- நினைவின் துகள் -
எங்கெங்கிருந்தோ வந்திருந்த
இசை
என் அனுமதியின்றி
காதுகளில் மெல்ல மெல்ல
நுழைந்தபடி என்னை
இம்சிக்கிறது
பாழடைந்த
பழம் நினைவுகளுக்கு
அவை ஆங்காரமாய்
அலாரம் வைத்துவிடுகின்றன
புழுதிகள்போல
புரட்ட விரும்பாத பக்கங்களின்
நினைவுகள்
மேலெழுந்த சுழலாய்ச்
சூறாவளியாய்
என்
எல்லாப் பக்கங்களின்
துக்கத்திலும்
இடியைக் கொட்டிவிடுகின்றன
ஆங்காரமாய் எழுந்த
நினைவுத்தூசிகளின்
கண்ணாடித் துகள்
என் கண்களை அரிக்கின்றன
அழுதழுது வெளியேற்றிய
கண்ணீரில் கலந்திருக்கும்
நினைவுகள்
மாய மந்திரம் போல
மீண்டுமென் இதயத்தையே
வந்தடைகின்றன
நினைவுகளை அழிக்க
நினைவுகளாலேயும் முடிவதில்லை
நீங்களும் நானும்
எம்மாத்திரம்
நினைவுகள்
ரொம்பச் சுலபமாய் நம்மை
ஏமாற்றிவிடும்
நாமும் ஏமாறுகிறோம் தினம் !
0 comments:
கருத்துரையிடுக