பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 30, 2024

- கொடுக்கும் கணக்கு -

 


 

காலையில் நகைக்கடைக்கு சென்றிருந்தேன். என்னது நகைக்கடையா? விக்கற விலைவாசிக்கு நகை வாங்கும் அளவிற்கு பணம் இருக்கோ? அதுவும் மாசக்கடைசியில் எப்படி முடிகிறது? என நினைத்தீர்கள்தானே? பதற்றத்தைக் குறையுங்கள். நகைக்கடை பக்கத்தில்தான் வழக்கமாக செல்லும்  அடகுக்கடை இருக்கிறது.

            அடுத்த மாத முதல் வாரத்தில் சில நகைகளுக்கான கெடு முடிகிறது. அன்றைய தினம் எனக்கு வெளியில் செல்ல வேண்டிய வேலை இருப்பதால் சில நாட்களுக்கு முன்னமே அடகு வைத்திருக்கும் நகைகளுக்கான மாதாந்திர பணத்தைச் செலுத்த நினைத்தேன். நான் நினைத்தேன் என்பதைவிடவும் வீட்டம்மா நினைத்துவிட்டார். எனக்கு அதை மறுக்கும் அளவிற்கு துணிவில்லை .

            வீட்டு தேவைகளுக்கே பணம் பற்றாகுறையா இருக்கின்ற காலகட்டம்; இம்மாத கட்டணங்களையே இன்னும் முழுமையாக கட்ட முடியாத சூழலில் நகைகளுக்கான கட்டணத்தை எப்படி செலுத்துவது. ஏற்கனவே வைத்திருக்கும் நகைகளின் சீட்டை காட்டை மேற்கொண்டு அதில் பணத்தை கேட்கலாம். குறைத்த பட்சம் கெடு முடிகின்ற நகைக்காவது அதை கட்டிவிடலாம். அடுத்த ஆறு மாதங்களுக்கு சிக்கல் இல்லை. இருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களில் கெடு முடிய காத்திருக்கும் நகைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

            மாதக் கடைசி என்பதால் அடகுக்கடையில் ஆட்கள் அதிகம் இருந்தார்கள். நான்கு கவுண்டர்களிலும் பணியாளர்கள் மும்முரமாக இருந்தார்கள். அனைத்து முகங்களும் ஒரே அச்சில் வார்த்தது போல இருக்கும். பெரும்பாலும் சீனர்கள் நடத்தும் அடகுக்கடையை அவர்களின் குடும்பத்தினரே வேலை செய்பவர்களாக இருப்பார்கள். பணம் என்று வந்துவிட்டால் அவர்களைப் போல கறாரானவர்களைப் பார்க்க முடியாது.

            நாம் கொடுக்கும் நகைகளின் தரத்திற்கு அவர்கள் சொல்வதுதான் விலை. ஒரு நாள் தாமதமாக பணம் கட்ட வந்தாலும் வட்டியை அதிகப்படுத்திவிடுவார்கள். அதற்கு பயந்தே சில நட்களுக்கு முன்னதாகவே பணத்தைக் கட்டிவிடுவோம். 

            இன்று; எனக்கு முன்பாக சிலர் இருந்தார்கள். ஒருவர் பின் ஒருவராக பணத்தைப் பெற்றும்; கட்டணத்தைக் கொடுத்தும் வெளியேறி கொன்டிருந்தார்கள்.

            முன் வரிசையி ஒருவர் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தார். நேற்றும் இங்கு வந்திருக்கின்றார். நகையை அடகு வைத்திருக்கிறார். இவர்களும் ஐம்பது வெள்ளித்தாட்களை கொடுத்திருக்கிறார்கள். அதில் சில தாட்களின் நடுவே வெள்ளையாக கோடு இருந்ததாம். அதாவது அது ஒரு வகையில் கள்ள நோட்டு. எங்கோ எப்படியே அடகுக்கடையில் நுழைந்து இவரிடம் சேர்ந்துவிட்டது.

            இதனைக் கேட்டதும் அங்கு பணத்தை எண்ணிக்கொண்டிருந்தவர், “ஐயோ…! அந்த பணத்தைக் கொண்டு வா.. நாங்க மாத்தி தறோம்… எங்கயோ மிஸ் ஆகிருச்சி போல..” என்றார்.

            இவரோ , அந்த பணத்தை அவராகவே மாற்றிவிட்டதாகவும் சொன்னார். “நல்லவேளையா வங்கியில் வாங்கியிருக்காங்க.. இல்லன்னா உங்களுக்கு எவ்வளவு சிரமமாயிருக்கும்..?” என்று சொல்லிய பணியாளர் மீண்டும் பணத்தை எண்ண ஆரம்பித்தார்.

            “யாரு… பேங்கு-க்கு எல்லாம் போனா… நான் எல்லாத்தையும் ஒவ்வொரு கடையில் ஜாமான்களை வாங்கி வாங்கி நாசுக்கா மாத்திட்டேன்ல…” என்று சிரிக்கலானார்.

            இதையெல்லாம் கேட்ட பக்கத்து கவுண்டரில் இருந்த வயதான சீனக்கிழவி எழுந்து, கொஞ்சம் கரகரப்பா குரலில்; “நீ மாற்றவில்லை… மற்றவர்களை ஏமாற்றியிருக்கிறாய்… இனி இப்படி செய்யாதே.. பணத்தை வாங்கியவுடன் இங்கயே ஒரு முறை சரி பார்த்துக்கோ… மறுபடியும் அப்படி இருந்தா இங்கயே கொண்டு வா.. நாங்களே மாத்தி தரோம்… மத்தவங்கள ஏமாத்தாதா…” என்றார்.

            அவர் பணத்தை வாங்கி கொண்டார். வெளியேறுவதற்கு முன்பாக என்னைப் பார்த்து “ஆமா.. ஊர்ல உள்ளவனுங்களையெல்லாம் இவனுங்க ஏமாத்துவானுங்கலாம்… நம்மல சொல்ல வந்துட்டானுங்க..” என்றார்.

இப்போது என் முறை மூன்றாம் கவுண்டரில் இருந்து அழைத்தார்கள்.

அப்போதுதான் கவனித்தேன் நான்காவது கவுண்டரில் ஒரு பெண் நீண்ட நேரமாகவே நின்று எதையோ கேட்டு கொண்டிருந்தார்.

அவரிடம் இருந்த நகைச்சீட்டைக் காட்டி, அதற்கு இன்னும் கொஞ்சம் பணம் கிடைக்குமா என கேட்டார். நானும் அதற்குத்தான் வந்திருக்கிறேன். ஒரு சீட்டில் காசை வாங்கி அதனை இன்னொரு சீட்டுக்கு கட்ட வேண்டும்.

ஆனால் அந்தப் பெண் கொண்டு வந்திருந்த நகைச்சீட்டில் வேறொருவர் பொயர் இருந்தது. சம்பந்தப்பட்டவர் வந்தால்தான் இப்படி கூடுதல் பணம் வாங்கவோ அல்லது முழு நகைக்கான பணத்தைக் கட்டி நகையை எடுக்கவோ முடியும்.

அந்த பெண்ணிடம் அங்குள்ள பணியாளர் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி கொண்டிருந்தார். இவருக்கு புரிகிறதா இல்லையா என தெரியவில்லை. அவர் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் கிடைக்கும் என கெஞ்ச தொடங்கிவிட்டார்.

இதை கவனித்த அந்தச் சீனக்கிழவி இந்தக் கவுண்டருக்கு வந்தார். அவரது கரகரப்பான குரலில் தெளிவாக ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லத் தொடங்கினார். யார் நகையை வைத்தார்களோ அவர்தான் வர வேண்டும். அல்லது அவரது அடையாள அட்டை இருந்தாலும் பரவாயில்லை என்றார்.

இது எதுவுமே சாத்தியமில்லை என்பதை அந்தப் பெண் புரிந்துகொண்டார். தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகின்றது. நகைச்சீட்டையும் தனது அடையாள அட்டையையும் வைத்து கொண்டு நூறு வெள்ளி இல்லாவிட்டாலும் ஐம்பது வெள்ளியாவது கொடுங்க என்றார்.

ஏறக்குறைய முப்பதை நெருங்காத வயதாக இருக்கலாம். ஆண்கள் அணியக்கூடிய சட்டையை அணிந்திருந்தார். அது அவரை விட பெரியதாக இருந்தது. மூச்சு வாங்கி மூச்சு வாங்கி பேசினார். கவுண்டரில் போடப்பட்டிருக்கும் மேஜையை தன் பிடிமானத்திற்காக பிடித்து நிற்பது நன்றாகவே தெரிகிறது.

சீனக்கிழவி மீண்டும் நிதானமான விளக்க முயன்றார். அந்தப் பெண்ணின் கண்கள் கலங்கிவிட்டன. “என் குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்ல… இதை வச்சிதான் நான் போய் பால் வாங்கனும்… என்னோட அடையாள அட்டையை வச்சிக்கோங்க.. கொஞ்ச காசா இருந்தாலும் பரவால..” என்று அந்தப் பெண் சொல்லவும் அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவரிடம் வந்து போனது.

எனக்கும் கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. அவர் குழந்தைக்கு பால் வாங்க பணம் இல்லை என்பது என்னை ஏதோ செய்தது. நான் என் பொம்மியை நினைத்து கொண்டேன். குழந்தைக்கு எத்தனை வயது என சீனக்கிழவி விசாரிக்கவும், நான்கு மாதங்கள் என்றார்.

எனது கவுண்டரில் நான் வந்த வேலை முடிந்தது. அவர்களிடமே பணம் வாங்கி அவர்களிடமே கட்டணத்தைச் செலுத்தி மிச்ச பணத்தைச் சரி பார்த்தேன். பெரிதாக ஒன்றும் மிச்சமில்லை. குறைந்தது இரண்டு நாட்களுக்கு சமைப்பதற்கு சிலவற்றை வாங்கி போகிற அளவிற்குதான் இருந்தது.

அதிலிருந்து பதினைந்து வெள்ளியை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தேன். அந்தப் பெண் என்னை அதிர்ச்சியில் பார்த்தார். எனக்கும் என்ன சொல்வது என பிடிபடவில்லை. “இது உங்களுக்கு இல்ல.. உங்க குழந்தைக்கு பால் வாங்க… என் வீட்டுலயும் ஒரு குழந்தை இருக்கு… வச்சிக்கோங்க..” என்றேன்.

இதை கவனித்து கொண்டிருந்த சீனக்கிழவியை அலுவலகத்தின் உள்ளே யாரோ அழைத்தார்கள். உள்ளே சென்றவர் உடனே வெளியில் வந்தார். அந்தப் பெண்ணிடம் நூறு ரிங்கிட்டைக் கொடுத்தார். அந்தப் பெண்ணும் அதை வாங்கி கொண்டு தனது அடையாள அட்டையையும் நகைச்சீட்டையும் கொடுத்தார்.

சீனக்கிழவி அதனை வாங்கவில்லை. இது அவரது முதலாளி கொடுக்க சொன்னதாகவும், குழந்தைக்கு பால் வாங்க பயன்படுத்து என்றார். அந்தப் பெண்ணால் அழுகையை அடக்க முடியவில்லை. அந்தச் சீனக்கிழவிக்கும் நன்றி சொல்லி. அலுவலகத்தை எட்டி பார்க்க அங்கு வெறும் கறுப்பு கண்ணாடிகள்தான் தெரிந்தன. அங்கும் நன்றி சொல்லிவிட்டு என்னிடமும் நன்றி சொல்லிவிட்டு தாங்கி தாங்கி நடந்து வெளியேறினார்.

அந்தச் சீனக்கிழவி என்னைப் பார்த்து “பாஸ் உள்ள கூப்ட்டு  சொன்னாரு.. அவ உண்மையாவே குழந்தைக்கு பால் வாங்கதான் காசு கேட்டாள்ன்னு..  எப்படி கண்டுபிடிச்சாருன்னு தெரியல..”  என்றவர் அவரது கவுண்டருக்குச் சென்றார்.

நானும் வெளியேறினேன். என் காரில் அமர்ந்தேன். என்னை அறியாமல் கொஞ்ச நேரம் அழுது கொண்டிருந்தேன்.

இது என் இயலாமையை நினைத்து வந்த அழுகை அல்ல. எனக்கும் பண நெருக்கடிதான். கடன் தான். அடுத்த மாதத்தை எப்படி சமாளிக்க போகிறேன் என தெரியவில்லைதான். ஆனால் ஒரு குழந்தைக்கு பால் வாங்க என்னிடமிருந்து சிறிய தொகையை அந்த கடவுள் கொடுக்க வைத்திருக்கிறார் என்ற நன்றியுணர்வில் வந்தக் கண்ணீர்.

அழுதக் கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டு, கடவுளுக்கு நன்றி சொல்லிகொண்டேன். கண்களைத் திறந்தேன். தூரத்தில் அந்தப் பெண் கையில் குழந்தைக்கான பால்  பாக்கெட்டுகளை வாங்கி கொண்டு தாங்கித்தாங்கி போய்க்கொண்டிருக்கிறார்.

- தயாஜி

 

 

ஜூன் 24, 2024

செந்தமிழ் விழா24 - நீதிபதிகள்



 செந்துல் , கான்வெண்ட் இடைநிலை பள்ளிக்கு (SMK CONVENT, SENTUL) அழைத்திருந்தார்கள்.  அப்பள்ளியின் 'செந்தமிழ் விழா 2024' க்கு பல பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு பல போட்டிகள் நடந்தன.

போட்டிகளுக்கு பல தமிழறிஞர்கள் நீதிபதிகளாக வந்திருந்தார்கள்

கல்வியாளர் மன்னர் மன்னன்,  ஆசிரியை சுகந்தி ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன்.

நாங்கள் மூவரும் கவிதை போட்டிக்கு நீதிபதிகளாக பொறுப்பேற்றோம்.

அப்போட்டி இரு பிரிவுகளாக நடந்தன, முதற்கட்டமாக 26 மாணவர்கள் கவிதை வாசிக்கும் போட்டியில் பங்கெடுத்தார்கள். அதிலிருந்து பத்து மாணவர்கள் இரண்டாம் கட்டத்திற்கு வந்தார்கள். அவர்களில் ஐந்து மாணவர்கள் பரிசுக்குரியவர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

மாணவர்கள் பெரும்பாலும் மலேசிய கவிஞர்களின் கவிதையை வாசித்தது மனதைக் கவர்ந்தது. 

போட்டி முடிந்ததும், பங்கெடுத்த மாணவர்கள் செய்த சிறுசிறு தவறுகளை ஐயா மன்னர் மன்னன் எடுத்துரைத்தார். அவருக்கே உரிய பாணியில் அவர் பேசியது மாணவர்களைக் கவர்ந்தது. 

நானும் என் பங்கிற்கு ஆசிரியரிடம் மாணவர்கள் குறித்து பேசினேன். வாசிப்பின் வழி மலேசிய எழுத்தாளர்களை நம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டியது பற்றி அது அமைந்திருந்தது.


பிறகு ஒவ்வொரு போட்டியிலும் பங்கெடுத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். நீதிபதிகளாக பொறுப்பேற்ற உங்களுக்கு சிறப்பு செய்து நினைவுச்சின்னத்தையும் நற்சான்றிதழையும் வழங்கினார்கள்.

அன்றைய பொழுது மாணவர்களுடன் சிறப்பாக அமைந்தது. வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர் சுலோச்சனாவிற்கும் அன்பும் நன்றியும்...


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 

#வெள்ளைரோஜா_பதிப்பகம் #சிறகுகளின்_கதை_நேரம்

ஜூன் 21, 2024

அந்தக் குரல் கேட்கிறதா?


 தினமும், நாளொன்றுக்கு எத்தனை பக்கங்களை என்னால் வாசிக்க முடிகிறது என ஒரு பயிற்சியாகவே நான் வாசித்து வருகிறேன்.

   குறைந்து 50 பக்கங்கள் வரை என்னால் வாசிக்க முடிகிறது. சில சமயம் அரை பக்கம் மட்டுமே அன்றைய தினத்தில் வாசித்திருப்பதும் நடந்திருக்கிறது. வாசிக்கும் புத்தக பக்கங்களை மட்டுமே இதில் சொல்கிறேன். அது தவிர

  இணையத்தில் வாசிக்கின்றவற்றை சேர்க்கவில்லை.

  நாளொன்றுக்கு இருநூறு பக்கங்களும் அதற்கும் கூடுதலான பக்கங்கள் வரை வாசித்த சமயமும் அனுபவும் இருக்கிறது. இப்போது அது முடியவில்லை. பொருளாதாரமும் உடல் ஆரோக்கியமும் தம்மை முதன்மைபடுத்தி கொள்கின்றன. ஆனாலும் குறைந்தபட்சம் என்கிற கணக்கில் அரை பக்கத்தையாவது வாசிக்கின்றேன்.

  அவ்வப்போது வரும் ஒற்றைத் தலைவலியால் (மைக்ரீன்) கண்களில் சிறு வெளிச்சம் பட்டாலும் தலை சுற்றி மயக்கமும் வாந்தியும் வந்துவிடும். அப்போது மாட்டும் குறைந்த பட்ச அரைபக்க வாசிப்பு, சில வரிகள் அல்லது புத்தகத்தைத் திறந்து ஆங்காங்கே சில வரிகளை வாசித்து சட்டென கண்களை மூடிக்கொள்வேன். அல்லது கண்களைச் சுருக்கிக் கொள்வேன்.

   அப்படியே விடக்கூடாது என்பதை எனக்கு நானே சொல்லப்பழகிவிட்டேன். வாசிப்பும் எழுத்தும் என்னை இயக்கும் ஆக்க சக்திகள் என முழுமையாக ஏற்றுக்கொண்டேன்.

  இப்போது குடும்பப்பொறுப்புகளுக்கு மத்தியில் மேற்சொன்ன இரண்டையும் இணைத்து ஒரு மாதிரியாக வாழ்க்கையை அமைத்திருக்கிறேன்.

  உங்களிடம் வாசியுங்கள் என நான் சொல்வதற்கு பின்னால், பல வலி வேதனைகளையும் அவமானங்களையும் இழப்புகளையும் சுமந்திருக்கும் ஒருவனின் குரல் இருக்கிறது. 

  அந்தக் குரல்தான் வாசிப்பை உதாசினம் செய்து தங்களை எழுத்தாளர்களாக சொல்லிக்கொள்பவர்கள் மேல் கோவமாகவும் வெளிப்படுகிறது.

  எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்தான். ஒருவேளை

   உங்களுக்கு அந்தக் குரல் கேட்டால்; அதற்கு பதில் கொடுக்கும் விதமாக நீங்கள் வசிப்பதே எனக்கு மகிழ்ச்சி.

  பின் அதைப்பற்றி உரையாடுவது; கொண்டாட்டம்.

கொண்டாடுவோம்...

ஜூன் 16, 2024

மாணவர்களுக்கான கதைச்சொல்லி


 ஓர் எழுத்தாளனாக எனக்கு, நான் எழுதிய கதைகள் பேசப்படுவது பிடிக்கும், அதைவிடவும் நான் வாசித்த கதைகளைப் பேசுவது பிடிக்கும். அதே போல மாணவர்களுக்கும் எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கும் கதைகளைச் சொல்வதென்றால் லட்டு சாப்பிடுவது போல் ஒரு கொண்டாட்டமாகவே அதனை நான்  மாற்றிக்கொள்வேன்.


யாருக்கு என்ன கதைகளைச் சொல்வதென்று எனக்கு நன்றாகவே தெரியும். ஒரே கதையை இரு வகையாக மாற்றியும் கூட இரு தரப்பினர்க்கு சொல்லியிருக்கிறேன். எங்களது குறுங்கதை எழுதும் வகுப்பில் பிரதான பாடமே குறுங்கதைகளை வாசித்து, வாசித்த கதைகளை மற்றவர்களுடன் சொல்லி மேலும் கதையை செறிவாக்கம் செய்வதுதான்.



ஏறக்குறைய பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மின்னல் பண்பலையில் அறிவிப்பாளராக இருந்த சமயம். எங்களுகென்று சில நிகழ்ச்சிகளை தயாரிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது சிறுவர் நிகழ்ச்சியான ‘செல்லமே செல்வமே’ எனும் நிகழ்ச்சிக்கு அதன் தயாரிப்பாளராக சித்ரா இருந்தார். மாணவர் படைப்புகளை ஒளிப்பதிவு செய்வதற்காக சில பள்ளிகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதனை பயன்படுத்தி ‘மாணவர்களுக்கு கதை சொல்லலாமா’ என நிர்வாகத்திடம் கேட்டிருந்தேன். சம்மதம் கிடைத்தது. தயாரிப்பாளர் சித்ராவுடன் நானும் பள்ளிகளுக்கு சென்றேன்.


அவர் மாணவர் படைப்புகளை ஒலிப்பதிவு செய்யும் போது நான் மற்ற மாணவர்களுக்கு கதைகளைச் சொல்லிக்கொண்டிருப்பேன். பெரிய நம்பிக்கையுடன் தொடங்கியது திட்டம்; சில எதிர்ப்பாராத சூழலால் தொடர முடியாமல் போனது.


அவ்வப்போது பள்ளிக்கூடங்களுக்கு சிறுகதைகள் , குறுங்கதைகள் எழுதும் பட்டறையை வழிநடத்த செல்லும் போது கதை சொல்வது அத்தியாவசியமானதாகவும் இருக்கிறது முக்கியமானதாகவும்  இருக்கிறது.


மீண்டும் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளிக்கு கதை சொல்ல சென்றிருந்தேன். மீண்டும் என்பதற்கு காரணம், பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு முறை இப்பள்ளிக்கு கதை சொல்ல சென்றிருந்தேன். ஆசிரியரும் எழுத்தாளருமான ம.நவீன் அழைத்திருந்தார்;இப்போதும் அவர்தான் அழைத்தார்.



அப்போது மாணவர்கள் பள்ளியில் தங்கியிருந்தார்கள். நானும் சில நண்பர்களும் முதல் நாள் இரவு மாணவர்களுக்கு கதை சொல்ல சென்றோம். கதை சொல்லி முடிந்ததும் எங்களுக்கு புத்தக பரிசுகளைக் கொடுத்தார்கள். எனக்கு சுந்தர ராமசாமியின் கட்டுரை புத்தகத்தை ம.நவீன் கொடுத்தார். அந்த அனுபவத்தைப் பற்றி முகநூலில் எழுதியிருக்கிறேன். ஆனால் அன்றைய மனநிலையில் அவற்றை புகைப்படம் எடுத்து சேமிக்க தோன்றவில்லை. 


தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் கருவூல மையத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு நான் உட்பட எழுத்தாளர்களான ஶ்ரீகாந்தன், விஸ்வநாதன், அரவின் குமார், சாலினி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தோம்.


காலை 8.30க்கு நிகழ்ச்சி தொடங்குகிறது. நானும் நண்பர்களும் அதிகாலை 6 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்துவிட்டோம். ஏனெனில் கொஞ்சம் தாமதித்தாலும் வாகன நெரிசலில் மாட்டிக்கொள்வோம். சரியான நேரத்திற்கு பள்ளி வர முடியாமல் போய்விடும்.


காலை சிற்றுண்டியில் மாணவர்கள் குறித்தும் இன்றைய நிகழ்ச்சி குறித்தும் ம.நவீன் விளக்கினார். தமிழ்மொழி வார நிறைவு நாள் என்பதால் சில போட்டிகளையும் நடத்தியிருக்கிறார்கள். அதில் இரு போட்டிகள் மட்டும் இன்று நடக்கவுள்ளதையும் சொன்னார்.



பின் நாங்கள் தலைமை ஆசிரியரை சந்தித்து பேசினோம். வழக்கம் போல நான் என் சார்பாக பள்ளிக்கு நான் எழுதிய ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ என்ற புத்தகங்களையும் கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய ‘பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம்’ கவிதைத் தொகுப்பையும் கொடுத்தேன்.


 பிறகு நாங்கள் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். ம.நவீன் எங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார். அதோடு கதை சொல்லுதலில் முக்கியத்துவத்தையும் பேசினார்.


எங்கள் ஐவருக்கும் தலா ஆளுக்கு ஏறக்குறைய 20-25 மாணவர்களை ஒப்படைத்தார்கள். அப்படியே ஆளுக்கொரு ஒரு இடமும் வழங்கப்பட்டது. நானும் என் மாணவர்களை அழைத்துகொண்டு வகுப்பறைக்குச் சென்றேன்.


என்னைப் பற்றிய சிறு அறிமுகத்தை மாணவர்களுக்கு சொன்னேன். ‘கதை என்றால் என்ன?’ என்ற கேள்வியுடன் தொடங்கினேன். சில நிமிடங்களில் மாணவர்கள் என் பேச்சை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நமக்கும் அதுதானே வேண்டும்.


அவர்களுக்காக கொண்டு வந்திருந்த கதைகளில் அவர்களையே கதாப்பாத்திரங்களாக மாற்றி பேச வைத்தேன். அது மாணவர்களை கவர்ந்தது. கதைகளுக்கு இடையிடையே கேள்வி பதில் அங்கமும் இருந்தது. பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்குமே சிறு சிறு பரிசுகளைக் கொடுத்தேன். நேரம் போனதே தெரியவில்லை. ஒரு மணி நேரம் கதைகளிலேயே கரைந்திருந்தது. கதை சொல்லும் அமர்வு முடிந்ததும் மீண்டும் மண்டபத்திற்கு சென்றோம்.



அங்கு பாடல் போட்டியும், மாறுவேட போட்டியும் நடந்தது. நாங்கள் அதற்கு நீதிபதிகளாக தனித்தனியாக நியமிக்கப்பட்டோம். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எங்களுக்கும் நினைவுப்பரிசு, நற்சான்றிதழ், புத்தம்  என கொடுத்து சிறப்பு செய்தார்கள்.

நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. 


மாணவர்களுக்கு  சொல்லிய கதைகளில் அவர்கள் மட்டுமல்ல நாங்களும் உற்சாகமாகிவிட்டோம். பள்ளியிலேயே எங்களுக்கும் பிரியாணியை ஏற்பாடு செய்திருந்தார்கள். இவ்வேளையில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருக்கும், கருவூல மையத்தின் பொறுப்பாளர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கு , ஆசிரியர் ம.நவீன் அவர்களுக்கும் எங்கள் நன்றி.

ஜூன் 10, 2024

தமிழ்மொழி வாரம் - சிறப்பு விருந்தினர்

 


சமீபத்தில் தேசிய வகை கிளன்மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சென்றிருந்தேன். அப்பள்ளியின் ‘தமிழ்மொழி வார’ திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தனராக எழுத்தாளர் என்ற அடிப்படையில் அழைத்திருந்தார்கள்.

நிகழ்ச்சி காலையில் தொடங்கியது. பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும்; வந்திருந்த மாணவர்களின் எண்ணிக்கை நிறைவைக் கொடுத்தது. மாணவர்களும் ஆசிரியர்களும் வழக்கமானவற்றை செய்தார்கள்.


நான் மாணவர்களிடம் தமிழ் மொழி குறித்து பேசினேன். பதினைந்து நிமிடங்கள் என முடிவெடுத்திருந்தாலும் பேசப்பேச அது அரைமணி நேரம்வரைச் சென்றது. மொழி குறித்து பொதுவான சிலவற்றைப் பேசினாலும் குறிப்பாக தமிழ்மொழியின் வழி நமது பொருளாதாரத்தை எப்படி வளர்க்கலாம் என்கிற அடிப்படையில் மாணவர்களுடன் பேசினேன்.

அரசாங்க தொலைக்காட்சி வானொலி, தனியார் தொலைக்காட்சி வானொலி போன்ற ஊடகங்களுக்கு தமிழ் அறிந்தோர் எப்படியெல்லாம் பயன்படுகின்றார்கள் அவர்களுக்கு அங்குள்ள வேலை வாய்ப்புகள் போன்றவற்றை சுட்டுகாட்டினேன்.


அதோடு கலை சார்ந்தும் மொழிவழி எப்படியெல்லாம் நம்மை வளர்க்கலாம் என்பதற்கான சில உதாரணங்களையும் பகிர்ந்து கொண்டேன்.

எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் அங்குள்ள மணவர்களுடன் நேரடியான கேள்வி பதிலை நான் விரும்புவேன். அதற்காகவே என்னால் முடிந்த சில பரிசுகளையும் கொண்டு செல்வேன். இப்பள்ளியில் ஏறக்குறைய இருபது மாணவர்கள் வரை கேள்விகளை கேட்டார்கள்.

“நீங்க எப்படி கதை எழுதறீங்க?” என்ற கேள்வியில் இருந்து பலவிதமானக் கேள்விகள் மாணவர்களிடமிருந்து வந்தன. அது எல்லோரையும் உற்சாகப்படுத்தியது. நான் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லி முடித்து; கேள்விகள் கேட்ட மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினேன்.


என் உரை முடிந்தது; தமிழ் மொழி வாரத்தை திறந்து வைத்தேன். ஆசிரியர்கள் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாகவே செய்திருந்தார்கள்.

கதவதைத் திறந்ததும் திருவள்ளுவர் வெளியில் வந்தார், ஓலைச்சுவடிகளைக் கொடுத்து எங்களுடன் படம் எடுத்துக்கொண்டார்; இல்லையில்லை நாங்கள்தான் அவருடம் படம் எடுத்துக் கொண்டோம்.

எப்போதும் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும்போது; என் சார்பாக சில புத்தகங்களைப் பள்ளிக்கூட நூல்நிலையத்திற்கு கொடுப்பது வழக்கம். இம்முறை நான் எழுதிய ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ போன்ற குறுங்கதைப் புத்தகங்களுடன் கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய ‘பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம்’ என்ற கவிதைத் தொகுப்புகளையும் கொடுத்தேன். அவர்களும் எனக்கு பழக்கூடையையும் ருசியான சாப்பாட்டையும் கொடுத்தார்கள். மீண்டும் அம்மாணவர்களை சந்தித்துப் பேசும் ஆவலுடன் விடைபெற்றேன்.

இப்பள்ளிக்கு என்னை அறிமுகம் செய்த  அன்பிற்குரிய  ஆசிரியரும் கவிஞருமான நித்தியா வீரரகுவிற்கும், பள்ளி தலைமையாசிரியருக்கும் அவரின் நிர்வாகத்திற்கும் , அனைத்து ஆசிரியர்களுக்கும் நம் மாணவர்களுக்கும் என் அன்பு.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

ஜூன் 09, 2024

அடுத்தது என்ன ?

 


வழக்கம் போல, ஆதித்தன் மகாமுனியையும் இளமாறனையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சந்திப்பின் நேரம் நீளமானதை பின்னர்தான் உணர்ந்தோம். நமக்குப் பிடித்தமானவற்றைப் பேசும் போது நமக்குள் தானாய் ஓர் உற்சாகம் வந்துவிடுகிறது. இந்தச் சந்திப்பும் அப்படித்தான் எங்களுக்கு அமைந்திருந்தது. எங்கள் மூவருக்கும் பொதுவாக இருந்தது எழுத்துதான். பேச்சு எங்கெங்கோ போனாலும் கூடக் கடைசியாய் அது சேருமிடம் எழுத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும்.


இம்முறை சிலவற்றை முக்கியமானவற்றைக் கவனத்தில் கொண்டு பேசினேன். சில காரணங்களாலும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலாலும் எழுதுவதில் இருந்து விலகி இருந்த ஆதித்தன் மகாமுனியை மீண்டும் எழுத சொன்னேன். தொடர்ந்து ‘விமர்சனத்தால் ஒருவர் எழுதாமலேயே போய்விட்டார்’ என்பதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துபவர்கள் செய்த காரியத்தால் ஓர் இளைஞன் எழுதுவதில் மனஅழுத்தததை எதிர்க்கொள்கிறான் என்பதுதான் எத்துனை முரண்.


எல்லாவற்றையும் கடந்து நாம் எழுத வேண்டி இருக்கிறது. எழுத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு எதுவும் தடை போடாதுதானே. உரையாடலில் ஆதித்தன் மகாமுனியிடன் பச்சை விளக்கிற்கான சமிக்ஞை தென்பட்டது. மீண்டும் அவரின் எழுத்துகளை நானுமே பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஏனெனில் எழுத எழுததான் ஒருவர் எழுத்தாளர்தானா என நாம் மட்டுமல்ல; எழுதியவரே தன்னைக் கண்டறிய முடியும்.

தன்னால் எழுத முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிந்த பின் அதற்கு முயலாமல்; தன்னை மற்ற இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாகக் கட்டமைத்துக் கொள்ளும் கோமாளித்தனங்களுக்கு மத்தியில் நாம் எழுதியெழுதிதான் நம்மை வளர்த்தெடுக்க முடியும். இல்லையெனில் எழுத்தின் மீதான நமது மொத்த உழைப்பையும் இன்னொருவரின் கோமாளித்தனங்களுக்குத் தாரைவார்த்து கொடுக்கும்படி ஆகிவிடும்.


ஆதித்தன் மகாமுனி மட்டுமல்ல; எழுத ஆர்வம் உள்ள எல்லோருக்குமே நான் சொல்வது ஒன்றுதான் வாசியுங்கள் எழுதுங்கள். ஆனால் இப்போது இன்னொன்றையும் சொல்ல நான் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். இளம் எழுத்தாளர்களே (சில சமயங்களில் தேர்ந்த எழுத்தாளர்கள் என நாம் நம்பும் சிலரும் உட்பட), யாராவது உங்களுக்குக் கதை எழுத கற்றுக்கொடுக்கிறேன் என்றாலும்; கதை என்றால் என்னவென்று பாடம் எடுக்க முனைந்தாலும்; அவர்களில் இலக்கியப் பார்வை என்ன? அவர்கள் எழுதிவைதான் என்ன என விசாரியுங்கள். கொஞ்சம் நீங்கள் அசந்தாலும் உங்களை அவர்கள் தங்களுக்கான சிஷ்ய பிள்ளைகளாக மாற்றிவிடுகிறார்கள்.


இதில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும்; விடயம் தெரியாதவர்களுக்கு நாம் எடுத்துரைக்கலாம். ஆனால் எல்லாம் தெரிந்தும் மனம்வந்து சிஷ்யர்களாக உழைக்கத் தயாராய் இருப்பவர்களுக்கு என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது.


இளமாறனைப் பொருத்தவரை கவிதை எழுதுவதில் அதிகம் விருப்பம் உள்ளவர். அவரிடம் கவிதைகள் குறித்துப் பேசினால் அவர் கண்களில் ஓர் ஒளிவெள்ளம் பாய்வதை நாம் பார்க்கலாம். இன்று அந்த ஒளிவெள்ளத்தை நானே கொஞ்சம் தூண்டிவிடவும் செய்தேன்.


கவிதைகள் குறித்த உரையாடல் இங்கு அதிகமாய் நடப்பதில்லை. ‘சிறகுகளின் கதை நேரம்’ நண்பர்கள் சார்பாக நாமே அதற்கான ஓர் உரையாடல் தளத்தை ஏற்படுத்தலாம் என்றேன். அதற்கான முதற்கட்ட திட்டங்களை மட்டுமே கூறினேன். மற்றபடி இளமாறன்தான் அதனை முன்னின்று நடத்த வேண்டும். அவர் அதனைப் பொறுப்பாகச் செய்வார்.


கவிதைகள் மீது ஆர்வம் உள்ளவர்களுடன் ஒரு சந்திப்பு. ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஐந்து கவிதைகளைக் கொண்டு வரவேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டுவந்த கவிதைகள் குறித்துப் பேச வேண்டும். அவ்வளவுதான். இங்குக் கவிதைகள் குறித்த தற்கால உரையாடலை இங்கிருந்துதான் தொடங்கினால் அது ஓர் உரையாடல் களமாக மாறும் என நம்புகின்றேன்.


இன்றைய சந்திப்பில் இன்னும் நிறையப் பேசினோம். ‘அடுத்தது என்ன?’ என்னும் கேள்வியோடு நண்பர்களுக்கு விடை கொடுத்தேன். நிச்சயம் மீண்டும் ஒரு நாள் சந்திப்போம்..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்