பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 14, 2022

புத்தகவாசிப்பு 2022_3 அகரமுதல்வனின் முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு

முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு

தலைப்பு – முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு

எழுத்து – அகரமுதல்வன்

வகை – சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு – டிஸ்கவரி புக் பேலஸ்

நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)


விரும்பி யாரும் மன உளைச்சலை நாடுவார்களா? இயலாமையின் பைத்தியத்திற்கு மிக அருகில் சென்று திரும்பதான் யாரும் தயாராவார்களா? இவ்வளவு ஏன் மனிதர்கள் எத்துணை மோசமானவர்கள் என தேடித்தேடி அறிந்து கொண்டு வருந்தி வீழ முயல்வார்களா? அப்படித்தான் இருக்கிறது அகரமுதல்வனின் கதைகள்.

சிலர் என்னிடம் அவர்களின் சிறுகதைகளை வாசிக்கச்சொல்லிக் கேட்பார்கள். வாசித்து  சொல்லும்  பொழுது அவை வெறும் சம்பவங்கள்தான் கதைகளாக  மாறவில்லை என்பேன். அதன்  பிறகே  இது  என்  பக்கத்து வீட்டில் நடந்த கதை,  எதிர்த்த வீட்டில் நடந்த கதை என சொல்வார்கள். இப்படி நாம் கேட்டும் பார்த்தும் உணரும் சம்பவங்களைக் கதைகளாக்குவது  எளிதல்ல என்பது நமக்கு தெரியும்.  அப்படி தன் கண் முன்னே சிதைந்த நம்மினத்தின் வரலாற்றின் இரத்தக்குருதியைக்  கதைகளில் எழுதி  ஊருக்கும் உலகுக்கும் உரக்கச் சொல்லும் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார் அகரமுதல்வன்.

கதைகளில் வாதையினை எழுத சிரமப்படும் கைகளுக்கு மத்தியில் நம்மினத்தின் ஒட்டுமொத்த வாதையையும் சிதைவுகளையும் சின்னாபின்னங்களையும் தொடர்ந்து எழுதிவரும் அகரமுதல்வனின் கைகளுக்கு என் கண்ணீர்த்துளிகளை படரவிடுகிறேன். நான் எவ்வளவு பலவீனமானவன் என்பதை, அழவே மாட்டேன் என்கிற கட்டுகளை இவரின் கதைகள் உடைத்துவிடுகின்றன. கண்முன்னே வாதைகளை நடத்திக் காட்டுகின்றன. வாசகனையும் அதில் ஒருவனாக மாற்றிவிட்டு கதையை முடிகின்றன. அவர் எழுதி முடித்த கதையின் கடைசி வாக்கியத்தில் இருந்து அக்கதை நம் மனதில் விரிந்து செல்கிறது.

எழுத்தாளர் அகரமுதல்வனை  அவரின் முதல்  சிறுகதைத் தொகுப்பான ‘இரண்டாம் லெப்ரிணன்ட்’ புத்தகம் மூலமாக வாசித்து அறிந்து கொண்டேன். அச்சிறுகதைகள் பற்றி எழுதிய என் வாசிப்பு அனுபவத்தில் இதுவரையில் இல்லாத வாக்கியக் குழப்பங்கள், பிழைகள் என இருப்பதை கண்டேன். அதனாலேயே  அதிக நேரம் எடுத்து அந்த கட்டுரையைப் பகிர்ந்தேன். ஏனெனின் அக்கதைகள் என்னை என் இயல்பிலிருந்தும் என் இருத்தலில் இருந்தும் இடம் பெயர்த்துவிட்டன.  மீண்டு வர அதிக நேரம் எடுத்தது. வீட்டில் அச்சிறுகதைகளைப் பற்றி பேசிப்பேசியே என் மன உளைச்சலில் இருந்து மீண்டேன்.

ஏன் “இப்படி எழுதறீங்க?” என வழக்கமான பொது வாசிப்பில் இருந்து வரும் கேள்விகளைப் புறக்கணித்து, எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டிருக்கிறோம் என்கிற ஆவணங்களாக இதனை அடுத்த தலைமுறைக்கு (இத்தலைமுறைக்குக் கூட முழுமையாக புரிந்ததா என தெரியவில்லை), அடுத்த தலைமுறைக்காவது கொண்டு செல்ல வேண்டும். எப்படி இருந்தோம் தெரியுமா என்கிற பழம் பெறுமையின் குளிர்ச்சியில் இருந்து, எப்படியெல்லாம் வதைக்கப்பட்டோம் என்கிற இரத்தச்சூட்டை காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு அகரமுதல்வனின் எழுத்துகள் நம்மை தள்ளிவிடுகின்றன.

இப்படியெல்லாம் இருந்தும் கூட ஏன் மீண்டும் அகரமுதல்வனை வாசிக்க வேண்டும். ஏன் அவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பையும் வாசிக்க வேண்டும் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். பதில் தெரியவில்லை. ஒருவேளை ஒவ்வொரு கதையிலும் வந்து போகும் மனிதனுக்காக சில நிமிடங்கள் மௌன அஞ்சலியையும் சில கண்ணீர் துளிகளையும் கொடுப்பதற்காக இருக்கலாம்.

அகரமுதல்வனின் படைப்புகள் குறித்தும் பொதுவாகவே இலங்கை படைப்பாளிகள் மீதான மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் மறுத்துப்பேசவும் புறக்கணித்து ஓடவும் முடியாத எழுத்துகள் அகரமுதல்வனுடையது.

‘முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு’ சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பத்து சிறுகதைகள் என்றழைக்க வேண்டிய  பெரும் வதைகள் அடங்கியுள்ளன.

 

1.   மரணத்தின் சுற்றிவளைப்பு

‘நான் என்ன செய்யப்போகிறேன் என்று எண்ணுவதை விடுத்து என்னை என்ன செய்யப்போகிறார்கள் என யோசிக்கும் ஒரு காலத்தில் உயிர்வாழ்வது அவமானம்’ என்னும் வரி இக்கதையில் வருகிறது. போர்க்களத்தில் தொலைந்த, உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்ற நிலையில் இருக்கும் காதலி நித்திலாவிற்கு அன்பு எழுதும் கடிதம். ஒரு காதல் கடிதத்தில் என்னவெல்லாம் இருக்கும் என நாம் அறிந்ததிலிருந்து இன்னொன்றைச் சொல்கிறார் ஆசிரியர்.

2.   திருவளர் ஞானசம்பதன் 

எல்லாவற்றையும் இழந்த பின் முகாமில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம் சாவதற்குக்கூட அதிஷ்டம் அற்றவர்கள் என சொல்லும் கதை.

3.   சர்வ வியாபகம் 

போராளியின் வாழ்வின் ஒருவர் எதிர்க்கொள்ளும் சிக்கலைச் சொல்லும் கதை. நம்பிக்கை என்பதும் எதார்த்தம் என்பதும் வேறு வேறானவை என ஆசிரியர் சொல்வதற்கு காரணம் இல்லாமலில்லை

4.   கிழவி 

முகாமில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ப்படுகிறார்கள் பாட்டியும் (கிழவி) பேத்தியும் அங்கிருந்து தப்பிக்க முயல்கிறார்கள். இதற்கிடையில் அவர்களும் மற்றவர் போல இறந்துவிட்டார்கள் என சொல்லிவிட்டு கதையை மேற்கொண்டு நகர்த்திக்காட்டுகிறார் ஆசிரியர். அவர்கள் இறந்தார்களா இல்லையா என்பதைவிட அவர்கள் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என நம்மையும் எதிர்ப்பார்க்க வைக்கிறார்.

 இக்கதையை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். பாட்டியும் பேத்தியும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்றே நினைக்க வைக்கிறது. அவர்கள் தப்பிக்க நினைப்பது எதிலிருந்து? மருத்துவமனையில் இருந்தா, இராணுவத்திடமிருந்தா இல்லை இந்த உயிரில்  ஒட்டிக்கொண்டிருக்கும் உடலில் இருந்துதான்  என்கிற அவலத்தை எப்படி மறுப்பது.

5.   நிலமதி 

என்னை அழவைத்தக் கதை. ஒரு நாள் முழுக்க என்னை தூங்கவிடாமல் செய்த கதை. போருக்கு செல்லும் அரசன் தன்  அரசிக்கு கடைசியாக சில வார்த்தைகள் சொல்லும் கதைகளை யாரோ சொல்லி கேட்டிருப்போம். இந்நவீன சூழ்ச்சிகள் நிறைந்த உலகில் அதுவே தன்னை மீள் உருவாக்கம் செய்கிறது. போருக்கும் மரணத்திற்கு ஒப்புக்கொடுத்த உயிரிலும் உடலிலில் இருக்கும் இதயம் சுமக்கும் காதல் கதை.  அதிகமான இடங்களைக் கோடிட்டு வாசித்த கதை இதுதான். வேன்ற காதலும் தோற்ற காதலும் காவியங்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் மறக்கவேக் கூடாத போராளிகளின் காதை கதை இது.

 6.   முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு 

யார் இந்த முதஸ்தபா, ஏன் சுட்டுக்கொல்கிறார்கள். என்னதான் நடந்தது என சொல்லும் கதை. முஸ்தபாவை எப்போதும் சுமந்து கொண்டிருப்பவனே, முஸ்தபாவிற்கு ஏதுமென்றால் துடித்துப்போகிறவனே முஸ்தபாவைக் கொல்ல என்ன காரணம். இங்கு முஸ்தபா என்றழைக்கப்படுவதற்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம். யாரோ போடும் வெடிகுண்டால் சிதறிச்சாவதற்காகா வாழ்கிறார்கள்.

7.   பிரேதங்கள் களைத்து அழுகின்றன 

இனிமையும் இளமையும் கொண்ட இரு காதலர்களின் கட்டிலில் தொடங்கிய கதை, போராளிகளான அக்கா மாமாவின் தற்கொலையில் முடிகிறது.

8.   பிட்டிப் பூசை 

யுத்த மண்ணில் தன்னை ஏதோ நம்பிக்கையில் பிடித்துக் கொள்ளும் காதல் கதை.

9.   பெய்துக்கொண்டிருக்கும் மழை 

யுத்தம் மீதும் போராளிகள் மீதும் மாற்றுக்கருத்துகள் இல்லாமலில்லை. தன் கதைகளை அதனையும் இணைத்தே ஆவணம் செய்துக் கொண்டிருக்கிறார் ஆசிரியர். இதுவும் காதல் கதைதான் ஆனால் காதலை மட்டுமே பேசவில்லை.

    10.     தேடியலையும் நள்ளிரவு

கதையின் முடிவு முழு கதையின் போக்கையும் மாற்றிக்காட்டுகிறது. காணாமல் போகும் மனப்பிறழ்வானன் ஏன் கல்லறையில் கண்ணுறங்குகிறான் என்கிற கேள்வி கதையை வாசித்து முடித்தும் கூட விடைக்காகத் தேடிக்கொண்டிருக்கிறது.

     நிறைவாக; போர் பற்றிய பல ஆவணங்கள் போலவே, போருக்கு பிந்திய வேதனைகளையும் ஆவணங்களாக்க வேண்டும் என்கிற முனைப்பு அகரமுதல்வனின் எழுத்தில் இருக்கின்றன. ‘போராளிகள் இப்போது முகாம்களில் மறுவாழ்விற்காக காத்திருக்கிறார்கள்’ என்று சொல்லி எல்லாவற்றையும் மூடி மறைக்கும் அரசியல் பிரச்சார பீரங்கிகள் மீது தத்தம் சீழ்பிடித்த மரணத்தை தூக்கியடிக்க வேண்டிய கட்டாயத்தை எற்படுத்துகின்ற இக்கதைகள்.

 - தயாஜி

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்

 

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்