பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 06, 2022

- பாப்பா -

ஒரு வாரமாக வெளியே செல்ல முடியாதச் சூழல். யார் தலை தெரிந்தாலும் துப்பாக்கி சூட்டுக்கு இரையாகிடுவார்கள். பல கட்டிடங்களின் சுவர்கள் துப்பாக்கி சூட்டில்  உடைந்தும் சிதைந்தும் போயிருக்கிறது. வலுவற்றச் சுவர்களைத் தாண்டியும் மறைந்திருந்தவர்களை குண்டுகள் துளைத்துள்ளன.

வீட்டில் இருந்த அவசரகால உணவுகள் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ஏதாவது கிடைத்தால் அதை சாப்பிடுவதற்கு ஏற்றதாய் அம்மாவால் மட்டுமே செய்ய முடியும். இத்தனை நாட்களாய் அப்பா இல்லாமல் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டவர்தானே அவர். ஏழு வயது மகன் இரண்டு வயது மகள். காணாமல் போன கணவன். சிறிய வட்டத்தையும் யுத்தம் சிதறடித்துவிடுகிறது.

நேற்றையத் துப்பாக்கி சூட்டில் பயந்து பதுங்கி உறங்கிப்போனவர்கள்தான். கண்களைத் திறக்கிறார்கள். பசி திறக்க வைக்கிறது.

"அம்மா பசிக்குது.... ஏதாச்சும் இருந்தா கொடுங்கம்மா... நேத்தும் ஒன்னும் சாப்டல.. தங்கச்சி பாப்பா இன்னும் தூங்குதுமா... அம்மா.. தங்கச்சி பாப்பா அசைய மாட்டுது... மா... பாப்பா அசையல.. பாப்பா....பாப்பா....பாப்பா.. அம்மா...இங்க வாங்க மா... பாப்பா...."

நேற்றையத் துப்பாக்கி சூட்டில், ஜன்னலைத் தாண்டி வந்த தோட்டா அம்மாவின் இதயத்தில் தஞ்சம் புகுந்துவிட்டதை யாராவது அந்தப் பையனிடம் சொல்லுங்கள். என்னால் சொல்ல முடியாது. சொல்லவே முடியாது.....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்