பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 17, 2023

"அப்பறம்.... நாம எப்ப சந்திக்கலாம்...."


சகோதரர் கவிஞர் மு.மணிக்குமாரை சந்தித்தேன். சமீபத்தில் நடந்த 'உளமுற்ற தீ' புதுக்கவிதைகள் புத்தக வெளியீட்டில் கடைசி வரை இருந்து புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள இயலவில்லை.

ப.இராமு அறக்கட்டளை வெளியீடு செய்திருக்கும் இரண்டாவது தொகுப்பு புத்தகம் இது.  இம்முறை புதுக்கவிதைகளைத் தொகுத்திருக்கிறார்கள். இது போன்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கது. நன்கு அறியப்பட்ட கவிஞர்களின் கவிதைகள் இதில் இருந்தாலும் பல புதியவர்களுக்கு இலக்கிய முகவரியாகவும் இத்தொகுப்பு அமைந்திருக்கிறது.

இப்புத்தகத்தைத் தவறவிட விரும்பப்பில்லை. முயன்றேன். கவிஞர் மு.மணிக்குமார் உதவினார். வெறுமனே புத்தகத்தைக் கேட்டார்; கொடுத்துவிட்டு செல்வோம் என்று நினைத்திடாமல் எங்கள் சந்திப்பு உரையாடலாகத் தொடர்ந்தது. நல்லவேளையாக கவிஞருக்கு அதற்கான நேரம் கிடைத்திருந்தது.

அடிக்கடி சந்தித்துக்கொள்ளாவிட்டாலும் சந்திக்கும் போதெல்லாம் அன்பு பாரட்டுகின்றவர்களின் கவிஞரும் ஒருவர். பார்த்த உடனே உடல் நலம் குறித்து விசாரித்தார்.

மருந்துகளால் உடல் பலவீனமடைந்து வருவதால், இப்போது மருந்துகளைத் தவிர்த்து தியானம் பிரார்த்தை போன்ற அகம்சார்ந்த தேடல்களில் ஈடுபட்டுள்ளதைச் சொல்லி சிரிக்கலானேன். அவரும் சிரித்தார்.  இதனைக் குறிப்பிட்டு சொல்வதற்கான காரணம், பலருடனான உரையாடல்கள் சிரித்த முகமாய்த் தொடங்கி வெறுக்கும் முகமாய் முடிந்த கதைகளெல்லாம் நமக்கு தெரியும்தானே.

'உளமுற்ற தீ' கவிதைத் தொகுப்பு குறித்த என் முதற்கட்டப் பார்வையைப் பறிமாறிக்கொண்டேன். நேர்த்தியான வடிவமைப்பு, அழகான முகப்பு, கவிதைகளுடன் கவிஞர்களின் அறிமுக குறிப்பும் புகைப்படங்களும் இருந்தது பாராட்டத்தக்கது. ஏனெனில் பல கவிஞர்களின்/ எழுத்தாளர்களின் குறிப்புகள் (புகைப்படங்கள் உட்பட) ஆவணப்படுத்தப்படாமல் இன்று இல்லாமலேயே போயிருக்கின்றன.



பிறகு புத்தகத்தை வாசித்து என் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்றைய சந்திப்பில் கவிஞருடன் மலேசிய இலக்கியம் குறித்து மேலோட்டமாக பேசினேன். முன்னமே அவர் ஒவ்வொன்றையும் உள்வாங்கியிருந்தது அவரது பேச்சில் தெரிந்தது.

கடந்த ஆண்டு ஐந்து எழுத்தாளர்களின் முதல் புத்தகங்களை வெளியிட காரணமாக இருந்த மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் நிறுவனர் (அகிலம் நீ) பொன் கோகிலம் குறித்தும் பேசினோம். குறுகிய காலத்தில் பல இளம் எழுத்தாளர்களை அவர் அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில் எங்கள் இருவருக்கும் மாற்று கருத்து இல்லை. 

இதன் வழி தங்களின் எழுத்துலக அடையாளத்தைத் தொடங்கியவர்கள் தொடர்ந்து தங்களின் அடையாளத்தைக் காப்பாற்ற அவர்களின் தொடர்ந்த எழுத்து பயணம் மட்டுமே உதவும் என்பதிலும் மாற்று கருத்து இல்லை. பொன் கோகிலத்தின் தலைமைப்பண்பு பற்றி குறிப்பிடும் போது, குறுகிய இடைவெளியில் பலரை முன்னிலைப்படுத்தியிருக்கும் பண்பு பாராட்டக்குரியது என்றார். உண்மைதான் அவர் முகம் மட்டுமே இருக்க வெண்டிய பல இடங்களில் பலரின் முகங்களைக் காண்பதற்கும் தனித்தனி ஆளுமைகளாக அவர்கள் வளர்வதற்கும் அதுதானே தொடக்கப்புள்ளி; இதுதானே அவர்களுக்கு ஏற்ற பள்ளி.

அப்படியே 'வல்லினம்' ம.நவீன் ,  கே.பாலமுருகன் என இன்னும் சிலரின் இலக்கிய செயல்பாடுகள் குறித்து கருத்துகளைப் பறிமாறிக்கொண்டோம். யோசிக்கையில் எப்போதுமில்லாத அளவிற்கு இன்றைய இளைஞர்கள் வாசிப்பிலும் எழுத்திலும் ஈடுபாடு காட்டுவதற்கும் தத்தம் கருத்துகளைப் பொதுவெளியில் வைப்பதற்குமான நகர்வுகளுக்கு இவர்கள் எல்லோரும் முக்கியமான காரணம் என்றும் சொல்லலாம்.

எனது இன்றைய புத்தக விற்பனைத் தொழிலையும் என் கடந்த கால  வனொலி அறிவிப்பாளர் பணியைப் பற்றியும் பேசினோம். என் வாழ்வில் பசுமையான பல நினைவுகளையும் பல துரோகங்களையும் கொண்டதை எப்படி மறப்பது. இப்போது கூட எனக்கான இடம் இன்னமும் எனக்காக இருப்பதாகவே தோன்றுகிறது. 

இன்னும் பலவற்றைப் பேசினோம். இன்றையப் பொழுதை நல்லப் பொழுதாக அவரின் வருகை மாற்றியிருந்தது. வாய்ப்பிருந்தால் சொல்லுங்க அடிக்கடி சந்திக்கலாம் என்றார்; இதைவிட நமக்கு வேறு என்னங்க வேணும்.

எனக்கு அவர் 'உளமுற்ற தீ' புத்தகத்தையும் அவரின் கவிதைத் தொகுப்புகளான 'விரல் நுனியில் விடியல் கனவுகள்', 'எனது இன்னொரு நான்' என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் கொடுத்தார். 

ஒருவரிடமிருந்து புத்தகத்தை பரிசாகப் பெற்றால் அவருக்கும் ஒரு புத்தகத்தைப் பரிசாகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. நானும்  எனக்கு பிடித்த எழுத்தாளரான அகரமுதல்வனின் இரண்டாம் லெப்ரிணண்ட் சிறுகதைத் தொகுப்பினை அவரிடம் கொடுத்து அதற்கான காரணத்தையும் பகிர்ந்தேன்.

மனதிற்கு பிடித்தவற்றை பிடித்தவர்களோடு உரையாடுவதுதான் எத்துணை இன்பமானது. அப்பறம் நாம எப்ப சந்திக்கலாம்.....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்