பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 27, 2021

வெறிநாய்கள்

 


        இன்றும் தேடலானாள். ஆனால் கொஞ்சம் மும்முரமாக. அந்த நாய்களின் குரைப்புச் சத்தம் அவள் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காதில் புகுந்த சத்தம் மூளையை குடைவதாக உணர்ந்துக் கொண்டிருக்கிறாள். இப்படியாக குரைக்கத் தெரிந்த நாய்களை அவள் இதுவரையில் பார்த்திருக்கவில்லை. இன்னும் குளிக்கவில்லை. வாசலுக்கு வந்து காத்திருந்த அம்மாவை திட்டிவிட்டுதான் உள்ளே வந்தாள். வழக்கமாக நடப்பதுதான். அம்மா அடுத்து செய்ய வேண்டியவற்றை செய்யலானார். மேஜை மீது சுலோச்சனாவுக்கு வேண்டிய இரவு உணவை வைத்தார்.  மகளின் அறையை ஒரு முறை தட்டி சாப்பிட அழைத்தார். கணினி திரையில் தேடிக்கொண்டிருந்தவள்,

     “எனக்கு தெரியும்மா…. இருங்க வரேன்… இப்ப அது ஒன்னுதான் இங்க குறைச்சல் இங்க..”

       மேற்கொண்டு அம்மாவிற்கு செய்ய ஒன்றுமில்லை. மேஜை மீது வைத்திருந்த உணவுகள் சரியாக மூடப்பட்டுள்ளதா என பார்க்கலானார். சமையல் அறை நாற்காலி மீது வைத்திருந்த சிறிய துணியை எடுத்தார். மேஜையை இன்னொரு முறை துடைத்தார். துடைத்தவர் அங்கேயே அமர்ந்தார். சுலோச்சனாவின் இந்த  குணத்திற்கு தானும் ஒரு காரணம் என நினைத்து வருந்தினார். அவள் எத்தனை அன்பானவளாக இருந்திருக்கிறாள் என்பதை அம்மா இன்னொரு முறை நினைத்துப் பார்க்கலானார். காலமும் சூழலும் எத்தனை மாற்றங்களைப் போகிற போக்கில் செய்துவிடுகின்றன.

        அப்பா இல்லாத குடும்பத்தை காப்பற்றத்தான் கடவுள் அவளுக்கு தம்பியைக் கொடுத்திருக்கிறார் என்பார். அதற்காகவே அம்மா, தம்பி மீது அதிக அக்கறை காட்டினார். சுலோச்சனாவிற்கும் அது புரிந்தே இருந்தது. அவளும் தம்பிக்காக பலவற்றை விட்டுக்கொடுத்தாள். ஒரு முறை தனக்கு கிடைத்த வெளிநாட்டு மேற்படிப்பிற்கான வாய்ப்பை தம்பிக்காகவே விட்டுக்கொடுத்தாள். அம்மாவால் வீட்டு வேலையைத் தவிர வெளி வேலை செல்ல முடியாது செய்யவும் முடியாது. அப்பாவின் மரணம் அம்மாவை மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் பாதித்து இருந்தது. அம்மா அதிக தூரம் கூட நடப்பது கூடாது என மருத்துவர் சொல்லிவிட்டார். யோசித்துப் பார்த்தால், நாள் ஒன்றுக்கு  அம்மா வீட்டில் நடந்த நடையை கணக்கிட்டாலே கூட தாமானை இரண்டு முறை சுற்றியிருப்பார்.

       சுலோச்சனாவிற்கு தம்பி மீது பாசம் இல்லாமலில்லை. தனக்காக செலவு செய்வதைக் காட்டிலும் தம்பியின் தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தாள். தம்பி மேற்படிப்பு படிக்கதற்காக தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டவள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். அவளின் வேலையிடத்தில், வேலையின் நுணுக்கங்கள் தெரியாதவர்கள் கூட இவளுக்கு மேலதிகாரிகளாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் தங்களுக்கு பின்னால் வைத்திருக்கும் படிப்பின் பெயர்தான். என்னதான் தான் அவ்வாறு தன் பெயருக்கு பின்னால் எந்த படிப்பின் பெயரையும் வைத்திருக்காவிட்டாலும், அவள் சொந்தமாகவே கற்று தேர்கிறவள், கற்றுக்கொண்டிருப்பவளும். எப்படியும் கொஞ்ச நாளில் தம்பி குடும்ப பொறுப்பை கையில் எடுத்துக் கொள்வான். தான் விட்ட படிப்புகளையெல்லாம் மீண்டும் தொடங்கலாம் இதே அலுவலகத்தில் தனக்கு தகுதியான இடத்தில் அமர்ந்துக் கொள்ளலாம் என தினமும் எண்ணிக்கொண்டிருந்தாள். அம்மாவும் அவளும் இதையேதான் அடிக்கடி பேசிக்கொண்டார்கள்.

       அவர்களுக்கான விடியல் ஒரு நாள் வந்தது. விடியவும் செய்தது. ஆனால் வெளிச்சம் இந்த குடும்பத்தில் விழவில்லை. மாறாக மேலும் இருள்தான் சூழத்தொடங்கியது.  தம்பியைக் காணவில்லை. யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டான். எங்கே போனான் என்ன ஆனான் என்பது யாருக்கும் தெரியவில்லை. தலை நிமிர வேண்டிய குடும்பத்தின் கழுத்தில், தான் நம்பியிருந்த தங்க சங்கிலி அறுந்து விழுந்தது மட்டுமின்றி கழுத்தையும் சேர்த்து அறுத்துவிட்டு விழுந்தது.

        அழுது முடிக்கக்கூட அதிக நேரம் கிடைக்கவில்லை. அவள் இன்னொரு சிக்கலை சந்தித்தாள். அலுவலகத்தில் அவளின் வேலை மீது குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கின. அவள் எழுதும் கடிதங்களில் எழுத்துப்பிழைகள். முறையாக கோப்புகளை அடுக்காததால் சில இழப்புகள் என ஒன்றின் பின் ஒன்றாக வந்தன. இச்சமயம் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடந்துக் கொண்டிருப்பதாக அவளின் ஆழ்மனம் சொல்லத்தொடங்கியது. தாமதிக்காது மற்ற இடங்களுக்கு வேலைக்கான மனுவை அனுப்பினாள். அவள் எதிர்ப்பார்த்த சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. ஆனால் வீட்டிலிருந்து தூரம். இப்போதைக்கு பொது பேருந்தில் செல்லலாம். பழைய வேலையிட சிக்கல்களில் இருந்து தப்பித்தாள். இன்னொரு சிக்கலில் சிக்கப்போவதை நினைத்துப் பார்க்கவில்லை.

       காலையில் கிளம்புகிறவள் திரும்ப வீடு வருவதற்குள் இருட்டிவிடும். வீட்டில் இருந்து கொஞ்சம் தூரம் நடந்துதான் பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும். இரவு அந்த வழியில் வீடு திரும்புவதுதான் அவளுக்கு பயத்தைக் கொடுக்கத் தொடங்கியது. அவ்வழியில் சில காலி வீடுகள் புதர் மண்டிக் கிடக்கின்றன. அங்கு சாலை விளக்கும் இல்லை. பேருந்தை விட்டு இறங்கியவுடன் மடமடவென நடந்துச் செல்வாள். சமயங்களில் யாரோ அவளை அழைப்பு போல தோன்றும். யாரோ தன்னை பின் தொடர்வதாகவும் தோன்றும்.  

         தினமும் இவ்வழியில் நடப்பது அவளுக்கு பொரும்பாடாய் இருக்கிறது.  தனது கைப்பையில் இருக்கும் ‘பெப்பர் ஸ்ப்ரே’-வை எடுத்து கையில் இறுக்கமாக பிடித்துக் கொள்வாள். அவளின் நடை வேகம் கூடும். வீடு வருவதற்குள் வியர்த்து வடிவாள். அம்மாவிடம் இதனைச் சொல்லவும் முடியாது. உடனே அவசரமாக காரை வாங்க சொல்லுவார். தினமும் பேருந்து நிலையம் வரை தான் வந்து காத்திருப்பதாக சொல்லுவார். அம்மாவின் உடல் நிலைக்கு இதுவெல்லாம் சரியாக வராது. தம்பியின் மேற்படிப்பிற்காக முன்னமே வாங்கியுள்ள வங்கி கடனால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்காவது வேறு எதற்கும் அவளால் கடன் வாங்க முடியாது எங்கிருந்து கார் வாங்குவது.

       இதற்கிடையில்தான் அவள் ஒன்றை கேள்விப்பட்டாள். அவள் வீட்டிற்கு வரும் இருள் சூழ்ந்த பகுதியில் சில வெறி நாய்கள் சுற்றிக்கொண்டிருப்பதாகவும், சிலரை கடித்திருப்பதாகவும் பேருத்து நிலையத்தில் ஒருவர் சொல்லிகொண்டிருந்தார். இயல்பாகவே நாய் என்றால் சுலோச்னாவிற்கு பயம்.

       பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவளை ஒரு நாய் துரத்தி அவள் கீழே விழுந்துவிட்டாள். நாய் அவளருகில் வருவதற்கு முன்னதாக தம்பி கையில் கட்டையுடன் ஓடி வந்து காப்பாற்ற முயன்றான். பயந்துவிடாத நாய் அவன் மீது பாய்ந்தது. அந்த கலவரத்தில் தம்பிக்கு கன்னத்தில் நகக்கீரல் ஆழமாக பதிந்துவிட்டது. ஆனால் கடையில் கட்டையில் அடி வாங்கிய நாய் ஓடிவிட்டது. நாய்களை நினைக்கும் போதெல்லாம் தம்பியையும் அவன் கன்னத்தில் பதிந்த தழும்பையும் அவளால் நினைக்காமல் இருக்க முடியவதில்லை. அன்று முதல் அவளுக்கு நாய்கள் என்றால் ஒவ்வாது. எத்தனை குட்டியாக எத்தனை அழகாக இருந்தாலும் நாய்கள் என்றாலே அவளுக்கு ஒவ்வாமைதான். அதனால்தான் இரு பெண்கள் இருக்கும் வீட்டில் காவலுக்கு நாய் வளர்க்கச்சொல்லி அம்மா கேட்டதற்கும் மறுத்துவிட்டாள். வீட்டில் இருக்கும் மின்சார அலாரம் நம்மை காப்பாற்றிக்கொள்ளும் என கூறிவிட்டாள்.

     இப்போது தினமும் நடந்து வரும் பாதையில் இப்படி ஒரு சிக்கலை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. அதனை நினைத்துக் கொண்டு வந்ததால் என்னமோ இன்று பல இடங்களில் நாய்களின் நிழல்களைக் கண்டாள். இந்த இருள் வழியில் சமீபகாலமாக தன்னை பின் தொடர்ந்து வந்ததும் அதில் ஒரு நாய்தான் என்பதை புரிந்துக் கொண்டாள். இதுகளுக்கு ‘பெப்பர் ஸ்ப்ரே’ போதாது வேறு ஏதாவது ‘ஸ்ப்ரே’ தான் தேவை என முடிவெடுத்தாள். வீட்டிற்கு வந்ததும் வராததுமாக அறையில் புகுந்து சாப்பிடக்கூட வராமல் கூகளிடம் நாய்களை விரட்டுவதற்காக ‘ஸ்ப்ரே’ எங்கே கிடைக்கும் என அலசிக்கொண்டிருக்கிறாள்.

      மறுநாள், பேருந்து தாமதமானது. அவளுக்கும் தாமதமானது. வழக்கத்தைவிட சில மணி நேரம் தாமதமாகத்தான் பேருந்து அவளை இறக்கிவிட்டது. விரைந்து நடக்கலானாள். வெறி நாய்கள் நிறைந்த வழியை கடக்க வேண்டும். எதற்கும் கையில் ‘பெப்பர் ஸ்ப்ரே’வை வைத்துக் கொள்ள நினைத்தவள் கைப்பையில் கைவிட்டாள். அது அதில் இல்லை. எங்கே விட்டாள் என நினைத்துப் பார்க்க நேரமில்லை. முழுவதும் பாதுகாப்பற்ற சூழல் அவளை சூழ்ந்தது. மேலும் அவளை பயம் காட்ட அவள் பின்னால் யாரோ நடந்து வருவது போல சத்தம் கேட்டது. அவள் பெயரையும் யாரோ அழைக்கிறார்கள்.

    நடையை  அதிகப்படுத்த முயன்றாள். அச்சமயம் அவன் முன்னே ஏதோ ஒரு பெரிய உருவம் குதித்து நின்றது. அவள் அலறுகிறாள். பின்னால் இருந்து ஒருவன் அவளது வாயை பொத்தி, அப்படியே அவளை தூக்குகிறான். முன்னே குதித்தவன் அவளின் கால்களை தூக்குகிறான். இருவரும் அவளை பக்கத்தில் இருக்கும் காலி வீட்டிற்கு தூக்கிச் செல்கிறார்கள். யாரோ பின் தொடர்வதாக தெரிந்துக் கொண்ட ஒருவன் “யார்டா அது?” என சத்தமிட்டான். அப்போது அந்த மூன்றாவது ஆள்…!

       ஒருவனின் காலை கடித்தது. அவளை பிடித்திருந்த கைகள் விட்டன. இமைக்கும் நேரத்தில் வெறி பிடித்த நாய் இருவரையும் கடித்து குதறத்தொடங்கியது. சுலோச்சனாவின் கண் முன்னே இருவரும் அலறிக்கொண்டு ஓடினார்கள். அவளுக்கும் என்ன செய்வது என தெரியவில்லை. சற்று நேரத்தில் அந்த வெறி நாய் அவளருகில் வந்து நின்றது. பயத்துடன் மெல்ல மெல்ல எழுந்தாள். நாய் வாலை ஆட்டியது. தனது ஆடையையும் தலை முடியையும் சரி செய்துக் கொண்டாள். மெல்ல நடக்கலானாள். அந்த நாயும் அவள் பின்னே நடக்கலானது.

       வழியில், மீண்டும் யாரோ அவள் பெயரைச் சொல்லி அழைக்கிறார்கள். அந்த குரல் அவளுக்கு மிக நெருக்கமான குரலென மனம் சொல்லிக்கொண்டது. அப்படியே நின்றுவிட்டாள். யாரோ பின்னால் நிற்பதை உணர்ந்தாள். திரும்பிப் பார்க்கிறாள். அந்த நாய் மட்டுமே வாலை ஆட்டிக்கொண்டிருந்தது. அதன் கன்னத்தில் எப்போதோ கடிபட்ட தழும்பொன்று பளிச்சிட்டது.

-       தயாஜி

     

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்