பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 27, 2020

கதைவாசிப்பு_2020_14 'தொடுகறி'


#கதைவாசிப்பு_2020_14
கதை – தொடுகறி
எழுத்து – ஐ.கிருத்திகா
புத்தகம் – காலச்சுவடு மார்ச் 2020


    நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சிக்கலை எதிர்கொள்கிறோம். விதிவிலக்கு யாருக்குமில்லை. ஆனால் அது தீர்க்கப்பட்டதா அல்லது தீயாகி பற்றிக் கொண்டதா என்பது அதற்கு நாம் கொடுக்கும் எதிர்வினையைப் பொறுத்தது. 

  பற்பசையை பின்பக்கத்தில் இருந்த அழுத்தாமல், மேல் முனையை அழுத்தி பற்பசையை பயன்படுத்தியதால்  ஒரு தம்பதிகள் மனமுறிவு வரை சென்றுள்ளார்கள். கணவனின் செயலுக்கு மனைவி கொடுத்த எதிர்வினையும் அதற்கு கணவன் கொடுத்த எதிர்வினையும்தான் காரணம்.

  அப்படியொரு விபரீதத்திற்கு செல்லவேண்டிய தம்பதிகள் தங்களின் சிக்கலை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் இக்கதை. வாசிப்பில் 'யார் தொட யார் கறி'யாகிறார்கள் என்பதை வாசகர்கள்  வாசித்து  முடிக்கையில் கண்டுகொள்வார்கள். அதுதான் 'தொடுகறி'

கதைச்சுருக்கம்;

   சிவநேசன் மீரா , இளம் தம்பதிகள். புதிய வாடகை வீட்டிற்காக முன்பணம், பொருட்கள், அதற்காக வாங்கிய கடன் என முடிந்தவரை மாசக்கடைசியை எப்படியாவது சமாளித்தாகவேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.

    சிறிய வீடு என்றாலும் புதுக்குடித்தனம் இன்பமாகவே இருக்கிறது. பக்கத்து வீட்டுக்கார மணியக்கா ஒரு முறை சிவனேசனைப் பார்த்து , தன் வீட்டில் வயசு பிள்ளைகள் இருக்கிறார்கள்,  இரு வீட்டிற்கும் இருப்பது ஒரு சுவர்தான் ஆக எதை செய்தாலும் பார்த்து செய்யும்படி சொல்லும் அளவிற்கு அவர்களின் புதுக்குடித்தனம் இருக்கிறது.

   கோவக்காரப் பெண்ணாக இருந்தாலும் உள்ளதை உள்ளபடி சொல்லிவிடும் குணமும் உதவும் குணமும் கொண்டவராக இருக்கிறார் மணியக்கா.

    ஒரு முறை கையில் காசில்லாத நேரத்தில் சிவநேசனும் மீராவும் தண்ணீரைக் குடித்துப் பசி தீர்க்க முயன்று படுக்கிறார்கள். நிலமையைப் புரிந்துக்கொண்ட மணியக்கா கதவை தட்டி அன்றிரவுக்கான உணவை கொடுக்கிறார். சிவநேசன் முதலில் மறுக்கிறான். தானும் இதையெல்லாம் கடந்துதான் வந்திருப்பதாகவும், இளம் தம்பதிகள் என்பதால் மீரா கருத்தரித்திருந்தால் அந்த கரு என்ன ஆகும் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

   சில நாட்கள் கழிகிறது. ஏதோ ஒன்று சிவநேசனை வதைக்கத் தொடங்குகிறது. மீராவுடனான நெருக்கத்தை தவிர்க்கிறான். இருவர் உறவும் பழையபடி இல்லாமல் போகிறது. சிவநேசன் இரண்டு நாட்கள் வேலைக்கும் போகவில்லை. 
அவனை நன்கு அறிந்திருந்த மீரா அவனிடம் அது குறித்து கேட்க சிவநேசன் ஒன்றுமில்லை என்கிறான். 

   வேலைக்கு செல்லும் மீராவை வழிமறைக்கிறார் மணியக்கா. வழக்கமான எந்த சத்தமும் வீட்டுச்சுவரைத் தாண்டி வராதது குறித்து நாசூக்காக கேட்கிறார். ஒன்றுமில்லை என்று மீரா சொல்கிறாள். தனது இருபது வருட அனுபவத்தில் இருந்து சில அறிவுரைகளை சொல்கிறார் மணியக்கா.

   சிவநேசன் மனதில் அறுவிக் கொண்டிருப்பது தங்கள் குடும்பத்தை குலைப்பதை மீரா விரும்பவில்லை. அவனை வெளியில் செல்வதற்கு அழைக்கிறாள். முதலில் மறுத்தவன் பிறகு செல்கிறான். அவன் மனதில் அன்று அந்த மலர் சொன்னது நிழலாடுகிறது. இவன் மேல் தவறில்லையென்றும் அவள்தான் இவனை பயன்படுத்திக்கொண்டாள் என சொல்கிறாள்.

   கடற்கரையில் மீராவும் சிவநேசனும் அமர்கிறார்கள். மீரா சிவநேசனிடம் வினவுகிறாள். அவனால் சொல்ல முடியவில்லை. அழுகிறான். முடிந்ததும் பேச தொடங்குகின்றான்.

  அன்றொருநாள், நண்பர்களுடன் குடிக்கையில் போதை அதிகமாகியுள்ளது. ஆட்டோ பிடித்து நண்பர்கள் அனுப்பியிருக்கிறார்கள். வழியில் மலரை சந்தித்திருக்கிறான். ஒரே இடத்தில் வேலை செய்பவள். காலத்தோடு திருமணம் செய்யாதவள். பேருந்து கிடைக்காததால் ஆட்டோவில் வீட்டிற்குச் செல்ல உதவி கேட்டிருக்கிறாள். பின்னர் வீட்டில் இறங்கும் போது ஆட்டோவிடம் முழு பணத்தையும் கொடுத்து சிவநேசனை தன் வீட்டிற்கு அழைத்து அவனை தன் ஆசைக்கு பயன்படுத்திக்கொள்கிறாள்.
முழுவதையும் சொல்லிவிட்டாலும், தன் மீதும் தவறு இருப்பதை ஒப்புக்கொள்கிறான். அன்று குடித்திருந்தததால்தான் தானும் நிலை தடுமாறியதாக சொல்கிறான். 

 மீரா அவனை மன்னிக்கப் போவதில்லை என முடிவு செய்து அழுகிறான். மீராவின் குணம் அவனுக்கு நன்கு தெரியும். 

   ஏதோ முடிவு எடுத்தவளாக அவனை அழைத்துச் செல்கிறாள். தங்கள் வீட்டு வரிசையில் இருக்கும் குளியலறையில் அவனை அமரவைத்து அவன் மீது தண்ணீரை ஊற்றி அவன் இனி சுத்தமான மனிதன் என்றும் அவனால் இனி தவறு செய்ய முடியாது எனவும் கூறுகிறாள்.

  சிவநேசன் ஏதோ சொல்ல முயல்கிறான். ஆனால் மீரா, அன்று மணியக்கா இவர்களின் பசிக்கு உணவு கொடுத்த போது வேண்டாம் என திருப்பி அனுப்பியிருக்கலாம் ஆனால் அப்படி செய்யவில்லை காரணம் அவர்களின் வயிற்றுப் பசி என்கிறாள். அதே போலதான் அந்த பெண் மலருக்கும், இன்னும் திருமணமாகாத முதிர்கன்னி, அவள் பசிக்கு அன்று விருந்தாக கிடைத்துவிட்ட சிவநேசனை எப்படி அவள் விட்டிருப்பாள் என அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள்.

     அன்று அவன்,  மலரின் பசியை ஆற்றி உதவி செய்ததாக சொல்லி அவனை சமாதானம் செய்கிறாள். அதோடு விடாமல் அடுத்து அவள் சொல்வதுதான் கதைக்கு முக்கியமான ஒன்றாக அமைகிறது.

   அவனது தவறுக்கு உதவி என்கிற முலாமை பூசி அவனை சமாதானம் செய்தாலும் அடிக்கடி அப்படி இருக்க முடியாது என கூறி, அன்று உணவு கொடுத்தது போல அடிக்கடி மணியக்காவிடம் உணவு கேட்டாள் அவர் 'வெளக்குமாத்தால்' அடிப்பார் என்கிறாள்.

   அவளில் உள்ளர்த்தத்தை சிவநேசன் புரிந்துக்கொண்டான்.

நிறைவாக ;

   மணியக்காவின் இரண்டுவிதமான முகத்தை கதையின் ஊடே சொல்லியுள்ளதால் கதை முடிவில் மீரா சொல்லும் உதாரணம் நமக்கும் புரிந்துவிடுகிறது. 
கதையின் முடிவு நிச்சயம் பலரையும் யோசிக்கவைக்கும் சமயங்களின் முரண்படவும் வைக்கும்.

   முன்னமே சொன்னதுதான் நாம் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு நாம் கொடுக்கும் எதிர்வினையைப் பொறுத்தே அச்சிக்கல் தீர்வை நோக்கி செல்வதும் தீயாகி எரிவதும் அமைகிறது. 
குடும்பத்தில் ஏற்பட்டுவிடும் தவறுகளுக்கு தண்டிக்கத்தான் வேண்டும் என்கிற அவசியம் இல்லை
மன்னித்தும்விடலாம். சொல்லப்போனால், தண்டனை பெற்றவர் கூட மீண்டும் தவறு செய்யலாம் ஆனால் மன்னிப்பு பெற்றவர்  மீண்டும் தவறு செய்ய இரண்டு தடவையாவது யோசிப்பார். 

   இக்கதையில் தன் கணவனின் சிக்கலை கெட்கும் மனைவி அதிக பதட்டமில்லாமல் அவனை முழுமையாக பேச அனுமதிக்கும் போதே அவள் தன் வாழ்வில் அவசர முடிவு எடுக்க விரும்பவில்லை என்பதைக் காட்டிவிடுகிறது. 

    அதோடு , கணவன் மீது தண்ணீரை ஊற்றி "இனி நீ சுத்தமாயிட்ட.. இனி உன்னால எந்த தப்பும் செய்ய முடியாது.." என சொல்லி பயம் காட்டியுள்ளாளே தவிர,  'இனி நீ எந்த தப்பும் செய்யக்கூடாது" என கட்டளையிடவில்லை. மனைவியின் சாமார்த்தியம் இங்குதான் இருக்கிறது. அதுதான் இக்கதையைப் பற்றி எழுதத் தூண்டியது.


- தயாஜி

1 comments:

Unknown சொன்னது…

Oru nalla karuttaana kathai varigal..tappu seitha kanavai vanmaiyaaga thandikkamal, miga saamartiyamaaga "owning" koduttirukkiral manavi..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்