பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 02, 2022

- வெற்றுத்துப்பாக்கி -

சிதைந்து போன கட்டிடங்கள். கடைசி நம்பிக்கையாய்ச் சில செங்கல் சுவர்களைப் பிடித்திருந்தன. நல்லவேளையாக சில வீடுகளுக்கு மட்டும் கீழ்த்தளம் இருந்தது. வீட்டின் ஒரு பகுதியாக இருந்தவை இப்போது பதுங்கு குழியாகிப் போனது.

ஆயுதம் ஏந்திடாத அப்பாவி மக்கள் அவ்வப்போது வெளியேறுவார்கள். சாப்பிட முடிந்தபடி பார்க்கக் கிடைக்கும் ஒவ்வொன்றும் அவர்களுக்கு அன்றைய உணவு. 

சில நாட்களுக்கு முன்பதாக இதே சாலையில் சுற்றுலா பயணியாக வந்திருந்தவன். இன்று கையில் துப்பாக்கியுடன் இதே சாலையில் கண்ணில் படுபவர்கள் எல்லோரையும் சுட்டு வீழ்த்தும் குழுவினருடன்   முன்னேறிக்கொண்டிருந்தான். அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை. 'எதிரியைக் கொல் இல்லையேல் சொந்த இராணுவத்திடமே செத்துப்போ' என்கிற நிலைமை.

அவன் மெல்ல மெல்ல தன்னைக் கடைசி ஆளாக ஆக்கிக்கொண்டான். இராணுவ உடையை விடவும் அவன் உள்ளம் பலம் பெற்றுக்கொண்டு வந்தது.  அப்போதுதான்  அவன், அந்தச் சிறுவனை கவனித்தான். அன்று அவன்தான் இவ்வீரனுக்கு வழிகாட்டியாக இருந்தவன். சிறுவனும் இவனை அடையாளம் கண்டுகொண்டான்.

யாருமற்ற இடத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். வழக்கம் போல தன் வாடிக்கையாளர்களுக்கு ரோஜா மலரைக் கொடுத்து வரவேற்பவன். இன்று தரையில் கிடைத்த காய்ந்த இலையைக் கொடுத்து வரவேற்று அழுதான்.

இராணுவ வீரனின் கண்களும் கலங்கிவிட்டன. சிறுவனுக்கு கொடுக்க இப்போது அவனிடம் ஒன்றுமில்லை. ஆனால் ஒன்று இருக்கிறது. துப்பாக்கி.
தன்னிடம் இருந்த இன்னொரு துப்பாக்கியில் இருந்து தோட்டாக்களைப் பிரித்தான். வெற்றுத்துப்பாக்கியை அந்தச் சிறுவனிடம் கொடுத்து அவனைச் சிரிக்க வைக்க முயன்றான்.

வெற்றுத்துப்பாக்கியை கையில் ஏந்தியச் சிறுவன், அதனை மெல்லத் தடவிப்பார்த்தான். அவன் கைகள் அப்போதுதான் துப்பாக்கியைத் தொடுகிறது. 

தூரத்தில்,
போராளி ஒருவனிடம் துப்பாக்கியும் எதிரில் தங்கள் இராணுவ வீரனும் நிற்பதைப் பார்த்தக் கண்கள், தனது 'ஸ்னைப்பரால்' அப்போராளியை குறிவைத்து.

அது வெற்றுத்துப்பாக்கி என்பதைத் தெரிந்தவர்கள் நான்கு பேர். அங்கு அவர்கள் இருவரும், இங்கு நாம் இருவரும் மட்டுமே. ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடிவதில்லை...


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்