பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 23, 2024

மாணவர்கள் சிறுகதைப் பட்டறை




 சமீபத்தில்  புத்திரி தித்திவங்சா, இடைநிலை பள்ளிக்கு (SMK PUTERI TITIWANGSA) அழைத்திருந்தார்கள். அப்பள்ளி மாணவர்களுக்கு சிறுகதை எழுதும் பட்டறையை வழிநடத்தினேன்.

ஆசிரியை சுகந்தி அவர்கள், இப்பட்டறையை ஏற்பாடு செய்தார். அவருடன் ஆசிரியை தனம் அவர்கள், அவரின் பள்ளிக்கூடமான டத்தோ இப்ராஹிம் யாக்கோப் இடைநிலை பள்ளியில் (SMK DATO IBRAHIM YAACOB) இருந்து சில மாணவர்களையும் அழைத்து வந்திருந்தார். 


  சிறுகதைகளை எழுதுவதற்கு முன்பாக; ஏன் சிறுகதைகளை நாம் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியுடன் என் பட்டறையைத் தொடங்கினேன். மாணவர்கள் பரீட்சைக்கு எழுதுவிருக்கும் கதைகளுக்கு முன்பாக கதைகள் என்றால் என்ன? ஏன் கதைகள் எழுதப்படுகின்றன? யார் எழுதுகிறார்கள்? யாருக்காக எழுதுகிறார்கள் என மாணவர்களுடன் பேசினேன்.

 மாணவர்களுக்கு சில உதாரண சிறுகதைகளை சொல்லச்சொல்ல அவர்களுக்கு கதைகள் மீதான ஆர்வம் அதிகமானது. அதன் பின் அவர்களுக்கு கதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள், தொடர்கதை போன்ற வடிவங்களை விளக்கினேன்.





 சிறுகதை எழுதுவதற்கான அடிப்படை யுக்திகளைச் சொல்லி எப்படியெல்லாம் அதனைப் பயன்படுத்தலாம் என உதாரணங்களைச் சொன்னேன். பின் அந்த யுக்திகளைப் பயன்படுத்தி மாணவர்களும் கதைகளை எழுதுவதற்கு வசதியாக குழுக்களாக மாணவர்களை பிரித்தோம். அவர்களுக்கு இருபது நிமிடங்கள் கொடுத்து எழுத வைத்தோம்.

 ஒவ்வொரு குழு மாணவர்களும் தங்களின் படைப்பை வகுப்பின் முன் பகிர வேண்டும்.

மாணவர்களால் கதைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. எங்கே தொடங்குவது எப்படி கதையை அமைப்பது எப்படி முடிப்பது போன்றவற்றை மாணவர்களே பேசினார்கள். சில மாணவர்களின் படைப்புகள் சினிமா பாணியிலும் இருந்தன. அவற்றை எப்படியெல்லாம் நம் கதைகளாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனக்கூறினேன்.

பின் ஆசிரியை தனம், பரீட்சைக்கு எழுத வேண்டிய சிறுகதைகள் எப்படி அமையவேண்டும் மற்றும் தன் புள்ளி விபரங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

நிறைவாக;

 பள்ளியில் இருந்து எனக்கு பழக்கூடையும் சான்றிதழும் வழங்கினார்கள். நானும் வழக்கம் போல இரு பள்ளிக்கூட நூல் நிலையத்திற்கும் எனது ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவது எப்படி’ என்ற புத்தகங்களையும் கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய ‘பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம்’ என்ற கவிதைத் தொகுப்பை வழங்கினேன். 

 இந்த மாணவர்களில் சிலரேனும் பரீட்சைகளைத் தவிர்த்தும், சிறுகதை எழுதுபவர்களாக வந்தால் மகிழ்வேன். அதற்கு என்னளவில் செய்ய முடிந்ததை நானுமே செய்வதற்கு தயாராய் இருக்கிறேன்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்