பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

புத்தகவாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகவாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜனவரி 25, 2023

'மராம்பு' - புத்தகவாசிப்பு 4 (2023)


‘மராம்பு – புத்தகவாசிப்பு 4 (2023)

தலைப்பு - மராம்பு
எழுத்து - நசீமா ரசாக்
வகை - குறுநாவல்
வெளியீடு - யாவரும் பதிப்பகம்
புத்தகம் வாங்க - +60164734794 புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை (மலேசியா)


மராம்பு என்பது பாலைவனத்தில் பூக்கும் ஒருவித பூ. அதுவே தலைப்பாகிவிட்டது. ஆனால் இந்தப் பூக்கள் வேறொரு நிலத்திலிருந்து பிழைக்க வழியற்று அல்லது கூடுதல் வருமானத்திற்கு துபாய் வந்து சேரும் மனிதர்களைக் குறிப்பிடுவதாய்ப் பார்க்கிறேன்.  அப்பூக்கள் மலர்கின்றவனா மிதிபட்டு மடிகின்றனவா என்பது யாரும் முன் யூகிக்காத ரகசியம்.

 
சொல்லப்போனால் துபாய் என்று சொன்னாலே அடுத்த வார்த்தையாக பாலைவனம் என வந்து விழுந்துவிடும். ஆமாம், ‘துபாய் பாலைவனம்’ என சேர்த்துச் சொல்லிப் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். இப்போது யோசிக்கையில் துபாய் என்ற வார்த்தைக்கும் பாலைவனம் என்ற வார்த்தைக்கும் எவ்வளவு பெரிய  இடைவெளியைக் காலமும் உழைப்பும் அம்மண்ணின்  வழங்கியிருக்கிறது எனப் புலப்படுகிறது.

‘மராம்பு’ எழுத்தாளர் நசீமா ரசாக் எழுதியிருக்கும் இரண்டாவது நாவல்; குறுநாவல். தற்போது துபாயில் வசிக்கிறார் என்று அறிகிறேன்.

 திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவது காலா காலமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சொந்த மண்ணைவிட்டு பிழைப்பிற்காகவும் உயிர் பிழைத்திருப்பதற்காகவும் ஓடி வாழ்கின்றவர்களிலும் ஓடியே போனவர்களிலும் நமக்கு ஒரு சிலரையாவது தெரிந்திருக்கும். நாமே கூட அப்படியானவர்களாக இருக்கலாம். நானும் கெடா மாநிலத்தில் பிறந்து வளர்ந்து இன்று தலைநகர் கோலாலும்பூரில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இரண்டும் மலேசியாவிற்குள்தான் என்றாலும் சொந்த மண்ணும் அம்மண்ணின் மக்களுக்கும் ஈடாக எதையுமே என்னால் இங்கு உணர முடியவில்லை. சொந்த நாட்டில் ஐந்து ஆறு பயண இடைவெளியே என்றாலும் என்னால் ஒரு நெருக்கத்தை உணரமுடியாத போது நாடு விட்டு நாடு பிழைப்பிற்காகக் கிளம்பு போகிறவர்களை நினைத்தால் மனம் ரொம்பவும் சங்கடப்படுகிறது.

எங்கள் நாட்டு உணவகங்களிலும் பிற கடைகளிலும் வேலை செய்யும் வெளிநாட்டுக்காரர்களை யாரும் திட்டும் போதும் அடிக்கும் போதும் இப்படித்தானே எங்கள் நாட்டிலிருந்து வெளியூர் வேலைக்குச் சென்ற ஏதோ ஒரு இளைஞனுக்கும் நடந்து கொண்டிருக்கும் என நினைத்துக் கொள்வதுண்டு.

 வெளிநாட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் நாயகி வள்ளி. ஏமாற்றப்படுகின்றாள். தனக்கு ரொம்பவும் அந்நியமான நிலத்தில் அவள், இனி என்ன செய்வாள் எப்படி சொந்த ஊருக்குத் திரும்புவாளா என்பதுதான் இக்குறுநாவலின் மையக்கரு.

 இதே கதைக்கருவில் நமக்கு பல கதைகள் பத்திரிகை செய்திகள் சினிமா படங்கள் அறிமுகமாகியிருக்கின்றன. அதிலிருந்து எப்படி ‘மராம்பு’ தனித்திருக்கிறது என்பதில்தான் எழுத்தாளரின் உழைப்பும் வெற்றியும் இருக்கிறது.

 புத்தகத்தைக் கையில் எடுத்ததும் அதன் பின்னொட்டைக் குறிப்புகள் வழியில் முன்னமே எனக்குத் தெரிந்த இதன் அறிமுகத்தை வைத்து துபாய்க்கு வேலைக்குச் சென்று அங்குச் சிக்கல் மாட்டிக்கொள்ளும் பெண்களின் கதை எனப் புரிந்து கொண்டேன். வழக்கமாக ஆண்களையே இது போன்ற கதைகளுக்கு மையப்பாத்திரமாக வைப்பார்கள். இக்குறுங்கதைகள் பெண்கள் எதிர்நோக்கிய; அதுவும் துபாய்க்குச் சென்ற பெண்கள் எதிர்நோக்கும் சிக்கலைப் பற்றித் தெரிந்துகொள்ளப்போவதாக முன்முடிவுடன் நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். என் முன்முடிவை ஓரளவிற்கு எழுத்தாளர் பூர்த்தி செய்தார் என்றே சொல்லலாம்.

 ஆனால் இக்கதைக்களம் துபாயாக இல்லாமல் வேறொரு நாடாக இருந்தாலும் கதையில் அது எந்த மாற்றத்தையும் கொடுக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் இக்கதையின் கதைக்களமாக இருக்கும் துபாய் சில இடங்களைத் தவிர பிற இடங்களில் துபாயில்தான் கதை நடப்பதற்கான எந்த அடையாளமும் இருக்கவில்லை.

 ‘வள்ளி பால்கனியில் நின்றுகொண்டிருந்தாள். அவள் கண்களுக்கு புரூஜ் கலீபா என்ற உலகத்திலே உயரமான கட்டிடம் தெரிந்தது. அங்கு இருப்பவர்கள் தங்களை போன்ற எந்த போராட்டமும் இன்றி நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருப்பார்களா? என்று நினைத்தாள்.’ என எழுத்தாளர் சொல்கிறார். கதை நடக்கும் நிலமும் அக்கதையும் இப்படி ஒன்ற கலந்த ரசவாதத்தை பிற இடங்களில் கவனிக்க முடியவில்லை. இந்த உவமை துபாய் தவிர பிற நாட்டில் நடப்பதாக எழுதினால் செல்லுபடியாகாதுதானே.

 இக்குறுநாவலில் ரயில் நிலையங்கள், தங்கும் விடுதி, விடுதிக்கு அருகில் இருக்கும் சாலையும் கடையும் தவிர துபாய் என்பதற்கான பிற கவனிக்கத்தக்க அடையாளம் இருக்கவில்லை. இவ்வளவு ஏன் துபாய் வாழ் மனிதர்களும் அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையும் பெரிதாகப் பதிவாகவில்லை.

தமிழகத்திலிருந்து விமான நிலையத்தில் திக்குமுக்காடி நிற்கும் வள்ளி, விமானத்தில் ஏறி துபாய்க்கு இறங்கும் வரை எழுத்தாளர் கண்முன்னே நிகழ்வது போல மிக துல்லியமாக எழுதியிருப்பார். அதனை வாசிக்கையில் நாமே விமான நிலையத்தில் நிற்பதாகவும் எங்கே என் கடவுச்சீட்டு எனவும் தேட வைத்துவிடுகிறார்.

இவை கொடுத்த அதிகப்படியா ஆர்வமும் எதிர்பார்ப்பும் துபாய்க்குச் சென்ற பிறகு குறைந்துவிட்டது. ஒரு வேளை நாயகி வள்ளியின் பார்வையிலேயே சொல்லப்பட்டிருந்தால் இத்தனைக் கேள்விகளுக்கு இடமிருக்காது. எழுத்தாளரின் குரல் நாவல் முழுக்க தனியாக ஒளித்து கொண்டிருக்கும் போது இத்தகைய கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் எழுவது இயல்புதானே.

ஒரு வேளை எழுத்தாளர் தான் வள்ளியின் சார்பாக வள்ளியைப் பற்றி எழுத நினைத்திருந்தாரோ என்னவோ.

துபாய்ச் செல்லும் வள்ளி; தனது ஏஜென்டால் ஏமாற்றப்படுகிறாள். அவள் தங்க வேண்டிய விடுதியில் இருக்கும் நான்கு பெண்களும் இவளில் நிலையைப் புரிந்துகொண்டு உதவுகிறார்கள். வள்ளிக்கு வேலையை ஏற்பாடு செய்கிறார்கள். முதல் மூன்று மாதங்களுக்கு அவளக்கு விடுதி வாடகை ஏஜென்டால் (கொஞ்சம் நல்ல ஏஜென்ட்தான் போல) செலுத்தப்பட்டுவிட்டதால், தங்குவதில் சிக்கல் இல்லை. ஆனால் சாப்பாடு செலவுக்கும் வீட்டுக்கு அனுப்பவேண்டிய பணத்திற்கும் தமிழகத்தில் தன் தாயின் பொறுப்பில் இருக்கும் பிள்ளைகளிடம் கைப்பேசியில் உரையாடவும் பணமும் அதற்குத் தகுந்த வேலையும் வேண்டும்.

வள்ளி சந்திக்கும் நான்கு பெண்களும் நான்கு வாழ்க்கை பின்புலத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆளுக்கொரு சிக்கலைச் சந்திக்கின்றார்கள். வாசகர்கள் இவற்றை இக்குறுநாவலிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இப்போது நான் சொல்லிவிட்டால் அதன் சுவாரசியம் குறைந்துவிடும்.


இந்நாவலில் நான் ரொம்பவும் ரசித்த இடம் ஒன்று உள்ளது. ரசிக்க மட்டுமல்ல. யோசிக்கவும் வைத்தது. அடிக்கடி  ஜானு வள்ளிக்காகக் கர்த்தரிடம் பிரார்த்தனைச் செய்வதாகச் சொல்லுவாள்.


சொல்லுவதோடு மட்டுமல்லாமல் வள்ளிக்கு ஏற்ற வேலையையும் தேட செய்வாள். நான்கு பெண்களில் ஒருத்தி விபத்தில் இறந்துவிடுகிறாள். அவளது அண்ணனுக்குத் தகவலைச் சொல்கிறார்கள். அவரால் துபாய்க்கு வரவும் முடியாது இறந்த தங்கையைத் தாய் நாட்டிற்கு கோண்டு வரவும் முடியாது. இதுவரை உழைத்தவள் அனாதையாக அடக்கம் செய்யப்படப்போகிறாள். அண்ணனோ அவளுக்காகப் பிரார்த்தனை மட்டுமே தன்னால் செய்ய முடியும் என்று சொல்லி தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டார். இரு மனிதர்கள் பிரார்த்திப்பதாகச் சொல்கிறார்கள். ஒருவார்த்தையில் மட்டுமே ஒரு சத்தியம் இருந்தது அது ஒரு பெண்ணிற்கு அவளைக் காப்பாற்றிக் கொள்ள வேலையைத் தேடி கொடுக்க வைத்தது. இன்னொரு பிரார்த்தனை தனது இயலாமையின் மீது கழிவிரக்கமாக்கப் பயன்படுத்தப்பட்டது.

நிறைவாக; 

100 பக்கங்களில் இக்குறுநாவலை எழுத்தாளர் முடித்திருக்கிறார். இன்னும் மெனெக்கெட்டிருந்தால் ஐந்து பெண்களில் வாழ்க்கையை அதிகமாகச் சொல்லி நம்மைக் கலங்கடித்திருக்க முடியும். பாதகமில்லை. இப்போது இந்நாவல் கொடுக்கும் வாசிப்பு அனுபவம் முக்கியமானதுதான். வாழ்க்கை ஒரு கதவை அடைத்தால் நம்பிக்கை ஒரு கதவைத் திறப்பதற்குக் கற்றுக்கொடுக்கும் என சொல்கிறது ‘மராம்பு’.

எழுத்தாளருக்கு வாழ்த்துகள். 

- தயாஜி

ஜனவரி 24, 2023

'தலைவர்' - புத்தகவாசிப்பு 3 (2023)



‘தலைவர்’– புத்தகவாசிப்பு 3 (2023)

தலைப்பு – தலைவர்
எழுத்து – எம்.பிரபு
வகை – சிறுகதைகள்

சொல்லித்தான் ஆகவேண்டுமா? என எனக்கு நானே சிலசமயங்களில் கேட்டுக்கொள்வது உண்டு. ஏனெனில் நாம் ஆசைப்பட்டு எதிர்ப்பார்த்து சொல்லுவதும் எழுதுவதும் நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இருந்தும் ஏன் சொல்லத் தோன்றுகிறது, ஏன் எழுதத் தோன்றுகிறது என்றால் நாம் நம் சொல்லின் மீதும் எழுத்தின் மீதும் வைத்திருக்கும் நேர்மையும் அதன் விளைவுகள் கொடுக்கும் பலன்கள் மீதான நம்பிக்கையும்தான் காரணம்.

கடந்த ஆண்டு வாசித்த புத்தகப்பட்டியலை மீண்டும் ஒரு கண்ணோட்டமிடுகையில் என் சொந்த மண்ணின் (மலேசியா) எழுத்தாக்கங்களை (புத்தகங்களை) வாசித்தது குறைவாக இருந்தது தெரிந்தது. இவ்வருடம் தொடங்கி மாதம் ஒரு மலேசிய புத்தகத்தைக் குறித்து புத்தகவாசிப்பு பகுதியில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
அந்த வகையில் தொடக்கமாக மலேசிய எழுத்தாளர் எம்.பிரபுவின் தலைவர் சிறுகதைத் தொகுப்பு குறித்து என் வாசிப்பனுபவத்தை எழுதுகிறேன்.

மலாய் மொழியில் குறிப்பிடும்படியான சிறுகதைகளை எழுதி அறியப்பட்ட எழுத்தாளர். ‘கருப்பைய்யா’ என்ற தலைப்பில் மலாய்ச் சிறுகதைத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார். ‘தலைவர்’ இவரது முதல் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு.

இத்தொகுப்பில் மொத்தம் 14 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நான் ஏழு சிறுகதைகளை மட்டுமே வாசித்துள்ளேன். பாதிக்குப்பாதி சிறுகதைகளை மட்டுமே வாசித்து இதனை எழுதுவதற்கு நான் மட்டும் பொறுப்பல்ல. அந்த எழுத்தாளரும்தான்.

பதிப்பகங்களை அணுகாமல் நாமே சொந்தமாக புத்தகங்களை பதிப்பிப்பதற்கான வாய்ப்புகள் இப்போது எங்கும் உண்டு. நாமே கதையை எழுதி நாமே அதனைத் திருத்தி நாமே அதனை நேர்படுத்தி நாமே அதற்கு பக்கங்களை அடுக்கி நாமே அதனை அச்சகத்துக்கு அனுப்பி நாமே அங்கும் பிழைத்திருத்தம் பார்த்து புத்தகத்தை அச்சடித்து கையில் பெற்றுக்கொள்ளலாம். கொஞ்சமாய் உழைப்பும் கூடுதலாய் பணமும் இதற்கு போதுமானது. ஆனால் இதன் வழி கையில் கிடைத்திருக்கும் புத்தகத்தின் தரம் கேள்விக்குறியாகிறது. புத்தகத்தின் தரமே கேள்விக்குறிக்குள்ளாகிறது என்றால் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து யோசிக்கத்தானே வேண்டும்.

ஒருபக்கம் பதிப்பகங்களால் உண்டாகும் நம்பிக்கை ராயல்டி போன்ற சிக்கல், இன்னொரு பக்கம் நானே செய்துக்கொள்கிறேன் என்பதில் ஏற்படும் குளறுபடி. கடைசியில் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கி வாசிக்கும் வாசகனை யார் கவனிக்கிறார்கள்.  வாசகனுக்காகத்தான் செய்கிறோம் என்கிறார்கள் ஆனால் அவனை கொஞ்சமும் பொருட்படுத்துவதில்லை.

இவ்வளவும் பேசுவதற்கு காரணம் இந்தச் சிறுகதைத் தொகுப்பும் ‘செல்ப் பப்ளிஷிங்’ என்றழைக்கப்படும் எழுத்தாளரே புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார்.
எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் இடையில் செறிவாக்கம் செய்வதற்கு ஒருவர் வேண்டும் என்பதை நான் எப்பவும் வழியுறுத்துகிறேன். சில எழுத்தாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் தனது படைப்பு வாசகனிடம் செல்வதற்கு முன்பாக எடிட்டரிடம் செல்வது தனக்கு ஏற்படும் அவமானமாகப் பார்க்கிறார்கள். தனது படைப்பை எடிட்டர்கள் சிதைத்துவிடுவதாகப் பார்க்கிறார்கள். இவர்களின் எழுத்தால் வாசகர்கள் சிதைந்துபோவதை விட அதற்கு முன்னமே அந்தப் படைப்பு சிதைவது ஒன்றும் பெரிய குற்றமில்லைதான். குறைந்த பட்சம் பிழைத்திருத்தக்கூட இவர்கள் யாரையும் அணுகுவதில்லை.

தலைவர் சிறுகதைத் தொகுப்பை முழுமையாக வாசிக்க விடாதது அதிலிருக்கும் எழுத்துப்பிழைகள். என்னதான்  மேய்ப்பு பார்த்தாலும் எப்படியாவது சில எழுத்துப்பிழைகள் புத்தகத்தில் வந்துவிடுகிறதே என்கிற வருத்தம் எல்லா எழுத்தாளர்களுக்கும் உண்டு. ஆனால் வரிக்கு வரி எழுத்துப்பிழைகள் தென்படும் போது தொடர் வாசிப்பை அது தடை செய்கிறது. முதல் வரியில் எழுத்துப்பிழையாய் இருக்கும் சொல் இரண்டாவது வரியிலேயே பிழையின்றி இருக்கிறது. இப்படி பல இடங்களின் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. எழுத்தாளர் கூடுதல் கவனத்தை இதற்குத்தானே கொடுத்திருக்க வேண்டும். அதிலும் எளிய சொற்கள் கூட பிழையாக அச்சேறியிருப்பது வாசகனாய் எனக்கு வேதனையைக் கொடுக்கிறது.

இப்படி சொல்லி எழுத்தாளரை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் எழுத்தாளர் என்கிற பொறுப்பிற்கு அவர் மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

முதல் கதை, ‘இரு உலகம்’. ரொம்பவும் நன்றாக வரவேண்டியக் கதை. நிஜ உலகத்திற்கும் (இன்னொரு) நிழல் உலகத்திற்கும் சென்றுச்சென்று திரும்பி போராடும் பெண் இறுதியாய் மருத்துவமனையில் இருக்கிறாள்; இதுதான் கதை. உளவியலை அழகாய் பயன்படுத்த வேண்டியக் கதை. ஆனால் இரு உலகங்களின் என்ன நடக்கிறது என்று சொல்லுவதிலேயே எழுத்தாளர் ஆர்வத்தைக் காட்டி கதையை முடித்துவிட்டார். யோசிக்கையில் இரு உலகங்களை இடப்பக்கம் ஒரு புள்ளியாகவும் வலப்பக்கம் ஒரு புள்ளியாகவும் மருத்துவ உலகத்தை ஒரு புள்ளியாகவும் வைத்து முக்கோணத்தில் ஒரு உளவியல் கதையை அபாரமாக கையாண்டிருக்கலாம். தவறவிட்டுவிட்டார்.

‘ஆ யீக்கு வந்த ஆசை’ என்ற சிறுகதை தலைப்பில் இருந்த ஈர்ப்பு கதையில் இல்லை. திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ விரும்பும் இளைஞன் காதலியுடன் சேர்ந்து வாழந்து காதலி கர்ப்பமாகிறாள், காதலன் விபத்தில் இறந்து போகிறான். சீன சமூகத்தில் நடக்கும் கதையாக காட்டி எழுத நினைத்து அதனையும் முழுமையாக்கவில்லை. உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து இக்கதையை வாசிக்கும் ஒருவருக்கு சீன சமூகத்தைப்பற்றி நாயகி நாயகனின் பெயரளவில் மட்டுமே தெரிந்து கொள்வார்கள். அதைத்தாண்டி இக்கதையில் அவை பயன்படவில்லை. இதனை ஒரே வரியில் பத்திரிகைச் செய்தியாக்கிடலாம். இளைஞர்களின் இந்த திருமணம் மீதான வெறுப்பிற்கு என்ன காரணம், ஏன் அவர்களால் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ரொம்பவும் மேலோட்டமாக சொல்லிச்சென்றுவிடுகிறார். அவ்வளவே என கதை முடிந்து விடுகிறது. யாருக்கோ என்னமோ நடந்துவிட்டது என்ற எண்ணமே கதையை வாசித்து முடிக்கையில் தோன்றுகிறதே தவிற அதைத்தாண்டி வாசகனிடம் எதையும் சொல்லவில்லை.

‘புது முதலாளி’  என்னும் கதையும் அப்படித்தான். அப்பா இறந்த பின் அவரது வியாபாரத்தை தொடரும் மகன் பணத்தின் மீது குறியாக இருக்கிறான். அவனுக்கு பணம் மீதும் பெரிய வீடு கார் போன்றவற்றின் மீதும் ஈர்ப்பு இருக்கிறது. பலரிடம் வெறுப்பை சம்பாதித்தாலும் பொருட்களின் விலையைக் குறைக்க விரும்பவில்லை. திடீரென இறந்த அப்பா அவனது கனவில் தோன்றி கண்டிக்கின்றார்; அவன் திருந்திவிடுகிறான். இதனைத்தான் 12 பக்கங்களில் சம்பவங்களாக எழுதியிருக்கிறார். ஆனால் இக்கதையின் தொடக்கம் நன்றாக அமைந்திருந்தது. எடுத்த உடனேயே கதைக்குள் இழுத்துவிட்டது. இருந்தும் என்ன செய்ய.

‘குப்பாய்க்கிழவி’ என்னும் கதையில் கிழவி தன் இயலாமையையும் தன் கடந்த காலத்தையும் சொல்லி புலம்புகிறாள். அதற்கான மொழி முழுமையாக இக்கதையில் கைவரவில்லை. மிகப்பெரிய வரலாற்று பின்னணியைச் சொல்ல இடமுள்ள சிறுகதை.

‘ஒரு கொலைகாரனுக்குப் பின்னால்’. ஒரு சைக்கோ எப்படி உருவாகிறான் என்பதை எந்த களப்பணியும் செய்யாமல் சினிமா இத்தனை நாட்களாய் காட்டியுள்ளதையே திரும்ப கதையாக்க முயன்றுள்ளார். இம்மாதிரியான மனித மனதின் சிக்கல்களைச் சொல்லும் கதைகளுக்கு தேவை இருக்கிறது. ஆனால் அதற்கு எழுத்தாளர் உழைக்க வேண்டும். அத்தேவையை வெறும் சம்பவங்களைக் கொண்டே நகர்த்தியுள்ளார்.

‘நீ நான் மனம்’, காதலில் ஏமாற்றமடைந்த காதலன் தன்னையும் தன் மனதையும் பிரித்து அதனுடன் உரையாடுகிறான்; சுவாரஷ்யமாக இருக்கிறா? ஆனால் கதை அப்படி அமையவில்லை. அப்படி அமைவதாக ஆரம்பித்து கதை வழக்கமான திடீர் திருப்பத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. இக்கதைக்கு பயன்படுத்தப்பட்ட யுக்தி கவனிக்கத்தக்கது. கூடுதல் கவனம் கொண்டிருந்தால் எழுத்தாளரின் முக்கியமான கதையாக வந்திருக்கும்.

இன்னும் ஒரே கதையை மட்டும் வாசிக்கலாம் என்கிற முடிவில், தலைப்பு சிறுகதையான ‘தலைவர்’ சிறுகதையை வாசித்தேன். சமகால அரசியல் சூழல்களையும் அதன் சூழ்ச்சிகளையும் சொல்ல முயற்சிக்கும் கதை. ரொம்பவும் மேம்போக்காகவே கதையை நகர்ந்தி சென்றுவிட்டார். இதுவும் முக்கியமான கதையாக வரவேண்டிய கதைதான்.

நிறைவாக, எழுத்தாளரிடம் சொல்வதற்கான கதைக்கருக்கள் இருக்கின்றன. ஆனால் அதனை கதையாக்குவதற்கு தேவையான கூடுதல் உழைப்பும் கலந்துரையாடலும் நிகழாமல் போனதே இத்தகைய பலவீனங்களுக்கு காரணமாக இருக்கலாம். 

அது ஒன்றும் கலையவே முடியாத ஒன்றல்ல. நினைத்தால் சீக்கிரமே அடுத்தடுத்து நல்ல கதைகளை எழுத்தாளரால் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை இம்முதல் தொகுப்பு கொடுத்திருக்கிறது. இவரின் பெயர் சொல்லும் வகையான சிறுகதையை இவர் எழுத வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பிலேயே இதனை எழுதியிருக்கிறேன்.

பின்குறிப்பு; எழுத்தாளருக்கு நெருக்கமாக இருப்பதாக நினைப்பவர்கள் யாரும் “என்ன இப்படியெல்லாம் எழுதியிருக்கு?” என்று கோவப்பட்டாலும் எழுத்தாளரிடம் புகார் செய்தாலும் உங்களிடம் சிறு வேண்டுகோல், உங்கள் அக்கறையை இச்சிறுகதைத் தொகுப்பை முழுமையாக வாசித்து ஒரு கட்டுரை மூலமாக காட்டுங்கள். நன்றி.


ஜனவரி 23, 2023

'தண்ணீர்ச் சிறகுகள்' புத்தகவாசிப்பு 2 (2023)


தலைப்பு – தண்ணீர்ச் சிறகுகள்
எழுத்து – கலாப்ரியா
வகை – கவிதை
வெளியீடு – சந்தியா பதிப்பகம்
புத்தகம் வாங்க - +60164734794 புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை (மலேசியா)

இவ்வாண்டில் வாசித்து முடித்த இரண்டாவது புத்தகம். முதல் கவிதை புத்தகமும் கூட. கவிஞர் கலாப்ரியாவின் ‘தண்ணீர் சிறகுகள்’

கவிதை வாசிப்பை நான் கால இயந்திரத்துடன் ஒப்பிட்டே பேசுவேன். அது ஒரு டைம் மிஷின்; சொல்லப்போனால் காலக்கடத்தியும் கூட. கவிதை எந்தக் காலத்தைக் குறித்து எழுதியிருந்தாலும் அது தன்னை நிகழ்காலத்திலேயே நிறுத்தியிருக்கும். அப்படியே, கவிதைகள் தன்னை வாசிக்கின்றவர்களை காலத்தின் முன்னோக்கியும் பின்னோக்கியும் அழைத்துச் சென்று விளையாட்டு காட்டிவிடும். எத்துணை நகைமுரண் இது.

இப்புத்தகத் தொடக்கத்தில் கவிஞர் கலாப்ரியா சில கவிதைகள் பிறந்த கதையைச் சொல்லியிருப்பார். அவரின் அனுபவங்களுடன் அக்கவிதைகளை வாசிக்கும் போதும், பின் ஒவ்வொரு கவிதைகளாக வாசிக்கும் போதும் வாசகர்களுக்கு இருவேறு பரிணாமங்களை அவை கொடுக்கின்றன. அதனால்தான் என்னவோ கவிஞர்கள் ஏதோ ஒன்றை கவிதையாக்குகிறார்கள் வாசகர்கள் அதில் தங்களுக்கான ஏதேதே இருப்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள்.

மானின் ரத்தம்
புலி மடுவில்ப்
பாலாய்

என்கிற கவிதையைத் திரும்ப திரும்ப வாசிக்கின்றேன். மூன்றே வரிகள்தான். ஆனால் அது தன்னகத்தே சுமந்திருக்கும் மாயத்திற்கு நாம் பக்கம் பக்கமாக எழுதலாம். பாவத்தையும் புண்ணியத்தையும் கவிஞர் ஒரே கோட்டில் இணைத்துவிட்டார். இரண்டுக்குமே சம பங்கையும் கொடுத்துவிட்டார். இதில் ஒன்றைக்கூட்டி மற்றொன்றைக் குறைத்தால்; என்ன குறைத்தால்? அப்படி குறைக்கவே முடியாது என்பதுதானே  கவிஞர் போட்டிருக்கும் கோடு. அது அப்படியேத்தான் இருக்கும். அது இயற்கை. அந்தச் சுழல் அப்படித்தான் இயங்க வெண்டியுள்ளது.

உன் நினைவை
மீட்டுக் கொடுத்தான்
உன் காதலன்

என்கிறார். காதலன் என்று முடியும் இடத்தில் காதலி என்று மாற்றி வாசிக்கும் சுதந்திரத்தை அதன் முதல் இரண்டு வரிகளே ஒப்புதல் கொடுக்கின்றன. இதில் ஒரு காவியச் சோகம் தெரியவில்லையா. உண்மையில் நினைவுகள் என்பது வலி நிவாரணியும் வலியில் காரண கர்த்தாவாகவும் ஆகிவிடுகின்றன. அவள் நினைவையோ அவன் நினைவையோ மீட்டுக்கொள்கிறோம் என்பதுவரை மனம் லேசாகிறது. நினைவுகள் இனிக்கின்றன. ஆனால் யார் மூலம் அது சாத்தியமாகிறது என தெரிந்து கொள்ளும் இடத்தில் மனம் கனக்கிறது, கூடவே நினைவுகள் கசக்கச் செய்கின்றன.

குழந்தைகள் குறித்த நம் கவிஞரின் கவிதைகள் எப்போதும் கவனிக்கத்தக்கவை. இத்தொகுப்பிலும் அவ்வாறு சில கவிதைகள் இருக்கின்றன. அதிலொன்று;

குழந்தை 
வரைந்தது
பறவைகளை மட்டுமே
வானம்
தானாக உருவானது

எத்தனை அழகாக ஆழமானப் பார்வை. வானத்தை எப்படி வரைவது. ஒரு பக்கத்தாளில் நீலமடித்து வானம் வரையலாம்தான். பெரியவர்கள் அப்படித்தானே யோசிக்கிறோம். நீலம் நிறைந்திருந்தால்தான் அது வானம். குழந்தைகள் அப்படி நினைப்பதில்லை. வெள்ளைக் காகிதத்தில் இரு வாளைந்த கோடுகளை இணைத்து அவற்றைப் பறக்கும் பறவைகள் ஆக்கிவிடுகிறார்கள். பிறகென்ன வானம் தானாக உருவாகிவிடுகிறது. குழந்தைகள் மனம் அத்தகையதுதானே.

ஒரு குழந்தை இப்படியென்றால் இன்னொரு குழந்தை மீன் நீந்த தண்ணீரை வரைகிறது அவசர அவசரமாக,

மீன் வரைந்ததும்
முனையொடிந்த
பென்சிலை அவசரமாய்ச்
சீவுகிறது குழந்தை
தண்ணீர்க் கோடுகள்
தீற்ற

இப்படி குழந்தைகளின் இருவேறு மனநிலைகளைக் கவிஞனால்தானே உள்வாங்க முடிகிறது. கோடு போட்டு வானம் காட்டிய குழந்தையால் மீனை வரைந்து அது கடலென்று காட்ட முடியாதா என்ன?

பல சமயங்களில் கவிஞனின் கேள்வியில் இருந்தும் கவிதைகள் பிறக்கின்றன. அதற்கு ஓர் உதாரணம்தான் கவிஞரின்;

கனவுகள் ஏதும்
வந்ததா
கண்ணப்ப நாயனாருக்கு
கண் மூடிக்
கண் தோண்டிக்
கண் தைக்கும் 
நேரத்தில்

அற்புதங்களும் அதிசயங்களும் எப்போதும் யாருக்கும் நடக்கலாம் என்பதைத்தான் காட்டுகிறாரோ ?

தன் குறிப்பின்
அழகான கையெழுத்தைத்
தானே வியந்து
தள்ளி வைத்தான்
தற்கொலையை

தள்ளி வைத்தத் தற்கொலை இனி அவனுக்கு தேவையிருக்காது என்றே கவிஞர் நம்ப வைக்கிறார். இப்படி ஏதாவது ஒரு அதியத்தை நாம் கண்டுபிடிக்கத்தான் வேண்டும் வாழ்வதற்கு, அது வெளியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நமக்குள்ளேயே இருக்கலாம். பாலோ கொயிலோவின் ரசவாதி நாவலின் நாயகன் புதையல் தேடி தேசம் கடந்து பயணம் போவான். பல அனுபவங்களைப் பெறுவான். கடைசியில் அவன் தேடி வந்த புதையல் அவன் பயணம் தொடங்கிய இடத்தின் காலுக்கு அடியில்தான் இருக்கும். காலுக்கு அடையில் இருந்தாலும் அதனை அடைய அதற்கான அனுபவம் தேவையென்று எழுதியிருந்தால் அவன் என்ன  செய்வான்; பாவம். இக்கவிதை எனக்கு அந்நாவலின் நாயகன் சாண்டியாகோவை நினைக்க வைக்கிறது.

கவிஞரின் பார்வை எப்படி ஒன்றைப் பார்க்கிறது என்பது கவிதையை மேலும் அழகூட்டுவதாக அமைந்துவிடுவிறது. அதற்கு சான்றாக கவிஞரின் இன்னொரு கவிதை;

தன்னைப் பற்றியும்
பாடச் சொல்லி
தண்ணீர் முத்துக்கள்
சூடியிருக்கிறது
தாமரையிலை

தன்னிடம் அதிகாரம் இருப்பதையே இங்கு பலர் விரும்புகிறோம். எவ்வளவு நெருக்கம் கொண்டிருந்தாலும் அன்பு பாராட்டினாலும் உள்ளுக்குள்ளே உள்ளத்தின் ஓரத்தில் பிறர் மீது அதிகாரம் செலுத்தவே பலரும் பிரயாசைப் படுகின்றோம். ஒருவேளை இதைத்தான் கவிஞர்,

சின்னவளைச் சேர்த்து
விளையாடு என்றால்
பெரியவள் தேர்ந்தெடுப்பது
டீச்சர் விளையாட்டு

விளையாடவும் வேண்டும் தன் கையில் அதிகாரமும் வேண்டும் என ஆசைப்படும் அந்தப் பெரியவளை நாம் எத்தனை இடங்களில் பார்த்திருக்கிறோம்.

தவம் செய்கிற புத்தனைப்
பார்த்துப் பார்த்துப்
பயந்தபடியே
உண்ணுகிறது
ஒரு கனிந்த
அரசம் பழத்தை
அணில் ஒன்று

என்கிறார் கவிஞர். எனக்கென்னவோ, அந்த அணில் புத்தனைப் பார்த்து பயப்படவில்லை. புத்தனின் பெயரிலும் அவனது போர்வையிலும் மனிதர்கள் செய்யும் அட்டூழியங்களைக் கண்டே அணில் அஞ்சியதாகப் படுகிறது. அணில் மட்டுமா அஞ்சுகிறது. நீங்களும் நானும்தானே அஞ்ச ஆரம்பித்திருக்கிறோம்.

கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுடன் உரையாடும் போதெல்லாம் கவிதைகளையும் வாசிக்க வழியுறுத்துவேன். அது அவர்களுக்கு வார்த்தைகள் வழியாகவும் கவிஞனின் பார்வை வழியாகவும் உதவக்கூடும் என சொல்லுவேன். ஒரு கவிதை ஒரு சிறுகதைக்கான பொறியையும் போட்டுவிடக்கூடியது.

திடீரெனப்
பெயர் அழைக்கப்பட்டுத்
திரும்ப நேரும் போதெல்லாம்
கண்களில்
ஏன் இவ்வளவு
இறந்த காலம்

இக்கவிதையை வாசித்து முடிக்கவும் சிறுகதைக்கான அழகான தொடக்கமும் மனதில் தொற்றிக்கொண்டது. கவிஞரின் கேள்விக்கு பதில் தேடி தொடர்ந்தால் ஓர் அழகான சிறுகதையை எழுதிவிடலாம்.

கவிஞர் கலாப்ரியாவின் ‘தண்ணீர்ச் சிறகுகள்’ கவிதைத் தொகுப்பினைக் குறித்தும் இக்கவிதைகள் குறித்தும் இன்னும் எழுதவே தோன்றுகிறது. அதற்கான அத்தனைக் கவிதைகளையும் இத்தொகுப்பு கொண்டிருக்கிறதுதான். எல்லாவற்றையும் சொல்லிவிடுவதை விட சொல்லாமல் விட்டவைதான் இதன் மீது அதிக ஈர்ப்பு கொடுக்கும் என்பதால் கவிஞரின் கவிதையொன்றையே நிறைவுக்கு பயன்படுத்திக் கொள்கிறேன்.

நல்ல நடன நிகழ்ச்சி
பார்த்து விட்டு வருகையில்
களவி முடித்த
களைப்பு

- கவிஞர் கலாப்ரியா (தண்ணீர்ச் சிறகுகள்)

#தயாஜி

ஜனவரி 08, 2023

2022-ல் வாசித்தவை


கடந்த ஆண்டு (2022) வாசித்த புத்தகங்கள்...

நாவல்கள்
1. ஏழாம் உலகம் - ஜெயமோகன்
2. வாழ்ந்தவர் கெட்டால் - க.நா.சு
3. நாளை மற்றொரு நாளே - ஜி.நாகராஜன்
4. ஒற்றன் - அசோகமித்திரன்
5. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
6. பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்ட செவ்வாய்க்கிழமைகள் ( மொழியாக்கம்)
7. மிஸ்டர் ஜூல்ஸ்ஸுடன் ஒரு நாள் - டயான் ப்ரோகோவன் (மொழியாக்கம்)

சிறுகதைகள்
8. யேசு கதைகள் - பால் சக்காரியா (மொழியாக்கம்)
9. திமிரி - ஐ.கிருத்திகா
10. அமானுஷ்ய நினைவுகள் - அசோகமித்திரன்
11. முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு - அகரமுதல்வன் 
12. கரு - யோகாம்பிகை
13. தீக்‌ஷா - ஏ.கே.ரமேஷ்
14. அப்பாவின் அம்மா - சுமத்ரா அபிமன்னன்
15. 42 குறுங்கதைகள் - பத்மநாதன் பரசுராமன்
16. அப்பாவின் கைக்கடிகாரம் - குறுங்கதைகள் - உமாதேவி வீராசாமி
17. சரீரம் - நரன்
18. துயிலாத ஊழ் - சமகால ஈழச் சிறுகதைகள்
19. ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள் - பா.வெங்கடேசன்
20. ஈட்டி - குமார் அம்பாயிரம்

கட்டுரைகள்
21. எழுதுதக் பற்றிய குறிப்புகள் - பா.ராகவன்
22. கழிவறை இருக்கை - லதா
23. நடைவழி நினைவுகள் - சி.மோகன்
24. நூலக மனிதர்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்
25. கதாப்பாத்திரங்களின் பொம்மலாட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
26. நிலவழி - எஸ்.ராமகிருஷ்ணன்
27. பின் கதை சுருக்க - பா.ராகவன்
28. ஏன் வாசிக்க வேண்டும் - ஆர்.அபிலாஅபிலாஷ்
29. வாசிப்பின் வழிகள் - ஜெயமோகன்
30. கதையும் புனைவும் - பா.வெங்கடேசன் (நேர்காணல்:த.ராஜன்) 

கவிதைகள்
31. வியனுலகு வதியும் பெருமலர் - இளங்கோ கிருஷ்ணன்


பெரும்பாலும் வாசித்த புத்தகங்களைப் பற்றி எனது வலைப்பூவிலும் முகநூலிலும் எழுதியுள்ளேன். இன்னும் எழுதாதவற்றை இவ்வாண்டில் எழுத வேண்டும். புத்தகமாக அல்லாமல் தனித்தனிக் கதைகளாக கவிதைகளாக வாசித்தவை பற்றி என வலைப்பூவில் எழுதியுள்ளேன்.

தொடர்ந்து என்னை வாசிக்கவும் எழுதவும் வைத்துக்கொண்டிருக்கும் இயற்கைக்கு என் அன்பு......

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 

மார்ச் 12, 2022

புத்தகவாசிப்பு_2022_8_திமிரி


தலைப்பு – திமிரி

எழுத்து – ஐ.கிருத்திகா

வகை – சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு – எழுத்து பிரசுரம்

நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

 

எழுத்தாளர் ஐ.கிருத்திகாவை முகநூல் வழி அறிந்துகொண்டேன். அவ்வப்போது அவரது படைப்புகள் இணைய இதழ்களில் வாசிக்க நேர்ந்தது. ஒரு கட்டத்தில் அதிகமாகவே அவரது படைப்புகள் கண்ணில் பட ஆரம்பித்தன. அவ்வப்போது அவரது படைப்புகளை வாசித்துப் பேசியிருந்தாலும். புத்தகமாக வாசித்துப் பேசுவதில் ஒரு திருப்தி இருக்கிறது.

‘திமிரி’ , எழுத்தாளர் ஐ.கிருத்திகாவின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. இதற்கு முன், உப்புச்சுமை, நாய்சார் என்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘திமிரி’ மொத்தம் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

ஒவ்வொரு சிறுகதையும் பெண்ணில் உலகத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. அவளின் அக உலகத்தையும் புற உலகத்தையும் இக்கதைகள் வழி நாம் நெருக்கமாக உணரலாம். அதோடு பெண்கள் மீது ஆண்களும் சமூகமும் வைக்கும் கட்டுப்பாடுகளையும் அதிகாரத்தையும் பேசுகிறது.

சிறுகதைகளுக்கு எழுத்தாளர் வைத்திருக்கும் தலைப்புகள் வசிகரித்தன. கதைகளை வாசிப்பதற்கு முன்னமே அத்தலைப்பிற்கான அர்த்தத்தைத் தேடவ வைக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு கதையாக வரிசையாக வாசித்துப்பழகிய எனக்கு ஒவ்வொரு தலைப்பாகத் தேர்ந்தெடுத்த வாசிக்க வைத்ததும் அதுதான்.

வாசித்த சில கதைகள்,வழக்கமான கதைகளாகவே தெரிந்தன. அக்கதைகளைப் பலரும் பலவாறாகச் சொல்லியுள்ளார்கள். அதைவிட நன்றாகவும் சொல்லக்கூடிய கதைகள் எனவும் தோன்றியது. ஆனால் அடுத்தடுத்த கதைகளை வாசிக்கையில் எழுத்தாளர் தன்னையும் தேர்ந்த எழுத்தாளர் இடத்தில் நிறுத்திக்கொண்டார். அவரால் எப்படி இக்கதைகளை எழுத முடிந்தது என வாசித்தப்பின் யோசிக்கவும் வைத்துவிட்டார்.

‘இருட்டில் ஒளிரும் ஆயிரம் கண்கள்’ கதையில் அம்மா தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் மகளுக்கும் ஏற்படக் கூடாது என நினைக்கிறார்.

‘எரி நட்சத்திரம்’ என்ற கதையில் காலாகாலத்தில் கல்யாணம் ஆகாத பெண்ணின் வாழ்க்கையைச் சொல்கிறார்.

‘கணை’ சிறுகதையில் திருமணத்திற்குப் பிறகு பெண் கர்ப்பவதி ஆகவேண்டுமென்று எதிர்ப்பார்த்து அதனையே அப்பெண்ணுக்கு ஒரு அவப்பேராகச் சுமத்த காத்திருக்கும் சமூகத்தைச் சொல்கிறார்.

‘கணல்’ சிறுகதையில் இன்றும்கூடப் பெண்ணுக்கு காதலிக்க இருக்கும் சுதந்திரம் காதலித்தவனையே திருமணம் செய்வதில் இல்லாததையும் ஜாதி அங்கொரு பெரும்தடையாக இருப்பதைக் காட்டுகிறார்.

‘கனவு’ சிறுகதையில் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெண்கள் இழப்பது கொஞ்சநஞ்சமல்ல எனச் சொல்கிறார்.

‘கொண்டலாத்தி’ சிறுகதையில் பெண்ணின் மனம் எத்துணை விசித்திரமானது எனக் காட்டவும் தவறவில்லை.

‘சம்வாதம்’ என்னும் கதையில் வெளியூரில் வேலை செய்யும் பெண்ணைப் பற்றிப் பேசுகிறார். இத்தனை காலம் ஆண்கள் மட்டுமே வெளியூர் வேலைகளில் சிதைகிறார்கள் என வாசித்தும் கேட்டும் பழகியவர்களுக்கு இக்கதை பெண் சந்திக்கும் சிக்கலை எடுத்து சொல்லும். தன் உணர்வுக்கும் தன் பொறுப்பிற்கும் இடையில் சில பெண்கள் சிக்கி மூச்சு திணறுவதையை நன்றாகவே கதையாக்கியுள்ளார்.

‘திமிரி’ சிறுகதையில் கணவனை விட்டு பிரிந்து வாழும் பெண்ணைப் பற்றிச் சொல்கிறார். என்னதான் அவளது குடும்பம் அவளை ஏற்றுக்கொண்டாலும் அவள் கணவனிடம் அனுசரித்துப் போகவேண்டிய கட்டாயத்தைச் சொல்லவும் செய்கிறது. ஒரு பெண் அவளாக இருக்கவும், அவளுக்கான முடிவுகளை எடுக்கவும் யாரோ ஒருவர் சம்மதிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதைக் காட்டுகிறார்.

‘புருஷாமிருகம்’. இக்கதையில் தலைப்பே கதையைச் சொல்லிவிட்டாலும், தனது கதை சொல்லும் பாணியில் இச்சிறுகதையை எழுத்தாளர் வாசிக்க வைக்கத் தவறவில்லை. குடும்பத்தில் வாழும் பெண் சந்திக்கும் உடல் உளவியல் சிக்கலை பேசும் கதை. உண்மையில் யார்தான் அவள். பெண்ணா, உடலா, மனமா, மனுசியா எனகிற பல கேள்விகளை வாசகர் முன் வைக்கிறார்.

‘பெரீம்மா’ இச்சிறுகதை, எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ‘முள்’ என்ற சிறுகதையை நினைக்க வைத்தது. பெரீம்மாவின் மரணமும் அதைச்சுற்றியும் நடப்பதுதான் கதைக்களம். ஆனால் இக்கதையின் கடைசிப் பத்தி முழுக் கதையையும் வேறொரு இடத்திற்குக் கொண்டு சென்று ஜீரணிக்க முடியாத இடத்தில் வாசகனைக் கொண்டு நிறுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கடைசிப் பத்திவரை கதை ஒரு பரிணாமத்தையும், கடைசிப் பத்தி அதற்கு நேர்மாறான இன்னொரு பரிணாமத்தையும் கொடுக்கிறது. இக்கதையை நிராகரிக்க வேண்டிய இடத்திலும் இருக்கிறது அதே சமயத்தில் நிராகரிக்க முடியாத இடத்திலும் தன்னை நிறுத்திக் கொள்கிறது.

‘போக்கு’ இக்கதை என் தூக்கத்தைக் கெடுத்த கதை. ஒரு பெண்ணைத்தவிர வேறு யாரால் இக்கதையைச் சொல்லிவிட முடியும் எனத் தெரியவில்லை. மறைந்த மலேசிய அளுமையான எம்.ஏ.இளஞ்செல்வனின் ‘பாக்கி’ என்ற சிறுகதை இங்குப் பிரபலம். பல இடங்களில் அச்சிறுகதை மேற்கோள் காட்டப்பட்டது. பெண் தனது எல்லா வேலையையும் முடித்து அசந்து உறங்கத்தாயாராகும் சமயம் கணவன் தன் காலை மனைவி மீது போடுகிறான், இன்னும் இது பாக்கி இருப்பதாக மனைவி சொல்வதோடு கதை முடிந்துவிடும். இக்கதை எழுதப்பட்ட சமயத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கேள்விபட்டுள்ளேன். அதன் பிறகு கணவன் மனைவி உளவியில் சிக்கலை பேசும் பல கதைகள் வந்துவிட்டாலும் இக்கதை இன்னமும் பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 

மனைவி என்பவள் ஆணுக்கு எப்போது தன் உடலைத் தருவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்கிற ஆண்களின் மனப்போக்கை பல கதைகளில் நாம் வாசித்திருப்போம். அது எப்படி முடியும் அவள் உடல் அவள் உரிமை எனப் பலர் முழக்கங்களையும் செய்கிறார்கள். இன்றளவும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.கிருத்திகாவும் அந்த இடத்தில் கதையைக் கொண்டு செல்கிறார். ஆனால் அவர் கதையைச் சொல்வதற்கு எடுத்துக்கொண்ட களம் முக்கியமான ஒன்று. மாதவிடாய் சிக்கலையும் அது தரும் உடல் வலியையும் மன உளைச்சலையும் ஆழமாகச் சொல்லியுள்ளார். அப்படிச் சொல்லிருந்ததால்தான் கணவன் கடைசியில் கேட்கும் ‘ரொம்ப நாளாச்சுடி’ என்ற வார்த்தை வாசகனுக்கும் கோவத்தைக் கொடுக்கிறது.

‘வெற்றிடம்’ கணவனின் வருகைக்கும் காத்திருக்கும் மனைவியின் கதை.

‘கூடடைதல்’ என்னும் கதை இன்றைய குடும்பச்சிக்கலை பேசியிருக்கும் கதை. ரொம்பவும் முக்கியமான கதையும் கூட. நடுத்தர வயதைத் தாண்டி குழந்தைகளுடன் வாழும் பெற்றோர் பற்றிய கதை. கத்தி மேல் நடப்பது மாதிரியான கரு என்றும் சொல்லலாம். நல்லவேளையாக அந்தப்பெண் தப்பித்தால் என வாசகனுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கும் கதை. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கதை என நான் நினைப்பதால் மேற்கொண்டு இக்கதை நான் சொல்வதைவிடவும் நீங்கள் வாசிப்பதே அவசியம்.

‘தாயக்கட்டைகள்’ யாரும் யாரையும் அவர்களாக மகிழ்ச்சியில் இருக்க விடுவதில்லை என நினைக்க வைத்த கதை.

‘தடம்’ கணவனை இழந்த கர்ப்பவதி மனைவியின் வாழ்க்கையைச் சொல்லும் கதை.

ஐ.கிருத்திகாவின் கதைகளை நகர்த்திச்செல்வது நம்மை ஆழ்ந்து வாசிக்க வைக்கிறது. தன்னைச்சுற்றி நடப்பதை ஆழ்ந்து அவதாணித்துக் கதைகளில் கொண்டு வந்துள்ளார். கதையினைச் சொல்லும் யுக்தியும் கவர்கிறது. பேசவேண்டிய விடயங்களைக் கதைகளாக மாற்றி வாசிக்க வைத்து அதிலிருந்து ஓர் உரையாடலுக்கு வழி வகுக்கின்றார். இச்சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்ததும் சிலரிடம் சில கதைகள் குறித்துப் பேசினேன். என்னுடைய தோழிகளுக்கு இவரின் கதைகளில் இவர் எடுத்துச் செல்லும் சிக்கலையும் இவரின் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் குறித்துப் பேசினேன். குறிப்பாக ‘கூடடைதல்’, ‘போக்கு’ கதைகளைக் கண்டிப்பாக வாசிக்கவும் சொல்லியுள்ளேன். இப்படியான சிறுகதைகளைக் கொடுத்த எழுத்தாளருக்கு அதுதான் எனது நன்றி.

இனி வாசிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஐ.கிருத்திகாவையும் இணைத்துவிட்டேன்.


- தயாஜி

 

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

பிப்ரவரி 25, 2022

புத்தகவாசிப்பு_2022_7_நிலவழி

தலைப்பு – நிலவழி
எழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்
வகை – கட்டுரை
வெளியீடு – தேசாந்திரி பதிப்பகம்
நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

மாத இதழொன்றில் தொடராக வந்தபோது வாசித்தது. இப்போது புத்தகமாக மீள்வாசிப்பு செய்வதில் மகிழ்ச்சி. எஸ்.ராவின் மூலம் பல எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் தொடர்ந்து பலருக்கு அறிமுகமாகிக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே. இந்தத் புத்தகமும் அவ்வாறுதான்,  புத்தக முடிவில் எஸ்.ரா சொல்லியிருக்கும் செய்தி மிக முக்கியமானது.

சர்வதேச இலக்கியங்கள் நமக்கு அறிமுகமாகியிருக்கும் அளவிற்கு இந்திய இலக்கியம் அறிமுகமாகியிருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆங்கிலத்தின் வழி ரஷ்ய இலக்கியங்களும் ஐரோப்பிய இலக்கியங்களும் எளிதாக வாசிக்கக் கிடைகின்றன. குறைந்தது அதன் எழுத்தாளர் அப்படைப்பாக்கத்தின் உள்ளீடு என்கிற விபரங்களையாவது தெரிந்து வைத்திருப்போம். ஆனால் இந்திய இலக்கியங்கள் என அறியப்படும் மராத்தியிலோ, வங்காளத்திலோ, பஞ்சாபியிலோ எழுதப்பட்ட இலக்கியப்படைப்புகள் தமிழில் எதிர்ப்பார்க்கும்படிக்கு வாசிக்கக் கிடைப்பதில்லை. மொழிபெயர்ப்பாளர்களின் தேவை இந்தத் தேக்கத்தை தீர்ப்பது எத்துணை அவசியம் என புலப்படுகிறது. 

அவ்வகையில் எஸ்.ரா எழுதியிருக்கும் ‘நிலவழி’ என்னும் கட்டுரைத் தொகுப்பு நவீன இந்திய இலக்கிய வரிசையில் வெளியான சில முக்கிய நாவல்களையும் சமகால இந்திய இலக்கியத்தின் போக்கினையும் கவனப்படுத்துகிறது என சொல்லலாம். மொத்தம் பத்து கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. ஆனால், பல படைப்பாளர்கள் , அவர்களின் முக்கியமானப் படைப்புகள் என அதிகமாகவே இக்கட்டுரைகளில் நமக்கு கிடைக்கின்றன. உதாரணமாக ஒரு மொழியில் இருக்கும் படைப்பாளியைப் பற்று பேசும்பொழுது அவருக்கு முந்தைய படைப்பாளர்களையும் அவர்கள் எவ்வாறு மாற்றத்திற்கு காரணமாக இருந்தார்கள் எனென்ன சிக்கல்களை எதிர்க்கொண்டார்கள் எனவும் பேசுகிறார். இன்றையப் படைப்பு தொடர்ச்சியை நாம் விட்டுவிடாதபடிக்கு அது நமக்கு உதவவும் செய்கிறது. 

மலேசியாவில் இருக்கும் எங்களுக்கும் இவ்வாறான சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. இங்கு எழுதப்படும் மலாய் சீன படைப்புகள் குறித்தும் படைப்பாளிகள் குறித்து பெரிதாக பலருக்கு அறிமுகம் இருப்பதில்லை. மலாய் மொழி எங்கள் நாட்டின் தேசிய மொழி, நாங்கள் எல்லோரும் தமிழ்மொழி போலவே மலாய் மொழியையும் கற்றுக்கொண்டே வளர்கிறோம். மலாய் இலக்கியம் குறித்தும் படைப்புகள் குறித்தும் எங்களால் நேரடியாக வாசிக்கவும் அது குறித்து உரையாடவும் முடிகிறது. ஆனால் சீன மொழி இலக்கியம் அப்படியல்ல. அங்கு இலக்கிய முன்னெடுப்பாக என்ன நடக்கிறது. என்ன எழுதுகிறார்கள் என்கிற கேள்வியே எஞ்சி நிற்கிறது. ஒரு மொழியின் இலக்கிய உச்சங்களை அறிவதன் வழி அம்மொழியில் புழங்கும் மக்களின் பண்பாட்டு அறிவுத் தளத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும். மலாய் மொழி பலருக்கு பரிச்சயம் என்றாலும் அதன் இலக்கிய முன்னெடுப்புகளை பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை. ஆனால் மலாய் மொழியில் மட்டும் எழுதி மலாய்க்காரர்களுக்கு நன்கு  அறிமுகமான தமிழ் எழுத்தாளர்கள் இருக்கவே செய்கிறார்கள். தனிக்குழுவாக தொடர்ந்து மலாய் இலக்கியம் படைத்து வருகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் அ.பாண்டியன் ‘அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ என்று புத்தகம் எழுதினார். வல்லினம் பதிப்பகமும் (மலேசியா) சந்தியா பதிப்பகமும் இணைத்து இப்புத்தகத்தை வெளியிட்டார்கள். மலேசிய மலாய் இலக்கியம் குறித்த அறிமுகத்தையும் படைப்புகளின் போக்கையும் அப்புத்தகம் கொடுக்கும். அவ்வாறே சீன இலக்கியம் குறித்தும் தமிழில் புத்தகம் வரவிருந்தது; சில காரணங்களால் அம்முயற்சி தாமதமாகிக்கொண்டே இருப்பது கொஞ்சம் வருத்தம்தான்.

எஸ்.ரா எழுதியிருக்கும் ‘நிலவழி’ வாசிக்க வாசிக்க நாம் வாசிக்க வேண்டிய எழுத்தாளர்களின் பெயர் பட்டியல் நிறையவே செய்கின்றன. நேரடியாக அவற்றை வாசிக்க இயலாவிட்டாலும் அதன் சாரத்தை, எப்படி அது முக்கியமான படைப்பாக அறியப்படுகிறது போன்றவற்றை இப்புத்தகம் வழி நாம் அறிந்துகொள்ள முடிகிறது.  

- தயாஜி

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்