பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 07, 2025

- 2025-இன் நான்கில் இரண்டு -


2025-ஆம் ஆண்டின்  நான்கின் இரண்டாம் பகுதியைக்  கடந்துவிட்டோம். இந்த ஆண்டில் நமக்கு கொடுக்கப்பட்ட நாட்களில் நான்கில் இரு பகுதிகள் முடிந்தன. 

முதற்பகுதியில் நான் வாசித்தவைக் குறித்து முன்னமே எழுதியிருந்தேன்; இது அதன் இரண்டாம் பகுதி. மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை வாசித்த புத்தகங்களைக் குறித்த சிறு பகிர்வு. 

சமீபத்திய இணைய நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இளம் வாசகர் ஒருவர் அந்த எழுத்தாளர் என்ன வாசிக்கின்றார் என கேட்டார். சற்று யோசித்த எழுத்தாளர் இப்படியாக பதில் சொன்னார்.
“நான் பல வேளைகளில் பல புத்தகங்கள் வாசிப்பேன். கழிவறையில் கூட நான் புத்தகம் வைக்கிறதுக்கு இடம் வச்சிருக்கேன்…” இந்தப் பதில் அந்த இளம் வாசகருக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டியிருக்க வேண்டும். அவர் திரும்பவும் கேட்டார், “சிறப்பு ஐயா.. என்னென்ன புத்தகங்கள் வாசிக்கிறீங்க..?”

அந்த எழுத்தாளரின் பதில், “அதேன் சொன்னேன்ல… இதைதான் வாசிக்கிறென்னு இல்ல..  பல புத்தகங்களைப் பல சமயத்தில் வாசிக்கிறேன்.. ஏன்னே அப்பதான் நம்மால தொடர்ந்து இந்த எழுத்துத்துறையில் இயங்க முடியும்.. இல்லைன்னா கஷ்டமாகிடும்..”
கடைசிவரை தான் என்ன வாசிக்கிறேன் என்பதை அந்த எழுத்தாளர் சொல்லவேயில்லை. 

அவருக்கு அந்தத் தயக்கம்  வர என்ன காரணமாக இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து பல நாட்களாக யோசித்தேன். இதற்கெல்லாம பல நாட்கள் யோசிப்பீங்க..? என நீங்கள் கேட்கபது எனக்கும் விளங்கியது.

வாசிப்பென்பது தனிமனித செயல்பாடு. ஒரே புத்தகத்தை இருவர் வாசித்தால் இருமாதிரியான அனுபவத்தைதான் அது அவர்களுக்கு கொடுக்கும். கூட்டு வாசிப்பிலும்கூட ஒரே புத்தகம் பலருக்கு பல வித வாசிப்பு அனுபவங்களைக் கொடுக்கின்றன. அதன் இலக்கு ஒன்றை நோக்கியதாக இருந்தாலும் அதில் செல்லும் வழிகள் வெவ்வேறானவை.

தான் வாசித்ததை இன்னொருவனும் வாசித்துவிட்டால் அவனுக்கும் நமக்குமான இடைவெளி குறைந்துவிடுமே என அச்சப்படும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் சதவீதம் குறைவுதான். அதைத்தவிர்த்து பலரும் தனித்தனியாகவோ குழுக்களாகவோ தாங்கள் வாசித்த புத்தகங்களை தொடர்ந்து பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நானும் அவர்களில் ஒருவன்தான். 

வாசித்த புத்தகங்களைக் குறித்து பேசுவதும் பகிர்வதும் வாசிப்பின் சுவையை இரட்டிப்பாக்குகிறது. அதோடு அதைப் பற்றி பேசும்போது அது மேலும் சுவையாகிறது.
இவ்வருடம் தொடர்ங்கி மார்ச் மாதம் வரை 17 புத்தகங்களை வாசித்திருந்தேன். அதுபற்றியப் பகிர்வை சிறு குறிப்புடன் எழுதியிருந்தான். 

இப்பதிவு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வாசித்த புத்தகங்கள் பற்றியதாக இருக்கும்.
நாவல்கள். மாதம் ஒரு நாவல் என்கிற எனது திட்டமிடலில் வந்திருக்கும் மூன்று நாவல்கள்.

18. அஹில்லா – நிலவின் 28 தோற்றங்கள்

- இது சூஃபி நாவல். முஅதஸ் மத்தர் எழுதி ரமீஸ் பிலாலி தமிழாக்கம் செய்திருந்தார். அருங்காட்சியகத்தில் வேலை செய்யும் வாய் பேச முடியாத மனிதனி எதிர்கொள்ளும் சிக்கலைச் சொல்லும் நாவல். ஒருபக்கம் அங்குள்ள ஒரு பொக்கிஷயத்தை திருடவேண்டிய நிர்பந்தம் இன்னொரு பக்கம் அங்கு அவனுக்கு ஏற்படும் காதல். அந்த பொக்கிஷயம் என்ன என்பது நாவலில் இன்னொரு பகுதியாக விரிந்து செல்லும். துப்பறியும் நாவலை வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்நாவலை வாசிக்கலாம். அவர்களுக்கு ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும். ஆனால் இந்நாவலின் முடிவை என்னை ஈர்க்கவில்லை.

19. சித்தார்த்தன்

- ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய திருலோக சீதாராம் தமிழாக்கம் செய்திருக்கும் நாவல். நீங்கள் ஒருமுறையேனும் இந்நாவலை வாசித்துவிடுங்கள். தாமதமாக இந்த நாவலை வாசித்துவிட்ட உணர்வை இந்நாவல் எனக்கு கொடுத்தது. வாழ்வின் அர்த்தம் எப்படி ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றது என்பதைத் தொடர்ந்து மனித மனம் எப்படியெல்லாம் நம்மை அலைக்கழிக்கும் என்பதை ரொம்பவும் ஆழகமாக இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கும்.

20. ஆலிஸின் அற்புத உலகம்

- லூயி கரோல் எழுதிய இந்நாவலை எஸ்.ராமகிருஷ்ணன் தமிழாக்கம் செய்திருக்கிறார். உலக புகழ்பெற்ற இந்நாவல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. கற்பனையின் ஆழம் எதுவரை செல்லும் என நமக்கு காட்டும் நாவல்களில் இதுவும் ஒன்று.
கவிதைகள்

21. காட்டோவியம்

- ஜீ.முருகனின் கவிதைத்தொகுப்பு. எனக்கு அவரது சிறுகதைகளைப் பிடிக்கும் பல கதைகளை வாசித்து நண்பர்களுடன் உரையாடியுள்ளேன். முதன் முறையாக அவரது கவிதைகளை வாசிக்கின்றேன். பெரும்பாலான கவிதைகள் வாசகனோடு உரையாடுவதாக அமைந்திருந்தன.

சிறுகதைகள்/குறுங்கதைகள்

22. தீர்மானம்

- எழுத்தாளர் ரிஸ்வான் ராஜாவின் சிறுகதைகள். 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் சில கதைகளைக் குறித்து விரிவாக பேச வேண்டும் என விரும்புகின்றேன். முழுமையான ஒரு கட்டுரையுடன் வருகிறேன்.

23.  ஆப்பிள் துப்பாக்கி பெட்ரோல் நிலையம்

- த. அரவிந்தனின் குறுங்கதைகள். 64 குறுங்கதைகள் அடங்கிய தொகுப்பு. சில கதைகளை இருமுறைக்கும் அதிகமாக வாசித்த பின்னரே புலப்பட்டது. ஏமாற்றாத குறுங்கதைகள் இவை. பலவிதமான குறுங்கதைகளை வாசித்த அனுபவத்தைக் கொடுத்தது.

கட்டுரைகள்

24. புனைநிலை உரைத்தல்

- மலேசிய எழுத்தாளர்கள் 4 பேரின் படைப்புலகம் பற்றிய விமர்சனக்கட்டுரை தொகுப்பு.

அடுத்து 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடருக்காக வாசித்தவை (சில மீள்வாசிப்பு)

25. நாகம்மாளின் மனக்குறிப்புகள்
- மனோகரன் கிருஷ்ணன் சிறுகதைகள்

26. மா.சண்முகசிவா சிறுகதைகள்
- எழுத்தாளரும் மருத்துவருமான மா.சண்முகசிவாவின் சிறுகதைகள்

27. மண்புழுக்கள்
- சீ.முத்துசாமியின் நாவல்

இந்த மூன்று புத்தகங்கள் குறித்தும் விரிவான அறிமுகத்தை நடுகல்.காமில் எழுதியுள்ளேன். நண்பர்கள் அங்கு சென்று வாசிக்கலாம்.

ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை வாசித்த புத்தகங்கள் இவை. வாசிப்பில் எத்தனை புத்தகங்களை வாசிக்கின்றோம் என்பதை விட 'வாசிக்கிறோமா?' என்கிற கேள்விதான் முக்கியம் என நம்புகின்றவன் நான். தினம் ஒரு பக்கத்தை புரிந்து ரசித்து வாசித்தாலும் கூட நாம் வாசகர்கள்தான்.   

இந்த ஆண்டின் இரண்டாம் பகுதியை முடித்து மூன்றாம் பகுதிக்குள் நுழைகின்றோம். அடுத்ததாய் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர்  மாதங்களில் வாசிப்பின் ருசி என்னவாக அமைகிறது என பின்னர்தான் தெரியவரும். வாசிப்போம்.

உங்களுக்கு எப்போதும் என் அன்பு..

ஜூலை 06, 2025

- எழுதவே எழுதுகிறேன் -


இளம்கவி இளமாறனைச் சந்தித்தேன்.

வீட்டிற்கு வந்திருந்தார். கவிதைகள் எழுதுவதிலும் அது குறித்து பேசுவதிலும் ஆர்வம் உள்ள இளைஞர்களில் ஒருவர்.

தொடர்ந்து இங்கு நடக்கும் பல மரபு கவிதைகள் போட்டிகளுக்கு பங்கெடுத்து கொண்டிருப்பவர். அதோடு நவீன கவிதைகள் எழுதவும் முயற்சித்து வருகிறார்.

சில சமயங்களில் அவர் எழுதிப் பகிரும் கவிதைகள் ‘அடடே நல்லாருக்கே..’ எனவும் நம்மை சொல்ல வைத்துவிடுகிறது.

தொடர்ந்து எழுதுவதின் மூலமே அவர் அவருக்கான இடத்தை அடைவார் என நம்புகிறேன். இதுதான் இயல்பு. அதை அவர் தவறவிட்டால் 'ஒருகாலத்தில் நல்லா

எழுதுகிட்டு இருந்த பையன்...!' என்ற அடைமொழி அமைந்துவிடும்.

எனக்கு பிடித்த கவிஞர்களில் ஒருவரான கவிஞர் இந்திரனின் கவிதைகள் குறைத்து எழுதப்பட்ட ‘இந்திரஜாலம்’ என்னும் புத்தகத்தை அவருக்கு பரிசளித்தேன்.

அந்தப் புத்தகத்தின் வழி இந்தரனின் கவிதைகளை வாசிப்பதோடு அவற்றை புரிந்து கொள்ளும் பயிற்சியும் அவருக்கு கிடைக்கும். அதற்கு ஏற்றவாரே அந்தக் கட்டுரைகளை நா.வே.அருள் எழுதியிருக்கிறார்.

எழுதுவதில் ஆர்வம் இருப்பவர்களிடம் தம்முடைய படைப்புகளை வாசித்து தன்னைப் பற்றி பேசவைத்து தன்னுடனேயே இருக்க வைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. (என் எழுத்துகளை வாசிப்பதும் அதைப்பற்றி பேசுவதும் அவரவர் விருப்பம்.) அப்படி செய்வது அந்த இளம் படைப்பாளிக்கு அந்தந்த நேர விளம்பரத்தையும் ஆர்வத்தையும் கொடுக்குமே தவிர; அதைத்தாண்டி அவர்களின் தனிப்பட்ட எழுத்திற்கு நீண்ட கால பயனை கொடுக்காது. கூட்டத்தில் இருந்தாலும் தனித்திருக்கும் வாய்ப்பு மிகச்சில படைப்பாளிகளுக்குத்தான் வாய்க்கின்றது. மற்றவர்களுக்கு இன்ன எழுத்தாளரின் நண்பர்/குழு, இந்த எழுத்தாளரின் வாசகர் என்கிற சிறு வட்டத்திலேயே சுருங்கி விடுகிறது.

தங்களை பெரிய வாசகச்சின்னமாக ஜொலிப்பவர்களின் பலர் ஒரே எழுத்தாளரின் வாசகராகவும் அவர்களுக்கான புகழ் மாலையை  தங்களின் நேரத்தால் தொடுக்கும் சேவகராகவும் இருந்துவிடுகிறார்கள். அதை குறைசொல்ல ஒன்றுமில்லைதான். ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் புகழ்பாடும் எழுத்தாளர் வாசிப்பதை இவர்களும் வாசிக்கிறார்களா என்று பார்த்தால் ‘ஹுஹும்’ அந்த எழுத்தாளரைத் தவிர மற்ற எதையும் வாசிப்பதுமில்லை தெரிந்து கொள்வதுமில்லை. அது பெரிய தவறில்லைதான். அதுவும் எதுவரை. பொதுவில் உங்கள் வாசிப்பை நீங்கள் கொண்டு வந்து வைக்கும்வரை. அவர்களும் தங்களை பின் தொடரும் இளம் எழுத்தாளர்களுக்கு; அவர்கள் வாசிக்க எதையும்  அறிமுகம் செய்வதில்லை. அதேபோல எதை வாசித்தால் அவர்கள் தன்னை விட்டு விலகிவிடுவார்கள் என்பதை அறிந்து அவர்களை அதனிடம் நெருங்குவதில்லை.

இங்கு சில இளம் எழுத்தாளர் தாங்கள் வாசிக்கும் எழுத்தாளர்களின் ‘பிழை திருத்துனர்களாகவே’ மாறிவிட்டார்கள். அந்த எழுத்தாளர் எழுதும் கதைகளை இவர்களுக்கு அனுப்பிவிட்டு “உங்கள் பார்வைக்கு மட்டும், பிழைகளோ குழப்பங்களோ இருந்தால் சொல்லவும். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்’ என்கிறார்கள். இதே செய்தியை (தாழ்மையான விண்ணப்பத்தை) ஒருவருக்கு மட்டுமல்ல பலருக்கும் அனுப்புகிறார்கள். பிழைகளில் இருந்து அவர் எழுதிய புனைவுகள் வரை இருக்கும் பல சிக்கல்களை பலபேர் சொல்லக்கேட்டு அதற்கான திருத்தங்களையும் அவர்களிடமே கேட்டு திருத்தி தங்கள் பிரசுரிக்க அனுப்புகிறார்கள். (அப்படி செறிவாக்கம் செய்வது படைப்பிற்கு நல்லதுதான் ஆனால் ஒரு படைப்பை செறிவாக்கம் செய்வதற்கும் ஒன்றுமில்லாததை செறிவாக்கம் செய்வதாகச் சொல்லி அடுத்தவர்களை அந்தப் புனைவை எழுத வைப்பது நல்லா என்ன?) அதுவே நாளை புத்தகமாக பிரசுரமாகும் போதும் அதனைத் திருத்திய செறிவாக்கம் செய்த யாரின் பெயருமே அந்தப் புத்தகத்தில் இருக்காது. ஏனேனில் அந்தப் புனைவு அந்த எழுத்தாளரின் நூறு சதவித திறமையாம்.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்லவேண்டும். அதுதான் நான் சொல்ல வந்ததை முழுமையாக்கும்.

நண்பராக இருந்தாலும் சரி வாசகராக இருந்தாலும் சரி அல்லது முன்னால் நண்பராக வாசகராக இருந்தாலும் சரி, ஒரு சிலரால் மட்டுமே தாங்கள் வாசித்த படைப்பின் குறைநிறைகளை எந்தத் தடையுமின்றி எழுதவும் பகிரவும் முடிகிறது. அவர்களால் ஒரு படைப்பை அந்தப் படைப்பாளியிடம் இருந்து விலக்கி முழுக்கவும் அந்தப் படைப்பையொட்டி விவாதிக்க முடிகிறது.

அதனை ஒருபக்கம் விடுவோம், இன்றைய இளம் தலைமுறை எழுதுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அதனை அவரவர் தன் சுய இலாபத்திற்காய்ப் பயன்படுத்தியும் கொள்கிறார்கள். வாசிக்க ஆரம்பித்தாலே போதும் இதுபோன்ற சூழ்ச்சிகளில் இருந்து இவர்கள் தப்பித்துக்கொள்ளலாம்.

எழுத வேண்டும் என இவர்களிடம் வருபவர்கள், இலக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்களாகவும், இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் வாங்கி கொடுப்பவர்களாகவும், கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தால் இலவசமாக நிகழ்ச்சிக்கான இடத்தை ஏற்பாடு செய்பவராகவும், வி.ஐ.பிகளை மரியாதையோடு மேடை ஏற்றி இறக்குபவர்களாகவும் இப்படி பல 'களாகவும்' ஆகிவிடுகிறார்களே தவிர ஒருபோதும் எழுத்தாளர்களாக ஆவதில்லை.

இதில் யாரை குறை சொல்ல?

வாசிக்காமலேயே எழுத வேண்டும் என களம் இறங்குவதில் இருந்துதானே இந்த இலக்கிய ஸ்கேம் தொடங்குகிறது.

ஜூலை 05, 2025

- பக்தி பாழ் -


கடவுள் நம்பிக்கையில்
நாம்
மன்னிப்பு கேட்கவும்
நம்மை நாமே
மன்னிக்கவும்
பழகினோமோ இல்லையோ..

கடவுள் பெயரால்
எல்லோரையும் தண்டிக்க
பழகிவிட்டோம்

பக்தியையும் பாழாக்கிவிட்டோம்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை



ஜூலை 04, 2025

- சம்பளத்தின் பாவம் -

யாருடைய சாபமாக

இருந்தாலும்

பரவாயில்லை

அது தமக்கு

சம்பாத்தியமாக ஆகிவிட்டால் போதுமென்கிற

மனநிலையில் கொஞ்சமும்

குற்றவுணர்ச்சியின்றி

மனிதர்களாய்ப்

போலி செய்கிறார்கள்...


ஜூலை 02, 2025

- ஊஞ்சலாடும் உள்ளம் -


அவன் தற்கொலை

செய்துகொள்ளும் முன்

ஒருபோதும்

அவன் அதற்கு ஆசைப்படவேயில்லை


நமக்குத்தான்

அது தற்கொலை


அவனைப் பொருத்தவரை

இத்தனை நாட்களாக

நடமாடி

நாடகமாடிக்கொண்டிருந்த

தன் பிணத்தை

தானே

கழுத்தில் கயிறு கட்டி

ஊஞ்சலில் ஆட்டிவிட்டிருக்கிறான்..

ஜூலை 01, 2025

எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜுடன் சந்திப்பு


சமீபத்தில் சிங்கையில் இருந்து வேலை நிமித்தமாக மலேசிய வந்திருந்த எழுத்தாளரும் அண்ணனுமான சித்துராஜ் பொன்ராஜ் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பார்க்க வாய்ப்பு கிடைக்கும் எழுத்தாளர்களை முடிந்தவரை நான் தவறவிடுவதில்லை. பிரிக்பீல்ட்ஸில் சந்திக்க முடிவெடுத்தோம்.
எழுத்தாளரைச் சந்திக்க நம்மூர் எழுத்தாளர்களையும் அழைத்துச் சென்றேன். எழுத்தாளர் ஸ்ரீகாந்தனும் எழுத்தாளர் பிருத்விராஜூம் வந்திருந்தார்கள்.




இரவு வரை பேசினோம். எங்கள் உரையாடல் இலக்கியம் குறித்தே அமைந்திருந்தது. என்னிடம் இருந்த சித்துராஜ் புத்தகங்களை எடுத்துச் சென்றிருந்தேன். அவரிடம் கையொப்பம் வாங்கி கொண்டேன்.. நான் எழுதிய புத்தகங்களை அவருக்கு கொடுத்தேன். என் புத்தகங்களின் ஒன்றை இவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன்.



சில ஆண்டுகளுக்கு முன் குறுங்கதைகளை முகநூலில் எழுதி பகிர்ந்த சமயங்களின் குறிப்பிட்ட சிலரே அதனை கவனித்தார்கள் பின்னரே அது பெரிய வாசக பரப்பை அடைந்தது.

நான் குறுங்கதைகளை எழுதி பகிர்ந்த ஆரம்ப கட்டத்தில் தொடர்ந்து என் கதைகளை வாசித்து அவரின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவரது வலைப்பக்கத்திலும் என் கதைகளைக் குறித்து அறிமுக கட்டுரையை எழுதியிருந்தார்.

குறுங்கதைகளைத் தொகுத்து புத்தகமாக்கும் சமயத்தில் அவரிடமே முன்னுரையைக் கேட்டிருந்தேன். மீண்டும் ஒருமுறை என் குறுங்கதைகளை வாசித்து நல்லதொரு கட்டுரையாகவே எழுதி கொடுத்திருந்தார்.
இளம் படைப்பாளிக்கு அவர் கொடுத்த ஊக்கம், குறுங்கதைகள் மீதான என் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.


இப்போதுதான் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகங்களை அவரிடம் கொடுத்தேன்.

எங்கள் உரையாடலும் , இலக்கியம் மீதான எங்கள் கருத்துகளும் எங்களின் அன்றைய பொழுதை பயனுள்ளதாக்கியது.

எழுத்தாளர் பிருத்விராஜு, எங்களை அழகாய்ப் படம் பிடித்திருந்தார்.



#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்