பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 29, 2025

- காணாமல் போகிறவர்கள் -


அரைமுழுக்க 

ஆயிரம் புத்தகங்கள்

இருந்தாலும்


நமக்கு தேவைப்படும்

ஏதோ ஒரு

புத்தகத்தை மட்டும்


நண்பனொருவன்

எப்போதோ

இரவல் வாங்கி


காணாமல் போயிருப்பான்...

ஏப்ரல் 22, 2025

- வேடிக்கையாளர்கள் -


 

அரசியலில் இருக்கும் இலக்கியவாதியை 

கண்டுகொள்ளலாம்


இலக்கியத்தில் இருக்கும் அரசியல்வாதியை

அவ்வளவு எளிதாக 

அடையாளம் காண முடியாது


முதல் வகைக்கு

தன்னை வெளிகாட்டுவதுதான்

விளம்பரம்


இரண்டாம் வகைக்கு

தன்னை வெளியில் காட்டாததுதான்

வியாபாரம்


இருவருக்குமே 

நாம்தான் வாடிக்கையாளர்கள்

பல சமயங்களில்

வேடிக்கையாளர்கள்...

ஏப்ரல் 21, 2025

- காதறுந்த புல்லாங்குழல் -


எப்போதும் 

ஆறுதல் சொல்லும்

மனிதனுக்கு

ஆறுதல் தேவைப்படாது என 

நினைத்துவிடுவதுதான்

எவ்வளவு பெரிய

துயர்....


ஏப்ரல் 19, 2025

- பால பாடம் 1 -


 குழந்தை போல் 

வாழ்வதற்கான

பால  பாடங்களில் 

முதன்மையானது


எவ்வளவு வலித்தாலும்

கண்களைத் துடைத்துவிட்டு

எல்லா பற்களையும் காட்டி

"அப்பாவுக்கு வலிக்கல பொம்மி..."

என்றதும் 

பொம்மி நம்பிவிடுவது போல


நாமுமே நம்மை

நம்பிவிட வேண்டும்

வலிக்கவில்லை என....


ஏப்ரல் 18, 2025

- அதனால் என்ன ? -


சரி சகாவே

நாம் தோற்றுவிட்டோம்

அவர்கள் ஜெயித்துவிட்டார்கள்

அதனால் என்ன


வா

கொஞ்ச தூரம் 

நடக்கலாம்

கொஞ்ச நேரம் 

ஏதாவது புத்தகத்தை வாசிக்கலாம்

முடிந்தால் கவிதை எழுதலாம்


பிறகு 

அப்படியே

நிம்மதியாய்த் தூங்கலாம்


காலை சூரியன் 

வந்துதான்

நம்மை எழுப்பி விடட்டுமே....


#தயாஜி 

ஏப்ரல் 11, 2025

ஏப்ரல் 10, 2025

- மதவியாதிகள் -

 


சாமானியன் செய்யும் 

தப்புத்தவறுகளுக்கு

கடவுள் அவர்களை

மன்னிக்கவே மாட்டார் என்கிறீர்கள்


மதவியாதிகள் செய்யும் 

தப்புத்தவறுகளுக்கு

கடவுள் அவர்களை 

ரொம்பவும் சோதிக்கிறார் என்கிறீர்கள்


ஏன்

இந்தக் கடவுள்

எங்களைச் சோதித்து

அவர்களை மன்னிக்காமல் 

இருக்க மாட்டரா?

ஏப்ரல் 09, 2025

- ஆறுதல் -

 


எதையெல்லாம் 
மறக்கக்கூடாது என நினைக்கிறோமோ
அதைத்தான் முதலில் மறக்கிறோம்

எதையெல்லாம் 
இழக்கக்கூடாது என
நினைக்கிறோமோ
அதைத்தான் முதலில் இழக்கிறோம்

எதையெல்லாம்
விலகக்கூடாது என 
நினைக்கிறோமோ
அங்குதான் முதலில் விலகுகிறோம்

எதையெல்லாம்
பார்க்கக்கூடாது என
நினைக்கிறோமோ 
அதைத்தான் முதலில் பார்க்கிறோம்

எதையெல்லாம்
பழகக்கூடாது என
நினைக்கிறோமோ
அதைத்தான் முதலில் பழகுகிறோம்

எல்லாம் முடிந்த பின்
எதுவுமே முடியவில்லை என்றாவது
யாரும் சொல்வார்களா 
என
தேடித்தேடிப்பார்க்கிறோம்

நமக்கு ஆறுதல் சொல்ல
நம்மைவிட நமக்கருகில்
யார்தான் வந்துவிடப்போகிறார்கள்..

ஏப்ரல் 08, 2025

- கைகள் -


நமது கைகள் 

ஓங்கியிருக்கும்போது

நாம் விட்டுக்கொடுத்ததும்

நாம் மன்னித்து விட்டதும்


நமது கைகள் 

வலுவிழந்தப்பின்

அர்த்தமற்றாதி

நம்மை நோக்கி

ஏளனப்புன்னகையை

கொடுக்கத் தொடங்குகின்றன






ஏப்ரல் 07, 2025

- பேரிடர் -

 

மழையோ புயலோ பூகம்பமோ

அதன் விருப்பத்தில் வந்து

சென்ற பின்


ஒருவன் 

தன் விலை உயர்ந்த காரும்

தனக்கு மட்டும் கட்டிகொண்ட

நான்கு தூண் மாளிகையும்

தீயில் கருகியதைச் சொல்லிச்சொல்லி

அழுதபடி

மீதமுள்ள காஸ்ட்லியான 

வைனில் மூழ்கி தன் துக்கத்தைப்

போக்கி கொள்கிறான்


அவனது எரிந்து சாம்பலான

நான்கு தூண் மாளிகைக்குள்

தன் குடும்பம் உண்பதற்கு

ஏதும் கிடைக்குமாவென்று

நேற்றிலிருந்து

சாம்பலோடு சாம்பலாக

மூழ்கிய

இன்னொருவன் 

எப்போதும் போல பசியோடு

மூச்சு திணறிக்கொண்டிருக்கிறான் 


இங்கு

எது யாருக்கு இடர்

எது யாருக்கு பேரிடர்




ஏப்ரல் 06, 2025

- வெறும் முதலைகள் -



சகாவே

சமீபத்திய செய்தி

பார்த்தாயா?

இந்தோனேசியாவில் ஒரு முதலை இருக்கிறதாம்


மனிதர் போலவே

கைகளை மட்டும் காட்டி

தூரத்தில் நமக்கு 

உதவிக்கான

தோற்றத்தை கொடுக்குமாம்


கடலில் தெரிந்த கையை

காப்பாற்ற சென்ற 

மனிதர்களே

அன்றைக்கான உணவாம்


எவ்வளவு சாமர்த்தியசாலி

அந்த முதலை


இந்தோனேசியாவில் மட்டுமா

அந்த முதலைகள் இருக்கின்றன


சகாவே

நன்றாக யோசித்துப்பார்

அப்படி உதவி கேட்டு

நம்மை உணவாக்கிக் கொள்வது

வெறும் முதலைகள் 

மட்டும்தானா...


ஏப்ரல் 05, 2025

- கொலையாட்டம் -

 

கொண்டாட்டங்களைக் 

குற்றங்களாக்கி 

நாம் விரட்டி விட்டதால்


குற்றங்கள் 

கொண்டாட்டங்களாகி

நம்மை விரட்ட தொடங்கிவிட்டன


மத்தாப்புகளைப் பிடித்த கைகள் 

வெடிகுண்டிற்கு பழகிவிட்டன



ஏப்ரல் 04, 2025

- நீயா நானா நாமா -


நீ உன்னை
ராஜாவென்றழைத்தால்
நான் உனக்கு
தலை வணங்குகிறேன்...

நான் என்னை
ராணியென்றழைத்தால்
ஏன் நீ
ஏளனமாய்ப் பார்க்கிறாய்..

உண்மையைச் சொல்
நானா உன்னை 
குறைத்து பேசுகிறேன்..

ஏப்ரல் 03, 2025

- பிரிவுகள் தொடர்கதை -

 

எப்படி தொலைக்கிறோம்

என்பதெல்லாம்

தெளிவாக தெரிவதே இல்லை


உறங்கி 

விழித்ததொரு நாளில்

மறைந்து போன

புதிரான கனவால்

நாள் முழுக்க 

புலம்பி கொண்டிருப்பது மாதிரி


நன்கு பழகியவர்கள்

எப்படி பகைவராகிறார்கள் 

என

குறிப்பாய் அறிந்திட 

எந்தவொரு குறிப்பும் இல்லை


புலம்பியும்

ஒன்றும் ஆகப்போவதில்லை


விலகல் நல்லதுதான்


நமக்கு நாமே

சொல்லிக்கொண்டாலும்

என்றாவது ஒருநாள்

தூக்க கலக்கம் போல

வார்த்தைகளில் வராத

துக்க கலக்கத்தில்

உனக்காக நானும்

எனக்காக நீயும்

பேசியிருப்போம் 

நாம் பிரியாமலேயே இருந்திருந்தால்


கண்கள் கலங்குகின்றன

மூக்கின் இடைவெளியை மறந்து

கண்ணீராவது

இருகண்ணிலும் ஒன்றுபோலவே 

வழிந்தோடட்டும்


ஏப்ரல் 02, 2025

- முழுக்கவும் கற்பனையான உண்மை -


உண்மைகளை 

உரக்க சொல்வது

பலரின் 

உறக்கத்தைக் கெடுக்கும்

சமயங்களில்

சொன்னவரின் உயிரையும் குடிக்கும்


உயிர்ப்பிழைக்க 

கண்டுவிட்ட உண்மைகளில்

சில சொட்டுகள்

கற்பனைகளைக் கலந்துவிட வேண்டும்


சொட்டு நீலம் போல

சொட்டு கற்பனைகள்

உண்மைகளை பார்ப்பதற்கு கூடுதல் அழகாக்கும்


உண்மைக்கும் கற்பனைக்கும்

இடையில் தோன்றும்

மெல்லிய கோட்டை

ஒருபோதும் 

தெளிவுப்படுத்தக் கூடாது


தெளிவின்மைதான்

இங்கு பலரின் 

முகங்களுக்கு  உத்திரவாதம்


உலகின் 

ரொம்பவும் அரியவகை 

உயிரினம் கண்டுபிடிக்கப்பட்ட

மறுநாளே

நோய்த்தொற்றில் 

அது சாவதும்


அதன் தோலும் நகமும் பல்லும்

வாலும் சதையும்

கள்ளச்சந்தையில் விற்பக்கடுவதும்


பல கோடி கொடுத்து

அது வாங்கப்படுவதும்


உண்மையில் கலந்த

எத்தனை சதவித கற்பனை 

என

இங்கு யாருக்குமே அக்கறையில்லை..


- 2025-இன் நான்கிலொன்று -


2025-ஆம் ஆண்டின் சிறுபகுதியைக் கடந்துவிட்டோம். இந்த ஆண்டில் நமக்கு கொடுக்கப்பட்ட நாட்களில் நான்கில் ஒரு பகுதி முடிந்தது. 

கடந்த மூன்று மாதங்களில் பல சிக்கல்களுக்கு மத்தியில் வழக்கம் போல வாசிக்கவும் முடிந்தது.

திட்டமிட்டபடி மாதம் ஒரு நாவலென மூன்றாவது நாவலையும் வாசித்து முடித்தேன். அதோடு நடுகல்.காமிற்கு எழுதும் மாதாந்திர தொடரான 'மாதம் ஒரு மலேசிய புத்தகத்திற்காக' மூன்று புத்தகங்களை வாசித்திருந்தேன். தொடர்ந்து இத்தொடருக்காக ஒன்பது புத்தகங்களை வாசிக்கவும் சிலவற்றை மீள்வாசிப்பு செய்யவும் வேண்டியுள்ளது.

இன்றையச் சூழலில் ஒரு வாசகனுக்கும் ஓர் எழுத்தாளனுக்கும் ஊக்கமும் உற்சாகமும் கொடுக்க கூடிய வார்த்தைகள் ரொம்பவும் முக்கியம். அதைவிட முக்கியம் முதற்கட்டமாக அந்த வார்த்தைகள் நம்மிடம் இருந்தே நமக்கு வரவேண்டும்.

என்னை நான் உற்சாகப்படுத்தும் இந்த நேரத்தில் நீங்களும் உற்சாகம் கொள்வீர்கள் என்பதற்காக இந்தப் பதிவில் இதுவரையில் வாசித்த புத்தகங்களைப் பகிர்கின்றேன். நீங்களும் இதுவரையில் வாசித்ததைப் பகிருங்கள். நம் இரு தரப்பிற்குமான  உரையாடல் அதன் வழி தொடரட்டும்.

எனது இந்த பகிர்வில் ஒவ்வொரு புத்தகத்திற்கும் என் வாசிப்பையொட்டிய சிறு குறிப்பையும் சிலவரிகளில் எழுதுகிறேன். 

எனக்கு உதவியாகவும் உற்சாகமாகவும் அமைந்த, நான் வாசித்த நண்பர்களின் புத்தக அறிமுகம் போல எனது இச்சிறு குறிப்பும் ஏதாவது ஒரு வகையில் புத்தகங்களை நேசிக்கும் உங்களுக்கும் பயனாய் இருக்கும் என நம்புகின்றேன்.

மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் வாசித்தவை:-

1. காதலின் நாற்பது விதிகள்.

- ரொம்பவும் பிடித்த நாவல்களில் இதுவும் அடங்கியது. நாவல் நகர்ந்த விதமும் நாவலுக்குள் நாவலாக விரிந்து சென்ற கதைகளும் கதாப்பத்திரங்களின் குரல்களும் வாசிப்பில் கவர்ந்தது. ரூமி என்னும் மகாகவி சமய போதகராக இருந்து கவிஞராக மாறும் மாற்றம் கவிதையாகச் சொல்லப்பட்டுள்ளது.

2. ஜின்களின் ஆசான்.

- வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கக்கூடிய கதை. சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட நாவல். துப்பறியும் பாணியில் ஒரு ஆன்மீக பயணம் என இதனைச் சொல்லலாம். ஜின் தேடி மனிதர்கள் போகிறார்கள். ஜின்களின் அரசனை சந்திக்கின்றார்கள். அதன் பின் நடந்தது என்ன என்பதை மீண்டும் நினைவுக்கூர்கிறது இந்நாவல்.

3. விசித்திரங்களின் புத்தகம்.

- காணாமல் போன நூலகரைத் தேடுவதில் தொடங்கிய கதை, மெல்ல மெல்ல அத்தேடல் அகத்தேடலாய் மாறி தனக்கான ஆன்மீக குருவைத் தேடும்படி பரிணமிக்கும் கதை. தன் ஆன்மீக பயணத்திற்கான சரியா குருவை நாயகன் கண்டடைந்தானா இல்லையா என்பது மீதிக்கதை.

இம்மூன்று நாவல்களையும் ரமீஸ் பிலாலி மொழிபெயர்த்துள்ளார். மூன்றுமே சூஃபி நாவல்கள் என்பது இந்த நாவல் வாசிப்பிற்கான என் உந்துதல். அடுத்த வாசிப்பிற்கான சில புத்தகங்களை இதன் அடிப்படையிலேயே தேர்வு செய்துள்ளேன்.

அடுத்ததாய்க் கவிதைகள்

4.  யாருமற்ற நிழல் - தேவதச்சன்

5. என் ஓவியம் உங்கள் கண்காட்சி - கல்யாண்ஜி

6. வாழ்க்கைக்கு வெளியில் பேசுதல் - இசை

7. கடல் காற்று கங்குல் - மின்ஹா

8. நாங்கூழ் - முன்ஹா

9. தாகங்கொண்ட மீனொன்று - ரூமி (என்.சத்தியமூர்த்தியின் தமிழாக்கம்)

10. ரூமியின் வைரங்கள் - ரமீஸ் பிலாலியின் தமிழாக்கம்

இந்தக் கவிதைத் தொகுப்புகள் ஒவ்வொன்றுமே முக்கியமானவைதான். அதன் மொழிக்கும்  அது சொல்ல எடுத்துக்கொண்ட கவிக்கும் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. தொடர்ந்து கவிதைகளை எழுதுகிறேன். இந்தக் கவிதைத் தொகுப்புகள் தனிப்பட்ட முறையும் எனக்கு உதவின. மூத்த படைப்பாளி இளம் படைப்பாளி மொழிபெயர்ப்பு என்ற மூன்று தரப்புகளில் இருந்து வாசித்த இந்தக் கவிதைகள் வாசிப்பின் இன்பத்தைக் கூட்டின.

அடுத்ததாய்க் கட்டுரைகள்/கதைகள்

11. கவிதை: இன்று முதல் அன்று வரை - வண்ணநிலவன்

- 20 தமிழ்க் கவிஞர்களின் கவிதை உலகைக் குறித்த அறிமுகமும் விமர்சனமும் அடங்கிய தொகுப்பு. சிலரை அறிமுகம் செய்தததோடு பல கவிஞர்களைப் புரிந்து கொள்ளவும் உதவியது.

12. என்றார் சூஃபி - ரமீஸ் பிலாலி

- சூஃபிசத்தைச் சொல்லும் குரு சிஷ்ய உரையாடலாக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர்.  ஒவ்வொன்றும் ஓரிரு பக்கங்களில் முடிந்து நம் சிந்தனையில் இன்னொரு பக்கத்தை எழுதிச்செல்கின்றன.

13. பண வாசம் - குரு மித்ரேஷிவா

- எது செல்வம், எப்படி அடைவது, அதனை அடைவதற்கான மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை கருத்துகளைச் சொல்லும் புத்தகம். 

அடுத்து 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடருக்காக வாசித்தவை

14. ஆதி.இராஜகுமாரன் சிறுகதைகள்

- ஜனவரியில் இந்தப் புத்தகத்தில்தான் தொடரை தொடங்கினேன்.

15. அகப் பறவை - பூங்குழலி வீரன்

- எனக்கு பிடித்த மலேசிய கவிஞர்களில் ஒருவர்.

16. ஜீவானந்தன் சிறுகதைகள்

- தொடர்பு துறையிலும் எழுத்திலும் நான் என் முன்னோடிகளாக நினைப்பவர்களில் ஒருவர். 

17. பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது - பா.அ.சிவம்

- மொழிபெயர்ப்பு கவிதைகள்

- என்றும் நம் மனதைவிட்டு நீங்கா கவிஞர் பா.அ.சிவத்தின் எழுத்துகளுக்கு என் அன்பு

இந்த நான்கு மலேசிய புத்தகங்கள் குறித்த விரிவான அறிமுகத்தை நடுகல்.காமில் எழுதியுள்ளேன். நண்பர்கள் அங்கு சென்று வாசிக்கலாம்.

மார்ச் மாதம் வரை வாசித்த புத்தகங்கள் இவை. வாசிப்பில் எத்தனை புத்தகங்களை வாசிக்கின்றோம் என்பதை விட 'வாசிக்கிறோமா?' என்கிற கேள்விதான் முக்கியம் என நம்புகின்றவன் நான். தினம் ஒரு பக்கத்தை புரிந்து ரசித்து வாசித்தாலும் கூட நாம் வாசகர்கள்தான். 

இந்த ஆண்டின் முதல் பகுதியை முடித்து இரண்டாம் பகுதிக்குள் நுழைகின்றோம். அடுத்த மூன்று மாதங்களில் வாசிப்பின் ருசி என்னவாக அமைகிறது என பின்னர்தான் தெரியவரும். வாசிப்போம்.

உங்களுக்கு எப்போதும் என் அன்பு...


ஏப்ரல் 01, 2025

- என் வீட்டில் ஒரு டைனோசர் இருந்தது -

 

என் வயது

நண்பர்களை பார்ப்பதில் 

எனக்கொரு பயம் இருக்கிறது

குறிப்பாக 

அவர்கள் என்னுடன் படித்த 

நண்பர்கள் என்றால்

ஒரு பீதியும் உடன்

வந்துவிடுகிறது


அவர்கள் பேச வேண்டிய

அவசியம் கூட தேவையில்லை

அவர்களைப் பார்த்தாலே

நான் நடுங்குகின்றேன்


நேற்று காலை

யாரோ யாரையோ

பெயர்ச் சொல்லி அழைத்தார்கள்

நான் ஆடிப்போய்விட்டேன்


அந்தப் பெயரின் ஆள்

அங்கில்லை

அது வேறு ஆள்

ஆனால் அந்தப் பெயர்

என் பால்ய நண்பனின்

பெயர்


என் அருகில் அமர்ந்திருந்தவன்

என் உணவில் பங்கு எடுத்தவன்

அவன் தண்ணீரில் என் தாகம் தீர்த்தவன்


ஒவ்வொரு முறை

பரிட்சையின் போதும் 

மாற்றி மாற்றி காப்பியடித்து

மாட்டிக்கொள்வோம்

ஒருபோதும் பாஸ் ஆகியதில்லை


அவனும் நானும் சேர்ந்து

செய்த சாகசங்கள் அதிகம்


அவன் அதிகம் நம்பியது

என்னைத்தான்

நான் அதிகம் ஏமாற்றியது

அவனைத்தான்


அவனை மட்டுமல்ல

என் வகுப்பு நண்பர்கள் 

எல்லோரையுமே நான் 

ஏமாற்றியுள்ளேன்


என் வீட்டில் ஒரு

டைனோசர் இருப்பதாக

சொன்னதை அவர்கள்

நம்பாமல் இருந்திருக்கலாம்


தினம் என்னிடம்

டைனோசர் பற்றி இரகசியமாக 

விசாரித்தார்கள்

அதன் குறும்புகளைச் சொல்ல

அவர்கள் இரசித்தார்கள்


தொல்லை தாங்காது 

ஒருநாள்

டைனோசர் இறந்துவிட்டதாகச் சொல்லிவிட்டேன்


என்னைவிட அவர்கள்தான்

அதிகம் அழுதார்கள்


அதன் சமாதிக்கு அழைத்துப்போவதாய்ச்

சொல்லிச்சொல்லியே

வருடங்கள் நகர்ந்து

நாங்களும் நகர்ந்து

வளர்ந்தும் விட்டோம்


இன்றுவரை அந்தப் பொய்

என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது

என்றாவது ஒருநாள்

நாங்கள் சந்திப்போம்

அவர்கள் விசாரிப்பார்கள்

நான் மாட்டிக்கொள்வேன்


டைனோசர் அளவிற்கு

ஒரு சமாதியை நான்

இதுவரையில் கண்டதில்லை

நிச்சயம் நான் 

மாட்டிக்கொள்ளத்தான் போகிறேன



மாதம் ஒரு மலேசிய புத்தகம் 4

 

👉நடுகல்.காமின் 'மாதம் ஒரு மலேசிய புத்தகம் - 4'

'பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது' பா.அ.சிவத்தின் மொழிபெயர்ப்பு கவிதைகள்.


மலேசிய இலக்கியச் சூழலில் நாங்கள் இழந்துவிட்ட கவிஞர்களில் பா.அ.சிவமும் ஒருவர். இளம் வயதிலேயே  விபத்தில் சிக்கி காலமானார். இன்றும் கூட அவரது கவிதைகளும் மொழிபெயர்ப்புகளும் ஆங்காங்கே தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவரின் மறைவு பெரிய இழப்பாகத்தான் இன்றும் கருதப்படுகின்றது. வாழ்ந்து கொண்டே மறைந்த படைப்பாளிகளுக்கு மத்தியில் மறைந்த பின்னரும் தன் படைப்புகளால் பேசப்படும் படைப்பாளிகளில் ஒருவர் பா.அ.சிவம்.


இன்று இந்த கட்டுரையை உங்களைப் போலவே அவரும் எங்கிருந்தோ வாசிக்கிறார் எனவே நம்புகிறேன். அதோடு “நல்லாருக்குங்க தம்பி. இன்னும் நல்லா எழுதுங்க….” என வழக்கம் போல அவர் சொல்வதாகவே கேட்கிறேன்.......


நண்பர்கள் வாசித்து உங்கள் பார்வையையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்வோம்...


இணைப்பு

https://nadukal.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae-4/?sfnsn=wa

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்