பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 31, 2025

- பிதாவின் புத்திரன்கள் -

 


எல்லோரும்

அவரவர் உள்ளங்கை

பிடிமானத்திற்கு பொருத்தமான கற்களை 

எடுத்துக்கொண்டார்கள்


எதிரே

பெண்ணொருத்தி 

பாதியுடல் புதைக்கப்பட்டு

பாதியுடல் பதைபதைக்க

பார்த்துக்கொண்டிருந்தாள்


யாராவது ஒருவர்

முதற்கல்லை அவள் மேல்

வீசியெறியவேண்டும்

அந்தவழியைப் பின் தொடர்ந்து

எல்லா கற்களும்

ராக்கெட்டுகளாக பாயும்


முதற்கல்லின் குறி 

ஒருபோதும் தவறக்கூடாது

இதுதான் உலகநியதி


சரியாக

மிகச் சரியாக

மிகமிகச் சரியாக

அந்தப் பெண்ணில் 

நெற்றிப்பொட்டில்

புருவத்தில்

கண்ணில்

காதில்

மூக்கில்

உதட்டில்

தாடையில்

கழுத்தில்

மார்பில்

வயிற்றில்

என ஏதோ 

ஓர் உறுப்பைத் தொட்டேயாக வேண்டும்


அது தவறினால்

இந்த விளையாட்டு சுவாரஸ்யமற்றதாகும்

அப்படியாவதை யாருமே

விரும்பவில்லை

அதற்கு 

காரணமாகவும் ஆகவில்லை


வழக்கம் போல

மக்களுக்கு போதனை நிகழ்த்த

பிதாவின் புத்திரன் 

அங்குமே தோன்றினார்


முதற்கல்லை 

உத்தமன் ஒருவன்

நல்லவன் ஒருவன்

தூயவன் ஒருவன்

நேர்மையானவன் ஒருவன்

ஒழுக்கம் காக்கும் ஒருவன்

வீசுங்களேன் என 

இன்னும் எத்தனை காலம்தான்

சொல்வதென சிந்தித்தவர்


தன் துழை பொருந்திய

உள்ளங்கைக்கு ஏற்ற கல்லைக்

கையில் எடுத்தார்


எல்லோரும் அவரை பார்க்க

சட்டென தன் தலையில் தானே அடித்துக்கொண்டார்


எல்லோருக்கும் உதிரம் ஒன்றுதானே

வலியும் ஒன்றுதானே

இவ்வலியை

இன்னொரு மனிதனுக்கு

கொடுப்பதை எந்தப்

பிதாவும் விரும்புவதில்லை

என்று வான் நோக்கி

சத்தமிட்டார்


கொஞ்ச நேர அமைதிக்கு பின்


கூட்டத்தில் ஒரு குரல்

"ஆஹா முதற்கல்  இரத்தம் பார்த்துவிட்டது....!" 

என் கத்தவும்


கையில் இருந்த

கற்கள் அனைத்தையும்

பிதாவின் புத்திரன் மீது

வீச ஆரம்பித்தார்கள்


அந்தக் குதூகலம்

அவ்வெறுமையைப் போக்கி

சூழலைச்

சுவாரஸ்யமாக்கியது


ஒவ்வொரு கல்லிலும்

இரத்தக்கறை






ஜனவரி 30, 2025

- கண்களைத் தேடும் கவிதைகள் -

 


அந்தக் கவிதையை
வாசித்து
விடுமுறை இரவு முழுக்க
தேம்பித்தேம்பி அழுதேன்
என்றேன்
கண்களில் நீர் ததும்ப ததும்ப

அவர்களுக்கு
அது கிச்சுகிச்சு மூட்டியிருக்கவேண்டும்
சட்டென அவர்களுமே
கண்களில் நீர் ததும்ப ததும்ப
சிரிக்கிறார்கள்

கவிதை
ஒருவனை சிரிக்க வைக்கும்
என நம்பும் அறிவிற்கு
கவிதை
ஒருவனை அழவும் வைக்கும்
என ஏன் அறிந்திருக்கவில்லை

கவிதை வாசித்தல்
என்பது
தானும் அக்கவிதை வரியின்
ஏதோவொரு  சொல்லென
வாசித்து
தேடி
கண்டறிந்து
நம்புவது தானே

தாயின் அரவணைப்பையும்
தந்தையின் அறிவுரையையும்
காதலியின் அணைப்பையும்
நண்பனின் ஆறுதலையையும்
கடவுளின் ஆசியையும்
கன்னிவெடியென தன்னுள்
மறைத்திருக்கும் கவிதைகளை
மிகச்சரியாக அழுத்த வேண்டியது
நாம்தானே

அந்த வெடிப்பின்
பிரகாசத்துளிதான் எத்துணை
ஒளி பொருந்தியது

மறை பொருளை கண்டறிந்த
யாருமே இதுவரையில்
மறைந்தும் போனதில்லை
நம்மால் மறந்தும் போனதில்லை

கவிதை வாசிக்கும்
நண்பர்களே
குறுக்குவழி கேளுங்கள்

யாருமற்ற அறையில்
உங்கள் கண்ணீர்த்துளிகளைக்
கவிதைகள் மீது
பரவும்படி அழுங்கள்

கண்ணீர் நனைத்த
காகிதத்தில் இருந்து
சட்டென ஒரு கை
பொத்துக்கொண்டு வரும்

அதுதான்
கவிதை உங்களைக்
கண்டறிந்ததின் முதல்
அடையாளம்
அதுதான் தொடக்கம்

வாழ்நாள் முழுக்க
அது உங்களையே
பின் தொடரும்

கைவிட்டு விடாதீர்கள்....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜனவரி 28, 2025

- மௌன நாற்காலிகள் -

 


ஏதோ
ஒரு குழந்தைதான்
கடைசியாய் அமர்ந்திருக்க
வேண்டும்

அதன் பின்
யாருமே சீண்டாத
ஒரு நாற்காலியின் கதை
என்னிடம் உண்டு

மஞ்சளாய்க்
கரை படிந்து
கைப்பிடிகளின் நிறம் மங்கி
அமர்ந்து அமர்ந்து
வழுக்கிய இருக்கை
கொஞ்சமாய் உள்வாங்கி
பள்ளமாய்விட்டது

சாப்பாட்டு மேஜையின்
கால்களுக்கு இணையாக
வளர்ந்து நிற்கும் கால்கள்
அதற்குண்டு

அதிலேயே உணவுக்கான
தட்டை வைக்கலாம்
தண்ணீர்க்குவளை வைக்கலாம்
பால் போத்தலை வைக்கலாம்
சத்தமிட்டு
நின்றபடி
வெளிச்சமடிக்கும்
விளையாட்டுக்கூட்டாளியையும்
அங்கே ஒட்டி வைக்கலாம்

அப்போதும் கூட
அமர்ந்திருக்கும் குழந்தை
ஒருபோதும் திருப்தி
கொள்ளாது
அருகிலுள்ள
மேஜைக்கே தாவ முயலும்

எத்தனை பெரிய அவமானமது
ஆனாலும் அந்த நாற்காலி
அதனை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை

அமர்ந்திருக்கும் வரை
அதுதான் எந்தக் குழந்தைக்கும்
தாய்

கவனித்தது உண்டா
இதுவரை
எந்தக் குழந்தையும்
அந்த நாற்காலியில் இருந்து
தவறி
விழுந்து காயப்பட்டதேயில்லை

கடைசியில் அதனை
வெறும் ஜடமாக
நாம் தூக்கி வீசினாலும்

அது தன்னை
ஏதோ ஒரு குழந்தையைத்
தூக்கி சுமந்த
நினைவுகளோடே
நிரந்தர நித்திரை கொள்ளுமே
தவிர
ஒரு போதும்
குழந்தைகளை துன்புறுத்தாது.... 


ஜனவரி 27, 2025

- அகவரி தேடும் கதைவரி -



நான் 

எழுதுகிறவன்

கதைகள் எழுதுகிறவன்

என் இன்பத்தையும்

துன்பத்தையும்

என் வலியையும்

மருந்தையும்

என் ஏமாற்றத்தையும்

நான் ஏமாற்றியதை உட்பட


இருமுனைகளையும்

இரு முரண்களையும்

சொற்கள் மேல் சொற்களென

கோர்த்து இணைத்து 

அழுத்தி உருட்டி

தட்டித் தடவி

நீவி

இன்னொரு அருவாய்

இன்னொரு உருவாய்

இன்னொரு உளதாய்

இன்னொரு இலதாய்

நான் கதைகள் எழுதுகிறவன்


விரல்களில் சேர்ந்து 

விரலாகும் எழுதுகோலோ

விரல்களால் இசைக்கும் 

தட்டச்சு பலகையோ

எதுவொன்றும் எனக்கு

சிக்கலின்றி

பிரபஞ்சத்துளியை என் மேல்

தூவுகின்றன


முகவரி தெரியாத

மனிதனின்

அகவரியைத் தேடி 

கதைகளை அனுப்பிவைக்கும்

பணியாள்


நான்

கதையாள்


எல்லா கதைகளையும் 

நான் எழுதிவிடுவதில்லை

சில கதைகள்

நடக்கட்டும் என்று எழுதுகிறேன்

சில கதைகள்

நடக்கக்கூடாது என்று எழுதுகிறேன்

இன்னும் சில கதைகளை நான் எழுதவே கூடாது 

என்பதற்காக

நானே எழுதி வைக்கிறேன்


பிரபஞ்சத்தின் தபால்காரர்களுக்கு

உங்கள் முகவரி வேண்டாம்

வேண்டவே வேண்டாம்


உங்கள் அகவரியே 

எங்களுக்கான

வழிகாட்டி


எங்கள் கதைகளே

உங்களுக்கான

ஒளி கூட்டி....

ஜனவரி 26, 2025

- நன்றிக்கதை -

 


ஓர் எழுத்தாளனின்

இரு கரங்களிலும்

மாபெரும்

துவாரங்கள் உள்ளன


எல்லைகளற்று

எதையும் விழுங்கும்

மாயத்துவாரம் அவை


விழுங்குவதில்

எந்தவித பாரபட்சமும்

அதற்கில்லை

விழுங்குவது மட்டுமே

அதன் பிறவி குணம்


அவனின் சம்பாத்தியம்

ஆசை

கனவு

நிம்மதி

நற்பெயர்

மரியாதை

மகிழ்ச்சி

ஆரோக்கியம்

இளமை

இனிமை

என எல்லாவற்றையும்


அந்தத் துவாரம் 

உள்ளிழுத்து 

கடித்துத் தின்று 

விழுங்கி செறிக்கிறது


அதற்கு கைமாறாகத்தானே

அது

அவனெழுத கதைகளைக்

கொடுக்கிறது...


ஜனவரி 25, 2025

- தொலையாதூரம் -

 


 எவ்வளவு தூரம்

போகமுடியும் 

என தெரியவில்லை

ஆனால்

எவ்வளவு தூரம் 

முடியுமோ

அவ்வளவு தூரமும் 

போகத்தான் வேண்டும்


தொலை தூரம்தான்

உறவுகளையும்

உள்ளங்களையும்


உங்களையுமே

தொலையாமல் பார்த்து கொள்கிறது....

ஜனவரி 24, 2025

- பாவச்சுழல் -

 


தன்னைத்தானே 

தண்டிக்கும்

கண்ணீரில் கரையும்

கழுவேற்றிக்கொள்ளும்

மனிதனை

எல்லோருமே விரும்புகிறார்கள்


மன்னிப்பதை போல

அதில் 

எந்தவித சிரமமும் 

எந்தவொரு வருத்தமும்

எப்படியான துக்கமும்

குற்றவுணர்ச்சியும்

அவர்களுக்கில்லை


ஆகவே


தன்னைத்தானே 

தண்டிக்கும்

கண்ணீரில் கரையும்

கழுவேற்றிக்கொள்ளும்

மனிதனை எல்லோருமே

விரும்புகிறார்கள்


ஜனவரி 23, 2025

- சிலுவை பூக்கும் முகங்கள் -


தற்கொலைக்கு 

முந்தைய 

சில மணிநேர மனிதர்களில் 

ஒருவனை

சந்தித்தேன்


ரொம்ப நேரம்

சிரித்தபடி அமர்ந்திருந்தான்

வாடிக்கையாளர்கள்

அவனைத்தான் வேடிக்கை

பார்த்தார்கள்


அவன் கண்களில்

தாரைத்தாரையாக 

கண்ணீர் வரும்வரை

சிரித்தபடி

கைப்பேசியில் எதையோ

பார்த்து கொண்டிருந்தான்


இப்படியொரு  சிரிப்பை

வேறெங்கும் நான் பார்த்ததில்லை


ஒரு மனிதனால்

இத்துணை ஆனந்த சிரிப்பை

சுமக்க முடியுமா என

நான் யோசித்திருக்கவும் இல்லை


சுற்றியுள்ள

எதிலும் அக்கறையற்ற

அந்த மனிதனிடம் ஏதோ

ஓர் ஆரா 

மிளிர்ந்து

எங்களுக்கும் தொற்றிற்று


நாங்களுமே சிரிக்கலானோம்

சிரித்தோம்

சிரித்தோம்

சிரித்தோம்

சில மணிநேரத்திற்கு மட்டும்.


பின்னர்தான் புரிந்தது

சிரிப்பென்பது சிரிப்பது மட்டுமல்ல

சிரிக்காமல் இருப்பதும்தான்


சிரிப்பென்பது சிறை

சிரிப்பென்பது சீழ்

சிரிப்பென்பது ஊழ்

சிரிப்பென்பது போலி முகம்

சிரிப்பென்பது மாயை

சிரிப்பென்பது நமக்கு நாமே

அடித்துக்கொள்ளும் ஆணி 

சிரிப்பென்பது நம்மை நாமே 

சுமந்து திரியும் சிலுவை


ஜனவரி 22, 2025

- குடும்ப நண்பருக்கான விண்ணப்ப பாரம் -


ஒருவரின் குடும்ப நண்பராக இருப்பதற்கு தேவைப்படும்

தகுதிகள் இவை :-


முதலாவது

நாம்

பிரபலமாக இருக்க வேண்டும்

இரண்டாவது

நாம் 

அரசியல்வாதியாக இருக்க வேண்டும்

மூன்றாவது 

நாம்

அழகாக இருக்க வேண்டும்

அடுத்தது

நாம் 

பணக்காரராக இருக்க வேண்டும்

அடுத்தது

நாம்

அவர்களைவிட வசதியாக இருக்க வேண்டும்

நாம்

பெரிய கார் வைத்திருக்க வேண்டும்

நாம்

மருத்துவராக இருக்க வேண்டும்

நாம்

வழக்கறிஞராக இருக்க வேண்டும்

நாம்

சமூக வலைத்தளத்தில் குறைந்தது

அரை மில்லியனாவது ஃபாளோவர் வைத்திருக்க வேண்டும்

இத்யாதி... 

இத்யாதி...


பின் குறிப்பு ;

தவறியும் நாம் அந்தக்

குடும்பத்தில் ஒருவராகவோ அவர்களுக்கு

நண்பராகவோ இருந்துவிட கூடாது;

நிராகரிக்கப்படுவோம்.

ஜனவரி 21, 2025

- காலாவதி காப்பீடு -


எதையும்

வேண்டுமென்றுதான்

எல்லோரும்

செய்வார்கள்


நீங்களும்தான்;


வேண்டுமென்று செய்கிறீர்கள்

அதன் உள்ளடுக்கோ

என்னை வேண்டாம் என்றே

விலக்குகிறது

அதனைப் புரிந்து

கொள்ளும் அனுபவப்பாடம்

முன்னமே

எனக்கு நடந்துவிட்டது


சரி

செய்யுங்கள்.


என் பெயரை அழித்துவிடுங்கள்

என் கைப்பேசி எண் 

இல்லையென்றே சொல்லுங்கள்

அடிக்கடி கோவப்படுவேன் 

என்றும் பரப்புங்கள்

விண்ணப்பித்த வேலைக்கு 

நான் லாய்க்கற்றவன் என்றும்கூட

நிறுவுங்கள்


அதுதான் உங்களுக்கு 

ஆனந்தம் என்றால்

நாம் சேர்ந்தே கொண்டாடுவோம்

பட்டாசுகள் வெடிப்போம்


உங்கள் செய்கை

உங்களின்

ஆயுளை நீடிக்குமென்றால்

எனக்கும் மகிழ்ச்சிதான்


ஆனால்

உங்களைச் சுற்றி

எல்லாமும் தொலைந்து

எல்லாமும் இழந்து

எல்லாமும் விலகி

நீங்கள் மட்டும்

நீண்ட ஆயுளில்

என்னதான் செய்வீர்கள்

என்பதை மட்டும்

எனக்கு விளக்கிவிடுங்களேன்


உடனே பட்டாசுகள்

வாங்கி வருகிறேன்..

ஜனவரி 20, 2025

- நஞ்சுண்ட சொற்கள் -




என்ன பேசுவது

எப்படிப் பேசுவது

என்பதெல்லாம்

எனக்குமே  

எப்போதும் பிடிபடுவதில்லை

அறிவிற்கும் அகப்படுவதில்லை


எதையோ

பேசிவிடுகிறேன்

எதையாவது

சொல்லிவிடுகிறேன்.


சொன்ன வார்த்தைகள்

எல்லாம்

யார் யார் காதுக்கும் சென்று

யார் யார் வாய்க்கும் மென்று

வெவ்வேறு அர்த்தமாய்


வளர்ந்து நின்று

என்னைப் பார்த்து 

சிரித்து பயம் காட்டுகின்றன


வளர்த்த கடா 

மாரில் பாய்ந்த கணக்காய்

பார்த்துப்பார்த்து 

நான் வார்த்த வார்த்தைகள்

என் மாரிலே

குத்தி கூர் பார்க்கின்றன

குதித்து வரும் இரத்தத்தையும்

குடித்தும் விடுகின்றன


வளர்ந்த கடா மட்டுமல்ல

இவர்கள் வளர்த்துவிடும்

வார்த்தைகளையும்

இனி

நம்புவதற்கில்லை


யார்யாரோ போட்ட தீனிக்கு

வளர்ந்து நிற்கும்

நம் வார்த்தைகள்

ரொம்பவும் ஆபத்தானவை


"நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை...!"

என்பதை


நாம்கூட நம்பாதபடிக்கு 

வார்த்தைகள் நன்றி கெட்டவையாய்

நடப்பதில் ஆச்சர்யம்

இருப்பதில்லை


செஞ்சோற்றுக் கடனில் இருந்து

யாரால்தான் தப்பிக்க இயலும்...

ஜனவரி 19, 2025

அதன் பெயர் முகமல்ல !

 

சூது வாது

தெரியா முகங்கள்

கொண்டவர்கள் பாக்கியசாலிகள்


அவர்களின் முகங்களே

அவர்களுக்கான பாதுகாப்பு கவசம்


கையும் களவுமாக

பிடித்தாலும்

கண்முன்னே எதுவும்

நடந்தாலும்

அவர்கள் மீது

துளியும் சந்தேகம் எழுவதில்லை


அவர்கள் செய்யும்

அயோக்கியத்தனத்திற்கும்

அடையாளமே இருப்பதில்லை


ஊரை ஏமாற்றும்

முகத்தைத்தான்

தினம் தினம் பார்க்கிறார்கள்


என்றாவது ஒருநாள்

கண்ணாடியே காரி துப்பும்தானே


அப்போதுகூட

கண்ணாடிதான் வெட்கி

தலை கவிழும்

விழுந்தொடியும்...

ஜனவரி 17, 2025

நிறுவு


குற்றம் சொல்வதற்கு

எந்தவொறு ஆதாரக்கூறுகளும்

அவசியமற்றவை


சொல்லிக்கொண்டே

அடுக்கிக்கொண்டே

போய்க்கொண்டே இருக்கலாம்


ஆனால் அவற்றை

இல்லையென்று நிரூபிக்கத்தான்

இங்கு

படாதபாடு படவேண்டியுள்ளது


யோசித்துப்பார்த்தால்


குற்றம் சொல்லிச் சென்றவர்களைவிடவும் 

அதை 

இல்லையென்று நிரூபிக்கச் சொல்லி


காத்திருக்கும்

சமூகம்தான் எத்துணை

மோசமானது....

ஜனவரி 14, 2025

பொதுவாக சொல்கிறவர்கள்


'நான் எல்லோரையும் சொல்லவில்லை.."

'நான் எல்லோரையும் சொல்லவில்லை.."


என

சொல்லிச்சொல்லியே

நம்மாலும்

அவர்களாலும்

எல்லோரையும்

சொல்லிவிட முடிகிறது

ஜனவரி 12, 2025

- பொய்த்தின்னிகள் -




நாம் 

எல்லாவற்றுக்கும்  நேரடியாக 

பதில் கொடுக்க வேண்டிய 

அவசியம் இல்லை


அமைதியாய்

எதிர்கொள்ளலாம்


அவரவர் வாய்

அவரவர் சொல்லும் பொய்


அதுதான் அவர்களின்

சோற்றுக்கான வழியென்றால்

நாம் ஏன்

அதை கெடுப்பானேன்


பொய்யைச் சொல்லி

பொய்யைத் தின்று

பொய்யாலே புதைந்து போக

அவர்களே தயாராய் இருக்க

நம்மால் என்ன 

செய்ய முடியும் சொல்லுங்கள்


நாம் 

கொடுக்காத பதிலுக்கான 

வாய்ப்பை

காலம் பயன்படுத்தி கொள்ளட்டும்..


ஜனவரி 04, 2025

பொய் சொல்லிப் பழகுவோம்

 

பொய் சொல்ல

கற்றுக்கொள்ளுங்கள் நண்பர்களே

அதுவொன்றும் பெரிய

குற்றமில்லை

யாருக்கும் தெரியப்போவதுமில்லை


சொல்லப்போனால்

இந்தப் பொய்கள் மீது

மற்றவர்களுக்கு பொறாமைதான்

வருமே தவிர

கோவமெல்லாம் வராது


அப்படியே வந்தாலும்

அதுவும் அவர்கள் மீதுதான்

வரும்

நமக்கு எந்தச் சிக்கலுமில்லை


ஆனால் 

இந்தப் பொய்களை 

நாம் மனதார சொல்லவேண்டும்

அடுத்தவர் நம்புவதற்கு முன்

நாமே நம்மையும்

நாம் சொல்லும் பொய்யையும்

நம்பவேண்டும்


ஆழமாக

ரொம்பவும் ஆழமாக

தோண்டிய பின்

நாமே மேலேறி வர முடியாதபடிக்கு

ஆழமாக 

அதை நாம் 

நம்ப வேண்டும்


கண்டிஷனாக

காலை மூன்று வேளை

இரவு மூன்று வேளை 

சொல்லியே தீரனும்

மதியத்தில் சொல்வதும் 

சொல்லாததும்

அவரவர் பாடு


தனியாக அமர்ந்து கொள்ளுங்கள்

மூச்சை நன்றாக

மேலுக்கு ஒருமுறை

கீழுக்கு ஒருமுறை

என 

முறையாக 

மூன்று மேலும்

மூன்று கீழும்

விடவும்


ஒரேடியாக விட்டுவிடாதீர்கள்

கவனம்


கண்கள் இரண்டும்

புருவ மத்தியை

நோக்க வேண்டும்

காதுகளுக்கு இம்சை கொடுக்காத

எந்தப் பின்னணி இசையையும் வைத்து கொள்ளலாம்


இப்போது

நீங்கள்

பொய் சொல்ல

தயாராகிவிட்டீர்கள்

ஆரம்பிக்கலாம்

சொல்லுங்கள்

மனதார சொல்லுங்கள்

சந்தேகங்களின்றி சொல்லுங்கள்


முழுமையாக ஒவ்வொரு சொல்லையும் உணர்ந்து சொல்லுங்கள்


"நான் நன்றாக இருக்கிறேன்.."

"நான் நன்றாக இருக்கிறேன்.."

"நான் நன்றாக இருக்கிறேன்.."



ஜனவரி 03, 2025

சந்தேகம் கொள்ளாதே...



 கண்கள்
இதயத்தின் நுழைவாயில் அல்லவா
ஏன் அதை
மூடி வைத்திருக்கிறாய்

திற
முதலில் உள்ளிருக்கும்
கசப்புகளும் கசடுகளும்
கண்ணீரால் கழுவி விடப்படட்டும்

பின்
எங்கிருந்தாவது ஓரொளி
உன் விழியை
வந்தடையும்

காலியிடங்களே நிரப்பபடும்
இதுதானே இயற்கை

சந்தேகம் கொள்ளாதே

கண்ணீர் விடவும்
காலி செய்யவும்
கொஞ்சமாய்த் தேவை
துணிச்சல்
அவ்வளவேதான்..

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜனவரி 01, 2025

புத்தாண்டில் புதிய தொடர்

 


புத்தாண்டின் புதிய உற்சாகம் என சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்...

நடுகல்.காம் இணைய இதழுக்கு 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' என்ற மதாந்திர தொடரை எழுதுகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னமே என் வலைப்பூவிலும் முகநூலிலும் இந்தத் தலைப்பில் எழுத தொடங்கி;  தொடராமல் போன தொடர் இது... 

அதற்கான குறிப்புகளையும் புத்தகங்களை மீள்வாசிப்பு செய்வதற்கான நேரம் இப்போது அமைந்துள்ளது.

இம்முறை இத்தொடரை எழுதுவதற்கான தகுந்த இடம் கிடைத்திருக்கிறது. இனி திட்டமிட்டபடி இதனை முழுமையாக்கலாம்.

நான் வாசித்த/வாசிக்கும் மலேசிய புத்தகங்கள் குறித்த என் வாசிப்பு அனுபவத்தை இனி ஒவ்வொரு மாதமும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

இதுதான் இப்புத்தாண்டில் உங்களுக்கு நான் கொடுக்கும் பரிசு. அதனை வாசிப்பதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு. இவ்வாண்டு முழுக்க நாம் பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளவிருக்கின்றோம். மகிழ்ந்திருப்போம்


அன்புடன் தயாஜி.

வாசிக்க இணைப்பு 👉

https://nadukal.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae/

புத்தாண்டின் முதல் வாசிப்பு

 

பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டில் வாசிக்க ஆரம்பித்திருக்கும் புத்தகம். எலிஃப் ஷ்ஃபாக் எழுதி ரமீஸ் பிலாலி மொழியாக்கம் செய்த;
'காதலின் நாற்பது விதிகள்'
Tamil translation of The Forty Rules Of Love.

"பிரபஞ்சம் கதைகளால் ஆனது, அணுக்களால் அல்ல...." நாவலில் வாசித்த முதல் வாக்கியம்.

இந்த நாளை மட்டுமல்ல, இவ்வாண்டின் இறுதிநாள் வரை கொண்டாடுவதற்கு வேறென்ன வேண்டும்....
நல்லத் தொடக்கம்தானே💙

அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்


2024-ல் வாசித்த புத்தகங்கள்

 

ஒவ்வொரு ஆண்டும் நான் வாசித்த புத்தகங்களை எண்ணிக்கையிட்டு பகிரும் போது, இதைவிட அதிகம் வாசித்தவர்களின் புத்தக பட்டியலைப் பார்க்கும் போதும் கொஞ்சம் வெட்கப்படுவதோடு அடுத்த ஆண்டு இன்னும் அதிகமான புத்தகங்களை நம்மால் வாசிக்க முடியும் என்கிற உந்துதலையும் பெறுகின்றேன்.

ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 50 புத்தகங்களைக் கூட வாசிக்க முடியவில்லையா என்னை நானே திட்டிகொண்டாலும், அந்த எண்ணிக்கையை தொடுவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுக்கவும் செய்கின்றேன்.

வெறுமனே வாசிக்கிறேன் என இல்லாமல், முடிந்தவரை தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன். வாசித்ததையொட்டி பதிவு செய்வதோடு இன்னொரு வாசகனுக்கு அறிமுகமும் செய்கிறேன்.

இது கடந்த ஆண்டில்  (2024) 

நான் வாசித்த புத்தகங்கள்..

நாவல்கள்

1.   தாரா – ம.நவீன்

2.   கரிப்புத் துளிகள் – அ.பாண்டியன்

3.   கையறு – கோ.புண்ணியவான்

4.   ஆழம் – சீ.முத்துசாமி

5.   அவன் காட்டை வென்றான் – கேசவ ரெட்டி (தமிழாக்கம் ஏ.ஜி.எத்திராஜுலு)

6.   பாய்மரக்கப்பல் – பாவண்ணன்

7.   கிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழாக்கம் எம்.எஸ்)

8.   பிறிதொரு நாள் – ரெ.விஜயலெட்சுமி

9.   பனியரசி – ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (தமிழாக்கம் சூ.ம.ஜெயசீலன்)

10. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

11. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா

12. வாழும் மாமலை – அமிதாவ் கோஷ் (தமிழாக்கம் கண்ணன்)


கவிதைகள்

13. புன்னகைக்கும் பிரபஞ்சம் – கபீர் (தமிழாக்கம் செங்கதிர்)

14. மங்கிய நீலப் புள்ளி – சந்துரு

15. நான்சென்ஸ் – நாச்சியாள் சுகந்தி

16. வாடியது கொக்கு – ஹைக்கூ கவிதைகள்

17. அகப்பறவை – பூங்குழலி வீரன்

18. துப்பாக்கிக்கு மூளை இல்லை – எம்.ஏ.நுஃமான்

19. என் பெயர் ஜிப்சி – நக்கீரன்

20. குஞ்ஞுண்ணி கவிதைகள் (தமிழாக்கம் பா.ஆனந்தகுமார்)

21. நீராலானது – மனுஷ்ய புத்திரன்

22. ஒரு இரவில் 21 சென்டிமீட்டர் மழை பெய்தது – முகுந்த் நாகராஜன்

23. உடல் பச்சை வானம் – அனார்


சிறுகதைகள்

24. தேவதைகளற்ற வீடு – கே.பாலமுருகன்

25. முரண் – ந.பச்சைபாலன்

26. இளந்தமிழன் சிறுகதைகள் – இளந்தமிழன்

27. மிட்டாய்க் கதைகள் – கலீல் கிப்ரான் (தமிழாக்கம் என்.சொக்கன்)

28. ஜென் கதைகள் – கி.அ.சச்சிதானந்தம்


கட்டுரைகள்/பொது

29. இலக்கியமும் இலக்கியவாதிகளும் – வண்ணநிலவன்

30. படிப்பது சுகமே – வெ.இறையன்பு

31. எப்போதும் வாழும் கோடை – மனுஷ்ய புத்திரன்

32. மேடைப் பேச்சின் பொன்விதிகள் – செல்வேந்திரன்

33. கதை டூ திரைக்கதை – ஜா.தீபா

34. எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்

35. எழுத்தாளராக இருப்பது எப்படி? – ஆர்.அபிலாஷ்

36. சின்னஞ்சிறு பழக்கங்கள் – ஜேம்ஸ் கிளியர் (தமிழாக்கம் நாககலட்சுமி சண்முகம்)


பிறமொழி/ஆங்கிலம்

37. How to enjoy your life and your job – Dale Carnegie

38. The Art of Public Speaking – Dale Carnegie

39. On Writing Well – William Zinseer

40. Surrounded by Setback – Thomas Erikson




Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்