பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 03, 2022

- குழந்தையின் சிரிப்பில்... -

குழந்தையின் அழுகையை யார்தான் தாங்குவார். என்னதான் திடமான மனம் கொண்டவராக இருந்தாலும், அதிகாரம் முழுக்க தன் கைவிரல் அசைவில் இருந்தாலும் அவருக்குள்ளும் ஈரம் இருக்கத்தான் செய்கிறது.

இன்று அவருக்கு முக்கியமான கடமையொன்று காத்திருக்கிறது. கடமை மட்டுமல்ல உலகின் பல மூலைகளில் இருக்கும் மக்களும்தான் காத்திருக்கிறார்கள். சிலருக்கு அது கொண்டாட்டம். சிலருக்கு அதுதான் கடைசி திண்டாட்டம்.

அவசரமாகச் சென்றவர், அழும் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டார். சுற்றியுள்ளவர்கள் இந்த உன்னதக் கணத்தை புகைப்படங்களில் பதிவு செய்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் உடனுக்குடன் சமூக ஊடகங்களில் நிழற்படங்களைப் பகிர்ந்து நிழலாகவே சிலவற்றை எழுதத்தொடங்கினர்.

கையில் உள்ள குழந்தையைச் சமாதானம் செய்துக்கொண்டே நடக்கலானார்.

அறைக்கதவு திறந்தது. உள்ளே சென்றார். பிரம்மாண்டத் திரையைக் கண்டதும் குழந்தை சற்று அதிர்ந்து மீண்டும் அழுதது. அவர் மிகவும் நிதானமாக குழந்தையின் கண்ணீரைத் துடைத்தார். லேசாக, வலிக்காதவாறு குழந்தையின் கன்னத்தைக் கிள்ளினார்.

நாற்காலியில் அமர்ந்தார். பிரம்மாண்ட திரையில் சிறு சிறு புள்ளிகளாக மனிதர்கள் நடமாட ஆரம்பித்தார்கள். குழந்தை அழுவதை நிறுத்துவதாக இல்லை.

தன் முன்னிருந்த, சில பட்டன்களின் அருகில் குழந்தையைக் கொண்டு சென்றார். குழந்தை விளையாடத் தொடங்கியது.

ஒவ்வொரு முறையும் ஒரு பட்டனை அழுத்தவும் , திரையில் பிரகாசமான ஒளியும் வெடி சத்தமும் கேட்கத் தொடங்கியது.

குழந்தைக்கு அவ்விளையாட்டு பிடித்துவிட்டது. அழுவதை நிறுத்திவிட்டது. ஒவ்வொரு பட்டணையும் அழுத்தி அதன் பின் வரும் சத்தத்திற்கு கைத்தட்டத் தொடங்கியது குழந்தை.

குழந்தையில் குதூகலத்தில் அவரும் பங்கேற்றார். யார் அழுத்தினாலும் குண்டு மழை பெய்யும், இராணுவம் முன் செல்லும், துப்பாக்கிகள் வெடிக்கும். சாவது என்னமோ அப்பாவிகள்தான்.

குழந்தை தொடர்ந்து கைத்தட்டிக்கொண்டே பட்டண்களை அழுத்தி விளையாடியது. திடீர் வெளிச்சமும் வெடிச்சத்தமும் திரையில் தோன்றியவண்ணம் இருக்கின்றன....


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்