பொம்மி சட்டென கத்தினாள். மெல்ல எழுந்து நாற்காலியை நகர்த்திவிட்டு சென்று பார்க்கலானேன்.
பொம்மியின் இந்தக் கத்தலுக்கு நான் பதறியடித்து ஓட வேண்டியதில்லை. இது அதற்கான கத்தல் அல்ல. உற்சாகமான கத்தல்.
அவள் உற்சாகமாக கத்துவதற்கும், பயத்தில் கத்துவதற்கும் எதையாவது பார்த்துவிட்டால் கத்துவதற்கும் அவளின் பொருள் கீழே விழுந்தால் கத்துவதற்கும் அம்மா திட்டினால் கத்தி அழுவதற்கும் வித்தியாசம் வைத்திருக்கிறாள்.
அதற்கு ஏற்றார் போல நாம் அவளிடம் செல்ல வேண்டும். அவசரத்திற்கு தாமதமாக சென்றாலும், தேவையில்லாமல் பதறியபடி ஓடி வந்தாலும் நம்மையே ஒரு மாதிரியாக பார்ப்பாள். அதில் 'இதுதான் உங்க டக்கா...?' எனவும் இருக்கும். 'ரொம்பதான் சீக்கிரமா வந்துட்டீங்க.. போய்ட்டு அப்பறமா வாங்க ..!' எனவும் இருக்கும்.
இப்போதைய கத்தல், உற்சாகமான கத்தல். அதுவும் தான் புதிதாக எதையோ கண்டுபிடித்ததாய்ச் சொல்லும் கத்தல். இன்று எதை கண்டுபிடித்திருப்பாள் என எனக்குமே உற்சாகம் வந்தது.
கையில் பென்சிலை வைத்து, கையை மேலும் கீழும் ஆட்டினாள். சிரித்தாள். என்னைப் பார்த்தாள். எனக்கு புரியவில்லை. மீண்டும் பென்சில் இருக்கும் கையை அப்படியும் இப்படியும் ஆட்டினாள். இப்போதும் புரியவில்லை. பொம்மி வைத்த கண் வாங்காது என்னையே பார்த்து கொண்டு நின்றாள்.
எனக்கு வேறு வழி தெரியவில்லை
தோல்வியைப்புக்கொண்டு அவளருகில் அமர்ந்தேன். என்னை மன்னித்தபடியே கையில் இருக்கும் பென்சிலை கீழே போட்டாள். பின் அதனை எடுத்து அவளது விரலிடுக்கில் வைத்தாள். என்னைப் பார்த்தபடி கையை மேலும் கீழும் ஆட்டினாள். மீண்டும் உற்சாகமாகி கத்தினாள். இம்முறை நானும் கைத்தட்டியபடி கத்தினேன்.
என்ன நடந்தது என உங்களுக்கு புரிந்ததா நண்பர்களே?
சரி சொல்கிறேன்.
பொம்மியின் இன்றைய புதிய கண்டுபிடிப்பு. விரல் இடுக்கில் பென்சிலை வைத்தாள் அது விழாதாம். கையை அப்படியும் இப்படியும் ஆட்டினாலும் பென்சில் கீழே விழாதாம். அவளது இந்த மாயாஜாலம் அவளுக்கு கொடுத்து உற்சாகத்தில் என் பேனாக்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்து பரிசோதனை செய்து கொண்டிருக்கிறாள்.
அவளது மேஜிக் அவளை தொடர்ந்து உற்சாகபடுத்திக்கொண்டே இருக்கிறது.
சின்ன சின்ன செயல்களும் அதன் விளைவுகளும் பொம்மிகளை எப்படியெல்லாம் உற்சாகப்படுத்துகின்றன. நாளை பெரிய பெரிய செயல்களைச் செய்யவும் அதன் விளைவுகளையும் எதிர்கொள்ளவும் இதுதான் முதல்படி.
கையிலிருந்து பென்சில் கீழே விழாதது பொம்மிக்கு இன்றைய மாயாஜாலமாக இருக்கலாம். அவள் வளர வளர அந்த மாயாஜாலம் பல்வேறு பரிணாமங்கள் எடுக்கும். அதே போல அவள்தான்
எங்கள் வாழ்வின் நிரந்தர மாயாஜாலம் என்பதை பொம்மி புரிந்து கொள்வாள்தானே....
0 comments:
கருத்துரையிடுக