பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

மே 14, 2024

- பிறவிக்கலைஞனும் வைரல் மனிதர்களும் -

 


நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம். குறிப்பாக ஆசிரியர்களிடம். அதிலும் குறிப்பாக மாணவர்கள் மீது அக்கறையுள்ள ஆசிரியர்களிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்க நினைக்கிறேன்.

ஒருவேளை என் சந்தேகம் தவறாக இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன். அதற்கு நான் எப்பவும் தயார்தான்.

கணக்கு பாடம் குறித்த அறிவு இல்லாத, இதுவரையில் கணக்கு பாடத்தில் தேர்ச்சி அடையாத யாரையும், குறைந்த பட்சம் கணக்கில் தேர்ந்தவர்கள் யார் எது அவர்களின் சாதனை என தெரியாத தெரிந்து கொள்ளும் உழைப்பைப் போடாத எவரையும் நம் பள்ளி மாணவர்களுக்கு  கணக்கு பாடமோ அல்லது கணக்கு பட்டறையோ எடுப்பதற்கு நாம் அனுமதிப்போமா?

ஒருவேளை ஏதோ ஒரு வகையில் அவர் பிரபலமானவர் என்றாலும் கூட அவருக்கே கைவராத ஒன்றை, அவரே முயலாத ஒன்றை அல்லது அவரே பலவீனமாக இருக்கும் ஒன்றை குறித்து நம்  மாணவர்களுக்கு  வகுப்பு நடத்த நாம்  அனுமதிப்போமா?

பெரும்பாலான பள்ளிகளில் எழுத்தாளர்கள் அழைக்கப்படுகின்றார்கள். கதைகள் குறித்தும் இலக்கியம் குறித்தும் மாணவர்களுக்கு நால்லதொரு அறிமுகத்தைக் அவர்கள் கொடுக்கிறார்கள். நம்மைப் போன்ற எழுத்தை நேசிக்கின்றவர்களுக்கு அது பெரிய மகிழ்ச்சி. ஏனெனில் மாணவ சமூகத்திடம் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது.  ஒருவகையில் அது தொடக்கப்புள்ளியும் கூட.

நாளை அம்மாணவர்கள்தான்

வாசகர்களாக எழுத்தாளர்களாக விமர்சகர்களாக உருவாகப் போகிறார்கள். அவர்கள் இத்தமிழ்ச் சமூகத்திற்கு ரொம்பவும் முக்கியமானவர்கள்.

அவர்களிடமே போலியான முன்னுதாரணங்களை நாம் காட்டலாமா? இளம் வயதிலே இப்படியான தவறான போதனைகளைக் கொடுப்பது நாளை அவர்களிடம் இருந்து வரவிருக்கும் எழுத்தாற்றாலுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடாதா?

மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய எழுத்தாளர்கள் எவ்வளவோ பேர் இங்கு இருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுகிறவர்கள். இலக்கிய வெளிச்சம் தவிர மற்ற எந்த வெளிச்சத்தையும் அவர்கள் தங்கள் மீது சுமந்து திரிகிறவர்கள் அல்ல. அவர்களை அடையாளம் காணுவது அவ்வளவு சிரமமா?

'படித்த ஆசிரியர்களிடம் உங்கள் பிள்ளைகளை ஒப்படைக்காதீர்கள்; படித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களிடம் உங்கள் பிள்ளைகளை ஒப்படையுங்கள்’ என்கிறார் தத்துவவாதி கலீல் ஜிப்ரான். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தவர்.

அப்படி நீங்கள் உங்கள் பள்ளிக்கு அழைக்கும் எழுத்தாளர்கள் என சொல்லப்படுகின்றவர்களின் எழுத்துகளை இதுவரை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?

நிற்க, 

நாம் அவர்களை வாசித்துதான் நம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்துங்கள் பட்டறை நடத்துங்கள் அடுத்த ஆண்டு புத்தகம் வெளியிடுங்கள் என சொல்கிறோமா?

சரி,

எதை முன்வைத்து 'எளிய முறையில் குறுங்கதை பட்டறைகளை'  மாணவர்களுக்கு வழிநடத்த அந்த எழுத்து வகையில் எதையுமே செய்திடாதவர்களை  அழைக்கிறோம். சரி, யார் அவர்களை அழைக்கச்சொல்கிறார்கள். அப்படி  அழைக்கச்சொல்கிறவர்கள் அழைத்தவர்களின் எந்தப் படைப்பை எந்த எழுத்தை வாசித்து ரசித்து உள்வாங்கி, " அடடே என்ன மாதிரியான படைப்பை/ குறுங்கதையை இவர் எழுதியிருக்கிறார்... இவரல்லவா நம் மாணவர்களுக்கு கதை எழுதுவதற்கான பட்டறையை நடத்த வேண்டும்.." என சொன்னார் என தெரிந்து கொள்ள விரும்புகிறோம். ஒருவேளை எங்கள் வாசிப்பில் நாங்கள் அதனைத் தவற விட்டிருக்கலாம். நீங்கள் எங்களுக்கு வழி காட்டுங்கள். நாங்களும் வாசிக்கின்றோம்.

சரி பள்ளி பாடத்திட்டத்தில் இல்லதா ஒன்றான குறுங்கதைப் பட்டறையைத்தான் நடத்துவதாக முடிவெடுத்தால் அதற்கு இங்கு பலர் இருக்கிறார்கள். குறிப்பாக எழுத்தாளர் மணிராமுவை சொல்லலாம். முகநூலில் தொடர்ந்து குறுங்கதைகளை எழுதிவருகின்றார். எழுத்தாளர் வனிதா ராமகிருஷ்ணன், மாணவர்களுக்கு கதை எழுதுவது குறித்து  பேசிவருகின்றார். தொடர்ந்து எழுதுகின்றார். அல்லது நாடறிந்த (ஆசிரியர்) எழுத்தாளர் கே.பாலமுருகன் இருக்கிறார். மாணவர்களும் இலக்கியத்தில் ஈடுபட வேண்டும் என பல முன்னெடுப்புகளை செய்துவருகின்றார்; அது கூடுதலான வேலையாக இருந்தாலும். (போலியானவர்கள் பள்ளிகளில் நுழைந்து மாணவர்களுக்கு கதை எழுத கற்றுக்கொடுக்கின்றோம் என சொல்வதை எவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என தெரியவில்லை). இப்படி பல எழுத்தாளர்கள், உண்மையில் எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். மேலே சொன்னது மாதிரி அவர்கள் எழுத்து வெளிச்சம் தவிர வேறெந்த வெளிச்சத்தையும் சுமந்து திரிபவர்கள் அல்ல. இவர்களைத்தானே நாம் நம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்?

நிற்க, குறுங்கதை வடிவம் என்பது, (நான் இந்த வடிவம் குறித்து தொடர்ந்து வாசித்தும் பேசியும் எழுதியும் வருகிறேன் என்பதால்...!) அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது; கூடாது.

தற்சமயம் இவ்வடிவம் கவனம் ஈர்ப்பதாக தேரிந்தாலும், குறுங்கத்தைகளுக்கென பெரிய வரலாறு இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் இருந்தும் கூட அதற்கான சாத்தியக்கூறுகளை நாம் எடுத்துரைக்கலாம். பல முக்கியமான படைப்பாளிகள் குறுங்கதைகளை எழுதி அதன் வழி இன்றளவும் பேசப்படுகின்றார்கள்.

தமிழ் மொழியிலேயே முன்னணி எழுத்தாளர்கள் சிறந்த குறுங்கதைகளை எழுதியிருக்கிறார்கள். இப்படி குறுங்கதைகள் குறித்து நாம் அதிகம் பேசலாம். அதனால்தான் நாங்கள் நண்பர்களுடன் இணைந்து தனியே குறுங்கதை வகுப்புகளையும் நடத்தி வருகின்றோம்.

நிற்க,

யாரையும் காயப்படுத்தவோ குறைத்து மதிப்பிடவோ  இதனை எழுதவில்லை. அவரவர் திறமையில் அவரவர் உழைப்பில் அவரவர் மிளிர வேண்டும் எனதான் கேட்டுக்கொள்கிறோம். வாசியுங்கள். எழுதுங்கள். உங்களுக்கு எழுத்தாளர் என்கிற அசல் அடையாளம் தானாய் உருவாகும். அதைவிடுத்து இப்படியான செயல்பாடுகள் குறைந்த ஆயுளுக்கான பிரபலத்தை மட்டுமே கொடுக்கும். நாளை நீங்கள் கற்றுக்கொடுத்த மணவனே வளர்ந்து வந்து உங்களை விமர்சித்து புறக்கணிப்பான். அந்த துரதிஷ்டம் உங்களுக்கு வரக்கூடாது எனபதற்காகவே இதனை நாங்கள் எழுத வேண்டியுள்ளது.

உதாரணாமாக,

நாம் நாட்டு கலைஞர்களில் கே.எஸ். மணியம் ரொம்ப முக்கியமான கலைஞர். அவரைத் தெரியாதவர்கள் ரொம்பவும் குறைவு. இன்றைய இளம் இயக்குனர்கள் உருவாக்கும் கதாப்பாத்திரங்களுக்கும் இயல்பாக உயிர் கொடுத்து அசத்திவிடுகின்றார். கலைத்துறையில்  பலருக்கும் அவர் வழிகாட்டி; ஆசான்.

இன்னொரு பக்கம் , டிக்டாக்கில் மோசமான செயல்களால் 'வைரல்' ஆன ஒருவர் இருக்கிறார். 

ஆனால் கே.எஸ்.மணியத்தை புறக்கணித்து அந்த 'வைரல்' மனிதனை கலைத்தாயின் தவப்புதல்வன் என பாராட்டி மேடை ஏற்றி விருது வழங்கினால் நாம் அதனை ஏற்றுக்கொள்வோமா? அல்லது கைத்தட்டி கலைஞனை வாழ்த்துங்கள் என கூட்டம் சேர்ப்போமா?

நிறைவாக,

மீண்டும் இப்பதிவின் முதல் பத்தியை வாசித்துவீடுங்கள்.

'ஒருவேளை என் சந்தேகம் தவறாக இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன்.'

வக்கீல் நோட்டிஸ்கள் எதையும் அனுப்பாதீர்கள். நாங்கள் எழுத்தாளர்கள். தினமும் எழுதுகிறவர்கள், எங்களுக்கு எழுதத் தெரியும் அவ்வளவே...


#தயாஜி

மே 09, 2024

- அவர் சிரிச்சா வேற மாறி... -

 



 எழுத்தாளர் ஸ்ரீகாந்தனை சந்தித்தேன்.  வழக்கம் போல பல சுவையானவற்றை பேசி சிரித்தோம்.

சிரித்தோம் என்றதும்தான் சொல்லத் தோன்றுகிறது. இயல்பாக; பேசும் போதே நகைச்சுவை வெடிகளை போடும் பழக்கமுள்ளவர் அவர். முதலில் நம்மை சிரிக்கவிட்டு பிறகுதான் சிரிப்பார். அதோடு அவரின் சிரித்த முகம் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.

ஆனால் பாருங்கள் எந்தப் புகைப்படத்திலும் அவர் சிரிக்கவே மாட்டார். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் புகைப்படம் எடுப்போம். இன்னும் கிச்சுகிச்சு மூட்டிதான் சிரிக்க வைக்கவில்லை.

சில படங்களில் அவரது வலது பக்க உதடு கொஞ்சமாய் பின் நகர்ந்திருக்கும், அதுதான் அவரின் புகைப்பட சிரிப்பு என சுய சமாதானம் செய்து வந்தேன்.

இன்று கொஞ்சம் கராராகவே சிரிக்க வைக்க முயன்றேன். சிரித்தார். அழகாக இருந்தார். 'அப்படியே ஒரு புகைப்படம்' என்றேன். உடனே முகம் இறுக்கமாகத் தொடங்கியது.

சில புகைப்படங்களுக்கு பிறகு, அவரின் சிரித்த முகத்தை படம் பிடித்தேன்.





அவரின் சிரித்த முகம் ஏனோ இரட்டையாகத் தெரிகிறது. பக்கத்தில் இருக்கும் என் முகத்தில் எந்த தடுமாற்றமும் இல்லை. ஆனால் அவரின் சிரித்த முகம் மட்டும் ஏன் அப்படியாக இருக்கிறது என தெரியவில்லை.

ஒருவேளை அவர் சிரிக்கும் போது அவரின்  உள்ளிருந்து வேறொரு ஆள் எட்டிப்பார்ப்பார் போல ! அந்த இன்னொரு மனிதனைத்தான் தன் சிரிப்பின் பின்னால் இவர் மறைத்து வைத்திருக்கிறாரோ என்னமோ...!

அதிர்ச்சியாகதான் இருக்கிறது. அதைவிட அதிர்ச்சியாய் இன்னொன்றும் உள்ளது. அது இன்று நாங்கள் சாப்பிட்ட பில்.. "அவ்வளவுக்காக சாப்டோம்...!"

அதுசரி அப்படி எதைதான் சுவையாக பேசினோம்!
- சமீபத்திய அவரது புத்தக விமர்சனம்
- நாங்கள் எழுத நினைத்திருக்கும் கதைகள்
- கோ.புண்ணியவான் படைப்புலகம் நிகழ்ச்சி குறித்து
- சமீபத்தில் உருவாகியிருக்கும் திடீர் சிறுகதை பயிற்றுனர்கள்
- வாசிக்காமல் எழுதாமல், தங்களை எழுத்தாளர்கள் என் பிறரை வைத்து சொல்ல வைப்பவர்கள்
- மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
- லத்தின் எழுத்தாளரின் சிறுகதை
- உடல் ஆரோக்கியம்
- உமா மகேஸ்வரி எழுதிய குளவி சிறுகதை
- ஆட்டிசம் குறித்து வாசித்த சிறுகதை
- சிறகுகளின் கதை நேரம்
இப்படியாக மேலும் சில...

ஒருநாள் நீங்களும் வாங்களேன் ஜாலியாக கதைகளைப் பேசிக்கொண்டே சாப்பிடுவோம்.
ஒரே நிபந்தனை சாப்பாட்டு பில்லுக்கு நீங்கதான் பொறுப்பு...

அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #சிறகுகளின்_கதை_நேரம்

ஏப்ரல் 01, 2024

நான்ஃபிக்‌ஷன் எழுத்துப் பயிற்சி வகுப்பு



 எழுத்தே என் வாழ்க்கையாக அமையவேண்டும் என்பது என் விருப்பம். நான் எழுதுவது ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும் என்றால், யாரோ ஒருவரின் தோளைத் தட்டி ஆறுதல் கூறுமென்றால், மற்றொருவரை சிரிக்க வைத்துப் பார்க்குமென்றால் நான் எழுதவே விரும்புகிறேன். அதற்காக உழைக்கவும் என்னை எப்போதும் தயாராய் வைத்திருக்கிறேன்.

 ஒவ்வொருமுறையும் எழுத்திற்காக ஏதோ ஒன்றைத் தொடர்ந்து செய்துவருகிறேன் சில முன்னெடுப்புகளையும் எடுத்து வைக்கிறேன்.

 வழிகாட்டியாக என்னை நிறுவ நான் எப்போதும் நினைப்பதில்லை. ஒரு சக பயணியாகவே நான் பயணிக்கிறேன். என் இலக்கை அடைந்தால்; அடைந்த திருப்தியிலும் இல்லையென்றால் முயன்ற திருப்தியிலும் எனக்கான பயணத்தை நான் முடித்துக்கொள்வேன்.

 எழுத்திற்கும் எனக்குமான நெருக்கத்தை எப்போதும் ஏற்படுத்திக்கொண்டிருப்பது என் மனதை ஏதோ ஒரு வகையில் ஆசுவாசப்படுத்துகிறது. அதற்கான வாசிப்பிலும் பயற்சியிலும் தொடர்ந்து ஈடுபடுகின்றேன். அதுதான் நம்மை போலி அடையாளங்களின் இருந்து தனித்து வெளிக்கொணரும்.

 மார்ச்30,31(2024) ஆகிய நாட்களில் என்.சொக்கன் வழிநடத்திய ‘நான்ஃபிக்ஷன் எழுத்துப் பயிற்சி வகுப்பில்’ கலந்து கொண்டேன். ஐந்து மணிநேர வகுப்பாக அதனை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 கடந்த வகுப்பில் கலந்து கொள்ள முயன்றேன், பொருளாதார காரணங்களால் அதில் பங்கெடுக்க முடியவில்லை. அந்த வருத்தத்தை வீட்டில் இல்லாளிடம் பேசியிருந்தேன். இம்முறை மீண்டும் அந்த வகுப்பு குறித்த விளம்பரத்தை முகநூலில் இருந்து இல்லாள் எனக்கு அனுப்பிவைத்து ‘இம்முறை தவறவிடாதிங்க..’ என்றார். அதற்கு ஏற்றார் போலவே அவர்கள் கொடுத்திருந்த எண்ணுக்கு கூடுதல் விபரங்களுக்காக தொடர்பு கொண்டேன்.

 கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசத்தை கேட்டுக்கொண்டு, அதற்கான செயலில் இறங்கினேன்.

 கட்டணம் செலுத்தி நானும் ஒரு மாணவனாக இணைந்தேன். தொடர்ந்து என்.சொக்கனின் பின் தொடர்பவன் என்கிற முறையிலும் அவரது புனைவல்லாத புத்தகங்களை வாசித்துள்ளேன் என்பதாலும் வகுப்பில் கூடுதல் நம்பிக்கையோடு இணைந்தேன். எதிர்ப்பார்ப்புகளை அவர் சிறப்பாகவே பூர்த்தி செய்தார்.

 குறிப்புகள் எடுக்கும் பழக்கம் எனக்குண்டு. இரண்டு நாள்கள் வகுப்பில் முப்பது பக்கங்களுக்கு குறிப்புகளை எழுதினேன். ஆசிரியர் சிலவற்றை நாங்கள் இணைந்திருக்கும் புலனக்குழுவில் பின்னர் பகிர்வதாகச் சொன்னார். ஆனாலும் என் பழத்தை நான் தொடர்ந்தேன். இணைய வகுப்பு என்பதால் ஆசிரியர் பேச்சை கேட்டுக்கொண்டே குறிப்புகள் எழுதுவது எனக்கு மேலும் நன்றாக புரிய உதவியது.

 புனைவல்லாத எழுத்து என்றால் என்ன என்பதில் தொடங்கி, எப்படி அதனை புத்தகமாக்கி சந்தைப்படுத்தலாம் என்பதுவரையில் நீண்ட பயணத்தை வகுப்பில் அழகாகவும் ஆழமாகவும் விளக்கினார்.

 நடந்ததை நடந்தபடி சொல்வதுதான் புனைவில்லாத எழுத்து என்று அதன் அடிப்படையை நாம் புரிந்து கொண்டாலும் ஓர் எழுத்தாளராக இருந்து நான்ஃபிஷன் எழுதும் போது நாம் கவனிக்க வேண்டியதைப்பற்றி ஆசிரியர் விரிவாகப் பேசினார்.

 புனைவல்லாத எழுத்தைப் புரிந்து கொள்ள, அது எப்படி புனைவெழுத்தில் இருந்து  மாறுபடுகின்றது என்பதையும் கூறினார்.

 முழு வகுப்பையும் எட்டு படிகளில் வரிசையாய் அடுக்கி வழிநடத்தினார்.



1.   எதை எழுதலாம்?

2.   எத்தனை நாட்களில் எழுதலாம்?

3.   எதையெல்லாம் இணைக்கலாம்?

4.   எப்படி எழுதலாம்?

5.   என்ன எழுதலாம்?

6.   எப்படி செழுமையாக்கலாம்?

7.   எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்?

8.   எப்படி மேம்படுத்தலாம்?

 என்ற எட்டு தலைப்புகளில் வரிசையாக ஒன்றிலிருந்து மற்றொன்று எவ்வாறு தொடர்பு கொள்கிறது எனவும் பேசினார்.

     முதல் நாள் வகுப்பில் இடுபணியைக் கொடுத்து மறுநாள் வகுப்பில் சிலரின் பயிற்சிகளை வாசித்து அதனை எப்படியெல்லாம் செம்மைப்படுத்தலாம் என்பதைக் கூறியதோடு அப்படியான பயிற்சிக்கான காரணத்தையும் அது பிற்காலத்தில் கொடுக்கும் பலன்களையும் சுட்டிக்காட்டினார்.

     புனைவல்லாத எழுத்திற்கான களப்பணியை எப்படி மெற்கொள்வது என அவர் கூறியது பலருக்கும் உதவியாக அமைந்தது.

     ‘எழுத்து ஒழுக்கம்’ குறித்து எழுத்தாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியற்றை பேசினார். நான் பலமுறை என் நண்பர்களுடன் இதுபற்றி உரையாடியுள்ளேன். இனி அதிகமான தகவல்களுடன் உரையாடுவேன்.

     சில நாட்களாகவே என்னிடம் ஒரு குழப்பம் இருந்தது. அதற்கான பதில்கள் எனக்கு அவ்வளவாக நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. இன்று என்.சொக்கன் வழிநடத்திய நான்ஃபிக்‌ஷன் எழுதுவோம் வகுப்பில் அக்கேள்விக்கு அவரிடம் இருந்து ஒரு பதில் வந்தது. அது எனக்கு நம்பிக்கையையும் கொடுத்தது. அது என்ன குழப்பம் என்ன பதில் என்பது எனக்கு அந்தரங்கமானது; இப்போது வேண்டாம்.

     நிறைவான வகுப்பாக இரு நாள் வகுப்பை வழிநடத்தினார் ஆசிரியர். இனி வரும் காலங்களிலும் வாய்ப்பு இருப்பின் நான் அடுத்தடுத்த வகுப்புகளில் கலந்து கொள்வேன். உங்களுக்கும் புனைவல்லாத எழுத்தை எழுத விருப்பம் இருப்பின் தாராளமாக இந்த வகுப்பில் கலந்து கொள்ளலாம். நிச்சயம் உங்கள் நேர்மையான எழுத்திற்கு அது பயனாய் அமையும்.

- தயாஜி

மார்ச் 19, 2024

குரலற்ற கடலலை




உன்னோடு பேசுவதற்கு

என்

எல்லா வார்த்தைகளும்

ஏங்குகின்றன

எம்பி குதிக்கின்றன


நீ சொன்ன

ஒற்றைச் சொல்லின்

போதாமையால்

அவை

தினம் தினம் 

மௌனத்தற்கொலை

செய்கின்றன


நான் ஒருவனே

அந்த மரணங்களுக்கு

ஓசையற்ற ஓலம்


உன் பேரிரைச்சல்

என்றாவது ஒரு நாள்

என் நிசப்தத்தின்

வெறுமைக்கு முன்

மண்டியிடும்

தலைவணங்கும்....

பிப்ரவரி 22, 2024

உனக்கென்னதான் வேண்டும்?

 

உனக்கு என்ன வேண்டும்
உனக்கு என்னதான் வேண்டும்
என என்னை
எண்ண வைக்கிறாயே
சொல்லேன் உனக்கு
எது வேண்டும்
என்னதான் வேண்டும்

என்னிடமிருந்து உறவா
என்றைக்கும் சேரா பிரிவா

என்னதான் முடிவுடன்
நீ என்னுடன் நெருங்குகின்றாய்
என்னதான் எதிர்ப்பார்க்கிறாய்

நாள் முழுக்கப் பேசுகிறாய்
நாள் முழுக்க மௌனத்தில் நிலைக்கிறாய்

திடீரென ஒருநாள்
நம்மால் இனியெப்போதும்
சேர முடியாது என்கிறாய்
அடுத்த நாளே
நானின்றி வாழ முடியாதெனவும்
அழுகிறாய்

புலனச்செய்திகளில் வெறும் புள்ளிகளாகவே பதிலிடுகிறாய்
ஒரு முறையே பார்க்கும்படி
உன் புன்னகையை அனுப்பி மறைக்கிறாய்

என்னிடம் சேமிக்க எதையுமே கொடுக்காமல்
என்னிடமிருந்து எதைத்தான் நீ கேட்கிறாய்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்


பிப்ரவரி 16, 2024

வசிகராக்கள்

 

அழகாய்த் தெரிகிறது
ஆனால் அத்தனையும்
பொய்யாக இருக்கிறதே

அதனால் என்ன
அழகாய்த் தெரிகிறது

உன் உண்மைகளை
நீயே வைத்துக்கொள்
அதனால் இங்கு
யாருக்கு என்ன லாபம்

அதோ
அழகாய்த் தெரிகிறது...


பிப்ரவரி 14, 2024

- சேராவரம்போல் -

 - சேராவரம்போல்


இங்கு எல்லார்க்குள்ளுமே

ஒரு காதல் கதை உண்டு

இங்கு எல்லோருக்குமே

ஒரு காதல் தோல்வி உண்டு


இங்கு யாரோ ஒருவர்தான்

காதலில் வெற்றியடைகிறார் 


ஆனால் ஏனோ

எல்லா தேசத்திலும்

தோல்வியடைந்த காதல் கதைகள்

மட்டுமே 

காலத்திற்கும் உயிர்ப்போடு இருக்கின்றன


சாகாவரம்போல் சோகமும் இருப்பதில்லை

சேராவரம்போல தீரா காதலும் மரிப்பதில்லை


அது சிரஞ்சீவிய காமம்.....


#தயாஜி 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்