பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 05, 2023

'அது ஒரு..........'

                        'அது ஒரு.........'

அந்தக் கண்களில் ஒளி தெரிந்தன. தெரிந்தவை மிளிர்ந்தன. மிளிர்ந்தவை பார்வையாளர்களை ஈர்த்தன. அந்த ஈர்ப்பு அவரின் பேச்சில் இவர்களை மயக்கின.

மனம் குறித்து இதுவரை விஞ்ஞானமே சொல்லாததையும் சொல்கிறார். கடவுளே கவுன் போட்டு வந்தது போல தெரிந்தாலும் அவரின் முகத்தில் தெரிந்த தேஜஸை எழுதினால் பக்கங்கள் போதாது.

வாழ்க்கையொன்றும் அவ்வளவு கஷ்டமில்லை என்றார். இல்லையா என்றால் இல்லையென்று அர்த்தமில்லை இருக்கலாம் என்றார். இருக்கலாம் என்றால் இருந்தேதான் ஆகவேண்டுமா என சொல்வதற்கில்லை என்றார். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறதுதானே என்கிறார். அதில் கஷ்டம் வந்தால் என்ன நஷ்டம் வந்தால் என்ன அதிஸ்டம் வந்தால்தான் என்ன. எல்லாமே அதன் இஸ்டம்தானே என்றார். இதற்காக நாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் என்கிறார்.

அட, எவ்வளவு பெரிய தத்துவம் என எல்லோரும் சொன்னார்கள். கைத்தட்டல் வேறு.

அவர் இவ்வுலகிற்கு இன்னொரு ஞான கீற்றை கீறிப்போட நினைத்த பொழுது, அந்தப் உருவம் அங்கு வந்தது. அதுதான் இங்குள்ளவர்களை ஆட்டிப்படைக்கும் ஆணவம். அதுவே இவர்களை இம்சிக்கும் இயந்திரம். மனித வாழ்வின் சாபமே அதுதான். அதோ அது எதையோ சொல்கிறது. அதை நாம் கேட்டுத்தான் ஆகவேண்டும். இன்றைக்கு என்னால் இயன்ற ஞானம் அவ்வளவுதான் என அவர் முடிக்கும் முன் அந்த உருவம் தொடர்ந்தது;

அவ்வளவுதான்.

அவ்வளவுதான்னா?.

அவ்வளவுதான்னா அவ்வளவுதான். மணி ஆறே முக்கால் ஆச்சி. விசிட்டிங் ஹவர் முடிஞ்சது. இதோட நாளைக்குத்தான். எல்லோரும் அவங்கவங்க இடத்துக்கு போங்க டாக்டர் வர நேரமாச்சி.

'..... பைத்தியக்கார ஆஸ்பத்திரி'


ஜூலை 04, 2023

- வெடிகுண்டு -

                     - வெடிகுண்டு -

'நல்ல கூட்டம். சரியான இடம். இங்கு வைக்கலாம். வெடிக்கும். நிறைய பிணம் விழும். விழுமா.?. இல்லையில்லை உடல்கள் சிதறும். அழுகை. ஓலம். மரணம் ஓலம்.....'

மனக்கணக்கு இன்னும் முழுதாய்க் கணக்கிடவில்லை. அதற்குள் எழுந்துவிட்டான். நேரம் ஆக ஆக கூட்டம் குறைந்துவிடும். கூட்டம் குறைந்தால் உடல்களும் குறைந்துவிடும். உடல்கள் குறைந்தால் சிதறல்களும் குறைந்துவிடும். சிதறல்கள் குறைந்தால் வெடிகுண்டுக்கு என்னதான் மரியாதை. வெடிகுண்டுக்கே மரியாதை இல்லாத போது தன்னை யார்தான் நினைப்பார்கள்.

மூன்றாவது மாடியில் இருந்தான். மின் தூக்கி அவனை அடித்தளத்திற்கு கொண்டு போனது. கீழே வைத்து வெடிக்க வைக்கலாம். அதுதான் அதிக சேதாரத்தைக் கொடுக்கும். குழந்தைகள் அதிகம் இருக்கும் இடத்தின் நடுவில் வந்து நின்றான். 

'இந்தக் குழந்தைகள்தான் எவ்வளவு அழகாக சிரித்து விளையாடுகிறார்கள். நாமும் குழந்தையாய் இருந்திருக்கலாமோ. இவர்களுக்கு எந்த சூதும் வாதும் தெரியாது. சும்மாவா குழந்தைகளை தெய்வத்திற்கு சமமானவர்கள்னு சொல்லிக்கறாங்க.'

தன் கைப்பையை கீழே வைத்தான். திறக்கிறான். உள்ளே கையை விட்டு எதையோ செய்கிறான். கையை எடுக்கிறான். அலாரம் தயார். இன்னும் சரியாக பத்து நிமிடத்தில் வெடித்துவிடும்.
ஒரு வாரத்திற்கு அதுதான் தலைப்பு செய்தி. 

இன்னும் ஐந்து நிமிடங்களே உள்ளன.

என்ன நினைத்தானோ தெரியவில்லை. பையைத் திறக்கிறான். அலாரத்தை அடைக்கிறான். பையை எடுக்கிறான். எழுகிறான். நேரே நடக்கிறான். வெளியே வந்துவிட்டான். வெடிக்கவில்லை.

குறுங்கதையில் வெடிகுண்டைக் கொண்டு வந்தால் அது வெடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்களுக்கு வேண்டுமென்றால் வெடிகுண்டு என இருக்கும் தலைப்பை மாற்றி, வெடிக்காத குண்டு என போட்டு மீண்டும் வாசித்துப் பாருங்கள். கதை சரியாக வரும்.

#தயாஜி 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூலை 02, 2023

- அவ என் ஆளு -


                    - அவ என் ஆளு - 


"நீங்களும் அம்மாவும் சம்மதிக்க மாட்டீங்கன்னு நினைச்சி பயந்துட்டேன் பா.." என்று கண்கலங்கி நின்றான் அன்பழகன்.

பெயருக்கு ஏற்றார் போலவே அழகன்தான். அதனால்தான் என்னவோ அவனை சுற்றி எப்போதும்  பல பெண்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அன்பழகனுக்கோ எந்தப் பெண்ணும் அவன் கண்களுக்கு அழகியாகத் தெரியவில்லை.

இன்னும் சொல்லப்போனால், அன்பழகனுக்கு அழகியாகத் தெரிந்த பெண்; பெண்ணே அல்ல. 

அவள் ஒரு திருநங்கை. பார்த்த மாத்திரத்தில் கொஞ்சமும் பழகிப்பார்த்ததில் நஞ்சமும் பிடித்துவிட்டது. அவள்தான் தயங்கினாள். அவள் தோழிகள், காதல் வலையில் சிக்கி ஏமாந்த கதைகள் அவள் போன்றவர்களுக்கு பாடம் அல்லவா.

எப்படியோ இருவரும் இணையராக இணைந்திட முடிவெடுத்துவிட்டனர்.  அவளுக்கு யாருமில்லை. அவள் தன்னை பெண்ணாக அடையாளம் கண்டதும் பெற்றோரும் மற்றோரும் இவளை அவமானம் என அடையாளம் கண்டு விலக்கிவிட்டார்கள்.

ஆனால் அன்பழகனுக்கு எல்லோரும் உண்டு. படித்த குடும்ப பின்னணி. பார்ப்பதற்கே கையெடுத்து கூம்பிடும் குடும்ப தோரணை. கோவிலுக்கு போனால் கூட எப்போதும் சிறப்பு தரிசனம்தான். சில சமயங்களில் இவர்கள் குடும்பம் கோவிலுக்கு வந்தால்தான் சாமிக்கே கலை கட்டும் அந்தப் பூசாரிக்கும் கல்லா கட்டும். 

தன் அப்பா இப்படி ஒரே பேச்சில் ஒப்புக்கொண்டது அன்பழகனுக்கு ஆச்சர்யம். அப்பா மட்டுமல்ல வீட்டில் அனைவருக்குமே சம்மதம்தான். "அவளும் மனுஷிதானே. அவளுக்கும் மனசு இருக்கிறதுதானே. அதுமில்லாம நாம எந்தக் காலத்துல இருக்கோம்.. இது சயிண்ஸ் யுகம்.....கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்.. குழந்தைதானே பெத்துக்க முடியாது ... டெஸ்டியூப் பேபிக்கு போய்க்கலாம்....." என அன்பழகன் பேச வேண்டியதையெல்லாம் வீட்டில் பேசிவிட்டார்கள்.

அப்பாவும் சரி குடும்பத்தில் உள்ள அனைவரும் சரி. அன்பழகனிடம் கேட்ட ஒரே கேள்வி, "சரி சரி...... அந்தப் பொண்ணு என்ன ஜாதி".

அதற்கு அன்பழகன் சொன்ன பதில்தான் அல்டிமெட்;
"எல்லாம் நம்மாளுங்கதான். விசாரிச்சிட்டுதான் லவ் பண்ணவே ஆரம்பிச்சேன் பா...."


#தயாஜி

ஜூலை 01, 2023

- இரகசியம் -

                      - இரகசியம் - 

   இன்று லிங்கம் முதலாளி கடைக்கு வருவார். அவரிடம் இதனைக் கேட்டுவிட வேண்டும். பல நாட்களாக மனதில் வைத்து வைத்து, இனி முடியாது. சேகருக்கு இன்று ஒரு பதில் தெரிந்தாக வேண்டும்.

சில ஆண்டுகளாக இந்தச் சாப்பாட்டுக் கடையில் வேலை செய்கிறவர் சேகர். கடை திறப்பது முதல் கடை சாத்துவது வரை சேகர்தான். வடிவேலுக்கு 'நாய் சேகர்' என்றால் இந்தக் கடைக்கு இவர்தான் 'தாய் சேகர்'.

லிங்கம் முதலாளிக்கு சேகர் மீது அபார நம்பிக்கை. வாரம் ஒரு முறை மட்டுமே கடைக்கு வருவார். கல்லாப்பெட்டியில் அமர்வார். அந்த வார வருமானமாகச் சேகர் எவ்வளவு கொடுத்தாலும் குறை சொல்ல மாட்டார்.

இவ்வளவு நம்பிக்கை உள்ள முதலாளி, ஏன் கடையில் சிசிடிவியை வைத்திருக்கிறார் என சேகருக்கு ஒருநாள் சந்தேகம் வந்தது. அதுவும் அந்தச் சிசிடிவி பதிவைக் கடையில் எங்கும் பார்க்க முடியாது. ஒருவேளை லிங்கம் முதலாளி வீட்டிலிருந்தபடியே தன் கைப்பேசியில் பார்க்கலாம்.

லிங்கம் முதலாளி வந்தார். சேகரின் முகம் வாடியிருந்ததைக் கண்டவர், தானே அழைத்து விபரம் கேட்டார். சேகரும் மனதிலிருந்த சிசிடிவியைக் கேட்டுவிட்டார்.

முதலாளிக்குக் கோவம் வரவில்லை. மாறாகச் சிரிக்கலானார். சேகருக்கு ஏதும் புரியவில்லை.

அது சிசிடிவி அல்ல, சிசிடிவி மாதிரி என்பதை முதலாளி சொன்னார். தன் கடை பணியாளர்களின் மீது நம்பிக்கை கொண்ட முதலாளி, மற்ற வாடிக்கையாளர்களின் பார்வைக்கு இங்குச் சிசிடிவி இருப்பதாகக் காட்டினால் அவர்கள் நாகரீகமாக நடந்து கொள்வார்கள் என நம்பியிருந்தார். அதன்படியே இதுவரை வாடிக்கையாளர்களால் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. லிங்கம் முதலாளி சேகரின் தோளைத் தட்டி "உன்னை நம்பாமல் யாரை நம்புகிறேன்" எனச் சிரித்துவிட்டுப் புறப்பட்டார்.

சேகருக்கு மனசே சரியில்லை. இவ்வளவு நம்பிக்கை வைத்த முதலாளி மீது சந்தேகம் கொண்டோமே என மற்ற பணியாளர்களைக் கடிந்துகொண்டார்.

அன்றிரவு சேகருக்குத் தூக்கமே வரவில்லை. சிசிடிவியும் முதலாளியின் சிரிப்புமே வந்து வந்து போனது.

மறுநாள் சேகர் கடையைத் திறக்கவில்லை. வேலைக்கும் வரவில்லை. கல்லாப்பெட்டியும் சேகரும் காணாமல் போய்விட்டார்கள் எனத் தெரிந்தால் லிங்கம் முதலாளி என்ன செய்வார்.

#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

ஜூன் 01, 2023

பகடை

-  பகடை -

வீட்டில் தேவை இருந்தது. அடகுக்கடைக்கு செல்ல வேண்டும். புது நகையை அடகு வைத்து அந்தப் பணத்தில்  ஏற்கனவே அடகு வைத்த நகைக்கு வட்டி கட்ட வேண்டும். மீதமுள்ள பணத்தை  வீட்டு தேவைக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.  இந்தக் கணக்கு எனக்கு பிடிபடாது. ஆகவே இல்லாள் சொல்வதை அப்படியே செய்துவிடுவேன்.

திருப்ப வேண்டிய நகைக்கான  1% வட்டி பணத்தைக் கணக்கிட்டு ஒரு துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்தார். இப்போது புதிதாக அடகு வைக்க வேண்டிய நகையையும் எவ்வளவுக்கு வேண்டுமென கூட்டிக்கழித்து எழுதியிருந்தார்.

அடகு ரசீதில் மே மாத முதல் ஞாயிறுதான் இறுதி என  தேதி குறிப்பிட்டிருந்தது. அதனை தவறவிட்டால் வட்டி 1.5% அல்லது 2% ஆக மாறிவிடும். ஆகவே சனிக்கிழமையே சென்றிட திட்டமிட்டேன். போதாக்குறைக்கு திங்கட்க்கிழமை பொதுவிடுமுறை.

காலை. அடகுக்கடையில் ஆட்கள் இல்லை. நேராக கவுண்டருக்குச் சென்று இல்லாள் கொடுத்த துண்டு காகிதத்தைக் காட்டி ஒரு நகையை வைக்கவும் இன்னொரு நகைக்கு மேலும் ஆறு மாதங்களுக்கான வட்டியைக் கட்டவும் செய்தேன்.

வேலை முடிந்து பணமும் கைக்கு வந்தது. நேராக காருக்கு வந்தேன். மனதில் ஏதோ சரியில்லாததாகத் தோன்றியது.  கைக்கு வந்த பணத்தைக் கணக்கிட்டேன். அவர்கள் கொடுத்த ரசீதையும் பார்த்தேன். கணக்கு சரியாகத்தான் இருந்தது.

இல்லாள் கொடுத்த துண்டு காகிதத்தைப் பார்த்தேன். அதில் குறிப்பிட்ட தொகையைவிடவும் கையில் குறைவாகவே இருந்தது.

காரில் இருந்தபடியே இல்லாளை அழைத்து பேசினேன். ரசிதுகளை புலனத்தில் அனுப்பச் சொன்னார். அனுப்பினேன். சில நிமிடங்களில் என்ன கோளாறு என கண்டுபிடித்து விட்டார்.

1% வட்டிக்கு பதிலாக 1.5% வட்டிப்பணத்தை கணக்கிட்டு வாங்கியுள்ளார்கள். இத்தனைக்கும் அவர்களின் ரசீதில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே நான் வந்திருக்கிறேன். மீண்டும் அடகுக்கடைக்கு சென்றேன்.

விபரத்தைச் சொல்லி மீண்டும் அவர்களை கணக்கிடச் சொன்னேன்.  அவர்களும் கணக்கிட்டார்கள். என் கண் முன்னமே அவர்கள் 1.5% வட்டிப்பணத்தைக் கணக்கிட்டார்கள். மீண்டும் திகதியைச் சரி பார்க்க சொன்னேன். அவர்கள் தவறாக கணக்கிடுவதாக சொன்னேன்.

இல்லை என்றார்கள். ஞாயிறு கடைக்கு விடுமுறையாம் அதனால் சனிக்கிழமையை அவர்கள் இப்படித்தான் கணக்கிடுவார்களாம். அதாவது அவர்கள்தான் ஞாயிறு திகதியை எழுதினார்கள். நான் சனிக்கிழமையே கடைக்கு சென்றாலும், ஞாயிறு கடை விடுமுறை என்பதால் நான் தாமதமாக வந்ததாக காரணம் காட்டி 1.5% வட்டிப்பணத்தை கணக்கிட்டு வாங்கியுள்ளார்கள்.

இதுநாள்வரை இப்படி எனக்கு நடந்ததில்லை. நான் சனிக்கிழமையே வந்துவிட்டதாக சொன்னேன் ஆனால் அவர்கள் கணக்குப்படி ஞாயிறு பொதுவிடுமுறை என்பதால் சனிக்கிழமை வந்தாலும் நான் தாமதமாகத்தான் வந்திருக்கிறேனாம்.

எனக்கு கோவம் வந்துவிட்டது. எத்தனைப் பேரிடம்தான் நான் ஏமாறுவது. சத்தம் போட்டதும் கடையில் வேலை செய்பவர்கள் எல்லாம் எழுந்து அருகில் வந்து நின்றுவிட்டார்கள்.

நானே நூறு கிலோ இருப்பேன். அவர்களில் ஒவ்வொருவரும் என்னைவிட இருமடங்காக இருந்தார்கள். அங்கு அதுதான் சட்டம் அதுதான் நடைமுறை, தேவையென்றால் போலீஸிடம் போ என்றார்கள்.

கோவத்தை அடக்கிக்கொண்டு காருக்கு வந்துவிட்டேன். இல்லாளிடம் புலம்பினேன். இந்த அடகுக்க்கடையில் இப்படியான ஏமாற்று வேலைகள் நடப்பதை அவரும் கேள்விபட்டதாகச் சொன்னார். அங்கு அடகு வைத்த நகைகளை எப்படியாவது சீக்கிரம் மீட்டுவிட வேண்டும் என்றார்.

இரவு, காலையில் நடந்த சம்பவம் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்தபடி இருந்தது.  இப்படி எத்தனைப்பேரை அவர்கள் இதுநாள் வரையில் ஏமாற்றியிருப்பார்கள். நான் ஏமாந்தும் என்னால் அவர்களுக்கு எதிராக ஒன்றுமே செய்ய முடியவில்லை.

வீட்டில் சமைக்க முடியவில்லை, இல்லாள் சாப்பாடு ஆடர் செய்திருந்தார். வரும் நேரம். வழக்கமாக இரண்டு மாடிகள் ஏறி வந்துதான் சாப்பாட்டைக் கொடுப்பார்கள். நாங்களும் கூடுதல் பணமோ அல்லது அவர்களுக்கு குளிர்பானமோ கொடுத்தனுப்புவோம். இம்முறை வந்தவர் படி ஏற முடியாது. எங்களை கீழே வந்து வாங்கிக்கொள்ள சொன்னார்.

காலையில் இருந்த கோவம். இப்போது இது. மேலும் என்னை கடுப்பாக்கியது. இன்னிக்கு ஒரு வழி செய்யலாம் என கீழே இறங்கினேன். அந்நபர் தாமதமாக வந்தார்.

வந்தவர், மோட்டரை நிறுத்திவிட்டு. சின்ன தடுமாற்றத்துடன் என்னருகில் வந்தார். அவருக்கு ஒரு கண் இல்லை. ஒரு கண்ணை வைத்துதான் மோட்டார் ஓட்டி சாப்பாடு டெலிவரி செய்கிறார். அவரைப்பார்த்ததும் மனம் கோவத்தில் இருந்து மாறியது.

வந்தவர் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டார். அதோடு பெரிய சைஸ் கொக்கோ கோலா பாட்டிலைக் கொடுத்தார். நாங்கள் அதனை ஆடர் செய்யவேயில்லை. நான் அதை சொன்னேன்.

எங்கள் ஆடரில் இருந்த ஒரு குவளை கொக்கோ கோலா வரும்போது தடுமாற்றத்தில் கவிழ்ந்துவிட்டதாம். அதற்கு பதிலாக பெரிய பாட்டிலை வாங்கிவருவதற்குதான் கொஞ்சம் தாமதமானதாக சொன்னார்.

நான் பரவாயில்லை என்று சொல்லி கொக்கோ கோலாவிற்கான் பணத்தைக் கொடுத்தேன். அவர் வாங்க மறுத்தார். ஏதேதோ பேசி, அவர் சட்டை பாக்கெட்டில் கூடுதல் பணம் வைத்துவிட்டு அவரை வழியனுப்பினேன்.

ஒரே நாளில் இரு வகை மனிதர்களைச் சந்தித்துள்ளேன். ஒருவர் நிறுவனத்தில் சட்டதிட்டங்களைப் பயன்படுத்தி தன்னிடம் வருபவர்களிடம் கொள்ளையடிக்கிறார். இன்னொருவர் உழைப்பை நம்புகிறார். தன்னால் இன்னொருவருக்கு இழப்பு இருக்கக்கூடாது என தன்னளவில் முயல்கிறார். இரண்டிலும் பணமே பகடைக்காயை உருட்டுகிறது.

நல்லதோ கெட்டதோ, அதற்கு இணையாக இன்னொன்று இருக்கவே செய்கிறதுதான் போல...

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்


ஏப்ரல் 23, 2023

உரையாடுவோம்


நண்பர்களும் தம்பிகளுமான ஆதித்தன் மகாமுனி, இளமாறன் ஆகிய இரண்டு இளம் படைப்பாளிகளுடன் நேற்றிரவு ஒரு அசத்தலான சந்திப்பு நடந்தது.

கவிதைகள் கதைகள் எழுத்தாளர்கள் என பலவற்றைப் பேசிப்பேசி நேரம் போனதே தெரியவில்லை.

இளம் கவிஞர் இளமாறன், அவர் எழுதிய கவிதைகளில் சிலவற்றை கொண்டு வந்திருந்தார். கவிதை வாசிப்பு கவிதையுள் வாசிப்பு என கிடைத்த நேரத்தைச் சரியாக பயன்படுத்திக் கொண்டோம். இளம் படைப்பாளியாக அவர்களிடமிருந்து வந்த கேள்விகள் முக்கியமானவை. என் பார்வையில் இருந்து சிலவற்றை பேசினேன். உண்மையில் பேசினோம். பயனாக இருக்கும் என நம்புகிறேன்.

மீண்டும் பேசுவோம். வாய்ப்புள்ளவர்கள் நீங்களும் கூட வரலாம். உங்கள் கவிதைகளையோ கதைகளையோ அல்லது நீங்கள் ரசித் படைப்புகளையோ கொண்டு வாருங்கள். நாம் உரையாடுவோம்......

இளமாறனின் கவிதைகளில் ஒன்றை மட்டும் அவர் அனுமதியின்றி இங்கு பகிர்கிறேன். எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று..

'ஊமைச்சொல்'

வேண்டாத பார்வையாக
இறுக்கமாய் வந்து
விழுகிறது
மனதை பெயர்த்தெறியும்
உன்
வார்த்தை

- கவிஞர் இளமாறன்.

ஏப்ரல் 13, 2023

தீண்டாமை


"என்னப்பா உங்க ஆளுங்களை கோவிலுக்குள்ளயே விட மாட்டறாங்க.. நீ என்னடான்னா சாமி.. சாமின்னு நம்பிகிட்டு இருக்க...?"

"என்ன செய்றது... உங்க யாராலயும் தலைவராக முடியாதுன்னு முடிவு பண்ணி.... நாலாவது தலைவராகவும் உங்க தலைவரின் வாரிசையே தலைவராக்க கோஷம் போட்டுக்கறாங்க.. ஆனாலும் நீங்க அதே கட்சிக்கு ஓட்டு போடறது இல்லையா..."

"நான் சொல்றது தீண்டாமை.."

"அங்கிருந்து பார்த்தா இது உங்களுக்கு தீண்டாமை... இங்கிருந்து பார்த்தா அது எங்களுக்கு அது தீண்டாமை...."

#தயாஜி
#குறுங்கதை
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்