பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 02, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘சிறு கதை – சிறுகதைகள் குறித்த கட்டுரை’

புத்தகவாசிப்பு_2021 ‘சிறு கதை – சிறுகதைகள் குறித்த கட்டுரை’

தலைப்பு – ‘சிறு கதை – சிறுகதைகள் குறித்த கட்டுரை’

வகை – கட்டுரை தொகுப்பு

தொகுப்பு – எஸ்.செந்தில்குமார்

வெளியீடு – எழுத்து பிரசுரம்

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற முழுமுதல் முடிவாக சிறுகதையை அணுகுவது இப்போது சாத்தியமில்லை. தொடர்ந்து புது முயற்சிகளை பலர் செய்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒன்று மாதிரி இன்னொன்று இருப்பதில்லை. ஆனால் அதனுள் கதைக்கான தேவை என்பது இருக்கவே செய்கிறது. அத்தேவைதான் இன்னமும் சிறுகதைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

சிறுகதைகளை ஒட்டிய பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் புத்தகம். ஒரே கேள்விக்கு பலர் பதில் கொடுக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் சிறுகதைகளைப் பற்றிய தலைப்பு கொடுக்கப்பட்டு கட்டுரையாக வந்துள்ளது. பதினெட்டு படைப்பாளர்களின் கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளது. சில பக்கங்களில் முடியும் சிறுகதையின் தாக்கம் எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைகின்றது என்பதை இக்கட்டுரைகள் எடுத்துரைத்திருக்கிறார்கள். 

ஒவ்வொருவரும் சிறப்பாகவே எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து எனக்கு நெருக்கமான சில கட்டுரைகளை சுருங்கக் கூற நினைக்கின்றேன். 

‘தொடக்கக்கால தமிழ்ச்சிறுகதை’ என்ற தலைப்பில் சு.வேணுகோபால் நீண்ட கட்டுரையைக் கொடுத்துள்ளார். கட்டுரை எழுதுவதற்கு அதற்கான தரவுகள் எத்தணை அவசியம் என்பதனை இக்கட்டுரை வழி அறிய முடிகின்றது. இவற்றையெல்லாம் நினைவில் இருந்து சொல்கிறாரா? குறிப்புகளை வைத்திருக்கிறாரா என தெரியவில்லை. பிரமிப்பைக் கொடுக்கவே செய்கின்றது. சாமுவேல் பவுல் ஐயர் எனும் தமிழ்க் கிறித்துவப் பாதரியார் 1877-ம் ஆண்டு ‘நாற்போரம்’ என்ற  கிறித்தவ மத இதழில் ‘சரிகைக் தலைப்பாகை’ என்ற சிறுகதையை எழுதியிருப்பதைச் சொல்கிறார். அதோ அச்சிறுகதையின் கதைச்சுருக்கத்தையும் சொல்கிறார்.

அம்மணிஅம்மாள் ‘சங்கல்பமும் சம்பவமும்’ என்கிற சிறுகதையை  1913-ம் ஆண்டு எழுதியதாகச் சொல்லி அக்கதையின் சாதனையையும் சொல்கிறார். இதுவரை இந்த அம்மையாரின் பெயரை எங்கும் வாசித்ததாக நினைவில் இல்லை. இப்படி பல புதிய காலத்திற்கு ஏற்ற  தகவல்களை  இக்கட்டுரை  முழுக்கவும்  சொல்லிக்கொண்டே  செல்கிறார்.

‘நதிமூலம்’ என்ற தலைப்பில் ஜீ.முருகன் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். தனக்கும் தன் கதைகளுக்குமான அகவயமான புறவயமான காரணங்களைச் சொல்லியுள்ளார்.
எழுத்தாளன் என்பவன்; 'எவற்றை எழுதுகிறான்', 'எதற்காக எழுதுகிறான்', 'எப்படியெல்லாம் எழுதுகிறான்' என்று மூன்று அம்சங்களாக பிரித்து எழுதியுள்ளார்.   ஒரு கதையின் நதிமூலத்தை அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, கொஞ்ச நேரத்தில் அவரின் அக்கதை எனக்கு பொறி தட்டியது. அச்சிறுகதையை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்விற்கு கொஞ்சமும் குறைவில்லாத ஒன்றாக அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது உணர்ந்தேன்.
கட்டுரையின் கடைசியில்தான் அச்சிறுகதையின் தலைப்பை அவர் சொல்கிறார். ஆனால் அதற்கு முன்னமே அதனை நான் கண்டுபிடித்துவிட்டத் எழுத்தாளரின் வெற்றியா வாசகரின் வெற்றியா எனத் தெரியவில்லை. யோசிக்கையில் வென்றது 'ஆப்பிள்' என்ற அச்சிறுகதைதான் என புரிகிறது.

        இதுவரையில் ஜீ.முருகனின் இரு சிறுகதை தொகுப்புகளை வாசித்துள்ளேன். சிலரிடம் பேசியும் உள்ளேன். ஆனால் வாசிப்பு அனுபவம் குறித்த அனுபவத்தை இன்னும் எழுதவில்லை. நிச்சயம் எழுதவேண்டும்.

‘வலசை வெளியிடையில்’  என்ற தலைப்பில் யூமா வாசுகி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். இக்கட்டுரைக்கு 20 புத்தகங்களில் இருந்து பல குறிப்புகளை எடுத்தாண்டுள்ளார் ஆசிரியர். (கட்டுரையில் முடிவில் அப்புத்தகங்களின் தலைப்பு குறிப்பிடப்பட்டிருக்கும்). பண்நாட்டு நாடோடிக் கதைகளையும் அது எவ்வாறு இன்னொரு பிரதேசத்தில் சொல்லப்படிகின்றது என்பதை சுவாரஷ்யம் குறையாமல் சொல்லிச்செல்கிறார். குறிப்பாக ஜப்பான் நாடோடிக் கதைகளின் பின்னணி , துருக்கிக் கதைகளின் பின்னணி, லத்தீன் அமெரிக்க கதைகளின் தன்மை என வாசிப்பவர்களுக்கு ஆர்வத்தையும் தேடலையும் ஏற்படுத்துகின்றார்.

‘செவிமொழியும் மனமொழியும்’ என்ற தலைப்பில் யுவன் சந்திரசேகர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். வாய்மொழிக்கதைகளுக்கும் எழுத்து வடிவ கதைகளுக்குமான வித்தியாசங்களைப் பேசும் கட்டுரை. தன் சொந்த அனுபவத்தின் ஊடே கட்டுரையைக் கொண்டு செல்கிறார்.

‘மொழிபெயர்ப்புகளை ஏன் வாசிக்க வேண்டும்?’ என்ற தலைப்பில் எம்.கோபாலகிருஷ்ணன் ஒரு கட்டுரையைக் கொடுத்துள்ளார். மொழிபெயர்ப்புகள் மூலம் நமக்கு கிடைக்ககூடியவற்றை நேர்த்தியாக சொல்கிறார். மொழிபெயர்ப்புகள் மொழிக்கும் படைப்பாளர்களுக்கு புதிய சொற்களையும் புதிய வாசிப்பு அனுபவத்தையும் தருகின்றன. மொழிபெயர்ப்பின் மூலம் அறிந்த படைப்பாளர்களின் பட்டியலைக் கொடுக்கின்றார். தவறவிடக்கூடாத மொழியாக்கங்களை இக்கட்டுரையின் வழி கவனத்தில் கொள்ள முடிகிறது.

‘தமிழகத்திற்கு அப்பால் தமிழ் புனைவு வெளி’ என்ற தலைப்பில் சுனில் கிருஷ்ணன் ஒரு கட்டுரையைக் கொடுத்துள்ளார். தமிழகத்தைத் தாண்டியும் பிற நாடுகளின் படைப்பாளிகள் எவ்வளவு தங்கள் படைப்புகளை வெளியுலகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள் என பார்க்க முடிகின்றது. எது அப்படைப்பின் தனித்தன்மையாக அடையாளம் காட்டப்படுகின்றது என்பது முக்கியமான கேள்வி. குறிப்பாக இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளையும் மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி எழுதியிருப்பது கவனிக்க வேண்டியது.

‘தமிழில் அறிவியல் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் கார்த்திக் பாலசுப்ரமணியம் ஒரு கட்டுரையைக் கொடுத்துள்ளார். என்னளவில் இப்போதைக்கு அதிகம் தேவைப்படும் ஒன்றாக இதனைப் பார்க்கிறேன். அறிவியல் சிறுகதைகள் எழுதுவதற்கு முன்பாக எது அறிவியல் எது தொழில்நுட்பம் என்கிற தெளிவு அவசியம். அதோடு வாசிக்க வேண்ட சில அறிவியல் சிறுகதைகளையும் கொடுத்துள்ளார். கொடுத்ததோடு நில்லாமல் அச்சிறுகதைகளின் குறைநிறைகளையும் கொடுக்கின்றார்.

நிச்சயம் வாசிக்க வேண்டிய தொகுப்பாக இத்தொகுப்பைச் சொல்லலாம். பல ஆளுமைகளின் பார்வையில் அவர்கள் எழுதியிருக்கும் இக்கட்டுரைகள் சிறுகதைகள் மீதான ஈர்ப்பையும் வாசிக்கும் நுட்பத்தையும் ஏற்படுத்தும். வாசிக்க வேண்டிய, தவறவிடக்கூடாத சிறுகதைகளை இங்கிருந்தும் நாம் வாசிக்க ஆரம்பிக்களாம்.

 

- தயாஜி

 


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்