பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 28, 2022

- போர்க்கால பொம்மைகள் -

சாலை காலியாக இருக்கிறது. வண்ணங்கள் நிறந்த சாலையில் இப்போது சிவப்பும் சிதறிய உடல் பாகங்களுமே காய்ந்து கிடக்கின்றன.
ஒரே வாரத்தில் இவ்வளவு மாற்றங்கள். அவ்வபோது வானில் பறக்கும் விமானங்கள், உடைந்தும் உடையாமலும் இருக்கும் கட்டிடடங்களை அதிரச்செய்கின்றன. 

ஆங்காங்கு கைவிடப்பட்டிருக்கும், தோட்டாக்கள் இல்லாத துப்பாக்கிகளைச் சில சிறுவர்கள்,  தேடி சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை கொடுத்தால் தின்பதற்கு யாரோ ஒருவர் ரொண்டி துண்டுகளைக் கொடுப்பதாக சொல்லியுள்ளார்கள். அவசரத்தில் எங்காவது ஓடிவிடவும் மறைந்து கொள்வதும் சிறுவர்களுக்கு சிரமமில்லை. 

குடும்பத்தில் ஒரு சிறுவன் இப்படி செய்ய தயாராகிறான். சில குடும்பத்தில் வெறும் சிறுவர்களைத் தவிர யாருமில்லை. உடன் வாழ்ந்தோர் உடல்களைக் கூட அவர்களால் முழுமையாகப் பார்க்க இயலவில்லை. எல்லோரும் கதறுகிறார்கள். எல்லோரும் ஓடுகிறார்கள். எல்லோரும் சிதறுகிறார்கள். எல்லோரும் சிதைகிறார்கள். எல்லோரும் சாகிறார்கள். ஒரு சிலரே தப்பிக்கிறார்கள்.

தப்பித்தவர்களும் சிலருக்கு பயன்படுகிறார்கள். தப்பித்தால் தொடர்ந்து அவர்கள் பயன்படுவார்கள். காலி துப்பாக்கிகள் கிடந்த இடத்தில்தான் அவனுக்கு ஒரு பொம்மை கிடைத்தது. 

வீட்டில் தனியாக இருக்கும் தங்கைக்குக் கொடுக்கலாம். அப்பா அம்மாவை இழந்து அழுதுக்கொண்டிருப்பவளுக்கு இந்தப் பொம்மை ஆறுதலைக் கொடுக்கட்டும். ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் அந்தப் பொம்மையையும் எடுத்தான்.

தங்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். சில அடிகள் எடுத்து வைக்கவும் பொம்மை அதிரவும், அது வெடித்து அவனும் சிதறவும் சரியாக இருந்தது.....

பிப்ரவரி 26, 2022

- இயந்திரப்பறவை -

முதன் முறையாகப் பார்க்கிறார்கள். உற்சாகம் பொங்க ஆராவாரத்துடன் சிறுவர்கள் அதனைப் பின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதன் சத்தத்திற்கு ஈடாக அவர்களும் ஆர்ப்பரிக்கிறார்கள்.

அதிகம் வெளி உலகம் அறியாத மக்களின் கூட்டமைப்பு. அவர்களே விதைத்து அவர்களே விற்று அதை அவர்களே பண்டமாற்றுச் செய்து வாழ்ந்து வருகிறார்கள். எப்போதாவது யாராவது எதையாவது அவர்களுக்குக் கொடுத்துச்செல்வார்கள்.

வானில் பறக்கும் பெரிய பறவையாய் இருந்த விமானம் அவர்களுக்கு ஆச்சரியம் கொடுக்காமல் என்ன செய்யும். சிறுவர்கள் சட்டையைக் கழட்டிவிட்டார்கள். வானில் தெரியும் அதிசயத்திற்குத் தங்களின் சட்டையைக் காட்டிக்கொண்டே ஓடுகிறார்கள்.

குடியிருப்பில் உள்ளவர்களும் குழந்தைகளின் குதூகலத்தில் கலந்துகொண்டார்கள். ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டார்கள்.

எப்படியாவது அந்தப் பறவையைப் பிடித்து விடும் முயற்சியில் ஒருவன் மட்டும் முன்னணியில் ஓடிக்கொண்டிருந்தான். ஊரே அவனுக்கு உற்சாகம் கொடுக்கவும், மற்ற சிறுவர்களும் போட்டிக்குத் தத்தம் வேகத்தை அதிகப்படுத்தினார்கள்.

இரண்டு மூன்று முறைச் சுற்றிவந்த விமானம் மேன்மேலும் உயரம் போனது. எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க, அந்த அதிசயப் பறவை சில முட்டைகளைப் போட்டது.

அந்த முட்டைகள் தங்களை நோக்கி வருவதைக் கவனித்தவர்கள் தங்களின் கைகளைத் தூக்கி முட்டை உடையாமல் பிடிக்க நினைத்துக் கொண்டிருக்க....

பிப்ரவரி 25, 2022

புத்தகவாசிப்பு_2022_7_நிலவழி

தலைப்பு – நிலவழி
எழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்
வகை – கட்டுரை
வெளியீடு – தேசாந்திரி பதிப்பகம்
நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

மாத இதழொன்றில் தொடராக வந்தபோது வாசித்தது. இப்போது புத்தகமாக மீள்வாசிப்பு செய்வதில் மகிழ்ச்சி. எஸ்.ராவின் மூலம் பல எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் தொடர்ந்து பலருக்கு அறிமுகமாகிக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே. இந்தத் புத்தகமும் அவ்வாறுதான்,  புத்தக முடிவில் எஸ்.ரா சொல்லியிருக்கும் செய்தி மிக முக்கியமானது.

சர்வதேச இலக்கியங்கள் நமக்கு அறிமுகமாகியிருக்கும் அளவிற்கு இந்திய இலக்கியம் அறிமுகமாகியிருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆங்கிலத்தின் வழி ரஷ்ய இலக்கியங்களும் ஐரோப்பிய இலக்கியங்களும் எளிதாக வாசிக்கக் கிடைகின்றன. குறைந்தது அதன் எழுத்தாளர் அப்படைப்பாக்கத்தின் உள்ளீடு என்கிற விபரங்களையாவது தெரிந்து வைத்திருப்போம். ஆனால் இந்திய இலக்கியங்கள் என அறியப்படும் மராத்தியிலோ, வங்காளத்திலோ, பஞ்சாபியிலோ எழுதப்பட்ட இலக்கியப்படைப்புகள் தமிழில் எதிர்ப்பார்க்கும்படிக்கு வாசிக்கக் கிடைப்பதில்லை. மொழிபெயர்ப்பாளர்களின் தேவை இந்தத் தேக்கத்தை தீர்ப்பது எத்துணை அவசியம் என புலப்படுகிறது. 

அவ்வகையில் எஸ்.ரா எழுதியிருக்கும் ‘நிலவழி’ என்னும் கட்டுரைத் தொகுப்பு நவீன இந்திய இலக்கிய வரிசையில் வெளியான சில முக்கிய நாவல்களையும் சமகால இந்திய இலக்கியத்தின் போக்கினையும் கவனப்படுத்துகிறது என சொல்லலாம். மொத்தம் பத்து கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. ஆனால், பல படைப்பாளர்கள் , அவர்களின் முக்கியமானப் படைப்புகள் என அதிகமாகவே இக்கட்டுரைகளில் நமக்கு கிடைக்கின்றன. உதாரணமாக ஒரு மொழியில் இருக்கும் படைப்பாளியைப் பற்று பேசும்பொழுது அவருக்கு முந்தைய படைப்பாளர்களையும் அவர்கள் எவ்வாறு மாற்றத்திற்கு காரணமாக இருந்தார்கள் எனென்ன சிக்கல்களை எதிர்க்கொண்டார்கள் எனவும் பேசுகிறார். இன்றையப் படைப்பு தொடர்ச்சியை நாம் விட்டுவிடாதபடிக்கு அது நமக்கு உதவவும் செய்கிறது. 

மலேசியாவில் இருக்கும் எங்களுக்கும் இவ்வாறான சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. இங்கு எழுதப்படும் மலாய் சீன படைப்புகள் குறித்தும் படைப்பாளிகள் குறித்து பெரிதாக பலருக்கு அறிமுகம் இருப்பதில்லை. மலாய் மொழி எங்கள் நாட்டின் தேசிய மொழி, நாங்கள் எல்லோரும் தமிழ்மொழி போலவே மலாய் மொழியையும் கற்றுக்கொண்டே வளர்கிறோம். மலாய் இலக்கியம் குறித்தும் படைப்புகள் குறித்தும் எங்களால் நேரடியாக வாசிக்கவும் அது குறித்து உரையாடவும் முடிகிறது. ஆனால் சீன மொழி இலக்கியம் அப்படியல்ல. அங்கு இலக்கிய முன்னெடுப்பாக என்ன நடக்கிறது. என்ன எழுதுகிறார்கள் என்கிற கேள்வியே எஞ்சி நிற்கிறது. ஒரு மொழியின் இலக்கிய உச்சங்களை அறிவதன் வழி அம்மொழியில் புழங்கும் மக்களின் பண்பாட்டு அறிவுத் தளத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும். மலாய் மொழி பலருக்கு பரிச்சயம் என்றாலும் அதன் இலக்கிய முன்னெடுப்புகளை பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை. ஆனால் மலாய் மொழியில் மட்டும் எழுதி மலாய்க்காரர்களுக்கு நன்கு  அறிமுகமான தமிழ் எழுத்தாளர்கள் இருக்கவே செய்கிறார்கள். தனிக்குழுவாக தொடர்ந்து மலாய் இலக்கியம் படைத்து வருகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் அ.பாண்டியன் ‘அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ என்று புத்தகம் எழுதினார். வல்லினம் பதிப்பகமும் (மலேசியா) சந்தியா பதிப்பகமும் இணைத்து இப்புத்தகத்தை வெளியிட்டார்கள். மலேசிய மலாய் இலக்கியம் குறித்த அறிமுகத்தையும் படைப்புகளின் போக்கையும் அப்புத்தகம் கொடுக்கும். அவ்வாறே சீன இலக்கியம் குறித்தும் தமிழில் புத்தகம் வரவிருந்தது; சில காரணங்களால் அம்முயற்சி தாமதமாகிக்கொண்டே இருப்பது கொஞ்சம் வருத்தம்தான்.

எஸ்.ரா எழுதியிருக்கும் ‘நிலவழி’ வாசிக்க வாசிக்க நாம் வாசிக்க வேண்டிய எழுத்தாளர்களின் பெயர் பட்டியல் நிறையவே செய்கின்றன. நேரடியாக அவற்றை வாசிக்க இயலாவிட்டாலும் அதன் சாரத்தை, எப்படி அது முக்கியமான படைப்பாக அறியப்படுகிறது போன்றவற்றை இப்புத்தகம் வழி நாம் அறிந்துகொள்ள முடிகிறது.  

- தயாஜி

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

- ஒற்றைச்சாபம் -


யாரோ இடும் கையெழுத்து
எங்கோ செல்கிறது
யாரோ சாகிறார்கள்

யாரோ வீசும் குண்டு
எங்கோ வெடிக்கிறது
யாரோ சாகிறார்கள்

யாரோ சுடும் துப்பாக்கி
எங்கோ சுடுகிறது
யாரோ சாகிறார்கள்

யாரோ யுத்தம் செய்கிறார்கள்
எங்கோ நடக்கிறது
யார்யாரோ சாகிறார்கள்

ஏனோ நம் கையிலும்
இரத்தம் படிகிறது
நம் மனதும் துடித்து
அழுகிறது

நாமும் சாகத்தான் போகிறோம்
அதற்குள்
எத்தனை மரண ஓலங்களை 
கேட்டு பைத்தியமாகப் போகிறோமோ

ஏன் வாழ்கிறோம் 
என்பதை விடவும்
ஏன் சாகிறோம்
எனத் தெரியாதது 
உலக உயிர்களின் 
ஒற்றைச் சாபம் போல....



- நிறுத்து... நிறுத்து... நிறுத்து... -

"உங்களுக்கு என்ன வேண்டும் ?" கேட்டோம்.

"அம்மா... "

"எனக்கு அப்பா.."

"எனக்கு எங்க வீடு.."

"எனக்கு என்னோட கால்.."

"எனக்கு என்னோட கண்ணு.."

"எனக்கு எங்க ஸ்கூலு டீச்சர்.."

"எனக்கு என் தங்கச்சியோட கரடி பொம்மை.."

" எனக்கு நான் ஸ்கூலுக்கு போகனும்.."

"நான் கொஞ்ச நேரம் தூங்கனும்..."

"எங்கப்பாவை ஒரு தடவையாச்சும் பார்க்கனும்.."

எல்லோரும் என்னவேண்டுமென கேட்டார்கள். ஒருவன் மட்டும் எதுவும் கேட்கவில்லை. அவனால் முடியவில்லை. கண்களில் இன்னமும் கலவரம் தெரிகிறது. குண்டு வெடித்து உடல் சிதறியத் தாயைப் பார்த்த அதிர்ச்சியில் பேச்சறுந்து போனவன் அவன்.

அவனுக்காகவும் அவர்களுக்காகவும் நமக்காகவும்,  நாம் கேட்போம்.

"யுத்தங்களை நிறுத்து..."

"யுத்தங்களை நிறுத்து..."

"யுத்தங்களை நிறுத்து...."

பிப்ரவரி 24, 2022

- நண்பர்களை அழைக்கிறேன் -

மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் 'இயலின் குறுங்கதைப்' போட்டியை நடத்தினோம்.

போட்டிக்கு முன்பதாக பங்கேற்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறையையும் வழிநடத்தினோம். மாணவர்கள் ஆர்வத்துடனும் எதிர்ப்பார்ப்புடனும் கலந்துகொண்டார்கள். ஒரு நாள் பயிற்சி பட்டறையில் அவர்கள் பெற்ற அறிமுகத்தைத் தொடர்ந்து ஆளுக்கொரு குறுங்கதையை எழுதி போட்டிக்கு அனுப்பி வைத்தார்கள்.

அத்தோடு நின்றுவிடாமல் தொடர்ந்து குறுங்கதைகளை எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள்.

ஆர்வத்துடன் இருக்கும் இதுபோன்ற இளம் தலைமுறைக்கு தம்மால் இயன்ற பங்களிப்பையும் பல இடங்களில் புதிய தொடக்கத்தையும் ஏற்படுத்தி கொடுத்துக்கொண்டிருக்கும் 'மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்திற்கு' எனது அன்பு.

25-02-2022-டில் நடக்கவிருக்கும் குறுங்கதைப் போட்டி வெற்றியாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நமது கைத்தட்டல்களும் மனதார சொல்லும் பாராட்டு வார்த்தைகளும் இளம் தலைமுறையினர்க்கு அவசியம் என்று நம்புகிறவன் என்கிற முறையும் உங்களையும் அழைக்கிறேன்.

மலேசிய இலக்கியச்சூழல் எப்படி இருக்கிறது என அமர்ந்து குறை பேசாமல், எப்படி இருக்க வேண்டும் என களத்தில் இறங்கி நிறை காணுவதற்கான காரியங்கள் சாதித்துக் கொண்டிருப்பவர்களில் நானும் சிறுபுள்ளி என இருப்பதில் மகிழ்ச்சி...

இக்குறுங்கதை போட்டியின் பயிற்றுனராக எனக்கு கிடைக்கப்பெற்ற கதைகளில் பலவும் புதிய பாணி, புதிய கதைக்களன்களைக் கொண்டிருந்தன. அவை பற்றி நாளை நிகழ்ச்சியில் பேசுகிறேன்.....

பிப்ரவரி 23, 2022

- அம்மா வருவேன் -


"அம்மா.... என்னை மன்னிச்சிடுங்கமா..."
"ஏன்யா... மன்னிப்பெல்லாம் கேட்கற.. உனக்கு ஒன்னும் ஆகாதுயா..."

"நீங்க ரொம்ப பாவம். இப்படி ஓர் அம்மாவை நான் பாக்கல... ஆனா நீங்க எனக்காக எல்லாமே செய்றீங்க... என்னால உங்களுக்கு ஒன்னுமே செய்ய முடியலம்மா..."
"பெத்த பிள்ளைக்கு செய்யாத அம்மா எங்கயா இருக்காங்க.. உனக்கு ஒன்னும் ஆகாது.. அம்மா இருக்கேன்.. உனக்கு ஒன்னுமில்ல.. நீ நல்லாய்டுவ.... மறுபடியும் அம்மாகூட கடைக்கு வருவ.. பேசுவ.. சமைக்க உதவி செய்வ.. சண்டை போடுவ.. விளையாடுவ..."

"அம்மா ரொம்ப வலிக்குதுமா...."
"கொஞ்சம் பொறுத்துக்கய்யா... இப்பதான் மருந்து சாப்டிருக்க கொஞ்ச நேரத்துல சரியாகிடும்.. ஆம்பிலன்ஸும் வந்துகிட்டு இருக்கு...."

"மா.. நீங்க போய் தூங்குங்க.. என் கூடயே இருக்கீங்க... சரியா தூங்கியே ரொம்ப நாள் ஆச்சிமா...."
"தூக்கமாய்யா முக்கியம்... உன்னையை இப்படி விட்டுட்டு அம்மாவால எப்படியா நிம்மதியா தூங்க முடியும்..."

"நானே உன் நிம்மதியைக் கெடுத்துட்டேன் மா... மன்னிச்சிடும்மா..."
"அப்படிலாம் பேசாதப்பா..."

"வலிக்குதும்மா...ரொம்ப வலிக்குதும்மா..."
"அம்மா மடில படித்துக்கப்பா.. எல்லாம் சரியாகிடும்... ஆம்பிலன்ஸும் வந்துகிட்டு இருக்கு...."

"ம்மா....ம்மா...."
"அம்மா இருக்கேன்.. உனக்கு ஒன்னும் ஆகாது.... "

"ம்மா....."
"தோ ஆம்புலன்ஸ் வந்துடிச்சி...."

ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. அவசரமாக இறங்கியவர்கள் கூடியிருந்த உறவினர்களை நகரச்சொன்னார்கள். பாதி மயக்கத்தில் இருந்தவனை கட்டிலில் தூக்கி வைத்தார்கள். அம்மா வாசலுக்கு சென்றுவிட்டார்.

அவர்கள் அவனை கட்டிலில் வைத்து வெளியே கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். வாசலில் நின்றிருந்த அம்மாவின் வெண்புகையை ஊடுருவி அவன் கட்டிலில் கடந்து சென்றுக்கொண்டிருக்கிறான்.

"ம்ம்மா...மா..." முனகினான்.

"உனக்கு ஒன்னும் ஆகாதுயா.. நீ எப்ப கூப்டாலும் அம்மா வருவேன்.... உனக்கு ஒன்னும் ஆகாது...."

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்