பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 10, 2024

தமிழ்மொழி வாரம் - சிறப்பு விருந்தினர்

 


சமீபத்தில் தேசிய வகை கிளன்மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சென்றிருந்தேன். அப்பள்ளியின் ‘தமிழ்மொழி வார’ திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தனராக எழுத்தாளர் என்ற அடிப்படையில் அழைத்திருந்தார்கள்.

நிகழ்ச்சி காலையில் தொடங்கியது. பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும்; வந்திருந்த மாணவர்களின் எண்ணிக்கை நிறைவைக் கொடுத்தது. மாணவர்களும் ஆசிரியர்களும் வழக்கமானவற்றை செய்தார்கள்.


நான் மாணவர்களிடம் தமிழ் மொழி குறித்து பேசினேன். பதினைந்து நிமிடங்கள் என முடிவெடுத்திருந்தாலும் பேசப்பேச அது அரைமணி நேரம்வரைச் சென்றது. மொழி குறித்து பொதுவான சிலவற்றைப் பேசினாலும் குறிப்பாக தமிழ்மொழியின் வழி நமது பொருளாதாரத்தை எப்படி வளர்க்கலாம் என்கிற அடிப்படையில் மாணவர்களுடன் பேசினேன்.

அரசாங்க தொலைக்காட்சி வானொலி, தனியார் தொலைக்காட்சி வானொலி போன்ற ஊடகங்களுக்கு தமிழ் அறிந்தோர் எப்படியெல்லாம் பயன்படுகின்றார்கள் அவர்களுக்கு அங்குள்ள வேலை வாய்ப்புகள் போன்றவற்றை சுட்டுகாட்டினேன்.


அதோடு கலை சார்ந்தும் மொழிவழி எப்படியெல்லாம் நம்மை வளர்க்கலாம் என்பதற்கான சில உதாரணங்களையும் பகிர்ந்து கொண்டேன்.

எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் அங்குள்ள மணவர்களுடன் நேரடியான கேள்வி பதிலை நான் விரும்புவேன். அதற்காகவே என்னால் முடிந்த சில பரிசுகளையும் கொண்டு செல்வேன். இப்பள்ளியில் ஏறக்குறைய இருபது மாணவர்கள் வரை கேள்விகளை கேட்டார்கள்.

“நீங்க எப்படி கதை எழுதறீங்க?” என்ற கேள்வியில் இருந்து பலவிதமானக் கேள்விகள் மாணவர்களிடமிருந்து வந்தன. அது எல்லோரையும் உற்சாகப்படுத்தியது. நான் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லி முடித்து; கேள்விகள் கேட்ட மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினேன்.


என் உரை முடிந்தது; தமிழ் மொழி வாரத்தை திறந்து வைத்தேன். ஆசிரியர்கள் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாகவே செய்திருந்தார்கள்.

கதவதைத் திறந்ததும் திருவள்ளுவர் வெளியில் வந்தார், ஓலைச்சுவடிகளைக் கொடுத்து எங்களுடன் படம் எடுத்துக்கொண்டார்; இல்லையில்லை நாங்கள்தான் அவருடம் படம் எடுத்துக் கொண்டோம்.

எப்போதும் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும்போது; என் சார்பாக சில புத்தகங்களைப் பள்ளிக்கூட நூல்நிலையத்திற்கு கொடுப்பது வழக்கம். இம்முறை நான் எழுதிய ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ போன்ற குறுங்கதைப் புத்தகங்களுடன் கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய ‘பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம்’ என்ற கவிதைத் தொகுப்புகளையும் கொடுத்தேன். அவர்களும் எனக்கு பழக்கூடையையும் ருசியான சாப்பாட்டையும் கொடுத்தார்கள். மீண்டும் அம்மாணவர்களை சந்தித்துப் பேசும் ஆவலுடன் விடைபெற்றேன்.

இப்பள்ளிக்கு என்னை அறிமுகம் செய்த  அன்பிற்குரிய  ஆசிரியரும் கவிஞருமான நித்தியா வீரரகுவிற்கும், பள்ளி தலைமையாசிரியருக்கும் அவரின் நிர்வாகத்திற்கும் , அனைத்து ஆசிரியர்களுக்கும் நம் மாணவர்களுக்கும் என் அன்பு.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்