பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 01, 2024

2023-ல் வாசித்தவையுடன் சில முன்னெடுப்புகளும்….

 


கடந்த ஆண்டு நடந்தவற்றை நினைப்பது போலவே; கடந்த ஆண்டில் வாசித்ததை மீண்டும் நினைக்க மனம் குதூகலமாகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நான் வாசித்த புத்தகங்களைவிட பலமடங்கு அதிகமான புத்தகங்களையே வாங்கி வைக்கிறேன். 

எல்லாவற்றையும் என்னால் வாசித்து முடிக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் வாசிக்க இவ்வளவு புத்தகங்கள் இருக்கின்றன என்பதே என் மனதிற்கு உற்சாகத்தைக் கொடுத்து என்னை இயங்க வைக்கிறது. புத்தகமாக வாசித்ததைப் பற்றி மட்டுமே இப்பதிவில் எழுதுகிறேன்.

இவை தவிர; தனித்தனியாக வாசித்த சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகளை இதில் இணைக்கவில்லை. 

கடந்த ஆண்டு எனது பட்டியலில் இரு புத்தகங்களை நான் குறிப்பிடவில்லை. ஏனெனில் என்னால் அந்தப் புத்தகத்தை முழுமையாக வாசிக்க முடியவில்லை. அந்தச் சிறுகதைத் தொகுப்பில் இருந்த சில கதைகள் என்னை ஈர்க்கவில்லை. ரொம்பவும் மேலோட்டமாக எழுதப்பட்டதாகவே தோன்றியது. இருந்தும் என்னை நானே சமாதானம் செய்துகொண்டு ஐம்பது பக்கங்கள் வரை வாசித்தேன். அதற்கு மேல் முடியவில்லை. அப்படியே மூடி வைத்துவிட்டேன். அதுபற்றி பேசவும் தோன்றவில்லை. தொடர்ந்து வாசிக்கவோ மீண்டும் வாசிக்கவோ தோன்றவில்லை. 

இம்முறையும் அப்படியொரு சிறுகதைத் தொகுப்பை முழுமையாய் வாசிக்க முடியவில்லை. இதற்கான காரணம் வேறொன்றாக இருக்கிறது. புத்தகத்தை வாசிக்க தொடங்கிய சமயத்தில் உடல் நிலையில் சிக்கல் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும்படியானது. அதோடு எனக்கொரு பொம்மியும் பிறந்தாள். அந்தக் காலக்கட்டத்தில் எடுத்து வைத்த சிறுகதைத் தொகுப்பு அப்படியே தங்கிவிட்டது. 

அவ்விடத்தை மற்றவை நிரப்பிவிட்டன. அந்தப் புத்தகத்தை இந்த ஆண்டில் வாசித்துவிட வேண்டும்.

இம்முறை முதன் முறையாக வாசிப்பு பட்டியல் என்ற ஒன்றை தொடங்கியுள்ளேன். இவ்வாண்டு என்னென்ன புத்தகங்களை வாசிக்க வேண்டும் என ஆசைப்படுகின்றேனோ அவற்றை இப்பட்டியலில் இணைத்து முடித்தவரை என் பேச்சை நானே கேட்க முயல்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு புத்தகத்தை வாசித்து முடித்து அடுத்ததை வாசிக்க எடுக்கும் போது ஏற்படும் குழப்பங்களும் தேர்வின் எண்ணிக்கையும் ஏற்படுத்தும் சிக்கல்களை இதன் வழி ஓரளவாவது கலையலாம்.


ஜெயமோகன்

1. எழுதுக – கட்டுரைகள்

2. தன்னைக் கடத்தல் – கட்டுரைகள்

3. வணிக இலக்கியம் – கட்டுரைகள்

4. நத்தையின் பாதை – கட்டுரைகள்

5. இலக்கியத்தின் நுழைவாயில் – கட்டுரைகள்


எஸ்.ராமகிருஷ்ணன்

6. சிறிய உண்மைகள் – கட்டுரைகள்

7. புனைவின் வரைபடம் – நேர்காணல்கள்


கட்டுரைகள்

8. பெருந்தேவியின் ‘கவிதை பொருள் கொள்ளும் கலை’

9. இந்திரனின் ‘கவிதையின் அரசியல்’

10. அ.முத்துலிங்கத்தின் ‘தோற்றவர் வரலாறு’

11. தமிழ்மகனின் ‘தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்’


நாவல்கள்

12. நசீமா ரசாக்கின் ‘மராம்பு’ (குறுநாவல்)

13. தஸ்தயெவ்ஸ்கியின் ‘விசாரணை அதிகாரி’  (கரமசோவ் சகோதரர்கள் நாவலின் ஓர் அத்தியாயம்)

14. பேர் லாகர் குவிஸ்டு எழுதிய ‘பாரபாஸ்’, கா.ந.சுவின் மொழிபெயர்ப்பு


சிறுகதைள்

15. எம்.பிரபுவின் ‘தலைவர்’

16. பிரியா தமிழாக்கம் செய்த ‘ ஒரு வசீகரமான மைம்பெண்ணின் முகம்’

17. தி.மரிய தனராஜ் தொகுத்த ‘மற்றவர்களின் சிலுவை’

18. ஆர்.அபிலாஷின் ‘தேவி’


கவிதைகள்

19. கலாப்ரியாவின் ‘தண்ணீர் சிறகுகள்’

20. மனுஷ்ய புத்திரனின் ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’

21. கவிதா லட்சுமியின் ‘சிகண்டு- தன்னைக் கடந்தவள்’

22. எம்.ஏ.நுஃமானின் ‘துப்பாக்கிக்கு மூளை இல்லை’


பிற

23. அங்குர் வாரிக்கூ எழுதிய ‘பெருங்கனவு காணத் துணியுங்கள்’

24. பிரைன் டிரேசியின் ‘காலை எழுந்தவுடன் தவளை’

25. சுஜாதாவின் ‘சிறுசிறுகதைகள்’ (மீள்வாசிப்பு)

26. சந்தோஷ் நாராயணனின் ‘அஞ்ஞானச் சிறுகதைகள்’ (மீள்வாசிப்பு)


இன்னும் சிலவற்றை வாசித்துள்ளேன். அவை என் தனிப்பட்ட கேள்விகளுக்கு பதில் தேடும் வகை புத்தகங்கள். இப்போதைக்கு அதனை பொதுவில் பகிர்வதில்லை.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கை சற்றே குறைவுதான் என்றாலும் வாசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன் என்பதில் எனக்கு எப்பவும் மகிழ்ச்சி.

உங்களுக்கு புத்தகங்களை வாசிப்பதில் ஏதும் சிக்கலோ அல்லது வாசிப்பை ஊக்கப்படுத்த ஒரு நண்பன் உங்களுக்கு வேண்டுமெனில் நீங்கள் தாராளமாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

‘சிறகுகளின் கதை நேரம்’ என்னும் வாராந்திர சிறுகதைக் கலந்துரையாடலை ஒவ்வொரு திங்களன்றும் இணையம் வழி நடத்துகின்றோம். வாரம் ஒரு சிறுகதையை வாசித்து பேசுவதன் வழி மாதம் குறைந்தது நான்கைந்து சிறுகதைகளை உங்களால் வாசித்திருக்க முடியும். இது உங்களின் தொடர் வாசிப்பிற்கு உதவும். 

அதோடு வாசிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நண்பர்களும் நம்முடன் இருக்கும் போது உற்சாகம்  தானாகவே நம்முள் எழுந்து நிற்கும்.

இந்த நேரத்தில்; எனக்கு நானே சொல்லிக்கொள்வது என்னவெனில் பிறந்திருக்கும் இந்த ஆண்டு முடிவதற்குள் குறைந்தது 50 புத்தகங்களை வாசித்திருக்க வேண்டும். குறைந்தது 100 சிறுகதைகளையாவது (தனியாகவோ புத்தகத்திலிருந்தோ) வாசித்திருக்க வேண்டும். அதோடில்லாமல் வாசித்தவற்றை பதிவுகளாகவும் எழுத வேண்டும்.

நீங்கள் விரும்பினால் இணையுங்கள். 

வாசிப்போம்… நேசிப்போம்… வளர்வோம்…


அன்புடன் 

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்