பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 29, 2020

ஸ்படிக கிரீடக்காரி



கனத்த மழையின் நாளொன்றில்
நினைவிருக்கிறதா
நாம் சந்தித்துக்கொண்டோம்
அது சந்திப்புதானா என முழுமையாய்
புரியவில்லை

வேறெந்த பெயர் வைக்கவும் தெரியவில்லை
தைரியமுமில்லை
உன்னிடம் மட்டும் ஒரு குடை
மழையில் தன்னை நனைந்துக் கொண்டிருந்தது

பிரபஞ்சத்தின் கண்டுபிடிப்பாய்
உனக்கு
ஸ்படிக மழைத்துளிகளின் கிரீடம்
கொடுக்கப்பட்டிருந்தது
வைரம்போல அவை
மினுமினுத்தன

மெல்ல நீ நடந்து வந்தாய்
மழையை மதிக்காது நான்
ஏனோ உன்னைத் தொடர்ந்தேன்
எத்தனை முறை பார்த்தாலும்
அத்தனை முறையும்
நீ பிரமிப்பைக் கொடுக்கத் தவறுவதில்லை

அன்றும் அப்படித்தான்
அருகில் நான் வந்ததும்
குடையை மடக்கி வீசினாய்
இப்போது இருவரும் நனைவோம் என்றெண்ணினேன்

நீயோ
உன் வெண்சிறகை விரித்து
என்னை இழுத்து அணைத்து
மழையில் இருந்து காத்தாய்
மழைத்துளி படர்ந்த
உன் வெண்சிறகின் வாசத்தினை
உன் நினைவு தோன்றும்பொதெல்லாம்
முகர்ந்து சிலிர்க்கிறேன்

#தயாஜி

ஏப்ரல் 27, 2020

'எனக்கொரு வாய்ப்பு கொடு அன்பே என் நட்பே'


வாழ்ந்துவிட்டு போங்கள் 
என்கிறேன்
பார்த்துவிடவும் வேண்டாமென
மறைகிறேன்
கண்டுக்கொள்ளக்கூடாது என
கவனம் கொள்கிறேன்
உங்கள் போலிபுகார்களை காதில்
நுழையாமல் தடுக்கிறேன்

உங்களால் இழந்துவிட்டவைகளை 
நானே
கடன்களாக சுமக்கிறேன்
உங்கள் பச்சை 
துரோகத்திற்கு
வெண்மை பூசுகிறேன்

உங்கள் ஏமாற்று வேளைகளை
கணக்குப்பார்க்காமல் ஒதுக்குகிறேன்
உங்கள்
போலி முகம் குறித்த
வார்த்தைகளை கிள்ளிவிடுகிறேன்
ஆனால்

நீங்கள்
ஆனால் நீங்கள்
என் வாழ்வை 
இம்சிக்கவே யோசிக்கிறீர்கள்
உங்களிடம் வேண்டிக்கொள்வது 
ஒன்றுதான்
உங்களை மன்னிக்க உங்களை மறக்க
எனக்கு ஒரு வாய்ப்பு
ஒரே ஒரு வாய்ப்பு மட்டும்
கொடுத்துவிடுங்கள்
உங்களை மன்னிக்க

என்னால் உங்களை
இம்சிக்க முடியவில்லை
என்னால் உங்களை
தேடிப்பார்க்க முடியவில்லை
என்னால் உங்கள் முகநூலில்
மோப்பமிட முடியவில்லை
என்னால் உங்கள் 
புகைப்படங்களை
மீண்டும் மீண்டும் தேடி
எரித்துவிட முடியவில்லை

என் நினைவுகளில் எங்கல்லாம்
நீங்கள் இருக்கிறீர்களோ
அங்கெல்லாம் என்னால்
துரோகத் திராவகம் 
ஊற்ற முடியவில்லை
என்னால் உங்கள் 
நண்பர்களை 
உதாசினம்
செய்ய முடியவில்லை

நாம் சென்று வந்த இடங்களை
கல்லரைகளாக பார்க்க முடியவில்லை
நாம் பேசிக்கொண்ட நகைச்சுவைகளுக்கு
அழுது வைக்க முடியவில்லை
நாம் சேர்ந்து செய்த பிரார்த்தனைகளை
மூட நம்பிக்கைகளாக
மாற்ற முடியவில்லை
நாம் சேர்ந்துச் சுற்றிய ஊர்களை
திக்கற்றவை  
என நினைக்க முடியவில்லை
நாம் சேர்ந்து 
தின்ற பிராணிகளை மறந்து
சைவனாக மாற தெரியவில்லை
நாம் சேர்ந்து பேசியப் புரளிகளை
உண்மை என நம்ப முடியவில்லை

நிறைவாக என்ன சொல்ல
நிலமையைத் தவிர
ஆகக்கடைசியாக உங்களால்
என்ன செய்ய முடிந்தது

கூட்டணிக்கூடி
ஆள்வைக்கத்தான்  முடிந்தது
அறிவில் அல்ல
ஆயுளில் கெட்டிக்காரன் என்பதால்
அடித்த அடிகளில்
இடது கால் ஒடிந்தது
நெஞ்சு எலும்பு வீங்கியது
எடுத்த இரத்த வாந்திகளில்
பற்களின் சில துகள்கள் விழுந்தன

பாரமெடுத்த மண்டைக்காரன்
என்பதால் என்னவோ
அடித்த அடிகளில் மூளையின்
மேல்மட்ட நினைவுக்கூடம்
ஆட்டம் கண்டு
ஞாபகங்களை திட்டுத்திட்டாக
சிதற விட்டது

வங்கிப்பணமெல்லாம் மருத்துவமனை
மருந்துகளுக்கு மாறிக்கொண்டது

உயிரே
உயிரே
என்பதெல்லாம் காரணத்துடந்தானா?
காரியங்கள் முடிந்ததும்
கனவுகளை கொன்றுவிட
எல்லாமே வெறும் மயிர்கள்தானா…?

நான் சம்பாதித்துக் கொடுத்த
பணக்கூட்டங்களில் உங்களால்
என்ன செய்துவிட முடியும்

மேலும் மேலும்  முதலீடு செய்வீர்கள்
இன்னும் சில புத்தகங்களை 
வெளியிடுவீர்கள்
முன்பொருமுறை திட்டியவர்களுக்கு
எலும்புத்துண்டுகளை விருதுகளில்
கட்டி கூட்டி வருவீர்கள்

அதில் உங்கள் ஆட்டம் காட்டுவீர்கள்
புதியவர்கள் தேவை என
கூப்பாடு போடுவீர்கள்
பேசி  மயக்க முடிந்தவர்களை
டீ-க்கு அழைத்து போவீர்கள்

சம்பத்தப்பட்ட கணவர்களுக்கு
கண்ணாம்பூச்சி காட்டுவீர்கள்

ஒரு நிமிடம்
ஒரு வினாடி
ஒரு நொடி

உங்கள் வீட்டில் இடி விழுந்தால்
என்ன செய்வீகள்
உறவுகளில் உயிர் ஊசலென்றால்
என்ன செய்வீர்கள்
வேலையில் வேசம் கலைந்தால்
என்ன செய்வீர்கள்
ஒரு கை ஊனமானால்
என்ன செய்வீர்கள்
உங்கள் காலில்
யானை புகுந்தால்
என்ன செய்வீர்கள்

இத்தனை பயங்களுடந்தான்
உங்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
என் காதில் கிசுகிசுப்பதை நிறுத்துங்கள்
கெஞ்சி வேண்டுமானும் 
கேட்டுக்கொள்கிறேன்

ஒரு வாய்ப்பு
ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்
உங்களை மன்னித்துவிடுகிறேன்

-தயாஜி

ஏப்ரல் 25, 2020

மந்திரக்காரி



நீ வரைவதற்கு கொடுத்திருந்த
காகிதங்களைக் காணவில்லை
வைத்த இடம் நினைவில் உண்டு
காகிதங்களைக் காணவில்லை

வரைவதற்கு நான் 
என்னை தயார்படுத்தித்
திரும்புகையில் 
காகிதங்கள் காணவில்லை
உன்னை எப்படி நம்பவைப்பது

இதோ இங்குதான் நீ கொடுத்தாய்
இதோ இங்குதான் நான் வாங்கினேன்
இதோ
இதோ இங்குதான் நான் வைத்தேன்

உன் விரல்களைக் கொடு
காகிதங்கள் காணாமல் போன
மர்மத்தின் துகள்கள் ஏதும்
எஞ்சியுள்ளனவா என பார்த்துக்கொள்கிறேன்

இத்தனை மிருதுவான 
விரல்களைக் கொண்டா 
காகிதத்தைத் தடவிக்கொடுத்தாய்

மந்திரக்காரியே
இப்படி மாயம் செய்யலாமா

உன் கை தொட்ட
உள்ளாசத்தில் குளிர்ந்து
உலகின் எல்லைவரை எம்பி
குதித்துவிட்ட
காகிதங்களை எப்படி நான் தேடுவேன்
எங்கென்று நான் காணுவேன்

நம்பிக்கையில்லையா
பொய்யா சொல்கிறேன்

சரி வா
உனக்கும் வேண்டாம்
எனக்கும் வேண்டாம்

அருகில் வா
கட்டிப்பிடி
என் மார்பில் காது வை
கண்களை மூடு

நீ எத்தனை பெரிய 
மாய வித்தகி என
உனக்கே நான் காட்டுகிறேன்

வா
கட்டிப்பிடி
காகிதங்களைத் தேடவேண்டும்
வரைவதற்கு நேரமாகிக்கொண்டிருக்கிறது


#தயாஜி


ஏப்ரல் 24, 2020

கண்மணி அன்போடு காதலன்



   'கண்மணி அன்போடு காதலன்'           கே.கவி நந்தன் இயக்கிய டெலிமூவி. நேற்றைய இரவு கண்மணியோடும் காதலோடும் கடந்தது.

  தலைப்பிற்கு ஏற்ற படம். சொல்லப்போனால் தலைப்புதான் முழு கதையுமே. ஆண்கள் தொட்டாலே மயங்கும் விழுந்துவிடும் விசித்திர நோய் கொண்டிருக்கிறார் நாயகி. அதனால் அவருக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகிறது. தன் உடல் பருமனையும் அழகற்ற முகத்தையும் காரணம் காட்டிய காதல் தோல்வியால் மனமுடைந்துப் போகிறார் நாயன். திருமணம் எட்டா கனிதான் என நினைத்து அதனை வெறுக்கிறார். 

   இப்படி இருவித மனப்போக்கு கொண்டவர்கள் சந்திக்கிறார்கள். நட்புகொள்கிறார்கள். சொல்லிக்கொள்ளாமல் காதல் இருவர்க்குள்ளும் நுழைகிறது. 

       நாயகன் நாயகியின் நோய்மையைப் புரிந்துக்கொள்கிறார். அவளுடன் வாழ்வை பகிர முடிவு செய்கிறார். 

   ஆண்களிடம் இருந்து ஒதுங்கியே இருந்த நாயகி,  நாயகனின் குழந்தைத்தனத்தாலும் அன்பாலும் ஈர்க்கப்படுகிறார். 

   நாயகியின் ஆசைகளை நாயகன் நிறைவேற்றி பார்வையாளர்களையும் கவர்ந்துவிடுகிறார்.

   இருவர்க்குள்ளும் இருக்கும் காதல் மெல்ல மெல்ல பார்வையாளர்களை பரவசப்படுத்தும் பொழுது துரதிஷ்டவசமாக இருவர்க்குள்ளும் பிரிவு ஏற்படுகிறது.

   மீண்டும் தனது தாழ்மையுணர்ச்சியால் நாயகன் ஒடிந்துப்போகிறார். நாயகியிடமிருந்து ஒதுங்குகிறார். 

 அவர்களின் காதல் கைகூடியதா, காதலனும் கண்மணியும் சேர்ந்தார்களா என்பதுதான் மீதி கதை. சொல்லப்போனால் ஒரு சிறுகதை வாசித்த திருப்தியை உணர முடிந்தது.

   நாயகன் நாயகி அறிமுகம். அவர்களின் எதிர்ப்பார்ப்பு. காதல் மலரும் தருணம். திடீர் சிக்கல். மீண்டும் சேர்வார்களா என்கிறா ஆவல் என கணக்கச்சிதமாகக் கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.



   நாயகனின் பெற்றோர்கள், நாயகியின் அம்மா ஆகியோரின் நடிப்பும் வசனங்களும் மிக எதார்த்தம். நாயகனின் கடையில் வேலை செய்யும் உறவுக்காரப் பையன் கவனிக்க வைக்கிறார். இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பு அவரிடம் நன்றாகவே தெரிகிறது.

   அடுத்து நாயகியின் தோழி. அவரின் கதாப்பாத்திரமும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் தேவையில்லாத பாத்திரம் போல காட்டப்பட்டாலும், இவர்தான் முக்கிய திருப்புமுனைக்கு காரணகர்த்தா.
நாயகி தன் கதாப்பாத்திரத்தை நன்கு உணர்ந்து தன்னை வெளிகாட்டியுள்ளார்.

  வர்மன் இளங்கோவனின் இசை, காட்சிகளில் லயிக்க வைக்கிறது.

   இயல்பாகவே, குறையுள்ள கதாப்பாத்திரத்தை வைத்து அழவைக்கும் காட்சிகளையும் சிரிக்க வைக்கும் காட்சிகளையும் வருந்தவைக்கும் காட்சிகளையும் எடுத்து விடலாம். ஆனால் அதற்கு அந்த கதாப்பாத்திர நடிகர் பாத்திரத்துடன் ஒன்றிப்போக வேண்டும். இல்லையென்றால் அவர் அழுகையில் நாம் சிரிப்போம். நம்மை அழ வைக்கவே அவர் சிரித்தும் வைப்பார். காதலன் பாத்திரத்தில் நடித்திருக்கும் குபேன் மஹாதேவனுக்கு ஒரு பெரிய சலியூட் போடலாம். எந்த வகையிலும் நாயகன் மீது பொய்யான கழிவிரக்கத்தை காட்டாமல் படமாக்கிய இயக்குனரைக் கட்டியணைத்துக் கை குலுக்கலாம்.

    தோய்வில்லாத காட்சியமைப்பு, தகுந்த நடிகர்கள், சரியான திரைக்கதை, உருத்தாத இசை என தேவையானது தேவனையான அளவில் போடப்பட்டுள்ள டெலிமுவி இந்த ' கண்மணி அன்போடு காதல்.

   நம் கலைஞனின் படம், என்பதைத் தாண்டியும் திறைமைசாலியின் படைப்பு என்று முன் நிற்கிறது. 
இயக்குனர் கே.கவி நந்தன்

நிச்சயம் குடும்பத்தோடு பார்க்கலாம். ரசிக்கவும் சிரிக்கவும்    
சக மனிதர்க்கும் மனமிருக்கு என்பதை புரிந்துக்கொள்ளாலாம்.

   படக்குழுவினர்க்கு பாராட்டுகள். தொடர் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

- தயாஜி

தற்காலிகத் தனிமை

   
   இன்னும் இரண்டு வாரங்கள். நேரலையில் பிரதமர் பேசி முடிக்கப்போகிறார். சுகுமாறனுக்கு அது மன உளைச்சலைக் கொடுத்தது. சுகுமாறனுக்கு மட்டுமா? சுற்றுவட்டார மாறன்கள் அனைவருக்கும்தான். முகநூலில் பலர் பதிந்த புலம்பல் போலவே தானும் பதிவு போட்டார்.

         பெரிய வீடுதான். ஒரு நாள் இரண்டு நாளென்றால் பரவாயில்லை. வீட்டையே சுற்றிப் பார்க்கலாம் ஆனால் மொத்தமாக இரண்டாவது மாதமாக இந்நிலை என்றால் பாவம்தானே. மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு. தேவையின்றி யாரும் வெளியேறக்கூடாது. வீட்டில் இருப்பதுதான் பாதுகாப்பு. உத்தரவை மீறினால் சிறை தண்டனையும் அபராதமும் உண்டு.

  பொழுது முழுவதும் கைபேசி, தொலைக்காட்சி, இணையம் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து மனம் குழம்பிப்போய்விட்டது.

    தனக்கு மட்டும்தான் இப்படியா என வீட்டில் ஒவ்வொருவரின் அறையையும் நோட்டமிட்ட தொடங்கினார். அப்போதாவது பொழுது கொஞ்சம் போகுமே என்பதற்காக.

    மகன் தன் அறையில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கிறான். வீடு பற்றி எரிந்தாலும் அவனுக்கு தெரியாது.

    மகள் தன் அறையில் பாடல்களைக் கேட்டுக்கொண்டே ஸ்கைப்பில் யாருடனோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்கிறாள். விட்டால் பேசியே வயதாகிவிடுவாள் போல.

     மனைவி மஞ்சளாய் எதையோ தடவிய முகத்துடன் யூடியூப்பில் அழகு குறிப்புகளைக் கேட்டுக்கொண்டுருக்கிறாள். இன்னும் எத்தனை கொடுமைகளை தான் அனுபவிக்க வேண்டும் என கண்கள் கலங்கினார்.

   நான்காவது, ஸ்டோர் ரூம் கதவை திறக்கிறார். உள்ளே, கட்டிலில் அமர்ந்தபடி திறந்த ஜன்னலில் எதையோ பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார். எந்த வித பதட்டமும் இல்லை, அவரின்  முகம் அத்தனை சாந்தமாக இருக்கிறது.

    சில ஆண்டுகளாக அம்மாவை இந்த அறையிலேயே வைத்திருப்பது சுகுமாறனுக்கு இப்போதுதான் சுருக்கென்றது. 

#தயாஜி

'அவளும் என் கவிதைகளும்'



உன்னால் என் கவிதை
நூலுக்கு என்ன கொடுக்க
முடியுமென்பதே விவாதம்
எதுவும் பேசவில்லை
எழுந்தாள்
என் கவிதை நூல்களை
ஒன்றின் பின் ஒன்றாக கோர்த்தாள்
படுத்தவாக்கில் ஆளுயர நீளமாய் தெரிந்தன
மெல்ல முன் நகர்ந்தாள்
வெறுமனே நகரவில்லை
ஒவ்வொரு அடிக்கும்
நூல்களின் முகப்புகளைத்
தடவிக்கொண்டே போனாள்
தலை நூலை மட்டும்
சில நொடிகள் நீள
தொட்டுத்தடவி விட்டுச்சென்றாள்
சட்டென நூல்கள் மகுடி கேட்ட
பாம்புகளாக
உடல் நெளிந்து
வால் அதிர்ந்து
தலை தூக்கி அவள் பின்னே
ஊர்ந்ததுப் சென்றன
கைகளை நீட்டுகிறாள்
பாம்பாகிவிட்ட நூல்கள்
அவன் கையணைப்பில் குழந்தை போல உறங்கத் தொடங்கின
மெல்ல அதனை மேஜையில்
வைத்தவள்
கொஞ்ச நேரம் தடவிக்கொடுத்தாள்
மீண்டும்
ஒற்றை நூலை உருவி எடுத்து
நடுபக்கம் பிரித்தாள்
'பூவிதழ்' எனும் தலைப்புக் கவிதை தெரிந்தது
அருகிலிருந்த குவளையில் நீர் அருந்தியவள்
ஆழ்ந்த சுவாசத்தை உள்ளிழுத்து
பனிக்காற்றை ஊதினாள்
நூல்களில் பனி நீர் பரவ
ஏடுகளிலிருந்து எழுந்து வளர்ந்து
பூத்துக் குலுங்கின பூச்செடிகள்
அதிலொரு பூவைத் தொடவும்
அதுதன் இதழொன்றை அவளுக்கு எடுத்துக் கொடுத்தது
இன்னொரு புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்து
திறக்கச்சொன்னாள்
எனக்கு உள்ளூர பயம்
என்ன செய்ய
இப்படி மாட்டிக்கொண்டேனே என பதறினேன்
என்னால் எழுத மட்டும் முடிகிறது
என்கிறேன்
நீ நினைத்தை எழுது
நீ எழுதியதை
நான் நினைக்க வைக்கிறேன் என்கிறாள்

புத்தகவாசிப்பு_2020_9 ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’



#புத்தகவாசிப்பு_2020_9  ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’
புததகம் –ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’
எழுத்து – அதி. இராஜகுமாரன்
பதிப்பகம் – மழைச்சாரல் (மலேசியா)

       மலேசிய பத்திரிக்கைத் துறையில் எப்போதும் நினைவில் கொள்ளும் பெயர்களில் இவர் பெயரும் அடங்கும். இங்கு புதுக்கவிதைகள் அதிகரிக்க அதற்கான களம் அமைத்து பங்காற்றியவர்களில் ஒருவர். இன்றும் பல கவிஞர்கள் நன்றியோடு இவரை நினைக்க தவறுவதில்லை. ஆரம்பகால தமிழ்மலர் பத்திரிகை அதனை அடுத்து ஆதி.குமணனின் வானம்பாடி, தமிழோசை பத்திரிகைகளில் இருந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து தமது சொந்த இதழ்களான  நயனம் , நிலா போன்ற இதழல்களை சிறப்பாக வழி நடத்தியவர். காலச்சூழலில் நயனம் இதழ் இப்போது இல்லாவிட்டாலும், பலரின் படைப்புகளுக்கு அவ்விதழ்தான் தாய்வீடு. எளிமையானவர். யாரிடமும் அதிர்ந்துப் பேசாதவர். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இதுவொன்றும் மிகப்படுத்தல் அல்ல என்று அவரை அறிந்த எல்லோர்க்கும் தெரியும்.

      இச்சமயம் இன்னொன்றையும் இங்கு பதிவு செய்தாக வேண்டியுள்ளது. ஆங்கிலப் புலமையும் கணினி நுட்பமும் அறிந்தவர். ‘இணையம்’ என்ற சொல்லைத் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு வழங்கியவர் இவர்தான்.

       அவரின் ஆலோசனையின் பெயரில் கவிஞர் மீராவாணி, ‘மழைச்சாரல்’ எனும் புலனக்குழுவைத் தொடங்கினார். அதன் வழி பல படைப்பாளர்கள் வாசகர்கள் ஒன்றிணைந்தார்கள். அவ்வொரு படைப்பாளர்களும் தத்தம் படைப்புகளை அந்த புலனக்குழுவில் பகிர்ந்துவருகிறார்கள். அதற்கான விமர்சனமும் அதில் இடம்பெறும். அதன் அடுத்த முன்னெடுப்பாக அக்குழுவில் உள்ள பல படைப்பாளர்கள் புத்தகங்களை வெளியீடு செய்துள்ளார்கள். சமீபத்தில் இக்குழுவில் சிறுகதை போட்டி ஒன்றை நடந்தினார்கள். அதில் வெற்றி பெற்ற சிறுகதைகளைத் தொகுக்கின்ற அதே சமயத்தில் மறைந்த ஐயா ஆதி. இராஜகுமாரன் அவர்களின் சிறுகதைகளையும் தொகுத்து மீண்டும் பிரசுரம் செய்தார்கள்.

      1984-ம் ஆண்டில் ‘முகவரி தேடும் மலர்கள்’ என்கிற தலைப்பில் வெளிவந்த சிறுகதைகளை இப்போது மீள் பிரசுரமாக ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள் ’ என்று வெளியிட்டார்கள்.

      இனி புத்தக வாசிப்பிற்குச் செல்வோம்.

      படைப்புகளை வாசிக்கையில் அது எழுதப்பட்ட காலகட்டத்தை கவனிக்க வேண்டும் என்பது என் கருத்து. என்னதான் காலத்தையும் தாண்டிய படைப்பு என்றாலும் அது எழுதபட்ட காலக்கட்டம்தான் அந்த படைப்பை காலத்தைக் கடந்து பயணிக்க வைக்கிறது.

       இந்த தொகுப்பில் மொத்தமாக பதினாறு சிறுகதைகள் இருக்கின்றன.

     ‘ஒரு தேவதை உறங்குகிறாள்’ என்னும் சிறுகதை மரம் வெட்டுபவனின் கனவை அடிப்படியாகக் கொண்டது. அது அவன் கனவு மட்டுமல்ல வாசகர்களையும் புதிய உலகுக்கு அழைத்துச் செல்லும் கனவு. சின்ன வயதில் இருந்தே கதைகள் கேட்டு வளர்ந்த நாயகன். காலப்போக்கில் தனக்குத்தானெ கதைகளைச் சொல்ல ஆரம்பிக்கின்றான். தனது தாத்தா சொல்லிய கதைகள் முடிந்துவிட்டபடியால் தானே கதைகளை உருவாக்க ஆரம்பிக்கின்றான். அவன் கதைகளில் அவனே நாயகன். நிகழ்காலத்திற்கும் கனவுலகிற்குமான பயணமாக அவனது கதை தன்னை அமைத்துக் கொள்கிறது. ஓர் அழகான மாளிகையைக் கட்டிவிட நினைக்கிறான், அதற்கு முன்பாக தனக்கு ஒரு வித்தியாசமான அழகு நயமிக்க அறையொன்றை கட்டிக்கொள்ள நினைக்கிறான். தானே அதனை கட்டிக்கொள்ள முடிவு எடுக்கிறான். அப்போது அவனுக்கு துணையாக வானிலிருந்து ஒரு பஞ்சவர்ணக் குதிரை வருகிறது.

     பஞ்சவர்ணக் குதிரை அவனுக்கு உதவுவதாகவும் ஆனால் அதற்கு ஒரு உறுதி மொழியையும் கேட்கிறது. அவன் வாழ்வில் காதலுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும், அப்படி எந்த பெண்ணிடமாவது இவன் மயங்கினால் அவனை அவ்விடத்துலேயே விட்டுவிட்டு பஞ்சாவர்ணக் குதிரை மறைந்துடும்.

      குதிரையின் மீதமர்ந்து அவனுக்கான அழகிய மாளிகையைக் கட்டத் தொடங்குகின்றான். குதிரை அவனது கட்டிடக் கலையைக் கண்டு பிரம்பிக்கிறது. ஆனால் அங்குதான் சிக்கல் ஆரம்பமாகிறது. ஒரு அழகிய தேவலோக மங்கையை காண்கிறான். அவர்களுக்குள் காதல் மலர்கிறது.     
  
      தேவலோக மங்கையின் தந்தை இதனை விரும்பவில்லை. நாயகனுக்கு அவன் காதலை நிரூபிக்க சில சவால்களை கொடுக்கின்றார். அதன் பிறகு கதை வேறு பக்கமாக பயணிக்கின்றது. அவனது கனவு கலைந்ததா அல்லது கனவு தொடர்ந்ததா  என்பதுதான் மீதி கதை.

       இக்கதையை நகர்த்திச் சென்ற விதம் ஆச்சர்யமாக இருந்தது. இன்று எழுதிய கதை போல  புதிதாகவே தெரிகிறது. இக்கதையில் ‘புள்ளினங்கள்’ என்கிற சொல்லாடலை ஆசிரியர் பயன்படுத்தியிருப்பார். குறுந்தொகை பாடலில் ‘புள்ளினங்கள்’ என்று பறவைக்கூட்டத்தை சொல்லியிருப்பார்கள். ஷங்கரின் 2.0 திரைப்படத்தில் நா.முத்துக்குமார் ‘புள்ளினங்காள்’ என்று பாடல் வரியை ஆரம்பித்திருப்பார். பலரும் அந்த வார்த்தைகளை சிலாகித்துச் பேசியிருந்தார்கள். ஆனால் அந்த குறுந்தொகை சொல்லாடலை முன்னமே தன் சிறுகதையில் பயன்படுத்தி தன் வாசிப்பை எடுத்துக்காட்டி இருக்கிறார். எனக்கும் இவ்வார்த்தையை வாசித்ததும் ஓர் பூரிப்பு தொற்றிக்கொண்டது. இப்படியாக கவனிக்க வேண்டிய படைப்புகளும் படைப்பாளர்களும் இங்கு இருக்கவே செய்கிறார்கள். சரியான் வாசிப்பும் சரியான விவாதங்களும் இல்லாமையே நாம் காணும் இங்குள்ள வெற்றிடத்திற்கு காரணம். ஒன்று சரியானவர்க்கு இடமில்லை, இன்னொன்று தேவையற்றவர்க்கு எல்லாவகையிலும் இடம் கிடைக்கிறது.

     ‘திரைகள்’ அழகான காதல் கதையாகத் தொடங்குகிறது. பேருந்து நிலையத்தில் பார்க்கின்ற பெண்ணின் மீது நாயகன் காதல் கொள்கிறான். வேலை முடிந்த உடனே கிளம்பிவிடுகிறான் நாயகன். நாள் தவறாமல் அவளை பார்க்கிறான். பேருந்து நிலையத்தில் அவள் ஒரு பக்கம் இவன் ஒரு பக்கம். ஒரு முறை கூட அவள் அவனை பார்க்கவில்லை. இப்படியாக அவனது காதல் கதை ஒரு மாதம் தொடர்கிறது. தன்னிடம் ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும் என யோசிக்கிறான். ஆனால் அதற்காக பணத்தை சேமிக்க எத்தனை ஆண்டுகள் உழைக்க வேண்டும் என புலம்புகிறான்.  சமயங்களில் அவனது நண்பர்கள் அவ்வழியே காரில் சென்றால் அவனையும் அழைப்பார்கள். ஆனான் அவனோ அதனை தவிர்த்துவிடுவான்.  அவளிடம் எப்படியாவது தன் காதலை சொல்லிவிட காத்திருக்கும் நாயகன் எப்படி அந்த வாய்ப்பை நழுவ விடுவான். ஒரு நாள் ஒரு கார் வந்து நிற்கிறது. அவளுக்கு அருகில். அந்த பெண் காரில் ஏறிக்கொண்டாள். காரின் கதவை சாத்துவதற்கான ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் அவள் அவனைப் பார்க்கிறாள். அப்போதுதான் அவனுக்கு பொறி தட்டியதாக ஆசிரியர் சொல்கிறார். வாசகர்களுக்கு இந்நேரம் பொறி தட்டியிருக்கும். ஆக, இத்தனை நாளும் அவள் அவனை பார்க்காமல் இருக்கவில்லை. அவள் எதிர்ப்பார்ப்பில் நாயகன் இல்லை என்பதே அந்த பொறி.
     ‘தனிமரங்கள்’ சிறுகதை. உண்மைக்கும் நேர்மைக்கும் உரத்தக் குரல் தேவையில்லை என சொல்லும் கதை. அப்பா ஓடிப்போகிறார். பிள்ளைகளுடன் அம்மா தனியாகிறாள். அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய வருகிறார் சுப்பையா. பல புரளிகள் பல கிசுகிசுக்களுக்கு மத்தியில் அவர் அந்த குடும்பத்திற்கு உதவுகிறார். பிள்ளைகள் வளர்ந்தப் பின்னர், ஊரார்களில் புரளிகள் மீது அவர்களுக்கு சந்தேகம் வருகிறது. ஆளுக்கு ஆள் வேவ்வேறு திசைக்கு சென்றுவிடுகிறார்கள். ஒரு மகன் மட்டும் அம்மாவுடன் இருக்கிறான். அவன் மனதிலும் சந்தேகம் இல்லாமலில்லை. அவனது சந்தேகத்திற்கு அம்மா சொல்லும் பதில் என்ன என்பதுதன கதை.

      ‘அக்கரைப் பச்சை’ வெளிநாடுகளுக்கு சென்று பல அவமானங்களைச் சுமந்து சம்பாதிப்பது எதற்காக ? என்கிற கேள்விக்கான பதில் தான் கதை. ஆனால் இதுவரை யாரும் சொல்லி விடாத காரணம் என்பதுதான் இக்கதையைக் காப்பாற்றுகிறது. இக்கதை முக்கியமான கதையாக மாறுகிறது. வழக்கமாக வறுமை என்போம், கடன் என்போம். ஆனால் நாயகனுக்கு தேவை மரியாதை. ஒர் ஆசிரியர் போல ஒரு காவல் துரையினர் போல , வெளிநாட்டில் வேலை செய்பவர் என்கிற மரியாதை. அதன் ஊடே இங்கு நிலவும் சிவப்பு அடையாள அட்டையையும் சொல்லி இன்னும் தொடரும் அவலத்தை சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர்.

      ‘போராட்டாங்கள்’ . இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்துவிட்ட கதை. வாசித்து முடித்ததும் அன்றைய தினம் முழுக்க இக்கதையே என் நினைவுகளில் இருந்தது. மனசுக்குள் பல கேள்விகள். கதையின் கரு சிறியதுதான் ஆனால் அது எழுப்பும் கேள்வி ரொம்பவும் பெரியது. தனக்கு வரவிருக்கும் மரணத்தை எப்படி ஒரு வீரனாக நாயகன் எதிர்க்கொள்கிறான் என்பதுதான் கதை.

      ‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’. சில கதைகளை மட்டுமே வாசித்த உடன் அருகில் இருப்பவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளத் தோன்றும். இக்கதை அந்த வகையைச் சார்ந்ததுதான். நாம் பிறரின் நன்மைக்காக செய்யும் செயல் அவர்களுக்கு பெரும் தீமையைக் கொடுத்துவிடவும் கூடும் என்பதுதான் கதை. அவளுக்கு தன் உருவ அமைப்பால் திருமணம் தடுங்களாகிப் போகிறது. ஆனால் அவளுக்கு பார்வையற்ற ஒருவரை திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. முதலில் மனம் வலித்தாலும்  பின்னர் தன்னைத்தானே சமாதானம் செய்துக் கொண்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறாள். தனக்கு பார்த்திருக்கும் பெண் மிகவும் அழகானவள் என்பது போன்ற விபரங்கள் மாப்பிள்ளைக்குக் கிடைக்கிறது. பார்வையற்ற ஒருவனை திருமணம் செய்து அந்த பெண் அவள் வாழ்வை வீணாக்க வேண்டாம். அவளாவது நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என திருமணத்தை வேண்டாம் என்கிறார். ஒரு பார்வையற்றவருக்குக் கூட தனக்கு வாழ்க்கைத் தர முன்வரவில்லையே என அப்பெண் தற்கொலைச் செய்துக் கொள்கிறாள். சமயங்களில் பிறருக்கு நாம் செய்யும் நன்மைகள் நமக்கே பெருந்துயரத்தைக் கொடுத்துவிடுகின்றன.

     ‘சராசரி’ என்ற கதை கணவன் மனைவியின் உரையாடலிலேயே நகர்கிறது.  அவர்களுக்குள் ஏற்படும் சிக்கல்தான் கதை.

      ‘வானம் பழுப்பதில்லை’ அம்மாவின் மரணத்தின் பிறகு தன் உடல் உழைக்க ஒத்துழைக்காததால் பிச்சை எடுக்க ஆரம்பிக்கிறான் மகன். அம்மா தனக்கு பாடிய தாலாட்டு பாடல்கள்தான் அவருக்கு மூலதனம். அது தொடர்கதையா இல்லை மாற்றும் வருகிறதா என்பது கதை.

     ‘சீசர்கள் குருசோக்கள் தான்’. கொள்கை பிடிப்புள்ள ஒருவர் காலமாற்றத்தால் எதிர்க்கொள்ளும்  ஏமாற்றமும் புறக்கணிப்பும்தான் கதை.

      ‘ஞானரதம்’. நாயகனுக்கு, எதிர்பாராத சந்திப்பில் தற்கொலைக்கு தயாரான ஒருவனுடனான உரையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. தனக்குத்தானே சொல்லவேண்டியதை எதிரில் உள்ளவருக்கு நாயகன் சொல்கிறார். கதையின் முடிவை கொஞ்சம் மாற்றியிருந்தால் கதை சிறப்பாக கதையாக மாறியிருக்க வாய்ப்பு உள்ளது. அதாவது, அறிவுரை கேட்டவரும் சொன்னவரும் ஒருவர்தான் என்பது போன்ற முடிவைக் கொடுத்திருக்கலாம்.

       ‘எரியாத நட்சத்திரங்கள்’ சுதந்திரம் பெற்றதிலிருந்து எதிர்நோக்கும் சிக்கல், சிவப்பு அடையாள அட்டை. இக்கதை அதன் சிக்கலை சொல்கிறது. மலேசியாவில் பெரும்பாலான கதைகள் இதனை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து எழுதப்படுகிறது. சொல்லுகின்ற விதத்தில் மட்டுமே அக்கதை கவனத்தை பெறுவதும் தோல்வியடைவதும் அமைகிறது.

       ‘மனக்குதிரை’. தற்கொலைக்கு தயாராகும் நாயகனின் வீட்டிற்கு நண்பனின் குடும்பத்தினர் வருகிறார்கள். பிள்ளைகளுடன் ஒரு வாரம் தங்குகிறார்கள். நாயகனுக்கு என்ன தேவை என்கிற தெளிவு கிடைக்கிறது. நாயகனின் தற்கொலை எண்ணம் மாறியதா என்பதுதான் மீதி கதை.

      ‘என் வாரிசுகள்’. கதை அழகாக சொல்லப்பட்டுள்ளது. தனது இறுதி காலத்தின் நிறைவில் முன்னாள் எழுத்தாளர் தன்னைப்பற்றி நினைவுக்கூர்கிறார். யார் யாரையெல்லாம் சந்தித்தார். ஏன் சந்தித்தார் என்பதுதான் கதை. கதையின் முடிவு வாசகர்கள் வருந்தமடைய வைக்கிறது.

       ‘நான் தனியாக இல்லை’. நாற்பது வயதில் பணி ஓய்வு பெற்றுக்கொள்ளும் நபர் அதற்கான நியாயத்தையும் அதன் தேவையையும் சொல்லிச்செல்கிறார். அவரின் வாழ்க்கை அதன் பிறகுதான் அவருக்கான வாழ்க்கையாக மாறும் என நம்புகிறார். தன் குடும்பத்தினரையும் அதற்கு பழக்குகிறார்.

       ‘பழைய தரையில் புதிய படுக்கைகள்’ வீட்டு வேலைக்கு வந்து சிரமப்படும் பொண்ணின் கதை. இவ்வாறான கதைகளின் முக்கியத்துவம் இன்றளவும் இருக்கிறது.

        ‘மனமெல்லாம் கைகள்’. தனது வீட்டில் புறக்கணிப்பை எதிர்க்கொள்ளும் நாயகன் அதற்கு மாற்றாக என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பது கதை.  நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது.

நிறைவாக;

      ஆதி. இராஜகுமாரன் குறித்தும் இந்த சிறுகதை தொகுப்பு குறித்தும் இன்னும் அதிகம் சொல்லலாம். சொல்ல வேண்டும். ஆனால் இக்கதைகளை பலரும் வாசித்து பேச வேண்டும் என்பதுதான் என் அவா. குறிப்பாக மலேசியாவில் எழுத விரும்புகின்றவர்கள் எழுத்தாளர்கள் இவரின் கதைகளை வாசிப்பதன் மூலம் நம்மிடையும் நல்ல கதைகளும் நல்ல கதைசொல்லிகளும் இருக்கிறார்கள் என மேற்கொண்டு பேசலாம். மகிழ்ச்சிக் கொள்ளலாம். மண்ணுலகில் மறைந்தாலும் மலேசிய இலக்கிய உலகம் என்றும் ஆதி.இராஜகுமாரன் பெயர் இருந்துக்கொண்டே இருக்கும்.

-      தயாஜி
  
      


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்