பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

#புத்தகவாசிப்பு_2020 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#புத்தகவாசிப்பு_2020 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டிசம்பர் 26, 2020

நாகம்மாளின் மனக்குறிப்புகள் – புத்தக வாசிப்பு

 


மனோகரன் கிருஷ்ணன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு, ‘நாகம்மாளின் மனக்குறிப்புகள்’. வழக்கமாக , கதைகளை இதழ்களுக்கோ அல்லது ஏதும் ஊடங்களுக்கோ அனுப்பி அது பிரசுரமாகிய பின் தொகுத்து புத்தகமாக்குவார்கள். அல்லது புத்தகம் வெளியீடு செய்வதற்கு முன்னமே அதையொட்டிய சில கதைகளை ஊடகங்களுக்கு அனுப்பி பிரசுரிக்க வைப்பார்கள்.

இந்த இரண்டும் இல்லாமல், தனது வலைப்பூவிலும் அவ்வபோது முகநூலிலும் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்கியுள்ளார் கதாசிரியர். தொடர்ந்து வாசிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு பல்வேறுபட்ட பதிப்புகளில் வெளிவந்துள்ள திருக்குறள் புத்தகங்களை சேகரித்து வருகின்றார். மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்களையும் தொடர்ந்து சேமித்து வருகின்றார். தற்போது வெளியீடு காணும் புத்தகங்கள் முதல் கிடைக்காத புத்தகங்கள் வரை அதில் அடங்கும். இச்செய்தி வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவும் என நம்புகின்றேன்.

இனி சிறுகதை தொகுப்பிற்கு செல்லலாம்;

மொத்தம் 15 கதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் நம் மண்ணில் கதையைச் சொல்ல முற்பட்டிருக்கின்றது. அது முழுமையடைந்துள்ளதா என்றால் அதன் முயற்சி தெரிகிறது எனலாம்.

முதல் கதை, ‘மனைவி காத்திருக்கிறாள்’. இக்கதை எனக்கு ஒரு புதுமொழியை நினைக்க வைத்தது. ‘ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் வீட்டிற்கு துடைப்பக்கட்டைதான்’. பெரும்பாலும் கணவன்களுக்கு  இதனைச் சொல்லி கிண்டல் செய்வோம். சொல்லப்போனால்,  பெரும்பாலான கணவன்களின் நிலை இதுவாகத்தான் இருக்கும். பிறந்த விட்டிற்கு சென்றுள்ள மனைவியை அழைத்து வர செல்லும் கணவன் அதற்கான இரயிலில் ஏறினாரா இல்லையா என்பதுதான் கதை. ஒரு கதைக்கு இதுமட்டும் போதுமா என்ன.? கணவனின் அந்த பயணத்தை கதாசிரியர் சொல்லிக் கொண்டுச் செல்லும் போது நமக்கேக்கூட ஓரளவிற்கு பதற்றம் தொற்றிக்கொள்கிறது. நம்மில் பலர் பொது போக்குவரத்து சேவைக்கு இவ்வாறான  அனுபவங்களைப் பெற்றிருப்போம். ஆனால் கதையின் முடிவு கதையோட்டத்தை காப்பாற்ற தவறிவிட்டதாகப்படுகிறது. இத்தனை இன்னல்களை தாண்டி, கணவன் தன் மனைவியை அழைத்து வருவதற்கு பேருந்தில்  ஏறிவிட்டதில் என்ன கதை இருக்கிறது. முழு கதையையும் மாற்றிப்போடும்  சூட்சுமம் இருக்கும் கதை முடிவில் இன்னும் கவனம் எடுத்திருக்கலாம். பல பாடுகள் கடந்து விட்ட நிலையில் மனைவி தொலைபேசியில் அழைக்கும் சமயத்தில், சில நொடிகளின் இரயிலை தவறவிட்டு நிற்பதில்தான் இக்கதை ஒளிந்திருக்கிறது. ஆனால் இக்கதையின் முடிவு இக்கதையை அனுபவ பத்தி போல அமைத்துவிட்டது.

அடுத்த கதை, ‘வெளியே ஒரு வானம்’. தன் வகுப்பு மாணவனின் வித்தியாசமான செய்கையால் ஈர்க்கப்படும் ஆசிரியை அதற்கான காரணம் தெரிந்ததும் உடைந்துப் போகிறார். இக்கதை சொல்லப்பட்டிருந்த விதம் கவர்கிறது. முன் யூகங்கள் ஏதும் இக்கதைக்கு இடம் கொடுக்கவில்லை.

‘ஆன்மாக்களின் தரிசனமும் கடவுளின் வார்த்தைகளும்’. புதிய அனுபவத்தை கொடுக்க முயற்சிக்கும் கதை. இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இக்கதை மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.  நாவலுக்கான கருவை மிக சுக்கமாக சொல்ல முயன்று அது தன் பக்கங்களின் சிலவற்றை அதிகப்படுத்தியது போல இருக்கிறது. இதனை நாவலாகவோ குறுநாவலாகவோ கதாசிரியர் முயற்சிக்கலாம். அது இக்கதை வாசிப்பின் அனுபவத்தை முற்றிலும் வேறொரு அனுபவத்தைக் கொடுக்கும்.

‘வட்டிப்பணம்’ . பணம் படுத்தும் பாடு. பணமே பிரதானம் என்னும் மனிதனின் கடைசி நிமிடம் எப்படி இருந்துவிடும் என சொல்லும் கதை. இக்கதை சொல்லப்பட்ட விதம் வாசகர்களை கவரும். மெல்ல மெல்ல காய்களை நகர்த்தி  முன்னேறிச் செல்வது போல கதையை ஆசிரியர் முன்னகர்த்தி செல்கிறார். கதையில் முடிவு முழு கதையையும் மீண்டும் நினைக்க வைக்கிறது.

‘ஒற்றைச் செருப்பாய்’ இந்நாட்டுச் சூழலில் தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை சொல்லும் கதை. பலரும் இத்தகைய கருவினை கையாண்டிருக்கிறார்கள். கதாசிரியர் தன் பார்வையில் கதையை நகர்த்துகிறார்.

‘அற்றைக்கூலி’ வாசித்து முடிக்கவும் மனதை கணக்க செய்துவிடுகிறது. எதற்காக போராடுகின்றோமோ அது கைக்கு எட்டிய நொடியில் நாம் அதனைவிட்டு இன்னும் அதிகம் தூரம் நகர்ந்துச் சென்றுவிடும் உணர்வு மேலிடுகிறது.

‘கலைந்து செல்லும் மேகங்கள்’, சகோதரியின் மரணத்திற்கு செல்லும் வழியில் நாயகனின் நினைவுகள் பின் செல்கின்றன.

‘நெருப்புப் பிண்டங்கள்’, சில பக்கங்கள் கொண்ட கதைதான். ஆனால் கதையின் முடிவு என்னை பெரிதும் பாதித்தது என்றே சொல்லவேண்டும்.  தாத்தாவும் பேத்தியும் இருக்கும் வீட்டில் திருடர்கள் நுழைகிறார்கள்.  தடுக்க முயன்ற தாத்தா கொலை செய்யப்படுகின்றார். அந்த ஏழை வீட்டில் திருடர்கள் பறித்துக்கொண்டு போனது தாத்தாவின் உயிர் மட்டுமல்ல அந்த பேத்தியின் எதிர்காலத்தையும் என கதை முடியும் போது வாசிக்கையில் நம்மால் அவ்வளவு சீக்கிரத்தில் மீண்டு வர முடியாது.

‘பள்ளி வண்டி’, கதையும் இங்குள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்தான். பெரும்பாலும் பேருந்து ஓட்டுனர்கள் குறித்து பெரிதாக பேசுவதில்லை. இக்கதை அவர்களின் சிக்கலைக் காட்டுகிறது.

‘தாயுமானவள்’, ஆசிரியை குறித்த கதை. பெரிய திருப்பங்கள் இல்லை. நன்னெறியை போதிக்கும் வகை கதை.

‘மானுடம் கடந்த மனிதர்கள்’, தலைப்பிற்கு ஏற்றார் போல அமைந்துவிட்ட கதை. தினமும் ஒரு முறையாவது  வித்தியாசமான மனிதர்களை நாம் சந்திக்கக் நேரும். அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னதான் தேவை போன்ற எந்த புரிதலுக்கும் நம்மால் வர முடியாது ஆனாலும் நம்மால் அவர்களை புறக்கணிக முடியாது. கதையின் மையம் இதுதான்.

அடுத்த தலைப்பு, புத்தக தலைப்பைக் கொண்டது. ‘நாகம்மாளின் மானக்குறிப்புகள்’. அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார் நாயகன். அங்கு சந்திக்கும் நபர் மூலம் பழைய தங்களின் தோட்டத்து பழைய வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும்படி கதை நகர்கிறது. குலதெய்வ வழிபாடு குறித்து இக்கதையில் குறிப்பிடும் தகவல் அதிர்ச்சியைக் கொடுக்கின்றது. ஜீரணிக்க முடியவில்லை. அந்த காலத்தில் பூப்படைந்த பெண்களைக் கண்டு வேற்று இன மன்னர்களும் சிப்பாய்களும் அதிகாரம் படைத்தவர்களும் வன்முறை செய்து இச்சையைத் தீர்ப்பதற்காக அவர்களை இழுத்துப் போவார்களாம். அதனை தடுப்பதற்காகவே, பெண் குழந்தைகள் வயதிற்கு வந்தவுடன், வீட்டின் முன் சிறு குழியை வெட்டி அந்த பெண்ணை அதில் அமரவைப்பார்களாம். அவள் கையில் அகல் விளக்கைக் கொடுத்து அவள் மேல் தென்னை மட்டைகளைப் போட்டு மூடி விடுவார்களாம். அந்த பெண் குழிக்குள்ளேயே எரிந்து பூபோல் சாம்பலாகி விடுவதால் அவளையே குலதெய்வமாய் வணங்குகிறார்களாம்.

‘நிழல் மரக்கோடுகள்’ கதையும் பழைய வாழ்க்கையைச் சொல்லி செல்கிற கதைதான். போர்க்காலம், கொடுமைக்காலம், கலவரக்காலம், வசந்தகாலம் என நான்கு காலத்தின் சூழலைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இன்னும் அதிகமாக சொல்லியிருக்க கூடும் வாய்ப்புகள் இருந்தும் இக்கதையில் கதாசிரியர் அதனை செய்யவில்லை. செய்திருக்கலாம்.

தொகுப்பின் நிறைவான கதை, ‘சுடுகாட்டு காளி’. சிறிய கதை. மேலும் செறிவாக்கம் செய்திருந்தால், ‘குறுங்கதை’ வடிவில் கிடைத்திருக்கும்.  இக்கதையை நேர்த்தியாக சொல்ல முயன்றுள்ளார். சாமாண்யன் நான்கு நம்பர் எடுக்கும் கதை. அதற்காக மந்திரவாதியுடன் சுடுகாட்டிற்கு பூஜை செய்ய செல்கிறார்கள். அங்குதான் சிக்கல் ஏற்படுகிறது. நினைத்துப் போன நான்கு நம்பர் கிடைத்ததா இல்லையா என்பதுதான் கதையின் சுவாரஸ்யம். கதையின் கடைசி பத்தி நம்மை நோக்கி நாமே சிரிக்கும்படி ஆகின்றது.

மனோகரன் கிருஷ்ணன் அவர்களின் இந்த ‘நாகம்மாளின் மனக்குறிப்புகள்’ அவரின் முதல் சிறுகதை தொகுப்பு. அதற்கான முயற்சிகள் தெரிகின்றது. இப்புத்தகம் வாசிப்பதற்கு ஏற்றது. வழக்கமாக வாசித்துப் பழகிய கதைகளில் இருந்து சற்றே மாறுபட்ட கதைபோக்குகள் கொண்ட கதைகளாக இக்கதைகளைச் சொல்லலாம்.

அடுத்தடுது இன்னும் ஆழமான படைப்புகளை எதிர்ப்பார்க்கலாம். கதாசிரியருக்கு வாழ்த்துகள்.

 

#தயாஜி


ஏப்ரல் 24, 2020

புத்தகவாசிப்பு_2020_9 ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’



#புத்தகவாசிப்பு_2020_9  ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’
புததகம் –ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’
எழுத்து – அதி. இராஜகுமாரன்
பதிப்பகம் – மழைச்சாரல் (மலேசியா)

       மலேசிய பத்திரிக்கைத் துறையில் எப்போதும் நினைவில் கொள்ளும் பெயர்களில் இவர் பெயரும் அடங்கும். இங்கு புதுக்கவிதைகள் அதிகரிக்க அதற்கான களம் அமைத்து பங்காற்றியவர்களில் ஒருவர். இன்றும் பல கவிஞர்கள் நன்றியோடு இவரை நினைக்க தவறுவதில்லை. ஆரம்பகால தமிழ்மலர் பத்திரிகை அதனை அடுத்து ஆதி.குமணனின் வானம்பாடி, தமிழோசை பத்திரிகைகளில் இருந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து தமது சொந்த இதழ்களான  நயனம் , நிலா போன்ற இதழல்களை சிறப்பாக வழி நடத்தியவர். காலச்சூழலில் நயனம் இதழ் இப்போது இல்லாவிட்டாலும், பலரின் படைப்புகளுக்கு அவ்விதழ்தான் தாய்வீடு. எளிமையானவர். யாரிடமும் அதிர்ந்துப் பேசாதவர். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இதுவொன்றும் மிகப்படுத்தல் அல்ல என்று அவரை அறிந்த எல்லோர்க்கும் தெரியும்.

      இச்சமயம் இன்னொன்றையும் இங்கு பதிவு செய்தாக வேண்டியுள்ளது. ஆங்கிலப் புலமையும் கணினி நுட்பமும் அறிந்தவர். ‘இணையம்’ என்ற சொல்லைத் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு வழங்கியவர் இவர்தான்.

       அவரின் ஆலோசனையின் பெயரில் கவிஞர் மீராவாணி, ‘மழைச்சாரல்’ எனும் புலனக்குழுவைத் தொடங்கினார். அதன் வழி பல படைப்பாளர்கள் வாசகர்கள் ஒன்றிணைந்தார்கள். அவ்வொரு படைப்பாளர்களும் தத்தம் படைப்புகளை அந்த புலனக்குழுவில் பகிர்ந்துவருகிறார்கள். அதற்கான விமர்சனமும் அதில் இடம்பெறும். அதன் அடுத்த முன்னெடுப்பாக அக்குழுவில் உள்ள பல படைப்பாளர்கள் புத்தகங்களை வெளியீடு செய்துள்ளார்கள். சமீபத்தில் இக்குழுவில் சிறுகதை போட்டி ஒன்றை நடந்தினார்கள். அதில் வெற்றி பெற்ற சிறுகதைகளைத் தொகுக்கின்ற அதே சமயத்தில் மறைந்த ஐயா ஆதி. இராஜகுமாரன் அவர்களின் சிறுகதைகளையும் தொகுத்து மீண்டும் பிரசுரம் செய்தார்கள்.

      1984-ம் ஆண்டில் ‘முகவரி தேடும் மலர்கள்’ என்கிற தலைப்பில் வெளிவந்த சிறுகதைகளை இப்போது மீள் பிரசுரமாக ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள் ’ என்று வெளியிட்டார்கள்.

      இனி புத்தக வாசிப்பிற்குச் செல்வோம்.

      படைப்புகளை வாசிக்கையில் அது எழுதப்பட்ட காலகட்டத்தை கவனிக்க வேண்டும் என்பது என் கருத்து. என்னதான் காலத்தையும் தாண்டிய படைப்பு என்றாலும் அது எழுதபட்ட காலக்கட்டம்தான் அந்த படைப்பை காலத்தைக் கடந்து பயணிக்க வைக்கிறது.

       இந்த தொகுப்பில் மொத்தமாக பதினாறு சிறுகதைகள் இருக்கின்றன.

     ‘ஒரு தேவதை உறங்குகிறாள்’ என்னும் சிறுகதை மரம் வெட்டுபவனின் கனவை அடிப்படியாகக் கொண்டது. அது அவன் கனவு மட்டுமல்ல வாசகர்களையும் புதிய உலகுக்கு அழைத்துச் செல்லும் கனவு. சின்ன வயதில் இருந்தே கதைகள் கேட்டு வளர்ந்த நாயகன். காலப்போக்கில் தனக்குத்தானெ கதைகளைச் சொல்ல ஆரம்பிக்கின்றான். தனது தாத்தா சொல்லிய கதைகள் முடிந்துவிட்டபடியால் தானே கதைகளை உருவாக்க ஆரம்பிக்கின்றான். அவன் கதைகளில் அவனே நாயகன். நிகழ்காலத்திற்கும் கனவுலகிற்குமான பயணமாக அவனது கதை தன்னை அமைத்துக் கொள்கிறது. ஓர் அழகான மாளிகையைக் கட்டிவிட நினைக்கிறான், அதற்கு முன்பாக தனக்கு ஒரு வித்தியாசமான அழகு நயமிக்க அறையொன்றை கட்டிக்கொள்ள நினைக்கிறான். தானே அதனை கட்டிக்கொள்ள முடிவு எடுக்கிறான். அப்போது அவனுக்கு துணையாக வானிலிருந்து ஒரு பஞ்சவர்ணக் குதிரை வருகிறது.

     பஞ்சவர்ணக் குதிரை அவனுக்கு உதவுவதாகவும் ஆனால் அதற்கு ஒரு உறுதி மொழியையும் கேட்கிறது. அவன் வாழ்வில் காதலுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும், அப்படி எந்த பெண்ணிடமாவது இவன் மயங்கினால் அவனை அவ்விடத்துலேயே விட்டுவிட்டு பஞ்சாவர்ணக் குதிரை மறைந்துடும்.

      குதிரையின் மீதமர்ந்து அவனுக்கான அழகிய மாளிகையைக் கட்டத் தொடங்குகின்றான். குதிரை அவனது கட்டிடக் கலையைக் கண்டு பிரம்பிக்கிறது. ஆனால் அங்குதான் சிக்கல் ஆரம்பமாகிறது. ஒரு அழகிய தேவலோக மங்கையை காண்கிறான். அவர்களுக்குள் காதல் மலர்கிறது.     
  
      தேவலோக மங்கையின் தந்தை இதனை விரும்பவில்லை. நாயகனுக்கு அவன் காதலை நிரூபிக்க சில சவால்களை கொடுக்கின்றார். அதன் பிறகு கதை வேறு பக்கமாக பயணிக்கின்றது. அவனது கனவு கலைந்ததா அல்லது கனவு தொடர்ந்ததா  என்பதுதான் மீதி கதை.

       இக்கதையை நகர்த்திச் சென்ற விதம் ஆச்சர்யமாக இருந்தது. இன்று எழுதிய கதை போல  புதிதாகவே தெரிகிறது. இக்கதையில் ‘புள்ளினங்கள்’ என்கிற சொல்லாடலை ஆசிரியர் பயன்படுத்தியிருப்பார். குறுந்தொகை பாடலில் ‘புள்ளினங்கள்’ என்று பறவைக்கூட்டத்தை சொல்லியிருப்பார்கள். ஷங்கரின் 2.0 திரைப்படத்தில் நா.முத்துக்குமார் ‘புள்ளினங்காள்’ என்று பாடல் வரியை ஆரம்பித்திருப்பார். பலரும் அந்த வார்த்தைகளை சிலாகித்துச் பேசியிருந்தார்கள். ஆனால் அந்த குறுந்தொகை சொல்லாடலை முன்னமே தன் சிறுகதையில் பயன்படுத்தி தன் வாசிப்பை எடுத்துக்காட்டி இருக்கிறார். எனக்கும் இவ்வார்த்தையை வாசித்ததும் ஓர் பூரிப்பு தொற்றிக்கொண்டது. இப்படியாக கவனிக்க வேண்டிய படைப்புகளும் படைப்பாளர்களும் இங்கு இருக்கவே செய்கிறார்கள். சரியான் வாசிப்பும் சரியான விவாதங்களும் இல்லாமையே நாம் காணும் இங்குள்ள வெற்றிடத்திற்கு காரணம். ஒன்று சரியானவர்க்கு இடமில்லை, இன்னொன்று தேவையற்றவர்க்கு எல்லாவகையிலும் இடம் கிடைக்கிறது.

     ‘திரைகள்’ அழகான காதல் கதையாகத் தொடங்குகிறது. பேருந்து நிலையத்தில் பார்க்கின்ற பெண்ணின் மீது நாயகன் காதல் கொள்கிறான். வேலை முடிந்த உடனே கிளம்பிவிடுகிறான் நாயகன். நாள் தவறாமல் அவளை பார்க்கிறான். பேருந்து நிலையத்தில் அவள் ஒரு பக்கம் இவன் ஒரு பக்கம். ஒரு முறை கூட அவள் அவனை பார்க்கவில்லை. இப்படியாக அவனது காதல் கதை ஒரு மாதம் தொடர்கிறது. தன்னிடம் ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும் என யோசிக்கிறான். ஆனால் அதற்காக பணத்தை சேமிக்க எத்தனை ஆண்டுகள் உழைக்க வேண்டும் என புலம்புகிறான்.  சமயங்களில் அவனது நண்பர்கள் அவ்வழியே காரில் சென்றால் அவனையும் அழைப்பார்கள். ஆனான் அவனோ அதனை தவிர்த்துவிடுவான்.  அவளிடம் எப்படியாவது தன் காதலை சொல்லிவிட காத்திருக்கும் நாயகன் எப்படி அந்த வாய்ப்பை நழுவ விடுவான். ஒரு நாள் ஒரு கார் வந்து நிற்கிறது. அவளுக்கு அருகில். அந்த பெண் காரில் ஏறிக்கொண்டாள். காரின் கதவை சாத்துவதற்கான ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் அவள் அவனைப் பார்க்கிறாள். அப்போதுதான் அவனுக்கு பொறி தட்டியதாக ஆசிரியர் சொல்கிறார். வாசகர்களுக்கு இந்நேரம் பொறி தட்டியிருக்கும். ஆக, இத்தனை நாளும் அவள் அவனை பார்க்காமல் இருக்கவில்லை. அவள் எதிர்ப்பார்ப்பில் நாயகன் இல்லை என்பதே அந்த பொறி.
     ‘தனிமரங்கள்’ சிறுகதை. உண்மைக்கும் நேர்மைக்கும் உரத்தக் குரல் தேவையில்லை என சொல்லும் கதை. அப்பா ஓடிப்போகிறார். பிள்ளைகளுடன் அம்மா தனியாகிறாள். அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய வருகிறார் சுப்பையா. பல புரளிகள் பல கிசுகிசுக்களுக்கு மத்தியில் அவர் அந்த குடும்பத்திற்கு உதவுகிறார். பிள்ளைகள் வளர்ந்தப் பின்னர், ஊரார்களில் புரளிகள் மீது அவர்களுக்கு சந்தேகம் வருகிறது. ஆளுக்கு ஆள் வேவ்வேறு திசைக்கு சென்றுவிடுகிறார்கள். ஒரு மகன் மட்டும் அம்மாவுடன் இருக்கிறான். அவன் மனதிலும் சந்தேகம் இல்லாமலில்லை. அவனது சந்தேகத்திற்கு அம்மா சொல்லும் பதில் என்ன என்பதுதன கதை.

      ‘அக்கரைப் பச்சை’ வெளிநாடுகளுக்கு சென்று பல அவமானங்களைச் சுமந்து சம்பாதிப்பது எதற்காக ? என்கிற கேள்விக்கான பதில் தான் கதை. ஆனால் இதுவரை யாரும் சொல்லி விடாத காரணம் என்பதுதான் இக்கதையைக் காப்பாற்றுகிறது. இக்கதை முக்கியமான கதையாக மாறுகிறது. வழக்கமாக வறுமை என்போம், கடன் என்போம். ஆனால் நாயகனுக்கு தேவை மரியாதை. ஒர் ஆசிரியர் போல ஒரு காவல் துரையினர் போல , வெளிநாட்டில் வேலை செய்பவர் என்கிற மரியாதை. அதன் ஊடே இங்கு நிலவும் சிவப்பு அடையாள அட்டையையும் சொல்லி இன்னும் தொடரும் அவலத்தை சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர்.

      ‘போராட்டாங்கள்’ . இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்துவிட்ட கதை. வாசித்து முடித்ததும் அன்றைய தினம் முழுக்க இக்கதையே என் நினைவுகளில் இருந்தது. மனசுக்குள் பல கேள்விகள். கதையின் கரு சிறியதுதான் ஆனால் அது எழுப்பும் கேள்வி ரொம்பவும் பெரியது. தனக்கு வரவிருக்கும் மரணத்தை எப்படி ஒரு வீரனாக நாயகன் எதிர்க்கொள்கிறான் என்பதுதான் கதை.

      ‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’. சில கதைகளை மட்டுமே வாசித்த உடன் அருகில் இருப்பவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளத் தோன்றும். இக்கதை அந்த வகையைச் சார்ந்ததுதான். நாம் பிறரின் நன்மைக்காக செய்யும் செயல் அவர்களுக்கு பெரும் தீமையைக் கொடுத்துவிடவும் கூடும் என்பதுதான் கதை. அவளுக்கு தன் உருவ அமைப்பால் திருமணம் தடுங்களாகிப் போகிறது. ஆனால் அவளுக்கு பார்வையற்ற ஒருவரை திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. முதலில் மனம் வலித்தாலும்  பின்னர் தன்னைத்தானே சமாதானம் செய்துக் கொண்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறாள். தனக்கு பார்த்திருக்கும் பெண் மிகவும் அழகானவள் என்பது போன்ற விபரங்கள் மாப்பிள்ளைக்குக் கிடைக்கிறது. பார்வையற்ற ஒருவனை திருமணம் செய்து அந்த பெண் அவள் வாழ்வை வீணாக்க வேண்டாம். அவளாவது நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என திருமணத்தை வேண்டாம் என்கிறார். ஒரு பார்வையற்றவருக்குக் கூட தனக்கு வாழ்க்கைத் தர முன்வரவில்லையே என அப்பெண் தற்கொலைச் செய்துக் கொள்கிறாள். சமயங்களில் பிறருக்கு நாம் செய்யும் நன்மைகள் நமக்கே பெருந்துயரத்தைக் கொடுத்துவிடுகின்றன.

     ‘சராசரி’ என்ற கதை கணவன் மனைவியின் உரையாடலிலேயே நகர்கிறது.  அவர்களுக்குள் ஏற்படும் சிக்கல்தான் கதை.

      ‘வானம் பழுப்பதில்லை’ அம்மாவின் மரணத்தின் பிறகு தன் உடல் உழைக்க ஒத்துழைக்காததால் பிச்சை எடுக்க ஆரம்பிக்கிறான் மகன். அம்மா தனக்கு பாடிய தாலாட்டு பாடல்கள்தான் அவருக்கு மூலதனம். அது தொடர்கதையா இல்லை மாற்றும் வருகிறதா என்பது கதை.

     ‘சீசர்கள் குருசோக்கள் தான்’. கொள்கை பிடிப்புள்ள ஒருவர் காலமாற்றத்தால் எதிர்க்கொள்ளும்  ஏமாற்றமும் புறக்கணிப்பும்தான் கதை.

      ‘ஞானரதம்’. நாயகனுக்கு, எதிர்பாராத சந்திப்பில் தற்கொலைக்கு தயாரான ஒருவனுடனான உரையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. தனக்குத்தானே சொல்லவேண்டியதை எதிரில் உள்ளவருக்கு நாயகன் சொல்கிறார். கதையின் முடிவை கொஞ்சம் மாற்றியிருந்தால் கதை சிறப்பாக கதையாக மாறியிருக்க வாய்ப்பு உள்ளது. அதாவது, அறிவுரை கேட்டவரும் சொன்னவரும் ஒருவர்தான் என்பது போன்ற முடிவைக் கொடுத்திருக்கலாம்.

       ‘எரியாத நட்சத்திரங்கள்’ சுதந்திரம் பெற்றதிலிருந்து எதிர்நோக்கும் சிக்கல், சிவப்பு அடையாள அட்டை. இக்கதை அதன் சிக்கலை சொல்கிறது. மலேசியாவில் பெரும்பாலான கதைகள் இதனை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து எழுதப்படுகிறது. சொல்லுகின்ற விதத்தில் மட்டுமே அக்கதை கவனத்தை பெறுவதும் தோல்வியடைவதும் அமைகிறது.

       ‘மனக்குதிரை’. தற்கொலைக்கு தயாராகும் நாயகனின் வீட்டிற்கு நண்பனின் குடும்பத்தினர் வருகிறார்கள். பிள்ளைகளுடன் ஒரு வாரம் தங்குகிறார்கள். நாயகனுக்கு என்ன தேவை என்கிற தெளிவு கிடைக்கிறது. நாயகனின் தற்கொலை எண்ணம் மாறியதா என்பதுதான் மீதி கதை.

      ‘என் வாரிசுகள்’. கதை அழகாக சொல்லப்பட்டுள்ளது. தனது இறுதி காலத்தின் நிறைவில் முன்னாள் எழுத்தாளர் தன்னைப்பற்றி நினைவுக்கூர்கிறார். யார் யாரையெல்லாம் சந்தித்தார். ஏன் சந்தித்தார் என்பதுதான் கதை. கதையின் முடிவு வாசகர்கள் வருந்தமடைய வைக்கிறது.

       ‘நான் தனியாக இல்லை’. நாற்பது வயதில் பணி ஓய்வு பெற்றுக்கொள்ளும் நபர் அதற்கான நியாயத்தையும் அதன் தேவையையும் சொல்லிச்செல்கிறார். அவரின் வாழ்க்கை அதன் பிறகுதான் அவருக்கான வாழ்க்கையாக மாறும் என நம்புகிறார். தன் குடும்பத்தினரையும் அதற்கு பழக்குகிறார்.

       ‘பழைய தரையில் புதிய படுக்கைகள்’ வீட்டு வேலைக்கு வந்து சிரமப்படும் பொண்ணின் கதை. இவ்வாறான கதைகளின் முக்கியத்துவம் இன்றளவும் இருக்கிறது.

        ‘மனமெல்லாம் கைகள்’. தனது வீட்டில் புறக்கணிப்பை எதிர்க்கொள்ளும் நாயகன் அதற்கு மாற்றாக என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பது கதை.  நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது.

நிறைவாக;

      ஆதி. இராஜகுமாரன் குறித்தும் இந்த சிறுகதை தொகுப்பு குறித்தும் இன்னும் அதிகம் சொல்லலாம். சொல்ல வேண்டும். ஆனால் இக்கதைகளை பலரும் வாசித்து பேச வேண்டும் என்பதுதான் என் அவா. குறிப்பாக மலேசியாவில் எழுத விரும்புகின்றவர்கள் எழுத்தாளர்கள் இவரின் கதைகளை வாசிப்பதன் மூலம் நம்மிடையும் நல்ல கதைகளும் நல்ல கதைசொல்லிகளும் இருக்கிறார்கள் என மேற்கொண்டு பேசலாம். மகிழ்ச்சிக் கொள்ளலாம். மண்ணுலகில் மறைந்தாலும் மலேசிய இலக்கிய உலகம் என்றும் ஆதி.இராஜகுமாரன் பெயர் இருந்துக்கொண்டே இருக்கும்.

-      தயாஜி
  
      


ஏப்ரல் 19, 2020

புத்தகவாசிப்பு_2020_8 ‘நீலலோகிதம்’



        நாம் வாசிப்பதற்கான கதைகளை நாமே தேர்ந்தெடுக்கின்றோம். இது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு, கதைகளையும் அதற்கான வாசகர்களைத் தேர்ந்தெடுத்துவிடுகின்றன. நாம் வாசிக்கின்ற கதைகள் நமக்கு பிடிக்கின்றதா இல்லையா என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையாக நான் நினைப்பது ரசனை. எப்போது நாம் வாசித்து நமக்கு பிடிக்காமல் போன, நமக்கு புரியாமல் போன பல கதைகள் இன்று நமக்கு பிடிக்கின்றன புரிகின்றன. காரணம் குறிப்பிட்ட இடைவேளி நம்மையும் நமது ரசனையையும் வளர்த்திருக்கிறது.

        இப்படி என் நூலகத்தில் பல புத்தகங்கள் பாதி படித்த நிலையில் அப்படியே இருக்கின்றன. அதில் சிலவற்றை இப்போது வாசிக்கையில் ‘அட…இது அப்போது புரியாமல் போயிற்றே..’ என என்னை நானே நினைத்துச் சிரித்துக் கொள்கிறேன். ஆனால், முதல் வாசிப்பில் எனக்கு கிடைத்த அனுபவத்தை மிகவும் சுறுக்கமாக புத்தகத்தில் குறிப்புகளாக எழுதி வைத்திருப்பேன். இனி அவ்வாறான முதல் வாசிப்புக் கொடுக்கும்  அனுபவத்தையும் எனது வலைப்பூவிலும் முழுமையாக புரிந்தவரை எழுதலாம் என நினைக்கிறேன். இதனை வாசிக்கின்ற இதர நண்பர்கள் இதைப்பற்றி மேற்கொண்டு உரையாடவும் அது ஏதுவாக என் புரிதலுக்கு உதவியாக இருக்கும்.  ஒரு இடைவெளி கடந்தப்பின் மீண்டும் வாசிக்கும் போது அதனை எழுதுகையில் இரண்டு இரசனைக்கும் உள்ள வித்தியாசத்தை நானும் நீங்கள் அறிந்துக் கொள்ளலாம். 

      சில நாட்களுக்கு முன்பாக ஷீபா இ.கே-வின் ‘நீலலோகிதம்’ மலையாளச் சிறுகதை புத்தகத்தை வாசித்தேன். கவிஞர் யூமா வாசுகி மொழிப்பெயர்த்திருந்தார். இதுவரை ஷீபா இ.கே குறித்து எனக்கு எந்த அறிதலும் இருக்கவில்லை. ஆதலால் எந்த முன் முடிவுகளும் இல்லாமல் சிறுகதைகளை வாசிக்க எத்தனித்தேன்.

       மொத்தம் 23 சிறுகதைகள் இருந்தன. முழு தொகுப்பையும் படிக்கும் மனநிலையில் வரவில்லை. முதல் இரண்டு கதைகளில் ஏதோ குறைவதாக தோன்றியது. மேலும் மூன்று கதைகளை வாசித்தேன். இப்போதைக்கு இது போதும்  என தோன்றிவிட்டது.

      முதல் கதை ‘ஆட்டோகிராப்’. பிரிந்துவிட்ட காதலர்கள் ஆளுக்கொரு வாழ்க்கையை வாழ்கிறார்கள்.  காதலனுக்கு தாம்பத்தியம் நினைத்தது போல இருக்கவில்லை. காதலிக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன். மேற்படிப்பு படிக்கும் மகளை அழைத்துச் செல்ல காதலி வரவேண்டியுள்ளது. காதலனுக்கு தெரிவிக்கிறார். இருவரும் அங்கு ஒரு விடுதியில் தங்குகிறார்கள். என் அனுமதி இன்றி என்னை தொடாதே என்று காதலி சொல்லிவிடுகிறாள். அறையில் கட்டிலும் இரண்டாக இருக்கிறது. அவள் திரும்பி படுத்திருக்கிறாள். இருவரும் உள்ளுக்குள் ஏதும் நடந்துவிடாதா என்கிற எதிர்ப்பார்ப்பில் மனம் கணக்கிறார்கள். விடிகிறது காதலி மகளை அழைத்துப்போக புறப்படுகிறாள். பேருந்து நிலையத்தில் காதலன் அமர்ந்திருக்கிறான். ஏமாற்றத்தின் கரையான்கள் மிச்சப்பட்ட காதல் தாளையும் அரித்துத்  தின்னத் தொடங்கியிருக்கின்றன என சொல்லி கதையை முடிக்கின்றார். வெறும் சம்பவங்களாகவே இக்கதை தொடங்கி முடிந்துவிட்டது. சமீபத்தில் திரைகண்ட 96 திரைப்படத்தின் காட்சி போல இக்கதை அமைந்திருக்கும். ஆனால் இக்கதைதான் முதலில் வந்தது. ஏன் அவர்கள் ஆளுக்கொரு கட்டிலிலேயே அன்று உறங்கிவிட்டார்கள் என வாசகர்களை கதாசிரியர் தேட வைக்கிறாரோ என்னவோ.

      இரண்டாவது கதை, ‘சேஷம் சிந்த்யம்’ 60 வயதை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கிறார் லஷ்மியம்மா. கணவர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் தன் பேரழகிக்கு ஷஷ்சிப்தப் பூர்த்தியாடா என சொல்லியிருக்கலாம். வழக்கம் போல ஆற்றுக்கு குளிக்கச் செல்கிறார். ஆற்றிலிருந்த லஷ்மியம்மாவை  ஒரு பையன் பிடித்து இழுக்கிறான். தன் கழுத்து நகைக்குத்தான் அவன் இழுக்கிறான் என நினைக்கிறார். கழட்டிக் கொடுக்கிறார். அந்த பையன் அதனை உதறிவிடுகிறான். வன்கலவி  செய்யத் தொடங்குகிறான். அடுத்த கொடுமையாக லஷ்மியம்மாவின் கழுத்தை அழுத்திக் கொல்கிறான். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயாரான வீடு மரண ஓலத்தைக் கேட்கப்போகிறது. 

     சுருங்கச்சொன்னால், 60 வயது மூதாட்டியை ஒரு பையன் வன்கலவி செய்கிறான். அவன் கையால் சாவதற்கு முன்பாக அந்த பாட்டி என்னென்ன நினைக்கிறார் என்பது கூட சரியாக சொல்லப்படவில்லை. கதையில் தொடக்கத்தில் கடவுள் லஷ்மியம்மாவின் கதையை எழுதுவதாகத் தொடங்கி அவரே முடிவையும் எழுதிக்கொண்டிருப்பதாக கதாசிரியர் கதையை முடிக்கின்றார். இப்படியான ஒரு செய்தியை நானும் கேட்டிருக்கிறேன். தனியாக இருந்த ஒரு மூதாட்டியிடன் கொள்ளையடித்த இரு இளைஞர்கள், பதினெட்டு இருபது வயதுள்ளவர்கள், அந்த மூதாட்டியை வன்கலவியும் செய்திருக்கிறார்கள். இது வெறும் செய்திதானே இதில் என்னத்தை நாம் சொல்லிவிட முடியும். இலக்கியம் என்பது உள்ளதை அப்படியே சொல்வதா அல்லது அதன் உளவியலையும் காரணத்தையும் சொல்வதா என்கிற கேள்வி இங்கு எழுகிறது. இக்கதையில் அந்த பையனின் செயலுக்கான காரணத்தையும் அதன் பின்னனியையும் சொல்லியிருந்தால் இது முக்கிய கதையாக மாறியிருக்கும். ஆனால், அந்த ஆறு பகுதியில் கள்ளும் கஞ்சாவும் குடிக்கும் ஒரு தலைமுறை இருக்கிறது என்கிறார். இதுமட்டும் போதுமானது என நினைத்துவிட்டாரோ. கதைகளுக்கு வைக்கும் தலைப்பு மிக முக்கியமானது. இக்கதையின் தலைப்பு ‘சேஷம் சிந்த்யம்’, அதன் அர்த்தம், பிறகானது சிந்திக்க வேண்டியது. கதையை வாசித்து முடித்ததும் பிறகானது என்னவென்று வாசகரை சிந்திக்க வைத்து இக்கதையில் கதாசிரியர் சொல்லாமல் விட்டுவிட்டதாக நாம் குறைபட்டுக்கொள்ளும் எல்லாவற்றையும் நம்மையே தேட வைக்கிறார்.

   மூன்றாவது கதை ‘விடுமுறைக் காலம்’ . தான் சிறுவயதில் செய்த ஒன்று எத்தனை வேதனையைக் கொடுக்கிறது என்பது கதை.  உண்மையில் நல்ல கதை நல்ல கரு. பால்யத்தில் நடந்த அர்த்தம் புரியாத சம்பவங்களுக்கு பிறகொருநாள் நமக்கு பதில் கிடைக்கும். அந்த சமயம் நாம் அர்த்தம் புரியாமல் செய்துவிட்ட காரியத்தின் விஸ்வரூபம் எடுத்து நின்று நம்மை பயமூட்டும்.

     நான்காவது கதை ‘ராதாமோகனன்’. அதற்கு ‘ராதையை வசீகரிப்பவன்’ என்று பொருள். விரக்தியும் வாழ்வில் பெரிய பிடிமானம் இல்லாமல் இருக்கும் ராதாவை காகம் வசீகரிக்கிறது. கனவுகளாக கேள்விகளாக அவளும் காகத்தை தேடுகின்றாள். ஆனால் சொல்லவந்ததை முழுமைபடுத்தவில்லை. அவசரமாக கதையைத் தொடங்கி அவசரமாக கதையை முடித்துவிட்டதாக தோன்றுகிறது.

    இத்தொகுப்பில் நிறைவாக நான் வாசித்தது ‘நீலலோகிதம்’ என்னும் புத்தகத்தின் தலைப்புக் கதை. லோகிதாவிற்கு விவாகரத்து ஆகியிருந்தது. அவளின் அதீத பாலுறவு அவளின் விவாகாரத்திற்கு காரணமாகிறது. அதன் பிறகு, மனைவி பிள்ளைகள் இருக்கின்ற லோகிதாவிற்கும் நஜீமிற்கும் தொடர்பு ஏற்படுகிறது.

    மனைவி பிள்ளைகள் வீட்டில் இல்லாத சமயங்களில் இருவரும் கூடி மகிழ்கின்றனர். நண்பன் மூலமாக, மாணவர்கள் ஆபாசப்படங்களை கைபேசியில் வைத்துக் கொள்வதையும் அதனை தன் கடையில் வந்து பதிவிரக்கம் செய்வதையும் தெரிந்துக் கொள்கிறான். ஏனோ லோகிதாவையும் அவ்வாறு கைபேசி கட்டத்திற்குள் அடைத்து நண்பர்களுடன் பகிர நினைக்கிறான்.

    கட்டிலின் மேலே கேமராவை வைக்கிறான். அவளின் நிர்வாண  மேனி கேமராவில் புகுந்து கைபேசிகளுக்கு பரவ தொடங்குகிறது. தன் வீட்டிற்கு சகோதரியின்  பதின்மூன்று வயது மகன் வருகிறான். அவனிடம் இருந்த மெமரி கார்டை எடுத்து பாடல்களை ஏதும் உண்டா என பார்க்கும் நேரத்தில், அவளையே அவள் முழு நிர்வாணமாக பார்த்து அதிர்ந்துப்போகிறாள்.

     தன் வாழ்வை நினைத்து அழுகிறாள். ஆனாலும் நஜீமின் மீது அவளுக்கு இருக்கும் காதலை புரிந்துக்கொள்கிறாள். மேலும் அவனை நேசிக்க ஆரம்பிக்கின்றாள். அவனை மீண்டும் அவன் வீட்டு கட்டிலுக்கு தன்னை அழைக்க ஏற்பாடுகள் செய்கிறாள். அவ்வாறே வீட்டில் யாருமில்லாத சமயம் அவளை அழைக்கிறான். அவளும் ஆசையுடனும் கையில் பழக்கூடையுடனும் வருகிறாள்.

        இருவரும் இன்பத்தில் மூழுகுகிறார்கள். உடல் தாகம் தீர்ந்தப்பின் பழக்கூடையில் இருந்த கத்தியை எடுக்கிறாள். நஜீம் அலறுகிறான். அவனை லோகிதா சமாதானம் செய்கிறாள். ‘நீ வாழ வேண்டும்.. வாழ்ந்தே ஆக வேண்டும்’ என சொல்கிறாள். அதோடு ஆம்புலன்ஸ்கு அழைக்கிறாள்.

   அவனுடைய ஆண்மையுடன் ரத்தத்துடனே நடந்துச் செல்கிறாள்.

      இதனை வாசித்து முடிந்தததும் எனக்கு மாலினி பாளையங்கோட்டை என்கிற திரைப்படம் நினைவிற்கு வந்தது. முதலில் மலையாளத்திலும் பிறகு தமிழ்லிலும் வெளிவந்தது. தன்னையும் மற்ற பெண்களை ஏமாற்றியது போல ஏமாற்றிய காதலனின் ஆண்குறியை நாயகி வெட்டி எடுத்து அங்கே தையல் போட்டுவிடுவாள். அக்கதைப்படி அப்பாவி பெண்ணொருத்தி எடுத்திருக்கும் அடுத்தகட்ட அவதாரமாக அமைந்திருக்கும். வெறுமனே அப்படி வெட்டி எடுத்து தையல் போட முடியாது என்று தர்க்கம் செய்தாலும, கதையில் அதன் முடிவு அப்பெண்ணிற்கு கிடைத்த நீதியாகவே தெரிந்தது.

       ஆனால் லோகிதா அப்படியில்லையே. அவளுக்கு அதீத பாலுறவு வேட்கை இருப்பதாக சொல்லி கணவன் விவாகாரத்து வாங்குகிறான். அவளி அழகில் மயங்கி அவளை வசீகரிக்கிறான் நஜீம். நஜீமிற்கு மனைவி பிள்ளைகள் உண்டு. இருந்தும், அவனுடன் குற்றவுணர்வின்றி தொடர்பு கொள்ளும் நாயகி தனக்கு துரோகம் செய்தவிட்ட நஜீமின் ஆண்மையை வெட்டுகிறாள். நஜீமின் மனைவிக்கு லோகிதா செய்த துரோகத்திற்கு என்ன தண்டனை பெறப்போகிறாள் என்கிற கேள்வி எழாமல் இல்லை. இரண்டு திருடர்களில் ஒருவருக்கு மட்டும் ஒரு திருடன் தண்டனைக் கொடுத்து தான் மீண்டும் எப்போதாவது திருடலாம் என புறப்பட்டால் எப்படியிருக்கும். இக்கதையை இன்னமும் நன்றாக சொல்லியிருந்தால் எந்த கேள்விகளுக்கும் இடமில்லாமல் போயிருக்கும். ஆனால் கதையில் கதாப்பாத்திரங்கள் சரியாக சொல்லப்படாதது கதையை பலவீனமாக்கிவிட்டது என தோன்றுகிறது.

     இப்புத்தகம் வாசித்தவரை போதும் என நினைக்கிறேன். மீண்டும் இக்கதையை சிறிய இடைவேளி விட்டு படிக்கலாம். நண்பர்கள் யாரும் இப்புத்தகத்தை வாசித்திருந்தீர்கள் என்றால் மேற்கொண்டு இக்கதைகளைக் குறித்து நாம் பேசலாம். இக்கதைகளை நீங்கள் வாசிக்கையில் உங்களுக்கு வேறு கருத்துகள் இருக்கலாம். ரசனை என்பது அதுதானே. நாம் உரையாடலாம்.


- தயாஜி
-      



ஏப்ரல் 16, 2020

புத்தகவாசிப்பு_2020_7 ‘அபிதா’




        இப்படி ஒரு கதைச் சொல்லல் சாத்தியமா என வாசித்து முடித்ததும் தோன்றியது. முற்றிலும் நனவோடையில் சொல்லப்பட்டுள்ள கதை. லா.ச.ராமாமிருதத்தின் வாசிக்க வேண்டிய புததகம் என  பல எழுத்தாளர்கள் முன்மொழிந்த படைப்பு.

      வாசிக்க ஆரம்பித்த பொழுதில், ஏனோ முழுமையாய் உள்வாங்க முடியவில்லை. சிரமம். லா.ச.ராவின் எழுத்தினை முதலாவதாக வாசிப்பது அதன் காரணமாக இருக்கலாம். இதற்கு முன் அவரின் சிறுகதைகள் கூட வாசித்ததாய் நினைவில் இல்லை.

       மெல்ல அவரில் எழுத்தில் இருக்கும் கவிநயம் என்னை இழுக்க ஆரம்பித்தது. திரும்ப திரும்ப வாசிக்கிறேன், உரைநடை என் கண்முன்னே நிழலாடத் தொடங்கியது. கொஞ்சம் பிசகினாலும் கதையின் தன்மை கெட்டுவிடும். கத்தி மேல் நடப்பது போல தனக்கான பாதையில் மிக கவனமாக கதை பயணிக்கின்றது.

     காதல் கதைதான். அதிலும் தோல்வி கண்ட காதல் கதை. அதில் சொல்வதற்கு என்ன இருக்கப்போகிறது. சொல்லலாம். சொல்வதற்கு என்னவெல்லாமோ அதில் இருப்பதை லா.ச.ரா காட்டியுள்ளார். அம்பி கதாப்பாத்திரம் ஆசை, ஏக்கம், காதல், காமம், ஏமாற்றம், பழிவாங்கள் என எல்லாவற்றியும் தன் நினைவோடையில் சொல்லிச் செல்கிறார்.

       அம்பிக்கும் சாவித்திரிக்கும் எப்படி திருமணம் ஆனது என்பதில் இருந்து கதை தொடங்குகின்றது. அந்த தொடக்கம் கொடுத்த எதிர்ப்பார்ப்பு அடுத்தடுத்து காணாமல் போகிறது. உற்ற தம்பதிகளாக இருக்கப் போகின்றார்கள் என்ற வாசகர்களின் எண்ணம் மெல்ல மெல்ல மாறுகிறது. இவர்களுக்குள் இருப்பது ‘நீயா நானா’. யார் யாரைத் தோற்கடிக்கப் போகின்றார்கள் என்கிற பந்தயம்.

      ஒரு நாள் மழையின் தூறல் அழுகையாய் உருவெடுக்கிறது. அவளும் அப்படித்தானே அழுதிருப்பாள் என நினைக்கிறார். யாரவள். அங்குதான் அம்பியின் பழைய நினைவுகள் தொடங்குக்கிறது.  அங்குதான் சகுந்தலை அறிமுகமாகிறாள். அம்பியின் கடந்த காலத்தில் எத்தனையோ நம்பிக்கைகள் எத்தனையோ எதிர்ப்பார்ப்புகள். இருந்தும் சகுந்தைலையை விட்டு பட்டிணத்திற்கு ஓடிப்போகிறார்.

     வயோதிகத்தை நெருங்கிக்கொண்டிருந்தாலும் அம்பியின் வாழ்வில் ஏதோ ஒன்று குறைவதாகவே மனதில் படுகிறது. ஒரு நாள் தன் மனைவி சாவித்திரியுடன் தனது பழைய ஊருக்குச் செல்கிறார். அவர் எதிர்ப்பார்த்துச் சென்றவர்கள் பலர் அங்கு உயிருடன் இல்லை. அவரின் மனம் சகுந்தலையைத் தேடுகிறது. அவளுக்கு திருமணம் ஆகியிருப்பது தெரிகிறது. ஆனால் அவள் காணக்கிடைக்கவில்லை. அவள் இறந்துவிட்டாள் என அறிகிறார்.

     ஆனால், இறந்துவிட்ட சகுந்தலையே அவளில் மகளாக பிறந்து ‘அபிதா’வாக அவர் முன் நிற்கிறாள். யாரும் எதிர்ப்பார்க்காத திருப்பம் அது. அவளின் மரணத்திற்கு தான்தான் காரணம் என நினைக்கிறார்.சகுந்தலைதான் தனக்காக மீண்டும் பிறந்திருக்கிறாள் எனவும் நினைக்கிறாள்.

   அம்பியின் மனம் அபிதாவை எப்படிப் பார்க்கிறது. அவர் என்ன செய்யப் போகிறார். ஏன் அதுவெல்லாம் நடக்கிறது. அவரின் அடுத்த நடவடிக்கை என்ன, என நாவல் வாசகர்களை தன் பக்கம் ஆழமாக இழுத்துக் கொள்கிறது.

     தனக்கே உரிய கவிதை நடையில் நாவல் முழுக்கவும் நம்மை ஈர்க்கின்றார். ஒவ்வொன்றையும் நம் கண்முன்னே காட்டுகிறார். நம்முன்னே பல கேள்விகள். நமது கடந்த காலத்தை நோக்கி விசாரணையை முன் வைக்கிறது. வாசிக்க வேண்டிய நாவல் என பலரும் முன்மொழிவதற்கு நிச்சயம் காரணம் இருக்கத்தான் செய்கிறது. 

-      தயாஜி

புத்தகவாசிப்பு_2020_6 ‘வீடில்லாப் புத்தகங்கள்’




       புத்தகங்களை எங்கிருந்து வாங்குகின்றீர்கள். வழக்கம் போல புத்தகக்கடைகளில் தானே எங்கின்றீர்களா? ஆமாம். ஆனால் புத்தகக்கடைக்குச் சென்று வாங்குகின்றிர்களா அல்லது இணையம் வழி புத்தகங்களை வாங்குகின்றீர்களா?. தொழில்நுட்ப முன்னேற்றம், நேர மிச்சம் இணையம் வழிதான் வாங்குகின்றோம் என்கிறீர்கள்தானே. புத்தககமாக யார் வாங்குகிறார்கள், வீட்டில் அடுக்கி வைக்க இடமா இருக்கிறது. மின்நூல்களாக வாங்கிக்கொண்டு கணினியில் சேமித்து வைக்கின்றோம் என்கின்றீர்களா? குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. உலகோடு ஒட்டிதான் வாழ்ந்தாகவேண்டியுள்ளது.

        கோவிலுக்கு அருகில் ஒரு பூக்கடை இருக்கிறது. ஒரு பாட்டி இன்றும் தன் வயிற்றுக்கு தானே உழைத்து வாழ நினைக்கிறார். ஒரு விஷேஷ நாளில் வியாபாரமாகும் என நினைத்து, கைவசம் இருந்த பூக்கள அனைத்தையும் மாலைகளாகத் தொடுத்துவிட்டார். அவரின் துரதிஷ்டம் அன்று மழை.  வியாபாரம் ஆகவில்லை. அன்றை வியாபாரம் அவருக்கான நாளைய உணவு. இன்னும் கொஞ்ச நேரத்தில் கோவிலை மூடப்போகிறார்கள். அப்போது ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து ஒருவர் இறங்குகின்றார். நேராக பூக்கடைக்கு வருகிறார். கட்டி வைத்திருந்த பூ மாலைகளில் எதையோ தேடுகிறார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கிருந்த மொத்த பூ மாலைகளையும் அவரே வாங்கிக்கொண்டு புறப்பட்டுவிட்டார். இப்போது அந்த பாட்டியின் மனநிலையை நினைத்துப்பாருங்கள். அந்த கண்கள் இந்நேரம் கலங்கியிருக்கும் தானே. கோவிலுக்கு அருகில் கடை இருந்தாலும், இப்போது அந்த பாட்டிக்கு கடவுள் யாராக தெரிவார். இனி அந்த பாட்டியால் அந்த நபரை மறக்கத்தான் முடியுமா என்ன. அப்படியான மனிதர்களும் அவர்கள் கண்ட கடவுகளையும் உங்களுக்கு காட்டுவதுதான் இந்த புத்தகம் ; ‘வீடில்லாப் புத்தகங்கள்’.

        சக மனிதர்கள் மீதான அன்பையே தன் எழுத்தின் பிரதானமாகக் கொண்டிருக்கும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. இக்கட்டுரைகளை தமிழ் இந்துவில் அவர் எழுதியிருந்தார். தனது கதைகளில் மட்டுமல்ல தனது இதர படைப்புகளியும் அவர் முன்னிலைப்படுத்தி நம் கண் முன்னே காட்டிச்செல்வது நாம் கவனிக்க மறந்த அல்லது கவனிக்கத் தவறிய சக மனிதனின் வாழ்வைதான்.

       தனக்கு மிகவும் பிடித்த பழைய புத்தகக்கடைக்கும் தனக்குமான உறவையும் அங்கு இவருக்கு கிடைத்த புத்தகங்களின் அறிமுகங்களையும் இந்நூலில் கொடுத்திருக்கின்றார். அதோடு அங்கு அவர் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையில் நம்மிடம் பகிர்ந்து அதனையும் பதிவு செய்திருக்கின்றார்.

       பழைய புத்தகங்களை விற்பவர்கள் வெறும் வியாபாரிகள் அல்ல. பணம் தான் பிரதானன் என்றால் செய்வதற்கு அவர்களுக்கு பல வேலைகள் கிடைக்கும். ஆனால், அவர்கள் மனம் லயிப்பது புத்தகங்களில்தான். அதனை வாங்கிச் செல்கின்றவர்களின் கண்களில்; நான் தொடக்கத்தில் சொன்ன பூக்காரப் பாட்டி பார்த்த அந்த முகம் தெரியாத நபர் போல பலர் தெரிந்துக்கொண்டே இருக்கிறார்கள்.
      ஒவ்வொரு பழைய புத்தகக்கடையில் தனக்கு கிடைத்த அரிய புத்தகங்களின் அறிமுகத்தினை வழக்கம் போலவே சொல்லி நம்மையும் அந்த புத்தகங்களைத் தேட வைக்கின்றார். புத்தகத்தில் மொத்தம் 56 தலைப்புகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு புத்தகத்தையோ அல்லது இரண்டு புத்தகத்தையோ நமக்கு அறிமுகம் செய்கின்றார்.

      மழை நாளில் , தன்னிடமிருந்த புத்தகங்களை மூட்டைக்கட்டி ஒருவர் எஸ்.ராவின் வீட்டுக்கதவைத் தட்டுகிறார். வேறு வழியில்லை புத்தகங்களை எடுத்துக்கோங்க, எவ்வளவு தோணுதோ அவ்வளவு கொடுத்தா போதும் வீட்டில் பிள்ளைகள் பசியுடன் இருப்பதாகச் சொல்கிறார்.

     புத்தகம் வாங்கிப்படிக்க பணமில்லாத ஒருவருக்கு ஒரு கடைக்காரர் கடையிலேயே ஒரு நாற்காலியை போட்டுக்கொடுத்து எவ்வளவு வேணுமோ அவ்வளவு படிச்சிக்கோங்க என்கிறார். சும்மா படிக்க முடியாத அவரும் அங்கு வருகின்றவர்களுக்கு தேவையான புத்தைகங்களை அறிமுகம் செய்கிறார்.

      தன் கணித ஆசிரியர் ஞானசுந்தரத்தை குறித்து சொல்கிறார். அவருக்கும் புத்தகங்களுக்குமான தொடர்பை ஒரு சம்பவந்ததின் மூலம் சொல்கிறார். தன்னிடம் கேட்காமல் புத்தகத்தை எடுத்துச்ச் என்றவரிடம் சண்டைப்போட்டு உறவையும் முறித்திருக்கிறார். ஒரு சமயம் எஸ்.ராவிற்கு அவரின் கணித ஆசிரியர் கையொப்பம் இட்ட பழைய புத்தகம் ஒன்று கிடைக்கிறது. விசாரிக்கையில், ஒரு பெரியவர் இறந்துவிட்டப்பிறகு அவரது புத்தகங்களை குடும்பத்தினர் எடைக்கு போட்டுவிட்டதை தெரிந்துக்கொள்கிறார். ஆசிரியர் இறந்தப்பிறகு அவரது புத்தகங்களை காப்பாற்றக்கூட வீட்டினர் தயாராய் இருக்கவில்லை. இதனை வாசித்து முடித்தததும் ஒரு முறை எழுந்துச் சென்று எனது புத்தக அலமாரியில் நிறைந்துக் கிடக்கும் புத்தகங்களைத் தொட்டுப்பார்த்துக் கொண்டேன். என் அடுத்த தலைமுறை உங்களை எப்படி பார்த்துக்கொள்ளப்போகிறார்கள் என தெரியவில்லை.

      தன்னை சந்திக்க வருகின்றவர்களுக்கு புத்தகங்களையே நினைவாக கொடுத்தனுப்பிகின்றார் ஒருவர். அதற்காகவே புத்தகங்களை வாங்குகின்றான். அவர் மருத்துவமனையில் இருக்கும் போதுகூட அவரை சந்திக்க வந்திருந்தவர்களுக்கு புத்தகங்களையே கொடுக்கின்றார். ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக அவரின் மகன் கடைக்கு வந்து அதிகமான புத்தகங்களை வாங்குகின்றார். காரணம் விசாரிக்கையில், அவரது தந்தை இறந்துவிட்டதாகவும், துக்கத்தில் கலந்துக் கொள்கின்றவர்களுக்கு அவரின் நினைவாக புத்தகங்களைத்  தரவுள்ளதாகச் சொல்கிறார்.

      இப்படி, இப்புத்தகம் முழுக்கவும் பலவிதமான புத்தகங்கள் பற்றிய அறிமுகங்களைக் கொடுக்கின்றார். பல எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிச் சொல்கிறார். பழைய புத்தகக்கடை கொடுத்த அனுபவத்தையும் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் பேசி நம்மை கலங்க வைக்கிறார். கதைகளில் மட்டுமல்ல கட்டுரைகளிலும் கூட வாசகரை கலங்க வைக்க முடியும் என்பதை புரிந்துக்கொண்டேன். இன்னும் இந்த புத்தகம் காட்டிய மனிதர்களைப் பற்றி பேசலாம். ஆனால் அதனை நீங்களாக வாசிக்கையில் உங்களுக்கு ஏற்படும் கலங்களைத் தடுக்க நான் விரும்பவில்லை.

    நிறைவாக; எழுத்தாளர்கள், எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு. எங்கிருந்தெல்லாம் கதைகள் கிடைக்கின்றன. எதனை கதைகளாக்கலாம். எங்கிருந்து எங்கு அதன் இணைப்பைச் சேர்க்கலாம். என்ற நுணுக்கங்களை இக்கட்டுரைகளில் சொல்லப்பட்ட பகிர்வின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். வாசித்து முடித்ததும் இப்புத்தகத்தில் எங்கெல்லாம் கதைகளுக்கான ஆதர கருக்கள் உள்ளதென நான் குறித்துவைத்துக் கொண்டதை வாசிக்கின்றேன். புத்தகத்தை மூடி வைத்து, பால்கனியில் இருந்து பார்க்கிறேன் எத்தனை மனிதர்கள் எத்தனை கதைகளைச் சுமந்துக் கொண்டுச் செல்கிறார்கள்.


-      - தயாஜி

ஏப்ரல் 07, 2020

புத்தகவாசிப்பு_2020_5 ‘கதைகள் செல்லும் பாதை’




     மிகுந்த மகிழ்ச்சியில் இதனை எழுதுகிறேன். புத்தக வாசிப்பு என்பது பொழுது போக்கிற்காக அல்ல. பொழுதும் போகும்தான் அதே சமயம் அதனை தாண்டியது அதன் பயணம். முதலில் கதை எதனால் சொல்லப்படுகிறது யாருக்காகச் சொல்லப்படுகிறது என்பது யோசிக்கையில் மனதில் பல பதில்கள் கிடைக்கும். என் வரையில் அது ஒரு வழிகாட்டியின் தகவல் பறிமாற்றம். வழிகாட்டுதல் என்பது பயணத்திற்கு எத்தனை உதவியாக அமையும். மிக நீண்ட பயணத்தின் சிக்கல்களை கலைவதற்கும், கேள்விகளை முன்வைக்கவும் வழிகாட்டி உதவும். அதெப்படி வழிகாட்டி கேள்விகளை முன்வைக்க உதவும். நம் கைக்கு கிடைத்த வழிகாட்டியில் செல்ல வேண்டிய இடம் இருக்கிறது. ஆனால் அவ்வழியில்தான் செல்லவேண்டும் என்பதில்லை, பயணம் செய்து பழகியவர்கள் காட்டில் கூட காற்றில் வழி திசை அறிந்து பயணிப்பார்கள்தானே. இதன் வழி நமக்கான வழியை நாம் கண்டுக்கொள்ளலாம்.

      நான் ஒரு ‘குறுங்கதை’ எழுதியிருந்தேன். தனது வேண்டுதலுக்காக திடீர் பக்தன் மலைமேல் ஏறுகிறான். அவ்வழி முழுவதும் ஒத்தையடிப்பாதை. உயிரை பணையம் வைத்து மூன்று நாட்கள் பல சிக்கல்களை கடந்து அவன் கோவிலை அடைகிறான். கோவில் வாசலில் ஒருவர் கேட்கிறார்; “ஏன்பா அதான் முன்பக்கமா நல்ல சாலை போட்டிருக்காங்களே, கார்லயே வந்திருக்கலாம்தான..?”. அப்போது அந்த பக்தனின் மனநிலை எப்படியிருந்திருக்கும். ஒரு முறை இருமுறை என்றால் அது அனுபவமாக இருந்திருக்கலாம் ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படி பயணிக்கும் மனிதனுக்கு விரக்தி வந்துவிடாதா? வாசிப்பும் அப்படித்தான். உங்களுக்கு புத்தகங்கள் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் சரியான புத்தகங்களை வாசிக்கவில்லை என்பது பொருள் என ஆங்கிலத்தில் சொல்வார்கள். சரியானதை வாசிக்காமல் அடுத்தவர் வாசிப்பை குறை சொல்பவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்தானே.

        பல ஆண்டுகள் பயணிக்க வேண்டிய பாதைக்கு உங்களிடம் ஒருவர் வழிகாட்டியைக் கொடுக்கிறார். அதிலும் அவர் கொடுத்திருப்பது பல ஆண்டுகளாக அவர் தேடி அழைந்த பயணத்தின் குறுக்குவழி என்றால் சொல்ல வேண்டுமா?. அதனைத்தான், ‘கதைகள் செல்லும் பாதை’ என்ற தலைப்பில் வாசகர்களுக்கு  கையில் கொடுத்திருக்கிறார் எஸ்.ரா. வாசகர்களுக்கு முக்கியமான எழுத்தாளர்களுக்கு  அத்தனை முக்கியமானது இந்த புத்தகம். இதனைக் கொடுத்த அவரின் கைகளுக்கு வாசகனாய் என் முத்தத்தைக் கொடுத்துவிடுகிறேன்.
     புத்தகத்திற்குச் செல்வோம்.

        ‘கதைகள் செல்லும் பாதை’ உலகப் புகழ்பெற்ற சிறுகதைகளையும் அதன் நுட்பங்களையும் அழகியலையும் நமக்கு கற்றுத்தருகின்றன. வடிவத்தில் சோதனை செய்த கதைகள், மிகைக்கற்பனையும் புனைவும் கொண்ட கதைகள் என பல மாறுபட்ட கதைகளை இப்புத்தகம் அறிமுகம் செய்கிறது.

     மொத்தம் 23 தலைப்புகளில் இக்கட்டுரைகளை எழுதியுள்ளார். அதிலிருந்து சில தலைப்புகளைப் பார்க்கலாம். அருண் ஜோஷி: பயமும் காமமும், போர்ஹே: இரண்டு குற்றங்கள், ரஷ்யாவிற்கு வெளியே, ஆண்டன் செகாவ்: எழுதப்படாத கதைகள், அம்ரிதா ஏயெம்: விலங்குகள் நடத்தை, எட்கர் கெரெட்: தலைகீழ் மாற்றம்.

           பல முக்கியமான எழுத்தாளர்கள்  இப்புத்தகத்தின் வழி அறிமுகமாகிறார்கள். முதல் கட்டுரையில் சாகித்ய அகாதமி பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளர் அருண் ஜோஷியை குறித்தும் அவரின் ‘குழலூதும் பையன்’ சிறுகதை குறித்தும் பேசுகிறார். வணிகனின் மனம் எப்படி அவரது வாழ்வையும் கணக்கிட சொய்கிறது என்பது கதை. தனது பயத்தை காமத்தின் வழி கடக்க முயற்சிக்கிறார். பயத்தை கலைவதற்கே இன்னொரு பெண்ணின் துணை அவருக்கு தேவை. அவரின் கணக்கு சரியானதா இல்லையா என்பதுதான் கேள்வி. ஆனால் கதையின் முடிவில் விரக்தியில் நடக்கிறார். வழியில் சிலர் அவரிடம் கொள்ளையடிக்கிறார்கள். சண்டை செய்கிறார்கள். அடி வாங்கி மயங்கி விழுகிறார். அவருக்கு ஒரு சிறுவன் உதவுகிறான். பொழுது விடிகிறது. அச்சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு பணம் கொடுப்பதற்கு தான் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்று பணம் கொடுக்கப்பார்க்கிறார். அச்சிறுவனைக் காணவில்லை. அவன் யாராக இருக்கும் என்கிற கேள்வியே வாசகர் மனதில் பல பதில்களைக் கொடுக்கின்றன.

          ஜென் கவிதைகளைப் போலவே சிறுகதைகளையும் கவித்துவமான வரிகளைக் கொண்டு எழுதுகிற ஜப்பானிய  எழுத்தாளர்  ‘யாசுனாரி கவாப்ட்டாவைக்’ குறித்துச் சொல்கிறார். பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் வயதானவர் செல்கிறார். அந்த அறையில் கொசுவலை இல்லை. வாடிக்கையாளர்களின் தேவை முடிந்தப்பின் அவள்தான் இரவு முழுக்க அவர்களுக்கு கொசு கடிக்காமலிருக்க விசிறிக்கொண்டே இருக்கிறாள். அங்கு வரும் கிழவர் தூங்காத அவளின் கண்களை கவனிக்கிறார். கொசுவலை இல்லாததைத் தெரிந்துக்கொண்டு வெளியேறுகிறார். திரும்ப கொசு வலையோடு வருகிறார். கட்டிலை சுற்றி மாட்டிவிடுகிறார். அப்பெண் கட்டிலில் ஏறிப்படுக்கிறாள். கொஞ்ச நேரத்தில் அவள் கண்கள் சொக்குகின்றன. கொசுவலையில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்கிற அவள் கனவு பலிக்கிறது. ஆழ்ந்து உறங்கிவிடுகிறாள். விடிகிறது. கிழவரைக் காணவில்லை. எங்கே படுத்திருந்தார் எப்போதுப் புறப்பட்டார் என தெரியவில்லை. அவளது காதலன் வந்தே அவளை எழுப்புகிறான். அவர்களின் உரையாடல் அவளை மணப்பெண்ணாக உணர வைக்கிறது. பின்னர் நிதானமாக அவள் தன் கால் நகங்களை வெட்டத் துவங்குகின்றாள். நீண்ட நாட்களாக தன் கால்களைக்கூட அவள் கவனிக்காதது அவளுக்குத் தெரிகிறது. நல்ல கதைகளை நகங்களில் இருந்துக் கூட சொல்ல முடியும் என்பதனை சொல்கிறார்.

         அடுத்து ரஸ்கின் பாண்ட் எழுதிய ‘இல்லாத கண்கள்’ சிறுகதையை சொல்கிறார். அவர் சொல்லி முடித்ததும் அக்கதையை தேடி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டிவிருகிறது. ரயிலில் செல்லவிருக்கும் நாயகிக்கு அவள் குடும்பத்தினர் பல அறிவுரைகளைச் சொல்லி அனுப்புகின்றார்கள். ரயிலில் பயணம் செய்கிறாள். அவளது எதிரில் பார்வை இழந்த இளைஞன் இருக்கிறான். அவள் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவன் பேச்சை தொடங்குகின்றான். தான் பார்வை அற்றவன் என்பதை அவள் கண்டுக்கொண்டாளா என அவனுக்குத் தெரியவில்லை. அவனது உரையாடல் அவளை வெட்க்கப்பட்டு சிரிக்க வைக்கிறது.  உரையாடல் அதிகம் இல்லையென்றாலும் அவளின் இருப்பு அவனுக்கு பரவசத்தைக் கொடுக்கிறது. அடுத்த நிலையத்தில் அவள் இறங்கவேண்டும். வருகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகின்றாள். அவள் இடத்தில் இன்னொரு இளைஞன் வருகிறான். பார்வையற்ற இளைஞன் முன்பு இங்கு அமர்ந்திருந்த பெண் போல தன அவ்வளவு கவர்ச்சியாக இல்லை என்றுச் சொல்லி சிரிக்கிறான். அதோடு அந்த பெண்ணைப் பற்றியும் அவளது அழகு, சிகை அலங்காரம் பற்றி ஆர்வமாக விசாரிக்கின்றான்.  ஆனால் அந்த இளைஞனோ, அதையெல்லாம் தான் கவனிக்கவில்லை எனவும் அவள் அழகாக பெண் ஆனால் அவள் முழுமையாக பார்வையற்றவள் என சொல்லி அதனை அவன் கவனிக்கவில்லையா என கேட்கிறான்.  கதையை அங்கு முடிக்கின்றார் ‘ரஸ்கின் பாண்ட்’. பார்வையற்ற இருவரின் ரயில் பயணத்தில் இருவருக்கும் அது பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அந்த சந்திப்பும் அவர்களுக்குள் ஏற்படுத்தும் சலனமும் இக்கதையில் அழகாகச் சொல்லப்பட்டிருப்பதாக சொல்கிறார்.

    இப்புத்தக வாசிப்பு, இன்பத்தையும் கூடுதலாக இன்ப அதிர்ச்சியையும் எனக்குக் கொடுத்தது. சமீபத்தில் நான் வாசித்து சிலாகித்த சிறுகதைகளையும் அதன் எழுத்தாளரையும் பற்றி நாம் பெரிதும் வியந்து பார்க்கும் எழுத்தாளர் முன்மொழிவதுதான் அது.

       ‘அம்ரிதா ஏயம்: விலங்கு நடத்தைகள்’ என்கிற கட்டுரை. நான் வாசித்த கதைகள் குறித்து தொடர்ந்து எனது வைப்பூவில் #கதைவாசிப்பு என்ற தலைப்பில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் எழுத்தாளர் அம்ரிதா ஏயம் குறித்தும் அவரது ‘விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்’ என்ற புத்தகத்தில் வாசித்த சில கதைகளைக் குறித்து எழுதியிருந்தேன். அதில் எனக்கு விருப்பமான கதைகளையும் பற்றி எஸ்.ரா மேலும் இப்புத்தகத்தில் பேசுகின்றார்.. நிச்சயம் இந்த புத்தகமும் அவரது கதைகளும் பரவலாக அறியப்படும் என நம்புகிறேன்.

     நிறைவாக,

        அதிகம் சொல்லிவிட்டேனா என்ன? உண்மையில் இன்னும் இப்புத்தகத்தைப் பற்றி சொல்லத்தான் தோன்றுகிறது. சொல்லத்தான் வேண்டும் . “யான் பெற்ற இன்பம்….” தான் காரணம். வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்த புத்தகத்தை தாராளமாக முன்மொழியலாம். வாங்கிப் பரிசளிக்கலாம். வாசிக்க வேண்டிய பல எழுத்தாளர்களின் அறிமுகமும் கதைகள் நாவல்களையும் நாம் அறிந்துக் கொள்ளலாம். 

     இக்கதைகளைப் பற்றி எஸ்.ரா சொல்வதைக் கவனித்தால் , கதை வாசிப்பில் எப்படியெல்லாம் நாம் நமது சிந்தனையை ஓடவிடலாம் என பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். மேலும் நம் வாசிப்பு தளத்தை விரிவுப்படுத்த இப்புத்தகம் உதவும். இதே தலைப்பில் எஸ்.ரா தனது இணையப்பக்கத்திலும் மேலும் பல கதைகள் எழுத்தாளர்கள் குறித்து எழுதியுள்ளார் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

-       தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்