பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 09, 2024

அடுத்தது என்ன ?

 


வழக்கம் போல, ஆதித்தன் மகாமுனியையும் இளமாறனையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சந்திப்பின் நேரம் நீளமானதை பின்னர்தான் உணர்ந்தோம். நமக்குப் பிடித்தமானவற்றைப் பேசும் போது நமக்குள் தானாய் ஓர் உற்சாகம் வந்துவிடுகிறது. இந்தச் சந்திப்பும் அப்படித்தான் எங்களுக்கு அமைந்திருந்தது. எங்கள் மூவருக்கும் பொதுவாக இருந்தது எழுத்துதான். பேச்சு எங்கெங்கோ போனாலும் கூடக் கடைசியாய் அது சேருமிடம் எழுத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும்.


இம்முறை சிலவற்றை முக்கியமானவற்றைக் கவனத்தில் கொண்டு பேசினேன். சில காரணங்களாலும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலாலும் எழுதுவதில் இருந்து விலகி இருந்த ஆதித்தன் மகாமுனியை மீண்டும் எழுத சொன்னேன். தொடர்ந்து ‘விமர்சனத்தால் ஒருவர் எழுதாமலேயே போய்விட்டார்’ என்பதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துபவர்கள் செய்த காரியத்தால் ஓர் இளைஞன் எழுதுவதில் மனஅழுத்தததை எதிர்க்கொள்கிறான் என்பதுதான் எத்துனை முரண்.


எல்லாவற்றையும் கடந்து நாம் எழுத வேண்டி இருக்கிறது. எழுத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு எதுவும் தடை போடாதுதானே. உரையாடலில் ஆதித்தன் மகாமுனியிடன் பச்சை விளக்கிற்கான சமிக்ஞை தென்பட்டது. மீண்டும் அவரின் எழுத்துகளை நானுமே பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஏனெனில் எழுத எழுததான் ஒருவர் எழுத்தாளர்தானா என நாம் மட்டுமல்ல; எழுதியவரே தன்னைக் கண்டறிய முடியும்.

தன்னால் எழுத முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிந்த பின் அதற்கு முயலாமல்; தன்னை மற்ற இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாகக் கட்டமைத்துக் கொள்ளும் கோமாளித்தனங்களுக்கு மத்தியில் நாம் எழுதியெழுதிதான் நம்மை வளர்த்தெடுக்க முடியும். இல்லையெனில் எழுத்தின் மீதான நமது மொத்த உழைப்பையும் இன்னொருவரின் கோமாளித்தனங்களுக்குத் தாரைவார்த்து கொடுக்கும்படி ஆகிவிடும்.


ஆதித்தன் மகாமுனி மட்டுமல்ல; எழுத ஆர்வம் உள்ள எல்லோருக்குமே நான் சொல்வது ஒன்றுதான் வாசியுங்கள் எழுதுங்கள். ஆனால் இப்போது இன்னொன்றையும் சொல்ல நான் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். இளம் எழுத்தாளர்களே (சில சமயங்களில் தேர்ந்த எழுத்தாளர்கள் என நாம் நம்பும் சிலரும் உட்பட), யாராவது உங்களுக்குக் கதை எழுத கற்றுக்கொடுக்கிறேன் என்றாலும்; கதை என்றால் என்னவென்று பாடம் எடுக்க முனைந்தாலும்; அவர்களில் இலக்கியப் பார்வை என்ன? அவர்கள் எழுதிவைதான் என்ன என விசாரியுங்கள். கொஞ்சம் நீங்கள் அசந்தாலும் உங்களை அவர்கள் தங்களுக்கான சிஷ்ய பிள்ளைகளாக மாற்றிவிடுகிறார்கள்.


இதில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும்; விடயம் தெரியாதவர்களுக்கு நாம் எடுத்துரைக்கலாம். ஆனால் எல்லாம் தெரிந்தும் மனம்வந்து சிஷ்யர்களாக உழைக்கத் தயாராய் இருப்பவர்களுக்கு என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது.


இளமாறனைப் பொருத்தவரை கவிதை எழுதுவதில் அதிகம் விருப்பம் உள்ளவர். அவரிடம் கவிதைகள் குறித்துப் பேசினால் அவர் கண்களில் ஓர் ஒளிவெள்ளம் பாய்வதை நாம் பார்க்கலாம். இன்று அந்த ஒளிவெள்ளத்தை நானே கொஞ்சம் தூண்டிவிடவும் செய்தேன்.


கவிதைகள் குறித்த உரையாடல் இங்கு அதிகமாய் நடப்பதில்லை. ‘சிறகுகளின் கதை நேரம்’ நண்பர்கள் சார்பாக நாமே அதற்கான ஓர் உரையாடல் தளத்தை ஏற்படுத்தலாம் என்றேன். அதற்கான முதற்கட்ட திட்டங்களை மட்டுமே கூறினேன். மற்றபடி இளமாறன்தான் அதனை முன்னின்று நடத்த வேண்டும். அவர் அதனைப் பொறுப்பாகச் செய்வார்.


கவிதைகள் மீது ஆர்வம் உள்ளவர்களுடன் ஒரு சந்திப்பு. ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஐந்து கவிதைகளைக் கொண்டு வரவேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டுவந்த கவிதைகள் குறித்துப் பேச வேண்டும். அவ்வளவுதான். இங்குக் கவிதைகள் குறித்த தற்கால உரையாடலை இங்கிருந்துதான் தொடங்கினால் அது ஓர் உரையாடல் களமாக மாறும் என நம்புகின்றேன்.


இன்றைய சந்திப்பில் இன்னும் நிறையப் பேசினோம். ‘அடுத்தது என்ன?’ என்னும் கேள்வியோடு நண்பர்களுக்கு விடை கொடுத்தேன். நிச்சயம் மீண்டும் ஒரு நாள் சந்திப்போம்..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்