பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 18, 2014

புனிதத்தை உடைக்கலாமா..?

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதையினை குறித்து ம.நவீன் எழுதிய கட்டுரை)
 
புனிதத்தை உடைக்கலாமா?
 
 
கருத்து ரீதியாக வாதிடுதல் என்பது என்ன? உங்களிடம் ஒரு கருத்து உண்டு. அதை முன்வைக்கிறீர்கள். அதற்கான எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு. ஆனால் அந்தக் கருத்து நீங்கள் வாதிடும் சூழலில் இதற்கு முன் அக்கருத்து எவ்வாறான விவாதங்களுக்கு உட்பட்டுள்ளது எனும் முன்னறிவு நமக்கு அவசியமாகிறது. அந்த நகர்வின் சாதக பாதகத்தில் நின்றே நாம் அறிவு ரீதியான விவாதத்தைத் தொடர வேண்டியுள்ளது. அடுத்து, உங்கள் கருத்துக்கு வலு சேர்க்க எவ்வாறான ஆராய்ச்சி, உளவியல், அறிவியல், வரலாறு சார்ந்த ஆதாரங்களை இணைக்கப்போகிறீர்கள் என்பது முக்கியமாகிறது. அவ்வாறு எதுவும் இல்லாமல் அது உங்கள் கருத்தாக மட்டுமே இருக்கும் போது அதை நீங்கள் தாராளமாகச் சொல்லலாம். ஆனால் அறிவு தளத்தில் அதற்கான இடம் இல்லை. அதை பொருட்படுத்தி விவாதிக்கவும் வேண்டியதில்லை.
 
தயாஜியின் சிறுகதையில் நடந்ததும் இதுதான். ஆளாளுக்கு கருத்து கூறுகிறேன் என தத்தம் முக நூலில் தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்தனர். கொஞ்சம் கூட இலக்கியப் புரிதல் இல்லாமல் விமர்சனம் செய்கிறேன் என மொண்ணையான கருத்துகளை வெளியிட்டனர். இதனால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. அதிகபட்சம் ஒருவாரத்துக்குப் பிறகு அவையெல்லாம் வெறும் குப்பைகளாக மட்டுமே குவிந்திருக்கும். வருங்கால குப்பைகளை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்ய முடியும். அதனால் தொடக்கத்திலேயே நிராகரித்துவிட வேண்டியதுதான். இதில் பெரிய நகைச்சுவை, நேருக்கு நேர் நின்று வாதாட முடியாதவர்கள், வாதாடினால் அவர்களின் கல்வி / இலக்கியப் பின்புலம் அனைத்தும் நார் நாராகக் கிழித்து வீசி அறிவையே சந்தேகிக்கும் நிலைக்கு வர நேரிடும் என பயந்து ‘லைக்’ போடுவதும் கோழைத்தனமாக குத்தல் பேசுவதும் என தங்கள் போலி பிம்பத்தைத் தக்க வைத்துக்கொள்கின்றனர். பயந்தவர்களை நோகடிப்பது நமக்கு பழக்கம் இல்லை என்ற படியால் அவர்களை மன்னித்துவிடுவோம்.
 
தயாஜியின் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதையில் என்னதான் சிக்கல் என முதலில் பார்ப்போம். கதையின் முதல் பகுதியும் இறுதி பகுதியும்தான் அதிக விமர்சனத்துக்கு!? உள்ளாகியுள்ளது. முதல் பகுதியில் ஒரு சிறுவன் (வயது குறிப்பிடப்படாததால் அவன் மொழி மூலம் சிறுவன் என எடுத்துக்கொள்ளலாம்) தன் தாயார் குளிப்பதைப் பார்க்க நினைக்கிறான். குளியலறையில் இருக்கும் தாயை கழிவறையில் இருந்தபடி நாற்காலி போட்டு எக்கிப்பார்க்க நினைக்கையில் அவன் கண்ணில் தூசு விழுந்துவிடுகிறான். கண்களைத் தேய்தபடி போய்விடுகிறான். வெளியே வந்த அம்மா, கண் சிவந்திருக்கும் மகனைக் கண்டு “என்னடா கண்ணு” எனக் கலங்குகிறாள். கண்களை அவ்வாறு தேய்க்கக்கூடாது என செல்லமாகத் திட்டி செல்கிறாள்.
 
ஒருவேளை இந்த இடத்தில் அந்தச் சிறுவன் தன் தாயின் காலில் விழுந்து “அம்மா… என்னை மன்னித்துவிடு” எனக் கதறியிருந்தால் அனைவருக்கும் கதைப் பிடித்திருக்கும். ஆனால் தயாஜின் கதையில் வரும் சிறுவன் அதைச் செய்யவில்லை. ஒரே நேரத்தில் தன்னை நிர்வாணமாகப் பார்க்க முயன்ற மகனின் காமத்தை அறியாத தாயின் அன்பையும், தப்பித்தப் பின் ஏற்படும் மகனின் பயத்தையும் தயாஜி காட்டியுள்ளார். கதையின் வடிவமைதியில் பல இடங்களில் எனக்கு விமர்சனம் இருந்தாலும் இந்த இடத்தில் தயாஜி சரியாகவே எழுதியுள்ளதாகத் தோன்றுகிறது.
இப்பகுதியைப் படித்தப் பலரும் இது சமுதாயத்தைக் கெடுக்கும் கதை என புலம்பினர். இதுவரை இல்லாத ஓர் விடயத்தை தயாஜி சொல்லிவிட்டது போல கோபப்பட்டனர். ஹீரோவாக ஒரு சந்தர்ப்பம் என ரஜினி வசனமெல்லாம் பேசினர். ஆனால் அறிவு தளத்தில் நின்று ஆராய யாருக்கும் பொறுமையோ தேடலோ இல்லாமல் இருபதுதான் வருத்தம்.
 
ஒடிபெல் சிக்கல் (Oedipal Complex)
பல்கலைக்கழகத்தில் ஓவியத்தை ஒரு பாடமாக பயிலுகையில் சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud) குறித்து அறிய நேர்ந்தது. படைப்பாளர்களுக்குச் சிக்மண்ட் பிராய்டின் ‘உளவியல்’ அணுகுமுறைகளின் தேவையை அறிந்தபோது ஓரளவு அவரைத் தேடி வாசித்தேன். தமிழில் ஒரு பேராசிரியரின் முதுகலைப் பட்டத்துக்காக எழுதிய ‘சிக்மண்ட் பிராய்ட் ‘ குறித்த ஆய்வு நூல் மட்டுமே கிடைத்தது. அதுவும் கல்வித்துறை ரீதியானது. ஆங்கிலத்தில் நிறைய கிடைக்கின்றன.
 
Wikipediaவில் ‘ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியமை என்பவற்றின் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிக்மண்ட் பிராய்ட் முன்னிறுத்தும் கோட்பாடுகளில் ஒன்று Oedipal Complex. பிராட்டின் கோட்பாட்டின்படி, தனது தந்தையின் இடத்தில் தன்னை வைக்க விரும்பும் சிறுவன் தாயை உடல் மூலமாகவும் உடைமையாக்க விரும்புகிறான். தாயின் அன்புக்குப் போட்டியாக தந்தையைக் கருதுகிறான். உளவியல் – பாலினம் சார்ந்த வளர்ச்சி பிள்ளையின் மூன்று முதல் ஐந்து வயதுக்கு இடையே ஏற்படுகிறது. இந்தப் பருவம் பாலினம் சார்ந்த அடையாளம் உருவாதற்கான முக்கிய காலகட்டமாகத் திகழ்கிறது. இந்தக் காலகட்டத்தில்தான் ஒடிபெல் சிக்கல் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது. ஒடிபெல் சிக்கல் என்பது உள்மனதுக்குள் மறைந்திருக்கும் உணர்வுககளையும் எண்ணங்களையும் சார்ந்த உளப் பகுப்பாய்வுக் கோட்பாடு ஆகும் . உளவியல் துறையில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் இவரின் இந்தக் கூற்று பலருக்கும் அதிருப்தியைக் கொடுக்கலாம். ஆனால் பிராய்டின் இந்த ஆய்வை இன்று பலரும் ஒப்புக்கொண்டே உள்ளனர். அதை மையப்படுத்து ஏராளமான ஆய்வு நூல்களும் வந்த வண்ணம்தான் உள்ளன.
 
நாம் தாய் வழி சமூகம்
 
சரி இதே விடயத்தைக் கொஞ்சம் வரலாறு சார்ந்தும் பார்க்கலாம். நாம் தாய் வழி சமூகத்தினர் என்பது பலரும் அறிந்த விடயம். மனித நாகரீகம் தொடங்கிய காலத்தில் பெண்கள்தான் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். தங்கள் குழந்தைகளைப் பாதுக்காக்க பெண்களே வேட்டையாடுவதில் முதன்மை வகித்தனர். இதை தாய் வழி சமூகம் என்கின்றனர். தாய் வழி சமூகத்தில் பெண்ணே மையம். அவளுக்கு பல ஆண்கள் துணை இருப்பர். தொன்மையான எல்லா கலாச்சாரங்களிலும் ஆரம்பகாலத்தில் தாய் தெய்வங்களே இருந்துள்ளது மற்றுமொரு உதாரணம். இந்த வரலாற்று உண்மையை ஒரு புனைவின் அடிப்படையில் சொல்லிச்செல்லும் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை ராகுல் சாங்கிருத்யாயன் என்பவர் எழுதியுள்ளார். தமிழில் கண .முத்தையா மொழிப்பெயர்த்துள்ளார். அதில் தாய் வழி சமூகத்தின் இயக்கம் குறித்து ஒரு காட்சி வரும்.
ஒரு தாய் (தலைமை தாங்குபவள்) குழந்தையை ஈன்றெடுப்பாள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் . தான் ஈன்ற மகன்களின் வலுவான ஒருவனை தேர்ந்தெடுத்து அவனுடன் தாய் உறவு கொள்வாள். அவர்களுக்கும் குழந்தைகள் பிறக்கும். இது பல்வேறு நிலைகளில் தொடரும். பல்வேறு ஆய்வாளர்களாலும் முக்கியமாகக் கருதப்படும் இந்த நூலை ஆபாசக் குப்பை என தூக்கிப் போட்டுவிடலாமா? வரலாற்றில் ஒரு காலத்தில் இயல்பாக இருந்த விடயம் மற்றொரு சந்தர்ப்பத்தில் அபத்தமாகவும் அருவருப்பானதாகவும் ஆகிவிடுகிறது. இந்த உணர்வை ஏற்படுத்துவது எது? இது மனிதனின் ஆதி உணர்வா? இல்லை ! இது தந்தை வழி சமூகம் ஆனப்பிறகு ஏற்பட்ட பழக்கத்தில் விளைவு மட்டுமே. உறவுகளின் புனிதம் என்பது காலங்களுக்கு ஏற்ப மாறக்கூடியது.
 
உறவு முறைகள்
அவ்வளவு ஏன்? நமது தென்கிழக்காசியாவிலேயே உறவுகள் குறித்த மாற்று முறைமைகள் உள்ளனவே. தாய்லாந்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கூட சொத்துகளைப் பாதுகாக்க இரத்த உறவுள்ள சகோதரனுக்கும் சகோதரிக்கும் திருமணம் செய்துவைக்கும் முறை இருந்தது. நமது நாட்டில் மலாய்க்காரர்கள் சகோதர உறவு முறை கொண்டவர்களைத் திருமணம் செய்துக்கொள்ளவில்லையா? ஆக! காதல், காமம், திருமணம் என்பதெல்லாம் காலத்துக்கு ஏற்பவும் இனங்களுக்கு ஏற்பவும் பழக்கங்களுக்கு ஏற்பவும் மாறுபடுகிறது.
 
தமிழ் இலக்கியத்தில் தாய்மை
சரி, அப்படியென்ன தயாஜி அப்படியென்ன தமிழ் இலக்கியத்தில் இல்லாததைப் புதிதாகக் கூறிவிட்டார் என ஆராய்ந்தாலும் சொல்லும் அளவுக்கும் விடயம் புதிதில்லை. ஜெயகாந்தனின் ‘ரிஷிமூலம்’ எனும் பாலியல் சிக்கலை மையமாக வைத்த படைப்பு அக்காலத்திலேயே பரபரப்பாகப் பேசப்பட்டது. தாய் மீதான பாலியல் சிக்கலை எழுதி 1966 வாக்கில் வெளிவந்த இந்நாவல் எதிர்ப்புகளைச் சந்தித்தது. தாய் மீதான பாலியல் எண்ணங்களால் ஒருவன் அலைக் கழிக்கப்படுகின்றான் என்பதை விளக்குகிறது இவ்வுளவியல் நாவல். அதே போல இன்று தமிழில் மிக முக்கிய நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷோபா சக்தியின் ‘ம்’ நாவலும் மகள் – அப்பாவுக்கிடையிலான காதலை, காமத்தைப் பேசுகிறது. மிக அண்மையில் அமைப்பியலில் மிக முன்னோடியாகவும் தமிழின் மிக முக்கிய விமர்சகராகவும் கருதப்படும் தமிழவன் நடத்தும் சிற்றிதழில் ஒரு சிறுகதை இவ்வாறு இருக்கும். தனது தாய் நடித்த நீலப்படத்தைத் தற்செயலாகப் பார்த்து ஓர் இளைஞனுக்கு ஏற்படும் வெறுப்பு பின்னர் காமமாக மாறும்.
முதலில் இது போன்ற சம்பவங்கள் இலக்கியப் பிரதிகள் வெளிவரக் காரணம் என்ன? அவை இந்தச் சமூகத்தில் இருக்கிறது என்பதுதான் முதல் காரணம். நமது நாட்டில்கூட விரும்பத்துடனோ வல்லுறவாகவோ இது போன்ற சம்பவங்கள் நடப்பது பதிவாகியுள்ளன. சில நீதிமன்றம் வரை சென்றுள்ளன. இலக்கியம் ஒரு சமூக நிகழ்வின் ஆழ்மனதைப் படம்பிடித்துக்காட்டுகிறது. மாறாக அது ஒரு தினசரி நாளிதழின் வேலையைச் செய்யவில்லை. தினசரிகள் பெரும்பாலான மக்கள் விரும்பும் தகவல்களை பிரசுரிக்கின்றன. இலக்கியம் யாரின் விருப்பம் பொருட்டும் இயங்குவதில்லை. தினசரிகளுக்கு எதை வெளியிட வேண்டும் / கூடாது என்ற விருப்பு வெறுப்புகள் உண்டு. இலக்கியத்துக்கு அது கிடையாது. இலக்கியத்தின் வேலை சமூகத்தை தூக்கி நிறுத்துவது என நம்பிக்கொண்டிருப்பவர்கள் உலக இலக்கியப் போக்கை கவனிக்கவில்லை எனப் பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை.
 
உளவியல் என்ன செய்கிறதோ அதையே இலக்கியம் தன் வழியில் செய்கிறது. பிராய்ட் சொல்லும் போது ஏற்றுக்கொள்ளும் உலகம் ஓர் இலக்கியவாதி அவ்வாய்வை தனது புனைவில் சுதந்திரம் வழி செய்யும் போது ஏற்பதில்லை என்பதே வருத்தம். ஜெயகாந்தன் தொடங்கி இன்றைய இளம் இலக்கியவாதிவரை பேச முயலும் உளவியலை ஓர் மலேசிய இளைஞன் பேசினால் குற்றமாகிவிடுகிறது.
 
புராணமும் இதிகாசமும்
 
இந்து மத புராணக் கதைகளிலும் இதிகாசங்களிலும் எல்லயற்ற மனித உறவுமுறைகள் பற்றி எக்கச்சக்கமாக எழுதப்பட்டுள்ளன. சொல்லப்போனால் மகாபாரத்தில் இல்லாத கருவோ, கற்பனையோ, கதையோ இல்லை என்றே சொல்லலாம். இன்றைக்குப் புதிய சிந்தனைகளாகவும் போக்குகளாகவும் கொள்ளப்படும் எல்லாமே பாரதக் கதைகளில் உள்ளன. ஆண் பெண்ணாவது, பெண் ஆணாவது, திருமணத்துக்கு முன்பே குழந்தை பெறுவது, பிற ஆண்கள் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்வது, பெண் – ஆண் இருபாலருமே பல தார மணம் புரிவது என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அதைவிட்டு நம் ஒழுக்க சீலர்கள் வருவதில்லை. மகாபாரதத்தை ஒழுக்கக் கேடான நூல் என எரிக்கவும் தயாராக இல்லை. மாறாக இந்து மதத்துக்கு ஒரு அவப்பெயரென்றால் கொதித்து எழுகிறார்கள். இது என்ன நியாயம்?
 
ரிக்வேதத்தில் அண்ணன் தங்கையரான யமன், யமி ஆகியோரைப் பற்றிய கதை ஒன்று உள்ளது. அந்தக் கதையின் படி யமி தன் அண்ணன் யமனைத் தன்னுடன் வருமாறு அழைக்கின்றாள். இதற்கு மறுக்கும் யமன்மீது அவள் கோபம் கொள்கிறாள். .. அக்காலத்தில் தந்தை மகளை மணப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. வசிட்டர் தன் மகள் சத்ரூபை பருவமெய்திய போது அவளை மணந்தார். மனு தன் மகள் இளையை மணந்தார். ஜானு தன் மகள் ஜானவியை மணந்தார். சூரியன் தன் மகள் உஷையை மணந்தான். …. தஹா பிரசெத்னியும் அவனுடைய மகன் சோமனும் சோமனின் மகள் மரீஷையைக் கூடினர். … தஷன் தம் மகளைத் தனது தந்தை பிரமனுக்கு மணம் முடித்தான்….” (ரிக்வேதம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து)
 
உலக இலக்கியத்தில்
 
Haruki Murakami என்ற உலகப் பிரபலமான ஜப்பானிய எழுத்தாளர் Kafka on the Shore என்ற நாவலில் ஒரு சிறுவன் தனது தாயையும் சகோதரியையும் புணர்வது பற்றி எழுதியிருப்பார். அந்த நாவல் மில்லியன் கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டது. ஏராளமான விருதுகளை வென்றது. 2005ல் இந்நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நியூ யார்க் டைம்ஸிஸ் தலைசிறந்த 10 நூல்களில் ஒன்றாக இடம்பெற்றது. அப்படியானால், வாசித்தவர்கள் அனைவரும் ஒழுக்கக் கேடானவர்களா? விருது கொடுத்த அமைப்புகள் ஒழுங்கை நாசப்படுத்த நினைக்கின்றதா?
 
கடவுளும் காதலும்
 
புணர்ச்சியை வெளிப்படையாக காட்சிப்படுத்தும் சிற்பங்கள் கஜுராஹோ,கோனார்க் போன்ற இந்து கோயில்களில் காணக் கிடைக்கின்றன. அது மத்திய பிரதேசத்தில்தானே என நீங்கள் சொல்லலாம். ஆனால், இது மிக முக்கியச் சுற்றுலா தளமாகவும் இந்தியாவில் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. கடவுளை வணங்கச் செல்லும் கோயிலுக்கு வெளிப்புறம் இப்படிப் பல சிற்பங்கள் இருக்கும் போது அதைப் பார்க்கும் இளைஞர்களின் மனம் கெட்டுப்போகாதா என ஏன் யாரும் கேட்பதில்லை. சிற்பத்தில் இருந்தால் அது கலை , எழுத்தில் இருந்தால் அது கொலை என்கிறார்கள்.
நமக்குத் தெரிந்து எல்லா கோயில்களிலும் பல பெண் சிலைகள் அரை நிர்வாணத்தோடுதான் நிர்க்கின்றன. ஏன் அவை ஆபாசம் என்று நாம் யாருமே போர் கொடி பிடிக்கவில்லை. மாறாக மதத்தைப் பற்றி பேசினால் கோபம் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறது. உடனே அவற்றுக்கு அறிவியல் காரணங்கள் கூற தொடங்கிவிடுகிறோம்.
 
இப்படி நம் முன் கோயில்களில் இருக்கும் அரை நிர்வாணச் சிலைகளைப் பார்த்து குழந்தைகளுக்கு ஒரு திகைப்பு வராது என நம்மால் உறுதி கூற முடியுமா? வீட்டில் எதை மறைக்கிறோமோ அதை கோயில்களில் தடையில்லாமல் காட்டுவது நமக்கே முரண்நகையாக இல்லையா? அப்படியானால் நாம் எதை மறைத்து எதை காட்ட நினைக்கிறோம். ஏன் இந்த நடிப்பு? யாருக்காக இந்த வேடம் ?
கடவுள் சிற்பங்களுக்கு நமது கோயில் ஆடை அணிவிக்காமல் கலை என வைத்திருப்பது சரியென்றால், அதைக் கண்டு முதிர்ச்சியடையாத மனம் காமம் கொள்வதும் சரிதான். அவளைக் காதலிப்பதும் சரிதான். ஒருவேளை தயாஜி தன் கதையில் அம்மனுக்குச் சாற்றிய சேலையை நீக்கிப்பார்த்து காமம் கொண்டான் எனச் சொல்லியிருந்தால் மதவாதிகள் கோபப்படலாம். இங்கு அப்படி ஒன்றுமே இல்லை. திறந்த மார்புடன் இருக்கும் காளியின் கவர்ச்சி முதிரா மனம் கொண்ட ஒரு இளைஞனை காமத்தில் குழப்புகிறது.
 
அதோடு, கடவுளின் உடலை வர்ணிப்பது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? அப்படியானால் அந்தக் குற்றத்தை சௌந்தர லஹரியில் ஆதிசங்கரரும் செய்துள்ளார்.
‘மேகலை பொங்க மதாசல கும்பமெ னாமுலை கண்டு இடை சோரா ‘ என்கிறார்.
பொருள் : யானையின் மத்தகத்தைப் போன்ற பெரிய தனங்களைக் (மார்பு)கொண்டு சற்று வணங்கிய வடிவுடையவள்; மெலிந்த இடையையுடையவள்.
காம சக்தியை வசமாக்கிக்கொள்ள ஆதி சங்கரர் அம்மையை வணங்கச் சொல்லும் பாடலெல்லாம் உண்டு. அதற்கான மந்திரங்களும் உண்டு. சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். கடவுளின் மேல் காமம் கொள்ளுதல் தமிழ் இலக்கியத்திலும் புதிதில்லை. ஆண்டாளின் பாடல்களை எடுத்துக்கொள்ளலாம்.
அதாவது ஆண்டால் கண்ணனைப் பார்த்து பாடும் பாடல்கள்.
 
‘அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதேன்…’ என்கிறாள். பெரிய மார்பகங்கள் அவனுக்கே என உறுதிபடக் கூறுகிறாள் ஆண்டாள். அப்படியானால், இது ஆபாசம் இல்லையா? மேலும் ஒரு வரியைப் பார்க்கலாம்,
‘சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’
ஆண்டாளுக்குதான் என்ன ஆசை . மேலேயும் கீழேயும் அவன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்!
உடனே நம்ம ஒழுக்க வாதிகள்..”அட..அவுய்ங்க பக்தியால தடவ சொல்றாங்கப்பா” என இழுக்கலாம். அப்படியானால் இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.
‘பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்…
என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ’
 
கடவுளுடன் உடல் உறவு கொள்ள வேண்டுமாம் ஆண்டாளுக்கு. அந்த ஆசை மனதில் மேலோங்கி வளர்ந்துவிட்டதால், மார்பகம் வருந்துகிறதாம், குதூகலிக்கிறதாம், உயிரை எடுக்கிறதாம், ஆகவே எதையாவது செய்து நாள்தோறும் நாராயணனைப் புணர்வதற்கு உத்தரவாதம் கொடுங்களேன் என்று ஆண்டாள் கேட்கிறாள்.
 
தயாஜி, இந்த அளவுக்கெல்லாம் போகவில்லை. பெண் கவி ஆண் கடவுளைப் புணர நினைப்பதை எட்டாம் நூற்றாண்டிலிருந்து பொறுத்துக்கொள்ளும் நாம், ஒரு நவீன எழுத்தாளன் காளியின் மீது காமம் கொள்வதைப் பொறுத்துக்கொள்ள மறுக்கிறோம். துடிக்கிறோம். இது நல்ல நடிப்பு இல்லையா? இப்படித்தானே தான் அறச்சீற்றம் உள்ளவன் என காட்டிக்கொள்ள வசதியாகும். ஆக, ஏற்கனவே உள்ள ஆபசங்களைப் பொறுத்துக்கொண்டு தொழுகிறோம். ஏற்கனவே உள்ள ஆபசங்களை பக்தி என பாடுகிறோம். ஆனால் ஒரு இளம் எழுத்தாளன் எழுதினால் கலாச்சாரம் கெட்டுவிட்டது இல்லையா?
முடிவாக…
 
நான் தயாஜி எழுதியது மலேசியாவில் முக்கியமாக சிறுகதை எனச் சொல்ல வரவில்லை தோழர். கதையில் சில பலவீனங்கள் உண்டு. சில இடங்களில் வடிவமைதி தேவைப்படுகிறது. சில இடங்களில் நாசுக்கான சொல்முறை அவசியமாகிறது. ஆனால், இங்கு அதுவல்ல பிரச்னை. தயாஜி புனைவின் மூலம் ஆராய அல்லது உடைத்துப் பார்க்க நினைக்கும் சில சமூக புனிதங்களைத் தொடாதே எனக்கூற யாருக்கும் உரிமையில்லை. அது குறித்து பேசினால் நான் விவாதிக்கவே செய்வேன். காரணம் அது காலாகாலமாக உலகம் முழுதும் உள்ள பல படைப்பாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டே வந்துள்ளது. ஏன் அது குறித்தெல்லாம் நம் ஒழுக்கவாதிகள் வாய் திறக்கவில்லை. காரணம் அவர்கள் எதையுமே படிப்பதில்லை. இதை மட்டுமல்ல எதையுமே வாசிப்பதில்லை. ஆனால் பெரிய ஆராய்ச்சி மன்னர்கள் போல பிதற்றுவார்கள். ஒரு அடிப்படையான கேள்விக்கு ஓடி ஒளிவார்கள். அப்புறம் வேறு எவனாவது தைரியசாலி இருக்கிறானா எனப்பார்த்து, அவன் பின் நின்று நாக்கை நீட்டுவார்கள். இன்னும் நான் குறிப்பிட ஏராளமாக இலக்கியங்களும் ஆய்வுகளும் தமிழில் உண்டு.
 
மலேசியாவில் இது போன்ற சில முயற்சிகள் தேவை என்றே நான் நினைக்கிறேன். அது முதிராமல் இருந்தாலும் ஒரு தொடக்கத்துக்காகவாவது இது போன்ற இலக்கிய முயற்சிகள் நிச்சயம் செய்யப்பட வேண்டும்.
 
- ம.நவீன்
 
நன்றி வல்லினம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்