பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மார்ச் 27, 2021

வெறிநாய்கள்

 


        இன்றும் தேடலானாள். ஆனால் கொஞ்சம் மும்முரமாக. அந்த நாய்களின் குரைப்புச் சத்தம் அவள் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காதில் புகுந்த சத்தம் மூளையை குடைவதாக உணர்ந்துக் கொண்டிருக்கிறாள். இப்படியாக குரைக்கத் தெரிந்த நாய்களை அவள் இதுவரையில் பார்த்திருக்கவில்லை. இன்னும் குளிக்கவில்லை. வாசலுக்கு வந்து காத்திருந்த அம்மாவை திட்டிவிட்டுதான் உள்ளே வந்தாள். வழக்கமாக நடப்பதுதான். அம்மா அடுத்து செய்ய வேண்டியவற்றை செய்யலானார். மேஜை மீது சுலோச்சனாவுக்கு வேண்டிய இரவு உணவை வைத்தார்.  மகளின் அறையை ஒரு முறை தட்டி சாப்பிட அழைத்தார். கணினி திரையில் தேடிக்கொண்டிருந்தவள்,

     “எனக்கு தெரியும்மா…. இருங்க வரேன்… இப்ப அது ஒன்னுதான் இங்க குறைச்சல் இங்க..”

       மேற்கொண்டு அம்மாவிற்கு செய்ய ஒன்றுமில்லை. மேஜை மீது வைத்திருந்த உணவுகள் சரியாக மூடப்பட்டுள்ளதா என பார்க்கலானார். சமையல் அறை நாற்காலி மீது வைத்திருந்த சிறிய துணியை எடுத்தார். மேஜையை இன்னொரு முறை துடைத்தார். துடைத்தவர் அங்கேயே அமர்ந்தார். சுலோச்சனாவின் இந்த  குணத்திற்கு தானும் ஒரு காரணம் என நினைத்து வருந்தினார். அவள் எத்தனை அன்பானவளாக இருந்திருக்கிறாள் என்பதை அம்மா இன்னொரு முறை நினைத்துப் பார்க்கலானார். காலமும் சூழலும் எத்தனை மாற்றங்களைப் போகிற போக்கில் செய்துவிடுகின்றன.

        அப்பா இல்லாத குடும்பத்தை காப்பற்றத்தான் கடவுள் அவளுக்கு தம்பியைக் கொடுத்திருக்கிறார் என்பார். அதற்காகவே அம்மா, தம்பி மீது அதிக அக்கறை காட்டினார். சுலோச்சனாவிற்கும் அது புரிந்தே இருந்தது. அவளும் தம்பிக்காக பலவற்றை விட்டுக்கொடுத்தாள். ஒரு முறை தனக்கு கிடைத்த வெளிநாட்டு மேற்படிப்பிற்கான வாய்ப்பை தம்பிக்காகவே விட்டுக்கொடுத்தாள். அம்மாவால் வீட்டு வேலையைத் தவிர வெளி வேலை செல்ல முடியாது செய்யவும் முடியாது. அப்பாவின் மரணம் அம்மாவை மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் பாதித்து இருந்தது. அம்மா அதிக தூரம் கூட நடப்பது கூடாது என மருத்துவர் சொல்லிவிட்டார். யோசித்துப் பார்த்தால், நாள் ஒன்றுக்கு  அம்மா வீட்டில் நடந்த நடையை கணக்கிட்டாலே கூட தாமானை இரண்டு முறை சுற்றியிருப்பார்.

       சுலோச்சனாவிற்கு தம்பி மீது பாசம் இல்லாமலில்லை. தனக்காக செலவு செய்வதைக் காட்டிலும் தம்பியின் தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தாள். தம்பி மேற்படிப்பு படிக்கதற்காக தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டவள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். அவளின் வேலையிடத்தில், வேலையின் நுணுக்கங்கள் தெரியாதவர்கள் கூட இவளுக்கு மேலதிகாரிகளாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் தங்களுக்கு பின்னால் வைத்திருக்கும் படிப்பின் பெயர்தான். என்னதான் தான் அவ்வாறு தன் பெயருக்கு பின்னால் எந்த படிப்பின் பெயரையும் வைத்திருக்காவிட்டாலும், அவள் சொந்தமாகவே கற்று தேர்கிறவள், கற்றுக்கொண்டிருப்பவளும். எப்படியும் கொஞ்ச நாளில் தம்பி குடும்ப பொறுப்பை கையில் எடுத்துக் கொள்வான். தான் விட்ட படிப்புகளையெல்லாம் மீண்டும் தொடங்கலாம் இதே அலுவலகத்தில் தனக்கு தகுதியான இடத்தில் அமர்ந்துக் கொள்ளலாம் என தினமும் எண்ணிக்கொண்டிருந்தாள். அம்மாவும் அவளும் இதையேதான் அடிக்கடி பேசிக்கொண்டார்கள்.

       அவர்களுக்கான விடியல் ஒரு நாள் வந்தது. விடியவும் செய்தது. ஆனால் வெளிச்சம் இந்த குடும்பத்தில் விழவில்லை. மாறாக மேலும் இருள்தான் சூழத்தொடங்கியது.  தம்பியைக் காணவில்லை. யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டான். எங்கே போனான் என்ன ஆனான் என்பது யாருக்கும் தெரியவில்லை. தலை நிமிர வேண்டிய குடும்பத்தின் கழுத்தில், தான் நம்பியிருந்த தங்க சங்கிலி அறுந்து விழுந்தது மட்டுமின்றி கழுத்தையும் சேர்த்து அறுத்துவிட்டு விழுந்தது.

        அழுது முடிக்கக்கூட அதிக நேரம் கிடைக்கவில்லை. அவள் இன்னொரு சிக்கலை சந்தித்தாள். அலுவலகத்தில் அவளின் வேலை மீது குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கின. அவள் எழுதும் கடிதங்களில் எழுத்துப்பிழைகள். முறையாக கோப்புகளை அடுக்காததால் சில இழப்புகள் என ஒன்றின் பின் ஒன்றாக வந்தன. இச்சமயம் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடந்துக் கொண்டிருப்பதாக அவளின் ஆழ்மனம் சொல்லத்தொடங்கியது. தாமதிக்காது மற்ற இடங்களுக்கு வேலைக்கான மனுவை அனுப்பினாள். அவள் எதிர்ப்பார்த்த சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. ஆனால் வீட்டிலிருந்து தூரம். இப்போதைக்கு பொது பேருந்தில் செல்லலாம். பழைய வேலையிட சிக்கல்களில் இருந்து தப்பித்தாள். இன்னொரு சிக்கலில் சிக்கப்போவதை நினைத்துப் பார்க்கவில்லை.

       காலையில் கிளம்புகிறவள் திரும்ப வீடு வருவதற்குள் இருட்டிவிடும். வீட்டில் இருந்து கொஞ்சம் தூரம் நடந்துதான் பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும். இரவு அந்த வழியில் வீடு திரும்புவதுதான் அவளுக்கு பயத்தைக் கொடுக்கத் தொடங்கியது. அவ்வழியில் சில காலி வீடுகள் புதர் மண்டிக் கிடக்கின்றன. அங்கு சாலை விளக்கும் இல்லை. பேருந்தை விட்டு இறங்கியவுடன் மடமடவென நடந்துச் செல்வாள். சமயங்களில் யாரோ அவளை அழைப்பு போல தோன்றும். யாரோ தன்னை பின் தொடர்வதாகவும் தோன்றும்.  

         தினமும் இவ்வழியில் நடப்பது அவளுக்கு பொரும்பாடாய் இருக்கிறது.  தனது கைப்பையில் இருக்கும் ‘பெப்பர் ஸ்ப்ரே’-வை எடுத்து கையில் இறுக்கமாக பிடித்துக் கொள்வாள். அவளின் நடை வேகம் கூடும். வீடு வருவதற்குள் வியர்த்து வடிவாள். அம்மாவிடம் இதனைச் சொல்லவும் முடியாது. உடனே அவசரமாக காரை வாங்க சொல்லுவார். தினமும் பேருந்து நிலையம் வரை தான் வந்து காத்திருப்பதாக சொல்லுவார். அம்மாவின் உடல் நிலைக்கு இதுவெல்லாம் சரியாக வராது. தம்பியின் மேற்படிப்பிற்காக முன்னமே வாங்கியுள்ள வங்கி கடனால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்காவது வேறு எதற்கும் அவளால் கடன் வாங்க முடியாது எங்கிருந்து கார் வாங்குவது.

       இதற்கிடையில்தான் அவள் ஒன்றை கேள்விப்பட்டாள். அவள் வீட்டிற்கு வரும் இருள் சூழ்ந்த பகுதியில் சில வெறி நாய்கள் சுற்றிக்கொண்டிருப்பதாகவும், சிலரை கடித்திருப்பதாகவும் பேருத்து நிலையத்தில் ஒருவர் சொல்லிகொண்டிருந்தார். இயல்பாகவே நாய் என்றால் சுலோச்னாவிற்கு பயம்.

       பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவளை ஒரு நாய் துரத்தி அவள் கீழே விழுந்துவிட்டாள். நாய் அவளருகில் வருவதற்கு முன்னதாக தம்பி கையில் கட்டையுடன் ஓடி வந்து காப்பாற்ற முயன்றான். பயந்துவிடாத நாய் அவன் மீது பாய்ந்தது. அந்த கலவரத்தில் தம்பிக்கு கன்னத்தில் நகக்கீரல் ஆழமாக பதிந்துவிட்டது. ஆனால் கடையில் கட்டையில் அடி வாங்கிய நாய் ஓடிவிட்டது. நாய்களை நினைக்கும் போதெல்லாம் தம்பியையும் அவன் கன்னத்தில் பதிந்த தழும்பையும் அவளால் நினைக்காமல் இருக்க முடியவதில்லை. அன்று முதல் அவளுக்கு நாய்கள் என்றால் ஒவ்வாது. எத்தனை குட்டியாக எத்தனை அழகாக இருந்தாலும் நாய்கள் என்றாலே அவளுக்கு ஒவ்வாமைதான். அதனால்தான் இரு பெண்கள் இருக்கும் வீட்டில் காவலுக்கு நாய் வளர்க்கச்சொல்லி அம்மா கேட்டதற்கும் மறுத்துவிட்டாள். வீட்டில் இருக்கும் மின்சார அலாரம் நம்மை காப்பாற்றிக்கொள்ளும் என கூறிவிட்டாள்.

     இப்போது தினமும் நடந்து வரும் பாதையில் இப்படி ஒரு சிக்கலை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. அதனை நினைத்துக் கொண்டு வந்ததால் என்னமோ இன்று பல இடங்களில் நாய்களின் நிழல்களைக் கண்டாள். இந்த இருள் வழியில் சமீபகாலமாக தன்னை பின் தொடர்ந்து வந்ததும் அதில் ஒரு நாய்தான் என்பதை புரிந்துக் கொண்டாள். இதுகளுக்கு ‘பெப்பர் ஸ்ப்ரே’ போதாது வேறு ஏதாவது ‘ஸ்ப்ரே’ தான் தேவை என முடிவெடுத்தாள். வீட்டிற்கு வந்ததும் வராததுமாக அறையில் புகுந்து சாப்பிடக்கூட வராமல் கூகளிடம் நாய்களை விரட்டுவதற்காக ‘ஸ்ப்ரே’ எங்கே கிடைக்கும் என அலசிக்கொண்டிருக்கிறாள்.

      மறுநாள், பேருந்து தாமதமானது. அவளுக்கும் தாமதமானது. வழக்கத்தைவிட சில மணி நேரம் தாமதமாகத்தான் பேருந்து அவளை இறக்கிவிட்டது. விரைந்து நடக்கலானாள். வெறி நாய்கள் நிறைந்த வழியை கடக்க வேண்டும். எதற்கும் கையில் ‘பெப்பர் ஸ்ப்ரே’வை வைத்துக் கொள்ள நினைத்தவள் கைப்பையில் கைவிட்டாள். அது அதில் இல்லை. எங்கே விட்டாள் என நினைத்துப் பார்க்க நேரமில்லை. முழுவதும் பாதுகாப்பற்ற சூழல் அவளை சூழ்ந்தது. மேலும் அவளை பயம் காட்ட அவள் பின்னால் யாரோ நடந்து வருவது போல சத்தம் கேட்டது. அவள் பெயரையும் யாரோ அழைக்கிறார்கள்.

    நடையை  அதிகப்படுத்த முயன்றாள். அச்சமயம் அவன் முன்னே ஏதோ ஒரு பெரிய உருவம் குதித்து நின்றது. அவள் அலறுகிறாள். பின்னால் இருந்து ஒருவன் அவளது வாயை பொத்தி, அப்படியே அவளை தூக்குகிறான். முன்னே குதித்தவன் அவளின் கால்களை தூக்குகிறான். இருவரும் அவளை பக்கத்தில் இருக்கும் காலி வீட்டிற்கு தூக்கிச் செல்கிறார்கள். யாரோ பின் தொடர்வதாக தெரிந்துக் கொண்ட ஒருவன் “யார்டா அது?” என சத்தமிட்டான். அப்போது அந்த மூன்றாவது ஆள்…!

       ஒருவனின் காலை கடித்தது. அவளை பிடித்திருந்த கைகள் விட்டன. இமைக்கும் நேரத்தில் வெறி பிடித்த நாய் இருவரையும் கடித்து குதறத்தொடங்கியது. சுலோச்சனாவின் கண் முன்னே இருவரும் அலறிக்கொண்டு ஓடினார்கள். அவளுக்கும் என்ன செய்வது என தெரியவில்லை. சற்று நேரத்தில் அந்த வெறி நாய் அவளருகில் வந்து நின்றது. பயத்துடன் மெல்ல மெல்ல எழுந்தாள். நாய் வாலை ஆட்டியது. தனது ஆடையையும் தலை முடியையும் சரி செய்துக் கொண்டாள். மெல்ல நடக்கலானாள். அந்த நாயும் அவள் பின்னே நடக்கலானது.

       வழியில், மீண்டும் யாரோ அவள் பெயரைச் சொல்லி அழைக்கிறார்கள். அந்த குரல் அவளுக்கு மிக நெருக்கமான குரலென மனம் சொல்லிக்கொண்டது. அப்படியே நின்றுவிட்டாள். யாரோ பின்னால் நிற்பதை உணர்ந்தாள். திரும்பிப் பார்க்கிறாள். அந்த நாய் மட்டுமே வாலை ஆட்டிக்கொண்டிருந்தது. அதன் கன்னத்தில் எப்போதோ கடிபட்ட தழும்பொன்று பளிச்சிட்டது.

-       தயாஜி

     

 

ஜனவரி 05, 2020

புன்னகை மட்டும் போதுமெனக்கு…

இன்றைய மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பில் *'புன்னகை மட்டும் போதுமெனக்கு'* எனும் என் சிறுகதை வந்துள்ளது. வாய்ப்பு இருப்பின் வாசித்து நண்பர்கள் தத்தம் கருத்துகளைச் சொல்லவும். அது எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
மக்கள் ஓசைக்கும் அதன் பொறுப்பாசிரியர்க்கும் என் நன்றி.




       இன்று விடுமுறை வேண்டுமென்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். பதில் ஏதும் வரவில்லை. பதட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. ஆனாலும் நம்பிக்கையின் பொருட்டு வெளியில் செல்வதற்கு தயாரானாள். கணவனும் சொன்னது போலவே மிகச்சரியாக பத்து நிமிடத்தில் கிளம்பிவிட்டான். பிசினஸ் மேன்களுக்கே உரிய மிடுக்குடன் வாசனையைத் தன் உடல் முழுக்க கலந்திருந்தான். இன்று குழந்தையை பார்க்க செல்லவேண்டும் என்று ஏற்கனவே சொல்லிவிட்டாள்தான் ஆனாலும் மீண்டும் ஒரு முறை நினைவூட்டுவது அவள் வழக்கமாக செய்தவது. ’ஒன் காலில்’ இருக்கிறாள் (one call என்று வாசிக்கவும் அல்லது ஒரு காலிலா என்று உங்களுக்கும் இப்போதே சிரிப்பு வரலாம்.) எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம். சிரித்த முகமாக இருப்பவர்களுக்கும் எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க விரும்புகின்றவர்களுக்கும் இப்படியான முதலாளிகள் கிடைப்பது அவ்வளவு சிரமமில்லை.

       முதலாளியிடமிருந்து பதில். ‘தாராளமாக விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், இன்று வேலை செய்ய போதுமான ஆட்கள் இருக்கிறார்கள்’ என்ற குறுஞ்செய்தியை படித்தவுடந்தான் ஏதோ திருப்தி வந்தது. இல்லாவிட்டாலும் உதவிக்கு சக பணியாளர்கள் இருக்கிறார்கள். முதலாளியை விட கஸ்டமர்களின் கோவத்துக்குத்தான் பதில் கொடுக்க சிரமப்படுவார்கள். எப்போதும் தன்னால் மற்றவர்களுக்கு சிரமமேதும் வந்திடக்கூடாதென்ற மனம்தான் அவளை இத்தனை நாட்களாய் தனித்துக் காட்டிக்கொண்டிருக்கிறது.

     செல்வி சகாயம் குடும்பத்தினர். கோலாலும்பூரில் இருக்கும் நவீன பல்லடுக்கு மாடிவீட்டில் வசிக்கிறார்கள். உள்ளே நுழைவற்கே காரணம் முதல் அடையாள அட்டை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உள்ளே நுழைவதற்கான மின்சார தடுப்பை திறப்பார்கள். அல்லது உள்ளே இருந்து ஒரு ஆள் வெளியில் வந்து பேசி அவர்களை கூட்டிச்செல்ல வேண்டும். இருபதாவது மாடியில் இருந்து இதுவரை ஒரு மாடி மேலேயும் சென்றதில்லை. ஒரு மாடி கீழேயும் சென்றதில்லை. மின்தூக்கியில் வேறேந்த பட்டன்களையும் அவள் தட்டியதில்லை. அவ்வபோது வேறு மாடிகளில் மின்தூக்கி நின்று கதவு  திறந்தாலும் அவள் எட்டிப்பார்த்தது இல்லை. குணிந்த தலை கொண்டவளை அந்த பல்லடுக்கு மாடிவீட்டில் யாருக்கும் சரியாக அடையாளம் தெரியாது. கணவன் சகாயம் தன் வியாபார தரத்துக்கு தான் எங்கே வசிக்கிறோம் என்ன மாதிரியான காரை பயன்படுத்துகிறோம் என்பதை அத்தனை கவனம் கொண்டவர். ஒவ்வொரு முடிவையும் அது சார்த்தவாறே இருக்கும்படிப் பார்த்துக் கொள்வார். 

    இப்படித்தான் ஒரு முறை அவளை சந்திக்க வந்தவரை அவளே அழைத்து செல்ல கீழறிங்கினாள். பாதுகாவலர்கள் அவளை அடையாளம் தெரியவில்லையென ஏதேதோ கேள்விகளைக் கேட்டு குடைந்துவிட்டார்கள். 

நல்லவேளையாக, கணவன் வீட்டிற்கு வரும் நேரம் என்ற படியால், சில நிமிடங்கள் காத்திருந்து மூவரும் ஒன்றாக வீட்டுக்கு வந்தார்கள். அப்போதுதான் உடன் வந்திருந்த சீனர் இந்த குடியிருப்பு பகுதியை குறித்து தனக்கு தெரிந்ததை சொன்னார். வழக்கமாக இங்கிருக்கும் சிலரை பார்க்க வரும்போது, இப்படி காக்க வைக்க மாட்டார்களாம் அவர்களே காரில் கூட்டிவந்து பின்னர் கூட்டிப்போவார்களாம். அதிலும் இந்த மின் தூக்கியில் நான்காம் எண் இல்லாத்தற்கு சொல்லப்படும் வழக்கமான கதையை சொல்லிக்கொண்டிருந்தான். 

ஆனால் அவனுக்கு அதில் இருக்கும் நம்பிக்கையை இதுவரை யாராலும் உடைக்க முடியவில்லையாம்.

    செல்வியும் சகாயமும் குழந்தைக்கு கொடுப்பதற்கான விளையாட்டு சாமான்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு அவுட்டர்மேன் பொம்மைகள் குறித்து ஒன்றுமே தெரிவதில்லை. ஆமாம், இங்கே அவுட்டர்மேன்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உச்சக்கட்ட சண்டையில் அவுட்டர்மேன் கையில் காட்டும் சிலுவை மாதிரி குறிதான் பிரச்சனை என்று சிலர் சொல்லிகொண்டாலும், வன்முறை அதிகம் இருப்பது குழந்தைகளுக்கு தக்கதல்ல என்று செய்திகளை ஊடகங்கள் சொல்லிக்கோண்டே இருந்தன. அவுட்டர்மேன்கள் செய்த வன்முறைகளைவிட ஊடகங்கள் காட்டிய படங்களும் பரப்பிய செய்திகளும்தான் குழந்தைகளுக்கு அச்சமூட்டுபவையாக இருந்தன.

   காற்றால் நிரம்பியிருந்த தேவதை பொம்மையை செல்வியும், படுத்துக் கொண்டு துப்பாக்கியில் சுடும் இராணுவ வீரன் பொம்மையை சகாயமும் எடுத்து வந்தார்கள். பின்னர் அவர்களுக்குள்ளாகவே பேசி இரண்டில் குறைந்த விலை கொண்டதை வாங்கிக்கொண்டார்கள். சகாயத்தை பொருத்தவரை உயர்ந்த வியாபார காந்தங்கள் செலவு செய்வதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

    இப்போதைக்கான பரபரப்பு சூழலில் குழந்தை, குழந்தைகள் காப்பகத்தில் இருப்பதுதான் எத்தனை பாதுகாப்பானது. தேவைப்படும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றாலும், மாதத்தில் மூன்று முதல் நான்கு நாட்களில் மட்டுமே கட்டாய விடுமுறை எடுக்க வாய்ப்பு கொண்ட சுமதிக்காக சகாயம் தங்கள் குழந்தையை பார்க்கும் நாளில் மட்டும் விடுமுறை என்று வீட்டில் இருப்பார். மற்ற நாளில் வேலை என்று வீட்டில் இருப்பார். 

நல்லவேளையாக சொந்த தொழில் செய்துவருவதால் சகாயம் எடுக்கும் ஒரு நாள் விடுமுறைகளுக்கு பாதிப்பு வரவில்லை. செல்வியின் ராசியால் இன்னும் எத்தனை தொழில்களையும் அவர் தொடங்கலாம், சமயங்களில்  சில தொழிகளில் பெருத்து நஷ்டம் ஏற்படுவது உண்டு. அதற்கும் கூடசெல்வியின் ராசிதான் கை கொடுக்கும். அத்தொழில்கள் எப்படி நஷ்டமாகின்றன என்பதற்கு பெரிய பட்டியலே வைத்திருக்கிறார் சகாயம். நல்லவேளையாக அவர் தொடங்கிய ஆறாவதோ ஏழாவதோ தொழிலில் கொஞ்சம் வருமானம் இப்போது வருகிறது.

    காரில் செல்லும் போது பாடல்களை கேட்கும் வழக்கத்தை கொஞ்ச நாள் நிறுத்தியிருந்தார். தனக்கு விடுமுறை சொந்த கதையாக இருந்தாலும் மனைவிக்கு அவ்வாறில்லை. ஓவர் டைம் வேலையால் மட்டுமே கோலாலும்பூர் போன்ற பெருநகரங்களில் வாழ முடியும். இல்லையெனில் இருக்கவே இருக்கிறது பெருநகரங்களின் மறுமுனை பெருநரகம். எப்போதும் இரைச்சல், தூங்கவிடாத மோட்டார் உறுமல்கள், பூனைகளைவிட பெரிய எலிகள், பள்ளிச்சீருடைகளில் பலான காட்சிகள். ஏனப்பா இதுவெல்லாம் பெருநகரங்களில் இல்லையா என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இருக்கிறதுதான் சில மாற்றங்களுடன். இரைச்சல் சத்தம் அவரவர் வீட்டு கதவுக்கு பின்னாலேயே நின்றுவிடுகிறது.மற்றவர்க்கு அது குறித்த அக்கறை இல்லை. மோட்டார்களை எங்கோ வைத்து எங்கோ இருக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டும். பூனைகளைவிட பெரிய எலிகளை பொறித்து தின்று செறிக்க பழகிவிட்டார்கள். பிறகு பள்ளிச்சீருடைகளின் பலான காட்சிகள் கண்ட இடங்களில் நடப்பதில்லை, பெரும்பாலும் அவரவர் சொந்த வீட்டு கட்டிலிலோ பள்ளிக்கு என சொல்லி வாங்கும் கட்டணத்திலே ஹோட்டல்களில் நடந்துவிடுகிறது. கிடைக்கும் நேரமெல்லாம் காரில் பயணிக்கும் போதுதான் என்றானபோது அதை செல்வியுடனான உரையாடல்களால் நிரப்பிக் கொள்வார் சகாயம். தன் வாழ்வில் எத்தனை சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதனையும் கலைவதற்கு செல்வி இருப்பதுதான் எத்தனை பாக்கியம். அவ்வபோது சகாயம் அவளுக்கு நன்றி சொல்ல மறப்பதே இல்லை. இதுவரை அவளுக்காக பெரிதாக ஒன்றும் செய்யவில்லையென்றாலும் அவள் மீதான அன்பு எப்போதும் ஏற்றமடைந்துக் கொண்டேதான் இருந்தது.

    குழந்தைகள் எல்லாம் ஆளுக்கொரு விளையாட்டு பொருள்களுடன் இருந்தார்கள். கீர்த்தரோஷன் மட்டும் கையுடைந்த யாரோ எப்போது விட்டுப்போன பொம்மையுடன் இருந்தான். “கீர்த்தா… கீர்த்து கண்ணா, கீர்த்தூ…ரோஷன்… அய்யா ரோஷனு..” என்று ஆளுக்கு ஆள் அழைத்தார்கள். எதற்கும் அசைந்துக் கொடுக்கவில்லை குழந்தை. இதனை கவனித்த சீனக்கிழவி, ’கீத்தாலோசா’ என அழைக்கவும் சட்டென பிரக்ஞ்சை கொண்ட குழந்தை வாசலை பார்க்க அப்பா அம்மா வந்திருப்பது குழந்தையைக் குதூகலப்படுத்தியது. கையுடைந்த பொம்மையை பத்திரமாக படுக்க வைத்து, தன்னுடைய போர்வையை அதற்கு கொடுத்து தூங்கச்சொல்லியப்பின் பெற்றோரிடம் வந்தான்.

    ஆசை தீர கொஞ்சியவர்கள் அவனை தூங்கவைத்து, அவன் தூங்கவைத்த கையுடந்த பொம்மையை எடுத்துவிட்டு தேவதை பொம்மையை படுக்க வைத்தார்கள். வாழ்வில் ஏதாவது பிடிப்பு இருக்கவேண்டியதின் அவசியத்தை குழந்தைகள் காட்டிவிடுகிறார்கள். வாழ்வின் குறிப்பிட்ட எல்லைவரை செல்ல முடிந்த தம்பதியர் குழந்தையென்ற சாவி கொண்டு அடுத்தடுத்த இன்ப கதவுகளை திறந்துச் செல்கிறார்கள். இப்போதெல்லாம் பெற்றுகொள்ளும் குழந்தைகளைவிட பெற்று கொல்லும் குழந்தைகள் எண்ணிக்கைதான் அதிகம். வாழ்வின் வழியே திறந்திடாவர்கள், பாவச்சுமைகளுடன் பயணிக்க தயாராகிறார்கள்.

    புறப்படும் முன் சீனக்கிழவி அவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள். தான் காருக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிழவியிடம் கையசைத்துவிட்டு புறப்பட்டார் சகாயம். குழந்தை குறித்து சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிய பின், செல்வியின் உடல் நலம் குறித்து விசாரித்தாள். அவ்வபோது மருத்துவ பரிசோதனை செய்யும்படியும் கேட்டுக்கொண்ட சீனக்கிழவி, இன்னும் எத்தனை மாதம் குழந்தை இந்த காப்பகத்தில் இருக்கும் என விசாரித்தாள். அதற்காகவே காத்திருப்பது போல எஞ்சியிருக்கும் இரண்டு மாதங்களை சொன்னாள். ” எல்லாம் சரியாகிவிடும் நான் உன் குழந்தையை பார்த்துக்கறேன். நீயும் வந்துவந்து போ. ஒன்னும் பிரச்சனை இல்லை. இனிமேலாவது உன் புருசனை ஒழுங்கா இருக்க சொல்லு. அப்பறம், அவ்வளோதானா இல்ல.. அடுத்து வேற யெங்கயும் பார்த்துட்டாரா…” என்ற சீனக்கிழவி தன் கைபேசிக்கு அழைப்பு வந்ததும், அடுத்தமுறை பேசலாம் என செய்கை காட்டி திரும்பினாள். காரின் ஹார்ன் சத்தம் கேட்கும்வரை அப்படியே நிலைகுத்தி நின்றிருந்தாள் செல்வி.

கார், வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.

  ”ஆமா, அந்த கெழவிக்கு என்னாவாம்? எப்ப பார்த்தாலும் உன் கிட்டதான் வந்து பேசுது… ஏன் நான் இருக்கும் போது வந்து பேசாதாமா..?” என்றவன் பதிலை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காமல், ”ஆமா..ஆமா.. ரெண்டு பொம்பளைங்க.. என்னாத்த பேச போறிங்க.. எங்களை மாதிரி நாட்டு நடப்பையும் பிசினஸ் பத்தியுமா பேச போறிங்க..?, வீட்டுல தண்ணி இல்ல, காட்டுல பன்னி இல்லைன்னு எதையாவது ’கோசோங்கா’ பேசுவிங்க”

    கைபேசி ஒலித்தது, “சீக்கிரம் எடுத்து பாரு, சீனன் வேலைக்கு வர சொல்லிட போறான், அந்த வழியாதான் போவோம், இறக்கி விட்டுடறேன். இல்லைன்னா திரும்ப வரனும்.. எதுக்கு ரெண்டு வேல..டோல் காசு வேற.. டோல் எடுக்கறதுக்குள்ள உசுர எடுத்துடுவானுங்க போல…”

   ‘Besok jgn dtg… polis masuk.. kita punya hal cukup..good luck’) என்று இருந்தது.படித்ததும் மெல்லிய புன்னகையில் விபரத்தை சொன்னாள். ஏதோ கணக்கிட்டவர். கைபேசியை எடுத்தார். ‘எம்’ வரிசையில் ஒவ்வொரு பெயராக கீழே இழுத்துக் கொண்டிருந்தான். ’MR.லிம் 4’ என்ற எண்ணுக்கு அழைத்தார்.

    சகாயம் சீனத்தில் பேசினான். இன்னும் எத்தனை மொழி தெரியுமோ தெரியவில்லை. ஆனல சகாயத்திற்கு கோவமாக வந்தது.

   “பாரேன், இந்த எழவெடுத்தவனுங்கள…. ரெட் லைட் ஏரியாவ மூடிட்டானுங்களாம். இனி பிரிக்பீட்ல இருக்க முடியாதாம்… சீல் வச்சிட்டானுங்களாம்… நாசமா போறவனுங்க… எதை மூடனுமோ அதை மூடமாட்டானுங்க.. இதை மூடி நம்ம வயுத்துல அடிக்கறானுங்க…”

    செல்வி உள்ளுக்குள் நிம்மதியாய் புன்னகைத்தாள். இனி அவள் தம் குழந்தை மட்டுமே தன்னை கட்டியணைக்கும்படி வாழலாம். எல்லோரையும் தைரியமாக நேர்கொண்டு பார்க்கலாம். யாரும் அவளை போகவிட்டு பின்னால் பேச மாட்டார்கள். மொத்தத்தில் அவளுடன் இனி அவளுக்கானது மட்டுமே என்கிற புல்லரிக்கும் ஏற்பட்டது. 

சட்டென , கார் வழக்கமாக செல்லும் வழியின்றி வேறு பாதைக்கு போகத்தொடங்கியது.

“அப்போ நாம வீட்டுக்கு போகலையா…?”

“இல்ல…”

”இப்ப எங்க போறோம்?”

”ஏன் உனக்கு தெரியாதா.. லிம்-கிட்ட வட்டிக்கு காசு கேட்டிருந்தேன், இன்னுக்கு வர சொல்லியிருந்தான்…”

    சகாயம் கைபேசியில் ’மிஸ்டர் லிம் 3’ என்ற எண்ணுக்கு அழைத்தார். செல்வி தன் குழந்தையை நினைத்துக்கொண்டாள். மீண்டும் புன்னகைத்தாள் ஆனால் அவளின் கண்கள் மட்டும் கலங்கிக்கொண்டிருந்தன…


- தயாஜி -

பிப்ரவரி 02, 2016

புன்னகை மட்டுமே போதுமானது



     இன்று விடுமுறை வேண்டுமென்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். பதில் ஏதும் வரவில்லை. பதட்டம் கொஞ்சம் இருந்தது. ஆனாலும் நம்பிக்கையின் பொருட்டு வெளியில் செல்வதற்கு தயாரானாள். கணவனும் சொன்னது போலவே மிகச்சரியாக பத்து நிமிடத்தில் கிளம்பிவிட்டான். பிசினஸ் மேன்களுக்கே உரிய மிடுக்குடன் வாசனையை கலந்திருந்தான். இன்று குழந்தையை பார்க்க செல்லவேண்டும் என்று ஏற்கனவே சொல்லிவிட்டாள்தான் ஆனாலும் மீண்டும் ஒரு முறை நினைவூட்டுவது அவள் வழக்கமாக செய்தவது. ’ஒன் காலில்’ இருக்கிறாள் (one call என்று வாசிக்கவும் அல்லது ஒரு காலிலா என்று உங்களுக்கும் இப்போதே சிரிப்பு வரலாம்.) எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம். சிரித்த முகமாக இருப்பவர்களுக்கும் எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க விரும்புகின்றவர்களுக்கும் இப்படியான முதலாளிகள் கிடைப்பது அவ்வளவு சிரமமில்லை.

    தாராளமாக விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், இன்று வேலை செய்ய போதுமான ஆட்கள் இருக்கிறார்கள் என்ற குறுஞ்செய்தியை படித்தவுடந்தான் ஏதோ திருப்தி வந்தது. இல்லாவிட்டாலும் உதவிக்கு சக பணியாளர்கள் இருக்கிறார்கள்தான். முதலாளியை விட கஸ்டமர்களின் கோவத்துக்குத்தான் பதில் கொடுக்க சிரமப்படுவார்கள். எப்போதும் தன்னால் மற்றவர்களுக்கு சிரமமேதும் வந்திடக்கூடாதென்ற மனம்தான் அவளை தனித்துக் காட்டும்.
செல்வி சகாயம் குடும்பத்தினர். கோலாலும்பூரில் இருக்கும் கோண்டோவில் வசிக்கிறார்கள். உள்ளே நுழைவற்கே காரணம் முதல் அடையாள அட்டை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உள்ளே நுழைவதற்கான மின்சார தடுப்பை திறப்பார்கள். அல்லது உள்ளே இருந்து ஒரு ஆள் வெளியில் வந்து பேசி அவர்களை கூட்டிச்செல்ல வேண்டும். இருபதாவது மாடியில் இருந்து இதுவரை ஒரு மாடி மேலேயும் சென்றதில்லை. ஒரு மாடி கீழேயும் சென்றதில்லை. மின்தூக்கியில் வேறேந்த பட்டன்களையும் அவள் தட்டியதில்லை. அவ்வபோது வேறு மாடிகளில் மின்தூக்கி நின்று கதவதை திறந்தாலும், எட்டிப்பார்ப்பதுமில்லை. குணிந்த தலை கொண்டவளை அந்த கோண்டோவில் யாருக்கும் சரியாக அடையாளம் தெரியாது.

    இப்படித்தான் ஒரு முறை அவளை சந்திக்க வந்தவரை அவளே அழைத்து செல்ல கீழறிங்கினாள். பாதுகாவலர்கள் அவளை அடையாளம் தெரியவில்லையென ஏதேதோ கேள்விகளைக் கேட்டு குடைந்துவிட்டார்கள். நல்லவேளையாக, கணவன் வீட்டிற்கு வரும் நேரம் என்ற படியால், சில நிமிடங்கள் காத்திருந்து மூவரும் ஒன்றாக வீட்டுக்கு வந்தார்கள். அப்போதுதான் உடன் வந்திருந்த சீனர் இந்த குடியிருப்பு பகுதியை குறித்து தனக்கு தெரிந்ததை சொன்னார். வழக்கமாக இங்கிருக்கும் சிலரை பார்க்க வரும்போது, இப்படி காக்க வைக்க மாட்டார்களாம் அவர்களே காரில் கூட்டிவந்து பின்னர் கூட்டிப்போவார்களாம். அதிலும் இந்த மின் தூக்கியில் நான்காம் எண் இல்லாத்தற்கு சொல்லப்படும் வழக்கமான கதையை சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு அதில் இருக்கும் நம்பிக்கையை இதுவரை யாராலும் உடைக்க முடியவில்லையாம்.

    செல்வியும் சகாயமும் குழந்தைக்கு கொடுப்பதற்கான விளையாட்டு சாமான்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு அவுட்டர்மேன் பொம்மைகள் குறித்து ஒன்றுமே தெரிவதில்லை. அட ஆமாம், இங்கே அவுட்டர்மேன்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உச்சக்கட்ட சண்டையில் அவுட்டர்மேன் கையில் காட்டும் சிலுவை மாதிரி குறிதான் பிரச்சனை என்று சிலர் சொல்லிகொண்டாலும், வன்முறை அதிகம் இருப்பது குழந்தைகளுக்கு தக்கதல்ல என்று செய்திகளை அரசாங்க ஊடகங்கள் சொல்லிக்கோண்டே இருந்தன. அவுட்டர்மேன்கள் செய்த வன்முறைகளைவிட ஊடகங்கள் காட்டிய படங்களும் பரப்பிய செய்திகளும்தான் குழந்தைகளுக்கு அச்சமூட்டுபவையாக இருந்தன.

   காற்றால் நிரம்பியிருந்த தேவதை பொம்மையை செல்வியும், படுத்துக் கொண்டு துப்பாக்கியில் சுடும் இராணுவ வீரன் பொம்மையை சகாயமும் எடுத்து வந்தார்கள். பின்னர் அவர்களுக்குள்ளாகவே பேசி இரண்டில் குறைந்த விலை கொண்டதை வாங்கிக்கொண்டார்கள்.

    இப்போதைக்கான பரபரப்பு சூழலில் குழந்தை, குழந்தைகள் காப்பகத்தில் இருப்பதுதான் எத்தனை பாதுகாப்பானது. தேவைப்படும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றாலும், மாதத்தில் மூன்று முதல் நான்கு நாட்களில் மட்டுமே கட்டாய விடுமுறை எடுக்க வாய்ப்பு கொண்ட சுமதிக்காக சகாயம் தங்கள் குழந்தையை பார்க்கும் நாளில் மட்டும் விடுமுறை என்று வீட்டில் இருப்பார். மற்ற நாளில் வேலை என்று வீட்டில் இருப்பார். நல்லவேளையாக சொந்த தொழில் செய்துவருவதால் சகாயம் எடுக்கும் ஒரு நாள் விடுமுறைகளுக்கு பாதிப்பு வரவில்லை. இன்னும் எத்தனை தொழில்களை தொடங்கலாம், அத்தனைகளையும் அவரும் அவரது கணினியும் கொண்டிருக்கின்றன, சில தொழில்கள் எப்படி நஷ்டமாகின்றன என்பதற்கு பெரிய பட்டியலே வைத்திருக்கிறார் சகாயம். நல்லவேளையாக அவர் தொடங்கிய ஆறாவதோ ஏழாவதோ தொழிலில் கொஞ்சம் வருமானம் இப்போது வருகிறது.

    காரில் செல்லும் போது பாடல்களை கேட்கும் வழக்கத்தை கொஞ்ச நாள் நிறுத்தியிருந்தார். தனக்கு விடுமுறை சொந்த கதையாக இருந்தாலும் மனைவிக்கு அவ்வாறில்லை. ஓவர் டைம் வேலையால் மட்டுமே கோலாலும்பூர் போன்ற பெருநகரங்களில் வாழ முடியும். இல்லையெனில் இருக்கவே இருக்கிறது பெருநகரங்களின் மறுமுனை பெருநரகம். எப்போதும் இரைச்சல், தூங்கவிடாத மோட்டார் உறுமல்கள், பூனைகளைவிட பெரிய எலிகள், பள்ளிச்சீருடைகளில் பலான காட்சிகள். ஏனப்பா இதுவெல்லாம் பெருநகரங்களில் இல்லையா என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இருக்கிறதுதான் சில மாற்றங்களுடன். இரைச்சல் சத்தம் அவரவர் வீட்டு கதவுக்கு பின்னாலேயே நின்றுவிடுகிறது.மற்றவர்க்கு அது குறித்த அக்கறை இல்லை. மோட்டார்களை எங்கோ வைத்து எங்கோ இருக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டும். பூனைகளைவிட பெரிய எலிகளை பொறித்து தின்று செறிக்க பழகிவிட்டார்கள். பிறகு பள்ளிச்சீருடைகளின் பலான காட்சிகள் கண்ட இடங்களில் நடப்பதில்லை, பெரும்பாலும் அவரவர் சொந்த வீட்டு கட்டிலிலோ பள்ளிக்கு என சொல்லி வாங்கும் கட்டணத்திலே ஹோட்டல்களில் நடந்துவிடுகிறது. கிடைக்கும் நேரமெல்லாம் காரில் பயணிக்கும் போதுதான் என்றானபோது அதை செல்வியுடனான உரையாடல்களால் நிரப்பிக் கொள்வார் சகாயம். தன் வாழ்வில் எத்தனை சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதனையும் கலைவதற்கு செல்வி இருப்பதுதான் எத்தனை பாக்கியம். அவ்வபோது சகாயம் அவளுக்கு நன்றி சொல்ல மறப்பதே இல்லை. இதுவரை அவளுக்காக பெரிதாக ஒன்றும் செய்யவில்லையென்றாலும் அவள் மீதான அன்பு எப்போதும் ஏற்றமடைந்துக் கொண்டேதான் இருந்தது.

    குழந்தைகள் எல்லாம் ஆளுக்கொரு விளையாட்டு பொருள்களுடன் இருந்தார்கள். கீர்த்தரோஷன் மட்டும் கையுடைந்த யாரோ எப்போது விட்டுப்போன பொம்மையுடன் இருந்தான். கீர்த்தா… கீர்த்து கண்ணா, கீர்த்தூ…ரோஷன்… அய்யா ரோஷனு.. என்று ஆளுக்கு ஆள் அழைத்தார்கள். எதற்கும் அசைந்துக் கொடுக்கவில்லை குழந்தை. இதனை கவனித்த சீனக்கிழவி, ’கீத்தாலோசா’ என அழைக்கவும் சட்டென பிரக்ஞ்சை கொண்ட குழந்தை வாசலை பார்க்க அப்பா அம்மா வந்திருப்பது குதூகலப்படுத்தியது. கையுடைந்த பொம்மையை பத்திரமாக படுக்க வைத்து, தன்னுடைய போர்வையை அதற்கு கொடுத்து தூங்கச்சொல்லியப்பின் பெற்றோரிடம் வந்தான்.

    ஆசை தீர கொஞ்சியவர்கள் அவனை தூங்கவைத்து, அவன் தூங்கவைத்த கையுடந்த பொம்மையை எடுத்துவிட்டு தேவதை பொம்மையை படுக்க வைத்தார்கள். வாழ்வில் ஏதாவது பிடிப்பு இருக்கவேண்டியதின் அவசியத்தை குழந்தைகள் காட்டிவிடுகிறார்கள். வாழ்வின் குறிப்பிட்ட எல்லைவரை செல்ல முடிந்த தம்பதியர் குழந்தையென்ற சாவி கொண்டு அடுத்தடுத்த இன்ப கதவுகளை திறந்துச் செல்கிறார்கள். இப்போதெல்லாம் பெற்றுகொள்ளும் குழந்தைகளைவிட பெற்று கொல்லும் குழந்தைகள் எண்ணிக்கைதான் அதிகம். காண்டம் வாங்க வக்கில்லாவனுங்க எல்லாம் எதுக்கு……. சரி வேணாம் விடுங்க.

    புறப்படும் முன் சீனக்கிழவி அவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள். தான் காருக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிழவியிடம் கையசைத்துவிட்டு புறப்பட்டார் சகாயம். குழந்தை குறித்து சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிய பின், செல்வியின் உடல் நலம் குறித்து விசாரித்தாள். அவ்வபோது மருத்துவ பரிசோதனை செய்யும்படியும் கேட்டுக்கொண்ட சீனக்கிழவி, இன்னும் எத்தனை மாதம் குழந்தை இந்த காப்பகத்தில் இருக்கும் என விசாரித்தாள். அதற்காகவே காத்திருப்பது போல எஞ்சியிருக்கும் இரண்டு மாதங்களை சொன்னாள். ” எல்லாம் சரியாகிவிடும் நான் உன் குழந்தையை பார்த்துக்கறேன். நீயும் வந்துவந்து போ. ஒன்னும் பிரச்சனை இல்லை. இனிமேலாவது உன் புருசனை ஒழுங்கா இருக்க சொல்லு. அப்பறம், அவ்வளோதானே இல்ல.. அடுத்து வேற யெங்கயும் பார்த்துட்டாரா…” என்ற சீனக்கிழவி தன் கைபேசிக்கு அழைப்பு வந்ததும், அடுத்தமுறை பேசலாம் என செய்கை காட்டி திரும்பினாள். காரின் ஹார்ன் சத்தம் கேட்கும்வரை அப்படியே நின்றிருந்தாள் செல்வி.

கார் வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.

  ”ஆமா, அந்த கெழவிக்கு என்னாவாம்? எப்ப பார்த்தாலும் உன் கிட்டதான் வந்து பேசுது… ஏன் நான் இருக்கும் போது வந்து பேசாதாமா..?” என்றவன் பதிலை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காமல், ”ஆமா..ஆமா.. ரெண்டு பொம்பளைங்க.. என்னாத்த பேச போறிங்க.. எங்களை மாதிரி நாட்டு நடப்பையும் பிஸிசஸ் பத்தியுமா பேச போறிங்க..?, வீட்டுல தண்ணி இல்ல, காட்டுல பன்னி இல்லைன்னு எதையாவது ’கோசோங்கா’ பேசுவிங்க”

    கைபேசி ஒலித்தது, “சீக்கிரம் எடுத்து பாரு, சீனன் வேலைக்கு வர சொல்லிட போறான், அந்த வழியாதான் போவோம், இறக்கி விட்டுடறேன். இல்லைன்னா திரும்ப வரனும்.. எதுக்கு ரெண்டு வேல..”

   ‘Besok jgn dtg… polis masuk.. kita punya hal cukup..good luck’(நாளை வரவேண்டாம். போலிஸ். நம்ம கணக்கை இதோடு முடித்துக்கலாம்) என்று இருந்தது.படித்ததும் மெல்லிய புன்னகையில் விபரத்தை சொன்னாள். ஏதோ கணக்கிட்டவர். கைபேசியை எடுத்தார். எம் வரிசையில் ஒவ்வொரு பெயராக கீழக்கிறான். ’MR.லிம் 4’ என்ற எண்ணுக்கு அழைத்தார்.

    சீனத்தில் பேசினான். சகாயத்துக்கு கோவமாக வந்தது.
“பாரேன், இந்த எழவெடுத்தவனுங்கள…. ரெட் லைட் ஏரியாவ மூடிட்டானுங்களாம். இனி பிரிக்பீட்ல இருக்க முடியாதாம்… சீல் வச்சிட்டானுங்களாம்… நாசமா போறவனுங்க…”

செல்வி புன்னகைத்தாள். கார் வழக்கமாக செல்லும் வழியின்றி வேறு பாதைக்கு போகத்தொடங்கியது.

“அப்போ நாம வீட்டுக்கு போகலையா…?”

“இல்ல…”

”எங்க போறோம்?”

”ஏன் உனக்கு தெரியாதா..?”

சகாயம் கைபேசியில் ’மிஸ்டர் லிம் 3’ என்ற எண்ணுக்கு அழைத்தார். செல்வி மீண்டும் புன்னகைத்தாள் கண்கள் மட்டும் கலங்கின.


- தயாஜி -

நன்றி மலைகள்.காம் பிப்ரவரி 2016
http://malaigal.com/?p=7840

டிசம்பர் 27, 2015

சிறுகதை - ‘சாய் ராம் ஓம் சாய் ராம்....’


“வாங்க  வாங்க சாய்ராம் எப்படி இருக்குங்க சாய்ராம்.."

“எனகென்ன சாய்ராம். அதான் நம்ம  சாய்ராம் இருக்காறே.... குறை வைப்பாரா நமக்கு..?”

“ஆமாம் சாய்ராம். அதை சொல்லுங்க சாய்ராம். ரொம்ப நாளா இங்க உங்களை பாக்க முடியலையே சாய்ராம்...”

“ஆமா சாய்ராம். எங்க வீட்டு பக்கத்துலயே ஒரு செண்டர் ஆரம்பிச்சியிருக்காங்க... கொஞ்ச நாளா அங்க போய்கிட்டு இருந்தேன்... ”

“என்ன சாய்ராம் இப்படி சொல்லிட்டிங்க.... வீட்டுப்பக்கத்துல புது செண்டர் வந்ததுக்காகவா இங்க வருவது இல்ல... ரொம்ப கஷ்டமா இருக்கு சாய்ராம்....”

“என்ன சாய்ராம் இப்படி சொல்றிங்க...”

“பின்ன என்ன சாய்ராம்...  இங்கதானே நீங்க முதல்முதலா வர ஆரம்பிச்சிங்க... இந்த சாய்ராமைதானே உங்களுக்கு தெரியும்... இங்க வந்த பிறகுதானே உங்களுக்கு நல்ல காரியங்கள் எல்லாம் நடந்ததா சொன்னிங்க.... இப்போ பாருங்க சாய்ராம்... வீட்டு பக்கத்துல ஒரு செண்டர் தொறந்துட்டாங்கன்னு சொல்லி இதை மறந்துட்டிங்க...”

“ஐயோ அப்படியில்ல சாய்ராம்.... வேலை முடிஞ்சி வீட்டுக்கு போற வழிதானேன்னு போவேன் அவ்வளவுதான் மத்தபடி ஒன்னும் இல்ல சாய்ராம்... என்ன இருந்தாலும் நம்ம செண்டரை மறக்க முடியுமா சொல்லுங்க.... கூடவே இருந்து குழி பறிச்சவங்கள நம்ம செண்டருக்கு வந்த பிறகுதானே கண்டுபிடிடிச்சேன்... ”

“தெரிஞ்சா சரி சாய்ராம்... ஆமா உங்க கூட்டாளிங்களாம் வரலையா...?”

“என்ன சாய்ராம்... அதுங்க எல்லாம் மனுஷனே இல்லைன்னு நினைக்கிறேன்... அதுங்களை போய் கூட்டாளிங்கன்னு சொல்றிங்களே சாய்ராம்....”

“ச்சே...ச்சே..... அப்படி இல்ல... நாமெல்லாம் செண்டரில் இருக்கிறவங்க இப்படி யாரையும் வெறுக்கவோ பேசவோ கூடாது... சாய்ராம் சாய்ராம்..”

“அட போங்க சாய்ராம், நீங்க மட்டும் என்னவாம், இங்க செண்டருல இருந்து இங்கயே வேலை செஞ்சு உங்க  பொண்ணை காதலிச்சான்னு அடிச்சிதானே போலீஸ்ல புடிச்சிக் கொடுத்திங்க.... என்ன சாய்ராம்.... ”

“மகளை மட்டுமா சாய்ராம் காதலிச்சான் கொஞ்சம் உட்டிருந்தா இந்த செண்டரையே அவன் கைக்கு மாத்தி என்னை தெருவுல விட்டிருப்பான்.... பாவி பய... ச்சே சாய்ராம் சாய்ராம்....” 

“அதேதான் இங்கயும்... சாய்ராம்... என்கூடவே இருந்து, என்னைப்பத்தியே மத்தவங்கக்கிட்ட போட்டுக்கொடுத்தவனுங்கதானே இவங்களும்.... மனுஷ ஜென்மங்களா இதுங்க.... கேவலம் கேவலம்... ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம்...”

“சரி சரி சாய்ராம்...  இங்க வந்தும் அதை பேசனுமா.. சொல்லுங்க.. ஆமா சாய்ராம் அவனுங்களை சும்மாவா விட்டிங்க....?”

“அதெப்படி சாய்ராம் சும்மா விடமுடியும்.... என்னென்ன செய்யனுமோ  எல்லாத்தையும் செஞ்சிட்டு முடிச்சிட்டேன்....இன்னும் கொஞ்ச நாளுதான் .... பாருங்க சாய்ராம்.. அவனும் அவனோட குடும்பமும் நடுத்தெருவுல வந்து நிக்க போகுது..... ”

“ஹ்ஹ்ஹ்ஹ...... எல்லாம் அதுவா நடக்கும் சாய்ராம்.... ஆமா சாய்ராம் அந்த புது செண்டருல காசு ஏதும் வசுல் செய்யறாங்களா...?”

“ஆமா சாய்ராம்... அதான் அங்க போகறத நிறுத்திட்டேன்...”

“நெனைச்சேன் சாய்ராம்... இதுக்குத்தான் செண்டரை ஆரம்பிச்சிருப்பானுங்க... முதல்ல பக்தியா இருக்கற மாதிரி காட்டிக்குவானுங்க... அப்பறம் போகப்போக உண்டியலை வைப்பாங்க..... அப்பறம் படம் சிலைகள்னு விக்க ஆரம்பிப்பாங்க... ஒரு குரூப்ப உருவாக்கி மாச சந்தாவையும் வாங்க ஆரம்பிச்சிடுவாங்க.... ஏமாந்த ஜனங்களும்.... சாய்ராம் சாய்ராம்னு  கேட்கறப்பல்லாம்.... காசை தண்ணியா கொடுக்கறாங்க... என்ன சொல்றது சாய்ராம்...”

“ஆமா ஆமா.... அததுக்கு ஒரு கூட்டம் ... காசுன்னு... இதுக்கெல்லாம் எப்போ விடிவு காலம் வருமோ தெரியல.... சாய்ராம் சாய்ராம்...”

“ம்.. சொல்ல மறந்துட்டேன் சாய்ராம்.... நீங்க ரெண்டு மாச சந்தாவை இன்னமும் கொடுக்கல......”

“மறப்பனா சாய்ராம்... சொல்லுங்க... மூனு மாச சந்தா பணத்தையும் ஒரேடியா கட்டிட்டுத்தானே போவேன்.... சாய்ராம் ”

“சாய்ராம்.... சாய்ராம்..... அப்பறம் சாய்ராம், புதுசா  பளிங்கு சிலை வந்திருக்கு.... வீட்டில் வச்சா ரொம்ப நல்லது.... வேணுமா... நிறைய பேரு ஓர்டர் செஞ்சு எடுத்துட்டு போய்ட்டாங்க...... உங்க அதிஷ்டம் ஒரே ஒரு சிலை மட்டும் தங்கிருச்சி.... எடுத்துக்கிறிங்கலா.... ”

“ஓ.... சந்தோஷம் சந்தோஷம்....  அந்த சிலை எங்கிருக்கு.... சாய்ராம்”
“தோ அங்கதான் சாய்ராம்...”

“அடடே சாய்ராம்..... சில கண் சிமிட்டுற மாதிரி இருக்கே!!!..... ”

“அட என்ன சாய்ராம் நீங்களும் சின்ன புள்ளைங்க மாதிரி.... காலைல இருந்து அந்த சின்ன பசங்கதான் அந்த  சிலை கண்சிமிட்டுது.... அந்த சிலை சிரிக்குது.... தலையாட்டுதுன்னு சொல்லிகிட்டி இருக்காங்கன்னா நீங்களுமா... அப்படியே சிலை செஞ்சிட்டாலும்.... செண்டரை நடத்தர நமக்கே ஒன்னும் தெரியலை.........  ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ ”

“அதை சொல்லுங்க சாய்ராம்.... ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்..”

டிசம்பர் 20, 2015

சிறுகதை - சீனக்கிழவன்



சீனக்கிழவன்


   என்னவோ போல் இருந்தது. இன்னும் புதிய வீட்டுக்கு வந்து முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை. இப்படியொரு அபசகுனம் மனைவியை பதட்டமடைய செய்தது. எனக்கு அந்த சீனக்கிழவனை பார்க்கும் வரையில் பெரிதாக ஒன்றும் தோனவில்லை. கூன் விழுந்த முதுகுடன் குடையை கைப்பிடிபோல பாவித்து, தூக்கிப் பிடித்திருக்கும் சாக்குப்பையுடன் மொட்டை தலையோடு முட்டை கண்,  ஏதோ வளர்ந்திருக்கும் ஜந்து போலவே அந்த சீனக்கிழவன் தெரிந்தான்.

   காரில் இருந்து வாங்கிய சாமான்களோடு இறங்கி கொண்டிருந்தோம். எங்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த சீனக்கிழவன். பழைய வீடாக இருந்திருந்தால் இன்னேரம் கதையே வேறு மாதிரி இருந்திருக்கும். இந்த அடுக்குமாடி வீட்டுக்கும் என் பழைய குணம் தெரிய கூடாது எனதால் பெரிதாக கிழவனை கண்டுக்கொள்ளாமல் இருந்தேன்.

    சாமான்களுடன் மின்தூக்கிக்கு காத்திருந்தோம். அதுவரை தூரத்தில் தெரிந்த கிழவன் நொண்டி நொண்டி எங்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். அவன் வருவதற்குள்ளாக மின்தூக்கி வரவெண்டும் என மனைவி பிரார்த்திக்க நடந்தது. சில சமயம் மட்டும் மனைவிகளின் பிரார்த்தனை பலிப்பது கணவன்களுக்கு எத்தனை பாதுகாப்பு என நினைத்து கிழவனுக்கு முன் மின்தூக்கியில் ஏறினோம்.

   வழக்கம் போல ஞாயிறு காலையில் மார்கெட் போக வேண்டியிருந்தது. ஆண்களின் ஞாயிற்றுக்கிழமை விடிவதும் தெரிவதில்லை. முடிவதும் தெரிவதில்லை. அதனால்தான் என்னமோ சனிக்கிழமை இரவு கொண்டாடப்படுகிறது.

   காருக்கு போய்க்கொண்டிருந்த போதுதான் ஏதோ முனகல் சத்தம் கேட்டது. திரும்பினேன். அந்த சீனக்கிழவன் தான். என்னை பார்த்து செய்கை செய்துக் கொண்டிருந்தான். வெறும் சீனக்கிழவன் இல்லை. அவன் ஊமை சீனக்கிழவன் எனவும் தெரிந்தது

   இப்படியானவர்கள் பேசினாலே எனக்கு ஒவ்வாது. அதிலும் செய்கை காட்டுகின்றார் என்றால் சொல்லவே வேண்டாம். எனக்கும் பரிவு பச்சாதாபம் எல்லாம் இருக்கிறது. உதவி கேட்ட பலருக்கு லைக் பட்டன் அழுத்தியிருக்கிறேன்.

   அருகில் வருவது பிடிக்காததால் சட்டென  காரில் நுழைந்து பூட்டிக்கொண்டேன். காரை கிளப்புவதற்கு முன்னமே கார் கண்ணாடியை தட்டிக்கொண்டிருந்தான் அந்த சீனக்கிழவன். வெறுப்புடன் பாதி கண்ணாடியை மட்டும் இறக்கி என்னவென்று தலையாட்டினேன். தன்னுடைய சாக்குப்பையை காட்டி. ஏழு என காட்டி எங்கள் வீடு இருக்கும் மாடியைக் காட்டினான்.

ஒன்னும் புரியவில்லை.

   மீண்டும் தலையாட்டி  முகத்தை சுழித்தேன். மீண்டும் தன்னுடைய சாக்கு பையை காட்டி, ஏழு விரல்களை காட்டி எங்களை வீட்டை சுட்டிக்காட்டி தலையை வேகமாக ஆட்டினான். இந்த மாதிரி பைத்தியங்கள் பேசினாலே புரியாது. செய்கைக்கு மட்டுமா மதிப்பு இருக்கப்போகிறது. காரில் இருந்த ரொட்டியை அந்த சீனக்கிழவனுக்கு கொடுத்துவிட்டு நானும் செய்கையில் என்ன சொன்னேன் எனவே தெரியாமல் எதையோ சொன்னேன். புரிந்தது போல கிழவன் தலையாட்டி காருக்கு வழிவிட்டான். கண்ணாடியை ஏற்றினேன். காரை கிளப்பினேன்.

   தினமும் சினக்கிழவனை பார்க்கும் துயரச்சம்பவங்கள் நடந்துக் கொண்டே இருந்த. அது எனக்குள்ளே ஒரு வித அசூயையை ஏற்படுத்துவதை உணர்ந்தேன். யாரிடமாவது கிழவனை குறித்து கேட்டு தொலைக்கலாம் என்றால், மிகச்சரியாக மறந்து தொலைக்கிறேன்.

   கார் பழுது. நண்பரின் காரில் வீட்டு பாதுகாவலர் கூடாரத்தில் இறங்கிக்கொண்டேன். அலுவலக பணிக்கான மடிக்கணினியை பத்திரமாக தோளில் மாட்டிக்கொண்டு உள்ளே மடிக்கணினி இருப்பதை உறுதி செய்துக் கொண்டேன். எதிர்பாராத மழை சட்டென கொட்டியது. வேறு வழி இன்றி இறங்கிய இடத்திலேயே நின்றுவிட்டேன். நேரம் ஆகவும் மழை அதிகமானது. என்னுடன் மழைக்கு ஒதுங்குபவர்களும் கூடிக்கொண்டே போனார்கள். இன்னும் ஒருவர் கூட்டத்தில் நுழைந்தாலும் வரிசையின் முதலில் நிற்கும் நான் மழையில் நனையவேண்டும். மூச்சை பிடித்துக் கொண்டு மின் தூக்கி வரை ஓடினாலும் ஜட்டி வரை நனைந்துவிடும் அபாயம் இருப்பது நன்றாகவே தெரிந்ததிருந்தது.

   வழுக்கி வெளியே வரவும் குடைக்குள்ளே நுழையவும் சரியாக இருந்தது. சீனக்கிழவன் குடைக்கு வெளியே நனைந்துக் கொண்டே செய்கையில் என்னிடம் எதையோ சொல்லிக்கொண்டிருந்தான். பின் குடையை என் கையில் கொடுத்துவிட்டு. சாக்குப்பையை இறுக்க பிடித்துக் கொண்டு அவன் பாட்டுக்கு நடந்தான். கையில் குடை கிடைத்த திருப்தியில் மின்தூக்கிக்கு போனேன்.

   மின்தூக்கி திறந்தது. கையில் இருந்த குடையை என்ன செய்வது என்று யோசித்தேன். சீன கிழவனையும் காணவில்லை. பக்கத்தில் இருக்கும் குப்பை தொட்டியில் அந்த குடையை சொருகி விட்டு மின்தூக்கிக்குள்ளே போனேன்.

   வீட்டு வாசலில் காலனியை கழட்டிக்கொண்டிருந்தேன். பக்கத்தில் அந்த குடை. அதே குடைதான். மழையில் இருந்து நனையாமல் இருக்க சீனக்கிழவன் கொடுத்த குடை. உடனே மனைவியை அழைத்தேன். குடையை குறித்து கேட்டேன். வீடு திரும்பும்போது கடினமான மழையாம். காருக்குள்ளேயே அமர்ந்திருக்கிறாள். கார் கண்ணாடியை தட்டி அந்த சீனக்கிழவன் தான் குடையைக் கொடுத்து சென்றிருக்கிறார்.

   எனக்கு ஒரே குழப்பம். எது முதலில் நடந்திருக்கும். எது இப்போது நடந்திருக்கும் என யோசித்துக் கொண்டே மீண்டும் கீழே இறங்கினேன். குப்பைத்தொட்டியில் சொருகிய குடை இல்லை. அதற்கு பதில் சீனக்கிழவனின் சாக்கு பை ஈரத்துடன் இருந்தது. அதனை எந்த அருவருப்பும் இன்றி வீட்டுக்கு கொண்டு வந்தேன்

  இன்றுவரை திறக்கப்படாத அந்த சாக்குப்பையை வைத்துகொண்டு காத்திருக்கிறோம். மீண்டும் அந்த சீனக்கிழவர் வருவாரென்ற எதிர்ப்பார்ப்புடன்.

-தயாஜி-

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்