பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 31, 2025

- சொல்லாததே சொற்களின் அர்த்தம் -



என் கவிதைகள்

உங்களை

ஆறுதல் படுத்துவதாகச் சொல்லி

எழுதியெழுதி

என்னை நானே

ஆறுதல் படுத்திக்கொள்கிறேன்


எந்தவித 

குழப்பமும் இல்லாமல்

கவிதைகள் வந்து நிற்கின்றன

நான் மட்டும்

வார்த்தைகளின் இடைவெளியில்

சிக்கி

வழியறியாது தவிக்கின்றேன்


தண்ணீரில் பிறந்து

தண்ணீரிலே இறக்கும்

உப்பென 

கண்ணீரில் கரைந்து

கண்ணீரிலே பிறக்க

கவிதைகள்

உண்டு இங்கு


கவிதைகளின் இடைவெளிக்கு

கடவுளாலும் 

ஒரே பொருளை

வைக்க முடியாது


அது கண்ணுக்கு கண்

மாறி

கண்டறியும் பொருளுக்கு

பெயர் வைத்துக்கொள்கிறது


ஒரே பெயரில்

பல முகங்கள்

கவிதைகளுக்கு உண்டு


சொற்களில் மட்டுமல்ல

சொற்களுக்கிடையே சிதறும்

இடைவெளியிலும்

ஆயிரம் அர்த்தங்கள்

குறைந்தபாடில்லை...



மார்ச் 29, 2025

- மனிதரற்ற வீடுகள் -


தன் வாழும்நாள்  முழுக்க 

சொந்தமாய் 

வீடொன்று இல்லாத ஒருவனின்

இறுதி ஊர்வலம் அது


வாடகை கட்டியே வாழ்க்கையைத்

தொலைத்தவன் அவன்

வாடகை கட்டாமல் வசைகளைச்

சுமந்தவன் அவன்


வீடே இல்லாமல்

சாலையோரத்தில் 

சாய்ந்திருந்தவன் அவன்

இரவு நேரம் மட்டும் 

கூரையுள்ள பேருந்து நிலையத்தில்

அவனைப் பார்க்கலாம்


பனியோ மழையோ புயலோ பூகம்பமோ

அவன் எங்கிருப்பான் என

அவனுக்கும் தெரியாது


இருந்தால்

மறுநாள் அவனைப் பார்க்கலாம்


இன்னமும் வாடகை வீடுதானா

என்ற கேள்விகளால்

அவமானப்பட்டவன் அவன்

வீடீல்லாத ஆண்களை நம்பி

எப்படி பெண் கொடுப்பதென

எல்லோரும் கேட்பதால்

பிரம்மச்சாரியானவன் அவன்


வீடே இல்லாததால்

வீட்டில் வளர்க்க எதையுமே

வாங்கவில்லை

அவனுக்கு அவன்தான் செல்லப்பிராணி

அவனுக்கு அவனே

கொல்லும் பிராணி


வீடற்றவனின் பிணத்தை

எடுத்துச்செல்லும்

இரண்டாவது வரிசை வீடுகள்

முழுக்க

காலியாக 

புதர்கள் மண்டி

கண்ணாடிகள் உடைந்து

சுவர்களெல்லாம் பாசி படர்ந்து

வாசல் கதவுகள் இத்துப்போய்க்

கிடக்கின்றன


இறுதி ஊர்வல பயணி

இதன் பிறகும்

நிம்மாதியாய் விடைபெறுவானா


வாழும் போது மட்டுமல்ல

வாழ்ந்து முடித்த பின்னும்

பதில் கிடைக்காத 

கேள்விகளுக்காகத்தான்

மீண்டும் மீண்டும் பிறந்து

மீண்டும் மீண்டும் சாகிறோம்


வீடில்லாத மனிதர்களையும்

மனிதர்கள் இல்லாத வீடுகளையும்

நாணயத்தில்

இருபக்கங்களாக செதுக்கிச் 

சென்றவன் எவன்


மனிதரற்ற வீடுகளின்

மரண ஓலங்கள்

உங்கள் காதுகளில் விழுவதில்லையா..


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மார்ச் 27, 2025

- வண்ணமிழக்கும் பகல்கள் -

 

அது ஒரு 

வித்தியாசமான கனவு

என்னைச் சுற்றிலும் 

எத்தனையோ பேர்

வருகிறார்கள் போகிறார்கள்

நன்கு கொழுத்த தேகத்தில்

அவர்கள் பக்கத்தில் நான்

துரும்பிலும் துரும்பென

சுருங்கி கிடக்கிறேன்


என் முன்

நீண்டதொரு சாப்பாட்டு மேசை

முழுக்க முழுக்க

உணவுகளால் மூழ்கடிக்கப்பட்டிருந்தது


உலகின் ஒட்டுமொத்த 

உணவு வெள்ளத்தின் முன்னே

நானும் நீந்தி போக

வேண்டும்


கடலில் விழுந்தவன்

ஆக கடைசியாய்க் 

கைகளை மட்டுமே 

தூக்கி  காட்ட முடிந்தவன் போல

ஏதோ ஒரு பெயர் தெரியாத

தின்னத்தகுந்த தாவர இலைகளின் 

தலைகள் மேஜையெங்கும்

ஆங்காங்கு துடித்தபடி தெரிகின்றன


இத்தனை இருந்தும்

எனக்கு பசியில்லை


வண்ணமடித்த 

இரவுகளில் மட்டுமல்ல

வண்ணமிழந்த 

என் பகல்களிலும்

கைக்கு கிடைத்த மிச்சமீதிகளைப் பார்க்கையில்

இப்போதுமே பசிப்பதில்லை 


கனவில் கூட 

காலத்தோடு வயிறை 

நிறைக்க தெரியாத 

ஏமாளிகளில் நானுமே ஒருவன் 


மார்ச் 26, 2025

- நிலமென்னும் நல்லூழ் -


ஒரு நிலத்தில்

பெரும்பான்மை மனிதர்கள் 

எதற்காக கொண்டாடப்படுகிறார்களோ

எவர்களை பந்தாடுகிறார்களோ

எப்படி ஏளனப்படுத்துகிறார்களோ


இன்னொரு நிலத்தில் 

சிறும்பான்மை மனிதர்கள் அதற்காகவே திண்டாடப்படுகிறார்கள்

அடுத்தடுத்து பந்தாடப்படுகிறார்கள்

அப்படியே ஏளனப்படுகிறார்கள்


நிலமென்பது 

எதையும் புதைப்பதற்கு  மட்டுமல்ல 

எவரும் கைக்கோர்த்து வாழ்வதற்கும் 

என்பதனை  

இன்னும் எத்தனை இலக்கியங்களில் சொன்னால் கேட்போம்


வீடும் வாசலும் 

வேறென்றபோதும்

நீயும் நானும் 

வாழும் தேசமென்பது ஒன்றுதானே


ஆதிக்கங்களை விரட்டிவிட்டு

இன்று

அரசியலில் சிக்கி கொண்டோம்


இது உன் தேசமும் அல்ல

இது என் தேசமும் அல்ல

உன்னை என்னையும் நம்பி

உயிர் விட்ட 

நம் முன்னோர்களின்  நேசம்


அது 

ஒருபோதும் பொய்க்காதிருக்கட்டும்....

மார்ச் 25, 2025

- கனவுத்தின்னிகள் -


இன்றொருநாள்

ஓய்வெடுக்கலாம் என

உறங்க நினைத்தால்

உள்ளுக்குள்ளிருந்து கனவொன்று

எக்கி குதித்து

வெளியே வருகிறது


சிறுவயதின் கனவது

ரொம்பவும் பிடித்த கனவது


எப்போதெல்லாம் பரீட்சையில்

லட்சியம்

எதிர்கால ஆசை என 

எழுதச் சொல்லி கேட்கிறார்களோ

அப்போதெல்லாம் 

அச்சு அசலாய்க்

கொஞ்சமும் பிசகாமல்

ஒரே மாதிரி எழுதி எழுதி

புள்ளிகளுக்கு பதிலாய்த்

திட்டுகளை வாங்கியிருக்கிறேன்


இதெல்லாம் ஒரு கட்டுரையா 

என

கிழித்தும் எறியப்பட்டேன்


ஆசைகளெல்லாம் நிராசையாய்

மாறிவிட்ட 

இன்றைய நாட்களில்

எதிர்காலம் என்பது 

இன்றிரவுக்கான  சாப்பாடு 

என சுருங்கிவிட்ட வாழ்க்கையில்


கனவாவது கண்ணீராவது

எல்லாமே காய்ந்து போவதற்குத்தான்


குழந்தைகளிடம்  ஒருபோதும் எதிர்கால ஆசைகளைக்

கேட்டு 

ஏளனமாய்ச் சிரிக்காதீர்கள்


உங்கள் பல் பட்டு

பாழாய்ப் போன கனவுகளின்

நகல்களை நாங்கள்

தினம் தினம் பார்த்து 

பயப்படுகின்றோம்


சிறுவயதின்  கனவை

எங்கள் வாழ்நாளின் சாபமாக 

மாற்றிவிடாதீர்கள்

மார்ச் 24, 2025

- சதிரங்க வினையாட்டு -

 

இதுநம்நாடு

இது நம் நாடு

இ து நம் நாடு

இ து ந ம் நாடு

இ து ந ம் நா டு

இ   து   ந   ம் நா   டு

இ +@(&*:]@?#&#-@(@(℅©©=¢[>  டு

மார்ச் 23, 2025

- கையும் வாயும் -

 

பசிக்கிறதா என 

கேட்காமல்

பசிக்கிறது எனவும்

சொல்லாமல்


தட்டு நிறைய

எதையாவது எடுத்து 

வாயில் தினிக்கும் கைகளுக்கும்


வாயில் தினித்த 

எல்லாவற்றையும் தின்று தீர்க்கும் வாய்களுக்கும்


இருக்கும் உறவை 

புரிந்து கொள்ள 

தாயாகவும் சேயாகவும்

இருக்க வேண்டுமென்பதில்லை


கொடுக்கும் கையாகவோ 

கேட்கமுடியாத வாயாகவோ கூட

இருக்கலாம்....

மார்ச் 22, 2025

- நெஞ்சின் நஞ்சுகள் -

 

பழைய சட்டையில்

எப்போதும் போல

உன் நினைவுகள்

அங்கொன்றும் இங்கொன்றும்

நூல்களென பிரிந்து 

கிடக்கின்றன


என்னையும் உன்னையும் போலவே x2


எப்படி திணித்தாலும்

உள்நுழையாத 

நூல்  பஞ்சுகளாய்


எப்படி தள்ளினாலும்

வெளியேறாமல் நிற்கும்

நினைவுகளின் நஞ்சுகளை

என்ன செய்யலாம்

எப்படி சமாளிக்கலாம்


ஆலகால 

நஞ்சென்ற போதும்

அது

சென்ற தூரம் போதுமென

தொண்டையில் பதுக்கி

ஊதாவில் வண்ணம் பூசி 

மறைத்து நின்று

போஸ்டர்களில் சிரிக்கலாம்


இது 

காதல்கால நஞ்சன்றோ

தொண்டை முதல் கெண்டை வரை

நஞ்சுப்பூ

பூத்து குலுங்கியும் 

வீழ்ந்து சிதறியும்

உள்ளத்தை வதைக்கிறது

உணர்வுகளால் 

உடலையும் சிதைக்கிறது


பார்த்து பழகிய

பழைய சட்டைக்கே என்னை

அடையாளம் தெரியவில்லை


காதல்தான் இல்லை

கொஞ்சம் கூடவா கருணையும் இல்லாமல் போனது


அச்சட்டை இன்று

அளவில் பெரிதாகி என்னை

அப்படியே விழுங்கி விழுங்கி

துப்புகிறது


வெறெந்த ஆடையிலும்

மனம் மட்டும் ஏனோ

நிர்வாணமாய்த் தவிக்கிறது


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மார்ச் 21, 2025

- நிபந்தனையற்ற தண்டனை -

 


எல்லா கடவுள்களையும்

வரிசையாய் நிறுத்தி

யாருக்கு பலமதிகம் என்று 

சோதிக்க


எந்தப் பக்தனுக்கு

அந்த இடத்தில் 

அதிகாரம் அதிகமாய் இருக்கிறதோ

அந்தக் கடவுளே 

தன்னை பலசாலி என 

பிரகடனம் 

செய்து கொள்கின்றன

செய்தும் கொல்கின்றன


ஆகவேதான்

மதத்தை பழித்தால் 

இங்கு தண்டனை


அது யார் மதம் 

என்பதுதான் 

முதல் நிபந்தனை


மார்ச் 20, 2025

- தலை தப்பிய கடவுள் -

 

தற்கொலை செய்துகொண்டவளின்

கடிதம் ஒன்று

கைக்கு கிடைத்தது


ரொம்பவும் நிதானமாக

அவளதை

எழுதியிருக்கக்கூடும்


ரோஸ் காகிதத்தில்

ஒவ்வொரு மூலையிலும்

ரோஜா பூத்திருக்குமே

அந்தக் காகிதத்தை

எடுத்திருந்தாள்


அதையும் அவள் 

பிள்ளையார் சுழியில்தான் 

தொடங்கியிருந்தாள்


தன்னைக் 

காப்பாற்றாத கடவுளுக்கு

எந்த கூந்தலுக்காக!

வணக்கம் வைத்து 

தொலைக்கிறாள் என 

கோவம்கோவமாக வந்தது


என்னென்ன நினைத்தாலோ

அதையெல்லாம்

எதையெல்லாம் மறைத்தாலோ

அதையெல்லாம்

எப்போதெல்லாம் அழுதாலோ

அதையெல்லாம்

வரிசை கட்டி எழுதியிருந்தாள்


கொலைகாரியாகாமல்

தற்கொலையாளி ஆவது 

மேலென நினைத்தவள்

எதையோ குடித்திருந்து

உயிரை முடித்திருந்தாள்


கடவுள் மீது ஒட்டியிருந்த 

கொஞ்சநஞ்ச கடைசி பக்தியால் என்னவோ

அவளது நான்கு வயது குழந்தையை

அப்படியே விட்டுவிட்டுதான் போயிருக்கிறாள்


அதுவரையாவது  

தன் நம்பிக்கையைக்

காப்பாற்றி கொண்ட கடவுளுக்கு

இன்னொரு பிள்ளையார் சுழியையும் போட்டுத்தொலைக்கலாம்...

மார்ச் 19, 2025

- உஸ்... சத்தம் போடு -


எனக்கு என்னிடம்

மிகவும் பிடித்தது

என் குரல்

ஆனால்

அது முக்கியமல்ல


எப்போதிருந்து பிடிக்கிறது

என் சொல்கிறேன்

அதுதான் முக்கியம்


ஒருநாள்

பேசியதற்காக

நாக்கில் சூடு வைத்தார்கள்

என்றாவது

பேசுவேன் என்பதற்காக

கழுத்தை நெரித்தார்கள்

இனியெப்போதும்

பேசக்கூடாது என்பதற்காக

வாயில் அமிலத்தை ஊற்றினார்கள்


அப்போதுதான் 

புத்தி வந்ததெனக்கு

இந்த உலகில் நான் 

முதலாவதாகவும் முழுமையாகவும்

நேசித்து 

பாதுகாத்து

பரப்ப வேண்டியது

என் குரலைத்தான்


அதுதான் என் அடையாளம்

நான் சொல்லப்போவதுதான்

என் வரலாறு


எந்த உயரத்திற்கும்

அது கேட்க வேண்டும்

எவர் உயரத்தையும் 

அது அசைக்க வேண்டும்


எப்போதெல்லாம்

அதிகாரம் ஒன்றை அழிக்க 

நினைக்கிறதோ

அப்போதெல்லாம்

அரிதாரம் பூசி ஆக்ரோஷம் 

கொள்ள வேண்டும்

யுத்தங்களை முறியடிக்க

சத்தங்களைத் தயார் செய்வோம்


வானிடிக்க பேசுவோம்

வானமே இடிந்தாலும் 

பாடுவோம்...



மார்ச் 18, 2025

- பசித்திருக்கும் பசி -


சர்க்கஸ் கோமாளியை

சிங்கம் கடித்து குதறுகிறது

மேடை முழுக்க 

இரத்தம் தெறிக்கிறது


காணக்கிடைக்காத 

முப்பரிணாம 

ஓவியக் காட்சி போல

சட்டகத்தில் இருந்து 

பல்வேறு நிலையிலான 

சிவப்பு வண்ணங்கள் வழிந்து 

பார்வையாளர்களின்

நாற்காலி கால்களை நனைக்க


அரங்கமே கைத்தட்டி

ஆர்ப்பறிக்கிறது


கோமாளியென்றால்

குறும்புகள் செய்து சிரிக்க வைப்பான்

என

காலம்காலமாகப் பார்த்து 

பழகிய பொதுஜனத்திடம்

வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்


அவர்களுக்கு 

சிங்கத்தின் பசியும்

ஒன்றுதான்

கோமாளியின் பசியும்

ஒன்றுதான்


இரண்டுமே அவர்களைச்

சிரிக்க வைக்கும் யுக்திகள்

அவ்வளவுதான்...

மார்ச் 17, 2025

- கிணறு தாண்டிய வசைகள் -


'போடா நாயே...!'


கையடக்கத்திரையைத் 

தட்டித்தடவி வார்த்தைகளைச் 

சேர்க்கும் போதே

மனமும் சேர்ந்து அதிர்கிறது

துணுக்குறுகிறது


ஏறக்குறைய இதுவும் கூட

பாதி கிணறு தாண்டிய 

வசை சொல்தான்


அந்தரத்தில் தன் சுயம்

தெரியாது

மிதந்து மிதந்து 

தப்பித்துக்கொள்கிறது


அம்மா சொன்னால்

ஒருமாதிரி கேட்கும்

அப்பா சொன்னால் 

ஒருமாதிரி கேட்கும்

காதலி சொன்னால்

ஒரு மாதிரி கேட்கும்

அண்ணன் சொன்னால்

அக்கா சொன்னால்

தம்பி சொன்னால்

தங்கை சொன்னால்

நண்பன் சொன்னால்

நண்பி சொன்னால்

ஆசிரியர் சொன்னால்

அரசியல்வாதி சொன்னால்

என


ஆளுக்கு ஆள் சொல்லத்தான்

செய்கிறார்கள்


ஆனால் கோவம் மட்டும்

இன்னொரு சாமியை

கூம்பிடுபவன் சொன்னால்


சொன்னால் என்ன சொன்னால்


சொல்வான் என்று தெரிந்தாலோ


அவன்

சொல்ல முயன்றாலே

பொத்துக்கொண்டு வருகிறது

மொத்த கோவமும்

அதுவொரு வரலாற்று 

பெருமிதம்


முதலில் அவனை

வெட்டி 

வீசிவிட்டுதான்

உங்களோடு அளவலாவிக் கொண்டிருக்கிறேன்


இப்போது இந்த வார்த்தை

முழு கிணறையும் தாண்டிவிட்டது

நிச்சயமாய்ச் சொல்கிறேன் 

இது 100 சதவிதம் 

வசைதான்


மார்ச் 16, 2025

- காயப்பெட்டகம் -


எல்லாம் முடிந்துவிட்டது

என்பதாக

வட்சப்பில் செய்தி அனுப்பி

ப்ளாக் செய்துவிட்டவளிடம்

ஒரேயொரு கேள்வி 

கேட்க வேண்டியுள்ளது


அவள் சொன்ன

'எல்லாம் முடிந்ததில்'

எதையெல்லாம் 

சேர்த்து வைத்திருக்கிறாள்

எதையெல்லாம்

சேராமல் வைத்திருக்கிறாள்

எதையெல்லாம் 

விட்டு வைத்திருக்கிறாள்

எதையெல்லாம் 

விடாமல் வைத்திருக்கிறாள்

என்பதைதான்


எல்லாம் என்பது

எங்கள் இருவருக்குமே

வெவ்வேறு என இன்றுதான்

புரிந்தது


எனக்கு எல்லாம் என்பதும்

எல்லாமுமாக இருந்ததும்

அவள் மட்டும்தான்

அவளுக்கு எல்லாம் என்பது

இனி

என்னைத்தவிர்த்தது


ஒரே இடத்தில் நின்றாலும்

என் பக்கத்தில் பூ இருக்கிறது

அவள் பக்கத்தில் தலை இருக்கிறது

இடையில் சிக்கிய உடலோ

சிதைந்துகொண்டே போகிறது


அதனால்தான் கேட்க வேண்டும்

அவள் சொன்ன

'எல்லாம் முடிந்ததில்'

எதையெல்லாம் சேர்த்திருப்பாள்

மார்ச் 15, 2025

- பாழாய்ப்போன பழக்கம் -


பெரிதாக அலட்டிக்கொள்ள

அவசியம் உண்டா

சொல்லுங்கள்


எப்படியும் நம்மை

ஏமாற்றத்தான் போகிறார்கள்


அல்லது

நாமே சென்று

ஏமாறத்தான் போகிறோம்


வேறென்ன செய்ய

நமக்கு பழகிவிட்டது


இந்த ஏமாற்றங்கள் எல்லாம்

எங்கே 

எப்போது 

தொடங்கியது 

என நமக்குதான் தெரியவில்லை

அவர்களுக்கு

மிகத்துள்ளியமாகத் தெரிந்திருக்கிறது


நம்மை காட்டிலும்

அதிகமாய் நம்மை கவனிப்பவர்கள்

அவர்கள்தான்


இவ்வளவு நெருக்கமாக கவனித்து

பின் தொடர்ந்த

நம்மையே அவர்களால்

ஏமாற்ற முடியுமெனில்


நம்மை போல ஏமாளி

யாராவது இருப்பார்களா


இப்போது கூட பாருங்களேன்

அவர்களை திட்டுவதற்கு பதில்

நம்மையே நாம் திட்டி கொள்கிறோம்

பாழக்கதோஷத்தில்


எமாற்றியவர்கள் எவ்வளவு

தூரம் செல்கிறார்களோ

செல்லட்டும்

என விட்டுவிடுவதுதானே

நம் இயல்பு


எப்படியும் திரும்ப வருவார்கள்

ஏமாற்றுவார்கள்

நம் மீது பழி சுமத்தி

அவர்கள் அழுவார்கள்


நாம் ஏமாறுவோம்

நாம்தான் தவறோ என

கண் கலங்குவோம்

அவர்களுக்கு ஆறுதல் சொல்லியே 

அலுத்துப்போவோம்

அப்போது கூட

நமக்கெல்லாம் புத்திவராது


பழகிவிட்டது நமக்கு

பாழாய்ப்போக.....


#தயாஜி 

மார்ச் 14, 2025

- தீ பற்றும் கைகள் -



ஏதோ ஒன்றை

இறுக்கமாக பிடிக்கத்தான் 

வேண்டுமா?


இல்லையென்றால் 

விழுந்துவிடுவோமா 

அல்லது

தள்ளிவிடுவார்களா


தள்ளப்படுவதைவிட

தானே விழுவதில்

பெரிய பாதகமில்லை


ஆனாலும் பாதுகாப்பு அவசியம்


யாரின் கைகளை

நாம் பிடித்துக்கொண்டால்

தப்பிக்கலாம்


எவனொருவன் நம்

வீழ்ச்சியில் சிரிப்பானோ

நாம் விழுந்தால் ரசிப்பானோ

நம் இயலாமையை ருசிப்பானோ

அவன் கைகளைத்தான்

முதலில் பிடிக்கவேண்டும்

ரொம்பவும் இறுக்கமாக 

பிடிக்க வேண்டும்


அந்தக் கைகள் 

இனியெப்போதும் அசையாதபடிக்கு

அழுத்தி பிடிக்க வேண்டும்


நாம் நினைத்தாலன்றி

அந்தக் கைகள்

சிறிதேனும் அசையக்கூடாது...



மார்ச் 13, 2025

- தாலாட்டு -

 

பூக்களை நேசிப்பவர்களுக்கு

பூந்தொட்டிகள் 

தேவையில்லை


மீன்களை நேசிப்பவர்களுக்கு

மீன் தொட்டிகள்

தேவையில்லை


பறவைகளை நேசிப்பவர்களுக்கு

கூண்டுகள்

தேவையில்லை


காதல் கவிதைகளுக்கு

காதல் தேவையில்லை என்பது போல


கவிதை எழுதுவதற்கு

கவிதையே தேவையில்லை என்பது போலவும்


ஒன்றைச் 

சொந்தம் கொண்டாட

வடிவமும் சிறையும் பூட்டும் அநாவசியம்


சில நிமிடங்களில் அதனுடன்

லயித்திருந்தாலே போதும்

அதுதான் அவசியம்

அதுதான் வசியம்


வாழ்நாளுக்கான நினைவுகளை

அது தந்துவிட்டு செல்லும்

அந்தத் தாலாட்டும் 

நாம்

வாழும் காலம் மட்டும்

பாடும்....



மார்ச் 12, 2025

- எந்த நாவில் ஊறுகிறது இந்தக் காதல் -


 


"சீ" 
என்று சொல்லிவிட்டதால்
உடைந்த காதலும் உண்டு
உயிரையே எடுத்தாலும்
உடையாத காதலும் உண்டு

காதலில் ஒரு தம்பதி
கவியமாகிறார்கள்
காதலில் மறு தம்பதி
காணாமலே போகிறார்கள்

இனிப்பாக இருப்பதே
சிலருக்கு கசப்பாய் அமைகிறது
கசப்பாய் இருப்பதே
சிலருக்கு இனிப்பாய் இனிக்கிறது

சிலருக்கோ 
ருசியும் தெரிவதில்லை
அதன் பசியும் புரிவதில்லை

காதல்தான் முக்தியும்
கழுத்தை அறுக்கும் கத்தியும்

ஒரே சமயத்தில்
இருவேறு நடன அசைவுகளைக்
காட்டும் மாய தேவதைதான்
இந்தக் காதல் போலும்
ஒருவனை அழ வைப்பது எதுவோ
ஒருவனை எழ வைப்பதும் அதுவே

இறைவனைக் காட்டிலும் அதிகம்
வழிபாடு வாங்குவதும்
நம்மிடம் தினம் தினம்
வசைபாடு வாங்குவதும்
காதலில் தலையெழுத்து

யாரால் அதை திருத்தி
எழுதிட முடியும்

இப்படி 
தன் பெயர் அடிபடும் 
கதைகளையெல்லாம் என்றாவது
அறிந்திருக்குமா அந்தக்
காதல்

சொல்லமுடியாது
இந்தக் கவிதையைக் கூட
யாரோ ஒருவர் 
நாவில் அமர்ந்து
வாசித்துக்கொண்டிருக்கும்

அது
சாமியின் நாவா
சாத்தானின் நாவா
எனதான் நமக்கு தெரியவில்லை
தெரியாமல் இருப்பதுதானே
காதலின் கலை...






மார்ச் 11, 2025

- தொடாவானம் -

 

உண்மையைச் சொல்லுங்கள் 

மறைக்காமல் சொல்லுங்கள்


அன்பின் பெயரால்

கூர்வாளை மார்பில் ஏந்தி

உடல் 

உடைந்தூற்றும் உதிரத்தில் 

பூக்களை மலர்விப்பவர்கள் 

நீங்கள்தானே


வலிக்கவில்லை வலிக்கவில்லையென

சிரித்துக்கொண்டே செல்பவர்கள் நீங்கள்தானே


முழுக்க முட்டாளாக்கி 

உங்களை உதாசினம் செய்பவர்களுக்காகவும்

நீங்கள் பிரார்த்திப்பீர்கள்தானே


அவர்கள் அறியாமல் செய்கிறார்கள்

என அழுகிறீர்களே


ஒரே ஒரு கேள்வியைக் கேட்கவா

உங்கள் உதிரம் குடித்து

வளர்ந்த செடிகளில் 

இன்று

பூத்துக்குலுங்கும் பூக்களுக்கு

உங்களைக் கொஞ்சமாவது நினைவிருக்கிறதா?


இனியெப்போதும் 

தொட்டுவிடவே முடியாத ஒன்றுக்கு

தொடுவானம் என பெயரிட்டவனிடம்தான்

எவ்வளவு கருணை

எவ்வளவு அன்பு

அவனைத்தானே இவர்கள்

முதலில் கொன்றிருப்பார்கள்


உன்னையும் என்னையுமா

விட்டு வைக்கப்போகிறார்கள்....


சகாவே

செத்துபிழைத்தான் என 

இவர்களிடம் பெயர் வாங்குவதற்காக

நாம் செத்துப்போக முடியுமா....

மார்ச் 10, 2025

- மறைந்தாடும் மௌனிகள் -


அந்த மௌனத்தை

அப்படியே விட்டுவிடலாம்தானே


என் சகாவே

ஏன் தடுமாறுகிறாய்


மீண்டும் மீண்டும்

காயப்படும் இதயத்தின்

வலியை

இன்னும் எத்தனை நாட்கள்தான்

பொறுப்பாய்


நெருப்பாய் விழும்

சொற்களை

வெறுமனே தாங்கிகொள்ள

உன் இதயம் என்ன

கற்களா 


அவர்கள்

மௌனம் காக்கிறார்கள் என்றால்

உன்னை இன்னமுமே

வதைக்க 

வழிமுறைகளை யோசிக்கிறார்கள்

என புரிந்து கொள்


இங்கு

எல்லா மௌனங்களுமே மௌனங்கள் அல்ல


அதில் சில

நயவஞ்சக ஓநாய்களின் நாக்குகள்

பசித்திருக்கும் கழுகுகள்

காத்திருக்கும் கட்டுவிரியன்கள்


தானாய்ச் சென்று 

தலை கொடுக்காதே


மௌனத்தை அப்படியே

விட்டுவிடுவதுதான்

உனக்கும் நல்லது

உன்னையே நம்பி துடிக்கும்

இதயத்திற்கும் 

ரொம்பவே நல்லது


மார்ச் 09, 2025

- சமாதி புறா -

 


தொலைக்காட்சி விவாதமேடை

காதலால் சாதியை எதிர்த்து

ஓடிப்போய்

எங்கோ ஓர் மூலையில்

நிம்மதியாய்

வாழ்ந்திருந்த தம்பதிகள்

முகம் காட்டினார்கள்


கடந்த காலத்தின்

கசப்புகளையும் 

எதிர்காலத்தின் நம்பிக்கையையும்

கண்கலங்க பேசினார்கள்


இழந்துவிட்ட

அம்மாவின் பாசம்

அப்பாவின் அக்கறை

அண்ணன் தம்பிகளின் அரவணைப்பு

அக்கா தங்கைகளின் சிரிப்பு

உறவுகளின் உரையாடல்

ஊர் மக்களின் உற்சாகம்

என 

இழந்துவிட்டவை எவ்வளவோ


வீட்டிலிருந்து பார்த்த

பலரும் அழுதார்கள்


நிகழ்ச்சி முடிவில்

சாதி தோற்று

காதலே வென்றது என

நடத்துனரும் கொண்டாடினார்


சில நாட்களில்

பங்கேற்ற மூன்று தம்பதிகளையும்

அடையாளம் தெரியாதவர்கள்

வெட்டி கொன்றார்கள்


மேற்கொண்ட இரு 

தம்பதிகள் தற்கொலை

செய்து கொண்டார்கள்


அடுத்த வாரம்

அதே விவாத மேடையில்

'ஏன் கொல்கிறோம்' என்பவர்களை

பேச அழைத்திருந்தார்கள்


விவாத மேடைகளின்

விளைவுகள் அவ்வளவுதானா



மார்ச் 08, 2025

- அரசியல்வியாதி -

 


எழுத எதுவும்

இல்லையென்றால்

இருக்கவே இருக்கிறது

கிறுக்கல்


பகிர எதுவும்

இல்லையென்றால்

இருக்கவே இருக்கிறது

புரளி


பாட எதுவும்

இல்லையென்றால்

இருக்கவே இருக்கிறது

ஒப்பாரி


பேச எதுவும்

இல்லையென்றால்

இருக்கவே இருக்கிறது

வசை


சிரிக்க எதுவும்

இல்லையென்றால்

இருக்கவே இருக்கிறது

பகடி


தப்பிக்க எதுவும்

இல்லையென்றால்

இருக்கவே இருக்கிறது

கழிவிரக்கம்


மில்லியன் பண ஊழலில் 

அரசியல்வாதி சிக்கிவிட்டால்

இருக்கவே இருக்கிறது

மதச்சண்டையும் இனச்சண்டையும்


மார்ச் 07, 2025

- பி(ர/ரே)மை -

 


சகாவே

தற்கொலைக்கும் 

முக்தியடைவதற்கும்

என்ன வித்தியாசம்


எங்கே போகிறோம் 

எதற்கு போகிறோம்

ஏன் போகிறோம்

என்கிற

தெளிவின் ஆழம்தான் 

இல்லையா


என்னை மறைத்துக்கொள்ள

எனக்கிருப்பது 

என் கவிதைகள்

மட்டுமே


என்னை கண்டுபிடிக்க

உனக்கிருப்பதும்

என் கவிதைகள் 

மட்டுமே


யாராவதென்னை

கண்டறியட்டும் என்றே

காலம் முழுக்க

மறைந்தாடுகிறேன்


நான் விலகி ஓடவில்லை

நமக்கிருக்கும் இடைவெளியின்

மீது வெளிச்சம் பாய்ச்சுகிறேன்


அது எவ்வளவு பிரகாசமோ

அவ்வளவு வலி

அது எவ்வளவு மங்கலோ

அவ்வளவும் வழி


ஒரே வரியில் ஆயிரம் அர்த்தங்கள்

வைப்பவன் ஞானி என்றால்

ஆயிரம் வரிகளை ஒரே அர்த்தத்தில் வைப்பவன் தீர்க்கதரிசி என்றாகக்கடவது


இதிலொரு பிரமை இருக்கிறது

இதிலேதான் பிரேமையும் இருக்கிறது



மார்ச் 06, 2025

- ஒரே கவிதை -

 

நெடுநாட்களாக 

மனதை இம்சித்திருந்த

கவிதையை 

இன்று எப்படியோ 

எழுதி முடித்து விட்டேன்


இன்றுதான்

எதோ கொஞ்சம்

பெருமூச்சு விடமுடிகிறது


இனியாவது

நிம்மதியாய் உறங்குவாயா

என கேட்கிறாள்


இல்லை

இனி ஒருபோதும்

என்னால் நிம்மதியாகவே

இருக்க முடியாது


நாம் 

அடுத்த கவிதைக்கு

செல்லவேண்டாமா


ஒரு கவிதை என்பதை

ஒரே கவிதை என்றா

நினைக்கிறாய்


மார்ச் 05, 2025

- சொற்களே வாதை, சொற்களே போதை, சொற்களே பாதை -

 


ஒருவனை உடைக்க

ஒரு சொல்

போதுமானது

ஒருவனை வதைக்க

ஒரு சொல்

போதுமானது

ஒருவனை சிதைக்க 

ஒரு சொல்

போதுமானது

ஒருவனை வஞ்சிக்க

ஒரு சொல்

போதுமானது

ஒருவனை தாழ்த்த

ஒரு சொல் 

போதுமானது

ஒருவனை வீழ்த்த

ஒரு சொல்

போதுமானது



ஆனால்,

ஒருவன் தன் தேடலை

தெரிய

ஒருவன் தன் மீட்சியை 

அறிய

ஒருவன் தன் அறத்தை 

விளங்க

ஒருவன் தன் அவமானத்தை

துடைக்க


ஆயிரமாயிரம் பக்கங்கள் தேவைப்படுகின்றன


அதற்கென்றேதான் இங்கு

இன்னும் இன்னும்

கவிதைகள்

எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன


கண்ணீரைத் துடைக்க

வழி சொல்பவன்

அந்தக் கண்ணீரின் வலியின் சென்றிருக்கத்தான் வேண்டும்


ஆதாம் ஏவாள்

காலத்திலிருந்தே இங்கு

சொற்களே வாதை 

சொற்களே போதை

சொற்களே பாதை 

மார்ச் 04, 2025

- உனக்கு வேறு கவிதை -

 


அன்பே

உனக்கொரு காதல் கவிதை

அனுப்பியிருந்தேன் வாசித்தாயா?


என் மனதிலிருந்த வார்த்தைகளை

எந்த பாசாங்குமின்றி

எந்த ஒளிவும் மறைவும் இன்றி

வார்த்தைகளில் வடித்திருக்கிறேன்


நாம் இருவருக்குமான

காதல் காவியத்தை

உனக்கே உனக்கென

செதுக்கியிருக்கிறேன்


இப்படியொரு கவிதையை

இன்னொருவன் எழுதவே முடியாதபடிக்கு எழுதியிருக்கிறேன்


வாசித்தாயா

இல்லையென்றால்

ரொம்பவும் பாவம் நீ


இனியெப்போதும் அதை 

வாசிக்காதே

இனி அது உன்னுடையதல்ல


என் அன்பே 

நீ நம் காதல் 

சாம்ராஜ்ஜியத்தின் பேரரசிக்கான வாழ்வை தவறவிட்டுவிட்டாய்


சரி போகட்டும் விடு


உனக்கென  

இன்னொரு கவிதையை 

எழுதி அனுப்புகிறேன்

அதையாவது நீ

தவறாமல் வாசி


முன்பு அனுப்பிய கவிதை

இன்னொருத்திக்கு பிடித்துவிட்டதாம்

இனி அவளுக்குத்தான் 

அக்கவிதையும் அதன் சாம்ராஜ்ஜியமும்


உனக்கு வேறு கவிதை....

மார்ச் 03, 2025

- மழையடிக்கும் குடை -

 

மழைவிடும் வரை

குடை என்பது கொடை

பெருங்கொடை


மழைவிட்ட பின்

அக்குடையே நமக்கு தடை 

பெருந்தடை


இங்கு தடையாகும் ஏதொன்றும்

நமக்கொருநாளில் 

பெருங்கொடையென இருந்ததை


அறிந்து கொள்

மனமே


அறிவில் கொள் 

தினமே....


மார்ச் 02, 2025

- எளிய மனிதனின் ஆயுதம் -


தனக்கென்ற 
மேளத்தை
தானே அடித்து
தன் தாண்டி
இசையைக் கொடுத்து
வயிறு நிறைத்தவனின்

மேளத்தை பிடுங்கிவிட்டீர்கள்
சாட்டையில் முட்களை சொருகிவிட்டீர்கள்
அடையாளத்தை அழித்துவிட்டீர்கள்
உங்கள் பாவங்களுக்கு
ஆயிரம் காரணம் இருக்கலாம்

மேளமடிப்பதற்கு பதில்
தன் மேல் தோலை
அடித்து அடித்து
சதைகளின் பிளவில்
குருதிகளின் கொடையில்
நிறுத்தாமலவன் 
இசையைக் கொடுப்பதற்கு
காரணம்

அவனின் பசித்த வயிறு
மட்டுமல்ல
என்றென்றும் நிலைத்திருக்கும்
அவனின் 
பசித்திருக்கும் பெருங்கனவு

எளிய மனிதனின்
முதலும் கடைசியுமான
ஆயுதம் எப்போதும்
அவனேதான்.....

மார்ச் 01, 2025

- தொப்பை முளைத்த தலைகள் -



அப்போதெல்லாம்

எப்போதாவது 

அந்தத் தாத்தா

எங்கள் வீட்டு லயத்தில் 

சைக்கிளோடு வருவார்


ஒருபோதும் உட்கார்ந்து 

வரமாட்டார்

நீண்ட நடைப்பயண 

தோழன் போல்

சைக்கிள் தோளில்

கையைப் போட்டுகொண்டு

நடந்துதான் வருவார்


இன்னொரு கையோ

சைக்கிள் சீட்டில்

அமர்ந்திருக்கும் வண்ணமிட்ட

பெட்டியைத் தாங்கியிருக்கும்


கையடக்க பூஜை மணியில்

கைப்பிடிப்பு வலிக்காதிருக்க

கட்டியிருக்கும்

நைந்த துணியை

கழற்றி வீச மனமின்றி

ஒன்றின் மேல் ஒன்றென 

சுற்றிச்சுற்றி

உலகிலேயே 

தலையில் தொப்பை முளைத்த 

உருவத்தை அதில்தான் 

பார்க்க முடிந்தது


அதைவிட அதிசயம்

அவரால் எப்படியோ

அந்த மணியை 

நொடிக்கொரு முறை

அடிக்க முடிந்தது


வீட்டின் எந்த மூலையில்

இருந்தாலும்

அவர் வந்துவிட்டால்

குழந்தைகளின் கூச்சல்  

"தோ பாரு வந்துட்டாரு"

என எல்லோர்

காதையும் குடையும்


நடந்தே தேய்ந்த

ஜப்பான் சிலிப்பரில்

அழுக்கு படிந்த

காற்சட்டையில்

மாதம் ஒருமுறை துவைக்கும்

மேல்சட்டையில்

பொக்கை வாய் சிரிப்பில்

நடுங்கும் கைகளில்


அன்று 

அவர் விற்ற 

ஐஸ் கிரீமின் ருசி

இன்று

எவன் விற்கும்

ஐஸ் கிரீமிலும் இல்லை.....


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்