பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 12, 2022

புத்தகவாசிப்பு_2022_8_திமிரி


தலைப்பு – திமிரி

எழுத்து – ஐ.கிருத்திகா

வகை – சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு – எழுத்து பிரசுரம்

நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

 

எழுத்தாளர் ஐ.கிருத்திகாவை முகநூல் வழி அறிந்துகொண்டேன். அவ்வப்போது அவரது படைப்புகள் இணைய இதழ்களில் வாசிக்க நேர்ந்தது. ஒரு கட்டத்தில் அதிகமாகவே அவரது படைப்புகள் கண்ணில் பட ஆரம்பித்தன. அவ்வப்போது அவரது படைப்புகளை வாசித்துப் பேசியிருந்தாலும். புத்தகமாக வாசித்துப் பேசுவதில் ஒரு திருப்தி இருக்கிறது.

‘திமிரி’ , எழுத்தாளர் ஐ.கிருத்திகாவின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. இதற்கு முன், உப்புச்சுமை, நாய்சார் என்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘திமிரி’ மொத்தம் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

ஒவ்வொரு சிறுகதையும் பெண்ணில் உலகத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. அவளின் அக உலகத்தையும் புற உலகத்தையும் இக்கதைகள் வழி நாம் நெருக்கமாக உணரலாம். அதோடு பெண்கள் மீது ஆண்களும் சமூகமும் வைக்கும் கட்டுப்பாடுகளையும் அதிகாரத்தையும் பேசுகிறது.

சிறுகதைகளுக்கு எழுத்தாளர் வைத்திருக்கும் தலைப்புகள் வசிகரித்தன. கதைகளை வாசிப்பதற்கு முன்னமே அத்தலைப்பிற்கான அர்த்தத்தைத் தேடவ வைக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு கதையாக வரிசையாக வாசித்துப்பழகிய எனக்கு ஒவ்வொரு தலைப்பாகத் தேர்ந்தெடுத்த வாசிக்க வைத்ததும் அதுதான்.

வாசித்த சில கதைகள்,வழக்கமான கதைகளாகவே தெரிந்தன. அக்கதைகளைப் பலரும் பலவாறாகச் சொல்லியுள்ளார்கள். அதைவிட நன்றாகவும் சொல்லக்கூடிய கதைகள் எனவும் தோன்றியது. ஆனால் அடுத்தடுத்த கதைகளை வாசிக்கையில் எழுத்தாளர் தன்னையும் தேர்ந்த எழுத்தாளர் இடத்தில் நிறுத்திக்கொண்டார். அவரால் எப்படி இக்கதைகளை எழுத முடிந்தது என வாசித்தப்பின் யோசிக்கவும் வைத்துவிட்டார்.

‘இருட்டில் ஒளிரும் ஆயிரம் கண்கள்’ கதையில் அம்மா தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் மகளுக்கும் ஏற்படக் கூடாது என நினைக்கிறார்.

‘எரி நட்சத்திரம்’ என்ற கதையில் காலாகாலத்தில் கல்யாணம் ஆகாத பெண்ணின் வாழ்க்கையைச் சொல்கிறார்.

‘கணை’ சிறுகதையில் திருமணத்திற்குப் பிறகு பெண் கர்ப்பவதி ஆகவேண்டுமென்று எதிர்ப்பார்த்து அதனையே அப்பெண்ணுக்கு ஒரு அவப்பேராகச் சுமத்த காத்திருக்கும் சமூகத்தைச் சொல்கிறார்.

‘கணல்’ சிறுகதையில் இன்றும்கூடப் பெண்ணுக்கு காதலிக்க இருக்கும் சுதந்திரம் காதலித்தவனையே திருமணம் செய்வதில் இல்லாததையும் ஜாதி அங்கொரு பெரும்தடையாக இருப்பதைக் காட்டுகிறார்.

‘கனவு’ சிறுகதையில் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெண்கள் இழப்பது கொஞ்சநஞ்சமல்ல எனச் சொல்கிறார்.

‘கொண்டலாத்தி’ சிறுகதையில் பெண்ணின் மனம் எத்துணை விசித்திரமானது எனக் காட்டவும் தவறவில்லை.

‘சம்வாதம்’ என்னும் கதையில் வெளியூரில் வேலை செய்யும் பெண்ணைப் பற்றிப் பேசுகிறார். இத்தனை காலம் ஆண்கள் மட்டுமே வெளியூர் வேலைகளில் சிதைகிறார்கள் என வாசித்தும் கேட்டும் பழகியவர்களுக்கு இக்கதை பெண் சந்திக்கும் சிக்கலை எடுத்து சொல்லும். தன் உணர்வுக்கும் தன் பொறுப்பிற்கும் இடையில் சில பெண்கள் சிக்கி மூச்சு திணறுவதையை நன்றாகவே கதையாக்கியுள்ளார்.

‘திமிரி’ சிறுகதையில் கணவனை விட்டு பிரிந்து வாழும் பெண்ணைப் பற்றிச் சொல்கிறார். என்னதான் அவளது குடும்பம் அவளை ஏற்றுக்கொண்டாலும் அவள் கணவனிடம் அனுசரித்துப் போகவேண்டிய கட்டாயத்தைச் சொல்லவும் செய்கிறது. ஒரு பெண் அவளாக இருக்கவும், அவளுக்கான முடிவுகளை எடுக்கவும் யாரோ ஒருவர் சம்மதிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதைக் காட்டுகிறார்.

‘புருஷாமிருகம்’. இக்கதையில் தலைப்பே கதையைச் சொல்லிவிட்டாலும், தனது கதை சொல்லும் பாணியில் இச்சிறுகதையை எழுத்தாளர் வாசிக்க வைக்கத் தவறவில்லை. குடும்பத்தில் வாழும் பெண் சந்திக்கும் உடல் உளவியல் சிக்கலை பேசும் கதை. உண்மையில் யார்தான் அவள். பெண்ணா, உடலா, மனமா, மனுசியா எனகிற பல கேள்விகளை வாசகர் முன் வைக்கிறார்.

‘பெரீம்மா’ இச்சிறுகதை, எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ‘முள்’ என்ற சிறுகதையை நினைக்க வைத்தது. பெரீம்மாவின் மரணமும் அதைச்சுற்றியும் நடப்பதுதான் கதைக்களம். ஆனால் இக்கதையின் கடைசிப் பத்தி முழுக் கதையையும் வேறொரு இடத்திற்குக் கொண்டு சென்று ஜீரணிக்க முடியாத இடத்தில் வாசகனைக் கொண்டு நிறுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கடைசிப் பத்திவரை கதை ஒரு பரிணாமத்தையும், கடைசிப் பத்தி அதற்கு நேர்மாறான இன்னொரு பரிணாமத்தையும் கொடுக்கிறது. இக்கதையை நிராகரிக்க வேண்டிய இடத்திலும் இருக்கிறது அதே சமயத்தில் நிராகரிக்க முடியாத இடத்திலும் தன்னை நிறுத்திக் கொள்கிறது.

‘போக்கு’ இக்கதை என் தூக்கத்தைக் கெடுத்த கதை. ஒரு பெண்ணைத்தவிர வேறு யாரால் இக்கதையைச் சொல்லிவிட முடியும் எனத் தெரியவில்லை. மறைந்த மலேசிய அளுமையான எம்.ஏ.இளஞ்செல்வனின் ‘பாக்கி’ என்ற சிறுகதை இங்குப் பிரபலம். பல இடங்களில் அச்சிறுகதை மேற்கோள் காட்டப்பட்டது. பெண் தனது எல்லா வேலையையும் முடித்து அசந்து உறங்கத்தாயாராகும் சமயம் கணவன் தன் காலை மனைவி மீது போடுகிறான், இன்னும் இது பாக்கி இருப்பதாக மனைவி சொல்வதோடு கதை முடிந்துவிடும். இக்கதை எழுதப்பட்ட சமயத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கேள்விபட்டுள்ளேன். அதன் பிறகு கணவன் மனைவி உளவியில் சிக்கலை பேசும் பல கதைகள் வந்துவிட்டாலும் இக்கதை இன்னமும் பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 

மனைவி என்பவள் ஆணுக்கு எப்போது தன் உடலைத் தருவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்கிற ஆண்களின் மனப்போக்கை பல கதைகளில் நாம் வாசித்திருப்போம். அது எப்படி முடியும் அவள் உடல் அவள் உரிமை எனப் பலர் முழக்கங்களையும் செய்கிறார்கள். இன்றளவும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.கிருத்திகாவும் அந்த இடத்தில் கதையைக் கொண்டு செல்கிறார். ஆனால் அவர் கதையைச் சொல்வதற்கு எடுத்துக்கொண்ட களம் முக்கியமான ஒன்று. மாதவிடாய் சிக்கலையும் அது தரும் உடல் வலியையும் மன உளைச்சலையும் ஆழமாகச் சொல்லியுள்ளார். அப்படிச் சொல்லிருந்ததால்தான் கணவன் கடைசியில் கேட்கும் ‘ரொம்ப நாளாச்சுடி’ என்ற வார்த்தை வாசகனுக்கும் கோவத்தைக் கொடுக்கிறது.

‘வெற்றிடம்’ கணவனின் வருகைக்கும் காத்திருக்கும் மனைவியின் கதை.

‘கூடடைதல்’ என்னும் கதை இன்றைய குடும்பச்சிக்கலை பேசியிருக்கும் கதை. ரொம்பவும் முக்கியமான கதையும் கூட. நடுத்தர வயதைத் தாண்டி குழந்தைகளுடன் வாழும் பெற்றோர் பற்றிய கதை. கத்தி மேல் நடப்பது மாதிரியான கரு என்றும் சொல்லலாம். நல்லவேளையாக அந்தப்பெண் தப்பித்தால் என வாசகனுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கும் கதை. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கதை என நான் நினைப்பதால் மேற்கொண்டு இக்கதை நான் சொல்வதைவிடவும் நீங்கள் வாசிப்பதே அவசியம்.

‘தாயக்கட்டைகள்’ யாரும் யாரையும் அவர்களாக மகிழ்ச்சியில் இருக்க விடுவதில்லை என நினைக்க வைத்த கதை.

‘தடம்’ கணவனை இழந்த கர்ப்பவதி மனைவியின் வாழ்க்கையைச் சொல்லும் கதை.

ஐ.கிருத்திகாவின் கதைகளை நகர்த்திச்செல்வது நம்மை ஆழ்ந்து வாசிக்க வைக்கிறது. தன்னைச்சுற்றி நடப்பதை ஆழ்ந்து அவதாணித்துக் கதைகளில் கொண்டு வந்துள்ளார். கதையினைச் சொல்லும் யுக்தியும் கவர்கிறது. பேசவேண்டிய விடயங்களைக் கதைகளாக மாற்றி வாசிக்க வைத்து அதிலிருந்து ஓர் உரையாடலுக்கு வழி வகுக்கின்றார். இச்சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்ததும் சிலரிடம் சில கதைகள் குறித்துப் பேசினேன். என்னுடைய தோழிகளுக்கு இவரின் கதைகளில் இவர் எடுத்துச் செல்லும் சிக்கலையும் இவரின் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் குறித்துப் பேசினேன். குறிப்பாக ‘கூடடைதல்’, ‘போக்கு’ கதைகளைக் கண்டிப்பாக வாசிக்கவும் சொல்லியுள்ளேன். இப்படியான சிறுகதைகளைக் கொடுத்த எழுத்தாளருக்கு அதுதான் எனது நன்றி.

இனி வாசிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஐ.கிருத்திகாவையும் இணைத்துவிட்டேன்.


- தயாஜி

 

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்