பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 01, 2023

தீக்‌ஷா - புத்தக வெளியீடு

சமீபத்தில் திரு ஏ.கே.ரமேஷ் அவர்களின் தீக்ஷா புத்தக வெளியீட்டுக்கு சென்றிருந்தேன். (அவர் குறித்தும் அவரது புத்தகம் குறித்து முன்னமே எழுதியுள்ளேன்) வழக்கமான புத்தக வெளியீடு போல அல்லாமல், சமய நிகழ்ச்சியாகத் தொடங்கியது. கடவுள் வாழ்த்து, பெரிய புராணப்பாடல்கள் என ரம்மியமான சூழல் நிகழ்ச்சி முழுக்க நிறைந்திருந்தது.

திரு.சுப்பிரமணி சோணையா நூலாய்வை சிறப்பாக வழங்கினார். இன்னும் கூட அவர் பேசியிருக்கலாம் என தோன்றினாலும் தனக்கு கொடுத்த பணியைப் பலரும் கவரும் வண்ணம் செய்திருந்தார். ஒவ்வொரு கதைகளைக் குறித்து ஒரு தீர்க்கமானப் பார்வை அவரிடம் இருந்தது. குறிப்பாக பலருக்கு பிடித்த கதை அவருக்கு உவப்பாக இருக்கவில்லை. சிலரால் கவனிக்காத கதை மீது அவருக்கு நெருக்கமும் இருந்தது.

மலேசிய கல்வி அமைச்சிலிருந்து கவிஞர் சிவா வாழ்த்துரை வழங்கினார். மனதிலிருந்து பேசி பார்வையாளரைக் கவர்ந்தார் என்றே சொல்லலாம்.

இயல் பதிப்பக தோற்றுனர் திருமதி. பொன் கோகிலமும் பேசினார். ஒரு தேர்ந்த பேச்சாளர்க்குரிய பாணியில் பேசியவர், சமயம் சார்ந்தும் இன்றைய தலைமுறைகள் தொலைத்தும் தொலைந்தும் கொண்டிருப்பதைக் குறித்தும் பேசினார். 

நிறைவு உரையாக எழுத்தாளர் திரு. ஏ.கே.ரமேஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார். நன்றியென்னும் சொல்லைக் குறைவாகவும் நன்றிக்குரியவர்களின் பட்டியலை அதிகமாகவும் பேச்சில் சேர்த்திருந்தார்.

நிகழ்ச்சி முடிந்து புறப்படும் சமயம், திருமதி பிருந்தாவுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை நேரில் சந்திக்கின்றேன். என் கதைகளைத் தொடர்ந்து வாசிப்பதாகச் சொன்னார். மகிழ்ச்சி. எங்களது உரையாடலில் அவர் சமயம் சார்ந்து எடுக்கும் முன்னெடுப்புகளைப் பகிர்ந்தார். உண்மையில் பாராட்டத்தக்கவையாக அவை இருந்தன. குறிப்பாக ஏழு வயது மாணவர்கள் முதல் ஒவ்வொருவரை கதைகளை எழுதச் சொல்லியிருக்கிறார். அவர்களின் கதைகளையும் ஆவலோடு பகிர்ந்து கொண்டார். இளம் வயதிலேயே எழுத்தின் மீது மாணவர்களுக்கு ஆசை வரவைக்கும் யுக்தியல்லவா இது.

 இந்நிகழ்ச்சியில் அடிக்கடி ‘தமிழும் சமயமும் ஒன்றுதான்’ என்ற பேச்சு ஆங்காங்கே எழுந்த வண்ணம் இருந்தது. நாம் சொல்லிக்கொள்வது போல தமிழும் சமயமும் ஒன்றுதான் எனவும் ஒரு கோட்டுக்கு கீழ்தான் உள்ளன எனவும் இலகுவாக எடுத்துக்கொள்ளவோ அதனை எதிர்கொள்ளவோ முடியாது.

அதில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும். வெளியில் இருந்து வரும் சிக்கல்களைச் சொல்லவில்லை. உள்ளுக்குள்ளேயே ஏற்படும் சிக்கல்களை முதலில் நாம் கலைய வேண்டும். இதனையொட்டி அதிகமாக பேசலாம். ஆனால் இப்போது சின்ன உதாரணம் மட்டுமே கொடுக்கிறேன். ஒரு முருகா..! என்பார் இன்னொருவர் ஷண்முகா..! என்பார். இருவரும் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இரண்டையுமே வைத்துக் கொண்டு தமிழும் சமயமும் ஒன்றுதான் என சொல்ல முடியாது. பொங்கலா? புத்தாண்டா? என்ற குழப்பத்தை நான் சொல்லவேண்டுமா என்ன? 

நிறைவாக; நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலும் சமயப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் என தெரிந்து கொண்டேன். சமய நிகழ்ச்சிகளைத் தவிர்ந்து இவர்களை பிற இடங்களில் பார்ப்பது அரிது. இவர்களில் இருந்தும் எழுத்தாளர்கள் வெளிவர வேண்டும். இலக்கியத்தை வாசிக்கவும் எழுதவும் இவர்களும் தயாராகவேண்டும். மற்றவர்களையும் தயார்ப்படுத்த வேண்டும். ஏனெனில் அதுவும் அவர்களின் சமயம் சார்ந்த பங்களிப்பிற்கு அவசியம். 

தமிழுக்குச் சேர்ந்திருக்கும் சிறப்புகளில் ஒன்றுதான் நமக்கு கிடைக்கும் பல இலக்கியங்களில் அதிகம் இருப்பது கடவுவளை பாடியதும் கடவுளின் காதலுக்காக ஏங்கியதுமே. ஆனால் இன்று கடவுளை நோக்கிய புதிய குரல்கள் எழுவதில்லை. ஏனெனில் முன்னமே பாடிய பழைய குரல்களை யாரும் கண்டுக்கொள்வதில்லை. 

இது போன்ற நிகழ்ச்சிகள் வழி அக்குறை நீங்கும் என்ற அக்கறையில் இதனை எழுதுகிறேன்.

அன்புடன் தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்