பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 07, 2022

- இரத்தக்கறை -

பல தடவைகள். பல முயற்சிகள். ஒன்றும் சரிவரவில்லை. பலரின் ஆலோசனைகள். அறிவியல் விளக்கங்கள். எதுவும் உதவவில்லை. நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. தயார்தான். ஆனால் திருப்தி இருக்கவில்லை.

கையில் கிடைத்த எத்தனையோ வாசனைத் திரவியங்களைக் கையில் ஊற்றினாலும் வேலைக்கு ஆகவில்லை. அடுத்த ஐந்து நிமிடத்தில் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடுகிறது.

உயிர் காக்கும் பாதுகாவலர்களுடன் நறுமணம் காக்கும் சிலரும் வாசனையைத் தெளித்துக்கொண்டே வருகிறார்கள். சரியாக ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவேளையில் அவர்கள் வாசனையை அவருடலில் எதார்த்தமாகவும் யாருக்கும் தெரியாத கவனத்துடன் தெளிக்கிறார்கள்.

இன்று இந்நாட்டின் முக்கியத்தினம். அதனை அவர் மாற்ற விரும்பவில்லை. கொடியேற்றினார். அனைவரும் வாழ்த்துப்பாடல்களைப் பாடுகிறார்கள். ஆள் உயர கூண்டு கொண்டுவரப்பட்டது.

கூண்டின் உள்ளே நூறு புறாக்கள் இருக்கலாம். அனைத்தும் வெண் புறாக்கள். இன்றொருநாள் மட்டும் அவை சமாதானப்புறாக்கள். அவர் அந்தக் கூண்டை திறக்கவும், சமாதானப்புறாக்கள் சுதந்திரமாய் பறக்கலாயின.

கூண்டிலிருந்த கடைசி புறா பறக்கவும், அவர் கைகளில் மீண்டும் துற்நாற்றம் வீச ஆரம்பித்தது. ஐந்து நிமிட இடைவெளி இன்றி தொடர்ந்து வீசத்தொடங்கியது.

இம்முறை அவரது கைகளில் மட்டுமின்றி அவரது பிள்ளைகள், மனைவிகள், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள், ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் என ஒவ்வொருவரின் கைகளிலும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது.

போர்க்குற்றக்கரங்களை எதைக் கொண்டும் கழுவ முடியாது. அது யாரையும் தப்பிக்கவும் விடாது......


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்