பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 28, 2025

- கவிதைகள் காணவில்லை !-

 

ஒரு கவிதை புத்தகத்தை

வாங்கியதற்காக

ரொம்பவும் கிரியேட்டிவாக

என்னென்னவோ 

கொடுத்திருந்தார்கள்


மயில் இறகு

சின்னச்சின்ன பொம்மைகள்

அழகிய எழுதுகோல்

வடிவேலு வசன ஒட்டிகை

வண்ண வண்ண ரிபன்கள்

கைவிரல் அளவு பேனா

யானை முகம் பதித்த அடிக்கோல்

எழுத்துகளை பெரிதாக்கும் பூதக்கண்ணாடி

 

கவிதைப் புத்தகம்

வாங்கியதற்காக 

இவ்வளவையும் கொடுத்தவர்கள் 

புத்தகத்தில்

கவிதைகளைக் கொடுக்கவேயில்லை


அதுசரி

அது இருந்திருந்தால் 

ஏன் இவ்வளவையும் 

நமக்கு கொடுக்கப்போகிறார்கள்

பிப்ரவரி 27, 2025

- அழுவாச்சி கவிதைகள் -


சகாவே

உன் அழுகையை நான்

அறியாமலில்லை

ஆனாலும் உன்னை

அழவைக்கும் கவிதைகளையே

நானும் எழுதுகிறேன் என

கோவிக்காதே


என் சகாவே

நீ தனியாக அழவில்லை

என்கிற ஆறுதலை

உனக்கு கொடுப்பதற்கே

நாங்கள்

அழுவாச்சி கவிதைகளை

எழுதி

உனக்கு அனுப்பி வைக்கிறோம்


படித்ததும் அழுகிறாயா 

மீண்டும்

பரவாயில்லை


கூட்டுப்பிரார்த்தனை போல

கூட்டாய்ச் சேர்ந்து அழுவதும்

ஏதோ ஒருவகையில்

நல்லதுதானே


அழுத கண்ணில்

தூசும்

அழுத நெஞ்சில்

மாசும்

தங்கியிருக்காதென


நம்பிக்கொள்வோம்





பிப்ரவரி 26, 2025

- குற்றவுணர்ச்சி -

 

நீங்கள் சிரித்தபடி நிற்கும்

படங்களைச் சுற்றியும் கருப்படிக்காதீர்கள் நண்பர்களே


பார்த்தவுடன் பதற்றத்தில் 

RIP  போட்டு

மலர்வளையத்தை தட்டிவிடுகிறேன்


ரொம்பவும்

குற்றவுணர்ச்சியாக இருக்கிறது

நீங்கள் வேறு இன்னமும்

உயிரோடு  இருக்கிறீர்கள்


பிப்ரவரி 25, 2025

- இரட்டைக் கிளவி -

 

கவிதை எழுதும்போதெல்லாம்

பின்னணியில்

ஏதாவது ஓர் இசையை

இசைக்க விடுகிறேன்


சில சமயங்களில்

அது இனிமையாகவும்

சில சமயங்களில்

அது இரைச்சலாகவும்

மாறிக்கொண்டே வருகிறது


எழுதுவதற்கு இடையில்

இசையோ இரைச்சலோ

நிறுத்த நான் ஒருபோதும்

முயல்வதில்லை


இனிமைக்கு மட்டுமே

காதுகள் சொந்தமா என்ன

இரைச்சலுக்கும் நாம்

சொந்தம்தானே


இதற்கிடையில் 

கவிதையில் சிற்சில 

சித்திரங்கள் வந்து போவதை

வாசித்திருப்பீர்கள்

என்னால் அவற்றை

தவிர்க்க முடிவதில்லை


ஆனந்த குரலில் குதிப்பதும்

அழுதபடி கூனிக்குறுகி அமர்வதும்


எழுதும்போது

இரண்டுமே நான் தான்


வாசிக்கும்போது

இரண்டில் ஒன்றினை

நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்


நினைவில் கொள்ளுங்கள்

நல்லதோ கெட்டதோ

நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்


ஒரே ஒரு நிர்பந்தம்

எதை எடுத்தாலும்

இன்னொன்று இலவசம்


அதுவே இரண்டிற்குமான

நித்திய பந்தம்


பிப்ரவரி 24, 2025

- கருணை கொல் -

 

சகாவே

சொல்வதைக் கேள்

கருணையை ஒருபோதும் 

நம்பாதே


அதற்கென யாரிடமும்

எந்த வரையறையுமில்லை

அதற்கெந்த 

விதிமுறையும் இல்லை


பெற்றுக்கொள்பவன் 

பசி பொருத்து

கருணைகள்

சில சமயம் தாயாகவும்

சில சமயம் பேயாகவும்

தன்னை மாற்றிக்கொள்ளும்

விசித்திர உணர்வெழுச்சி


கருணையென சொல்லி

இங்கு

கண்ணீர் சிந்தலாம்

கருணையெனச் சொல்லியே

இங்கு

கொலையும் செய்யலாம்


கடற்தாயின்

கருணை என்பது

தன்னையே நம்பி சுவாசிக்கும்

மீன்களைத் துடிக்கத்துடிக்க மீனவர்களுக்கு

அள்ளிக்கொடுப்பதுதானே

பிப்ரவரி 23, 2025

- சாதல் கவிதைகள் -

 


பணத்தை 

சம்பாதிப்பது எப்படியென

பாடம் எடுப்பவன்

நிஜமாகவே சம்பாதிக்கின்றான்


அதைக் கற்றுக்கொள்பவன்

மட்டும் 

பிச்சை எடுக்கிறான்


சகாவே

நாங்களும் உங்களுக்கு 

இதைத்தான் சொல்கிறோம்


காதல் கவிதைகளை

எழுதுவதற்கு முன்னமே

காதலியையோ காதலனையோ 

நீங்கள்

கண்டடைந்துவிடுங்கள்


ஏனெனில்

எழுதத்தொடங்கிய பின்

கவிதைகள் வருமே தவிர

ஒருபோதும்

காதலனோ காதலியோ

வரமாட்டார்கள் 


உங்கள் இதயத்தில்

கொஞ்சமும் இடைவெளியின்றி

காதல் கவிதைகள்

தன்னை நிரப்பிக்கொள்ளும்


காணும் காட்சிகளில் 

எங்கெங்கும் 

காதல் மயக்கம்

உங்களை ஆட்கொள்ளும்


போதைக்கடலில்

மூச்சுமுட்ட 

குதித்து குளித்து கொண்டாடி

சுகம் காண்பவன்

கரைக்கேன் வரப்போகிறான்


அவனுக்கு 

ஆள் தின்னும் சுறாவும் ஒன்றுதான்

தான் தின்னும் இறாலும் ஒன்றுதான்

பிப்ரவரி 22, 2025

- என்நிற பட்டாம்பூச்சி -


பெயர் இல்லாத

பட்டாம்பூச்சி நீ


இல்லை

பெயர் சொல்லாத

பட்டாம்பூச்சி நீ


அதுவும் இல்லை

பெயர் சொல்ல விரும்பாத

பட்டாம்பூச்சி நீ


ஒருவேளை இப்படியிருக்கலாம்

என்னிடம் 

பெயர் சொல்ல விரும்பாத 

பட்டாம்பூச்சி நீ


அல்லது இப்படியாகவும் 

இருக்கலாம்

உன்னை  பட்டாம்பூச்சி என 

அறிந்து கொள்ளக்கூடியவனிடம்

மீண்டும் மீண்டும்

உன்னை அறிமுகம் செய்வது

நமக்கு நேரவிரயமே


குறைந்த ஆயுளுக்குள்

குறையா காதலுக்குள்

சிறகடிப்போம் வா




பிப்ரவரி 21, 2025

- ஆளுக்கொரு விசை -


 - ஆளுக்கொரு விசை -


எவ்வளவோ தூரம் 

சென்றுவிட்டோம்


எனக்கு எட்டாத 

தூரத்தில்

நீயும்


உனக்கு எட்டாத

தூரத்தில்

நானும்


இந்தத் தூரம் போதவில்லைதான்

இன்னும் கூட

கொஞ்ச தூரம்

ஆளுக்கு ஒருவழியில்

செல்லலாம்


எல்லைகளென

எதுவும் வைக்காத போது

எவ்வளவு தூரத்தில்

இருக்கின்றோம்

என்பதை எப்படி

புரிந்து கொள்வது


ரொம்ப தூரத்தில்

நீ அங்கு

ரொம்ப தூரத்தில்

நான் இங்கு


அதனாலென்ன

இன்னும் கூட

கைகள் கூடாத

கண்ணுக்கே தெரியாத

யாரையும் நினைக்க வைக்காத

தூரத்திற்கு போகலாம்

எந்தக் கவலையும் வேண்டாம்


எவ்வளவு தூரத்தில் இருந்தும்

புன்னகைக்கலாம்தானே


உன் புன்னகை எனக்கும்

என் புன்னகை உனக்கும்

அடையாளம் தெரியாமலா 

போய்விட போகிறது...


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை .

பிப்ரவரி 20, 2025

- காயத்தின்னிகள் -

 


தன்

மனக்காயத்திற்கு 

ஏதோ ஒருவகையில்

தானே மருந்திடும் மனிதனிடம்

கவனமாக இருங்கள்


அவனுக்கு 

எந்தக் காயத்திற்கு 

எந்த மருந்தென தெரியும்

எப்போது கொடுப்பது

எவ்வளவு கொடுப்பது 

எனவும்

நன்றாகவே தெரியும்


அதிலும்

தன் காயத்தை

தானே சிதைத்து சிதைத்து

காயக்காய அதன்

பக்குகளைப் பிய்த்தெடுத்து

சரிசெய்யும் மனிதனிடம்

ரொம்பவும்

எச்சரிக்கையாக இருங்கள்


மருந்திடுவற்கு பதிலாக

உங்கள் காயங்களை மேலும்

காயப்படுத்தி அதனை

மீண்டும் மீண்டும் சிதைத்து

உங்கள் வேதனையின் சதவிதத்தை

தன் தேவைக்கேற்க 

கழிக்கவும் முடியும்

கூட்டவும் முடியும்


அவன் பசிக்கு

அடுத்தவர் காயங்களே தீனி


பிப்ரவரி 19, 2025

- ஒரு கப் காபி -



கடைசியில் எல்லோருக்கும் 
ஒரு கப் காபி தேவைப்படுகிறதுதான்

மௌனத்தை கடக்க
உரையாடலை நகர்த்த
மனதை கொஞ்சம் ஆசுவாசப்படுத்த

கடைசியில் எல்லோருக்கும் 
ஒரு கப் காபி தேவைப்படுகிறதுதான்

கண்ணீரை அடக்க
நடந்ததை மறக்க
நடக்கவேண்டியதை நினைக்க

கடைசியில் எல்லோருக்கும் 
ஒரு கப் காபி தேவைப்படுகிறதுதான்

யாருக்காகவோ காத்திருக்க
யாரின் கதையையோ கேட்க
யாரையும் தெரியாதது போல் நடிக்க 

கடைசியில் எல்லோருக்கும் 
ஒரு கப் காபி தேவைப்படுகிறதுதான்

நிகழ்காலத்திற்கு மீள
நிகழ்ந்ததை மீட்க
நீண்ட மறதியை வெல்ல

கடைசியில் எல்லோருக்கும் 
ஒரு கப் காபி தேவைப்படுகிறதுதான்

தான் உயிரோடு இருப்பதை உணர்த்த
இன்னும் கொஞ்சம் முயற்சிக்க சொல்ல
இதுவும் கடந்து போகுமென புரிய

கடைசியில் எல்லோருக்கும் 
ஒரு கப் காபி தேவைப்படுகிறதுதான்

தன்னை அழகென காட்ட
தன் சுவாசத்தை சீராக்க
லிப்ஸ்டிக்கின் வண்ணம் பார்க்க

கடைசியில் எல்லோருக்கும் 
ஒரு கப் காபி தேவைப்படுகிறதுதான்

இன்றோரு கவிதையை எழுதவும்
நாளை நீங்களதை வாசிக்கவும்
என்றாவது ஒருநாளில் நீங்கள் என்னை நினைத்துப் பார்க்கவும்

கடைசியில் எல்லோருக்கும் 
ஒரு கப்........

பிப்ரவரி 18, 2025

- வைத்தியக்காரர்கள் -


சில பைத்தியங்களை

அவ்வப்போது சந்திக்கின்றோம்.


ஒருவன் பக்கத்து நாற்காலியில்

பரபரப்பாக எதையோ விவரிக்கின்றான்

ஒருவன் டீ கடையில்

எதிரே ஒரு டீயை வைத்து எதையோ பேசுகிறான்


ஒருவன் இரயிலில் இரு இருக்கைகளுக்கு டிக்கட் வாங்கி

ஆமாம் போட்டுக்கொண்டே அமர்கிறான்


ஒருத்தி ஆழமாக எதையே கேட்டு

புருவம் உயர்த்தி 

தாழ்ந்த குரலில் பதில் சொல்கிறாள்

ஒருத்தி எதை கேட்டாலோ 

சட்டென தலை குனிந்து வெட்கப்படுகிறாள்


ஒருத்தி தன் பக்க நியாயங்களை

எழுதி எடுத்து வந்து

எதிரில் வைத்து உரையாடுகிறாள்


ஆனால் உங்களுக்கு

தெரியுமா?

அவர்கள் தனியாக இருக்கிறார்கள்

தனியாகவே இருக்கிறார்கள்

தன்னந்தனியாகவே இருக்கிறார்கள்


இந்தப் பிரபஞ்சம்

அவர்களுக்கென ஒரு வாசலை

திறந்து அவர்களுக்கானவர்களை

அவர்களிடம் அனுப்பி வைக்கிறது


பலநூறு ஆண்டுகளாய்

அவர்களின்

ஆன்மா சேகரித்து வைத்த

கேள்விகளைக் கேட்கிறார்கள்

பதில்களைச் சொல்கிறார்கள்


அவர்கள் அனைவரும் ஒவ்வொரு

காலகட்டத்தின் உலகின் புகழ்மிக்க

கவிஞர்கள்


அவர்கள் இப்படி பேசுவது

நமது எதிர்காலத் தருணத்தில்தான்

நம்மோடுதான்


அது தெரிய

நமக்கு இன்னும் அனுபவங்கள்

வாய்க்கவில்லை

நம் காதுகளுக்கு இன்னும்

அந்தக் கொடுப்பினை

கிடைக்கவில்லை ...





பிப்ரவரி 17, 2025

- காரண மாயிரம் சூழ -


சகாவே

உன் மொழி எனக்கு

புரியவில்லைதான்


நீ சிரித்தால் 

நான் உன்னை சந்தேகப்படுவேன்

நீ முறைத்தால் 

நான் உன்னை வெறுப்பேன்

நீ ஒதுக்கினால்

நான் உன்னை விலக்குவேன்


நீ அழுதால்

உன் கண்கள் கலங்கினால்

நானும் உன்னுடன் அழுவேன்


இருவரும்

கட்டியணைத்து கொண்டு

கொஞ்ச நேரம் அழுவோம்


உன் துயரத்திற்கு நானும்

என் துயரத்திற்கு நீயும்

மாற்றி மாற்றி

அழலாம்


யாரின் கண்ணீர்

சீக்கிரம் வற்றுகிறதென

போட்டி வைத்துக்கொள்ளலாம்


இருவருமே

ஒரே சமயத்தில் 

வெற்றி பெற

கண்ணீர்த்துளிகளை 

ஆளுக்கு சரிசமமாக 

பங்கிட்டு கொள்வோம்


துயரத்தைதான் 

பங்கிட முடியாது

அது தரும் வலியையும்

வலி உற்பத்தி செய்யும்

கண்ணீரையும் நாம் 

ஆளாளுக்கு எடுத்துக்கொள்வோம்


என் சகாவே

இது எவ்வளவு

பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது


என்ன சகாவே

நாம் அழுவதைத் தவிரவும்

வேறு

பைத்தியக்காரத்தனம் உண்டா


இதில் 

மறைந்திருக்கும்  மாயவித்தை

என்னவென்றால்

வலியே அழுகைக்கான காரணம்

அழுகையே வலிக்கான நிவாரணம்

பிப்ரவரி 16, 2025

- புத்தகங்களுக்கான தாலாட்டு -

 

இன்றோடு முடிந்தது

என்று அறிவித்து

நடந்தார்கள்


அடுக்கி வைத்தவற்றை 

எடுத்து வைக்க

நேரம் இருக்கிறது

உதவிக்கு ஆட்களும்

இருக்கிறார்கள்


கணக்கு வழக்குகளை 

எல்லாம்

தனித்தனியாய்ப் பார்த்துக்கொள்வார்கள்


யாருக்கும் எந்தச்

சிக்கலும் இல்லை


நான் மட்டும் ஏனோ

தனியே அமர்ந்திருக்கின்றேன்


இல்லை

இதுவரை விற்ற புத்தகங்களின்

நினைவில் அமர்ந்திருக்கின்றேன்


இதுநாள்வரை

இங்கிருந்தவை இனி

எங்கெங்கோ செல்லப்போகின்றன


புதிய ஸ்பரிசங்களை

அனுபவிக்கப்போகின்றன

ஏதோ ஓர் உள்ளங்கை வியர்வையில் வெட்கப்படப்போகின்றன


நிச்சயம் யாரோ

ஒருவரைத் தாலாட்டப்போகின்றன

யாரோ ஒருவரின் தூக்கத்தைக் கெடுக்கப்போகின்றன

யாரோ ஒருவரை ஏங்கி ஏங்கி 

அழவைக்கப்போகின்றன


இன்னொருவரோ மீண்டும்

பழையதை நினைத்து நினைத்து

குற்றவுணர்ச்சியில் குதிக்கப்போகிறார்

அடுத்தவரோ அதன் கரையைக் 

கண்டு நீந்தி

தப்பிக்கப்போகிறார்


எல்லாவற்றையும்

தாங்கதான் வேண்டியுள்ளது


இந்தும்கூட வேறுவழியில்லை

உங்களிடம் மன்றாடியொன்றைக் கேட்கிறேன்


புத்தகங்களை கவனமாகக் கையாளுங்கள் நண்பர்களே


அதுவும் எங்களுக்கு குழந்தைகள்தான்....... 


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

பிப்ரவரி 15, 2025

- ஒருநாள் கூத்து -


தெருவோரத்தில் 

பூ விற்கிறார்கள்

பழம் விற்கிறார்கள்

காய்கறிகள் விற்கிறார்கள்

குளிர்பானம் விற்கிறார்கள்


சமுக வலைத்தளத்தில் 

கணக்கு வைக்கத் தெரியாதவர்கள்


சிலருக்கு அது

வாழும் நாளின் வேலை

சிலருக்கு அது

அவ்வப்போதைய வேலை


உங்களுக்கு

காதல் இருக்கிறதோ இல்லையோ

பக்தி இருக்கிறதோ இல்லையோ

விழா இருக்கிறதோ இல்லையோ

தேவை இருக்கிறதோ இல்லையோ


இன்றொருநாளாவது

அவர்களிடம்  வாங்குங்கள்

எதையாவது வாங்குங்கள்

வாங்குங்கள்


ஏனெனில்

அவர்களிடம் 

உறுதியாய் இருக்கிறது

பசித்த வயிறு


ஒரு நாள் கூத்துதான்

என்றாலும்

ஒருநாளாவது வயிறு நிறைய

சாப்பிடட்டும்



பிப்ரவரி 14, 2025

- 14 பிப்ரவரி 2025 -


527 ஆண்டுகள் ஆகிவிட்டன

இன்னொரு மீரா

பிறக்கவேயில்லை


கண்ணனை காதலனாய்

ஆவாகனம் செய்ய

இன்று

ஆட்களே இல்லை


உச்சபட்ச உரிமையில்

கண்ணனை தன்னிடம்

அழைக்கவும்

தன் மார்போடு அணைக்கவும்

உரிமைகள் மறுக்கப்பட்டன


கோவர்த்தன மலை

அடிவாரத்தில்

கோவர்தனன் தனிமையில் 

தள்ளப்பட்டுவிட்டான்


கடவுளை தொடாதே

தொழு 

கடவுளிடம் நெருங்காதே

தள்ளி நில்

கடவுளை காதலிக்காதே

வணங்கு

என்கிறார்கள்


நூற்றாண்டுகள் கடந்த

காதல் தோல்வியில்

கிருஷ்ணனும்

தன் லீலைகளை

மறந்தேவிட்டான்


மனிதர்களிடமிருந்தும் விலகிவிட்டான்


கடவுளை காதலிப்பது

பெரும்பாவமாக பாவித்து

கொலை செய்யும்

மூடர்களால்

கடவுளும் காதலும்

பிளவுபட்டார்கள்


காதல் மணம் வீச

காதலி தூவும் மலர் மழையில்

கண்ணனின் கன்னத்தில்

வெட்கம் பூத்து 

அவன் இமைகள் இசைப்பதை

அவன் கண்கள் வசீகரிப்பதை

அவன் உதடுகள் சிலிர்ப்பதை

இனியெப்போதும் பார்க்க முடியாது


காதலிகளே உங்களுக்கு

சொல்ல 

ஒரே ஓர்

ஆறுதல்தான் இருக்கிறது  

எங்களிடம்


கடவுளைக்

காதலித்து கரைந்ததாய்

வரலாற்றில்  எங்களுக்கு இடமில்லை


ஆண்களுக்கு அது

ஒருபோதும் அனுமதிக்கப்படவேயில்லை

பிப்ரவரி 13, 2025

- தையற்கலை -

 

எழுத்தென்பது பேராயுதம்

அது போராயுதம்

என்கிறார்கள்


நான் அதை

ஊசியாக்கிக்கொள்கிறேன்

விட்டுவிடுங்களேன்.


இங்கு

கிழிந்து கிடக்கும்

இதயங்களை இணைத்து

தைக்க 

அதுதான் வசதியாக இருக்கிறது

மேலும் 

வலி கொடுக்காமல் இருக்கிறது


'அமைதியை விரும்புகிறவன்

எப்போதும் போருக்கு தயாராய் இருப்பான்'


என்பதை நான் 

இவ்வாறுதான் புரிந்துகொள்கிறேன்


என் தையலும் அதுதான்

என் கலையும் அதுதான்....

பிப்ரவரி 12, 2025

- இதயங்கள் உடையட்டும் -

 

உடைப்பதற்கே

இதயம் கொடுக்கப்பட்டதாய்ச்

சொல்கிறார்கள்

காதலால் உடைந்த 

பாக்கியசாலிகள்


நீ உடைத்து விளையாடு

என் அன்பே

நான் 

கண்ணீர் பசை கொண்டு

உடைந்த துண்டுகளை

உனக்கே உனக்கென

மீண்டும் ஒட்டி கொடுக்கின்றேன்


தூக்கி அடி

எடுத்து வீசு

காலால் மிதி

காரி உமிழ்


கடவுளைக் காட்டிலும்

காதலை அடைவது

அத்துணை சுலபமா என்ன


பாடுகள் 

எனக்கு பழகட்டும்

என்னை பக்குவப்படுத்தட்டும்

ஆகவே 

படுத்தியெடு


ஜென்மங்கள் பல எடுத்தும்

பலகொடி முறை

புதுப்பித்தும்

என் இதயத்தை

உனக்கே கொடுக்கின்றேன் 

அதற்குரியவள் நீயென

விதிக்கப்பட்டதால்


என்றாவது ஒரு காலப்பெருவெளியில்

நீ அதை

உடைக்க தாமதிக்கும்

மெல்லிய நொடியின்

சிறு துளியில்

என் காத்திருப்பை நீ

புரிந்து கொள்வாய்

உன் காதலையும்

எனக்கு அருள்வாய்


அதுவரையில்

முழு சுதந்திரம் கொண்டு

என் இதயத்தை உடை


கண்ணீர் வற்றினாலும்

என்

உதிரத்தைப் பசையாக்கி

ஒட்டிய இதயத்தை

மீண்டும் உனக்கே உனக்கென

கொடுக்கின்றேன்.....


பிப்ரவரி 11, 2025

- சொந்த கடவுள் -

 

மிகவும் பிடித்த முருகனுக்கு

கூப்பிட்டால் கேட்கும் குகனுக்கு


நம்பிவிட்டால்

குழந்தையும் அவன் தான்

குமரனும் அவன் தான்

குடுகுடு கிழவனும் அவனேதான்


கும்பிட்டால்  கந்தகடவுள்

அவன்

கூப்பிட்டவரின் சொந்த கடவுள்


குன்றிலும் இருப்போன்

நற்குணத்திலும் நிற்போன்

சொல்லச் சொல்ல அழகாகும்

அந்தச் சொல்லே

அவனால் அழகூறும்


என் மொழியின் இறையே

என் வழியின் துணையே

உன்னைப்பாடவும்

உன்னைத்தேடவும்

உன்னிடம் 

பாடி ஆடி தேடி ஓடவும்

பூத்துக்குலுங்குகிறது

இப்பூசம்


நேர்த்திக்கடன்களை நேர்செய்யும் தைப்பூசம் 

எங்களுக்கு எப்போதும் 

அது புகழ் மணக்கும்

தமிழ்ப்பூசம் 


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

பிப்ரவரி 10, 2025

- இதுவும் கடந்து போகும் -

 

- இதுவும் கடந்து போகும் -

இந்த நெடுஞ்சாலையில்தான்
எத்தனை
நான்கு சக்கர வண்டிகள்
அவ்வளவும் பணக்காரத் திமிர்

ஏன் இரு சக்கர வாகனங்களில்
இவர்களின் இருக்கை
இருக்காதா

பொது பேருந்துகளில்
போவதென்றால்
அத்தனை இளக்காரமா

இவர்களால்தான் இவ்வளவு
தாமதம்
இவர்களால்தான் இவ்வளவு
விபத்துகள்
இவர்களுக்குத்தான் எவ்வளவு
ஆணவம்

என நான்
ஒருபோதும் நினைக்கமாட்டேன்

அப்படியான வண்டி
ஒருவனின் குடும்பத்தின்
முதல் வண்டியாக இருக்கலாம்
அப்படியான வண்டி
ஒருவனின் ஊனமுற்ற
கைக்கு ஏற்றதாக இருக்கலாம்

அப்படியான வண்டி
வாழ்நாள் முழுக்க வேலை செய்பவன் அவனுக்கு பிடித்த பாடலைக் கேட்குமிடமாக இருக்கலாம்
அப்படியான வண்டியில்
ஒருவனின் தாயோ தந்தையோ
சக்கர நாற்காலியுடன் பயணிக்கலாம்

அப்படியான வண்டியில்
ஒருவன் கர்ப்பிணிக்கு ஏற்ற பொருள்களை வைத்திருக்கலாம்
அப்படியான வண்டியில்
ஒருவன் அவனுக்கு நெருக்கமானவர் இனி ஒருபோதும் அமரவே முடியாத
இருக்கையை வைத்திருக்கலாம்

அப்படியான வண்டிகளில்
'ஒருவன்தான்' இருப்பார்களா என்ன?

இருக்கிறார்கள்
அப்படியான வண்டியில்தான்
ஒருத்தி முதன் முதலில்
தனிமையை உணர்த்திருப்பாள்
அப்படியான வண்டியில்
ஒருத்தி யாரும் கட்டளையிடாமல்
தானே பயணிக்கிறாள்

அப்படியான வண்டியில்
ஒருத்தி தன் மொத்த குடும்பத்திற்கும்
சம்பாதிக்கிறாள்
அப்படியான வண்டியில்
ஒருத்திக்கு காதல் பூக்கிறது
அப்படியான ஒரு வண்டியில்
ஒருத்திக்கு மனமுறிவு கைகூடுகிறது

அப்படியான ஒரு
நான்கு சக்கர வாகனத்தில்தான்
நான் தினமும் செல்கிறேன்

வெளிப்படையாக சொல்வதென்றால்
காருக்குள் கதறி அழுதால்
சீக்கிரத்தில் யாருக்கும் தெரியாது
அழுது முடிக்கும்வரை
நம் கண்ணீர் முழுதும்  வடியும்வரை
போய்க்கொண்டே இருக்கலாம்

பினாங்கு பாலத்தில்
காரோடு கடலில்
குதித்து சாவதைக் காட்டிலும்
கண்ணீர் வற்றும்வரை
காரில் பயணிக்கலாம்

ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு கதை
ஒவ்வொரு கதைக்கும்
வெவ்வேறு மனிதர்கள்
வெவ்வேறு மனிதர்களுக்கும்
ஒரேமாதிரி கண்ணீர்
ஒரேமாதிரி கண்ணீருக்கு
ஒரே வார்த்தைதான் ஆறுதல்....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


பிப்ரவரி 09, 2025

- பயந்த பூனைக்குட்டி -

 


உள்ளுக்குள் நானொரு

பயந்த பூனைக்குட்டி


யாராவது என்னைப்

பெயர் சொல்லி

அழைத்தால்

கொஞ்சம் சத்தமாக

அழைத்தால் அழுதிடுவேன்

அப்படியொரு

பயந்த பூனையாகத்தான்


வாழ்ந்து கொண்டிருக்கிறேன்


ஆனால் எனக்கு

ஒருபோதும் எலிகளுடன் சிக்கல்

இல்லை


அவை என்னை 

கடந்து போகும் போதும்

என் உணவுகளை 

களவாடி போகும் போதும்

என் உடைகளை

கிழித்து சிரிக்கும் போதும்

என் உடைமைகளை

கலைத்து கடிக்கும் போதும்

எனக்கு கோவமே வருவதில்லை


அதற்கு பதிலாக

என் உரோமங்கள் சிலிர்த்து

என் கண்கள் கலங்கி

கால்கள் நடுங்கி

வயிறு கலக்கி

ஒருமாதிரி ஆகிவிடுவேன்


பசித்திருந்த கனவொன்றில்

எதார்த்தமாக

எலியை விழுங்கிவிட்டேன்

அந்த ருசி

நாக்கில் ஒட்டிக்கொண்டது

வாய் முழுக்கவும்

அந்த ருசியைத் தடவிவிட்டேன்


கனவுதானே என

தூக்கம் கலைந்து

கண்திறந்து பார்த்த நாளில் இருந்து

எந்த எலியும் என் முன்

நடப்பதில்லை

நடமாடுவதுமில்லை


நானும் எலிகளும் 

ஒரே கனவையா

ஒரே நேரத்தில்

கண்டிருக்கிறோம்


சின்ன சந்தேகம்

நான் எலியை விழுங்கி ருசித்த

கனவு போல

எந்த எலியாவது

என்னை விழுங்கி ருசிக்கும்

கனவு கண்டிருந்தால்

'ஐயகோ...'

என் கதி என்ன ஆவது


நானும் இனி

தலைமறைவாகத்தான்

வாழவேண்டும்

பிப்ரவரி 08, 2025

- மயிற்பீலி -

 

பழைய புத்தகக்கடையில்

வாங்க வேண்டிய புத்தகம் 

போல

வாங்கவே கூடாத புத்தமும்

இருக்கிறது


அப்படியொன்றை வாங்கிவிட்டேன்.


டைரி

பழைய டைரி

யாரோ ஒருவரின் பழைய டைரி

அழகிய வேலைப்பாடுகளை

முகப்பில் கொண்ட 

தடியான டைரி


முதல் பாதி

அப்படியே இருக்க

மறு பாதி முழுக்கவும்


எழுதி எழுதி

எழுதியதை திருத்தி திருத்தி

திருத்தியதை கிறுக்கி கிறுக்கி

பல வண்ண மைத்துளிகள்

தண்ணீரோ கண்ணீரோ

பட்டு

ஏடுகள் முழுக்க

பரவியிருந்தன


எழுதி முடித்தவன்

ஏனோ கிறுக்கியிருக்கிறான்

கிறுக்கி முடித்தவன்

ஏதற்கோ அழுதிருக்கிறான்

அழுது முடித்தவன்

ஏதோ ஓரிடத்தில் 

தன்னை மறைத்திருக்கிறான்


இடைபட்ட இடத்தில்

ரொம்ப 

நாள்பட்ட மயிற்பீலி 

ஒன்று

இன்னமும் உயிரோடு இருக்கிறது


நான் தொட்டதும்

கைகால்களை அசைத்து

பரவசமாகியது

அதற்காகவேணும்

அவன் உயிரோடிருப்பான்  

என நம்புகிறேன்


சொல்ல முடியாத

முதற்பகுதி வாழ்க்கைக்கும்


சொல்லிச்சொல்லி அழுத

மறுபகுதி வாழ்க்கைக்கும்


நிகழ்காலத்தை குதூகலிக்கும் 

மயிற்பீலிக்கும்


என்னை

சாட்சியாக ஆக்கிவிட்டு

தன்னை எங்கோ

மறைத்து கொண்டான்

டைரி எழுதியவன்


அப்படித்தானே

நானும் உங்களை

என் கவிதைகளுக்கு

சாட்சியாக நிற்க வைக்க

எழுதிக்கொண்டிருக்கிறேன்...


பிப்ரவரி 07, 2025

- வெறும் பொருள் -

 

தங்களின் கடவுள்களை

எல்லா இடத்திலும் பொருத்தி வைக்கிறார்கள்

எல்லா மனிதர்க்கும் பொதுவாக்கி வைக்கிறார்கள்

பார்த்து மகிழ்கிறார்கள்

மற்றவர்களையும் அழைக்கிறார்கள்

அவ்வப்போது அடிக்கவும் செய்கிறார்கள்


ஆனால் 

அவர்களால் தங்களை

வேறெந்த மனிதனிடத்திலும்

பொருந்தி நிற்க முடிவதில்லை

பொறுத்துப்போகவும் தெரியவில்லை


அதனால்தான் என்னவோ

மனிதர்களால்

கடவுளாகவே முடிவதில்லை


பரம்பொருளே தன்னை

வெறும் பொருளாக 

உணர்ந்த பின்


அந்தக் கடவுளும் 

மீண்டும் மனிதனாக பிறக்க

ஒருபோதும்

விரும்புவதேயில்லை

பிப்ரவரி 06, 2025

- எழுத முடிந்தவனுக்கு -



 இன்னும் எவ்வளவு

எழுதலாம்

இன்னும் எத்தனை

எழுதலாம்

இன்னும் எதுவரை 

எழுதலாம்


தொடங்கிய எதையும்

முடிக்கத்தான் வேண்டும்

முடிவை நோக்கியதுததானே

நம் பயணம்


எது முடிவென்பதை

எவரால் கணிக்க இயலும்


நூற்றாண்டு கனவுகளும்

நூலிழையில் கரைந்திடுகின்றன

தோன்றாத கனவொன்றோ

உச்சத்தில் ஒருவனை

சேர்க்கிறது


யார் கனவை

யாரின் கண்ணீரை

எவரொருவர் அறிவார்


ஆடிய கால்களும்

பாடிய வாய்களும்

தங்களுக்கென ஓர்

ஆயுளை

எங்கோ ஓரிடத்தில்

அடைகாத்து வருகின்றன

எந்த உஷ்ணம்

அதை வெடிக்கச்செய்யுமென

யாரால் அறிவிக்க முடியும்


இன்னும் எவ்வளவு

எழுதலாம்

இன்னும் எத்தனை

எழுதலாம்

இன்னும் எதுவரை 

எழுதலாம்

எல்லாவற்றுக்கும் எல்லை

என்பதொன்று இருக்கும்தான்


நாம் எழுதுவதற்கு 

எது எல்லை

நம்மால் எழுத முடிந்தவரை

எப்போதுமில்லை அவ்வெல்லை


பிப்ரவரி 05, 2025

- அரசியல் தெரிந்தவர்கள் -


 பாலாடை

பால் பாட்டில்

நம்கின்

பூத்தின்

பௌடர்

கிலுகிலுப்பை

கரடி பொம்மை

இவற்றுடன்

மிச்சமிருக்கும் தாய்ப்பால் சொட்டுகள்

என எல்லாவற்றையும்

சிதைந்த

அந்தக் குழந்தைகளின்

கூடவே புதைத்துவிட்டார்கள்


ஒன்றின் மேல்

ஒன்றென

காலம்காலமாக புதைக்கப்பட்ட

குழந்தைகளில் இருந்து

எந்தவித குற்தவுணர்ச்சியும்

யாருக்குமே இதுவரை முளைக்கவில்லை...


சென்ற குழந்தைகள் 

ஒருபோதும் 

திரும்புவதில்லை


உலகம் ஒருநாள்

குழந்தைகளே பிறக்காத

நாளாகி விடிந்தாலும்


பழகிவிட்ட பதவி

பைத்தியங்களும்

அதிகார அரக்கர்களும்

புதைத்த குழந்தைகளையே 

மீண்டும்  மீண்டும் தோண்டி

எடுத்து

மீண்டும் மீண்டும்  புதைத்து

விட்டுதான்

நிம்மதியாவார்கள்..


செத்தபின் தான்

சொர்க்கமும் நரகமும்

என்பதை முழுதாய்ப்

புரிந்தால் மட்டுமே 

அரசியல் செய்ய முடியும் போலும்


பிப்ரவரி 04, 2025

- பரிதாப பரிசுகள் -

 

ரொம்பவும் பழைய

புத்தக அலமாரியில்

பழைய புத்தகத்தில்

அதைவிட பழையதாய்

ஒரு மயிலிறகு இருக்கிறது

அது மட்டும்

இன்னமும் புதியதாகவே சிரிக்கிறது


பிடித்தவர்கள் கொடுக்கும்

எந்தப் பொருளும்

பழசாவதில்லை

அது சுமக்கும் 

நினைவுகளுக்கும் வயசாவதில்லை


பார்க்கும் போதும்

கையில் எடுக்கும் போதும்

நினைக்கும் போதும்

நெஞ்சோடு அணைக்கும் போதும்

தன்னைத்தானே

புதுப்பித்துக்கொள்ளும்

சூட்சுமம் தெரிந்தவை

அவை


அமர்ந்தபடி ஆகாயம் தொடவும்

நடந்தபடி காற்றாடி போலவும்

நம்மையும் அவை

மாற்றிவிடுகின்றன


பிடித்தவர்கள் கொடுக்கும்

பரிசுகள் போல

பிடித்தவர்கள் எப்பவும்

அப்படியே இருப்பதில்லை


சிலர் கொடுத்ததை

திரும்ப கேட்கிறார்கள்

சிலர் கொடுத்ததை

பிடுங்கி கொள்கிறார்கள்

சிலர் கொடுத்ததை

கண்முன்னே சிதைத்து வைக்கிறார்கள்


சிலர் நம்முடனே

அதனையும் வெறுத்துவிடுகிறார்கள்

ஆழக்குழியில்

நம்மை 

புதைத்து விடுகிறார்கள்

அதன் மேல் அமர்ந்தபடி 

கண்ணீர் சிந்துகிறார்கள்


சிந்தியக் கண்ணீரில் நாமும் 

ஈரமாகிறோம்

நமக்கே நாம் பாரமாகிறோம்


உடைந்துகிடக்கும்

பரிசுகள் கொடுக்கும் 

ஆறுதல்கூட அருகில்

இருந்தும் அவர்கள்

தருவதில்லை


அன்றொருநாள்

யாரோ 

யாருக்கோ

கொடுத்த கரடி பொம்மையை

யாரோ கொளுத்திவிட்டார்கள்


அது எரிந்த போது

அழுத குரல் 

இன்னமும் எனக்கு கேட்கத்தான் செய்கிறது



பிப்ரவரி 03, 2025

- நினைவுக்குமிழி -


 நினைவுகளின் குழி

சிலருக்கு செதுக்கப்படுகிறது

சிலருக்கு புதைமண்ணாய் ஆழம் போகிறது


கையளவு தண்ணீராய்ச் சிலர்

முகம் கழுவுகிறார்கள்

கடலளவு தண்ணீராய்ச் சிலர்

தத்தளித்து சாகிறார்கள்


நினைவுகளை அழிப்பதற்கு

அறிவியலில் இடமுண்டா


மீண்டும் ஒருநாள்

ஆசைக்காய் அதை

நினைத்துப்பார்க்க வழியுண்டா


நினைவுகள் இல்லாமல்

நீயும் நானும்

என்ன செய்யப்போகிறோம்


நினைத்து நினைத்து

அழுவதற்கும்

நினைத்த நேரத்தில்

சிரிப்பதற்கும்

தனித்தனியாய் நினைவுகளை

சேகரிக்க முடியுமென்றால்

எவ்வளவு வசதி


அட்டவணை போட்டு

அழுது கொள்ளலாம்

அலட்டிகொள்ளாமல்

தினமும் சிரிக்கலாம்


நினைவுகளில் சுமை

நம்மை மண்ணில் புதைக்கிறது

நினைவுகளின் சுகம்

நம்மை விண்ணில் செலுத்துகிறது


நினைவுக்குமிழிகள்

வெடிக்கும் போது

காற்றோடு நம்

மூச்சையும்தான் எடுத்துவிடுகின்றன


மறதிக்கென மருந்து

எந்தக் கடையில் கிடைக்கும்

வாங்களேன் நாம்

வாசலிலேயே காத்திருக்கலாம்

பிப்ரவரி 02, 2025

- உங்கள் குட் நைட்டிற்கு என்ன பொருள் ? -

 

குட் நைட்

என்பதை எப்படி

தமிழில் சொல்வீர்கள்


உங்கள் தாய்மொழியில்

எப்படி அதற்கு

பொருள் கொள்வீர்கள்?


என்னால் அதன்

நேரடி பொருளை 

என் மொழியில்

புரிந்து கொள்ள முடிவதில்லை

அது எனக்கு

பொருந்தவில்லை

அதன் அடக்க பொருள்

எனக்கு நிலைப்பதில்லை


குட் நைட் என்பது

அதனைச்

சொல்லும் நபரிடமிருந்து

கேட்கும் நபரிடம் வருவதற்குள்

பரிணாமம் அடைந்துவிடுகிறது


இனிமேல் அவ்வளவுதான்

என்பதையா?

உன் நினைவோடு நான்

என்பதையா?

இனி வராதே

என்பதையா?

உனக்கு அறிவே இல்லை

என்பதையா?

இன்னும் கொஞ்ச நேரம் பேசு

என்பதையா?

ஒரு முத்தம் கொடு

என்பதையா?

என்னை அணைத்துக்கொள்

என்பதையா?

என்னோடு இரு

என்பதையா?

என்னை விட்டு போகாதே

என்பதையா?

ப்ளீஸ்

என்பதையா?

நான்சென்ஸ் 

என்பதையா?


குட் நைட் என்பதை

உங்கள் மொழியில் 

நீங்கள் எப்படிதான்

புரிந்து கொள்கிறீர்கள்

நீங்கள் எப்படிதான்

புரிய வைக்கிறீர்கள்


என்னிடம்

ஒரு குட் நைட் உண்டு

அதைச் சொல்லும்போதெல்லாம்

எனக்குள் நான் சிரித்து

கொள்கிறேன்

கொஞ்ச நேரத்தில்

அழுதபடியே

உறங்குவது போல்

நடிக்கவும் செய்கிறேன்


பிப்ரவரி 01, 2025

பிப்ரவரி மாத நாவல் வாசிப்பு


 பிப்ரவரி மாதத்திற்கான நாவல் வாசிப்பு.

இர்விங் கர்ஷ்மார் எழுதிய 'ஜின்களின் ஆசான்'

Tamil translation of 'Master of the Jinn'

நான் வாசிக்கும் இரண்டாவது சூஃபி நாவல். ரமீஸ் பிலாலியின் தமிழாக்கம். 

சீர்மை வெளியீடு.


நான் இந்நாவலை  தேர்ந்தெடுக்க ஜனவரி மாத நாவல் வாசிப்பே முக்கிய காரணம்.


'ஆனால் மனிதன் தனக்கே சாட்சியாக இருக்கிறான்.' - திருக்குர்ஆன்(75:14)

என்ற இறைவசனத்தில், இந்நாவலை வாசிக்க தொடங்குகிறேன். 


அன்புடன் 

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

- துளி பாரம் -

 

எல்லோருமே
ஏனோ எதற்கோ
கண்ணீரைச் சேமித்திருக்கிறோம்
அதிக வட்டியை அதுவே
தனக்கென கூட்டிக்கொள்கிறது

அதில் சில
சிரிக்கும் போது
சிந்திவிடுகிறது
அதில் சில
அழும் போது
வந்துவிடுகிறது

இன்னும் சில
கண்களின் வழி
வெளியேற விருப்பமற்று பின்னொக்கிச் சென்று
இதயத்தை ஈரமாக்கிவிடுகின்றன

காற்றை
உறிஞ்சி ஊத
உதிரத்தை
ஏற்றி இரக்க
பழகிய இதயத்திற்கு
கண்ணீரை
என்ன செய்வதென
தெரியவில்லை

தான் தப்பிப்பிழைக்க
புத்திக்கு புலப்படாத
நினைவுகளைச் சுமக்கும்
அரூப பெட்டிக்கு
கண்ணீரின் பாரத்தை
அனுப்பிவிட்டு
அதிகமாய்த் துடிக்கிறது
இதயம்

உடல் எடையைவிட
நினைவின் எடையை
எந்த மனிதனாலும்
தாங்கி
தள்ளாடாமல் நடக்கமுடிவதில்லை
அவன்
அதனை சுமந்து கொண்டுதான்
வாழ்க்கையைக் கடக்கவேண்டியுள்ளது

கருணை கொண்ட
சில
கண்ணீர்த்துளிகள் மட்டும்
கண்களில் இருந்து
கண்கள் மூட
கண்ணிமையில்  ஏறி நின்று
குதித்து
தற்கொலை செய்கின்றன

கண்ணுக்கும் கண்ணீருக்கும்
எந்த
குற்றவுணர்ச்சியும் இன்றி
ஓர் ஒப்பந்தம்
நிறைவடையும் போது
மனம் கொஞ்சம்
லேசாகிறது...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்