பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மே 30, 2020

உன் வெளிப்பாடுதான் உன் மொழி


    நண்பர்கள் தொடர்ந்து zoom மூலமாக முக்கியமான சந்திப்புகளை முன்னெடுத்து வருகிறார்கள். நான்காவது நிகழ்ச்சியாக, தோழர் லீனா மணிமேகலையுடனான சந்திப்பாக அமைந்திருந்தது.

   முன்னமே தோழர் லீனா மணிமேகலை எனக்கு பழக்கம். அவரை கவிஞராகவும் இயக்குனராகவும் அறிந்திருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் அவர் மலேசியா வந்திருந்தார். அப்போது அவரின் இயக்கத்தில் வெளிவந்த 'செங்கடல்' திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. முதலில் என்னால் அதனை உள்வாங்க முடியவில்லை. மெல்ல நானும் ஒரு கதாப்பாத்திரமாக உள் செல்ல ஆரம்பித்துவிட்டேன். அதனை அடுத்து அவர் இயக்கிய சில ஆவணப்படங்களையும் வாங்கிக்கொண்டேன்.

    எந்த படைப்பாளியை சந்திக்க வேண்டும் என்றாலும் குறைந்த பட்சம் அவர் படைப்புகளை வாசித்திருக்க/தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு நாம் கொடுக்கும் முதல் மரியாதை என நம்புகிறேன். இன்றளவும் அதனை தவறாது செய்தும் வருகிறேன். அப்படி தோழர் லீனா மணிமேகலையை சந்திப்பதற்கு முன்னதாக அவரின் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். சினிமா சார்ந்து அவரது போராட்டங்களைத் தெரிந்துக் கொண்டேன். மெல்ல அவர் மீது இனம் புரியாத ஓர் அன்பு எனக்கு வந்திருந்ததை உணர்ந்தேன். இன்றளவும் அது தொடரவே செய்கிறது.

   ஒவ்வொரு முறை பேசும் போதும் நமக்குள் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரக்கூடியவர்.

   இன்று நடந்த zoom கலந்துரையாடலில் அவரை சந்தித்தேன். முதல் முறை பார்த்தது போலவே தெரிந்தார். அதைவிட முக்கியம் நான் இன்னமும் அவர் நினைவில் இருக்கிறேன்.

   தனது கடந்த காலம், இயக்கிய ஆவணப்படங்கள், 'மீ டூ'  சர்ச்சை என பலவற்றைப் பகிர்ந்துக்கொண்டார். சமீபத்தில் அவர் இயக்கிய 'மாடத்தி' திரைப்படம் குறித்தான பயணம் தொடர்பாக பேசினார்.  'மாடத்தி'யை குறித்தும் அந்த கதையில் மையத்தை எங்கிருந்து தான் பெற்றுக்கொண்டார் என்பதை பற்றியும் நேர்மையாக பகிர்ந்துக் கொண்டார். அப்படத்தைத் திரையில் காணவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டவே செய்கின்றது

  பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தோழர் லீனா மணிமேகலை கொடுத்த பதில்கள் ரசிக்க வைத்தன. 

"இயக்குனராக உங்கள் இலக்கு என்ன?"
என்கிற கேள்வியை முன் வைத்தேன்.

"தான் தேடி கண்டுணர்ந்ததைப் பகிர்ந்துக் கொள்வதுதான்...." என தொடங்கி மேற்கொண்டு பேசினார்.

   சிங்கப்பூரில் இருந்து நண்பர் ஒருவர் தான் வளர்ந்து வரும் இயக்குனர் என்றும், தனக்கான அறிவுரையை கேட்கலானார்.

"கலை என்பதே தனக்கான வழியை தானே தேடி கண்டடைவதுதான். தனக்கான குரலை தானே கேட்டுணர்வதுதான்" என்று மேற்கொண்டு பேசலானார்.  

   இடையில் அவர் கூறிய "உன் வெளிப்பாடுதான் உன் மொழி.." என்பது என் மனதோடு ஒட்டிக்கொண்டது. ஒரு மந்திரம் போல அதனை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்கிறேன்.

   அவருடைய சந்திப்பு மட்டுமின்றி, இந்த zoom நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைவரின் உரையாடல்களையும் தொகுத்து விரைவில் மீண்டும் வெளிவரவிருக்கும் 'நேர்கோடு' இணைய இதழில் வெளியிடவுள்ளார்கள். அதன் பொருட்டே என்னால் இங்கு தோழர் லீனா மணிமேகலையின் சந்திப்பை குறித்து அதிகமாய் சொல்ல இயலவில்லை. 

   நேர்கோடு இணைய இதழில் நீங்கள் அதனை முழுமையாக வாசிக்கலாம்.

பின்குறிப்பு zoom உரையாடலில் தோழரின் சிரிப்பை கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்க முயன்றேன். அப்போது,


ஒரு கவிதையே
தன்னை 
வாசித்துக் கொண்ட - தாய்
தெரிந்தது...'


#தயாஜி

மே 25, 2020

Children of Heaven


       இந்த நேரத்தில் இதனை பார்த்திருக்க கூடாது. மனதை கலங்கடித்துவிட்டது. உண்மையில் அவர்கள் சொர்க்கத்தின் குழந்தைகள்தான். அந்த சிறுவனின் கண்களில்தான் எத்தனை வலி. அவனது தங்கையில் முகத்தில்தான் எத்தனை கேள்விகள்.

     
   காணாமல் போவது அவர்களது காலணி மட்டுமல்ல. என் நிகழ்கால துக்கங்களும்தான். இப்போது இவர்களுக்காக கண்கள் கலங்குகின்றன.

     ஒரு படைப்பு சக மனிதர்கள் மீது அன்பை விதிக்கின்றன என்பதுத்தான் எத்தனை நிதர்சனம்.


    இப்போதைய மனநிலையில் என்னால் மேற்கொண்டு ஏதும் எழுத முடியவில்லை. மீண்டும் சொர்க்கத்தின் குழந்தைகளை நினைக்குக் கொண்டிருக்கிறேன்...

#தயாஜி

மார்ச் 11, 2016

’எங் கதே’ - அத்தனை பேரின் ரகசியங்கள்



எங் கதெ –  அத்தனை பேரின் ரகசியங்கள்





   சமீபத்தில் இமையம் எழுதிய ’எங் கதெ’ நாவலை படித்து முடித்தேன். இயல்பாகவே புத்தகங்கள் வாசிப்பதில் வேகம் கொண்டவன் நான். சில அழுத்தங்கள் காரணமாய் முந்தைய வாசிப்பு வேகம் அதே வேகத்தில் இல்லை. ஆனாலும் மீண்டும் மீண்டும் வாசிப்பதால் மட்டுமே அதன் வேகத்தை அதிகப்படுத்தும் என்பதை நம்பி , செய்துக்கொண்டிருக்கிறேன். 

   வாசிப்பதற்காய் அவ்வபோது வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் கூடிக்கொண்டே போகிறது. அலமாரியில் இருக்கும் புத்தகங்களை மனதில் தொன்றும் விருப்பம் காரணமாய் இப்போது படிப்பது அல்லது எப்போதாவது படிப்போம் என்பதும் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.

   படித்த புத்தகங்கள் குறித்த நினைவுகளுக்கு அதனை குறித்து அவ்வபோது எழுதி வைக்கிறேன். அவ்வகையில் தற்போது வாசித்து முடித்த இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவலை குறித்து எழுதுகிறேன்.
விநாயகத்தின் பார்வையில் தானே சொல்வதாக நாவல் பயணிக்கிறது. முதல் இரண்டு அத்தியாயங்களை படிக்கையில் எனக்கு திகில் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு இருந்த மனநிலையை அந்நாவலில் கண்டதுதான் காரணம். படித்து முடித்து தற்காலிகமாக ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண் என்னை ஈர்த்தார். காதலா காமமா என நூல் அளவே வித்தியாசத்தில் கொஞ்ச நாள் இந்த பக்கமும் கொஞ்ச நாள் அந்த பக்கமும் இருந்தேன். என்னை விட ஏழு வயது வித்தியாசம் கொண்ட அந்த பெண் என் வாழ்க்கையை வழி நடத்த வேண்டும் என பிரார்த்தனைகள் கூட தொடர்ந்தன. அந்த பெண் எனக்கான வாழ்வு எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்பதை கோடிட்டு காட்டினார். மேலும் அவர் குறித்து அவருடனான நாட்கள் குறித்து பேசுவதற்கு இது நேரமல்ல அதற்கு காலமும் அதிக தூரமில்லை என நம்புகிறேன். நாங்கள் பரிமாறிய முத்தகங்களுடன் அவர் குறித்த நினைவுகளை கொஞ்சம் தள்ளி வைக்கிறேன்.

   ’எங் கதெ’ நாவல் முழுக்க காதலில் சிக்குண்டவனின் மனநிலை ஆழமாக பதிகிறது. யாருக்கு காதல் வரலாம், யார் மீது காதல் வரலாம் போன்ற கட்டுபாடுகள் எல்லாவற்றையும் தகர்த்து காதல் மட்டுமே என பயணிக்கிறது நாவல்.

   இரண்டு குழந்தைகளுடன் கணவனை இழந்த பெண் - கமலா, அவள் மீது காதல் கொள்கிறான் விநாயகம் . விநாயகத்தின் மனப்போராட்டமும் அவனது மனசாட்சியின் உரையாடலும்தான் ’எங் கதே’-யில் நெடுங்கதையாக விரிந்துச்செல்கிறது. இன்னொரு பக்கம் கமலாவின் மௌனம். ஒரு பெண்ணின் மௌனம் எத்தனை ஆழமானது எத்தனை ஆபத்தானது என நினைக்கையில் நமக்குள்ளே இருக்கும் விநாயகம்கள் கண் கலங்குகின்றார்கள்.

   நாவல் முழுக்க பேச்சு மொழியிலேயே செல்கிறது. அது நாவலுக்கு பலத்தை கொடுப்பதாக நினைக்கிறேன். அதோடு ஒன்றை சொல்வதற்கு இன்னொன்றை உதாரணாமக சொல்வதும் இயல்பாய் கைகூடியுள்ளது கதைசொல்லிக்கு;
உதாரணமாக;

‘பாம்பு ஒரு கொத்திலேயே பூரா விசத்தயும் கொட்டதான செய்யும்? அப்படிதான் கொட்டினா கமலா..’ 

‘கருவாட்டு குழம்பு வைக்கிற ஊட்டோட வாசல்ல காத்திருந்த நாயிதான் நான்’

‘காத்தடிக்கவே காத்திருந்த எல மாரி விழுந்துட்டேன்’

’மண் புழுவால நெளியத்தான முடியும்.? சீற முடியாதுல்ல?’

’தவளைக்கி வாழ்க்க வளையிலதான..’

   இப்படியாக விநாயகம் நன் நிலையை மிக துள்ளியமாக புரிந்துக் கொண்ட பின்னரும் மனம் மாறவில்லை. கமலாவை மறக்கவுமில்லை. கமலா கமலாதான் எல்லாம். ஆனாலும் கமலாவை கல்யாணம் செய்வதை விநாயகம் தவிர்க்கிறான். கமலாவும் ஒரு முறைக்கு மேல் அவனிடம் திருமணம் குறித்து பேசுவதாய் தெரியவில்லை. 

   ஆண் பெண் உறவுகளில் இருக்கும் சிக்கலை மனப்பிறழ்வு சாயலில் சொல்லியிருக்கிறார் கதாசிரியர். யாரது மனப்பிறழ்வு என யோசிக்கையில் நமக்கு ஒன்றும் தெரியாது என ஒதுங்கிவிட முடியாது. நம் மனசாட்சிக்கு நெருக்கமானவனாக ஆகிவிடுகிறான் விநாயகம்.

   விநாயகத்துக்கும் அவனது தங்கைகளுக்கும் இருக்கும் பாசம் நம் மனதை கணக்க செய்கிறது. இயல்பான குடும்ப சூழலை கண் முன் காட்சியாக நகர்த்தியிருக்கிறார் ஆசிரியர். 

   நமக்கு தெரிந்த அருணகிரிதாரின் கதை, பெண் பித்து பிடித்தவரை தொழுநோய் தாக்குகிறது. இருந்தும் பெண் பித்து பிய்த்து தின்கிறது. தொழுநோய் காரணமாக எந்த பெண்ணும் அவரை நெருங்கவில்லை. காமம் தலைக்கேறிட அலைகிறான், வீட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் கொண்டு சென்றாவது பெண்ணை அனுபவிக்க திண்டாடுகிறார். எல்லாம் கைவிட்ட நிலையில் உனக்கு பெண்தானே வேணும் நானும் பெண் தானே என்னை அனுபவி என , அவர் முன் நிற்கிறாள் அவரது சகோதரி. அது அவனுக்கு பேரிடியாயாக விழுகிறது. அந்த பேரிசைச்சல் அவர் காதை கிழிக்கிறது. இனியும் தான் வாழக்கூடாது என கோவில் கோபுரத்தில் ஏறி தன்னை மாய்த்து கொள்ள குதிக்கிறார். சட்டென எம்பெருமான் முருகன் தோன்ற , அவருக்கு அருள் பாலிக்க, அவர் அருணகிரிநாதராகி திருப்புகழ் பாடுகிறார். 

அருணகிரிநாதருக்கு அருளும் முருகன்


   இக்கதையே ’எங் கதெ’ நாவலில் உள்ளாடுவதாக பார்க்கிறேன். பெண் பித்து பிடித்த அருணகிரிதார். கமலா பித்து பிடித்த விநாயகம். தன்னை அனுபவி என்கிற அக்காவால் தன்னை மாய்த்துக்கொள்ள புறப்படுறார் அருணகிரி. கமலாவை செயல் சந்தேகத்தை கொடுக்க , அவளை கொலை செய்ய புறப்படுகிறான் விநாயகம். தற்கொலைக்கு சில நொடிகளில் தோன்றி அருள் பாலிக்கும் முருகன் அருணகிரிநாதருக்கு இன்னொரு வாழ்க்கையை கொடுக்கிறார். கமலாவை கொலை செய்ய இருக்கும் சில நொடிகளில் தன்னை குறித்தும் வாழ்வு குறித்து ஞானோதயம் கிடைக்கும் விநாயகம் அவள் காதில் பேசிவிட்டு திரும்பிப்பார்க்காமல் நடக்க ஆரம்பிக்கிறார்.  

நாவலாசிரியர் இமையத்துடன்
   ஞானமும் வாழ்வு குறித்த தெளிவும் கிடைப்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல என்பதை இந்நாவல் சொல்கிறது. நான் இந்நாவலை அவ்வாறுதான் புரிந்துக் கொள்கிறேன். அதோடு என் மனதின் மறைத்து வைத்திருக்கும் ரகசியமும்  உங்கள் மனதில் மறைந்திருக்கும் ரகசியமும் இப்படி ‘எங் கதெ’ யாக வெளிப்படுவது யாருக்கும் தெரியாமல் நம்மை கொஞ்ச நேரம் அழவைக்கிறது. அதன் மூலம் வாழ்வு குறித்து ஒரு மாற்றுப்பார்வையாவது நமக்கு கிடைத்தால் இந்நாவலில் பிறப்புக்கு ஒரு காரணமாக அமையும்.

  இணையத்திலும் இலக்கிய பரப்பிலும் இந்நாவல் குறித்து பலவகையான கருத்துகள் உள்ளன. எனக்கும் அவ்வகையில் தோன்றியதை எழுதியுள்ளேன். நீங்கள் மாறுபடலாம். அது குறித்து உரையாடலாம். அதற்கு இமையத்தின் ‘எங் கதெ’ நாவலை வாசித்துவிட்டு வரவும்.


-தயாஜி

ஜனவரி 01, 2013

2013 - எனதான அடுத்த கட்டமாகவும் இருக்கலாம்

2013-ம் ஆண்டில் நுழைந்திருக்கின்றோம்...
காரணம் இன்றியே புத்தர் குறித்தும் படிக்கிறேன்... புத்தர் சிலையையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறேன்...!
வாசிப்பதையும் எழுதுவதையும் அதிகரிக்க எண்ணம் தோன்றுகின்றது..... 
படிக்கும் ஒவ்வொன்றைக் குறித்தும் பதிவினை செயவேண்டும்.... 
மனதுக்குள் பல யோசனைகள் பல சிந்தனைகள்.. 
அதற்கெல்லாம் செயல் வடிவமும் எழுத்து வடிவமும் கொடுக்கலாம் என     நினைக்கின்றேன்...                                                                             

தயாஜி

ஆகஸ்ட் 12, 2012

யுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்’ - உட்புகும் தேடல்


12.8.2102
      தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் நாவல்கள் வரிசையில் படித்து முடித்த நாவல், யுவன் சந்திரசேகர் எழுதிய ‘வெளியேற்றம்’.

      படித்து முடித்திருந்த நாவல்களில் இந்த நாவலை நான் வேறு வகையாக உணர்கிறேன். வழக்கமாக இந்திரா சௌந்திரராஜன் கதைகளை தொடக்கத்தில் படித்து வளர்ந்தவன் நான். அதில் வரும் அமானுஷயம், சித்தர், மூலிகைகள், மர்மங்கள் எல்லாம் எனக்கு ஒருவகையில் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் கொடுத்தது. அவரது எழுத்துகளைத் தொடர்த்து வாசிக்க வாசிக்க அதன் கட்டமைப்பை புரிந்துக் கொண்டதாய் ஓர் நிறைவு. கடவுள் நம்பிக்கையை அடைப்படையாக கொண்ட எழுத்து வகை அது. அதனுடன் மூலிகைகள் தொடர்புடைய அற்புதங்கள் நிகழ்த்தும் சித்தர்களும் சேர்ந்துக் கொள்வார்கள்.
    பிறகு இந்திரா சௌந்திர்ராஜன் நாவல்களை படிப்பதை தொடரவில்லை. வருடம் முழுக்க ஒரே வழியில் செல்வதை என் மனம் விரும்புவதில்லை. இதன் வழி அவரை நான் குறைத்து மதிப்பிட்டதாய் எண்ணிட வேண்டாம். என் அடிப்படை வாசிப்பிற்கு அடித்தளம் அமைத்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் அதே பாடசாலையில் அதே வகுப்பில் என்னை வைத்துக்கொள்ளவில்லை.
   
வெளியேற்றம் நாவல் முழுக்க ஒவ்வொரு காலக்கட்டங்களில் ஒவ்வொருவர் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம், ஒவ்வொரு கேள்விகள், ஒவ்வொரு குழப்பம். கதைகள் தனக்குள் கதைகளையே வைத்து ஊர்ந்துக் கொண்டிருக்கின்றன. ‘ஓடிப்போனவன்’ என்று சொல்லப்படுகின்றவர்கள் வெறுமனே ஓடி ஒளிந்துவிடுவதில்லை. இந்த வெளியேற்றத்தில் ஓடிப்போனவர்கள் மிளீர்கிறார்கள்.
    நான் படித்த நாவல்களில் இந்த நாவ்லதான் அதிக பக்கங்கள் என நினைக்கிறேன்.495 பக்கங்கள்.
      படிக்கப்படிக்க நாவலில் நடுப்பகுதியில் , தொடர்ந்து படிக்க வேண்டிமா என்ற வெறுமை தோன்றுகிறது. அதற்கு அடுத்த அத்தியாயத்தை படித்துவிட்டால், நாவலில் போக்கு நம்மை மீண்டும் நாவலுள் இழுத்துவிடுகிறது.
     
      நதியின் போக்கினை போல , ஆளுக்கு ஒரு திசையில் இருந்து அடித்து செல்லப்படுகிறார்கள். அவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பெரியவர்’ இந்த நாவலில் மிக முக்கிய கதாப்பாத்திரம். இதனையே மற்றவர் எழுதியிருந்தார் அவருக்கு சித்தர் என்ற பெயரை வைத்து காவி துணி கொடுத்திருப்பார்கள். ஆனால் யுவன் சந்திரசேகர் அந்த வழக்கத்தை தொடரவில்லை. தன் மரணத்தை நான் நினைத்தபடி சமாதியடையவிருக்கும் பெரியவருக்கு எந்த ஓரு ஆன்மீக சாயத்தை பூசாதது எனக்கு ஆச்சர்யத்தையே கொடுத்தது.
      மனித மனம் இத்தனை கதைகளை ஒன்றினைக்க முடியுமா என படிக்க படிக்க வியப்பு ஏற்பட்ட வண்ணம் இருந்தது. தேடல் என்பதின் உண்மை அர்த்தம் இந்த நாவலின் வழி அறியப்படும். வெறுமனே வாசக சுவாரஸ்யத்தையும் தாண்டிய ஒன்று இந்நாவலில் காணக்கிடைக்கிறது.
     இன்னும் கூட எழுதலாம் இந்த நாவல் குறித்து பக்கம் பக்கமாக ஆனால்; இந்நாவல் எனக்குள் முடக்கிவிட்டிருக்கும் கேள்விகளை எழுதுவது எனக்கு சாத்தியப்படவில்லை. இந்த நாவலும் தனக்குள் பல கதைகளை சுமந்துக் கொண்டே செல்கிறது, சொன்னதில் கொஞ்சம் சொல்லாததில் மிச்சம்.

- தயாஜி -

ஜூன் 20, 2012

தூது போகும் போராளிகளும், போராடும் தூதுவர்களும்...



வட்ட மேஜையில் ஒருவர் பின் ஒருவராக அறிமுகம் செய்துக் கொண்டார்கள். என் முறை வந்தது. எழுந்தேன்.

“வணக்கம். நான் தயாஜி. மின்னல் fm-ன் அறிவிப்பாளராகப் பணிசெய்கிறேன். கண்ணாடித் துண்டுகள் எனும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்தேன். அது உண்மை சம்பவங்களை மக்களுக்கு எடுத்து சொல்லும் நிகழ்ச்சி. அப்பறம் எழுத்துத் துறையிலும் ஆர்வம் உண்டு” என சொல்லி அமரத்தயாராகும் அடுத்த வினாடியில்;

“ம்... தயாஜி. தெரியும். உங்களை வல்லினத்தில் படிச்சிருக்கேன்.” என்றார். வட்டமேஜையில் உள்ளவர்கள் படித்திருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. வந்திருந்தவர் கவனித்திருக்கிறார்.

கடந்த 23, 24-ம் தேதிகளில் 'வணக்கம் மலேசியா', ஊடகப் பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. வானொலி அறிவிப்பாளர் என்ற முறையில் என்னையும் நண்பர் ஆனந்தையும் எங்கள் மேலாளர் அனுப்பிவைத்தார். பிற்பகல் 2 மணிக்கெல்லாம் தொடங்கிவிடும் என்ற பதட்டத்தில் ஷா அலாம், சௌஜானா தங்கும் விடுதிக்கு அவசர அவசரமாக சென்றோம். இருபது நிமிட முன்னதாகவே சேர்ந்தோம். நிகழ்ச்சி பிற்பகல் மூன்றுக்கு தொடங்கும் என்றும் அதுவரை எங்கள் அறையில் ஓய்வெடுக்கலாம் என்றார்கள். உடமைகளை அறையில் வைத்துவிட்டோம். வரவேற்பறையில் அமர்ந்து வருவோர் போவோரை நோட்டமிட்டுக்கொண்டிருந்தோம்.

எதிர்ப்பார்க்காத ஊடகத்துறை நண்பர்கள் வந்து அதிர்ச்சி கொடுத்தார்கள். பயிலரங்கில் பேச்சாளர் குறித்து வினவிய போது தமிழகத்திலிருந்து பத்திரிகையாளர் மாலன் என்றார்கள். மாலன் குறித்த வேறெந்த அறிமுகமும் சொன்னவர்களுக்குப் புலப்படவில்லை. ஆனாலும் மாலன் எங்கோ படித்த, தெரிந்த பெயராகவே பட்டது.

(பின் குறிப்பை முன் குறிப்பாக சொல்லிவிடுகிறேன் - இந்த பதிவு மாலன் வருகையும் எனது எண்ணத்தின் பகிர்வும். ஆகவே பயிலரங்கில் வந்த பிரமுகர்கள், சக நண்பர்கள், செய்த சேட்டைகள், விட்ட கோட்டைகள், தூங்கியவர்களின் குறட்டைகளுக்கும் இதில் அவ்வளவாக இடம் இருக்காது; தேடிப்படிக்க ஆசைப்படாதீர்கள்.)

‘சமுதாய மேம்பாட்டிற்கு ஊடகங்களின் பங்கு’ என்ற தலைப்பில் மாலன் பேசவேண்டும். முதல் நாள் வழக்கம் போல பிரமுகர் கவனிப்பு, தாமதம், தேவையற்ற பேச்சு, மாலன் குறித்த அறிமுகம், இப்பயிலரங்கின் நோக்கம் என இரவு வரை நீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டிடிடிடிடிடிடினார்கள்.

இரவு உணவை முடித்த பிறகு; மறுநாள் காலைக்கான வேலை ஒன்றையும் கொடுத்தார்கள். திரையில் காட்டப்படும் காட்சியினை கொண்டு பத்திரிகை செய்தி ஒன்றை தயார் செய்யவேண்டும். வந்திருந்தவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்தார்கள். எண்ணிக்கையின் குறைவு வேலையை சுலபமாக்கியது. பாதி தூங்கியும் மீதி குழம்பியும் வேலையை எங்கள் குழு ஓரளவிற்கு முடித்தது.

மறுநாள் காலை கொடுத்த வேலைகளுக்கான காரணம் சொல்லப்பட்டது. ஒவ்வொரு குழுவும் முன்னிலையில் வந்து செய்தியை வாசித்து அதன் காரணங்களை விவாதித்தோம். முழு அமர்வும் நிறைவடைந்ததும். கற்றுக்கொண்ட திருப்தியில் கிளம்பினேன்.

திரு. மாலன். 70-களில் சிறுகதைகளை எழுதத் தொடங்கி தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். ‘எழுத்து’ பத்திரிக்கை மூலம் கவிதையில் இவர் எழுத்துப் பயணத்தை ஆரம்பித்தார். 70களில் வெளிவந்த பெரும்பாலான சிற்றிதழ்களில் எழுதியிருக்கிறார். கணையாழி ஆசிரியர் குழுவில் பணியாற்றியிருக்கின்றார். அதோடு இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம் ஆகிய முன்னனி இதழ்களில் ஆசிரியராக இருந்திருக்கிறார். வெகுஜன இதழ், நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய எல்லா ஊடகங்களிலும் அனுபவம் பொற்றவர் இவர். தற்போது ‘புதிய சமுதாயம்’ என்ற மாத இதழை நடத்திவருகின்றார். அதே பெயரில் செய்தி தொலைக்காட்சியும் உண்டு. இணையத்திலும் அதனை பார்க்கலாம்.

பயிலறங்கில் ஊடகம் குறித்த அவரது பேச்சு எனக்கு பெரும் உதவியாக இருந்தது.

"மக்களுக்கு தேவையான தகவல்களைக் கொடுக்கும் ஊடகங்களும்; வெறும் பொழுது போக்குகளில் ஈடுபாடு காட்டும் ஊடகங்களும் எல்லா நாள்களிலும் இருக்கத்தான் செய்கின்றன. என்னதான் பொழுது போக்கு அம்சங்கள் கொண்டதை தொடக்கத்தில் மக்கள் விரும்பினாலும் ஒரு காலகட்டத்திற்கு மேல் சலிப்பு நிலை வந்தே தீரும்.

ஆபாசம் விற்கப்படும்; ஆனால் எவ்வளவு காலம் அது விற்கப்படும்?

மக்கள் ஊடகங்களில் வைத்திருக்கும் நம்பகதன்மைதான் நிலைக்கும். ஊடகத்துறையில் இருப்பவர்கள்தான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் பாலமாக இருக்கின்றார்கள். அரசாங்கத்தின் செயல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் அதே நேரத்தில், மக்களின் தேவைகளையும் அரசாங்கத்திடம் கொண்டு செல்ல வேண்டும்.

நாம் போராளிகள் அல்ல.... தூதுவர்கள். ஒரு தூதுவனுக்கு தன் பலமும் தன் எதிரியின் பலமும் முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். மக்களைச் சுற்றி நடப்பவைகளை மக்களுக்கு சொல்லவேண்டுமே தவிர வெறும் கேளிக்கைகள் மட்டும் மக்களுடன் ஊடகத்துறையினரை இணைத்திடாது.

எதை எழுதுகிறோம்.
யாருக்காக எழுதுகிறோம்.

இவை இரண்டும் ஒவ்வொரு முறையும் கவனிக்கவேண்டும். தனிப்பட்ட கோபங்களை வெளிக்கொணர்வது இத்துறைக்கு ஏற்புடையது அல்ல. நமது எல்லா செயல்களும் சமுதாயத்தின் வளர்ச்சி என்பதை நன்கு உணர வேண்டும்.

தொடக்கத்தில் அதிகார வர்க்கத்திடமும் அரசாங்கத்திடமும் நாம் கட்டுபட்டு இருந்தாலும்; நாம் கொண்டிருக்கும் ‘உண்மை’ நிச்சயம் மக்களுக்கும் நமக்கும் வழியை அமைக்கும். கைகட்டப்படிருப்பதாகக் கவலையும் கண்ணீரும் அநாவசியங்கள்.

வாழைப்பழ ஊசி என்பது பொருந்தும் தொழில் இது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்றால்; நாம் காணாமல் போய்விடுவோம். அல்லது காணடிக்கப்படுவோம். எதனையும் நன்கு திட்டமிட்டு; நேரம் பார்த்து; ஆதாரங்கள்; அவசியங்களைக் கருத்தில் கொண்டே செயல்படவேண்டும்.

குறிப்பாக அரசியல் நிலைபாடு அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்மை நாமே மேல்நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். நாம் சொல்வதிலும்; எழுதுவதிலும் நம்பகத்தன்மை முதன்மையானது. அரசியல் மாற்றம் முதல் ஆட்சி மாற்றம் வரை அதன் வேகம் இருக்கும். மக்களிடம் மக்கள் மொழியிலேயே தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

குறிப்பாக அரசாங்கம் குறித்து விமர்சிக்கையில். ‘நீ தப்பு’ என இல்லாமல்; நாசுக்காக ‘நல்லதுதான், ஆனால் மக்களுக்கு இதன் தேவை குறைவுதான்’ என்பது போல சொல்லுதல் அவசியம். இருக்காது என்றும் இல்லையென்றும் சொல்லும் போது ஏன் எப்படி என்பதையும் விவரிக்க வேண்டும்.

ஊடகத்துறையில் இருப்பது வெறும் தொழில் அல்ல; அதனையும் தாண்டிய மக்கள் சேவை என்பதனை எப்போதும் மறக்கக்கூடாது."

பேசி முடித்த மாலன், இப்போதும் என் மனதில் வார்த்தைகளால் நிழலாடிக்கொண்டிருக்கிறார். என்னை அறிமுகம் செய்த போது வல்லினத்தில் படித்திருப்பதாக சொன்னது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

மாலன் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் சிலரிடம் இருந்தாலும்; ஊடகத்துறை பணியாளாராக இருக்கும் நான் அவரிடம் கற்றுக்கொள்ள இன்னமும் இருக்கின்றன.



நன்றி
இதழ் 34
அக்டோபர் 2011

நண்பரின் பதிவு

( நண்பர் நவின் அவரது வலைப்பூவில் என்னைக் குறித்து எழுதியிருந்தது - நன்றி ம.நவின்)

ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று!


26 & 27 பிப்ரவரி நடக்கவிருந்த மலேசியா – சிங்கப்பூர் உறவுப்பால மாநாட்டிற்கு வெள்ளிக்கிழமையே ஜொகூர் செல்வதாகத் திட்டம். பாலமுருகன் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கே கோலாலம்பூர் வந்துவிட்டார். சிவாபெரியண்ணன் 3 மணிக்கு வேலையிலிருந்து திரும்புவதாகச் சொன்னார். அதற்குள் தயாஜியைப் பார்த்துவிட்டு கொஞ்சம் கதைக்கலாம் என நானும் பாலமுருகனும் திட்டமிட்டிருந்தோம்.


தயாஜி மின்னல் வானொலி  நிலையத்தில் அறிவிப்பாளராகப் பணியாற்றுகிறார். வல்லினத்தில் அவர் எழுதும் ‘பயணிப்பவன் பக்கம்’ குறித்தும் அவர் வானொலியில் இருந்துகொண்டு இலக்கியத்தை நகர்த்த கூடிய சாத்தியங்கள் குறித்தும் பேசலாம் என்றுதான் அன்றையச் சந்திப்பை ஏற்பாடு செய்தேன். நாங்கள் செல்வதற்கு முன்பே சிவா பெரியண்ணன் அங்கு அவரோடு மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். உடை  மேசையின் அளவு சிறியதாக இருந்தது. எனக்கு சாப்பிடும் போது வசதியாக அமரவேண்டும். இடம் மாற்றி அமரலாமா என்று கேட்டேன். சிவா ‘சாப்பிடும்போது கையும் வாயுதானே வேலை செய்யப்போகிறது … நீச்சல் அடித்துக்கொண்டா சாப்பிடப்போகிறோம்’ என்றார். பின்னர் அவரே கொஞ்சம் இடத்தைத் தாராளாப் படுத்தினார். சிவாவின் ‘பிளாஞ்சா’வில் மதிய உணவு சுவையாக இருந்தது.



கொஞ்ச நேரம் இலக்கியம் குறித்தும் வல்லினம் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். மிக முக்கியமாக எழுத்தாளர் சங்கத்தின் சுரண்டல் பற்றியது. தயாஜிக்கு அது குறித்த பிரக்ஞை இருந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் அது போதாது என்றும் தோன்றியது. இலக்கியத்தில் தீவிரமாக நுழையும் ஒருவனுக்கு தொடக்கத்தில் இருக்கும் அத்தனை அசட்டுத்தனமான நம்பிக்கைகளும் ஆர்வமும் அவரின் பேச்சில் இருந்தது. நானும் முன்பு அவ்வாறு இருந்ததால் என்னால் எளிதில் தயாஜியை அறிய முடிந்தது. இன்னும் சொல்லப்போனால் அவர் புழங்கும் வானொலி எனும் ஊடகம் சமரசங்களுக்கான அத்தனை சாத்தியங்களையும் கொண்டது. அதை மீறி அவர் அடுத்தடுத்து செயல்பட முடியுமா என்பதில் எனக்குக் கேள்விகளும் இருந்ததன.
Tayag Vellairoja
தயாஜி

இடையில் சிவா பயணத்துக்கான தனது உடமைகளைத் தயார் செய்ய அருகில் இருந்த தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன்பின்னர் தயாஜி விஸ்தாரமான ஓர் உரையாடலுக்கான வாய்ப்பினைக் கொடுத்திருந்தார். சிவா தான் பணிபுரியும் அமைச்சின் அதிகாரி உடையில் இருந்தது அவருக்கு அவ்வளவு நேரம் கிலியைக் கொடுத்திருக்கலாம் :-)


தயாஜியிடமிருந்து பெரும்பாலும் நேர்மறையான பதில்களே இருந்தன. அதன் வழி தடைகளில்லாமல் சில விடயங்களைப் பகிர வாய்ப்பிருந்தது. உரையாடல் தனிப்பட்ட வாழ்வு குறித்து சென்றது. காதல் தொடர்பாகவும். காதல் ஏற்படுத்தும் வன்முறை தொடர்பாகவும்.
நான் ‘காதல் என்பதே வன்முறைதான்’ என்றேன்.” நாம் இதற்கு முன்பு நமது தமிழ்ப்படங்கள் கற்பித்த காதலை நமது காதலாகக் காண்கிறோம். அக்காதல் அவ்வாறாக இல்லாத உண்மை தெரியும் போது சலனம் அடைகிறோம். நமது ஆழமான நம்பிக்கைகள் நிஜத்தை சில சமயம் மறைக்கிறது. நாம் நமது காதலை விரும்பாத கணத்தையும்.” தயாஜி நான் சொல்வதை ஏற்றுக்கொண்டது போல தோன்றியது. அவருக்கு அதற்கான அனுபவங்கள் இருந்தன. என்னுடைய சில அனுவங்களைக் கூறினேன். பாலாவும் கூறினார்.


மீண்டும் பேச்சு இலக்கியத்திற்குள் புகுந்த போது வாசிப்பைத் தீவிரப்படுத்தக் கூறினேன். ஆழமான நம்பிக்கைகள் நிஜத்தை மறைப்பதை இலக்கியத்திலும் கவனிக்கவேண்டியிருப்பதை வழியுறுத்தவேண்டும் எனத் தோன்றியது. அடுத்தடுத்தச் சந்திப்பில் அது குறித்து பேசலாம் என விடைப்பெற்றேன். தொடர்ந்து சந்திக்கலாம் என்றேன். தொடர்ச்சியான உரையாடலும் வாசிப்பும் தீவிரத்தன்மையை அதிகரிக்கும் எனக்கூறினேன். தயாஜி சரி என்றார்.


மகிழுந்தில் ஏறியபின் பாலாவிடம் சொன்னேன், ” தயாஜி போலதான் நானும் வாசிக்கவும் எழுதவும் தொடங்கினேன். அப்போது சுஜாதாதான் எனக்குப் பிடித்த எழுத்தாளர். எனக்கு வழிக்காட்ட எம்.ஏ.இளஞ்செல்வன் தொடங்கி சண்முகசிவா வரை இருந்தனர்.

வாசிப்பைத் தீவிரப்படுத்தி அதிகாரத்திடம் தன்னை சமரசப்படுத்தாமல் தொடர்ந்து செயல்பட்டால் தயாஜி முக்கிய எழுத்தாளராக வருவார். அதற்கு வழிக்காட்டுதலும் அவர் எழுத்துகளை செம்மைப்படுத்தி பிரசுரிக்கும் ஊடகங்களும் தேவை. அதைதான் நாம் செய்ய வேண்டும். மற்றபடி உட்காரவைத்து உன் எழுத்தில் அது நொட்டை இது நொட்டை எனச்சொல்வதில் நம் மேதாவிதனம் வெளிப்படுமே தவிர அடுத்த தலைமுறை வளராது” என்றேன்.பாலா முழுதுமாக ஆமோதித்தார்.

நன்றி
http://vallinam.com.my/navin/?p=425

எஸ். ராமகிருஷ்ணனுடன் கழிந்த நாள்களும் கழியாத நினைவுகளும்


“எஸ்.ராமகிருஷ்ணனை வரவைக்கறோம் தெரியுமா..?”

“அப்படியா! எஸ்.ரா எழுதி எதை படிச்சிருக்கிங்க..?” கேள்விக்கு எதிர்க்கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனாலும் திட்டுகிறார்கள்.

   சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனை வரவைத்து சிறுகதை பயிலறங்கு ஒன்றை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு தெய்திருந்தனர். குறிப்பிட்ட சில இடங்களே உள்ளதால்  முந்திக் கொண்டவர்களுக்கு    வாய்ப்பு அமைந்திருந்தது. 19,20,21 என மூன்று நாள்கள் நடைப்பெற்ற பயிலரங்கு அது. இரண்டு நாள்களுக்கு முன்னரே வந்துவிட்டார் எஸ்.ரா. ஏற்கனவே சங்கத்தின் தலைவரிடம் பேசியிருந்ததால் பயிலரங்குக்கு முதல் நாள் எஸ்.ரா வானொலி நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

பாதி வழியில் அவருக்காகக் காத்திருந்து அவர் வந்திருந்த காரிலேயே, அவர் பக்கத்திலேயே அமர்ந்து வானொலி நிலையத்திற்கு வந்தேன். எழுத்தின் ஆளுமையால் ஈர்த்திருந்த எஸ்.ரா-வின் எளிமையும் பழகிய விதமும் கவர்ந்தது. வானொலி அறிவிப்பாளராய் பலரைச் சந்தித்திருக்கிறேன். பலருடன் புகைப்படம் எடுத்திருக்கிறேன். ஆனால் எஸ்.ராவுடன் ஏற்பட்ட சந்திப்பு உணர்வு ரீதியாக மாறுபட்டிருந்தது. ‘ஆசையாசையாய்’ பிரமுகர் ஒருவரை பேட்டி எடுக்க தயாரானேன். முகநூல் நண்பர்களிடமும் விரும்பும் கேள்வியைப் பதியச் சொன்னேன்.

பேட்டி குறித்து வேறொரு நாளில் பதிவு செய்கிறேன். இந்த பதிவு மூன்று நாள் நடைபெற்ற சிறுகதை பயிலரங்கு குறித்து மட்டுமே.

19-ம் தேதி பிற்பகல் ஒரு மணிக்கெல்லாம் நிகழ்ச்சி நடைபெறும் விடுதிக்கு வரவேண்டும் என்றார்கள். பன்னிரெண்டு மணிக்கு முன்பாகவே சென்றுக் காத்திருந்தேன். முதன்முதலாக இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பேச்சாளருக்குச் சில அடிதூரத்திலேயே எனக்கான இருக்கை அமைந்திருந்தது. அதுவும் இரண்டாவது இருக்கை. முதல் இருக்கை தோழி கி.உதயக்குமாரிக்கும் மூன்றாவது இருக்கை நண்பன் கங்காதுரைக்கும் என ஒவ்வொரு இருக்கைக்கும் பெயர் ஒட்டியிருந்தது. இளைஞர்களுக்கு முன்னிருக்கை வழங்கியச் சிந்தனைக்கு நன்றி.

மூன்று நாள் பயிலரங்கில் எஸ்.ரா மட்டுமின்றி ரெ.கார்த்திகேசு, சபாபதி, கோ.புண்ணியவான் ஆகியோரும் பேச்சாளர்களாக வந்திருந்தார்கள். நேரம் ஆக ஆக வருகையாளர் அதிகரிக்கத் தொடங்கினர். ஒவ்வொருவருக்கான விடுதி அறைக்கு சென்று புத்துணர்ச்சியோடு வந்தார்கள்.

முதல் நாள் முனைவர் முல்லை ராமையாவின் அறிமுகத்துடன் எஸ்.ரா ஒலிபெருக்கி முன் வந்தார். வாசனையால் நுகரப்பட்ட படைப்புகளுக்குச் சொந்தக்காரரின் தொடக்க உரையின் தலைப்பு ‘எப்போதும் இருக்கும் கதை’.

‘நாம் எல்லோரிடமும் நிச்சயம் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது. சிலர்தான் அதனை வெளிக்கொணர்கின்றார்கள். கதையைப் படிப்பதோடு அது குறித்து பேசுவதில் இருக்கும் இன்பம் இரட்டிப்பாகின்றது. கதை வாசிக்கும் பழக்கம் குறைய இருக்கக்கூடிய காரணங்களில் முக்கியக் காரணம் அது தொடர்பாக பகிர ஆள் இல்லாமையே.

நமக்கு பாட்டி வடை சுட்ட கதை தெரியும். ஏன் பாட்டி வடை சுடுகிறார்? ஏன் மரத்தடியில் அமர்ந்திருக்கின்றார்? நரி ஏன் நேரடியாக வடையைத் திருடவில்லை? வடை திருடிய காகத்தை பாட்டி ஏன் விரட்டவில்லை...? இந்த கேள்விகள் எதுவும் இல்லாமல் பாட்டியும் வடையும் காகமும் தொடர்ந்துக் கொண்டே வருகிறது. மேற்சொன்ன கேள்விகள் தோன்றிய பிறகு இக்கதையின் மூலத்தை நான் தேடத் தொடங்கினேன்.’

பங்கேற்பாளர்கள் ஆர்வமாக குறிப்பு எடுக்கத்தொடங்கினார்கள். இந்த கதை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கதையாம். கிரேக்க மொழியில் இந்தக் கதை இருக்கிறதாம். அங்கு காலம் காலமாக சொல்லிவரும் ஈசாப் கதைகளில் இந்த கதை இடம்பெறுகின்றதாம். ஆனால் அங்கு வடைக்கு பதில் வெண்ணைத்துண்டும் காகமும் இருந்ததாம். அரபு மொழி கதையில் காகமும் மாமிசத்துண்டும் இருந்ததாம். இந்தியாவில் வடையும் காகமுமாக மாறி வட இந்தியாவில் ஜிலேபியும் காகமும் என உருவெடுத்ததாம்.

இப்படி இடத்திற்கு இடம் மாறி வந்த கதையில் சொல்லப்பட்டிருப்பதையெல்லாம் பட்டியலிட்டார். வயதானாலும் பாட்டி வடை சுட்டு உழைக்கிறார். ஆதரவின்று மரத்தடியில் இருக்கிறார். தற்பெருமையால் காகம் வடையை இழக்கிறது. தந்திரக்காரன் நம்மை ஏமாற்றுவான் என்பதை சொல்கிறது நரி. இப்படியாக சொல்லியப்பின் இந்தக் காகம் வடை கதைக்கு ஒரு முன்கதையும் தொடர்ச்சியும் அதனுள் பல கூறுகளும் இருக்குமென்றால்; மீதம் இருக்கும் கதைகள் குறித்து மனம் யோசிக்கத் தொடங்கியது.

குழந்தைகளிடம் இருக்கும் கதை சொல்லும் கலையை நாம் உதாசினம் செய்கிறோம் என்றவர், தன் அண்டைவீட்டுப் பையன் தினமும் பள்ளி முடிந்து இவரிடம் சொல்லும் கதையினை சொல்லி சிரிக்க வைத்தார்.

‘சிறுகதை என்பது நினைவுப்பதிவு. வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதுதான் சிறுகதைகள்’ என்றார். 19-ம் ஆண்டு தோன்றிய சிறுகதை குறித்து விவரித்தார்.

ரஷ்யர்களுக்கு சிறுகதை என்பது 500 பக்கங்கள் கொண்டவை.

அரபு மொழியில் சிறுகதை என்பது 6 பக்கம் கொண்டவை.

அமெரிக்கர்களுக்குச் சிறுகதை என்பது 10 பக்கம் கொண்டவை.

ஆனால் தமிழில் குறிப்பிட்ட பக்கம் இல்லை எனவும்; ஒன்றை பற்றிய முன் - பின் பதிவுதான் சிறுகதையாகிறது என்றார். கதைகளுக்கு இதயம் இருக்கிறதா என கேள்வி கேட்டு நாங்கள் யோசிக்கும் முன்பே, இல்லாமலா உங்களை வருந்தவும் வாழ்க்கையை மாற்றவும் உதவுகிறது என முடித்தார்.

பின், அவரவர் மேஜையில் வைத்திருக்கும் கோப்பை பற்றி பேசலானார். அதில் படைப்பாளர்கள் கவனிக்கத்தக்க முன் உதாரணமாக இருக்கக்கூடிய சிறுகதைகள் இருப்பதாகவும் அதனை படிப்பது பயனானது என்றார்.

கோப்பில் இருந்த கதைகளும் அதனை எழுதியவர்களும்.

• கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்

• அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்

• எங்கள் டீச்சர் - சுந்தர ராமசாமி

• பாயாசம் - தி. ஜானகிராமன்

• மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

• புலிக் கலைஞன் - அசோகமித்திரன்

• எஸ்தர் - வண்ணநிலவன்

• அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை

• சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்

• புத்தனாவது சுலபம் - எஸ்.ராமகிருஷ்ணன்

ஒவ்வொரு கதையின் ஆழத்தையும் மறுநாள் பகிர்ந்து கொண்டார்.

முதல் அமர்வு முடிந்தது. இரண்டாவது அமர்வில் ரெ. கார்த்திகேசு பேசினார். அவரது தலைப்பு ‘சிறுகதையில் திண்மையான காட்சிகளும் கதை மாந்தரும்.’ சிறுகதையை தானாக சொல்லும் வருணனையாகவும் கதைமாந்தர்களின் உரையாடல் மூலமாகமும் அல்லது இரண்டும் சேர்ந்த கலவையாகவும் சொல்லலாம் என்றார். அதற்கென்று பிரித்தியேகமாக சில உதாரணச் சிறுகதைகள் குறித்து பேசினார்.

அடுத்த அமர்வு ‘சிறுகதைகளில் உத்தியின் பயன்பாடு’ என்ற தலைப்பில் முனைவர் சபாபதி பேசினார்.

பேசி முடிந்ததும். முதல் பயிலரங்கு நிறைவடைந்தது. இரவு மணி 11-ன்றைத் தாண்டியது. நான், கங்காதுரை, முனீஸ்வரன் ஆகியோர் ஒரே அறை. சில மணிநேரம் பேசி அன்றைய நிகழ்வு குறித்து மேலும் பகிர்ந்தோம். ஒருவர் பின் ஒருவராக எப்போதோ தூங்கியிருந்தோம்.

அடுத்தநாள், ‘சிறுகதைகளின் சாத்தியங்களும் சவால்களும்’ என்று உரையைத் தொடங்கினார் எஸ்.ரா. சிறுகதை என்பது 100 மீட்டர் ஓட்டம். முடிவு நிச்சயிக்கப்பட்ட ஒர் ஓட்டம் என்றார். தன்னை வெளிபடுத்த சிறந்த கருவி இது என்றவர், சிறுகதையின் கவனிக்கத்தக்க கூறுகளைப் பட்டியலிட்டார்.

- கரு

- களம், சூழல், இடம்

- கதாப்பாத்திரம்

- கதை சொல்லும் முறை

- கதையின் திருப்பம்

- கதையின் ஒருமை (கதாப்பாத்திரத்திற்கும் சூழலுக்குமான ஒற்றுமை)

- கதையின் முதல் வரி

- கதையின் தலைப்பு

- தனித்துவம் (சிந்தனை)

- கதையின் முடிச்சி

பாவைக்கூத்தில் ஒரே ஆள் அனைத்து பொம்மைகளாகவும் இருப்பதை போல்; சிறுகதை படைப்பவர்கள் அனைத்து உணர்ச்சிகளையும் உணர்ந்தவாறு கதையினை நகர்த்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து ‘சிறுகதையின் அழகியல்’ தலைப்பில் பேசினார். பார்த்தான், அவதானித்தான் என இரண்டு வார்த்தைகளுக்கு இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து கதையில் பயன்படுத்தப்படவேண்டும் என்றார்.

மேலும் கதைகளைப் படிக்க சில அகப்பக்க முகவரிகளைக் கொடுத்தார்.

1. அழியாச்சுடர்

2. எஸ்.ராமகிருஷ்ணன்

3. சொல்வனம்

4. சிக்கி முக்கி

5. உயிர்மை

6. திண்ணை

எஸ்.ராவை அடுத்ததாக இரண்டாம் நாளில் கோ.புண்ணியவான் பேசிவிட்டுச் சென்றார். அவருக்கானத் தலைப்பு ‘வாசிப்போரைக் கவரும் சிறுகதையின் தொடக்கம்’. இவரின் பேச்சில் சிறுகதை தொடக்கம் என்பது ‘show me don’t tell’ என்பதனை புரிந்து கொண்டோம்.

- முதல் வரியிலேயே கதை தொடங்க வேண்டும்

- தொடக்கம் ஆர்வ நிலை, எதிர்ப்பார்ப்பு, நெருக்கடிகளை உண்டாக்க வேண்டும்

- வடிவ நேர்த்தி அவசியம்

- மையக்கருவுடன் கதை தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

நிறைவாகப் பேசி சிறுகதை தொடக்கத்திற்கு உதாரணங்கள் கொடுத்தார்.

உதாரணங்கள்

# புதிரோடு தொடக்கம்

# தர்க்கத்தோடு தொடக்கம்

# உரையாடலுடன் தொடக்கம்

# நனவோடையுடன் தொடக்கம் (தானே சொல்லித் தொடங்குதல்)

# அழகியல்

# கதாப்பாத்திரத் தன்மை

அமர்வு முடிந்தது. முதல் நாள் போல் மூவரும் பேசிப் பகிர்ந்து வெளியில் சென்று சாப்பிட்டோம். விவாதித்தோம். உறங்கினோம்.

பயிலரங்கில் மூன்றாம் நிறைவு நாளில் எஸ்.ரா உலக இலக்கியம் குறித்து பேசினார். உலக இலக்கியம் என்பது ஆங்கில இலக்கியம் மட்டுமல்ல மலையாள இலக்கியம் தொடங்கி நம்மவர்களின் படைப்புவரை என பேச்சில் இருந்து புரிந்தது. மொழிபெயர்ப்பு கதைகளின் அவசியத்தை புரியவைத்தது அவரது பேச்சு. அதில் ரஷ்ய எழுத்தாளர்கள் டாஸ்டாய், தாஸ்தோஸ்கி, அண்டன் செக்காவ் போன்றோர் இடம் பெற்றனர். மேற்கொண்டு அவர் சொல்லியதெல்லாம் அவரது அகப்பக்கத்தில் படித்த நினைவில் இருக்கிறது. அங்கு சென்று விரிவாகப் படிக்கலாம். அதில மலையாள எழுத்தாளர் பக்ஷிர் எழுதிய ‘மாய பூனை’ கதையில் செய்யப்பட்டிருக்கும் பகடியும் சமூக விமர்சனமும் அந்த கதையைத் தேட வைத்திருக்கிறது. மக்களின் வழிகாட்டியாக எல்லா சமயத்திலும் எழுத்தாளர்கள் இருந்து வந்திருக்கிறார்கள் என சொன்னதும் ஒரு கனம் நான் எழுதியதெல்லாம் கண்முன் படமாக வந்து போனது.

பயிலரங்கின் நிறைவாக ஆறு. நாகப்பன் ‘கருப்பொருளில் இருந்து கதைப் பின்னல்’ என்ற தலைப்பில் பேசினார்.

எஸ்.ரா, ரெ.கார்த்திகேசு, கோ.புண்ணியவான், ஆறு. நாகப்பன் ஆகியோரின் உரைக்கு இடையில் அரை மணி நேரம் கொடுக்கப்பட்டது. வந்திருந்தவர்கள் குழுவாக பிரிக்கப்பட்டனர். பேசியவர்கள் கொடுத்த உரைக்கு ஏற்ற பயிற்சியாக நாங்கள் கதையின் தொடக்கமாக ஒரு பக்கம் எழுதினோம்.

எஸ்.ரா விடம் ‘கேசவன்-என் முதல் நண்பன்’ என்ற தலைப்பில் ஒரு பக்கத்தில் கதையை எழுதிக் கொடுத்தேன். ரெ.கார்த்திகேசு கொடுத்த கருவைக் கொண்டு உரையாடலைக் குழுவாக எழுதினோம். கோ.புண்ணியவானிடம் ‘நான் கடவுள்’ என்ற கதையின் தொடக்கத்தை எழுதிக் கொடுத்தேன். ஆறு.நாகப்பனிடம் அவர் கொடுத்திருந்த கதையின் தொடக்கத்தை வைத்து ஒரு பத்தி வைத்து குழுவில் கலந்து பேசி எழுதிக் கொடுத்தோம்.

எஸ்.ரா விடம் வந்த 70 கதைகளில் 6 கதைகளை அவர் தெர்ந்தெடுத்து மேடையில் படிக்க வைத்தார். படித்து அதனை எழுதியவர்களிடம் இருக்கும் எழுத்தினை பேசினார். அதில் ஐந்தாவது கதையாக நான் எழுதிய ‘கேசவன்-என் முதல் நண்பன்’ என்ற கதையைத் தேர்தெடுத்து வாசிக்கச் சொன்னார்.

கதைக் கேட்டவர் “நல்ல தொடக்கம். சொல்ல வந்ததை சொல்லி முடித்திருக்கறிங்க, கதையின் பயன்படுத்தப் பட்டிருக்கும் மொழி நல்லா வந்திருக்கு. தொடர்ந்து எழுதினிங்கனா நல்ல படைப்புகளைக் கொடுக்க முடியும். வாழ்த்துகள்” என்றார்.

எழுத்தும் தானும் வேறு அல்லாத ஓரு எழுத்தாளரின் வாக்கு பலிக்கும் என ஆழ்மனம் நம்புகிறது. இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டேன். தான் பேசி முடித்து இரவு வரை எங்களுடன் அமர்ந்திருந்தார் எஸ்.ரா. முதலில் வருவார் கடைசியாய் செல்வார். எல்லா நேரத்திலும் அவரிடம் சொல்வதற்குக் கதைகள் இருந்தன. எல்லோரும் கதைகளினூடே வாழ்வதை அதன் மூலம் நாசுக்காக உணர்த்துகிறார் என்றே நினைக்கிறேன்.



நன்றி
இதழ் 33
செப்டம்பர் 2011


ஜூன் 12, 2012

தற்போதைய வாசிப்பில், ஆல்பெர் காம்யு--வின் 'அந்நியன்'




8.6.2012 இன்றோடு;

ரெ.கார்த்திகேசு எழுதிய ‘அந்திம காலம்’ நாவலை படித்து, வாசித்த அனுபவம் குறித்து எழுதியாகிவிட்ட்து (பிரசுரம் ஆகும் போது சொல்கிறேன் & அதன் லிங்க் கொடுக்கிறேன்)
தற்போதைய வாசிப்பில் அடுத்த நாவலாக வருவது; ஆல்பெர் காம்யு எழுதிய ‘அந்நியன்’ (THE STRANGER)
இது ஆல்பெர் காம்யு எழுதிய முதல் நாவல். 1942-ல் எழுதப்பட்டது.
இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்த பிரச்சனைகளைத் தெளிவான நேர்மையுடன் விளக்கியிருக்கும் இவரது இலக்கிய படைப்புகளுக்காக இர்வருக்கு 1957-ம் ஆண்டு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.
நாவலை எனக்கு முன் மொழிந்தவர் நண்பர் மா.நவின்.
..................................................................
இந்த உலகில் ஒரு இலக்கியவாதிக்கு மிஞ்சப்போவது என்ன தெரியுமா? ஒரு சின்ன உண்மையை எழுதிவிட்ட தாளும் , அந்த ஒரு பக்கத்தை உணர்ந்து படிக்கிற வாசகனும்தான்.... அந்த ஒரு பக்கத்தை எழுதுவதற்கு ஒவ்வொரு இலக்கியவாதியும் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருக்கிறது - என்கிறார் நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு இலக்கியவாதி ‘ஆல்பெர் காம்யு’
.....................................................

8.6.2012
இன்றோடு ஆல்பர் காம்யு-வின் ‘அந்நியன்’ நாவலின் மூன்றாம் அத்தியாயத்தை இப்போதுதான் படித்து முடித்தேன்.
ஆல்பேர் காம்யு-வே கதை சொல்லியாக நாவலில் சொல்லிச் செல்கிறார். நாவலில் முதல் வாக்கியமே இப்படி ஆரம்பமாகிறது.
“இன்று அம்மா இறந்துவிட்டாள். ஒருவேளை நேற்றாகவும் இருக்கலாம்; எனக்குத் தெரியாது”
தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் , நாயகனின் செயல்களும் சிந்தனைகளும் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவேளை நாவலை தொடர்ந்து படிப்பதன் மூலமும் , ஆல்பெர் காம்யு -வின் கோட்பாடுகள் குறிந்தும் அறிந்து கொள்வதின் மூலமும் இநாவல் எனக்கு புரிதலை ஏற்படுத்தலாம்.
.......................................................................
10.6.2012
இன்றுவரை இந்நாவலின் 4 பாகம் வரை படித்துவிட்டேன்.(60-ம் பக்கம் வரை)
என் குழப்பம் கூடிக்கொண்டுதான் போகிறது. இத்தனை குழப்பம் கொடுக்கும் நாவலை நான் படிப்பதின் அவசியம் என்ன என்றுகூட எனக்கு தெரியவில்லை. இன்றுதான் நாவலை ஆல்பெர் காம்யு , ‘மெர்சோ’ சொல்லிக் கொண்டுச் செல்வதாக எழுதியிருக்கிறார் என எனக்கு தெரிந்தது. தொடக்க அத்தியாயங்களில் ஆல்பெர் காம்யு-வே சொல்லி செல்வதாக நினைத்து படித்து வந்தேன். இப்போது எனக்கும் முன்பின் அறிமுகமில்லாத ஒருவன் - மெர்சோ கதையை சொல்லிச் செல்கிறான்.
  என் வரையில், வலது கையில் உண்பதையும் இடது கையில் உண்பதையும் நாயகன் வித்திசாயமாகப் பார்ப்பதில்லை. அவனுக்கு வலதும் ஒன்றுதான் இடது ஒன்றுதான்.
   என்னால் இதை நினைக்கவும் முடியவில்லை. வலது கையை அதற்கான வேலையை செய்வதற்கும் இடது கையை அதற்கான வேலை செய்வதற்கும் மட்டுமே பழக்கப்படுத்தியிருக்கிறேன். எனக்கு இரண்டும் ஒன்றல்ல. இது வேறு அது வேறு.
    நாயகன் ‘மெர்சோ’ அவனை விரும்பும் ஒரு பெண் தன்னை திருமணம் செய்வாயா என கேட்டதற்குக் கூட, அவள் வ் விருப்பம் அதுவென்றால் செய்ய தயார் என்றே சொல்கிறான். திருமணம் செய்து பழகுவது, திருமணம் செய்யாமல் பழகுவது அவனுக்கு ஒன்றாகவேப் படுகிறது.
    தேவையில்லாமால், உணவு விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணின் செயல்களை  சிரத்தை எடுத்தும்க் கொண்டு கவனிக்கிறான். அது விசித்திரமாக இருக்கவே (விசித்திரம் என சொல்வது சரியா என்று கூட எனக்குத் தெரியவில்லை.) அவளை பின் தொடர்கிறான். அதைகூட நாயகனான் முழுமையாகச் செய்ய முடியவில்லை. கொஞ்ச தூரம் சென்ற அவள் காணாதது குறித்து எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் திரும்புகிறான்.
    எந்த ஒரு காரண காரியம் இன்றி நண்பன் ஒருவனுக்கு உதவுகிறான். உதவாமல் இருப்பதும் உதவி செய்வது அவனுக்கு ஒன்றுதான்.
   ஆனால் உதவி என்பது அப்படிப்பட்ட ஒன்றா என்ன..? உதவி செய்வது செய்யாமல் இருப்பதும் ஒன்றே என நினைக்கும் ஒருவன் எப்படிபட்ட மனிதன். மூளைக் கோளாறு உள்ளவனா இல்லை அவன்தான் தெளிவானவனா..?
இனி அடுத்தடுத்த அத்தியாங்களை படித்து எழுதுகிறேன்.


...........................................................................

11.6.2012

    இன்றோடு 'அந்நியன்' நாவலின் முதல் பாகத்தை படித்தேன். தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் முதல் அத்தியாயத்தையும் படித்திருந்தேன்.

     முதல் பாகத்தின் முடிவில் காரணமோ எந்த முன்பகையோ இன்றி அரேபியன் ஒருவனை துப்பாக்கியால் சுடுகிறான் நாயகன். அதோடு விடவில்லை, இறந்தவனின் உடலை மீதமிருக்கும் நான்கு குண்டுகளால் சுடுகிறான்.

     இப்படியாக முதல் பாகம் முடிகிறது; 'அதுவே நான் என் துரதிஷ்டத்தின் வாயிற்கதவை நான்கு முறை தட்டியது போல் இருந்தது' என.

    இரண்டாம் பாகத்தில் விசாரிக்கப்படுகிறான். அவம் வழக்கில் நீதிபதிக்கு ஆர்வம் ஏற்படுகிறது. தனக்கென்று ஒரு வழக்கறிஞர் இல்லாத பட்சத்தில் அரசாங்கமே ஒரு வழக்கறிஞரை நியமிக்கும் என்கிறார் நீதிபதி. அது சிறப்பான ஒன்றாக நாயகன் கருத்து தெரிவிக்கிறான்.
  
     தன்னை சந்திக்க வரும் அரசாங்க வழக்கறிஞர் நாயகன் பேசுவதை கேட்டு வியப்படைகிறார் உடன் கோவப்படுகிறார். தன் தாயின் மரணத்தில் கூட அழாமல் இருந்ததன் காரணம் என்ன என்று வினவ பதில் இல்லையென வெறுமையாய் சொல்கிறான் நாயகன்.
    
    தாயின் இறுதி ஊர்வலத்தில் இருந்த அவன் எந்தவித பாதிப்பையும் காட்டாமல் இருந்தது தெரிந்ததும் வழக்கறிஞர் மேலும் விரக்தியடைகிறார். மேற்கொண்டு, நாயகனின் பேச்சு வழக்கறிஞருக்கு வழக்கில் வெற்றிபெற வாய்ப்பு குறைந்துக் கொண்டு வருவதை உணர்ந்துகிறது.


மேலும் படித்த பிறகு எழுதுகிறேன்.
.....................................................


           17.6.2012 - சில நாட்கள் இடைவேளிக்கு பிறகு மீண்டும் ஆல்பெர் காம்யு எழுதிய 'அந்நியன்' நாவலை படிக்கிறேன்.
வாசிப்பின் இடைவேளிக்கு நான் பொறுப்பல்ல; நாவலைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட 'வெறுமை' அல்லது 'பெயர் குறிப்பிட இயலாத' ஓர் உணர்வுக்கு ஆட்பட்டேன். அதனை அனுபவிக்கவே, வாசிப்பின் இந்த இடைவேளி........




......................................................................................................


     இருபதாவது  நாளாக 'அந்நியன்' நாவலைப் படித்து முடித்தேன்.  மலையேறிய அனுபவத்தை எனக்கு கொடுத்தது ஆல்பெர் காம்யு-வின் எழுத்துகளும் ; அந்நியன் கதாநாயன் மெர்சே-வும்.
..........................................................................................................


2.7.2012

அந்நியன் - இவனும் சக மனிதன்தான்
     வாசித்த புத்தகங்கள் குறித்து மனதில் தோன்றியவற்றை எழுதுவது வழக்கம். சில புத்தகங்களுக்கு சில வரிகளில் அனுபவத்தை சொல்லிவிடுவேன். இன்னும் சில புத்தகங்களுக்கு பக்கங்கள் நிறைய எழுதுவேன். சில புத்தகங்களுக்கு எதுவும் எழுத எண்ணியிருக்கவில்லை.
   இதில் அந்நியன் நாவலை எந்த இடத்தில் வைப்பது என முடிவாகத் தெரியவில்லை.
   சமீபகாலமாக தொடர்ந்து நாவல்களைப் படித்து வருகிறேன். அந்த வகையில் வந்ததுதான் அந்நியன் நாவல். இலக்கிய துறையில் எனக்கு முன்னோடியாகவும் நண்பராகவும் நான் நினைப்பது ம.நவின்-ஐ. அவர் அறிமுகம் செய்ததுதான், ஆல்பெர் காம்யு-வின் அந்நியன் நாவல்.  மற்றபடி என் வாசிப்பு அனுபவங்களை என் வலைப்பூவில் எழுதிவந்திருக்கிறேன்.
    வாங்கிய சில மாதங்கள் கழிந்த பின்னரே அந்நியனை படிக்க எடுத்தேன். அதற்கு முன் ‘இருத்தலியல்’ குறித்தோ ‘அபத்தம்’ குறித்தோ எந்த ஒரு புரிதலும் என்னிடம் இருக்கவில்லை. இப்போதுகூட என்னால் முழுமையாக அந்த கோட்பாடுகளை புரிந்துக் கொள்ள முடியவில்லை.
    இப்போது எழுதுவது கூட, எழுத வேண்டும் என எண்ணுகிறேன் அதனால் எழுதுகிறேன். எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் ஒன்றாகவே இருப்பது போல நினைக்கிறேன்.
    அந்நியன் நாவலின் தலைப்பை போலவே சமூகத்திடம் இருந்து அந்நியப்படுத்தப்படுகிறான் நாயகன். அவன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்விகளை அவனிடம் நம்மால் முன்வைக்க முடியவில்லை. தன் மனதுக்கு ஏற்றவாரு மிக இயல்பாக எந்த ஒரு உணர்ச்சிக்கும் அடிமையாகதவன் அவன். வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வாழ்கிறான் என்றே சொல்லத் தோன்றுகிறது.
    நாவலில் தொடக்கமே; தாயின் மரணத்தில் இருந்து தொடங்குகிறது. மரணம் நாயகனை பாதிக்கவில்லை. அதுவும் தன்னை ஈன்ற தாயின் மரணம். எப்படி சாத்தியம்..!
    நாவலில் அந்த தாயில் மரணத்தை கடந்து வாசிக்கும் போது, முதன் முதலாக நான் கலந்துக் கொண்ட மரண நிகழ்வை நினைக்கத் தொடங்கினேன்.
    என் வயது நினைவில் இல்லை. ஒருவேளை எட்டு முதல் பத்துவரை இருக்கலாம். பெரிய குடும்பம் ஒன்றில் மூத்தவரான அம்மா இறந்துவிட்டார். என் வீட்டில் இருந்து எல்லாரும், சொகம் நிறைந்த முகத்துடன் சென்றோம். மரண வீட்டில் அந்த அம்மாவின் (பாட்டி வயது) வெளியே வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் இடத்தை அடையவும் அம்மாவின் உடலை அகற்றவும் சரியாக இருந்தது.
    உறவுகள் எல்லாம் கதறி அழத்தொடங்கின. சம்பந்தமே இல்லாத எனக்கும் அழுகை வந்தது அவர்களில் அழுகையால்.
    உடலை எடுத்துச் சென்ற கொஞ்ச நேரத்தில், அழுதவர்கள் எல்லாம், வீட்டைக் கழுவினர். நாற்காலிகளை அடுக்கினர். சமையலைத் தொடங்கினர். தேநீரெல்லாம் தயார் செய்துக் கொடுத்தனர். இந்த முறை, அவர்கள் கண்கள் கலங்கியிருக்கவில்லை. முன்பு அழுது வடிந்திருந்த முகங்கள் இப்போது வழக்கத்திற்கு திரும்பியிருந்தன.
   அரை மணி நேரத்துக்கு முன் ஒரு முகம், அரை மணிநேரத்துக்கு பின் ஒரு முகம். இதில் எதுதான் நிஜம்.
    ஆனால் அந்நியனின் வரும் நாயகன் அப்படி அல்ல. முன்னதில் அழுது பின்னதில் பிரகாசிக்க அவன் விரும்பவில்லை. எப்போதும் இயல்பாகவே இருக்கிறான்.  அழாதக் காரணமே கூட இவனுக்கு எதிராக சாட்சிப்படுத்தப்படுகிறது.
    மரணம் என்பது இயல்பானது என புரிந்துக் கொண்டு தற்காலிகத் தீர்வாக, அழுவதை விரும்பாத நாயகன், தனக்கு வரும் வெளிநாடு செல்லும் வாய்ப்பைக் கூட வேண்டாம் என்கிறான். அங்கு சென்றால், மகிழ்ச்சியாக இருக்கலாம் என  சொல்லும் மேலதிகாரியிடம் கூட, தற்போது இருப்பதே மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்கிறான். மேலதிகாரியால் அதனை சரிவர புரிந்துக் கொள்ள முடியவில்லை.
    அம்மாவின் மரணத்திற்கு பிறகு, தன் காதலியுடன் கடலில் குளிக்கிறான். உல்லாசமாக இருக்கிறான். அவள் வரையில் அவன் காதலன். அவன் வரையில் அவள் காதலியாக் இருந்தாலும்; காதலியாக இல்லாமல் இருந்தாலும் ஒன்றுதான். அவளுக்குத் தோன்றுவதை ஏற்கிறான். அவளுடன் வாதம் செய்யவோ, தன்னை பற்றிய புரிதல் ஏற்படுத்தவொ அவன் முயற்சிக்கவில்லை, விரும்பவும். நம்மிடம் கூட இதனை எழுதிய ஆல்பெர் காம்யு, தன் நாயகன் குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. மாறாக அந்த நாயகனின் வாழ்க்கையைக் காட்டுகிறார்.
   நாயகன் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவன் என சொல்ல முடியவில்லை. ஆனால் எதற்கும், அவன் உணர்ச்சிவசப்படவில்லை. அதே சமயம் அவன் உணர்வற்றவனும் இல்லை.
    ஜன்னல் வழியே , கடந்து போகும் ஒவ்வொருவரையும் கவனிக்கிறான். பெரிதாய் ஏதும் எதிர்ப்பார்ப்புகள் இல்லாமல், தினம் தினம் வீடு திரும்புகிறான். அரட்டை அடிக்க பெரிதாய் நண்பர்கள் யாரும் இல்லை. இருப்பவர்களும் ஒருவர் இருவர்தான். அதுகூட ஓரளவுக்கு இவனை சார்ந்தவர்கள்தான்.
     முதல் பாகம் முழுக்க நாயகனின் உணர்ச்சியற்ற வாழ்க்கைமுறையே சொல்லப்படுகிறது. இறுதியில் கொலைகாரனாகிறான். முன்விரோதமோ பகையோ கோவமோ காரணமல்ல, அந்த சூழல், வெயில் என்றே சொல்லலாம்.
    மனம் நம்மை இயக்குகிறது என சொல்வதைவிட, இதன் வழி புற சூழல்தான் நம்மை இயக்கிக் கொண்டுவருகிறது என நினைக்கத் தோன்றுகிறது. பகையும் பலிவாங்கும் உணர்ச்சியும் மனதில்தானே தோன்றுகிறது. வெயிலும் அதன் உஷ்ணமும் உடலில்தானே உணரமுடிகிறது. நாயகனுக்கு அப்படித்தான் போலும்.
   இரண்டாம் பாகம் முழுவதும் கைதியாகவே வருகிறான். கொலைக் குற்றத்திற்காக விசாரிக்கப்படுகிறவன் பின்னர் தன் விசித்திர குணத்திற்காக விசாரிக்கப்படுகிறான் கவனிக்கப்படுகிறான்.
    நமது ஒவ்வொரு செயலும் நமது அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவதை நாயகனின் வாழ்க்கை காட்டுவதாகப் படுகிறது. இதற்கிடையில் மன்னிப்புகளுக்கும் கடவுள்களுக்கு வேலை இல்லாத்தையே நாயகன் காட்டுகிறான்.
   இந்நாவலில் வாசிப்பு எனக்கு புது அனுபவத்தையேக் கொடுத்தது. இதுவரை படித்திருந்த நாவல்கள் எல்லாம் உணர்ச்சிகளையும் கேள்விகளையும்தான் முன்வைத்தன. அந்நியன் நாவல் எனக்குள் கேள்வியினை முன்வைத்தது.
    புரிந்துக் கொண்டது இதுதான், சமுதாயத்தில் பொதுபுத்தி சார்ந்தே நாம்  செயல்படவேண்டியுள்ளது. மீறி எதனையும் கேள்வி கேட்டால் நாம் அந்நியமாக்கப்படுகிறோம். அதற்கான காரணங்களை பொதுபுத்திகள் இலகுவாக சொல்லிவிடுகிறார்கள்.
மரணத்தில் அவர்கள் அழுதால் நாமும் அழவேண்டும்.
நட்பு என்றும் காதல் என்றும் அவர்கள் கொண்டாடினால், நாமும் கொண்டாடவேண்டும்
தவறுகள் செய்த பிறகு, பாவமன்னுப்பு கேட்டால் நாமும் அப்படித்தான் கேட்கவேண்டும். ஏனெனில் நம் செயலுக்கு நாமே பொறுப்பேற்க கூடாது.
தனித்து செயல்படக்கூடாது.
அதைத்தான் நாம் வாழும் இந்த பொழுதுபுத்தி சமூகம் எதிர்ப்பார்க்கிறது என்றால்; நம்மால் அதை ஈடுகட்ட முடியாதென்றால் நாம் கூட அந்நியன்கள்தான். ஆனால் கவிஞர்களாக நொடிகளையும் அனுபவித்து வாழ்வோம்.

தயாஜி
   

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்