பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 20, 2020

மது மாது சூது....



     குழப்பம். நடப்பதை கவனித்துக் கொண்டே இருந்தான். இன்னமும் போதை தெளியவில்லையா என்று தன்னைத்தானே கேட்டும் கொண்டான். வேறு வழியில்லை. கேட்டுவிடுவதுதான் சரி.

“செல்லம்…”

“சொல்லுங்க…”

“கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காத..?”
“தப்பா எடுத்துகிறதுக்கு என்ன இருக்கு.. கேளுங்க..”

  “நேத்தும் நான் குடிச்சிட்டுதான் வீட்டுக்கு வந்தேன், வந்தவுடனே படுத்துட்டேன்னு நினைக்கறேன்..”
“ஆமா.. வந்தோன்ன, படுத்துட்டிங்கதான்.. அதுக்கு என்ன இப்போ..?”

  “எப்பவும், குடிச்சிட்டு வந்த மறுநாள், நீ மூஞ்சிய தூக்கி வச்சிக்குவ.. சரியா பேச மாட்ட.. கூப்டா கூட தெரியாத மாதிரி இருப்ப.. இப்ப என்னடான்னா.. சிரிச்ச முகமா இருக்க.. கூப்டா பதில்லாம் சொல்ற.. காலையிலேயே பசியாற வேற செஞ்சுகிட்டு இருக்க…”

  குழப்பத்தில் இருந்தவனுக்கு, நேற்று நடந்ததை அவள் சொல்ல ஆரம்பித்தாள்.

  “நேத்துதான் நீங்க குடிச்சிட்டுதான் வந்தீங்க.. ரொம்பவும் நிலை தடுமாறியும் இருந்திங்க.. வந்தவுடனே சப்பாத்தியக் கூட கழட்டாம படுத்துட்டிங்க.. போனா போகுதுன்னு உங்க சப்பாத்தையும் சட்டையையும்  கழட்டி வைக்க நான் முயற்சி செய்தேன்.. அப்போ நீங்க என்ன செய்தீங்க தெரியுமா..?”

“…!”

   “ஏய் கிட்ட வராத.. எனக்கு கல்யாணம் ஆச்சி.. அழகான ‘வைப்’ இருக்கா.. நான் அவளை ரொம்ப ‘லவ்’ பண்றேன்னு சொன்னீங்க.. அதைவிட எனக்கு வேறு என்னங்க வேணும்.. அவ்வளவு போதைலதும் உங்க மனசுல நான் தான் இருக்கேன்.. இனி நீங்க எங்க வேணும்னாலும் போங்க எவ்வளவு வேணும்னாலும் குடிங்க… ஒன்னும் சொல்ல மாட்டேன்..”

    அங்கிருந்து வந்து தன் ஆசை கணவனுக்கு காபி-யைக் கொடுத்தாள். தன் அறைக்கு சென்றாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் மெல்ல நகர்ந்தான்.

    தன் கைபேசியை எடுத்து, ‘ப்ரோ நம்ம ப்ளான் சக்ஸஸ்’ என நண்பனுக்கு செய்தி அனுப்பினான். போதையில் இருப்பது போல் நடித்து அந்த வசனத்தை பேசும் சூதை அந்த 'ப்ரோ'தான்  இவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தான்.

- தயாஜி


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்