பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 05, 2026

- வரப்புயர .... -


வாசிப்பில்,
'அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்' கட்டுரைத் தொகுப்பு....
*******
இன்று வேலையில் கொஞ்சம் பாரம் அதிகமாகிவிட்டது. பல பெட்டிகளில் உள்ள பொருட்களை ஒரே ஆளாய் வண்டியில் ஏற்ற வேண்டியிருந்தது.

அது போதாதென்று கஸ்டமரின் வீட்டை தேடி கண்டுபிடிக்க படாத பாடு படவேண்டியதாய்ப் போயிற்று.

அவர்கள் சரியான முகவரியைக் கொடுக்கவில்லை. அதோடு அவர்கள் வெளிநாட்டினர். அவர்கள் ஒரு இடத்தில் இருக்க அவகளுக்கு நேர் எதிரான இடத்தின் முகவரியை அனுப்பியிருந்தனர். எப்படியோ பேசி அவர்களையும் அவர்களின் இடத்தையும் கண்டுபிடித்து பொருட்களை ஒப்படைத்துவிட்டேன்.

அடுத்த ஆடருக்கு ஆர்வமாய் காத்திருந்த சமயம்;

"நீ மட்டுமா வேலை செய்கிறாய் இதோ நானும் வந்துவிட்டேன் என் வேலையைச் செய்ய..." என்று வந்து பெய்த மழையில் என் வேலை அப்படியே நின்றது.

இன்றைய 'தார்கெட்' பாதிகூட அதன் இலக்கை அடையவில்லை.
சோர்ந்து போய் வீடு திரும்பினேன்.
மனைவி சூடா தேநீரை கலக்கி கொடுத்தார்.

சாப்பிட்டுவிட்டு, நேநீரைக் குடித்து கொண்டே என் அறைக்குள் நுழைந்தேன்.

மனதில் ஏதோ ஒரு சோகம் தொற்றிக்கொண்டது. அதை உற்சகப்படுத்த வேண்டுமே. உடனே புத்தக அலமாரியில் என் கைக்கு எட்டிய இடத்தில் இருந்த புத்தகங்களில் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தேன்.

என் உலகத்திற்கு என்ன ஆனது ஏன் இப்படியானது என யோசித்தபடி ஒரு புத்தகத்தை எடுத்தேன்.
'அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்' புத்தகம் கிடைத்தது.

அ.முத்துலிங்கம் படைப்புலகம் குறித்து 14 எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சுப்ரபாரதிமணியன் தொகுத்திருந்தார். நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருந்தார்கள்.

என் வாசிப்பின் ஆரம்பத்தில் சுஜாதாவிற்கு பின் அதே சுவாரஸ்யத்தோடு வாசித்த படைப்புகள் அ.முத்துலிங்கத்தின் படைப்புகள்தான். அவரின் எழுத்துகள் அவ்வளவு பிடிக்கும் எனக்கு.

கதைக்கும் கட்டுரைக்கும் இடையில் அவர் எதையும் எடுத்து சொல்லும் விதம் அபாரமாக இருக்கும். வாசித்து முடிக்கும் வரை அது எந்த வடிவத்தில் சொல்லப்பட்டிருக்கும் என யூகிக்க முடியாது.

இத்தனை அனுபங்கள் அவருக்கு கிடைத்திருக்கிறதே என்கிற ஆச்சர்யப்படுவதைவிட, ஒவ்வொன்றையும் எழுத்துகளாக எழுத்து வைக்கின்றாரே என்கிற பிரமிப்பு இருக்கவே செய்கிறது.

நான் என் அன்றாடங்களை பதிவுகளாக எழுதுவதற்கு அவருமே ஒரு காரணம்தான்.

அவரின் கதைகள் எப்போதுமே வாசிக்க ஏற்றவை. அது வாசகனுக்கான செய்தியைச் சொல்லுபவை. அழுவதற்கு முன் நம்மை அறியாமலேயே நம்மை சிரிக்க வைப்பார். அழு கண்ணீர் வெளியில் வந்து விழுவதற்கு முன்னே நம்மை சிரிக்க வைப்பார்.


இன்று வேலையில் எனக்கு கிடைத்த அனுபவத்தில் இருந்து கற்க வேண்டிய பாடத்தை என்றோ ஒருநாள் அவர் கதையில் வாசித்திருந்தேன். அவரின் முழு தொகுப்பில் தேடலானேன்.

ஆரம்பத்தில் வாங்கிய அவரது தனித்தனி சிறுகதைத் தொகுப்புகளை நண்பர்களுக்கு கொடுத்து விட்டு முழு தொகுப்பையும் (சிறுகதைகள்)/வாங்கியிருந்தேன். அதில் நான் வாசித்து எழுதிய குறிப்புகள் இருக்காது. பழைய தனித்தனி தொகுப்புகளில்தான் குறிப்புகள் இருக்கும்.

சரி வாசித்தது மனதில்தானே இருக்கும் என்ற பேராசையில் முழு தொகுப்பில் ஒவ்வொரு கதையாக ஒரு பார்வை பார்த்தேன்.

கிடைத்தது. அந்தச் சிறுகதையின் தலைப்பு 'ஒரு சாதம்'.

இன்று மீண்டும் வாசிக்கையில் முன்னமே வாசித்த அனுபவத்தைத் தள்ளி வைத்தே வாசிக்க முயன்றேன். தலைப்பே வித்தியாசமாக இருப்பதாக உணர்த்திய முதல் வாசிப்பின் மனநிலையை மீண்டும் உருவாக்கி கொண்டேன்.

சிறுகதையில் ஓரிடத்தில் அ.முத்துலிங்கம் சொல்வார், அரசனை வாழ்த்த நினைத்த ஔவை இப்படி சொல்லுவார்;

வரப்புயர, நீர் உயரும்
நீர் உயர, நெல் உயரும்
நெல் உயர, குட் உயரும்
குடி உயர, கோல் உயரும்
கோல் உயர, கோன் உயர்வான்'

'ஒருதுளி காரியம் எப்படிப் பிரமாண்டமான தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதற்கு இது சான்று.

'கேயாஸ் தியரிக்கும்' இதற்குமான தொடர்பையும் எழுத்தாளர் இணைத்து இலகுவாக புரியும்படி கதையில் சொல்லியிருப்பார்.

இப்போது மனதில் பளீர் என படுகிறது. சமீப காலமாக 'கோன் உயரவேண்டும்' என்றே அதிகம் சிந்தித்திருக்கிறேன். அதாவது விளைவுகளைப் பற்றியே சிந்தித்திருக்கிறேன்.

ஆனால் எல்லாவற்றுக்கும் 'வரப்புயர' வேண்டுமே என்கிற பளீர்தான் அது. மனம் இப்போது இன்னொரு கோணத்தில் சிந்திக்கிறது.

'ஒரு சாதம்' என்கிற கதையில் அதன் தலைப்பு தரும் அதிர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் உழைக்க தயாராய் இருக்கும் மனிதனுக்கான இடம் உயர்ந்து கொண்டே போகும் என்கிற நம்பிக்கையையும் கொடுக்கும் சுவாரஸ்யமான கதைதான்.

இந்தச் சனிக்கிழமை இரவை நீளமாக்க கையில் எடுத்த அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் தொகுப்பை எடுத்திருக்கிறேன். மொத்தம் 14 எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம் குறித்து எழுதிய கட்டுரைத் தொகுப்பு என குறைவாகச் சொல்லிவிட்டேன்.

மொத்தம் 15 கட்டுரைகள் உள்ளது. புத்தகத்தில் இல்லாத அந்தப் பதினைந்தாவது கட்டுரையைத்தான் நீங்கள் இப்போது வாசித்து முடித்தீர்கள். என்னவொன்று இது அவரது படைப்புலகில் இருந்து என்னைப் பார்க்கவில்லை. என்னுலகில் இருந்து அவரைப் பார்த்திருக்கிறது.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்