பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

#கதைவாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#கதைவாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜூலை 08, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘சொற்களின் புதிர்பாதை’

புத்தகவாசிப்பு_2021 ‘சொற்களின் புதிர்பாதை’

தலைப்பு –‘சொற்களின் புதிர்பாதை’
வகை – கட்டுரைகள்
எழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு – தேசாந்திரி பதிப்பகம்
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)


        அன்பின் எஸ்.ராவின் புத்தகம். வாசிக்க வேறென்ன காரணம் இருக்க வேண்டும். அவரின் எழுத்துகளைத் தொடர்ந்து இணையத்தில் வாசித்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் அதனை புத்தக வடிவத்தில் ஒரு தலைப்பின் கீழ் வாசிப்பதில் இன்பம் இருக்கவே செய்கிறது.

        தேர்ந்த எழுத்தாளர்கள் தன் படைப்பின் மீது மட்டுமே தம் வாசகர்கள் ஆர்வம் கொண்டிருப்பதை விரும்புவதில்லை. தான் ரசித்த தன்னை பாதித்த பிற படைப்புகளையும் பிற படைப்பாளிகளையும் தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தபடியே இருக்கிறார்கள். அதுவே தம் வாசகர்களுக்கு அவர்கள் செலுத்தும் நன்றியாகப் பார்க்கின்றேன். வாசகர்களின் வாசிப்பை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்ல அதுவே வழி. இவ்வாறாக எஸ்.ராவின் கட்டுரைகள் வழி பல மொழி படைப்புகள் குறித்தும் படைப்பாளிகள் குறித்தும் அறிந்துக் கொண்ட வாசகர்களின் நானும் ஒருவன்.

        இதில் எஸ்.ரா சில ஆச்சர்யம் தரும் விடயங்களையும் அவ்வப்போது செய்துவருகின்றார். அவர் சொல்லி நாம் வாசித்து அறிந்த எழுத்தாளர்கள் போல, நான் வாசித்து ரசித்த படைப்புகள் குறித்தும் எழுத்தாளர்கள் குறித்தும் எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாகவும் சில கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். இவற்றை வாசிக்கும் பொழுது ஒரு வாசகனாக என் வாசிப்பின் மீதே எனக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் வந்துச் சேர்கின்றது.

        ‘சொற்காளின் புதிர்பாதை’ கட்டுரை தொகுப்பு 2019 தேசாந்திரி பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. தமிழ் இலக்கிய ஆளுமைகள் மட்டுமின்றி சமகால மலையாள படைப்பாளிகளை பற்றிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 26 கட்டுரைகள் அடங்கியத் தொகுப்பு இது.

        தொகுப்பில் முதல் கட்டுரையாக ‘ சொற்களின் புதிர்பாதை’ எனும் கட்டுரை இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையில் மலையாளத்தில் முக்கிய சிறுகதையாசிரியராக இருக்கும் அஷ்டமூர்த்தி குறித்து எழுதியுள்ளார். அவரின் கதைகளை சிதம்பரம் ரவிச்சந்திரன் தமிழாக்கம் செய்துள்ளதைக் குறிப்பிட்டு அவர் கண்பார்வை அற்றவர் என்கிறார். அவரால் எப்படி மலையாளத்தில் இருந்து கதைகளை தமிழாக்கம் செய்ய முடிகின்றது என்பதையும் விவரிக்கின்றார். அதோடு அஷ்டமூர்த்தியின் கதைகள் குறித்தும் தன் பார்வையைச் சொல்கின்றார்.

        ‘ரகசியத்தின் வரைபடம்’ என்கிற கட்டுரை இரண்டாவதகா வருகின்றது. சமீபத்தில் எஸ்.ரா வாசித்த மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பாக ஷங்கர் ராமசுப்ரமணியனின் ‘கல் முதலை ஆமைகள்’ என்கிற கவிதைத் தொகுப்பைக் குறிப்பிடுகின்றார். கவிஞரின் கவிதைகளின் மூலம் குறித்தும் அதன் போக்கு குறித்து தொடர்ந்து விவரிக்கின்றார். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கவிதை தொகுப்பாக இத்தொகுப்பை தன் அறிமுகத்தின் வழி வாசகர்களுக்கு கோடி காட்டியுள்ளார்.

        கி.ராஜநாராயணன் குறித்து எஸ்.ரா பேசினாலும் சரி எழுதினாலும் சரி, கேட்டுக்கொண்டும் வாசித்துக் கொண்டுமே இருக்கலாம் போலிருக்கும். ‘இந்த அவள்’ என்கிற கட்டுரையில் 96 வயதில் கி.ரா எழுதியிருக்கும் குறுநாவல் குறித்து எழுதியுள்ளார். அந்நாவலின் தலைப்புதான் ‘அந்த இவள்’.

        ‘போகனின் கவிதைகள்’ என்ற கட்டுரை வழி வாசகர்கள் போகனின் கவிதைகளை எப்படி புரிந்துக் கொள்ளலாம் எனச் சொல்கின்றார். இக்காட்டுரை போகனின் கவிதைகள் குறித்து மட்டுமின்றி அவரின் சிறுகதைகளை அறிந்துக் கொள்ள உதவும்.


        ‘தோப்பில் எனும் காலத்தில் குரல்’ என்ற கட்டுரை வழி தோப்பில் முகமது மீரானின் எழுத்துகளை வாசிக்கவேண்டிய அவசியத்தைச் சொல்கின்றார். இக்கட்டுரை தோப்பில் முகமது மீரானின் நாவல்கள் மீதான என் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது எனலாம்.


        ‘பிரபஞ்சனின் இணையற்ற தோழமை’ எனும் கட்டுரை வழி கண்களைக் கலங்க வைத்துவிடுன்கிறார். எழுத்தில் மட்டும் அன்பையும் அறத்தையும் காட்டிவிட்டு நிஜத்தில் அதற்கு புறம்பாக நடந்துக்கொள்பவர்கள் மத்தியில் பிரபஞ்சன் எத்தனை அன்பாக இருந்திருக்கின்றார் என உணரவைக்கின்றார்.

        ‘வசந்தத்தில் ஓர் நாள்’ எனும் கட்டுரையில் ஒரு சிறுகதையை புகுத்தியுள்ளார். சினிமா பாடல்கள் வெறும் பாடல்கள் மட்டுமல்ல. அதற்கு மனித மனங்கள் கொடுக்கும் இடம் மிக முக்கியமானது. நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்யவும் துன்பத்தை அழுகையாக்கி கரைக்கவும் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கவும் பாடல்கள் பல வகைகளில் பயன்படுகின்றன என அவர் சொல்லும் போது அதனை மறுக்க நம்மால் முடியவில்லை.


        ‘எழுத்தாளனின் தீபாவளி’ என்னும் கட்டுரையில் தன் சிறுவயதில் கொண்டாடிய தீபாவளிக்கும் இன்று கொண்டாடப்படும் தீபாவளிக்குமான இடைவெளியைச் சொல்கிறார். நாம் எத்தனை இழந்துவிட்டிருக்கின்றோம் என மனம் ஏங்கத்தான் செய்கிறது.

        இத்தொகுப்பில் பல கட்டுரைகளில் வாசகர்கள் வாசிக்க வேண்டிய எழுத்தாளர்கள் அவர்கள் கதைகள், புத்தகங்கள் என ஒரு பட்டியலே இடும் அளவிற்கு குறிப்புகளைக் கொடுத்திருக்கின்றார். இந்த ஒரு புத்தகம் வாசகர்களுக்கு பல்வேறு வாசிப்பின் திறப்புகளாக சாவியைக் கொடுத்திருக்கின்றது.


மே 24, 2021

#கதைவாசிப்பு_2021 ‘தேவகியின் தேர்’

#கதைவாசிப்பு_2021 ‘தேவகியின் தேர்’

தலைப்பு – தேவகியின் தேர்

எழுத்து-  எஸ்.ராமகிருஷ்ணன்

வகை – சிறுகதை

பிரசுரம் – மே 22 (எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம்)

சிறுகதையில் ஒன்றை சொல்லியும் சொல்லாமலும் வாசகர்களிடம் அதன் முடிவை கொடுப்பது ஒரு கலை. எஸ்.ரா அவர்களுக்கு அது கை வந்த கலை. அதற்கு சான்றாக இக்கதையைச் சொல்லலாம்.

‘தேவகியின் தேர்’ என்பது தலைப்பாக இருந்தாலும், இறுதியில் தேவகியும் தேரும் ஒரே பொருளாக மாறிவிடுவதில் சிறுகதை தனித்து நிற்கிறது. ஆணாதிக்க குடும்பம் என்பதை நாயகியின் அப்பாவின் அறிமுக காட்சியிலேயே நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.

அவ்வூரில் இருக்கும் நூறு வருடங்களுக்கும் பழமையான தேரை பார்க்க வெளியூரில் இருந்து லியோன் என்கிற இளைஞன் வருகிறார். அப்பாவின் கட்டளையின் படி லியோனை ஹரி அழைத்துச் செல்கிறார்.

தொடர்ந்து அந்த தேர் பற்றியும் ஆண்டுதோறும் நடக்கும் பங்குனிப் பெருவிழாவை பற்றி ஆசிரியர் சொல்லிச் செல்வது நாமும் அவ்விழாவில் கலந்து கொண்ட உனர்வை தருகிறது. எங்கிருந்தோ வந்த வெள்ளைக்கார லியோனுக்கு அவ்வூர் தேரை பற்றி பல விபரங்கள் தெரிகின்றது. அதன் சிற்பங்கள். அதன் நேர்த்தி. அதன் பின்னனி காரணங்கள் என ஹரிக்கு தெரியாததையெல்லாம் பேசி ஆச்சர்யப்படுத்துகிறார். இதுவரை யாரும் கண்டிராதபடி தேரின் அழகை படம் பிடிக்கின்றார்.

அடுத்ததாக ஆசிரியர், ஹரியின் அக்கா தேவகியை அறிமுகம் செய்கின்றார்.

தேவகியின் அறிமுகம் கிடைத்த பிறகு, தேர் குறித்த விபரங்கள் வரும் பொழுது தேவகியையும் அதனுடன் இணைத்துப் பார்க்க தோன்றியது. இந்த இணைப்பில் ஏதோ இருப்பதாக உணர்ந்தேன்.

அதன் பிறகு கதை அதன் விளையாட்டை தொடங்கியது.  

அதிக நாட்கள் லியோன் அவ்வூரில் தங்கும்படி ஆகிறது. பலருடன் நெருக்கம் கிடைக்கிறது. இதற்கிடையில் ஒரு நாள் தேவகி தானும் லியோனும் காதலிப்பதாக அம்மாவிடன் சொல்கிறார். அதற்கு சான்றாக தேருக்கு அருகில் தேவகியை அழகாய் படம் எடுத்திருந்ததைக் காட்டுகிறாள். அடிக்கடி சந்தித்து பேசியுள்ளதையும் சொல்கிறாள். அம்மா அப்பாவை நினைத்து பயப்படுகின்றார். அதற்கு ஏற்றார் போலவே அப்பாவும் தேவகியை அடித்து அம்மாவை திட்ட தொடங்குகின்றார்.

அதன் பிறகு ஹரி லியோனை பார்க்க செல்கிறார். லியோன் அங்கில்லை. புறப்பட்டுவிட்டார். தேவகிதான் அந்த மனிதன் மீது காதல் கொண்டிருக்கிறாள். லியோனுக்கும் இதற்கும் சம்பத்தம் இல்லையென அப்பா திட்டுகிறார். ஆறு மாதங்களில் தேவகிக்கு திருமணத்தை நடத்துகின்றார் அப்பா. வெளியூர் மாப்பிள்ளை.

‘அக்கா எப்போது லியோனை சந்தித்தாள். எப்படி அவள் காதலித்தாள். எதுவும் ஹரிக்குப் புரியவில்லை. லியோன் ஏன் இதை வெளிப்படுத்தவேயில்லை. எப்படி ரகசியத்தை மறைத்துக் கொள்ள முடிந்தது. அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்த தேரையும் தனக்குத் தெரியவில்லை. வீட்டிலிருந்த அக்காவையும் தெரியவில்லை. நிழல் போல இருந்த பெண் இப்படி நடந்து கொண்டுவிட்டாளே என்று வியப்பாகவே இருந்தது.

என ஹரி யோசிகின்றார். உண்மையில் இங்குதான் தேருக்கும் தேவகிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என சொல்லாமல் சொல்கிறார் ஆசிரியர்.

தேர் இருப்பது பிரம்மாண்டம். திருவிழாக்களுக்கு பயன்படும். ஆனால் அதிலிருக்கும் ஒரு சிற்பத்தைக் கூட அங்குள்ளவர்கள் முழுமையாக கண்டிருக்க மாட்டார்கள் என்பதை கதையின் ஊடே ஆசிரியர் காட்டுகின்றார். நம் வீட்டிலும் இப்படித்தான் பெண்களை அவர்களுக்கு உரிய இடத்தை கொடுப்பதாகச் சொல்லி, மரியாதை கொடுப்பதாகச் சொல்லி அவர்களின் ஆசைகளைப் புறக்கணிக்கின்றோம். திருவிழாக்களுக்கு தேர் அழகை கொடுத்து மற்ற நேரங்களில் ஏதோ ஓர் மூலையில் தனித்து கவனம் பெறாது இருப்பது போலவே பல பெண்களின் நிலை இன்றும் இருப்பதை இச்சிறுகதை காட்டுகிறது.

திருமணத்திற்கு பின் தேவகி ஒரு நாளும் பிறந்தகத்திற்கு திரும்பவில்லை. யார் அழைத்தும் வாருவதற்கு தயாராய் இல்லை.

“நான் செத்தாலும் ஊருக்கு வரமாட்டேன்.  அந்தத் தேரை பார்க்கமாட்டேன் பாத்துக்கோ“

“தேர் என்னடி பண்ணுச்சி“ என்றாள் அம்மா

“என்ன பண்ணலே“ என்று கேட்டு அழுதாள் தேவகிஅக்கா

அம்மாவிற்கு அப்படித் தேவகி அழுவதைக் கேட்கும் போது கண்கள் கலங்கவே செய்தன.

என சிறுகதையை முடிக்கையில் நம் மனமும் கலங்கத்தான் செய்கிறது. தேவகியின் தேர் சிறுகதை முழுமையாக வாசிப்பதன் மூலம் நாம் அதனை உணரலாம்.

(இங்கு சுட்டி சிறுகதையை வாசிக்கலாம்)

https://www.sramakrishnan.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/

 

#தயாஜி

 

மே 10, 2021

#கதைவாசிப்பு_2021 ‘கைதட்டுகள் போதும்’

 

#கதைவாசிப்பு_2021 ‘கைதட்டுகள் போதும்’

தலைப்பு – கைதட்டுகள் போதும்

எழுத்து-  எஸ்.ராமகிருஷ்ணன்

வகை – சிறுகதை

பிரசுரம் – மே 4 (எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம்)


கதை தொடங்கிய இடத்திலேயே முடிகிறது. அதற்குள் ஒரு கலைஞனின் இழப்புகளை பதிவு செய்துள்ளார் எஸ்.ரா. ‘கைதட்டுகள் போதும்’ என்று தலைப்பை வாசித்து கதைக்குள் நுழைந்தேன். ஆனால், ‘கைதட்டல் போதுமா?’ என்கிற கேள்வியோடு சிறுகதையை வாசித்து  முடித்தேன்.

கலை மீதான ஆர்வம் ஏதோ ஒரு வயதில் எவருக்கும் ஏற்படக்கூடியதுதான். சிலர் அதற்காகவே பிறந்தவர்கள் போலவும் பிரகாசிப்பார்கள். சிலர் துரதிஷ்டவசமாக காணாமல் போய்விடுவார்கள்.  இப்படி பிரகாசிப்பவர்களும்  காணாமல்  போகிறவர்களும்  சரி, தத்தம் குடும்ப வாழ்வில் எத்தனையோ இழப்புகளை சந்திக்கும்படி ஆகிறது.  கலையின் வெற்றி பலரையும் அனாதையாக்கியிருக்கிறது.  நாம் நேசிக்கும், நாம் நம்பும் கலை உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து யாரோ ஒருவரை நமக்கருகில் அழைத்து வருகிறது. ஆனால் நம் பக்கத்தில் இருக்கும் பலரையும் தொலைத்து விடுகிறது.

இக்கதை அப்படியான கலையில் ஈடுபாடு காட்டி கைதட்டலில் கிரங்கிய மனிதனை பேசுகிறது. அவனை கிரங்கடித்த கைதட்டல்களால் அவன் இழந்தது அவனது வாழ்க்கையை.

ரங்கசாமி வீட்டில் கதவுகள் இல்லை என்றும் அதற்கான அவசியம் இல்லை என்றும் கதை தொடங்குகின்றது. யார் இந்த ரங்கசாமி என்கிற கேள்விக்கு அடுத்தடுத்து பதில்களைக் கொடுத்து கதையை நகர்த்துகின்றார்.

சர்க்கஸில் வேலை செய்த ரங்கசாமியிடம் இப்போது ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிள் மட்டுமே இருக்கிறது. இந்த ஒற்றை சக்கர சைக்கிள் ரங்கசாமியின் வாழ்க்கையை பிரதிபலிப்பும் குறியீடாகவே பார்க்கிறேன். சர்க்கஸில் இருக்கும்   வரைதான் அந்த  சைக்கிளுக்கு பாராட்டுகள், பார்ப்பவருக்கு பரவசங்கள் எல்லாம். ஆனால் அதுவே வீட்டு வாசலில் சாய்ந்துக் கிடந்தால் யாருக்குத்தான் பரவசத்தைக் கொடுக்கும், யார்தான் வந்து பாராட்டிவிட்டுப் போவார்கள். யோசிக்கையில் சர்க்கஸில் கூட இதைவிட சாகசம் காட்டும் வேறொரு சைக்கிள் வந்துவிட்டால் இந்த ஒற்றை    சக்கர சைக்கிளுக்கு மதிப்பேது. அதன் எல்லை அதை விட அதிகம் பரவசமூட்டும் வேறொரு சைக்கிள் வருவரைதானே.

ஊரில் வேலை இல்லாமல் வெளியேறிய ரங்கசாமி சர்க்கஸில் சேர்கிறார். அங்கு ரங்கா என்ற பெயரில் பல சாகசங்களைச் செய்கிறார். தனித்து அறியப்படுகின்றார். அவரை மையப்படுத்தியே விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. பதினெட்டு வயதிலேயே திருமணம் ஆகியிருந்தது. குழந்தையும் பிறந்தது. தன் அம்மாவின் பெயரையே குழந்தைக்கும் வைத்து மகிழ்கிறார். இருந்தும் வேலை ஏதுமில்லாமல்     அங்கு இருக்கு முடியாமல்தான் யாருக்கும் தெரியாமல் வெளியேறினார். சர்க்கஸில் அவருக்கான முக்கியத்துவமும் அவருக்கு கிடைத்த  கைதட்டல்களும் அவரை அதில் முழுமையாக ஈடுபட வைக்கிறது. ஆண்டுகள் கடக்கின்றன.

அதற்கிடையில் ரங்காவை ஒரு மருத்துவர் சந்தித்து விருந்துக்கு அழைக்கின்றார். அங்கு மருத்துவரின் மகள் ரங்காவைப் பார்த்து உற்சாகமாகிறார். அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். அங்கு நடந்தது ரங்காவிற்கு அவரின் மனைவி பிள்ளையை நினைவுப்படுத்துகிறது.

இருந்தும் சந்தர்ப்ப சூழலால் ஒரு மாதம் கழித்தே சொந்த ஊர் செல்கிறார். அங்கே மனைவியும் மகளும் இல்லை. அவர்கள் ஊருக்கு சென்று மூன்றாண்டுகளுக்கு மேலாகிறது என தெரிந்துக் கொள்கிறார். அவர்கள் சென்றிருக்கும் ஊருக்கு ரங்காவும் செல்கிறார். இவரைப் பார்த்ததும் யாரும் மகிழ்ச்சியடையவில்லை. வெறுப்பையே காட்டுகிறார்கள். மனைவி மட்டுமல்ல மகளும்தான். அவருக்கு  அவர்களுடன் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. மன கவலையுடன் மீண்டும் சர்க்கஸ்க்கு செல்கிறார். அவரால் பழையபடி எந்த சாகசத்திலும் ஈடுபாடு காட்ட முடியவில்லை. மனைவியும் மகளும் தன்னை வெறுத்து ஒதுக்கியதையே மீண்டும் மீண்டும் நினைக்கிறார். அவரை இதுநாள் வரை அங்கு நிறுத்தி வைத்த கைதட்டல்களும் பாராட்டுகளும்  அவருக்கு  வெறுமையைக்  கொடுக்கின்றன. சர்க்கஸ்க்கு விடைகொடுத்து  அந்த  ஒற்றை சக்கர சைக்களுடன்  ஊர் திரும்புகிறார்.

தினமும்  மனைவி மகள் கண்ணில் படும்படி ஏதேதோ செய்கிறார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இனியும் அவர்களை தொல்லை செய்ய கூடாது என முடிவெடுக்கின்றார்.

எதனால் தன் மனைவியும் மகளும் தன்னை வெறுக்கிறார்கள் என முழுமையாக உணர்ந்து வருந்துகின்றார். என்றாவது அவர்கள் மனம் மாறும் எனவும் ஒரு நாள் அவர்கள் தன்னைத் தேடி வருவார்கள் எனவும் நம்புகிறார். அவர்கள் வரும் போது கதவு மூடியிருக்கக்கூடாது என்றே கதவை பிடுங்கியும் வைக்கிறார்.

காத்திருப்பு மட்டுமே காயங்களை மறக்கச்செய்யும் , உறவுகளை சேர்த்து வைக்கும் என்கிற நம்பி நாட்களை கடக்கிறார்.

நாம் எதை நம்புகிறோம். எதில் மயங்குகிறோம். எதையெல்லாம் இழக்கிறோம் என்கிற கேள்விகளை வாசகர்களுக்கு ஏற்படுத்துகிறது. அதையொட்டிய ஒரு எச்சரிக்கையையும் இக்கதை கொடுக்கின்றது.

நண்பர்கள் இச்சிறுகதையை, இங்கு சுட்டி வாசிக்கலாம்.

https://www.sramakrishnan.com/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

 

#தயாஜி

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 

மே 08, 2021

#கதைவாசிப்பு_2021 வாழ்வின் தேவை

 

#கதைவாசிப்பு_2021 வாழ்வின் தேவை

 

தலைப்பு – வாழ்வின் தேவை

எழுத்து-  எஸ்.ராமகிருஷ்ணன்

வகை – சிறுகதை

பிரசுரம் – மே 6 (எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம்)

அம்மாவிற்கு குடும்பத்தில் என்ன மாதிரியான இடத்தை கொடுக்கின்றோம் என்கிற அடிப்படை கேள்வியை முன் வைக்கும் கதை. யோசிக்கையில் இதுவெல்லாம் ஒரு கேள்வியா என்றும் தோன்றலாம். ஆனால், அந்த யோசனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது ‘வாழ்வி தேவை’.

அப்பா இறந்துவிட்டார். அவர் இருக்கும் வரையில் அம்மாவை அவர்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார். வெளியூரில் வசிக்கும் மகளுக்கு இரண்டாம் பிரசவத்திற்கு பின் அம்மா அங்கு செல்ல வேண்டி வருகிறது. கொஞ்ச நாட்களாக அம்மா அங்கு இருக்கும்படியும் ஆகின்றது. வழக்கம் போல பேரன்களுக்கு பாட்டியாக, மகளுக்கு தாயாக, மருமகனுக்கு மாமியாராக இருந்துக் கொண்டிருக்கின்றார். அவர்களின் ஒரு கார் இருக்கிறது. எப்போதாவது அதனை பயன்படுத்தவும் செய்கிறார்கள். அவ்வபோது அம்மா காரை துடைத்து வைக்கிறார். ஒரு நாள் அம்மா, மகளிடம் கார் ஓட்ட கற்றுக்கொள்ளவா என கேட்கிறார். மகள் யோசிக்கின்றார். அதற்கு தடை போடவில்லை. ஏற்பாடு செய்கின்றார். மருமகனுக்கும் பெரிய விருப்பம் இல்லை. அம்மா டிரைவிங் ஸ்கூலில் சேர்கிறார். காரோட்ட கற்றுக்கொள்கிறார். அம்மாவிடம் மாற்றம் தெரிகிறது. உற்சாகமாக பொழுதுகளை ஆரம்பிக்கின்றார்.  மகள் மருமகள் பேரன்களை காரில் ஏற்றிக்கொண்டும் செல்கிறார். மீண்டும் சொந்த ஊர்க்கு செல்லும் போது பேருந்து நிறுத்துமிடத்தில் அடுத்த  முறை அம்மா காரிலேயே ஊருக்கு செல்லலாம், அதற்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக மருமகன் வாக்களிக்கின்றார். அம்மா உற்சாகமாக சம்மதிக்கின்றார்.

“நீ கார் ஒட்டுறதை பார்க்க அப்பா இருந்திருக்கணும். “

“அவர் இருந்திருந்தா என்னாலே கார் ஒட்ட கத்துகிட்டு இருந்திருக்க முடியாதுடீ“ என்றாள்

என்ற உரையாடலில் முழு கதையில் சொல்லப்படாத கதையை எஸ்.ரா சொல்லிவிடுகின்றார். குடும்பத்தில் அப்பாவிற்கு கொடுக்கும்  மரியாதையை  அப்பாவிற்கு கொடுக்கும்  கவனத்தை  பலரும் அம்மாவிற்கு கொடுப்பதில்லை. அதிகாரமே குடும்பத்தை தன் வசம் வைத்திருக்கிறது. மகனால் மகளால் அந்த அதிகாரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வயதில் வெளியேறிவிட முடிகிறது. ஆனால் அம்மாக்கு  அந்த வாய்ப்பு வருவதே இல்லை.

கதையில்  அம்மாவிற்கு  கார்  ஓட்டுவதில் ஏற்படும் ஆசையை  எளிதில்  கடந்துவிட முடியாது. தன் வாழ்க்கை தன் கட்டுப்பாட்டில்  வருவதாக அம்மா நினைக்கின்றார். ஒருவருக்கு அப்படியான வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு அரிதாகிக் கொண்டே போகிறது. தன் கையில் தான் ஓட்டும் காரின்  ஸ்டேரிங் கிடைத்துவிடுவது அம்மா இனிதான் தனக்கான வாழ்வை வாழப்போகின்றார் என்கிற உற்சாகத்தை கொடுக்கிறது.

நம்முடன் இருக்கின்றவர்களின், நமக்காக வாழ்கின்றவர்களின் கனவுகளை ஆசைகளை சின்ன சின்ன விரும்பங்களை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோமா? அவற்றை ஏன் தவற விடுகின்றோம் என்கிற ஆதார கேள்வியை கதையை வாசித்ததும், கேட்டுக் கொள்ள செய்கிறோம்.

கதையை இந்த லிங்கில் முழுமையாக வாசிக்கலாம். 

https://www.sramakrishnan.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88/

-       #தயாஜி

 

ஏப்ரல் 13, 2020

#கதைவாசிப்பு_2020_16 'கிருமி'




#கதைவாசிப்பு_2020_16
கதை – கிருமி
எழுத்து – உமையாழ்
வெளியீடு – ஏப்ரல் மாத யாவரும்.காம் 


  இன்று கிருமிகளால் உலகம் துன்பத்தை எதிர்நோக்குகிறது. நாம் அறிந்து இது நடக்கிறது. ஏனெனில் அதிகார வர்க்கம் முதல் அரசியல்வாதி வரை எல்லோரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை பாதிக்காதவரை எந்த துன்பமும் துயரமும் அத்தனை முக்கியமானதில்லை.  எத்தனையோ மரணங்கள் எத்தனையோ கொடுமைகள் நம்மைச் சுற்றி நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஒன்றுமே நடக்காதது போலத்தான் அவர்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.பொதுவான துயரம் மட்டுமே துயரமாக கணக்கெடுக்கப்படுகிறது. 

 ஆனால் தற்காலச்சூழல் இன்னொருவரின் துன்பத்தை புரிந்துக்கொள்ளும் வழியைக் காட்டியுள்ளது. இக்கதையையும் அவ்வாறுதான் காண்கிறேன். எல்லா காலத்திலும் நடந்துக்கொண்டிருக்கும் கொடுமைதான், ஒதுக்கப்படுதல்தான், உதாசினம்தான். ஆனால் தற்கால சூழலில் இக்கதையை வாசிக்க மனதை கணக்கச் செய்கிறது.

      வாசிப்பவர்களே கதைசொல்லியாக கதையை நகர்த்திச் செல்கிறார்கள். இதைவிடவா கதையினுள் செல்வதற்கு வேறொரு உபாயம் தேவை.

     கதை ஒரு கட்டத்தில் வாசிக்க விடாமல் வருந்த வைக்கிறது. இந்த கிருமியால் ஆனா பாதிப்பு இன்று மட்டுமானது அல்ல, அதிகார வர்க்கத்தின் கையில் நசுங்கிக்கொண்டிருக்கும் சக மனிதன் தப்பித்துக்கொள்ளும் வரை தொடரத்தான் போகிறது. 

    கதையின் நம்பகத்தன்மைக்கு அதன் மொழியும் சொல்லும் முறையும் முக்கியம். இக்கதை அதற்கு நன்றாகவே பொறுந்தியுள்ளது.

    இன்னொரு முறை வாசிக்க வேண்டும். ஏனெனில் இக்கதை ஒற்றைக் காரணத்தை மட்டுமே கொண்டிருக்கவில்லை.

#தயாஜி

மார்ச் 30, 2020

#கதைவாசிப்பு_2020_15 'ஓணான்கள்'





#கதைவாசிப்பு_2020_15
கதை – ஓணான்கள்
எழுத்து – அம்ரிதா ஏயம்
புத்தகம் – விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடந்தைகள்
(சிறுகதை தொகுப்பு)


     காலந்தோரும் ஏதோ ஒரு வகையில் யுத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. யார் யுத்தம் செய்கிறார்கள். யாருக்காக யுத்தம் செய்கிறார்கள் என்கிற கேள்விக்கு இன்று வரை நிலையான பதில் கிடைக்கவில்லை. யுத்தம் தொடங்கியப் போது கொடுத்த பதிலுக்கும் யுத்தம் முடிந்தப் பின் நமக்கு  கிடைக்கும் பதிகளுக்கும் சமயங்களில் துளியும் சம்பந்தங்கள் இருப்பதில்லை.

      ஆனால் அது விட்டுச்செல்லும் துயரங்கள் இழப்புகள் அழிவுகள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றன. ராஜராஜாக்கள் தொடுத்த போர் முதல் உலக யுத்தம், இன்றும் நம்மை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ‘நவீன பயோவார்’ என எல்லாவற்றையும் எழுத்துகளாக பலரும் பல இடங்களில் பதிவு செய்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்வதற்கு நம்மிடம் மிச்சம் இருக்கப்போவது என்னெவென்ற கேள்விகளின் குழப்பங்கள் சூழந்த வாழ்வும் சூழலும் நம்மை தள்ளிவிட்ட நிலையில் வரலாறுகளை திரும்பிப்பார்க்கையில் அதற்கான தீர்க்கத்தரிசனம் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

     யுத்தங்கள் செய்து வைத்த மானுட துரோகங்களை வாசிக்கையில் மனம் வலிக்காமல் இருப்பதில்லை. அப்படி ஒரு கதைதான் ஓணான்கள்.

    ஓணான்களை பிடித்து ஆய்வு செய்யும் மாணவன். அவனுக்கு ஓணான்களை பிடித்துக் கொடுக்கும் ஒரு நண்பன். ஓணானை பிடித்து அதனை பீடித்திருக்கும் ஒட்டுண்ணிகளை தனியே  எடுப்பதுதான் அந்த ஆராய்ச்சி. ஓணான்களில் உடலில் ஆங்காங்கு பீடித்திருக்கும் ஒட்டுண்ணிகளைப்போலவே நாட்டையும் பல வகைகளில் ஒட்டுண்ணிகள் பீடித்திருப்பதை கதையில் மிக எதார்த்தமாக கதாசிரியர் சொல்லியுள்ளார்.  

   ஓணான்களை கேட்பனும் ஓணான்களை பிடிப்பவனும் வாழ நிர்பந்திக்கப்பட்ட இரு வெவ்வேறான இடங்களும் அதில் அவர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகளும் வாசிக்கையில் பரிதாபப்பட வைக்காமல் இல்லை. ஓணானை பிடித்து தரும் ‘சின்னான்’, யுத்தத்தில் தனக்கானவர்களை இழந்தவன். யுத்தம்  எவ்வாறான விளைவுகளை அவனுக்கு ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. அதனை  மிக எதார்த்தமாக சொல்லியிருக்கிறார். இதே சிறுகதை தொகுப்பில்  இருந்த ‘கிருஸ்ணம்பிள்ளை’ என்கிற கதையும் கூட யுத்ததிற்கு பிறகே சிறுவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை சொல்லியுள்ளது. முன்னமே அக்கதை குறித்து எழுதியுள்ளேன்.
    
  இன்னும் எத்தனை கதைகள், எத்தனை பேர் யுத்தங்கள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் எழுதிக்கொண்டிருக்கப்போகிறார்கள். எனக்கூட ஒரு முறை நண்பர் கேட்டு குறைபட்டுக் கொண்டான். அவரைப் பொருத்தவரை கதைகள் வெறும் வாசிப்பு அனுபவத்திற்கு மட்டும்தான். எல்லோர்க்கும் அப்படியிருக்க வேண்டிய அவசியம் இல்லையே. நாம் எந்த சூழலில் வாழ்ந்து வந்தோம் வாழ்கிறோம் என்பதை, இப்படியெல்லாம்தான் அடுத்த பல தலைமுறைகளுக்குச் சொல்லவேண்டியுள்ளது.

-       தயாஜி


மார்ச் 27, 2020

கதைவாசிப்பு_2020_14 'தொடுகறி'


#கதைவாசிப்பு_2020_14
கதை – தொடுகறி
எழுத்து – ஐ.கிருத்திகா
புத்தகம் – காலச்சுவடு மார்ச் 2020


    நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சிக்கலை எதிர்கொள்கிறோம். விதிவிலக்கு யாருக்குமில்லை. ஆனால் அது தீர்க்கப்பட்டதா அல்லது தீயாகி பற்றிக் கொண்டதா என்பது அதற்கு நாம் கொடுக்கும் எதிர்வினையைப் பொறுத்தது. 

  பற்பசையை பின்பக்கத்தில் இருந்த அழுத்தாமல், மேல் முனையை அழுத்தி பற்பசையை பயன்படுத்தியதால்  ஒரு தம்பதிகள் மனமுறிவு வரை சென்றுள்ளார்கள். கணவனின் செயலுக்கு மனைவி கொடுத்த எதிர்வினையும் அதற்கு கணவன் கொடுத்த எதிர்வினையும்தான் காரணம்.

  அப்படியொரு விபரீதத்திற்கு செல்லவேண்டிய தம்பதிகள் தங்களின் சிக்கலை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் இக்கதை. வாசிப்பில் 'யார் தொட யார் கறி'யாகிறார்கள் என்பதை வாசகர்கள்  வாசித்து  முடிக்கையில் கண்டுகொள்வார்கள். அதுதான் 'தொடுகறி'

கதைச்சுருக்கம்;

   சிவநேசன் மீரா , இளம் தம்பதிகள். புதிய வாடகை வீட்டிற்காக முன்பணம், பொருட்கள், அதற்காக வாங்கிய கடன் என முடிந்தவரை மாசக்கடைசியை எப்படியாவது சமாளித்தாகவேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.

    சிறிய வீடு என்றாலும் புதுக்குடித்தனம் இன்பமாகவே இருக்கிறது. பக்கத்து வீட்டுக்கார மணியக்கா ஒரு முறை சிவனேசனைப் பார்த்து , தன் வீட்டில் வயசு பிள்ளைகள் இருக்கிறார்கள்,  இரு வீட்டிற்கும் இருப்பது ஒரு சுவர்தான் ஆக எதை செய்தாலும் பார்த்து செய்யும்படி சொல்லும் அளவிற்கு அவர்களின் புதுக்குடித்தனம் இருக்கிறது.

   கோவக்காரப் பெண்ணாக இருந்தாலும் உள்ளதை உள்ளபடி சொல்லிவிடும் குணமும் உதவும் குணமும் கொண்டவராக இருக்கிறார் மணியக்கா.

    ஒரு முறை கையில் காசில்லாத நேரத்தில் சிவநேசனும் மீராவும் தண்ணீரைக் குடித்துப் பசி தீர்க்க முயன்று படுக்கிறார்கள். நிலமையைப் புரிந்துக்கொண்ட மணியக்கா கதவை தட்டி அன்றிரவுக்கான உணவை கொடுக்கிறார். சிவநேசன் முதலில் மறுக்கிறான். தானும் இதையெல்லாம் கடந்துதான் வந்திருப்பதாகவும், இளம் தம்பதிகள் என்பதால் மீரா கருத்தரித்திருந்தால் அந்த கரு என்ன ஆகும் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

   சில நாட்கள் கழிகிறது. ஏதோ ஒன்று சிவநேசனை வதைக்கத் தொடங்குகிறது. மீராவுடனான நெருக்கத்தை தவிர்க்கிறான். இருவர் உறவும் பழையபடி இல்லாமல் போகிறது. சிவநேசன் இரண்டு நாட்கள் வேலைக்கும் போகவில்லை. 
அவனை நன்கு அறிந்திருந்த மீரா அவனிடம் அது குறித்து கேட்க சிவநேசன் ஒன்றுமில்லை என்கிறான். 

   வேலைக்கு செல்லும் மீராவை வழிமறைக்கிறார் மணியக்கா. வழக்கமான எந்த சத்தமும் வீட்டுச்சுவரைத் தாண்டி வராதது குறித்து நாசூக்காக கேட்கிறார். ஒன்றுமில்லை என்று மீரா சொல்கிறாள். தனது இருபது வருட அனுபவத்தில் இருந்து சில அறிவுரைகளை சொல்கிறார் மணியக்கா.

   சிவநேசன் மனதில் அறுவிக் கொண்டிருப்பது தங்கள் குடும்பத்தை குலைப்பதை மீரா விரும்பவில்லை. அவனை வெளியில் செல்வதற்கு அழைக்கிறாள். முதலில் மறுத்தவன் பிறகு செல்கிறான். அவன் மனதில் அன்று அந்த மலர் சொன்னது நிழலாடுகிறது. இவன் மேல் தவறில்லையென்றும் அவள்தான் இவனை பயன்படுத்திக்கொண்டாள் என சொல்கிறாள்.

   கடற்கரையில் மீராவும் சிவநேசனும் அமர்கிறார்கள். மீரா சிவநேசனிடம் வினவுகிறாள். அவனால் சொல்ல முடியவில்லை. அழுகிறான். முடிந்ததும் பேச தொடங்குகின்றான்.

  அன்றொருநாள், நண்பர்களுடன் குடிக்கையில் போதை அதிகமாகியுள்ளது. ஆட்டோ பிடித்து நண்பர்கள் அனுப்பியிருக்கிறார்கள். வழியில் மலரை சந்தித்திருக்கிறான். ஒரே இடத்தில் வேலை செய்பவள். காலத்தோடு திருமணம் செய்யாதவள். பேருந்து கிடைக்காததால் ஆட்டோவில் வீட்டிற்குச் செல்ல உதவி கேட்டிருக்கிறாள். பின்னர் வீட்டில் இறங்கும் போது ஆட்டோவிடம் முழு பணத்தையும் கொடுத்து சிவநேசனை தன் வீட்டிற்கு அழைத்து அவனை தன் ஆசைக்கு பயன்படுத்திக்கொள்கிறாள்.
முழுவதையும் சொல்லிவிட்டாலும், தன் மீதும் தவறு இருப்பதை ஒப்புக்கொள்கிறான். அன்று குடித்திருந்தததால்தான் தானும் நிலை தடுமாறியதாக சொல்கிறான். 

 மீரா அவனை மன்னிக்கப் போவதில்லை என முடிவு செய்து அழுகிறான். மீராவின் குணம் அவனுக்கு நன்கு தெரியும். 

   ஏதோ முடிவு எடுத்தவளாக அவனை அழைத்துச் செல்கிறாள். தங்கள் வீட்டு வரிசையில் இருக்கும் குளியலறையில் அவனை அமரவைத்து அவன் மீது தண்ணீரை ஊற்றி அவன் இனி சுத்தமான மனிதன் என்றும் அவனால் இனி தவறு செய்ய முடியாது எனவும் கூறுகிறாள்.

  சிவநேசன் ஏதோ சொல்ல முயல்கிறான். ஆனால் மீரா, அன்று மணியக்கா இவர்களின் பசிக்கு உணவு கொடுத்த போது வேண்டாம் என திருப்பி அனுப்பியிருக்கலாம் ஆனால் அப்படி செய்யவில்லை காரணம் அவர்களின் வயிற்றுப் பசி என்கிறாள். அதே போலதான் அந்த பெண் மலருக்கும், இன்னும் திருமணமாகாத முதிர்கன்னி, அவள் பசிக்கு அன்று விருந்தாக கிடைத்துவிட்ட சிவநேசனை எப்படி அவள் விட்டிருப்பாள் என அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள்.

     அன்று அவன்,  மலரின் பசியை ஆற்றி உதவி செய்ததாக சொல்லி அவனை சமாதானம் செய்கிறாள். அதோடு விடாமல் அடுத்து அவள் சொல்வதுதான் கதைக்கு முக்கியமான ஒன்றாக அமைகிறது.

   அவனது தவறுக்கு உதவி என்கிற முலாமை பூசி அவனை சமாதானம் செய்தாலும் அடிக்கடி அப்படி இருக்க முடியாது என கூறி, அன்று உணவு கொடுத்தது போல அடிக்கடி மணியக்காவிடம் உணவு கேட்டாள் அவர் 'வெளக்குமாத்தால்' அடிப்பார் என்கிறாள்.

   அவளில் உள்ளர்த்தத்தை சிவநேசன் புரிந்துக்கொண்டான்.

நிறைவாக ;

   மணியக்காவின் இரண்டுவிதமான முகத்தை கதையின் ஊடே சொல்லியுள்ளதால் கதை முடிவில் மீரா சொல்லும் உதாரணம் நமக்கும் புரிந்துவிடுகிறது. 
கதையின் முடிவு நிச்சயம் பலரையும் யோசிக்கவைக்கும் சமயங்களின் முரண்படவும் வைக்கும்.

   முன்னமே சொன்னதுதான் நாம் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு நாம் கொடுக்கும் எதிர்வினையைப் பொறுத்தே அச்சிக்கல் தீர்வை நோக்கி செல்வதும் தீயாகி எரிவதும் அமைகிறது. 
குடும்பத்தில் ஏற்பட்டுவிடும் தவறுகளுக்கு தண்டிக்கத்தான் வேண்டும் என்கிற அவசியம் இல்லை
மன்னித்தும்விடலாம். சொல்லப்போனால், தண்டனை பெற்றவர் கூட மீண்டும் தவறு செய்யலாம் ஆனால் மன்னிப்பு பெற்றவர்  மீண்டும் தவறு செய்ய இரண்டு தடவையாவது யோசிப்பார். 

   இக்கதையில் தன் கணவனின் சிக்கலை கெட்கும் மனைவி அதிக பதட்டமில்லாமல் அவனை முழுமையாக பேச அனுமதிக்கும் போதே அவள் தன் வாழ்வில் அவசர முடிவு எடுக்க விரும்பவில்லை என்பதைக் காட்டிவிடுகிறது. 

    அதோடு , கணவன் மீது தண்ணீரை ஊற்றி "இனி நீ சுத்தமாயிட்ட.. இனி உன்னால எந்த தப்பும் செய்ய முடியாது.." என சொல்லி பயம் காட்டியுள்ளாளே தவிர,  'இனி நீ எந்த தப்பும் செய்யக்கூடாது" என கட்டளையிடவில்லை. மனைவியின் சாமார்த்தியம் இங்குதான் இருக்கிறது. அதுதான் இக்கதையைப் பற்றி எழுதத் தூண்டியது.


- தயாஜி

பிப்ரவரி 23, 2020

#கதைவாசிப்பு_2020_13 'இறகுகள்'



#கதைவாசிப்பு_2020_13 இறகுகள்
கதை – இறகுகள்
எழுத்து – ரேமண்ட் கார்வர் (தமிழில் ஜி.குப்புசாமி)
புத்தகம் – காலச்சுவடு பிப்ரவரு 2020


   ரேமண்ட் கார்வர். சிறுகதைகளை குறிப்பிடாதவர்களை காண்பது அரிது. அவரின் சிறுகதைகளை பலர் மொழிப்பெயர்த்திருக்கிறார்கள்.

 இம்முறை ரேமண்ட் கார்வரின் சிறுகதையை ஜி.குப்புசாமி 'இறகுகள்' என மொழிப்பெயர்த்துள்ளார். முதலில் ஜி.குப்புசாமி அவர்களுக்கு நன்றி. அவர் மூலம் பல மொழிப்பெயர்ப்பு படைப்புகள் அறிமுகமாகியுள்ளது. அவரின் மூலமே எழுத்தாளர் 'சிம்மண்டா என்கோசி அடிச்சி' அவர்கள் எனக்கு அறிமுகம். சிமமண்டோ எனது விருப்ப எழுத்தாளர் பட்டியலில் சேர்ந்துவிட்டார்.

    இக்கதை பிப்ரவரி 2020-ல் காலச்சுவடு இதழில் வெளிவந்திள்ளது. 'பட்' தன்னுடன் பணிபுரியும் நண்பர் 'ஜேக்-கை' தன் வீட்டு விருந்திற்கு அழைக்கிறார். ஜேக் தன் மனைவி பிரானுடன் அங்கு செல்கிறார். 

   பட்-டும் அவரது மனைவி ஓலாவும் அவர்களின் குழந்தையும் மட்டுமே அந்த வீட்டில் இருக்கிறார்கள். நகரத்தில் இருந்து பல மைல்களுக்கு அப்பால் அவர்களின் வீடு இருக்கிறது. ஒரு முறை கூட ஜேக் அங்கு வந்திருக்கவில்லை. பட் கொடுத்திருந்த வரைப்படத்தின் மூலம் பட்டின் வீட்டிற்கு வந்து சேர்கிறார்கள்.

  பட் வீட்டில் நடப்பது முதலில் , ஜேக்கிற்கும் அவர் மனைவி பிரானுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. வீட்டை சுற்றி இருக்கும் சூழல். அசூயையைக் ஏற்படுத்தும் மயிலின் குரல். தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் இருக்கும் அருவருப்பான பல் செட். வரும்போதும் கூட வெறுமனே எந்த பெரிய எதிர்ப்பார்ப்பும் இல்லை. ஆனால், போகப்போக தங்களைவிட அவர்களிடம் ஏதோ ஒன்று கூடுதலாக இருப்பதை உணர்கிறார்கள். இத்தனைக்கும் பட் , ஓலாவின் இரணாவது கணவன். அவர்களின் உரையாடலில் கேலியும் கிண்டலும் நிறைந்திருந்தது.

    கதை முழுக்க அந்த விருந்தில்தான் நடக்கிறது. விருந்திற்கு வந்திருந்தவர்கள் எதைதோ கண்டுபிடுக்க மனதிற்குள்ளாகவே முயல்கிறார்கள். சாதாரண விருந்து என்றாலும் அது சொல்லப்பட்டிருக்கும் விதம் நம்மையும் அருகில் அமரவைத்துவிடுகிறது.

   அவ்வீட்டில் இருக்கும் குழந்தைதான் அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என தவறாக புரிந்துக்கொள்கிறாள் ப்ரான். அவர்கள் இருக்கும் இடையில் இருக்கும் பரஸ்பர அன்பை இவர்கள் கவனிக்க தவறிவிட்டார்கள்.

   விருந்து முடிந்தது. புறப்படுகிறார்கள். அன்று இரவே இதுவரை தேவையில்லை என நினைத்திருந்த குழந்தைக்கு தங்களை தயார் செய்துக் கொள்கிறார்கள்.

   சில வருடங்கள் ஆகின்றன. ஜேக் பிரான் தம்பதிகளுக்கு குழந்தையும் பிறந்துவிட்டது. ஆனால் எதிர்ப்பார்த்த எதுவும் அவர்களின் வாழ்வில் நடக்கவில்லை. மாறாக நிலமை மேலும் மோசமாகியது. இன்னும் மோசமாகிக்கொண்டுதான் போகும். 

  கதையை முடிக்கையில் மனதில் குழப்பம் ஏற்படாமல் இல்லை. இரண்டாம் முறையாக வாசிக்க வேண்டியதாக இருந்தது. 

  கேள்விகளும் தேடல்களும் எனக்குள்ளே எழத்தொடங்கின. இக்கதையில் பட் தன் வீட்டிற்கு வந்து தன் குழந்தையுடன் விளையாட்டு காட்டும் மயிலைக் குறித்து இவ்வாறு சொல்வதாக வரும், "இந்த மயில் சரியான கிறுக்கு, இந்த முட்டாள் பறவைக்கு தான் ஒரு பறவை என்பதே தெரியவில்லை. அதனிடம் இருக்கும் பெரிய தொல்லை அதுதான்"

    இக்கேள்விதான் கதையின் ஆதாரம் என நினைக்க வைக்கிறது. நாம் யாராக இருக்கிறோமோ அதுவாகவே நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் நேசிக்காமல் ஏதோ ஒரு போலி பதில்கள் மீது கவனத்தை வைக்கிறோம்.
ஜேக் பிரான் தம்பதிகளுக்கு அதுதான் நடந்தது.

   தத்தம் உறவினை முழுமையாக புரிந்துக் கொள்ளவில்லை, எதிர்ப்பார்ப்புகள் அற்ற அன்பை கொடுக்கவில்லை. ஆனால் போலியாக ஏதோ ஒன்றில் அதன் காரணத்தை வைத்து மென்மேலும் தங்கள் வாழும் நாட்களை  சூனியமாக்கிக் கொண்டார்கள்.

- தயாஜி

பிப்ரவரி 02, 2020

#கதைவாசிப்பு_2020_11 'உள்ளக் கிளர்ச்சி'


#கதைவாசிப்பு_2020_11
கதை  உள்ளக் கிளர்ச்சி
எழுத்துமௌனி
புத்தகம்காலச்சுவடு ஜனவரி 2020


       கல்கி, நவம்பர் 1, 1943-ல் வெளிவந்த கதை. காலச்சுவடு ‘கதைத்தடம்’ பகுதியில் மீள் பிரசுரம் செய்துள்ளார்கள்.

    ‘உள்ளக் கிளர்ச்சி’ ஒரு பக்க கதைதான். ஆனால் அது சொல்லிய விடயம் பல பக்கங்களுக்கானது. இன்றளவும் நம்மிடையே இருக்கும் மனநிலைதான் இக்கதையின் அடித்தளம்.

    இரயில் நிலையம் இரவு. மழை. அங்கு தங்கிவிட்டுச் செல்ல பயப்படும் பெண். நனைந்தவாரு வீட்டிற்குச் செல்கிறாள். நல்ல இருட்டு. அவள் செல்லும் வழியில் தன் முன் யாரோ ஒருவர் குடை பிடித்துக் கொண்டு செல்கிறார்.  உதவிக் கேட்டு அந்த குடையின் ஒரு பங்கில் வீட்டிற்கு செல்ல நினைக்கிறாள். பின் அவளே அந்த நினைப்பை உதாசிணம் செய்கிறாள். இப்படியா ஆணின் குடையில் ஒரு பெண் ஒண்டிக்கொண்டு உதவி கேட்பது என தன்னத்தானே கேட்கிறாள்.

   குடையுடன் சென்ற ஆண் அவளை கவனிக்கிறான். இப்படியா ஒரு பெண்ணை இரவில் அனுப்புவது. இது அத்தனைப் பாதுகாப்பு இல்லையே. யார் அனுப்பியிருப்பார்கள் என அனுப்பியவர்களை திட்டுகிறான். சரி தானாவது அவளை தன் குடையில் கொஞ்சம் நுழைந்துக்கொள்ள அழைக்கலாமா என நினைக்கிறான். அழைத்து தன்னை அவள் தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வது என யோசித்து ஏதும் செய்யாமல் நடையைத் தொடர்கிறான்.

   அந்நேரம் மின்னல் வெளிச்சம் கொடுக்கிறது. தன் வீடை நெருங்கிவிட்டதை அவள் அறிகிறாள். அப்போதுதான் தெரிகிறது அந்த ஆண் இன்னமும் அவளை முன்னேதான் நடக்கிறான். பயம் வந்தாலும் வீட்டை நெருங்கிட்ட துணிச்சல் அவளிடம் தோன்றுகிறது.

    அதே சமயம் அந்த ஆண், அவள் இவ்வளவு தூரம் தன்னை தொடர்ந்து வந்துள்ளதை தெரிந்துக் கொள்கிறான். ஒருவேளை தங்குவதற்கு உதவி கேட்பாளோ என யோசிக்கிறார்.

    ஆச்சர்யம். அவளின் வீட்டில் அந்த ஆண் நுழைகிறான்.  அவளும் அந்நேரம் வீட்டிற்கு அருகில் வந்துவிட்டாள். அப்போதுதான் அந்த ஆணை சரியாக பார்க்கிறாள். அது அவளது அண்ணன் தான்.

     அண்ணனுக்கும் அதிர்ச்சி, தங்கையைப் பார்க்கிறார். அவளிடம் அதான் என்னை பார்த்தாயே ஏன் என்னை அழைக்கவில்லை. இப்படி கொட்டும் மழையில் நனைந்து வந்திருக்கிறாயே என கேட்கவும் செய்கிறார். இருட்டில் முன்னே சென்றது யாரென்று தெரியவில்லை என்றவள். பெண்ணொருத்தி இப்படி வருகிறாளே உதவி செய்திருக்கலாமே என்கிறாள்.

     அண்ணனும் இருட்டில் வந்தது அவள்தான் என தெரியவில்லை என்கிறார். இந்த நிலமையில் முன்னே செல்பவரை அழைத்து யாரென்று தெரிந்திருந்தாள் உதவி கேட்டிருக்கலாமே என்கிறார்.  பின்னர் இருவரும் சிரிப்பதாக கதை முடிகிறது.

     இக்கட்டான சூழலில் கூட இன்னொரு மனிதனை அழைக்க முடியாமல் போகும் நிலமையில்தானே நாம் இன்னும் இருக்கிறோம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அவன் யாராக இருந்தாலும் உதவ முடியாமல் போவதும் தன்னிடம் உதவி கேட்பவர்களையே தன் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்பவர்களை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

    மனிதனுக்கு அச்சம் கொடுக்கக்கூடியது இன்னொரு மனிதன் என்பது எத்தனை வேதனையானது.

    நன்றாக யோசித்தே இக்கதைக்கு ‘உள்ளக் கிளர்ச்சி’ என தலைப்பிட்டிருக்கவேண்டும். அக்கிளர்ச்சி கதையில் நடந்தேறாவிட்டாலும் வாசிக்கையில் நம் மனதில் ஒரு ஆட்டம் ஆடிவிடதான் செய்கிறது.

-தயாஜி

பிப்ரவரி 01, 2020

#கதைவாசிப்பு_2020_10 'வேறு நினைப்பு'

#கதைவாசிப்பு_2020_10
கதை  வேறு நினைப்பு
எழுத்துகு.ப.ராஜகோபாலன்
புத்தகம்காலச்சுவடு ஜனவரி 2020

       கல்கி, மே 20, 1943-ல் வெளிவந்த கதை. காலச்சுவவடு கதைத்தடம் பகுதியில் மீள் பிரசுரம் செய்துள்ளார்கள்.

    யோசிக்கையில் கு.ப.ராவின் கதையை இப்போதுதான் படிப்பதாக தோன்றுகிறது. அல்லது படித்து நினைவில் நில்லாமலிருக்கலாம். மூன்று பக்க கதைதான் என்றாலும் சிரிக்காமல் இக்கதையைப் படிக்க முடியவில்லை.

     கணவர் ஓர் எழுத்தாளர். எழுத வேண்டிய கதையைக் குறித்து மொட்டைமாடியில்  ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார். மனைவி வந்தது கூட அவருக்கு தெரியவில்லை. மனவியில் பேச்சு அவரை சுய நினைவிற்குக் கொண்டுவருகிறது. அங்கிருந்து கதை ஆரம்பமாகிறது. மனைவிக்கு பொய்க்கோவம். கணவன் நிலமையை சரி செய்ய வேண்டும்.

     மனைவியை சமாளிக்க எழுத்தாளர் முயல்கிறார். மனைவி அவரை மிஞ்சும் அளவிற்கு பேசுகிறார்.

     வழக்கமாக கமல்ஹாசன் திரைப்படங்களில் அவருக்கென்று ஒரு பிரித்தியேக கதாப்பாத்திரத்தன்மை அமைந்துவிடும். சமாளிப்பு. நிலமையை சீர்செய்ய எப்படி பேசி சமாளிக்கிறார். அவர் வென்றாரா இல்லையா என்பதுதான் அதன் சுவாரஷ்யம். உதாரணமாக பஞ்சதந்திரம் திரைப்படத்தில் , நண்பரின் மாமனார் நாகேஸை வாகனத்தில் ஏற்றிக்கொள்வதற்கு முன்னும் ஏற்றிக்கொண்ட பின்னும் ஏற்படும் உரையாடல்களை இப்போது பார்த்தாலும் சிரிக்கவும் ரசிக்கவும் முடியும்.

     இங்கு கணவன் மனைவியின் உரையாடலும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. இருவரில் யார் வென்றார்கள் என்பதுதான் இந்த கதையிலும் சுவாரஷ்யம். அதன் ஊடே கணவன் மனவியின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்று நாசூக்காகவும் சொல்லியுள்ளார் எழுத்தாளர்.

     படித்து முடித்தும் சிரிப்பை அடக்கிவிட முடியவில்லை. வாய்ப்பு இருப்பின் படித்து சிரிக்கலாம்.

   இக்கதை கு.ப.ராவின் இதர கதைகளையும் தேட வைத்துள்ளது. இங்கு பலருக்கு நகைச்சுவை என்கிற பெயரில் எழுத்திலும் பேச்சிலும் அடுத்தவரை இம்சிக்கவே முடிகிறது. ஆயினும் 1943-ம் காலத்தில் தன் கதையை இப்படியாக அமைத்திருப்பது ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது.

     இக்கதை மீண்டும் கு.ப.ராஜகோபாலன் கதைகளை தேடி வாசிக்கவும் மீள் வாசிக்கவும் கதைகள் பற்றிய உரையாடலை தூண்டும் என நம்புகிறேன்.


-          தயாஜி


ஜனவரி 31, 2020

#கதைவாசிப்பு_2020_9 'தவளைகள்'


#கதைவாசிப்பு_2020_9
கதை  தவளைகள்
எழுத்துப.சிங்காரம்
புத்தகம்காலச்சுவடு ஜனவரி 2020 இதழ்


       சொல்லப்போனால் உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு. இதழைப் பிடித்திருந்தக் கைகள் மெல்லிய தாளம் போடவும் செய்தன. இம்மாத இதழில் ப.சிங்காரத்தின் ‘தவளைகள்’ கதை பிரசுரமாகியுள்ளது. அதோடு இம்மாதம் முதல் சிறப்பு பகுதியாக ‘கதைத்தடம்’ எனும் பகுதியை ஆரம்பித்துள்ளார்கள். முன்னோடி எழுத்தாளர்களின் புத்தகங்களின் வெளிவராத கதைகளை இடம்பெறப்போகின்றன. இது பற்றி முந்தைய பதில் எழுதியிருப்பேன்.

    ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ மற்றும் ‘புயலிலே ஒரு தோணி’ போன்ற இரு நாவல்களுக்கு பிறகு எந்த ஆக்கமும் படிக்கக் கிடைக்கவில்லை. அவர் பற்றி மிகச்சரியான தகவல்களும் தேடுகையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்லிவிடுகிறார்கள். அவரின் மறைவுக்கு பிறக்குதான் இலக்கிய உலகம் அவரைக் கண்டுக்கொண்டது என்பது வேதனையான ஒன்று.

   இரண்டு நாவல்களுக்குப் பிறகு, மூன்றாவதாக அவர் ஒரு நாவலை எழுத முயற்சித்தார் . ஆனால் அது குறித்த விபரங்கள் தெரியவில்லை என்கிறார்கள். அவரின் இரு நாவல்களும் அக்கால மலேசியச் சூழலை கண்முன்னே காட்டியது.  நாவலின் மொழியைக் கண்டு இதனை எழுதியது மலேசியர் எனவும் ஒரு நம்பிக்கை இருந்தது. நாவலின் மொழி அந்த அளவிற்கு மலேசியாச்சூழலையும் இங்குள்ள மக்களையும் காட்டியது.

     பல நாட்களாக அவரது இதர படைப்புகளைத் தேடி கிடைக்கவில்லை. ஜனவரி காலச்சுவடு இதழில் ப.சிங்காரத்தின் ‘தவளைகள்’ கதை வந்துள்ளது.

தவளைகள்.

      ஊரைவிட்டு வெளியேறும் கணவன் மனைவி. யார் அவர்கள். என்ன சிக்கல் என கதை  விவரித்துக் கொண்டே செல்கிறது. இருள் சூழ்ந்த வழி. தண்ணீர் கரையோறமாக இருவரும் ஒருவர் பின் ஒருவராக எந்தவித சலனமும் ஏற்படாதவாறு நடந்துச் செல்கிறார்கள். அவர்களின் பயணத்தின் ஊடே ஆற்றில் தவளைகள் ‘கிரக் கிரக் கிராக்..!’ என தொடர்ந்துக் கத்திக்கொண்டே இருக்கின்றன. இந்த கத்தலுக்கான காரணம் கதையின் முடிவில் நமக்கு திகிலை ஏற்படுத்திவிடுகிறது.

    எப்படியும் பிழைக்கலாம் என யோசிக்கும் கணவன். இனி எப்படி பிழைப்பது என  நிலமையை முழுதும் அறிந்துப்புரிந்து யோசிக்கிறார் மனைவி. கணவனை நன்கு அறிந்திருக்கிறவள். இனி என்ன சொன்னாலும் அவர் கேட்கப்போவதில்லை என தெரிகிறது. எல்லாம் இழந்துவிட்ட பொழுதில் வாழ்ந்து வந்த ஊரை விட்டுச்செல்வது மனைவிக்கு சரியாகப் படவுமில்லை.

     சட்டென தண்ணீரில் ஏதோ பெரிதாக விழுந்துவிட அது தன் மனைவி என கணவர் அதிர்கிறார். அவளைக் காப்பாற்ற அவரும் ஆற்றில் குதிக்கிறார். தண்ணீரில் மனைவிக்கு அருகில் நீந்திச் செல்கிறார்.  ஏதோ கைகள் அவரது கழுத்தை பூட்டுகின்றன. மனைவியின் பெயர் சொல்லி அழைக்கிறார். அந்த பிடி விடுபடவில்லை. கழுத்தைப்பிடித்திருப்பதை பலமாக அறைகிறார். முடியவில்லை. அதன் கன்னத்தைக் கடித்துக் குதறி வெளியேற முயல்கிறார். முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் தண்ணீர்ல் ஏற்பட்ட சலனம் ஒரு முடிவிற்கு வந்தது.

     கதையின் முடிவை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. நிச்சயம் அந்த முடிவை நான் எதிர்ப்பார்க்காததும் அதற்கான காரணமாக இருக்கலாம். கணவனின் கழுத்தைப் பிடித்த அந்த கரங்கள் யாருடையது என தெரிந்துக் கொண்டதும் புத்தகத்தை அப்படியே மூடி வைத்துவிட்டேன். சமீக கால பத்திரிகை செய்திகள் கண்முன் வந்து வந்துப் போயின.
     கணவனின் எல்லா கொடுமைகளையும் மனைவி தாங்கிக்கொள்கிறாள். எப்போதாவது அவள் பங்கிற்கு அடிக்கவும் செய்கிறாள். பின்னர் அவளின் வாழ்வு எப்போதும் போல தொடர்கிறது. ஆனால் கணவன் மீது முற்றிலும் நம்பிக்கையற்ற மனைவியில் அடுத்த செயல் என்பது யாராலும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கும். அதற்கு அவள் மனதில் அந்த மனிதன் 'கணவனாக' இருக்க வேணடும்.

- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்