பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 01, 2020

உனக்கு எங்க வலிக்குது...?

  என்றாவது மகன் திருந்துவான். அப்படித்தான் அம்மா நினைத்துக் கொண்டிருந்தார். நினைத்தது மட்டுமல்ல. நினைத்து நினைத்து பிரார்த்திப்பதும் அதைத்தான். கணவனை இழந்த வீட்டில் எஞ்சி இருப்பது மகன் மட்டும்தான்.

 அவனையும் இழக்க அம்மா விரும்பவில்லை. சொல்லித்தான் ஆகவேண்டும். ஆனால் அவன், அப்பாவைப் போலவே கோவக்காரன். அவர் போலவே அற்ப ஆயுளில் போய்விடக்கூடாதே.

        வேறு வழி கிடைக்கவில்லை. அன்று ரகு பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தான். 
மனதில் தைரியத்தையும் அக்கறையையும் வரவைத்துக் கொண்டார். அம்மா மெல்ல அவனிருக்கும் அறை வாசலில் நின்றார்.

      மோட்டாரில் அவன் இறக்கைக் கட்டிப் பறப்பதைக் குறித்து கேட்டுவிட்டார். ரகுவிற்கு வந்ததே கோவம். பூசிய பௌடரையும் தாண்டி ரகுவின் முகம் சிவக்கத் தொடங்கியது. 

   "நான் மோட்டர்ல வேகமா போனா உனக்கு எங்க வலிக்குது... இந்த வயசுல இப்படி வண்டி ஓட்டாம வேறெப்ப ஓட்டறது.. சும்மா இதை செய்யாத அதை செய்யாதன்னு சொன்னா எனக்கு புடிக்காதுன்னு உனக்கு தெரியும்தான.. இதனாலதான் நான் வீட்டுலயே இருக்கறது இல்ல.."

சில நாட்களுக்கு பிறகு. 

 அவனது மோட்டார் நான்கு துண்டுகளாக பிரிந்து வாசலில் இருந்தது. ரகு படுக்கையில் இருந்தான். கட்டிலில் கை கால்களில் கட்டு போட்டு படுத்துக் கிடந்தான். அம்மா, மெல்ல அவனது காயங்களுக்கு மருந்து தடவிக்கொண்டிருந்தார். காயம் ஆழமாக இருந்திருக்க வேண்டும். ரகுவின் முகத்தில் அது தெரிந்தது. அதனை பார்த்த அம்மா,

    ''இப்ப உனக்கு எங்க வலிக்குது..?'' என கேட்டுக் கொண்டே காயத்தை கவனிக்கலானார். 

    காயத்தை விடவும், அந்த வார்த்தை அவனுக்கு அதிக வலியைக் கொடுக்கத் தொடங்கியது.

- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்