மே 28, 2025
பிப்ரவரி 21, 2022
அடையாளம் காணுதல்
என் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. என்னை சிதைக்க முயன்றவர்களிடமிருந்தும் என்னைச் செதுக்க கற்றுக்கொள்வதற்கு அதுதான் காரணம்.
எல்லாவற்றையும் எழுதி கடக்க முயன்றே எழுதிக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் பெரிய ஆறுதல் நீங்கள் என் எழுத்தை வாசிப்பதுதான். யாரோ ஒருவருக்கு ஒற்றைத்துளி நம்பிக்கையை அது விதைக்குமெனில் எனக்கு வேறென்ன வேண்டும்.
பொதுவாக இல்லாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் அழைப்பும் புலனச்செய்திகளும், என் எழுத்துகள் கண்டறிந்த வலியினை பலர் பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமே தெரிந்த நியாயத்தின் மௌனத்தை அவர்கள் என் எழுத்தில் கண்டதாக சொல்கிறார்கள். யாரோ ஒருவரால் அந்த மௌனத்தின் பின்னனியை உணர முடிந்ததைச் சொல்லி கலங்கவும் செய்வார்கள்.
உங்களுக்கும் எனக்குமான இடைவெளியை எழுத்துகளால் நிரப்பிட முயன்று கொண்டே இருக்கிறேன்.
சிலர் மீது கோவம் இருக்கும் அதே சமயத்தில் அவர்கள் மீதான மரியாதையையும் வைத்திருப்பேன். சிலர் என்னதான் சீண்டிக்கொண்டிருந்தாலும் அவர்களைக் கண்டுக்கொள்ளவே மாட்டேன். சிலரை யாருக்காவும் விட்டுக்கொடுக்க முடியாது. சிலருடன் ஒட்டி உறவாட முடியாது.
எழுத்தில் எனக்கு அறிமுகமாகி எனக்கு மிகவும் நெருக்கமானவர். அண்ணன் என உரிமையுடன் அழைப்பவர்களில் ஒருவர் அண்ணன் ஸ்ரீதர் ரங்கராஜன். முக்கியமான மொழிபெயர்ப்பாளர். ஹருகி முரகாமியை நான் கண்டுகொண்டது இவரின் மொழியாக்கத்தில்தான். என் வாழ்வில் ஏற்பட்ட மனஉளைச்சலின் ஆதாரப்புள்ளியை அடையாளம் காட்டியப் படைப்பாளி. 'தொ பாரு தம்பி..' என அவர் ஆரம்பிக்கும் போது நான் கற்றுக்கொள்ள தயாராகிவிடுவேன்.
வல்லினம் பதிப்பகம் வெளியீடு செய்த எனது முதல் புத்தகமான 'ஒளி புகா இடங்களில் ஒளி' புத்தகத்தை செறிவாக்கம் செய்த இருவரில் தோழர் ம.நவீனும் அண்ணன் ஸ்ரீதரும் அடங்குவர். அப்புத்தகத்தை எனது பெற்றோர் வெளியீடு செய்ய ஸ்ரீதர் அண்ணன் தான் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
நூல் அறிமுகத்தையும் செய்தவர் அவர்தான்.
யாருக்கும் இதுவரை முழுமையாய் சொல்லாத விடயம் ஒன்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மனமொடிந்து வாழ்வை முடித்துக்கொள்ள நினைத்து கடைசி வார்த்தைகளை அவருக்குத்தான் அனுப்பினேன். உடனே என்னை அழைத்துப் பேசி, என் மனநிலையில் மாற்றத்தைக் கொடுத்து என் வாழ்வின் வழியை மடை மாற்றிவிட்டார்.
"தம்பி எல்லோரும் எழுதுவதையே நீயும் எழுதுவதாய் இருந்தால், நீ எழுத வேண்டாம். இன்னொருவர் எழுத முடியாத அனுபவமும் தேடலும் இருந்து நீ எழுதினால்தான் அது உனக்கான அடையாளமாய் மாறும். மறந்துவிடாதே"
என் அவர் சொல்லிய ஆலோசனையை ஒவ்வொரு முறையும் எழுதும் போதும் நினைத்துக்கொள்வேன்.
சமீபத்தில் வெள்ளைரோஜா பதிப்பகத்தை தொடங்கினேன். எங்கள் பதிப்பகத்தின் முதல் புத்தகமும் எனது இரண்டாவது புத்தகமுமான 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல - 101 குறுங்கதைகள்' புத்தகத்தை அவருக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தேன். பின்னர் அவரின் ஆலோசனையில் அடுத்த புத்தகத்திற்கான வேலையையும் தொடங்கினேன். அதுதான் எனது மூன்றாவது புத்தகமும் முதல் கவிதைத் தொகுப்புமான 'பொம்மி'.
சில நாட்களுக்கு முன் அண்ணன் ஸ்ரீதரை சந்தித்து 'பொம்மி' புத்தகத்தைக் கொடுத்தேன்.
அதோடு பலவற்றைப் பேசினோம். அதன் மையம் நாவல் எழுதுவது குறித்து அமைந்தது. நாவலுக்கு ஏற்றார்ப்போல என்னிடம் உள்ளவற்றை மெல்ல வெளி கொணர்ந்தார். எனக்கும் கூட அது ஆச்சர்யத்தைக் கொடுத்தது. சரி செய்திடலாம் என்கிற நம்பிக்கையும் வந்துள்ளது.
அவரைப் பற்றி இன்னும் கூட சொல்லலாம். அத்துணை முக்கியமானவர். இப்போது நம் அருகில் இருக்கிறார். பயன்படுத்திக்கொள்ளலாம். அவரின் மொழியாக்கங்களை வாங்கி வாசிக்கலாம்.
இதனை வாசிக்கும் நீங்கள் கூட என் வாழ்வில் ஏதாவதோர் பங்கினை செய்பவர்களாகத்தான் இருப்பீர்கள் என நம்புகிறேன். விரைவில் அதுபற்றியும் எழுதுவேன்.
டிசம்பர் 26, 2019
அக்டோபர் 04, 2019
பொம்மி
ஒரு நாள் நேரமெடுத்து
என் புத்தக அறையில் நுழைகிறாள்
காரணமின்றி என் புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் அவள் விரல்கள் சில
உரசும்படி கடக்கிறாள்
அவள் ஸ்பரிசம் பட்டுவிட்டதும்
தான் வந்த காரணத்தை
கவிதைகள் கண்டுகொண்டன
ஆளுக்கு ஆள் அவள் படிக்கவேண்டி விழுந்தும் குதித்தும்
தங்களை முன்மொழிந்துக் கொள்கின்றன
பொம்மி உன்னிடமும்
இந்த உலகத்திடமும்
நான் விட்டுச்செல்ல வேறொன்றும் இருக்கவில்லை
ஆகஸ்ட் 25, 2017
பொம்மியின் வருகை
பொம்மி
என் மேல் விழும்
தாக்குதல்களை
உன் வருகை மட்டுமே
சரி செய்யும்
பாழாய் போன வாழ்க்கையில்
உன் வருகை மட்டுமே
வசந்தம் சேர்க்கும்
நான காணாமல் போவதற்குள்
இனி வீணாக சாவதற்குள்
தாயாக வந்துவிடு
கொஞ்ச காலமேனும் வாழ விடு
என் சிதைவுகளை
சிறுகச்சிறுக சேகரித்து
சட்டகம் அமைத்து
ஒட்டி வைக்கிறேன்
நாளையொரு நாள்
நீ வந்து நிற்கும் பொழுதில்
ஜென்ம ஜென்மமாய்
காத்திருந்தவன் உன் தகப்பனென
புரிந்து புன்னகை செய்ய
புத்தனுக்கும் பித்தனுக்கும்
இடைபட்டவனை
இடரில் இருந்து காத்திட
உனக்கு மட்டுமே சாத்தியம்
என்னை சூழ்ந்திருக்கும்
சூழ்ச்சிகளை
உன் கண்கள் மட்டுமே
கண்டு விலக்கும்
நான் சுமந்து நிற்கும்
இழிசொற்களை
உன் கரங்கள் மட்டுமே
கழுவ முடியும்
தேவை நீ வா
தேவதையாக நீ வா
#தயாஜி
#பொம்மி
ஆகஸ்ட் 20, 2017
பொம்மியை கொல்லப்பார்க்கிறார்கள்
என்னை பிரசவிக்க
பூமி வரும் பொம்மிக்காக
என்னவெல்லாம் செய்யலாம் என
ஏடுகள் முழுக்க குறிப்புகள் கொண்டேன்
நான் கண்டிராத
நான் தொட்டிடாத
விளையாட்டு சாமான்களை
இப்போதே வாங்கி அடுக்கியுள்ளேன்
பொம்மிக்கென்று ஓர் அறை
ஊதா வண்ணமாய்
சுவர் முழுக்க பட்டாம்பூச்சிகளை ஒட்டிவைத்துள்ளேன்
ஒவ்வொரு பட்டாம்பூச்சியின் தலையிலும் தங்க நிற
ஜிகுனா தூள்களை சேர்த்துள்ளேன்
இரவானால் விளக்கெரியும்
வசதிகொண்ட நட்சத்திரங்களை
கைக்கு எட்டிய தூரம்வரை தொங்கவிட்டுள்ளேன்
என் பொம்மி
இவ்வறைக்குள்ளே நுழைவதை
வரலாற்று குறிப்பாக்க
அறைவாசலில்
மெல்லிய வகையில்
மென்மையாக
மிகமிக மென்மையாக
பொம்மியின் பிஞ்சி கால்
வலிக்காமல் களிமண்ணை குவித்துள்ளேன்
கைராசி டாக்டருக்கு
இப்போதே பிரசவ பில்களை சேமிக்க
யானை உண்டி வாங்கி வைத்தேன்
எனக்கும் யானை உண்டியல்தான் பிடித்திருந்ததாம் அம்மா ஒரு முறை சொல்லி சிரிக்கலானார்
அண்ணன் எப்போதுமில்லாத அக்கறையில்
தான் பெற்ற குழந்தைகளில்
சத்துணவுக்கான புத்தகத்தை பாதி கிறுக்கியும் மீதி கசக்கியும்
கொடுத்துவிட்டு போனான்
நண்பர்களின் கேலிக்கும் கிண்டல்களுக்கும்
வெட்கமும் சிரிப்பும் வந்ததே தவிர கோவமில்லை
அவளுக்குத்தான் உள்ளூர பயம்
ஏதோ ஒரு பொழுதில்
தோழி சொன்ன கதை
பிரசவம் என்பது இன்னொரு
திடீர் சாவு
மகட்பேறு விடுமுறைக்கான அட்டவணையில்
எனக்கும்கூட விடுமுறை என சொன்னார்கள்
இப்போதே சில வேலைகளை முடிக்க புதிய நண்பர்களும் உதவினார்கள்
இன்று அவளுக்கு பிரசவ வலி
எனக்கு உடம்பெல்லாம் ஏதோ ஆனது
மண்டை மயிரெல்லாம் ஈரமாகிப்போனது
குத்திட்டு நிற்கும் உடலுரோமங்களை சரிசெய்ய தோன்றாமல்
பூமி வந்த பொம்மியை
எப்படி தாதியிடமிருந்து பெறலாம்
ஒத்திகையில் பயத்தை ஒத்திவைத்தேன்
பிரசவ அறையில் கைப்பிடியை
இறுக்கமாக மிக இறுக்கமாக
பிடித்துக்கொண்டேன்
ஏதேதோ வார்த்தைகளைத்
திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தேன்
பொம்மி வந்துவிட்டாள்
என் தேவதை
பூமிக்கு வந்துவிட்டாள்
என்னில் பாதி இப்போது முழுமையாகிவிட்டது
சட்டென்ற நிசப்தம்
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்
அவள் பேச்சுமூச்சற்று இருக்கிறாள்
இதயம் இருமடங்காய் துடித்தது
பொம்மி செத்தேதான் பிறந்ததாலாம்
அவள் மயக்கம் தெளிய நேரமாகுமாம்
கடைசியில் பொம்மியும்
என்னை ஏமாற்றப்பார்க்கிறது
என் பொம்மி சாகவில்லை
அதோ கட்டிலில் கிடக்கிறாள் பாருங்கள்
என் பொம்மி
நீங்கள் மரணித்ததாய் சொன்ன குழந்தையின் குரல் எனக்கு கேட்டது
அதோ பாருங்கள்
எத்தனை ரம்மியமாக தூங்கிக்கொண்டிருக்கிறாள்
என் பொம்மி
கணவனை கொன்று
தகப்பனை பிரசுவித்து கொடுத்திருக்கிறாள்
அதற்கு விலையாய் தன்னையும் கொன்றுவிட்டாள்
நிறைவாய் பொம்மி
எனக்கும் தாயாகி
சிரிக்கிறாள்
#தயாஜி
#பொம்மி
ஆகஸ்ட் 16, 2017
பொம்மி
*பொம்மி*
உனக்காக நானுமல்ல
எனக்காக நீயுமல்ல
நமக்காக இங்கு
யாவும் காக்கவே செய்கின்றன
பௌர்ணமி ஒரு நாள்
கண்சிமிட்டி உன்
வருகை தினத்தை
விசாரித்து குறிப்பெடுத்துக்
கொண்டது
சூரியன் மறுநாள்
என் மீது பனித்துளிகள் வீசி
நீ வந்ததும்
தகவல் சொல்லச்சொன்னது
உன் கால் விரல்களின் இடுக்கில்
பட்டுவிடவேண்டி விதைகள் பல
முளைவிட மறுப்பதாக
செடி கொடி வந்து என்னிடம்
புகாரிக்கின்றன
உன்னை சுமந்தப்பிறகே என்னை
நனைப்பேன் என
மழைக்கும் எனக்குமான
பேச்சு வார்த்தை
சுமுகமாக முடிந்ததில்
இன்றுவரை என்னை
நனைக்காமலேயே
வந்து போகிறது மழை
என் அத்தனை கோவத்தையும்
நீ பயப்படுவாய் என
கண்படா தூரத்தில் மறைத்துவிட்டேன்
இது தெரியாமல்
புழு பூச்சி மனிதனெல்லாம்
என்னை சீண்டிச் சிரிக்கின்றன
நீ வரவேண்டும் என
காமத்திற்கும் வடிகாலின்றியே
உறக்கம் கலைந்த கோண்டான்களுடன் ஒன்றாய் இரவினை கண்விழித்து கடக்கிறேன
எல்லோரும் கண்ணனின்
பாதங்களுக்காக காத்திருக்கிறார்கள்
கண்களில் படாத உனக்காக நான் காத்திருக்கிறேன்
வேண்டுமெனில் சொல்
என் உதிரத்துளிகளைச் சேமித்துத் தருகிறேன்
அதிலுன் பாதம் பட்டு
நான் வாழும் இடத்தில்
நடை பழகு
அப்போதாவது இடுகாடு
இனிய இல்லமாகட்டும்
#தயாஜி
பிப்ரவரி 07, 2017
பொம்மிக்கு
இதானே சொர்க்க வாசல்
வழிவிடுங்கள்
பாதை மறந்துவிட்ட
மகளை தேடி வந்துள்ளேன்
இங்குதான் எங்காயினும் இருப்பாள்
அப்பா வந்திருப்பதாக சொல்லுங்கள்
ஓடி வருவாள்
பாதையை சுத்தம் செய்திடுங்கள்
என்னை கண்ட பின்
வேறெதையும் பார்க்காது
ஆட்டுக்குட்டியாய் துள்ளிவருவாள்
ஊதா வண்ண பூக்களின் இலைகளை காதுகளில் சொருகியிருப்பாள்
பூக்களை பறிப்பதை விரும்பாதவள்
இல்லை எனக்கு நம்பிக்கை இல்லை
நீங்கள் சொல்ல மாட்டீர்கள்
போறாமைக்காரர்கள்
வாழ்வின் வசந்தத்தை
மோட்சத்தின் குறுக்குவழியை
கடவுளின் அருளை
அத்தனை எளிதில் பாவியொருவன் பெற்றிடுவான் என்கிற அச்சம்
நானே போகிறேன்
வழி மறந்த மகளே
எங்கே இருக்கிறாய்
நீயற்ற என் உலகம்
நாதியற்று கிடக்கிறது
பூக்களேதும் பூப்பதில்லை
பூனைக்குட்டிகள் வருவதில்லை
வானவில்களை காணவில்லை
மழைத்தூறல் நனைக்கவில்லை
ஓடிவிளையாடிட ஆளில்லாததால் வீட்டுத்திடல் எங்கும் புதர்கள் மண்டியுள்ளன
நீ வருவாய் என வாசலுலேயே காத்திருக்கிறது காவல் தெய்வம்
உனக்காக வாங்கியுள்ள ஆடைகள் தூசடைந்து விட்டன
விளையாட்டுப்பொருட்கள் வண்ணம் இழந்துவிட்டன
புத்தகங்கள் மை மறைந்து பொலிவிழந்துவிட்டன
எந்த விளக்கும் வீட்டிருளை அகற்றவில்லை
தட்டுத்தடுமாறியே நடந்துக்கொண்டிருக்கிறேன் வாழ்வை நடத்திக்கொண்டிருக்கிறேன்
எங்கிருக்கிறாய் பொம்மி
எப்போது வருவாய்
சிறு குறிப்பாவது கொடுத்தனுப்பு
இவ்வுயிரை அந்நொடிவரை காப்பாற்றிக்கொள்கிறேன்
உனக்காவது என் வியர்வை வாசம் பிடிக்கட்டும்
என் சம்பாத்தியம் உன் மிட்டாய்களுக்காவது பயன்படட்டும்
மதியங்களில் காத்திரு
நான் வருவதறிந்து
புன்னகை தா
என்னுடன் பேசு
என் கதைகளை விவாதி
என் மீதமர்ந்து சவாரி செய்
காதுகளை திருகி தவறு திருத்து
முதுகில் தட்டி பாராட்டு
தலையில் கொட்டி
ஓடிப்பிடித்து விளையாடு
இத்தனைக்கும் மேலாய்
நீயாவது என்னை நம்பு
வா மகளே
எஞ்சியிருக்கும் காலமென்ற மாயைத்திரையில் பிம்பம் கூட காட்டிச்செல்
நான் கண்ட எத்தனையோ ஊமை சாட்சி போல உள்ளுக்குள்ளே அழுதுக்கொள்கிறேன்
அன்புள்ள பொம்மிக்கு
- தயாஜி
