பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 16, 2020

புத்தகவாசிப்பு_2020_6 ‘வீடில்லாப் புத்தகங்கள்’




       புத்தகங்களை எங்கிருந்து வாங்குகின்றீர்கள். வழக்கம் போல புத்தகக்கடைகளில் தானே எங்கின்றீர்களா? ஆமாம். ஆனால் புத்தகக்கடைக்குச் சென்று வாங்குகின்றிர்களா அல்லது இணையம் வழி புத்தகங்களை வாங்குகின்றீர்களா?. தொழில்நுட்ப முன்னேற்றம், நேர மிச்சம் இணையம் வழிதான் வாங்குகின்றோம் என்கிறீர்கள்தானே. புத்தககமாக யார் வாங்குகிறார்கள், வீட்டில் அடுக்கி வைக்க இடமா இருக்கிறது. மின்நூல்களாக வாங்கிக்கொண்டு கணினியில் சேமித்து வைக்கின்றோம் என்கின்றீர்களா? குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. உலகோடு ஒட்டிதான் வாழ்ந்தாகவேண்டியுள்ளது.

        கோவிலுக்கு அருகில் ஒரு பூக்கடை இருக்கிறது. ஒரு பாட்டி இன்றும் தன் வயிற்றுக்கு தானே உழைத்து வாழ நினைக்கிறார். ஒரு விஷேஷ நாளில் வியாபாரமாகும் என நினைத்து, கைவசம் இருந்த பூக்கள அனைத்தையும் மாலைகளாகத் தொடுத்துவிட்டார். அவரின் துரதிஷ்டம் அன்று மழை.  வியாபாரம் ஆகவில்லை. அன்றை வியாபாரம் அவருக்கான நாளைய உணவு. இன்னும் கொஞ்ச நேரத்தில் கோவிலை மூடப்போகிறார்கள். அப்போது ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து ஒருவர் இறங்குகின்றார். நேராக பூக்கடைக்கு வருகிறார். கட்டி வைத்திருந்த பூ மாலைகளில் எதையோ தேடுகிறார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கிருந்த மொத்த பூ மாலைகளையும் அவரே வாங்கிக்கொண்டு புறப்பட்டுவிட்டார். இப்போது அந்த பாட்டியின் மனநிலையை நினைத்துப்பாருங்கள். அந்த கண்கள் இந்நேரம் கலங்கியிருக்கும் தானே. கோவிலுக்கு அருகில் கடை இருந்தாலும், இப்போது அந்த பாட்டிக்கு கடவுள் யாராக தெரிவார். இனி அந்த பாட்டியால் அந்த நபரை மறக்கத்தான் முடியுமா என்ன. அப்படியான மனிதர்களும் அவர்கள் கண்ட கடவுகளையும் உங்களுக்கு காட்டுவதுதான் இந்த புத்தகம் ; ‘வீடில்லாப் புத்தகங்கள்’.

        சக மனிதர்கள் மீதான அன்பையே தன் எழுத்தின் பிரதானமாகக் கொண்டிருக்கும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. இக்கட்டுரைகளை தமிழ் இந்துவில் அவர் எழுதியிருந்தார். தனது கதைகளில் மட்டுமல்ல தனது இதர படைப்புகளியும் அவர் முன்னிலைப்படுத்தி நம் கண் முன்னே காட்டிச்செல்வது நாம் கவனிக்க மறந்த அல்லது கவனிக்கத் தவறிய சக மனிதனின் வாழ்வைதான்.

       தனக்கு மிகவும் பிடித்த பழைய புத்தகக்கடைக்கும் தனக்குமான உறவையும் அங்கு இவருக்கு கிடைத்த புத்தகங்களின் அறிமுகங்களையும் இந்நூலில் கொடுத்திருக்கின்றார். அதோடு அங்கு அவர் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையில் நம்மிடம் பகிர்ந்து அதனையும் பதிவு செய்திருக்கின்றார்.

       பழைய புத்தகங்களை விற்பவர்கள் வெறும் வியாபாரிகள் அல்ல. பணம் தான் பிரதானன் என்றால் செய்வதற்கு அவர்களுக்கு பல வேலைகள் கிடைக்கும். ஆனால், அவர்கள் மனம் லயிப்பது புத்தகங்களில்தான். அதனை வாங்கிச் செல்கின்றவர்களின் கண்களில்; நான் தொடக்கத்தில் சொன்ன பூக்காரப் பாட்டி பார்த்த அந்த முகம் தெரியாத நபர் போல பலர் தெரிந்துக்கொண்டே இருக்கிறார்கள்.
      ஒவ்வொரு பழைய புத்தகக்கடையில் தனக்கு கிடைத்த அரிய புத்தகங்களின் அறிமுகத்தினை வழக்கம் போலவே சொல்லி நம்மையும் அந்த புத்தகங்களைத் தேட வைக்கின்றார். புத்தகத்தில் மொத்தம் 56 தலைப்புகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு புத்தகத்தையோ அல்லது இரண்டு புத்தகத்தையோ நமக்கு அறிமுகம் செய்கின்றார்.

      மழை நாளில் , தன்னிடமிருந்த புத்தகங்களை மூட்டைக்கட்டி ஒருவர் எஸ்.ராவின் வீட்டுக்கதவைத் தட்டுகிறார். வேறு வழியில்லை புத்தகங்களை எடுத்துக்கோங்க, எவ்வளவு தோணுதோ அவ்வளவு கொடுத்தா போதும் வீட்டில் பிள்ளைகள் பசியுடன் இருப்பதாகச் சொல்கிறார்.

     புத்தகம் வாங்கிப்படிக்க பணமில்லாத ஒருவருக்கு ஒரு கடைக்காரர் கடையிலேயே ஒரு நாற்காலியை போட்டுக்கொடுத்து எவ்வளவு வேணுமோ அவ்வளவு படிச்சிக்கோங்க என்கிறார். சும்மா படிக்க முடியாத அவரும் அங்கு வருகின்றவர்களுக்கு தேவையான புத்தைகங்களை அறிமுகம் செய்கிறார்.

      தன் கணித ஆசிரியர் ஞானசுந்தரத்தை குறித்து சொல்கிறார். அவருக்கும் புத்தகங்களுக்குமான தொடர்பை ஒரு சம்பவந்ததின் மூலம் சொல்கிறார். தன்னிடம் கேட்காமல் புத்தகத்தை எடுத்துச்ச் என்றவரிடம் சண்டைப்போட்டு உறவையும் முறித்திருக்கிறார். ஒரு சமயம் எஸ்.ராவிற்கு அவரின் கணித ஆசிரியர் கையொப்பம் இட்ட பழைய புத்தகம் ஒன்று கிடைக்கிறது. விசாரிக்கையில், ஒரு பெரியவர் இறந்துவிட்டப்பிறகு அவரது புத்தகங்களை குடும்பத்தினர் எடைக்கு போட்டுவிட்டதை தெரிந்துக்கொள்கிறார். ஆசிரியர் இறந்தப்பிறகு அவரது புத்தகங்களை காப்பாற்றக்கூட வீட்டினர் தயாராய் இருக்கவில்லை. இதனை வாசித்து முடித்தததும் ஒரு முறை எழுந்துச் சென்று எனது புத்தக அலமாரியில் நிறைந்துக் கிடக்கும் புத்தகங்களைத் தொட்டுப்பார்த்துக் கொண்டேன். என் அடுத்த தலைமுறை உங்களை எப்படி பார்த்துக்கொள்ளப்போகிறார்கள் என தெரியவில்லை.

      தன்னை சந்திக்க வருகின்றவர்களுக்கு புத்தகங்களையே நினைவாக கொடுத்தனுப்பிகின்றார் ஒருவர். அதற்காகவே புத்தகங்களை வாங்குகின்றான். அவர் மருத்துவமனையில் இருக்கும் போதுகூட அவரை சந்திக்க வந்திருந்தவர்களுக்கு புத்தகங்களையே கொடுக்கின்றார். ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக அவரின் மகன் கடைக்கு வந்து அதிகமான புத்தகங்களை வாங்குகின்றார். காரணம் விசாரிக்கையில், அவரது தந்தை இறந்துவிட்டதாகவும், துக்கத்தில் கலந்துக் கொள்கின்றவர்களுக்கு அவரின் நினைவாக புத்தகங்களைத்  தரவுள்ளதாகச் சொல்கிறார்.

      இப்படி, இப்புத்தகம் முழுக்கவும் பலவிதமான புத்தகங்கள் பற்றிய அறிமுகங்களைக் கொடுக்கின்றார். பல எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிச் சொல்கிறார். பழைய புத்தகக்கடை கொடுத்த அனுபவத்தையும் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் பேசி நம்மை கலங்க வைக்கிறார். கதைகளில் மட்டுமல்ல கட்டுரைகளிலும் கூட வாசகரை கலங்க வைக்க முடியும் என்பதை புரிந்துக்கொண்டேன். இன்னும் இந்த புத்தகம் காட்டிய மனிதர்களைப் பற்றி பேசலாம். ஆனால் அதனை நீங்களாக வாசிக்கையில் உங்களுக்கு ஏற்படும் கலங்களைத் தடுக்க நான் விரும்பவில்லை.

    நிறைவாக; எழுத்தாளர்கள், எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு. எங்கிருந்தெல்லாம் கதைகள் கிடைக்கின்றன. எதனை கதைகளாக்கலாம். எங்கிருந்து எங்கு அதன் இணைப்பைச் சேர்க்கலாம். என்ற நுணுக்கங்களை இக்கட்டுரைகளில் சொல்லப்பட்ட பகிர்வின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். வாசித்து முடித்ததும் இப்புத்தகத்தில் எங்கெல்லாம் கதைகளுக்கான ஆதர கருக்கள் உள்ளதென நான் குறித்துவைத்துக் கொண்டதை வாசிக்கின்றேன். புத்தகத்தை மூடி வைத்து, பால்கனியில் இருந்து பார்க்கிறேன் எத்தனை மனிதர்கள் எத்தனை கதைகளைச் சுமந்துக் கொண்டுச் செல்கிறார்கள்.


-      - தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்