பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 09, 2020

ஒத்திகை...


கைபேசி கேமராவை தயார் நிலையில் வைத்து விட்டான். எல்லோரையும் போல தானும் பிரபலமாக வேண்டும் என்பதுதான் சாமுவேலின் ஆசை.

சமீபத்தில் அதிகம் பிரபலமான ஒரு யூடியூப்பில் இருந்து அந்த ஐடியாவை எடுத்திருக்கலாம். மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்கிற சிந்தனையில் தன் முகநூல் நேரலையைத் திறந்திருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் அப்பா வந்துவிடுவார். கோவக்கார மனிதர் அவர்.

அவர் வந்ததும், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், சில காரணங்களால் (ஒரே காரணம்தானே!!) அவள் கர்ப்பமாகிவிட்டாள் என்றும் சொல்ல வேண்டும். அம்மாவிடம்  அப்பாதான் இந்த விபரத்தைச் சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த திட்டம்.

எல்லாவற்றையும் முகநூலில் பேசிக்கொண்டிருந்தான். சரியாக பேசி முடித்த சில வினாடிகளில் அப்பா அவனது அறைக் கதவைத் தட்டினார். கட்டை விரலை கைபேசி முகநூலில் காட்டிவிட்டு ஓடிச்சென்று கதவைத் திறந்தான்.

"என்னமோ தனியா பேசனும்னு சொன்னியே என்னது..?" என்றார். அப்பாவின் குரல் கம்பீரமாக இருந்தது. 

சாமுவேல், தன் காதலி கர்ப்பாகிவிட்டாள் என்று கூறிக்கொண்டே அப்பாவின் காலில் விழுந்தான். அப்பாவின் கண்கள் சிவந்தன. உடல் அதிர்கின்றது.

"என்னடா சொல்ற...?!" அந்த குரலில் உள்ள கோவத்தை வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை. தவறு நடந்து விட்டதாகவும் , அவர்தான் அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்றும் கண்களில் நீர்க்கசிய கெஞ்சுகிறான். அம்மாவிடம் அப்பாதான் நாசூக்காக இதனை சொல்ல வேண்டும் என்று விசும்ப ஆரம்பித்தான்.. (இது உலக நடிப்புடா சாமி).

அப்பா, அவசரப்படவில்லை. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். சூழலைப் புரிந்துக்கொண்டார். எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பாக ஆழ்ந்து மூச்சினை இழுத்துவிட்டார். மகனின் தோளில் கையை வைத்து அழுத்தமாக பிடித்தார். சாமுவேலுக்கு இப்போதுதான் பயம் வரத்தொடங்கியது. அப்பாவின் இந்த சாந்தம் அவனை ஏதோ செய்தது. அப்பா வாய் திறந்தார்.

"டேய் சாமுவேல்..... என் காதலியும் எப்படியோ கர்ப்பமாகிட்டாடா.... நீதான் அம்மாகிட்ட நாசூக்கா இதை எடுத்து சொல்லனும்...." 

சாமுவேல் விழி பிதிங்கினான். அந்த முகநூல் நேரலையில், கடைசியில் அவனுக்கு பதில் அவனது அப்பா பிரபலமாகிவிட்டார்.


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்