பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 31, 2024

மாணவர்கள் சிறுகதைப் பட்டறை


ஜூலை மாத தொடக்கத்தில் (SMK PUTERI, SEREMBAN) சிரம்பான், புத்ரி பெண்கள் இடைநிலைப்பள்ளிக்கு சென்றிருந்தேன். மாணவிகளுக்கு சிறுகதைப் பட்டறையை வழிநடத்த அழைத்திருந்தார்கள்.

குறைந்தது 70 மாணவர்கள் வரை பங்கெடுத்தார்கள். அரங்கம் நிறைந்திருந்தது.

ஒவ்வொரு முறையும் பள்ளிக்கூடங்களுக்கு சிறுகதைப் பட்டறை வழிநடத்த செல்லும் போது, ஒரே மாதிரி பேசுவதையும் ஒரே கதைகளை மாணவர்களுக்கு சொல்வதையும் தவிர்த்துவிடுவேன்.

பள்ளிக்குச் செல்வதற்கு முன்னமே, மாணவர்களுடன்  என்னென்ன புதிதாகச் சொல்லலாம், எந்தக் கதைகளை உதாரணங்களாகக் கொடுக்கலாம் போன்றவற்றை வாசிக்கவும் குறிப்பெடுக்கவும் செய்வேன். இது நமக்கும் கூட பயிற்சியாக அமையும் என்பதால் 'முன் தயாரிப்பு' எப்போதும் இரு தரப்பிற்கும் லாபம்தான்.

பட்டறையில், அவர்கள் பரிட்சைக்கு எழுத வேண்டிய சிறுகதைக்கு செல்வதற்கு முன்பாக ஏன் சிறுகதைகள் நம் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகின்றன என்று மாணவிகளுடன் பேசினேன்.

அந்தக் கதைகள் எப்படியெல்லாம் நம் வாழ்க்கைக்கு பயன்படுகின்றன, என்ன படிப்பினையை என்னென்ன எதார்த்தங்களைக் கொடுக்கின்றன என மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

பிற்பகல் மணி 2.30க்கு பட்டறை தொடங்கியது. அது இயல்பாகவே நம்மை தூங்க வைக்கும் நேரம் என்பதால் என் பேச்சினை மாணவிகளிடுனான உரையாடலாக மாற்றினேன்.

மாணவிகள் உற்சாகமாகவே பங்கெடுத்தார்கள். ஆசிரியை குமுதா சிறப்பாகவே இப்பட்டறையை ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு நன்றி.

வழக்கம் போல எனது 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல', 'குறுங்கதை எழுதுவது எப்படி' புத்தகங்களையும் கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம் கவிதைத் தொகுப்புகளையும் பள்ளி நூல் நிலையத்திற்கு கொடுத்தேன் 

சில மாணவர்கள் இயல்பாகவே கதைகள் எழுத ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். தமிழ்கூறு நல்லுலகம் அவர்களின் எழுத்துகளையும் வாசித்து சேமிக்க காத்திருப்பதைச் சொல்லி பட்டறையை நிறைவு செய்தேன்.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம் #சிறகுகளின்_கதை_நேரம்


ஜூலை 23, 2024

பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர் தொடக்க மாநாடு 2024

 


பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர் தொடக்க மாநாடு 2024, ஈப்போவில் (21/7/24) சிறப்பாக நடைபெற்றது.  ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் ஏற்பாட்டிலும் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் தோழமையிலும் இம்மாநாடு நடந்தது.

இம்மாநாட்டிற்கு நானும் இளம் எழுத்தாளர் பிருத்வியும் அறிவிப்பாளர்களாகச்  சென்றிருந்தோம்.

இம்மாநாட்டிற்கு 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்னும் இலக்கிய உரை வழங்க தமிழ்நாட்டில் இருந்து 'கல்விக் கடவுள் காமராச அறக்கட்டளை நிறுவனரும் காமராசரின் பேத்தியுமான  திருமதி T.S.K மயூரி கண்ணன் M.A வந்திருந்தார்.




18 பிரமுகர்களுக்கு தக்கார் சிறப்பு செய்யப்பட்டது. நம் நாட்டில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

புத்தகக்கண்காட்சியும் நடைபெற்றது. அரங்கம் முழுக்க அறிந்த எழுத்தாளர்கள் புதிய/இளம் எழுத்தாளர்களும் நிறைந்திருந்தார்கள்.




மாநாட்டின் முத்தாய்ப்பாக 148 சிறுகதைகள் அடங்கிய மூன்று தொகுதிகள் கொண்ட 'சிறுகதைக் களஞ்சியமும்' வெளியீடு கண்டது.
அதோடு மாநாடு குறித்த சிறப்பு மலரையும் வெளியிட்டார்கள்.

சிறுகதைக் களஞ்சியத்தில் என்னுடன்  அறிவிப்பாளராக வந்திருக்கும் ஆசிரியரும் இளம் எழுத்தாளருமான பிருத்வியின் சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.



மாநாட்டு சிறப்பு மலரில்  'இளையோர் எழுதட்டும் இலக்கியம் வளரட்டும்' என்ற தலைப்பில் திரு.எம்.ஏ.அலி ஒரு கட்டுரையையும், 'எழுத்தாளர்களின் ஆக்கத்திறனில் செயற்கை நுண்ணறிவின் பங்கும் அதன் தாக்கமும்' என்ற தலைப்பில் முனைவர் க.உதயகிமாரும், 'விமர்சனங்கள் யாருக்காக?' என்ற தலைப்பில் நானும் ஒரு கட்டுரையை எழுதியுள்ளோம்.

ஒருமைப்பாடு துறை துணை அமைச்சர் மாண்புமிகு சரஸ்வதி கந்தசாமி தன் உரையில், தன் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நூலகத்தின் ஏற்பாட்டில் இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தவுள்ளதாகக் கூறினார்.

இம்மாநாடு அந்த எண்ணத்திற்கு காரணமாக அமைந்ததையும் கூறியவர், அப்போட்டிக்கான   பரிசு தொகை விபரங்களையும் பேசினார். இப்போட்டி இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அமையவும் புதிய எழுத்தாளர்களுக்கு நல்லதொரு தொடக்கமாக அமையவும் வாழ்த்துவோம்;எதிர்ப்பார்ப்போம்.




கையில் கிடைத்த மூன்று தொகுதிகள் கொண்ட சிறுகதைக் களஞ்சியத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. மலேசியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் எழுத்தாளர்கள் இதில் பங்கெடுத்துள்ளார்கள். நம் நாட்டின் மூத்த படைப்பாளிகளில் இருந்து இளம் படைப்பாளிகள், மாணவர்களின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இதன் பின்னணியில் பெரிய உழைப்பு அடங்கியுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எனக்கு இந்தக் களஞ்சியம் குறித்து பேசவும் எழுதவும் சில கருத்துகளும் விமர்சனங்களும் உள்ளன. வாய்ப்பிருப்பின் விரைவில் அதுபற்றி எழுதுகிறேன்.

ஒரே இடத்தில் அறிந்த எழுத்தாளர்களையும் இளம்/புதிய எழுத்தாளர்களையும்  பார்த்ததில் மகிழ்ச்சி. அறிவிப்பாளராக இருந்ததால் பலருடன் பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஆனால் அடுத்தடுத்து எழுதுவதற்கான பல கதைகள் அங்கு கிடைத்தன.

இம்மாநாட்டிற்கு அறிவிப்பாளராகும் வாய்ப்பைக் கொடுத்தமைக்கு கவிரத்னா டாக்டர். அருள் ஆறுமுகம் அவர்களுக்கும் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்திற்கும் எனது அன்பும் நன்றியும்.

(அதிகம் எழுதவேண்டியுள்ளன; முதற்கட்டமாக இப்பதிவு இருக்கட்டும்💙)

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம் #சிறகுகளின்_கதை_நேரம்

மாணவர்கள் சிறுகதைப் பட்டறை




 சமீபத்தில்  புத்திரி தித்திவங்சா, இடைநிலை பள்ளிக்கு (SMK PUTERI TITIWANGSA) அழைத்திருந்தார்கள். அப்பள்ளி மாணவர்களுக்கு சிறுகதை எழுதும் பட்டறையை வழிநடத்தினேன்.

ஆசிரியை சுகந்தி அவர்கள், இப்பட்டறையை ஏற்பாடு செய்தார். அவருடன் ஆசிரியை தனம் அவர்கள், அவரின் பள்ளிக்கூடமான டத்தோ இப்ராஹிம் யாக்கோப் இடைநிலை பள்ளியில் (SMK DATO IBRAHIM YAACOB) இருந்து சில மாணவர்களையும் அழைத்து வந்திருந்தார். 


  சிறுகதைகளை எழுதுவதற்கு முன்பாக; ஏன் சிறுகதைகளை நாம் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியுடன் என் பட்டறையைத் தொடங்கினேன். மாணவர்கள் பரீட்சைக்கு எழுதுவிருக்கும் கதைகளுக்கு முன்பாக கதைகள் என்றால் என்ன? ஏன் கதைகள் எழுதப்படுகின்றன? யார் எழுதுகிறார்கள்? யாருக்காக எழுதுகிறார்கள் என மாணவர்களுடன் பேசினேன்.

 மாணவர்களுக்கு சில உதாரண சிறுகதைகளை சொல்லச்சொல்ல அவர்களுக்கு கதைகள் மீதான ஆர்வம் அதிகமானது. அதன் பின் அவர்களுக்கு கதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள், தொடர்கதை போன்ற வடிவங்களை விளக்கினேன்.





 சிறுகதை எழுதுவதற்கான அடிப்படை யுக்திகளைச் சொல்லி எப்படியெல்லாம் அதனைப் பயன்படுத்தலாம் என உதாரணங்களைச் சொன்னேன். பின் அந்த யுக்திகளைப் பயன்படுத்தி மாணவர்களும் கதைகளை எழுதுவதற்கு வசதியாக குழுக்களாக மாணவர்களை பிரித்தோம். அவர்களுக்கு இருபது நிமிடங்கள் கொடுத்து எழுத வைத்தோம்.

 ஒவ்வொரு குழு மாணவர்களும் தங்களின் படைப்பை வகுப்பின் முன் பகிர வேண்டும்.

மாணவர்களால் கதைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. எங்கே தொடங்குவது எப்படி கதையை அமைப்பது எப்படி முடிப்பது போன்றவற்றை மாணவர்களே பேசினார்கள். சில மாணவர்களின் படைப்புகள் சினிமா பாணியிலும் இருந்தன. அவற்றை எப்படியெல்லாம் நம் கதைகளாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனக்கூறினேன்.

பின் ஆசிரியை தனம், பரீட்சைக்கு எழுத வேண்டிய சிறுகதைகள் எப்படி அமையவேண்டும் மற்றும் தன் புள்ளி விபரங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

நிறைவாக;

 பள்ளியில் இருந்து எனக்கு பழக்கூடையும் சான்றிதழும் வழங்கினார்கள். நானும் வழக்கம் போல இரு பள்ளிக்கூட நூல் நிலையத்திற்கும் எனது ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவது எப்படி’ என்ற புத்தகங்களையும் கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய ‘பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம்’ என்ற கவிதைத் தொகுப்பை வழங்கினேன். 

 இந்த மாணவர்களில் சிலரேனும் பரீட்சைகளைத் தவிர்த்தும், சிறுகதை எழுதுபவர்களாக வந்தால் மகிழ்வேன். அதற்கு என்னளவில் செய்ய முடிந்ததை நானுமே செய்வதற்கு தயாராய் இருக்கிறேன்.

ஜூலை 21, 2024

சிறகுகளின் கதை நேரம் - 30வது கலந்துரையாடல்

💙சிறகுகளின் கதை நேரம்; சிறுகதைக் கலந்துரையாடல்.💙





இன்று 30-வது சந்திப்பு நடைபெற்றது. இன்றைய கலந்துரையாடலில் எழுத்தாளர் வனிதா ராமகிருஷ்ணன் எழுதிய 'சிற்பம்' சிறுகதையைக் குறித்து கலந்துரையாடினோம்.


வழக்கம் போல வாசிப்பில் ஆர்வம் கொண்ட எழுத்தாளர்களும் வாசகர்களும் கலந்து கொண்டு பேசினார்கள்.


மூத்த எழுத்தாளர் கோ.புண்ணியவான் கலந்துரையாடலில் பேசியவை; எழுத்தாளர்களுக்கு மட்டுமின்றி வாசிக்கின்றவர்களுக்கும் பயனாக அமைந்தது.


அதே போல இளம் எழுத்தாளர் பிருத்வி ராஜு சிறுகதைகளை உள்வாங்கி பேசும் விதமும் கவர்ந்தது. சிங்கபூரில் இருந்து ஒவ்வொரு வாரமும் தவறாது கலந்து கொண்டு தத்தம் கருத்துகளைப் பகிரும் எழுத்தாளர் சூர்ய ரத்னாவும் உற்சாகம் கொடுக்கின்றார்.


எழுத்தாளர் டேவிட், ஆசிரியை விசித்ரா ஆகியோரும் சிறுகதையையொட்டி தங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.


நிகழ்ச்சியில் நிறைவாக, எழுத்தாளர் வனிதா ராமகிருஷ்ணன் வாசகர்களும் எழுத்தாளர்களும் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் சொன்னதோடு தான் எழுதிய சிறுகதை குறித்தும் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார். அவரும் நன்றி.



இன்றைய நிகழ்ச்சி, அதுவும் இன்று நமக்கு 30வது கலந்துரையாடல். இலக்கிய செயல்பாடுகளில் எண்ணிக்கைக்கு பெரிய கவனம் தேவையில்லை என்றாலும் இதுவரை வருவதற்கு உறுதுணையாக இருக்கும் எழுத்தாளர் தம்பி பிருத்வி ராஜுவிற்கு நன்றி.


மீண்டும் அடுத்த வார திங்கட்கிழமை மற்றொரு சிறுகதைக் கலந்துரையாடலில் சந்திப்போம்.

சிறகுகளின் கதை நேரம்; இது எழுத்தாளருக்கும் வாசகருக்குமான உரையாடல் களம்.


உரையாடுவோம்... கலந்துரையாடுவோம்...


அன்புடன் #தயாஜி 

#சிறகுகளின்_கதை_நேரம் #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

சிறகுகளின் கதை நேரம் - 31வது கலந்துரையாடல்

 


கடந்த திங்கட்கிழமை, வாராந்திர 'சிறகுகளின் கதை நேரம்' சிறுகதைக் கலந்துரையாடல் வழக்கம் போல் சிறப்பாக நடைபெற்றது. 


இது 31வது கலந்துரையாடல், இதில் எழுத்தாளர் கோ.புண்ணியவான் எழுதிய 'கரகம்' சிறுகதைக் குறித்து உரையாடினோம்.


'இச்சிறுகதையில் அதன் உரையாடல்கள் எதார்த்தமானவையாகவும் அச்சூழலைக் கண்முன் கொண்டுவந்ததாகவும் எழுத்தாளர் சச்சிதானந்தன் கூறினார். அதோடு எழுத்தாளர் சிறுகதையில் பயன்படுத்திய வருணனைகள் தன்னைக் கவர்ந்ததாகவும் கூறினார்.


எழுத்தாளரும் மருத்துவருமான ராஜேஸ், 'கரகம்' சிறுகதையின் களம் குறித்தும் எழுத்தாளர் பயன்படுத்திய மொழி குறித்தும் பேசினார். அதோடு இச்சிறுகதையில் முக்கிய கதாப்பாத்திரமாக இருக்கும் கரக பூசாரிக்கும் கரகம் ஆடுகின்றவரும் ஒருவரா அல்லது வெவ்வேறு ஆட்களா என கேள்வி எழுப்பினார். பின்னர் எழுத்தாளர் கோ.புண்ணியவான் அதற்கு பதிலும் கூறினார்.


இளம் எழுத்தாளர் பிருத்வி, இச்சிறுகதை வாசிக்க வாசிக்க, எழுத்தாளரின் கையறு நாவலை மீண்டும் வாசிக்கும் உணர்வைம் கொடுத்ததாகக் கூறியதோடு, திருவிழா , தீமிதி கொண்டாட்டச்சூழல் அழகாகச் சொல்லப்பட்டதாகவும் கூறினார்.


எழுத்தாளர் ஆ.வி.டேவிட், எழுத்தாளர் இச்சிறுகதையில் தீர்வு கொடுத்தாரா என்ற கேள்வியை முன்வைத்ததோடு, 90களில் நடந்த சில உண்மை சம்பவங்களையும் சுட்டிக்காட்டினார்.






எழுத்தாளர், ஆசிரியர் அன்பரசி, ஒரு குழுவிற்கும் ஒரு அமைப்பிற்கும் தலைவர் ஏன் வேண்டும் என்பதனை இக்கதையின் ஊடாக புரிந்து கொண்டதைக் கூறினார்.


சிங்கை எழுத்தாளர் சூரிய ரத்னா, சிங்கை சூழலில் கொண்டாடப்படும் சமய விழாக்களும் மலேசிய சூழலில் கொண்டாடப்படும் சமய விழாக்களுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பேசினார். 


அடுத்ததாக சிங்கப்பூரில் இருந்தே எழுத்தாளர் அருள் குமரன் இச்சிறுகதையில் வரும் தலைவர் கதாப்பாத்திரத்தை முன்வைத்து இருவேறு புரிதல்கள் இருப்பதைப் பேசினார்.


எழுத்தாளர் மணிராமு, தோட்ட வாழ்க்கையை எழுத்தாளர் எழுதிய விதத்தைப் பேசினார்.


எழுத்தாளர் இராமசாமி, இச்சிறுகதையில் வந்த கரக பூசாரியின் கதாப்பாத்திர வடிவமைப்பின் உண்மைத் தன்மையைக் கேள்வி எழுப்பினார்.


என்னளவில், 1990ம் ஆண்டு காலக்கட்டத்தில் லூனாஸ், கெடாவில் சம்சு என்னும் கள்ளச்சாராயம் குடித்து ஏறக்குறைய 40 பேர் இறந்தார்கள், மேலும் சிலருக்கு பார்வை பறி போனது.


அந்தச் சம்பவத்தில் இருந்து ஒரு பகுதியை எழுத்தாளர் 'கரகம்' சிறுகதையாக எழுதியுள்ளார். தோட்டச்சூழல் அங்கு வாழும் மனிதர்கள் அவர்களில் வாழ்க்கை முறை என, அளவாக தன் சிறுகதையில் எழுத்தாளர் கோ.புண்ணியவான் பயன்படுத்தி இருக்கிறார்.


நிகழ்ச்சியின் நிறைவில் எழுத்தாளர், வாசகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்ததோடு இச்சிறுகதை உருவான கதையையும் அவர் சந்திந்த மனிதர்களைக் குறித்தும் பேசினார்.


வழக்கம் போல பல்வேறு வேறுபட்ட பார்வையோடு  நிகழ்ச்சி நிறைவடைந்தது. அடுத்த வார திங்களில் இன்னொரு சிறுகதையோடும் அதன் எழுத்தாளரோடும் உரையாடுவோம் கலந்துரையாடுவோம்.


#சிறகுகளின்_கதை_நேரம் #தயாஜி 

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

ஜூலை 04, 2024

🌹செந்தமிழ் விழா 2024🌹



மீண்டும் செந்துல் , கான்வெண்ட் இடைநிலை பள்ளிக்கு (SMK CONVENT, SENTUL) சென்றிருந்தேன். 'செந்தமிழ் விழாவின்' நிறைவு நாளும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.


மேலும் சில போட்டிகளை இன்றும் நடத்தினார்கள். இம்முறை மாணவர்களின் 'இளம் நிருபர்'  போட்டிக்கு நானும் , கவிஞரும் ஊடகவியலாளருமான பூங்குழலி வீரனும் ஆசிரியை தனமும் நீதிபதிகளாக இருந்தோம்.


 ஒவ்வொரு மாணவர்களும் தத்தம் திறமையைக் காட்டினார்கள். ஊடகத்துறை மீதான ஆர்வம் இம்மாதிரி போட்டிகள் வழி மாணவர்களுக்கு ஏற்படும் என்பதில் மகிழ்ச்சி.



பிறகு ஒவ்வொரு போட்டியிலும் பங்கெடுத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். நீதிபதிகளாக பொறுப்பேற்ற எங்களுக்கும் சிறப்பு செய்து நினைவுச் சின்னத்தையும் நற்சான்றிதழையும் வழங்கினார்கள்.


இன்றைய பொழுது மாணவர்களுடன் சிறப்பாக அமைந்தது. வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர் சுலோச்சனாவிற்கும் அன்பும் நன்றியும்...





ஜூலை 02, 2024

- வாசிப்பின் கொண்டாட்டம் –




(பொறுப்பு துறப்பு - 

தினமும் பக்கம் பக்கமாக வாசித்து எழுதுகின்றவர்களுக்கு மத்தியில் இதனை எழுத கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. மற்றபடி வாசிப்பின் சுவையைக் கொஞ்சமும் உணராமல் தங்களை எழுத்தாளர்கள் எனவும் படைப்பாளிகள் எனவும் ஊடக வெளிச்சத்தில்  சிரித்தபடி நிற்பவர்கள் பற்றி எந்த அக்கறையும் இல்லாமலே இதனை எழுதுகிறேன் )


பொம்மி பிறந்ததும் நெருங்கிய நண்பர்கள் இப்படி சொன்னார்கள், “உனக்கு குழந்தை பிறந்திருச்சி.. இனிமேல் நீ எப்படி புத்தகங்களைப் படிப்பன்னு பாக்கறோம்.. நேரமே கிடைக்காது இனி உனக்கு….”


அவர்கள் சொன்னது உண்மைதான். ஆனால் அந்த உண்மை தலைகீழாக என்னிடம் நடக்கிறது. இன்னும் கூடுதலாக புத்தகங்களை வாசிக்க முயல்கிறேன். முன்பு வரை என் தனிப்பட்ட காரணங்களுக்குகாக வாசித்தேன். ஆனால் இப்பொழுது, என் பொம்மிக்கு நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யவேண்டும் என்ற கூடுதல் கவனத்தோடும் கூடுதல் கொண்டாட்டத்தோடும் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன். எழுதுகிறேன். பேசுகிறேன். அவள் வளர்ந்து வரும் சமயத்தில் அது அவளுக்கும் புலப்படும்.


2024-ம் ஆண்டு தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் வாசித்த புத்தகங்களை மீண்டும் ஒருமுறை எடுத்துப் பார்க்கிறேன். ஆச்சர்யமாக இருந்தது. வாசித்த புத்தகங்களை முதற்கட்டமாக அடுக்கும் சிறு புத்தக அடுக்கு நிறைந்திருந்து. வழக்கமாக ஓராண்டில் வாசித்த புத்தகங்களை கைக்கு எட்டிய சிறிய அலமாரியில் அடுக்கி வைத்து அடுத்த ஆண்டில் அவற்றை அதற்குரிய இடங்களில் தனித்தனியே அடுக்குவேன்.


கடந்த ஆறு மாதங்களில் வாசித்த புத்தகங்களைப் பார்க்கலாமா?


நாவல்கள்

1. தாரா – ம.நவீன்

2. கரிப்புத் துளிகள் – அ.பாண்டியன்

3. கையறு – கோ.புண்ணியவான்

4. ஆழம் – சி.முத்துசாமி

5. பிறிதொரு நாள் – ரெ.விஜயலெட்சுமி

6. வாழும் மாமலை – அமிதாவ் கோஷ் (தமிழாக்கம் கண்ணன்)

7. பனியரசி – ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் (தமிழாக்கம் சூ.ம.ஜெயசீலன்)


சிறுகதைகள்

8. தேவதைகளற்ற வீடு – கே.பாலமுருகன்

9. முரண் – ந.பச்சைபாலன்

10. இளந்தமிழன் சிறுகதைகள் – இளந்தமிழன்

11. மிட்டாய்க் கதைகள்  - கலீல் கிப்ரன் (தமிழாக்கம் என்.சொக்கன்)


கவிதைகள்

12. துப்பாக்கிக்கு மூளை இல்லை – எம்.ஏ.நுஃமான்

13. அகப்பறவை – பூங்குழலி வீரன்

14. மங்கிய நீலப் புள்ளி – சந்துரு

15. வாடியது கொக்கு – ஹைக்கு கவிதைகள்


பிற

16. எழுத்தாளராக இருப்பது எப்படி – ஆர்.அபிலாஷ்

17. மேடைப் பேச்சின் பொன்விதிகள் – செல்வேந்திரன்

18. இலக்கியமும் இலக்கியவாதிகளும் -  வண்ணநிலவன்

19. பெருங்கனவு காணத் துணியுங்கள் – அங்கூர் வரிக்கூ (தமிழாக்கம் நந்தினி)

20. படிப்பது சுகமே ! -  வெ.இறையன்பு

21. On Writing Well – William Zinsser

22. How to enjoy your life and your job -  Dale Carnegie


மேற்கொண்டு, வாசித்த சில புத்தகங்களைப் பொதுப்பட்டியலில் சேர்க்க முடியாது. அது முழுக்க முழுக்க என் அகம் சார்ந்த தேடலுக்காக நான் வாசிப்பது. அது வேண்டாம். அதனால்தான் அவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. மேற்சொன்ன கணக்கிலேயே வைத்து கொள்வோம்.


இவை தவிர (புத்தகங்களாக அல்லாமல்) வாசித்த சிறுகதைகள் கட்டுரைகள் கவிதைகளும் உள்ளன. 


மற்றபடி அடுத்த ஆறு மாதங்களுக்கான ‘புத்தக வாசிப்பு’ பட்டியலையும் தயார் செய்துள்ளேன். வாசிக்கும் போது மனம் அந்தப் பட்டியலை பின்பற்றுமா அல்லது அதன் தன் விருப்பப்படி புத்தகங்களைத் தேர்ந்தெடுக்குமா என இப்போது தெரியவில்லை. ஆனாலும் நாம் திட்டமிடலை தள்ளிப்போடவும் தவிர்த்துவிடவும் கூடாதுதானே.


பட்டியலை வாசிக்க எனக்கே அச்சர்யமாக இருக்கும் விடயம் என்னவெனில், இந்த ஆறுமாதங்களில் எப்பொழுதும் என் வாசிப்பு பட்டியலில் இருக்கும் எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருசஷணனின் புத்தகங்கள் இல்லை. அவர்களின் இணைய தளத்தில் தினம் வாசித்தாலும் புத்தகமாக தொகுத்தவற்றை வாசிப்பதில்தானே முழுமை இருக்கிறது.


இவ்வாண்டு தொடக்கத்தில். மாதம் ஒரு நாவலை வாசிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அதன் படி ஒவ்வொரு மாதமும் ஒரு நாவல் என வந்து; கூடுதலாக ஏழு நாவல்களாக அவை அமைந்துவிடடன.


வாசிப்பில் ஒரு ரகசியம் இருக்கிறது. Size doesn’t matter ! என சொல்வார். ஆனால் வாசிப்பில் அந்த சைஸும் ஒரு மேட்டர்தான் !.


எடுத்த உடனே இருநூறு முன்னூறு பக்க புத்தகங்களையோ பேருக்கு வாசிக்கிறேன் என ஐநூறு ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவலை திறந்து வைத்து உட்கார்ந்தீர்கள் என்றால் நீங்கள் தொலைந்தீர்கள். உங்களால் ஐம்பது பக்கங்களைக் கூட வாசித்து கடக்க முடியாது. கண்கள் வலிக்கும், காதுக்குள் சத்தம் கேட்டு தொந்தரவு செய்யும், முதுகு வலிக்கும், வாசிப்பதைவிட முக்கியமான வேலைகள் இருப்பதை மூளை நினைவுப்படுத்தும். ஆக எச்சரிக்கை அவசியம்.


முதலில் ஐம்பது பக்க புத்தகங்களை வாசிக்க தொடங்குங்கள். சிறுகதைப் புத்தகத்தில் தினம் ஒரு சிறுகதை என வாசியுங்கள். கவிதைத் தொகுப்பில் தினம் சில பக்கங்களில் உள்ள கவிதைகளை வாசியுங்கள்.


வாசிப்பின் சுவையை நம் மனம் உணரவேண்டும். அதை ஒரு தொந்தரவாக அது நினைத்துவிடக்கூட்டது. என் வாசிப்பு பட்டியலைப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் சில அதிக பக்கங்கள் உள்ள புத்தகங்களுக்கு பின் குறைந்த பக்கங்கள் கொண்ட புத்தகங்களை நான் வாசிப்பேன். அது நம் வாசிப்பில் சோர்வு தட்டாமல் இருக்க உதவும்.


கூடுதலாக; குறைந்த பக்கங்கள் கொண்ட புத்தகத்தை நம்மால் சீக்கிரமே வாசிக்க முடியும். (ஆனால் உண்மையில் பத்து-பதினைந்து பக்கங்களைக் கூட இங்கு பலர் வாசிக்க உயிரை பணையம் வைப்பது போல கற்பனை செய்து கொள்கிறார்கள் என்பது வேறு விசயம்) . அப்படி வாசித்து முடித்ததும் நமக்கு கிடைக்கும் மனநிறைவை நாம் கொண்டாட வேண்டும். அது நம்மை அடுத்த புத்தகத்தைத் தேடி ஓட வைக்கும். அப்படியே மெல்ல மெல்ல புத்தகங்களின் பக்க எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போகலாம். அங்கிருந்து செவ்விலக்கியங்கள், எழுத்தாளர் பரிந்துரைகள் போன்றவற்றில் இருக்கும் பெரிய புத்தகங்களுக்கு நாம் செல்லலாம்.


எல்லாவற்றுக்கு அடிப்படை; அடுத்தவர்களை வாசிக்கச்சொல்லி கைக்கட்டி நின்று அதிகாரம் செய்யாமல், அவர்களுடன் இணைந்து வாசிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவர்களைவிட அதிகமாக வாசிக்க வேண்டும்.

வாசிப்பதற்கு ஒரு நோக்கத்தை ஒரு போட்டியை உருவாக்கி கொள்ளலாம்.


 இந்த ஆண்டு நான் குறைந்தது இத்தனை புத்தகங்களையாவது வாசித்திருப்பேன் என நம்மிடமே நாம் சவால் விடலாம். நம்மையே நாம் வெல்வதைவிட வேறென்ன தன்முனைப்பு நமக்கு இருந்துவிட போகிறது சொல்லுங்கள். 


அதோடு வாசிக்கின்றவர்களோடு நட்பை வளர்த்து கொள்ளுங்கள். புத்தகங்களைக் குறித்து உரையாடுங்கள். 


ஒரு விளையாட்டாக கூட நாம் இதனை தொடங்கலாம். வாசித்தால் வீடியோவில் வருவோம் , பரிசு கொடுப்பார்கள் என்பதை எல்லாம் தாண்டி. ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுங்கள். (சரி நமக்கான புத்தகங்களை எப்படி தேர்ந்தெடுப்பது? இதுபற்றி இன்னொரு நாள் விரிவாகவே எழுதுகிறேன்)


 எப்பொழுது வாசித்த தொடங்கினீர்கள் என எழுதுங்கள். தினமும்  உங்களால் எத்தனைப் பக்கங்கள் வரை வாசிக்க முடியும் என நீங்கள் நம்புகிறீர்கள். குறைந்தது பத்து பக்கங்கள் என வைத்து கொள்வோமா? புத்தகத்தின் பக்கங்களில் இருந்து உங்களால வாசிக்க முடிந்த பத்து பக்கங்களை வகுத்துப் பாருங்கள். எத்தனை நாட்களில் இந்தப் புத்தகத்தை உங்களால் வாசிக்க முடியும் என ஒரு கணக்கு உங்களிடம் வந்துவிடும்.


 அப்புறம் என்ன உங்கள் குலதெய்வத்தை வேண்டி கொண்டு வாசியுங்கள். தினமும் பத்து பக்கங்கள் வாசிக்காவிட்டால் உங்கள் குலதெய்வமே உங்கள் கண்ணை குத்திவிடும்.


நீங்கள் திட்டமிட்டபடி வாசித்து முடித்துவிடுவீர்கள். இன்னும் சொல்லப்போனால்; குறிப்பிட்ட கெடுவிற்குள்ளேயே நீங்கள் வாசித்து முடித்துவிடும் அதிசயம் நடக்கும். பத்து பக்கங்களையும் தாண்டி நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

அவ்வளவுதான் .

சரி வாசித்துவிட்டீர்கள். அடுத்த என்ன?

 அதற்கு பிறகுதான் எல்லாமே இருக்கிறது நண்பர்களே. எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.


 வாசிக்கின்றவர்களோடு உரையாடி கலந்துரையாடி வாசிப்பையும் வாசிக்கின்றவர்களை நாம் கொண்டாடுவோம். நம்மைத் தவிர நம்மை வேறு யார்தான் கொண்டாடுவார்கள்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்