பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 09, 2022

- 42 குறுங்கதைகள் -

- 42 குறுங்கதைகள் -

இயல் பதிப்பகத்தின் நூலிழை குழு சந்திப்பின் மூலமாக ஆசிரியர் ப.பத்மநாதனை தெரியும். அவருக்கும் என்னை அப்போதுதான் தெரியும் என நினைக்கிறேன். கதைகள் குறித்த காலந்துரையாடல் வழியும் கதைகள் குறித்து நான் முன்வைக்கும் கருத்துகள் வழியும் இருவரும் நட்பானோம். 

ஒவ்வொரு முறையும் அழைத்து பேசும் போது ஒவ்வொரு கதைகள் குறித்து பேசுவார். கதைகளுக்கான கருவைப் பகிர்ந்துகொள்வார். சிறுகதைகளை எழுதி அது பற்றிய உரையாடலை திறந்த மனதுடன் எதிர்க்கொள்வார். 

இவ்வாண்டு சிறுகதை தொகுப்பு கொண்டுவர திட்டம் வைத்திருந்தார். அதையொட்டிய முன் வேலைப்பாடுகளையும் செய்யத்தொடங்கியிருந்தார். அப்போதுதான் குறுங்கதை பயிலரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதுவரை சிறுகதைகள் குறித்த கலந்துரையாடலில் பங்கெடுத்த நான் குறுங்கதை பயிற்றுனராக ஆனேன். தொடர்ந்து குறுங்கதைகளின் சாத்தியக்கூறுகளை முயல்வதாலும் ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல;101 குறுங்கதைகள்’ என்ற குறுங்கதைத் தொகுப்பை நான் வெளியிட்டிருந்ததும் இதற்கான ஆதாரக்காரணங்கள்.


இவர் மட்டுமின்றி குறுங்கதை பட்டறையில் மேலும் சிலர் பங்கெடுத்துக்கொண்டார்கள். குறிப்பாக ஆசிரியர் உமா தேவியையும் சொல்லலாம்; ஏனெனில் அவரும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட திட்டமிட்டு பின்னர் குறுங்கதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். அவர் குறித்து அடுத்த முறை பேசுகிறேன்.

குறுங்கதைகள் பட்டறையில், குறுங்கதைகள் எழுத பயிற்சி கொடுப்பதற்கு முன்பாக அதிலிருக்கும் சுதந்திரத்தைப்பற்றி பேசினேன். அதோடு முக்கியமான எழுத்தாளர்களின் முக்கியமான குறுங்கதைகள் குறித்தும் அது எந்த இடத்தில் குறுங்கதையாக மாறுகிறது என பேசுவேன். அவை; பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகத்தையும் எழுத வேண்டும் என்ற ஆரவத்தையும் கொடுத்தது.

பலர் எழுதினார்கள். பலவிதமான குறுங்கதைகள் வந்தன. வழக்கம் போலவே ‘கதைகள்’ தவிர்த்து தங்களின் அனுபவங்கள், அறிவுரைகள், சம்பவங்கள் என வந்தன. அதிலிருந்து மெல்ல மெல்ல குறுங்கதைக்குள் அவர்களை அழைத்து வந்தோம். 

குறுங்கதைகளில் இருக்கும் பலமும் பலவீனமும் அது கொடுக்கும் சுதந்திரம்தான். என்னவெல்லாம் எழுதலாம் என்கிற கேள்வியும், என்னவெல்லாம் எழுத முடியும் என்கிற பதிலும் குறுங்கதை எழுத ரொம்பவும் அவசியம். அதற்கு குறுங்கதைகளைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும். ‘சின்ன கதைதானே அதிலென்னத்தை சொல்லிடப் போறாங்க’ என மேம்போக்காக நினைப்பவர்களைக் குறுங்கதைகள் ஏமாற்றிவிடுகின்றன. ஒரு சொல், ஒரு வரி, கதைகள் மீதான முழு பார்வையையும் மாற்றிவிடும் என்பதில் எச்சரிக்கை வேண்டும். அதே போல வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகள் மட்டுமே குறுங்கதைகளைக் காப்பாற்றிவிடாது.

ஆசிரியர் ப.பதமநாதனின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஆசிரியர் பணிகளுக்கு இடையே எழுதினார் என்றெல்லாம் அவரை என்னால் பாராட்ட முடியாது. ஆனால் தொடர்ந்து எழுதினார், விமர்சனங்களை எதிர்க்கொண்டார், வாசித்தார். சில சமயங்களில் பின்னிரவுக்கெல்லாம் புலனத்தில் செய்தி வரும். “கதையை அனுப்பியிருக்கேன் வாசிக்கவும்..”. 
கதைகளில் விமர்சனங்கள் வழி நான் கொடுக்கும் சில மாற்றங்களை அவரால் பகுத்துப்பார்த்து ஏற்றுக்கொள்ள முடிந்தது. தன்னை ஓர் ஆசிரியர் என்கிற இடத்தில் வைக்காமல், எழுத்தாளர் என்ற இடத்தில் வைத்து உரையாடுவார். அவரிடம் கேள்விகள் இருந்தன, குழப்பங்கள்  இருந்தன, தேடல்கள் இருந்தன. எல்லாவற்றும் மேலாக “நான் நல்லா எழுதறேனா?” என்கிற பொறுப்பும் இருக்கவே செய்தது.

எழுத்தில் நகைச்சுவைகளைக் கொண்டு வந்து வாசிப்பாவர்களை சிரிக்க வைப்பது அத்தனை எளிதல்ல. தொலைக்காட்சியில் நாம் பார்த்து சிரிக்கும் நகைச்சுவைக் காட்சிகளைப் போல புத்தகத்தில் வாசிப்பின் வழி நம்மை சிரிக்க வைப்பது இயலாது. முன்னதில் காட்சிகள் நகர்கின்றன, பின்னணி இசை, நடிகர்களின் பாவணை என பல அம்சங்கள் உள்ளன.
ப.பத்மநாதனின் குறுங்கதைகளில் நகைச்சுவைகளைப் பல இடங்களில் கையாண்டும் வெற்றியையும் நெருங்கியிருக்கிறார். சில தலைப்புகள் நமக்கு எதிர்ப்ப்பார்ப்பைக் கொடுக்கின்றன. அதோடு நாம் ஏமாந்துவிடாமல் நிற்கின்றன.

இது ப.பத்மநாதனின் ’42 குறுங்கதைகள்’ புத்தகம் குறித்த விமர்சனம் அல்ல; ஓர் எளிய அறிமுகம் மட்டுமே. 

ஏனெனில்;

இன்று (09/10/2022) ஶ்ரீ ஞானானந்த புரம், தெலுக் இந்தானின் அவரது நூல் வெளியீடு உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். அதோடு இயல் பதிப்பகம் வெளியிட்ட ஆசிரியர் ப.பத்மநாதனின் ‘42 குறுங்கதைகள்’, ஆசிரியர் உமாதேவியின் ‘அப்பாவின் கைக்கடிகாரம் – குறுங்கதைத் தொகுப்பு, சமூக & சமய ஆர்வளர் ஏ.கே. ரமேஷின் ‘தீக்ஷா’ சிறுகதைகள், ஆசிரியர் சுமத்ரா அபிமன்னனின் ‘அப்பாவின் அம்மா’ சிறுகதைகள், இளம் எழுத்தாளர் யோகாம்பிகையின் ‘கரு’ சிறுகதைகள் அடங்கிய ஐந்து புத்தகங்களையும் குறைந்த விலையில் வாங்கலாம்.

விரைவில் ஐவரின் புத்தகங்கள் குறித்த என பார்வையையும் பகிர்வேன்; அதற்கு முன் நீங்கள் இவர்களின் படைப்புகளை வாசித்திருந்தால் அது பற்றிய உரையாடலுக்கு அது வழிவகுக்கும்.

இவை நல்ல கதைகளா இல்லையா என்பதை நாம்தான் வாசித்து உரையாடி கண்டுகொள்ள வேண்டும்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்