேண்டும். அது நம்மை அடுத்த புத்தகத்தைத் தேடி ஓட வைக்கும். அப்படியே மெல்ல மெல்ல புத்தகங்களின் பக்க எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போகலாம். அங்கிருந்து செவ்விலக்கியங்கள், எழுத்தாளர் பரிந்துரைகள் போன்றவற்றில் இருக்கும் பெரிய புத்தகங்களுக்கு நாம் செல்லலாம்.


எல்லாவற்றுக்கு அடிப்படை; அடுத்தவர்களை வாசிக்கச்சொல்லி கைக்கட்டி நின்று அதிகாரம் செய்யாமல், அவர்களுடன் இணைந்து வாசிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவர்களைவிட அதிகமாக வாசிக்க வேண்டும்.

வாசிப்பதற்கு ஒரு நோக்கத்தை ஒரு போட்டியை உருவாக்கி கொள்ளலாம்.


 இந்த ஆண்டு நான் குறைந்தது இத்தனை புத்தகங்களையாவது வாசித்திருப்பேன் என நம்மிடமே நாம் சவால் விடலாம். நம்மையே நாம் வெல்வதைவிட வேறென்ன தன்முனைப்பு நமக்கு இருந்துவிட போகிறது சொல்லுங்கள். 


அதோடு வாசிக்கின்றவர்களோடு நட்பை வளர்த்து கொள்ளுங்கள். புத்தகங்களைக் குறித்து உரையாடுங்கள். 


ஒரு விளையாட்டாக கூட நாம் இதனை தொடங்கலாம். வாசித்தால் வீடியோவில் வருவோம் , பரிசு கொடுப்பார்கள் என்பதை எல்லாம் தாண்டி. ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுங்கள். (சரி நமக்கான புத்தகங்களை எப்படி தேர்ந்தெடுப்பது? இதுபற்றி இன்னொரு நாள் விரிவாகவே எழுதுகிறேன்)


 எப்பொழுது வாசித்த தொடங்கினீர்கள் என எழுதுங்கள். தினமும்  உங்களால் எத்தனைப் பக்கங்கள் வரை வாசிக்க முடியும் என நீங்கள் நம்புகிறீர்கள். குறைந்தது பத்து பக்கங்கள் என வைத்து கொள்வோமா? புத்தகத்தின் பக்கங்களில் இருந்து உங்களால வாசிக்க முடிந்த பத்து பக்கங்களை வகுத்துப் பாருங்கள். எத்தனை நாட்களில் இந்தப் புத்தகத்தை உங்களால் வாசிக்க முடியும் என ஒரு கணக்கு உங்களிடம் வந்துவிடும்.


 அப்புறம் என்ன உங்கள் குலதெய்வத்தை வேண்டி கொண்டு வாசியுங்கள். தினமும் பத்து பக்கங்கள் வாசிக்காவிட்டால் உங்கள் குலதெய்வமே உங்கள் கண்ணை குத்திவிடும்.


நீங்கள் திட்டமிட்டபடி வாசித்து முடித்துவிடுவீர்கள். இன்னும் சொல்லப்போனால்; குறிப்பிட்ட கெடுவிற்குள்ளேயே நீங்கள் வாசித்து முடித்துவிடும் அதிசயம் நடக்கும். பத்து பக்கங்களையும் தாண்டி நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

அவ்வளவுதான் .

சரி வாசித்துவிட்டீர்கள். அடுத்த என்ன?

 அதற்கு பிறகுதான் எல்லாமே இருக்கிறது நண்பர்களே. எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.


 வாசிக்கின்றவர்களோடு உரையாடி கலந்துரையாடி வாசிப்பையும் வாசிக்கின்றவர்களை நாம் கொண்டாடுவோம். நம்மைத் தவிர நம்மை வேறு யார்தான் கொண்டாடுவார்கள்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்