ஜூன் 03, 2026
ஜுன் மாத நாவல் வாசிப்பில்..
ஜூன் மாத நாவல் வாசிப்பு திட்டத்தில் அசோகமித்திரனின் 'தண்ணீர்'....
கடந்த ஐந்து மாதங்களில் வாசித்த புத்தகங்களை அதற்குரிய இடத்தில் அடுக்கிவிட்டேன். ஜூன் மாதம் முடிந்ததும் அதுவரை வாசித்தவற்றை பகிர்வேன்.
ஜூன் மாதத்திற்கான புத்தகங்களை வழக்கம் போல எனது வாசிப்பு மேஜையில் அடுக்கி கொண்டிருக்கிறேன். எப்போதும் போல நாவல், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என ஒவ்வொரு வகையிலும் ஒரு புத்தகம் என எடுத்து வைத்தாகிவிட்டது.
வாசிப்பதற்கான நேரத்தையும் அதற்கான மனநிலையும் எந்தக் குறையுமின்றி கிடைக்க வேண்டும்.
வாசிப்பை திட்டமிடுவது வாழ்க்கையை நடத்த உதவுகிறது.
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
ஜூன் 02, 2026
மாதம் ஒரு மலேசிய புத்தகம் - 18
வாசிப்பதையும் எழுதுவதுவதையும் நாம் மனதார செய்யும் போது, அது பல எல்லைகளைக் கடந்து செல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்....
இந்தத் தொடரை எழுத வாய்ப்பு கொடுத்த நடுகல்.காம் இணைய இதழின் ஆசிரியர் வா.மு.கோமுவிற்கும் ஆசிரியர் குழுவிற்கும் என் அன்பும் நன்றியும்...
என் எழுத்துகளை வாசித்தும் அதுபற்றிய உரையாடலையும் தொடங்கும் அனைவருக்கும் எப்போதுக்குமான என் அன்பு.
கட்டுரைகளின் இணைப்பு முதன் மறுமொழியில் உள்ளது. நீங்களும் வாசித்து சொல்லுங்களேன்....
அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
மாதம் ஒரு மலேசிய புத்தகம் – தொடர் 18 - Nadukal https://share.google/4h6FdJxoHFJeZlSy6
மே 31, 2026
- புத்தகச்சிறகுகள் - தொடர் 13
நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 13' வெளிவந்துள்ளது.
புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.
இந்தத் தொடரில் ரெ.கார்த்திகேசுவின் 'அந்திம காலம்' நாவல் குறித்து எழுதியுள்ளேன்.
எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.
வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்.. நேசிப்போம்..வளர்வோம்..
அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
மே 27, 2026
- கவிதையைச் சுமப்பவர்கள் -
மூடாத
ஜன்னல் ஓரத்தில்
அமர்ந்தபடி
கவிதை எழுதுகிறவன் நான்
என் வீட்டில்
எழுதுவதற்கென
கொடுக்கப்பட்ட மாளிகைவாசல்
அதுதான்
சாலையோர மனிதர்களில்
ஒருசிலரையாவது
எனக்கு
கொஞ்சம் தெரியும்
கவிதை வராத நாட்களில்
போவோர் வருவோர்
முகங்களில்
ஏதாவது தட்டுப்படுகிறதா என
பார்ப்பதுதான்
என்
பொழுது போக்கு
எழுதி முடித்த கவிதைகளின்
கடைசி வரிகளை
அழித்துவிடுகிறேன்
அவற்றை
காற்றில் பறக்கவிடுகிறேன்
ஜன்னலின் வழி
அவை
பறந்திறங்கும் போது
பறவைகளில் நிழலைப்
போலிருக்கும்
விலாசமற்ற வாசலைத் தேடி
கண்டடையும்
தபால்காரன் போல
கடைசி வரிக்கு
ஏற்ற யாரோ ஒருவரை
அந்தக் கவிதைகள்
தேடி தவழ்கின்றன
என் கவிதைக்கான
கடைசி வரியை
நீண்ட காலமாக
சுமந்தபடி வாழும்
யாரோ ஒருவர்
இந்த வழியே
எப்போதாவது
வராமலா போய்விடுவார்...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
மே 26, 2026
வாசிப்பில்
- பாவ மன்னிப்பு -
கோவிலுக்குள்
அனுமதி மறுக்கப்பட்டவனின்
காலில் வந்து விழுகிறது
கோபுர நிழல்
- மதிக்குமார் தாயுமானவன்.
வாசிப்பில் மதிக்குமார் தாயுமானவனின் 'யாமக்கோடங்கி'.
இந்தக் கவிதைகள் கொடுக்கும் அனுபவத்தை விரிவாகவே எழுதுகிறேன்.
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
மே 25, 2026
- வலி வேதனை தெரியா வயது -
- கடவுளின் கரங்களில் ஒன்று -
- கடவுளின் கரங்களில் ஒன்று -
வல்லினம் ஏற்பாடு செய்திருந்த 'முதல் எழுத்து இலக்கிய விழாவிற்கு' சென்றிருந்தேன்.
சமீபத்தில் நடந்த குறுநாவல் போட்டியின் வெற்றியாளர்கள் நால்வருக்கு பரிசுகள் கிடைத்தன. கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தியின் 'அப்சரா' புத்தகம் வெளியீடு கண்டது. தேர்ந்தெடுத்த மலேசிய சிறுகதைகளை வாசிப்பதற்கான அகப்பக்கமும் இன்று வெளியீடு கண்டது. அதோடு காமன் ரதி விழாவின் ஆவணப்படத்தின் பதினைந்து நிமிட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரைகளை வல்லினம் இணைய பக்கத்தில் வாசித்திருக்கின்றேன். பிடித்திருந்தது. தனித்தனியாக வாசித்ததௌ இன்று தொகுப்பாக பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் சு.வேணுகோபால் இன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளர்களில் ஒருவராக வந்திருந்தார்.
எனக்கு அவரது பேச்சும் எழுத்தும் பிடிக்கும். இரண்டாவது முறையாக அவரை இன்று சந்தித்தேன். முதன்முறையாக தமிழகத்தில் நடந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் அவரை சந்தித்தேன். அன்றைய சந்திப்பில் அதிகம் பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. அன்று அவர் சந்தித்த பல வாசகர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
ஆனால் இன்றைய இரண்டாவது சந்திப்பு அப்படியாக இருக்கவில்லை. நான் என் பெயரைச் சொன்னதுந் அவருக்கு தெரிந்திருந்தது.
2021-ஆம் ஆண்டு சு.வேணுகோபால் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' என்கிற விமர்சன கட்டுரைத் தொகுப்பைக் குறித்து கட்டுரைகள் எழுதியிருந்தேன்.
குறிப்பாக பதிமூன்று இலக்கிய ஆளுமைகளின் கட்டுரைகள் அடங்கிய அந்தப் புத்தகத்தில் இருந்து ஒவ்வொரு கட்டுரையை வாசித்து முடிக்கும் போது என் வாசிப்பு அனுபவத்தை கட்டுரையாக எழுதினேன். நான் எழுதிய அந்தப் பதிமூன்று கட்டுரைகளும் எனது வலைப்பூவிலும் முகநூலிலும் பகிரப்பட்டது.
அதோடு பலரின் வாசிப்பிற்கும் சென்றது. பலர் அந்தக் கட்டுரையை வாசித்தப்பின் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்படி பேசிய பலருக்கும் அந்தப் புத்தகத்தை பரிந்துரை செய்தேன்.
அதோடு எங்களின் 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை' மூலம் குறைந்த விலையில் அந்தப் புத்தகத்தை விற்பனைக்கும் கொண்டு வந்தோம்.
இன்றளவும் நான் எழுதும் இரசனை விமர்சனக் கட்டுரைகளுக்கும் சு.வேணுகோபாலின் 'தமிழ்ச் சிறுகதையில் பெருவெளி' புத்தகமும் துணையாக இருக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரையின் மூலம் எனக்கு பிடித்த எழுத்தாளருக்கு என் பெயர் பரிச்சயம் ஆகியிருக்கிறது என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
என் வீட்டு நூலகத்தில் அவரின் பெரும்பாலான புத்தகங்கள் இருக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த 'பனங்காய் மயிலை' என்னும் இரு குறுநாவல் தொகுப்பில் அவரிடம் கையொப்பம் வாங்கினேன். அதே போல இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எனது இரு குறுங்கதைகள் தொகுப்பை அவரிடம் வாசிக்க கொடுத்தேன். என்றாவது ஒருநாள் அவரிடம் இருந்து ஏதாவதொரு சொல் என்னை நோக்கி வருமென்ற நம்பிக்கையோடு அவருக்கு கைகொடுதேன்.
இன்றைய உரையில் அவர், இலக்கியத்தில் இயங்கும் எழுத்தாளர்களிடம் இருக்கும் 'கடவுளின் கையைக்' குறித்து பேசியிருந்தார். நானும் அந்த கடவுளின் கைகளில் ஒன்றைத் தொட்டு பார்த்த திருப்தியுடன்
திரும்பினேன்.
இலக்கியத்தில் ஆர்வம் உள்ள பல நண்பர்களை வழக்கம் போலவே இன்றும் சந்தித்தேன். சுவாமிஜி, டாக்டர் சண்முகசிவா போன்றோர் தவறாது எனது உடல்நிலையைக் குறித்து விசாரித்தார்கள்.
டாக்டர் சண்முகசிவா அவரது புதிய புத்தகமான 'அன்பேற்றுதல்' என்னும் கட்டுரைத் தொகுப்பை எனக்கு கொடுத்தார்.
இந்தப் புத்தகத்தை அவர் எழுதிய சமயத்தில் என்னுடன் பேசும்போது "தயாஜி... அன்பை நம்மால இன்னொருத்தருக்கு கத்து கொடுக்க முடியுமா ?" என்று கேட்டார்
நான் அதிகம் யோசிக்காது "முடியாது!!!" என்றேன்.
அவர் சிரித்தபடி "ஆனா நம்மால ஒருத்தரை வெறுப்பேற்ற முடியும்தானே தயாஜி??" என்று கேட்கவும் எனக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை.
அதற்குத்தான் தான் ஒரு புத்தகத்தை எழுதுவதாக சொன்னார். இன்று அந்தப் புத்தகத்தை கையில் எடுத்ததும் அன்றைய உரையாடல் நினைவிற்கு வருகிறது.
டாக்டர் சண்முகசிவாவின் 'அன்பேற்றுதல்' புத்தகம் இனி நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையிலும் கிடைக்கும்.
நிகழ்ச்சி முடிந்து புறப்படும்போது மலேசிய எழுத்தாளர்களில் ஒருவரான ஸ்ரீகாந்தனும் நானும் சக எழுத்தாளரான அ.பாண்டியனோடு கொஞ்ச நேரம் செலவழித்தோம்.
இன்றைய நிகழ்ச்சியில் எனது பார்வையிலிருந்து ஒரு சிறு பகிர்வாக இதனை எழுதியிருக்கின்றேன். மற்றபடி இந்நிகழ்ச்சி குறித்தும் அதன் முன்னெடுப்புகள் குறித்தும் ஒவ்வொருவரும் எழுதுவார்கள் என நம்பலாம்.
வல்லினம் குழுவினர்க்கும் அவர்களின் இலக்கிய முன்னெடுப்புகளுக்கும் என் அன்பு.
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
மே 20, 2026
- நானற்ற நானாக -
நாடகத்திற்கு அழைத்திருந்தார்கள். துணை கதாப்பாத்திரமாக நாயகனுடன் சில காட்சிகளில் நடித்தேன்.
மயக்கத்தில் இருக்கும் நாயகனுக்கு மயக்கம் தெளிந்து குழப்பத்தில் ஆவேசமாக கத்த, மருத்துவரான நான் சென்று சமாதானம் செய்யும்படியான முதற்கட்ட படபிடிப்பு நடந்தது. மேற்கொண்டு காட்சிகளை இப்போதைக்கு பகிர முடியாது.
இதற்கு முன் நான் இணைந்து பணி செய்த நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
படபிடிப்பு அனுபவங்கள் முன்னமே இருந்தாலும் ஒவ்வொரு முறையும் கேமரா முன் இதுவரை இருந்த நான், இப்போது இன்னொரு ஆளாக நிற்பதில் எப்போதும் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது.
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
மே 18, 2026
அன்பும் நன்றியும்
மே 16, 2026
- பசிக்கும் வயிறுகள் -
முழுதும்
நனைவதற்கு முன்
இறகில் ஈரம் ஏற்றிய
பாரத்தோடு
பசித்த வயிற்றுடன்
எம்பி எம்பி
எப்படியோ பறந்த
பட்டாம்பூச்சியொன்று
சுவரோரம் வந்து
ஈரம் காயவும்
மழை மறையவும்
காத்திருக்கிறது
எங்கிருந்தோ
வீசி வந்த
நாக்கொன்றின் நுனி பட்டு
பல்லியின் வாய்க்குள்
நுழைகிறது
ஈரம் காய
பல்லிக்கும் பொறுமையில்லை
ஈரம் காய
பட்டாம்பூச்சிக்கும் வாய்க்கவில்லை
வாசிப்பில்
" ....இது காதலின் பெருங்களிப்பு. காதல் என்பது விசித்திரமான மரம்தான். தழைத்து நிற்கும் போது தலைகீழாய் விழும். பச்சை மறந்து பட்டுப் போனதென்று நினைக்கும் போது காய்க்கத் தொடங்கும். வெட்டி முறித்தாலும் வெடித்துத் துளிர் விடும்.'
நாவலிலிருந்து......
இன்றைய இரவு கே.ஆர்.மீராவின் 'அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்' நாவலோடு விடியப்போகிறது. சிற்பி பாலசுப்பிரமணியம் இந்நாவலை தமிழாக்கம் செய்திருக்கிறார்.
நான் வாசிக்கும் கே.ஆர்.மீராவின் இரண்டாவது நாவல் இது. இந்நாவலின் முதல் பக்கமே எனக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியையும் பதட்டத்தையும் அடுத்தடுத்த பக்கங்களில் சரி செய்ய முடியுமா என இன்னும் புலப்படவில்லை.
நாவலில் வரும் நாயகி ராதிகா, அவளைச் சுற்றியும் சுழன்று அவளை வதைக்கும் காதல், காமம், வன்முறை, தனிமை என்னும் பல சிக்கலான உணர்வுகளின் இருந்து அவள் தப்பிப்பாளா அல்லது அவளும் அதனோடு கரைந்துதான் போவாளா என்கிற பதட்டம் எனக்குமே தொற்றிக்கொண்டது....
மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் மே மாதத்தித்கான ஐந்தாவது நாவல் வாசிப்பு இது.
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
மே 14, 2026
- சுவாரஸ்யமான திருப்பம் -
மே 09, 2026
- சமாதானம் செய்வேன் -
அழுவதைக் கண்டேன்
இடது பக்க
கன்னத்தில் வழிந்த கண்ணீர்
கழுத்தில் இறங்கி
ஆடைக்குள்ளே மறைகிறது
எந்தத் தடையுமில்லாமல்
நீண்ட நதியாய்
வழியும்
கண்ணீரைக் கண்டதும்
எனக்கும் அழத் தோன்றியது
நான் அப்படித்தானே
யாராவது அழுதால்
நானுமே சேர்ந்து கொள்வேன்
பழகிவிட்டது
அழுவதில் நான்
அந்தப் பெண் போல
தேர்ச்சி பெற்றவன்
அல்ல போலும்
அழ தொடங்கிய
ஐந்தாவது வினாடியில்
மூக்கில் சளி உருவாகிவிடும்
மூக்கை உறிஞ்சியபடியே
அழுவேன்
என்
மூக்குறிஞ்ச சத்தத்தை
அந்தப் பெண்
கண்டுகொண்டாள்
என்னைத் திரும்பி பார்த்து
அவளது கண்ணீரைத்
துடைத்தபடி
"ஒன்னுமில்ல ஒன்னுமில்ல..."
என
மெல்லிய குரலில்
சொல்லியபடி
கொஞ்சமாய்ச் சிரிக்க முயன்றாள்
அழுத கண்கள்
இன்னுமே கலங்கியபடி இருக்க
எனக்காக சிரித்து
என்னை சமாதானம் செய்யும்
அவளை
நான் எப்படி
சமாதானம் செய்வேன்...
மே 03, 2026
புத்தகச்சிறகுகள் - தொடர் 10
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 10' வெளிவந்துள்ளது.
புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.
இந்தத் வார தொடரில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆதி.இராஜகுமாரனின் 'ஆதி.இராஜகுமாரன் சிறுகதைகள்' புத்தகத்தை குறித்த வாசிப்பனுபவ கட்டுரையின் இரண்டாம் பகுதி நிறைவடைகிறது.
அடுத்த வாரம் இன்னொரு புத்தகத்தைக் குறித்து எழுதுகிறேன்.
எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.
வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்.. நேசிப்போம்..வளர்வோம்..
அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
மே 02, 2026
ஏப்ரல் 30, 2026
- புத்தகங்களைப் பின்தொடரும் பயணம் -
இந்த மே மாதம் வரை 17 மலேசிய புத்தகங்கள் குறித்தும், 5 சிங்கப்பூர் புத்தகங்கள் குறித்தும் எழுதியுள்ளேன். அதோடு மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பிலும் 'புத்தகச்சிறகுகள்' என்ற தலைப்பில் புத்தக அறிமுகத்தினை வாராந்திர தொடராக எழுதுகிறேன்.
இந்தத் தொடர்களின் வழி பல புதியவர்கள் எனக்கு அறிமுகம் ஆகின்றார்கள். பலரும் புத்தக பரிந்துரைகளை செய்கிறார்கள். புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு பிடித்த தொடராக இந்தத் தொடர்கள் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
புத்தகங்கள் மீதான எனது காதல்தான் 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை' எனும் இணைய புத்தகக் கடையையும் பல சிக்கல்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியுடன் என்னை நடத்த வைக்கிறது. என்னை வழிநடத்தியும் செல்கிறது.
இந்தத் தொடர், என்னைப் போலவே புத்தகங்களை நேசிக்கின்றவர்களை எனக்கருகில் கொண்டு வந்து சேர்க்கிறது என்றால் மிகையில்லை.
நான் புத்தக வியாபாரி மட்டுமல்ல புத்தகங்களை நேசிக்கும் ஒருவன் என தெரிந்தவர்கள் எனக்கு நண்பர்களாகவும் நமது புத்தகக்கடைக்கு வாடிக்கையாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் என் அன்பு.
இந்தத் தொடருக்காக சிங்கப்பூரில் இருந்து கவிஞர் பாண்டிதுரை 12 சிங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களை பெற்றுகொண்டு எனக்கு அனுப்பி வைத்துள்ளார். தனது புத்தகம் பேசினால் போதும் என ஒதுக்கி இல்லாமால் தனது நண்பர்களின் புத்தகங்களும் பேசப்படவேண்டும் என சிரத்தை எடுத்து புத்தகங்களைச் சேகரித்து எனக்கு அனுப்பிய நண்பருக்கு எனது அன்பும் நன்றியும்.
அதே போல மலேசிய மூத்த எழுத்தாளர்களின் ஒருவரான மனஹரன் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். மறைந்த எழுத்தாளர் கோ.முனியாண்டியின் 'சிறுகதை தொகுப்பை' எனக்கு அனுப்பி வைத்தார். அவருக்கும் எனது அன்பும் நன்றியும்.
வாசிப்பதும் எழுதுவதும் எனக்கு விருப்பமான ஒன்றாக இருப்பதோ என்னுடைய தன்னறமாகவே இருப்பதாக நம்புகிறேன். அதற்காவே எழுதுகிறேன்.
புத்தகங்களைப் பின் தொடர்ந்து செல்கிறேன். இந்தப் பயணத்தில் நான் ஒருபோதும் தனியாக இல்லை. நீங்கள் எல்லோரும் என்னுடனே இருக்கிறீர்கள். வேறென்ன வேண்டும்.
தொடர்ந்து வாசிப்போம். தொடர்ந்து எழுதுவோம்.....