பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 20, 2017

பொம்மியை கொல்லப்பார்க்கிறார்கள்

என்னை பிரசவிக்க
பூமி வரும் பொம்மிக்காக
என்னவெல்லாம் செய்யலாம் என
ஏடுகள் முழுக்க குறிப்புகள் கொண்டேன்

நான் கண்டிராத
நான் தொட்டிடாத
விளையாட்டு சாமான்களை
இப்போதே வாங்கி அடுக்கியுள்ளேன்

பொம்மிக்கென்று ஓர் அறை
ஊதா வண்ணமாய்
சுவர் முழுக்க பட்டாம்பூச்சிகளை ஒட்டிவைத்துள்ளேன்

ஒவ்வொரு பட்டாம்பூச்சியின் தலையிலும் தங்க நிற
ஜிகுனா தூள்களை சேர்த்துள்ளேன்

இரவானால் விளக்கெரியும்
வசதிகொண்ட நட்சத்திரங்களை
கைக்கு எட்டிய தூரம்வரை  தொங்கவிட்டுள்ளேன்

என் பொம்மி
இவ்வறைக்குள்ளே நுழைவதை
வரலாற்று குறிப்பாக்க
அறைவாசலில்
மெல்லிய வகையில்
மென்மையாக
மிகமிக மென்மையாக
பொம்மியின் பிஞ்சி கால்
வலிக்காமல் களிமண்ணை குவித்துள்ளேன்

கைராசி டாக்டருக்கு
இப்போதே பிரசவ பில்களை சேமிக்க
யானை உண்டி வாங்கி வைத்தேன்
எனக்கும்  யானை உண்டியல்தான் பிடித்திருந்ததாம் அம்மா ஒரு முறை சொல்லி சிரிக்கலானார்

அண்ணன் எப்போதுமில்லாத அக்கறையில்
தான் பெற்ற குழந்தைகளில்
சத்துணவுக்கான புத்தகத்தை பாதி கிறுக்கியும் மீதி கசக்கியும்
கொடுத்துவிட்டு போனான்

நண்பர்களின் கேலிக்கும் கிண்டல்களுக்கும்
வெட்கமும் சிரிப்பும் வந்ததே தவிர கோவமில்லை

அவளுக்குத்தான் உள்ளூர பயம்
ஏதோ ஒரு பொழுதில்
தோழி சொன்ன  கதை
பிரசவம் என்பது இன்னொரு
திடீர் சாவு

மகட்பேறு விடுமுறைக்கான அட்டவணையில்
எனக்கும்கூட விடுமுறை என சொன்னார்கள்
இப்போதே சில வேலைகளை முடிக்க புதிய நண்பர்களும் உதவினார்கள்

இன்று அவளுக்கு பிரசவ வலி
எனக்கு உடம்பெல்லாம் ஏதோ ஆனது
மண்டை மயிரெல்லாம் ஈரமாகிப்போனது
குத்திட்டு நிற்கும் உடலுரோமங்களை சரிசெய்ய தோன்றாமல்
பூமி வந்த பொம்மியை
எப்படி தாதியிடமிருந்து பெறலாம்
ஒத்திகையில் பயத்தை ஒத்திவைத்தேன்

பிரசவ அறையில் கைப்பிடியை
இறுக்கமாக மிக இறுக்கமாக
பிடித்துக்கொண்டேன்
ஏதேதோ வார்த்தைகளைத்
திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தேன்
பொம்மி வந்துவிட்டாள்
என் தேவதை
பூமிக்கு வந்துவிட்டாள்
என்னில் பாதி இப்போது முழுமையாகிவிட்டது

சட்டென்ற நிசப்தம்
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்
அவள் பேச்சுமூச்சற்று இருக்கிறாள்
இதயம் இருமடங்காய் துடித்தது

பொம்மி செத்தேதான் பிறந்ததாலாம்
அவள் மயக்கம் தெளிய நேரமாகுமாம்
கடைசியில் பொம்மியும்
என்னை ஏமாற்றப்பார்க்கிறது

என் பொம்மி சாகவில்லை
அதோ கட்டிலில் கிடக்கிறாள் பாருங்கள்
என் பொம்மி

நீங்கள் மரணித்ததாய் சொன்ன குழந்தையின் குரல் எனக்கு கேட்டது
அதோ பாருங்கள்
எத்தனை ரம்மியமாக தூங்கிக்கொண்டிருக்கிறாள்

என் பொம்மி
கணவனை கொன்று
தகப்பனை பிரசுவித்து கொடுத்திருக்கிறாள்
அதற்கு விலையாய் தன்னையும் கொன்றுவிட்டாள்

நிறைவாய் பொம்மி
எனக்கும் தாயாகி
சிரிக்கிறாள்

#தயாஜி
#பொம்மி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்