பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2023

குறுங்கதை எழுதும் வகுப்பு (வகுப்பு 3) பகுதி 2

 பகுதி 2 – தொடங்குகிறது

 

                               - சொல்லிச்சொல்லி எழுதச் சொல்லுவோம் 2 –

 

மூன்றாம் வகுப்பையொட்டிய பதிவின் இரண்டாம் பகுதியில் சந்திக்கின்றோம். கதைகளை வாய்விட்டு வாசிக்கும் போது அக்கதை நமக்கு கூடுதல் புரிதலைக் கொடுப்பதாகச் சொன்னேன். அதேபோல புதிய எழுத்தாளர்களும் கதைகளை எழுதும் போது வாய்விட்டு சொல்லிச்சொல்லி எழுதுவது அவர்களுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும் எனவும் பார்த்தோம்.

எங்களின் குறுங்கதை எழுதும் வகுப்பில் பலரும் அவர்களில் கருத்துகளை அதைனையொட்டி பகிர்ந்து கொண்டார்கள்.

இன்றைய வகுப்பில் பயன்படுத்திய இரண்டாவது குறுங்கதையைப் பார்ப்போம். இது ஜென் கதை. சிறுவயதில் இருந்து ஜென் கதைகள் மீதும் குறிப்பிட்ட வயது வந்ததும் ஜென் கவிதைகள் மீதும் எனக்கு ஆர்வம் எழுந்தது. இந்தக் குறுங்கதை வகுப்பிற்காக இரு துறவிகள் பேசிக்கொள்ளும் கதையை தேர்வு செய்தேன். இது குறுங்கதையா? ஜென் துறவிகள் குறுங்கதைகள் எழுதியிருக்கிறார்களா? என்ற கேள்விகள் எழுந்தன. 

இதற்கு முன்னமே கூட நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அப்படியான கேள்விகள் எழுந்தன. ஜென் கதைகளை நம்மால் சுலபமாக குறுங்கதை வடிவத்தில் கொண்டுவர முடியும். அதோடு; அங்கிருந்து ஓர் உரையாடலையும் நம்மால் தொடங்க முடியும். எங்கள் குறுங்கதை எழுதும் வகுப்பில் இவற்றை குறித்து மேலும் விரிவேக பேசுவேன்.

இன்று நான் பகிர்ந்த ஜென் கதையில் ; மரணத்தருவாயில் இருக்கும் ஒரு துறவியிடம் இன்னொரு துறவி ஏதும் உதவி வேண்டுமா என கேட்கிறார். அதற்கு அவர்; நான் தனியாகத்தாமே வந்தேன் தனியாகத்தானே போகவேண்டும் என்கிறார். அதுவரை அது வழக்கமான ஒரு கதையாக இருக்கிறது. உண்மையில் நாமே பல முறை இப்படி பேசியிருப்போம் தானே. தனியாக வந்தோம் தனியாகத்தானே போகப்போகின்றோம் என.

அதற்கு அந்தத் துறவி கொடுக்கும் பதிலில்தான் இக்கதை குறுங்கதை வடிவத்திற்குள் வந்துவிடுவதாக உணர்கின்றேன். இவர் என்ன சொல்கிறார் என்றால் இங்கு யாரும் வரவும் இல்லை யாரும் போகவுமில்லை. அப்படி நினைப்பது பிரமை. வருவதும் போவதும் இல்லாத பாதை ஒன்று இருக்கிறது என்கிறார். இதை வாசித்ததும் நமக்கும் ஒரு சந்தேகம் வருகிறது. இதுவரை நாம் நம்பியிருந்த கற்பிதமான தனியாக் வந்தோம் தனியாக போவோம் என்பது தன்னை மறுத்து இன்னொரு இடத்துக்கு போகிறது; அவ்விடம் , இங்கு யாரும் வரவுமில்லை போகவுமில்லை என நம்மை சிந்திக்க வைக்கிறது.

இச்சிந்தனையை நாம் அப்படியே பல்வேறு கேள்விகளாக வார்த்து எடுக்கலாம். உடல் அழிகிறது ஆத்மா அழிவதில்லை; ஆத்மா ஓர் சுழல் வடிவில் முடிவில்லாத வட்டத்ததில் சுழல்கின்றது; மறுபிறவி என்பது என்ன; இப்படியாக பலவற்றை நம்மால் கேள்வியாக்கி அதற்கான பதிலை நோக்கி பயணிக்க இக்கதை உதவுகின்றது. அதிலும் இது குறுங்கதை வடிவத்தில் வைத்து யோசிக்கும் போது அது நமக்கு சாத்தியமாகிறது.

இக்கதையைக் குறித்து வகுப்பு பங்கேற்பாளர்களிடம் சில கேள்விகள் எழுந்தன. ஒவ்வொன்றுக்கும் வகுப்பிலேயே பதில் கொடுத்துவிட்டேன்.

மூன்றாவது குறுங்கதையாக; சந்தோஷ் நாராயணன் எழுதிய ‘பொம்மைகள்’ குறுங்கதையைக் குறித்து வகுப்பில் பேசினேன்.

நான்கு பத்திகளில் இக்கதை முடிந்துவிடுகிறது. முதல் பத்தி தன் அப்பாவின் மார்புக்கு நேராக பொம்மைத் துப்பாக்கியை காட்டி விளையாடுகிறது குழந்தை.

இரண்டாம் பத்தியில் அந்த அப்பா யார், என்ன வேலை செய்கிறார், இக்கதையில் திருப்பத்தை அமைக்கப்போகும் காரணம் என்ன என்று நமக்கு தெரிந்துவிடுகிறது. அதாவது சீனா விளையாட்டு துப்பாக்கிகள் என்கிற பெயரில் நிஜ துப்பாக்கிகளை இந்தியாவிற்குள் அனுப்பிவிட்டன. அவை இன்றோடு செயல்படப்போகின்றன என தனது இன்டெலிஜென்ஸ் துறையினர் மூலமாக அப்பா தெரிந்து கொள்கிறார்.

மூன்றாம் பத்தியில் தன் மகன் தன் மார்பு மீது குறி வைத்திருக்கும் விளையாட்டு துப்பாக்கியை அப்பா பார்க்கிறார்.

நான்காவது பத்தியில், அந்தத் துப்பாக்கியில் மேட் இன் சீனா என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

அவ்வளவுதான் குறுங்கதை முடிந்துவிட்டது. ஆனால் இக்கதையின் பின்னணியில் ஒரு துயர்மிகுந்த உண்மை ஒன்று இருக்கிறது.  

உங்களில் பலருக்கும் அது தெரிந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட நாட்டில் பல குழந்தைகள் ஊனமாக இருக்கிறார்களாம். அது ஒரு சூழ்ச்சியினால் நடந்தது. மக்களில் யாரும் வருங்காலத்தில் தங்களுடன் யுத்தத்தில் ஈடுபடக்கூடாது போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அங்குள்ள சாலைகளில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை கொட்டுகிறார்கள். அதனை ஆசையாசையாய் விளையாட எடுத்து செல்கிறார்கள் சிறுவர்கள். கொஞ்ச நேரத்தில் அந்த விளையாட்டு பொருட்கள் வெடிக்கின்றன. அந்த வெடிவிபத்தால் (சூழ்ச்சியால்) பல சிறுவர்கள் கை கால்களை இழக்கின்றார்கள்.

கண்பார்வையைப் பறிகொடுக்கின்றார்கள். கேட்கும் திறனை இழக்கிறார்கள். நாம் வாழும் உலகத்தில் ஏதோ ஒரு நாட்டில் இப்படியாக ஒரு கொடுமை நடக்கிறது.

நானும் எனது குறுங்கதை புத்தகத்தில் இப்படியான போரில் பாதிப்புக்குள்ளாகும் மக்களின் குரலாகவும் போர்ச் சூழலை மையப்படுத்தியும் சில குறுங்கதைகளை எழுதினேன். அது பரவலான வாசிப்பிற்கு சென்றது. அந்த வரிசையில் ஆசிரியை உமாதேவி அவர்களும் போர்ச்சூழலை மையப்படுத்தி சில குறுங்கதைகளை எழுதியிருந்தார்.

ஒரு சம்பவத்தை குறுங்கதையாக்கி அதனை வாசிக்கையில் இவ்வுலகத்தில் அதிகார வர்க்கம் செய்யும் கொடுமைகளில் ஒன்றைக் குறித்து நம்மை சிந்திக்க வைக்கிறது பொம்மைகள் என்னும் இக்கதை.

வகுப்பில் இக்கதையைக் குறித்தும் அவ்வாறு நடந்த சில போர்க்குற்றங்களைக் குறித்தும் பேசும் போது பலர் பேச்சற்று இருந்தார்கள். ஓர் எழுத்தாளனாக நமது எழுத்து குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டிய அவசியத்தைக் குறித்து பேசினேன்.

    நான்காவது குறுங்கதையாக எனக்கு பிடித்த கவிஞர் பெருந்தேவியின் ‘பக்கத்து வீடு’ என்னும் குறுங்கதை.           

இரண்டே பத்திகளில் இக்கதையினை எழுதியிருக்கிறார். இப்படி குறிப்பிட்டுச் சொல்வதற்கு காரணம் என்னவெனில் இக்கதையை அவர் எழுதிய விதம்தான்.

    முதற்பத்தியில் வாசகர்களிடம் ஒன்றை சொல்லிக்கொண்டே தனது அடுத்த பத்தியில் அதுவல்ல என்று இறங்கி வந்து, கடைசி ஒரு வரியில்; ஒரு வரியில் என்று கூட சொல்ல வேண்டாம். ஒரு சொல்லில் முழு கதையும் இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார்.

இக்கதையை மேலோட்டமாக வாசித்தால்; பக்கத்து வீடு சத்தமாக இருக்கிறது என புகார் கொடுத்தவரே தன் வீட்டை காலி செய்யும்படி ஆகிவிட்டது என இருக்கும். ஆனால் பெருந்தேவியின் கதைகள் அதன் மேல் போர்த்தியிருக்கும் எளிமையைக் கொஞ்சம் விலக்கிவிட்டு பார்த்தால் நமக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒருங்கே கொடுக்கும்.

    ஒரு பேய்க்கதையின் தொடக்கமாகவே முதல் பத்தியை எழுத்தாளர் எழுதியிருக்கிறார். ஆனால் இது பேய்க்கதையா என்றால் இல்லை. ஆனால் கடைசி வரியில் ‘காவல்துறையிடம்’ என வரும் இடத்தில் ‘சாமியார்/போதகர்’ என எழுதியிருந்தால் இக்கதை அதன் சுவை குன்றாத பேய்க்கதையாக அமைந்திருக்கும்.

இப்போது இக்கதையில் இருக்கும் மூன்றாவது சாத்தியத்தைப் பார்ப்போம்; இதுவரை இன்னொரு வீடாக நம்மை வாசிக்க வைத்தவரேதான் பிரச்சனைக்கு காரணம். அவர்ன் வீட்டில்தான் அந்த சத்தகங்கள் எழுகின்றன. அவர்தான் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கிறார். அதனால்தான் கடைசியில் அவரே ‘நான் உடனடியாகக் காலி செய்யாவிட்டால்’ என்கிறார். 

இக்கதையில் இருக்கும் ‘நான்’ என்னும் சொல்லை கடைசியில் இல்லாமல் வேறு இடத்தில் அதாவது ‘நான் புகார் கொடுத்தேன்’ என வரும்படி எழுதியிருந்தால்; உண்மையில் இது பாதிக்கப்பட்டவரின் குரலாக மாறியிருக்கும்.

ரொம்பவும் கவனமாக இக்கதை எழுதப்பட்டிருப்பதை அதன் ஒவ்வொரு வரியிலும் நம்மால் உணர முடிகிறது. இப்படி இக்குறுங்கதையின் பல்வேறு சாத்தியப்பாடுகளை வகுப்பில் விளக்கினேன். நாம் எழுதும் கதைகளில் ஒவ்வொரு வரியும் எவ்வளவு முக்கியம் என; அதிலும் குறிப்பாக குறுங்கதைகளுக்கு ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு முக்கியம் என இக்கதையின் மூலம் வகுப்பினர்களுடன் பேசினேன்.

அதன் பின், வகுப்பில் நான் எழுதிய குறுங்கதைத் தொகுப்பு புத்தகத்திலிருந்து , ‘அங்கே ஓரிடம் வேண்டும்’ என்ற கதையையும் ‘கடவுள் VS சாத்தான்’ என்ற கதையையும் பேசும்படி கேட்டுக்கொண்டதால் பேசினேன். அதனைப்பற்றி இங்கு நான் எழுதப்போவதில்லை. எப்படி மற்ற எழுத்தாளர்களின் கதைகளைக் குறித்து நான் பேசி எழுதுகின்றேனோ, அப்படி மற்றவர்கள் யாரும் என் குறுங்கதைகளை வாசித்து பேச வேண்டும் என ஆசைப்படுகின்றேன்.      

 இதுவரையில் எங்கள் ‘குறுங்கதை எழுதும் வகுப்பின்’ மூன்றாம் வார வகுப்பில் நடந்தவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டேன். அடுத்தடுத்த வாரங்களுக்கு பின் வகுப்பின் பங்கேற்பாளர்களும் அவர்களின் கதைகளை அவர்களே எழுதுவார்கள். எழுத வேண்டும்.

 உங்கள் யாருக்கும் எங்கள் குறுங்கதை எழுதும் வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் தாராளமாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

 

நாம் சேர்ந்தே எழுதுவோம்.

எழுதுங்கள்..

அதுதான் ரகசியம்..

அதுவேதான் தியானம்…

அன்புடன் தயாஜி.

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்