பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பெருமாள்முருகன் சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெருமாள்முருகன் சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டிசம்பர் 12, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் 12/20 -

 


பெருமாள்முருகன் சிறுகதை ‘ஆடு’ 12/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.


********************************************************************************************************

ஏன் போட்டி போடுகின்றோம். வெற்றி பெறுவதற்கும் சாதித்து முன்னணியில் இருப்பதற்கும். அப்படித்தானே சொல்லிக் கொடுத்தார்கள். நாம் அப்படித்தானே நம்பிக் கொண்டிருக்கின்றோம். இந்தப் போட்டி போடும் பழக்கம் ஒரு கட்டத்தில் பொறாமையாக மாறிவிடுவதை நாமும் அனுபவத்திருப்போம்.

உன்னை நான் வென்று காட்டுவேன் என்பதற்கும் என்னுடன் போட்டி போட நீ உயிரோடு இருக்க மாட்டாய் என்பதற்கும் சின்ன வித்தியாசம்தான். அது அவரவர் மனநிலைக்கு ஏற்றார் போல மாறிவிடுகின்றது. அதற்கு அடிப்படையில் இருப்பது  போட்டி போடும் குணத்தை எப்படி அவரவர் கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்தது.

நாம் நேரடியாக போட்டியில் ஈடுபடாமல் நமக்கு விருப்பம் உள்ளவர்கள் போட்டி போடுவதையும் நாம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு இரசிக்கின்றோம். உலகமே போட்டிவிளையாட்டுகளை அதற்குத்தான் நடத்துகிறதோ என்னமோ.

இந்தப் போட்டிபோடும் குணம் இன்றைக்கோ நேற்றைக்கோ வந்ததல்ல. காமமும் பசியும் வேட்டையும் மனிதனின் ஆதி குணமாய் இருப்பது போல, இந்தப் போட்டியும் நமது ஆதிகுணம்தான். அவையெல்லாம் இல்லையென்றால் நாம் இவ்வளவு உற்சாகமாக இவ்வளவு உயரத்திற்கு சென்றிருப்போமா என தெரியாது.

இன்றைய நமது போட்டியைக் கொண்டாடும் மனம் என்னவாக இருக்கிறது என்பதை விமர்சிக்கும் ஒரு சிறுகதையாகத்தான் என்னால் பெருமாள்முருகனின் ‘ஆடு’ சிறுகதையைப் பார்க்க முடிகிறது.

பேருந்தை பிடிக்க நாயகன் ஓடுகிறான்; அவன் எப்படித்தான் ஏறுவான் பார்க்கலாம் என பேருந்தை வேகமாக ஓட்டும் ஓட்டுனர். இந்தக் காட்சியும் அதில் மறைந்திருக்கும் ‘நாயகன் & ஓட்டுனர்’ என்ற இரு தரப்புகளின் உதிக்கும் போட்டியையும் உற்சாகமாய்ப் பார்க்கத் தொடங்கும் சக பயணிகள். ஒருகட்டத்தில் பேருந்தில் ஏற முடியாமல் கீழே விழுகிறான் நாயகன். ஒருவன் கீழே விழுந்ததைவிடவும்; ஓட்டுனரின் வெற்றிதான் பயணிகளை உற்சாகமாக்கி கொண்டாட வைக்கிறது.

மனிதர்கள் போட்டி போடுவதில் ஒருபோதும் பின் வாங்கமாட்டார்கள். அது சக மனிதர்களிடமும் இருக்கலாம் உலநாடுகளிலும் இருக்கலாம்.

சரி இந்தக் கதைக்கு ஏன் ஆடு என பெயர் வைத்திருக்கிறார் எழுத்தாளர் என இந்நேரம் நீங்கள் யோசித்திருப்பீர்கள்.

அதுதான் மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என சொல்லாம் சொல்கிறாரோ என்ற  கேள்வி இக்கதையை வாசித்து முடிக்கையில் நமக்கு தோன்றுவதற்குத்தான்.

டிசம்பர் 11, 2025

_ மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 11/20



பெருமாள்முருகன் சிறுகதை 11/20
முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
***************************************

    கதையை சுவாரஸ்யமாக எழுதலாம். அதேபோல சுவாரஸ்யத்தையே ஒரு கதையாக்கி எழுத முடியுமா? அப்படி எழுதுவதில் ஒரு சிக்கல் உண்டு. இது கதையே இல்லை என்று ஒதுக்கிவிடுவார்கள். அல்லது இது கதைதான் என ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

    அப்படியொரு சுவாரஸ்யத்தைதான் எழுத்தாளர் இங்கு கதையாக்கியிருக்கிறார். அதனை ரொம்பவும் இயல்பாக கொடுத்திருக்கின்றார். இது கதையா இல்லையா என்கிற குழப்பத்துடனேயே இக்கதையை நாம் வாசித்தும் முடித்துவிடுவோம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இக்கதையை வாசித்து முடித்த பின் நம்மால் இக்கதையை ஒதுக்கிட முடியாது. அதுதான் இக்கதையின் சுவாரஸ்யம்.

இன்றைய 11வது சிறுகதை ‘சிரிப்பு’.

    நாயகனுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அதற்கு முன் பேச்சலர் பார்ட்டி போல நண்பர்களுக்கு விருந்து கொடுக்கவேண்டும். முடியாது என்றாலும் விடமாட்டார்கள்; மானப்பிரச்சனை ஆக்கிவிடுவார்கள் என நாயகனுக்கு தெரிகிறது. எப்படியோ நண்பர்களின் விருப்பப்படி தேவையான டாஸ்மார்க் பாட்டில்களை வாங்குகிறார்கள். அங்கேயே சாப்பிட முடியாததால் இன்னொரு நண்பனின் அறைக்கு செல்கிறார்கள்.

    அங்கு குடித்துக்கொண்டே இவர்கள் அடிக்கும் லூட்டி நம்மை சிரிக்க வைக்கும். இளைஞர்களின் வழக்கமான ‘18 ப்ளஸ்’ ஜோக்குகளும் வருகின்றன. திருமணம் செய்யவிருக்கும் நண்பனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: அங்கு நடக்கும் கலாட்டாவின் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். கதையும் அங்கு முடிகிறது.

        இந்த முடிவிற்கு நம்மை அழைத்துச் செல்வதற்கு முன்பாக நாயகன் குறித்து எழுத்தாளர் எழுதியிருப்பது ஒரு சாமன்ய இளைஞனின் இயல்பான வாழ்க்கையை. தன் வாழ்க்கையையும் தன் முன்னேற்றத்தை தானே உருவாக்க வேண்டும் என புரிந்து கொண்ட இளைஞனாக எழுத்தாளர் நாயகனைக் காட்டியிருப்பார். பாதியில் விட்ட அவனது கல்லூரி படிப்பு, காரவேலையில் அவனுக்கு இருந்து திறமை, அவன் சந்திக்கும் மனிதர்கள் என இக்கதையை வாசிக்கும் நாம் நாயகனுடன் நடப்பது போன்ற உணர்வைக் கொடுக்கின்றார்.
    நாம் என்ன தொழில் செய்கிறவர்களாக இருந்தாலும் நாம் நம்மை எப்படியாக நினைத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். இந்தக் கதையின் நாயகன் தன்னை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும் விதம்தான் அவனுக்கு பெண் கிடைக்கவும் திருமணம் நடக்கவும் முக்கியமான காரணம்.

    அப்படியென்ன செய்துவிட்டான் என நீங்கள் தெரிந்து கொள்ள சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாத சிரிப்பு சிறுகதையை வாசித்துவிடுங்கள். சுவாரஸ்யத்தையே ஒரு கதைபோல எழுதினாலும் அங்கும் ஒரு கதையை மறைத்து வைப்பதுதான் எழுத்தாளர்கள் நமக்கு கொடுக்கும் சுவாரஸ்யம் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

டிசம்பர் 10, 2025

- இன்னும் இருக்கின்றன 10 நாட்கள் 10 சிறுகதைகள் -

 


இன்று டிசம்பர் 10. வரும் டிசம்பர் 21க்கு எழுத்தாளர் பெருமாள்முருகனை ‘வல்லினம் விருது விழாவில்’ நண்பர்கள் சந்திக்கலாம். அவரின் வருகையை முன்னிட்டு எளிய வாசகனாய் என்னால் செய்ய முடிந்தது அவரது சிறுகதைகள் குறித்து எழுதுவதுதான்.

நாம் நம்பும் இலக்கியத்திற்கு நம்மால் செய்ய முடிந்ததை மனதார செய்வதில்  நமக்கு எப்போதும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். நான் இப்படி செய்வது இனி வரவிருக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் பாராட்டு பெரும் எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொரு வாசகனும் செய்ய ஏதுவாய் இருக்கும் என நம்புகிறேன்.

எழுத்தாளர் பெருமாள்முருகனை முதன்முதலில் நான் வாசித்தது 2014-ஆம் ஆண்டுவாக்கில்தான். அதுவரையில் அங்கொன்றும் இங்கொன்றும் என நான்  வாசித்த அவரின் கதைகளை ஒரு புத்தகமாக வாங்கி வாசித்தது அப்போதுதான். அதுவும் எனக்கு கிடைத்த சிறுகதைத் தொகுப்பு ‘பீக்கதைகள்’. தலைப்பை வாசிக்கும் போதே எனக்கு என்னமோ போல் இருந்தது. அப்போது இருபது வயதைக் கடந்து முப்பதை நெருங்கியிருந்தேன். ‘பீ’ என்று சொல்லவோ எழுதவோ சிறு தயக்கம்  இருந்த காலக்கட்டம். ‘மலம்’ என்றும் ‘கக்கா’ என்றும் சொல்லிப் பழகிவிட்டதால் ‘பீ’ என்று சொல்வது  எனக்கு அந்நியமாகப் பட்டிருந்தது.

இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசிக்க வாசிக்க, அந்நியத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையும் அவர்களின் பாசாங்கற்ற மொழியும் எனக்கு நெருக்கமாகியது. இந்தக் கதைகளை வாசிக்கும் போதே சந்திக்கும் நண்பர்களிடம் இந்தக் கதைகளை குறித்து பேசுவேன். தொடக்கத்தில் எனக்கு இருந்த அதே அந்நியத்தன்மை அவர்களுக்கு இருந்தது. மெல்ல மெல்ல அந்தக் கதைகளில் சொல்லப்பட்ட வாழ்க்கையை நானும் புரிந்து கொண்டு நண்பர்களுடன் பேசும்போது; அவர்களால் அந்தக் கதைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.

பதினான்கு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு அது. ஒவ்வொரு சிறுகதையிலும் மலமோ கழிவறையோ வந்துவிடும். அதுவும் கதையில் ஒரு முக்கியமான அங்கமாகவோ திருப்பமாகவோ ஒரு பொறியாகவோ வரும்.

அன்றையச் சூழலில் நான் சந்திந்த இன்னல்களும் எனக்கு நிகழ்ந்த எதிர்ப்பாராத சம்பவங்களும் என் இருப்பை கேள்விக்குறியாக்கியதோடு என் வாசிப்பையும் மடைமாற்றியது.  

 இன்று இந்தக் கட்டுரையை எழுதும் பொருட்டு மீண்டும் பெருமாள்முருகன் கதைகளுக்குள் நுழைகிறேன்.  எந்த முன்முடிவுகளும் இல்லாமல் அவரின் ஒரு புத்தகத்தைத் திறந்து அதிலிருந்து ஒரு சிறுகதையை வாசித்து அதையொட்டிய என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன்.

அந்தச் சிறுகதை எனக்கு என்ன கொடுக்கின்றதோ அதையே வெளிப்படையாக எழுதுகிறேன். இது ஒருவகையில் சிறுகதைகளை விரும்பி வாசிக்கும் நமக்கும் ஒரு பயிற்சியாக இருக்கும்.

            இன்றுவரை பெருமாள்முருகனின் பத்து சிறுகதைகளைக் குறித்து தினம் ஒரு  சிறுகதை என எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரையின் முடிவில் அந்தக் கட்டுரைகளுக்கான இணைபையும் இணைக்கின்றேன். வாசிக்காதவர்கள் அல்லது தவறவிட்டவர்கள் ஒருமுறை வாசிக்கலாம்.

            இன்னும் பத்து சிறுகதைகளை எழுதவுள்ளேன். அதனையும் நீங்கள் வாசிப்பீர்கள் என நம்புகிறேன். நான் நம்பும் இலக்கிய செயல்பாடு எங்கெல்லாம் இருக்கிறது என நான் நம்புகிறேனோ அங்கெல்லாம் செல்லவும் என் பங்களிப்பைக் கொடுக்கவும் எனக்கு நானே தடையாக இருக்க விரும்பவில்லை.

இதுவரை எழுதிய கட்டுரைகளின் இணைப்பை கமெண்ட் பாக்சில் கொடுத்துள்ளேன்.

1. ஆட்டம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/1.html

2. பொண்டாட்டி http://tayagvellairoja.blogspot.com/2025/12/blog-post_04.html

3. மாயம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/3.html

4. பசி http://tayagvellairoja.blogspot.com/2025/12/4.html

5. அருவி http://tayagvellairoja.blogspot.com/2025/12/520.html

6. நாய் http://tayagvellairoja.blogspot.com/2025/12/620.html

7. பந்தயம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/720.html

8. அபிசேகம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/820.html

9. தொடை http://tayagvellairoja.blogspot.com/2025/12/920.html

10. தொழில் http://tayagvellairoja.blogspot.com/2025/12/1020.html

வாய்ப்புள்ள நண்பர்கள் எனது இந்த வாசிப்பு அனுபவத்தை வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். இதன்வழி எழுத்தாளரை சந்திக்கும் முன் நீங்களும் அவரது சிறுகதைகளை வாசித்து வருவீர்கள் என நம்புகின்றேன்.

டிசம்பர் 06, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 5/20


பெருமாள்முருகன் சிறுகதை – அருவி 5/20

முன்குறிப்பு:  டிசம்பர் 21-ம்  நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு. 

இப்போது இன்றைய 5வது கதைக்கு போவோம்.

         எப்போது கடைசியாக அழுதீர்கள் என்று யாரையும்  கேட்க முடிவதில்லை. எது கடைசி என சொல்ல முடியாத அளவிற்கு ஆளுக்கு ஆள் அழுது கொண்டிருக்கிறோம். அவ்வப்போது அழுவதும் மன அழுத்தத்திற்கு நல்லது என சொல்லவும் ஆரம்பித்துவிட்டோம். அதற்கு ஏற்றார்ப்போல அழுது முடித்தபின் கோவமும் கவலையும் அதன் சதவிதத்தைக் குறைத்து கொள்கிறது. மனதில் தேத்தி வைத்திருக்கும் சோகமெல்லாம் அழுவதால் கொஞ்சம் குறையுமென்றால் அட்டவணை போட்டும் அழலாம் தவறில்லை என்றே தோன்றுகிறது.

         சோகத்தில் அழுவதும் மனதில் இருக்கும் சோகத்தை வெளியேற்ற அழுவதும் ஒன்றல்ல  வெவ்வேறானது. அழுவதற்கு என்றே கலை இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர்களை நாம் பார்க்கிறோம். தத்தம் துயரத்தை தான் வாசிக்கும் கதைகளில் தான் கேட்கும் பாடல்களில் தான் பார்க்கும் சினிமாக்களில் வைத்து அழுது தங்கள் மனதை தேற்றிக்கொள்கிறவர்கள் ஏராளம்.

          இன்று வாசித்த பெருமாள்முருகனின் சிறுகதை, ஏனோ என்னை அழ வைத்தது. உணவகத்தில் எனக்கு பிடித்த இஞ்சி டீயைக் குடித்துக்கொண்டே படித்துக்கொண்டிருந்தேன். கதையின் முடிவை நெருங்கவும் கண்கள் கலங்கிவிட்டன. கலங்கிய நீர் வெளியேவும் வந்துவிட்டது.

கடையில் வேலை செய்கிற அண்ணன் வந்து விசாரித்தார். வாசித்த கதையை அவரிடம் சொன்னேன். அவரும் அவரது பழைய நண்பர்களும் அவர்களின் குடும்பமும் நினைவுக்கு வந்துவிட்டதாய்ச் சொன்னார். மீண்டும் அந்தக் காலமும் அந்த அன்பும் கிடைக்காது என்றவர் அவர் வேலையைப் பார்க்கச் சென்றார்.

அப்படியென்றால்  இது யாரும் சொல்லாத கதையா என்று கேட்டால்; பதில் இல்லை. பலர் சொன்ன இனியும் சொல்லப்போகிற கதைக்கருதான். அதனை எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய விதம் நமக்கு அந்தக் கதையை நெருக்கமாக்கிவிட்டது.

நான்கு நண்பர்களை மையப்படுத்திய கதை. நான்கில் ஒருவருவருக்கு மட்டும் முதலில் வேலை கிடைக்கிறது. நண்பர்கள் நால்வரும் அருவிக்கு செல்கிறார்கள். சொல்லி வைத்தார்போல முதலில் வேலை கிடைத்த நண்பன் அருவியில் தவறி விழுந்து இறக்கின்றான். மற்ற மூவருக்கும் சிறுசிறு காயங்களே. இவர்கள்தான் பொறாமையில் சூழ்ச்சி செய்து நண்பனைக் கொன்றுவிட்டார்கள் என ஊரும் இறந்தவனின் உறவுகளும் பேசுகின்றன. இவர்களையும் ஏதாவது செய்துவிடுவார்களோ என மற்ற மூவரும் பயப்படுகின்றார்கள். எல்லாவற்றையும் மீறி என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து மூன்று நண்பர்களும் இறப்பு நடந்த வீட்டிற்கு செல்கிறார்கள்.

நம்மால் அங்கு அடுத்ததாய் நடக்கவிருப்பதை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தாலும் நம்மையும் கலங்கடிக்கும் வகையில் இந்தச் சிறுகதையை எழுத்தாளர் முடித்திருப்பார்.

இறந்தவனின்  தாயார் தன் மகனின் இறப்பை எப்படி எடுத்துக்கொண்டார். இந்த மூவறையும் எப்படி பார்க்கிறார் என கதை சொல்லப்பட்டவிதம் நன்றாக இருந்தது. சில சாதாரண விடயங்கள் கூட சொல்லும் முறையில் அசாதாரணமாக மாறிவிடுகின்றன.

பொருமாள்முருகனின் ‘அருவி’ சிறுகதையை நீங்கள் வாசிக்கும் போது உங்களை அழ வைக்கிறதோ இல்லை; உங்களின் நண்பர்களையும் அவர்களுடன் இருந்த நேரத்தையும் நினைத்துப் பார்க்க வைக்கும். முடிந்தவர்களை மீண்டும் தொடர்பு கொள்

நம்மை அழவைக்க பெருந்துயரங்களால் மட்டுமல்ல சிறுசிறு மன்னிப்புகளாலும் முடியும்தானே..

டிசம்பர் 04, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் 3/20 -

 

தினம் ஒரு பெருமாள் முருகன் சிறுகதை – மாயம் 3/20
👉முன்குறிப்பு டிசம்பர் 21-ம் நான் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
இப்போது இன்றைய மூன்றாவது சிறுகதைக்கு போவோம்.

    மாயங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? அல்லது உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் ஏதாவது மாயம் நடத்திருக்கலாம் என எதிர்ப்பாத்திருக்கிறீர்களா? அப்படியெனில் இந்தக் கதை உங்களுக்கான கதை. சர்வ சாதாரணமாக இக்கதையின் முடிவிற்குள் நீங்கள் எந்தக் கேள்வியும் இன்று சென்றுவிடுவீர்கள். மற்றவர்களுக்கு அது சாத்தியமா என வாசித்துதான் சொல்லவேண்டும். அப்படித்தான் எழுத்தாளர் மாயம் என்கிற சிறுகதையை எழுதியிருக்கின்றார்.
    கல்லூரி விடுமுறையில் நாயகன் வீட்டிற்கு வருகின்றான். வந்த சில நாட்களில் தோழி கைப்பேசியில் அழைத்து இரண்டு நாட்களில் அவனது ஊரில் இருக்கும் தங்களின் குலதெய்வத்தை வழிபட வரவிருப்பதாகவும் அவன் வீட்டிற்கும் வந்து விட்டு போகவுள்ளதாகவும் சொல்கிறாள். பேசி முடித்ததும்தான் கதையில் நமக்கும் பிடி கிடைக்கிறது.
    தான் வாழும் சூழலை; உள்ளது உள்ளபடி சொல்லாமல் கொஞ்சம் மேம்பட்ட வாழ்க்கையை வாழ்வதாகவே அவன் தன் கல்லூரி நண்பர்களிடம் சொல்லியிருக்கின்றான். இப்போது தோழி வீட்டிற்கு வந்தாள் என்றால் அவன் சொன்னது எல்லாம் பொய் என தெரிந்துவிடும். அவனுக்கு அது பெரிய அவமானமாக இருக்கும்.
    தோழி வர இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது. அதற்குள் என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என முட்டிமோதுகிறான் நாயகன்.
    அதே சமயம் அம்மாவின் மேல் அவனுக்கு கோவமும் வருகிறது. அதிலும் குறிப்பாக அம்மா மீது அருள் வருவதும் அதனால் அம்மாவிடம் ஏற்படும் மாற்றங்களுமே பேச்சு பொருளாகிறது ஆனால் அம்மாவோ தனக்கு வரும் அருளை கடவுளின் ஆசீர்வாதமாகவே பார்க்கிறார். தோழி வருவதற்கு முன், உடனடியாக வீட்டில் செய்யவேண்டியதை செய்தபடி அசதியில் உறங்கிவிடுகிறான்.
        தூங்கி எழுந்தவன் கண்ணுக்கு எல்லாமே அதிசயமாக இருக்கிறது. அவன் முன் அவனது அம்மா அருள் வந்த நிலையில் அமர்ந்திருக்கின்றார். அம்மா தன் கையில் விபூதியை எடுத்து வீடு முழுக்க ஊதுகிறார். அவன் எதிர்ப்பார்த்ததைவிடவும் வீடு அழகாகிறது. வீட்டில் எல்லாமே மாறுகிறது. கடைசியில் அந்த வீடே மாளிகையாகவும் மாறுகின்றது. அவன் தன் தோழியை வரவேற்கத் தயாரானான் என கதையை முடிக்கின்றார் எழுத்தாளர்.
    மாயம் சிறுகதையின் கடைசியில் மாயம் நிகழ்ந்திருக்கிறது. அது உண்மையில் மாயம்தானா அல்லது அந்த இளைஞனின் கனவு காட்சிகளா என நம் வாசிப்பின் வழி ஒரு முடிவிற்கு வரலாம்.

    நடுத்தர வயது இளைஞர்கள் தங்களின் கனவுகளைத்தான் பொய்களாக சொல்லி தங்களின் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்கிறார்களா என்கிற கேள்வியுமே எழுகிறது. என்றாவது ஒருநாள் அந்த மாயங்கள் அவரவர் வாழ்வில் நிஜமாகவே நடப்பதற்கான ஒத்திகைகளை கனவில் காண்கிறார்கள் போல.
     அந்த இளைஞனின் கனவை இன்னும் கொஞ்சம் ஆழமாக பேசவேண்டியுள்ளது. அம்மாவிற்கு அருள் வருவது அவனுக்கு பிடிக்கவில்லை. அவ்வபோது அது ஏமாற்று வேலை என அம்மாவை கடிந்தும் கொள்கிறான்.
    ஆனால் எதை அவன் நம்பவில்லையோ எதை அவன் ஒதுக்க நினைத்தானோ அதுதான் அவனது எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காய் அவனது கனவில் வருகிறது. உண்மையில் அவன் அதை வெறுக்கின்றானா நேசிக்கின்றான. இம்மாதிரி கனவிற்கும் நினைவிற்குமான இளைஞனின் போராட்டங்களை கடந்துவரும் இளைஞர்களில் நாயகனையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.


- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் 2/20 -


‘தினம் ஒரு பெருமாள்முருகன் சிறுகதை – பொண்டாட்டி 2/20

பெருமாள்முருகனின் ‘பொண்டாட்டி’ சிறுகதை, கொஞ்சம் கிலுகிலுப்பான கதை என்று சொல்லலாம். ஆனால் கதையின் போக்கில் கிலுகிலுப்பைவிடவும் இன்னொன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும். அதனை வாசிக்கும் வரை அப்படியொன்று நடக்கும் என நம்மால் யூகித்திருக்க முடியாது.

ஒரு சிறுகதையில் அதன் எழுத்தாளர் ‘எழுதுகிற இடம்’ எவ்வளவு முக்கியமோ அதே போல அல்லது அதைவிட ஒருபடி மேலேயே அந்த எழுத்தாளர் ‘எழுதாமல் விட்ட இடமும்’ முக்கியத்துவம்  பெறுகிறது என்பதற்கு இச்சிறுகதை ஒரு சான்று.

கதையின் நாயகன் முருகேசுவிற்கு காதலியிடமிருந்து குறுஞ்செய்தி வருகிறது. அவனுக்கு தலைகால் புரியவில்லை. இதற்குத்தான் இத்தனை நாட்களாய் ஏங்கியிருந்தான். பலமுறை முயன்றும் சாத்தியப்படுத்த முடியவில்லை. இன்று மதியம் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள்; மதிய உணவை சாப்பிட தன் வீட்டிற்கு அவனை அழைத்திருந்தாள் காதலி. முதலிரவுக்கு தயாராகும் மாப்பிள்ளை போல தயாராகிறான்.

சீக்கிரமே காதலியின் வீட்டை அடைந்துவிட்டான். அவள் கேட்டுகொண்டதன்படி யார் கண்ணிலும் படவில்லை. அவளும் ஆசையாக அவனை வரவேற்று இனிதான் சமைக்க வேண்டும் என்கிறாள். இருவரும் சமையல் அறைக்கு செல்கிறார்கள். அவள் அவனை ‘புருசா’ என அழைக்கவும் அவன் அவளை ‘பொண்டாட்டி’ என அழைக்கவும் இருவருக்குமெ இனம்புரியாத இன்பம். 

அவன் இறுக்கமாக இருப்பதை உணர்ந்த அவள் அவளின் தந்தையின் கைலியை எடுத்து கட்டிக்கொள்ள சொல்கிறாள். அவளும் குளித்துவிட்டு வருவதாய்ச் சொல்கிறாள். இருவருமே அறைக்குள் நுழைகிறாகள். 

இத்தனை நாட்களாய்க் காத்திருந்த இரு உள்ளங்களும் மெல்ல மெல்ல இணையப்போகும் அந்தத் தறுவாயில்தான் யாரும் எதிர்ப்பாராத ஒரு சம்பவம் நடக்கின்றது. அவளது அக்கா அறைக்கு முன் நின்று கத்துகின்றாள். தன் தங்கையை அறையில் இருந்து இழுத்துப் போட்டு அடைக்கவும் செய்கிறாள். 

முருகேசனுக்கு காதலியின் அக்காவை முன்னமே தெரியும். அது அவனது காதலிக்கும் தெரியும். சொல்லபோனால் அவளைத்தான் முதன்முதலாகப் பார்த்தான். 

கொஞ்சம் சிரிக்காத அவளின் முகம் அவனை கவர்ந்தது. அவளை பின் தொடர்ந்தவன் ஒருநாள் அவளிடம் பேச முயன்றான். அவளோ “மூடிகிட்டு போ… இந்த வேலையை என்கிட்ட வச்சிக்காத...” என்று திட்டிவிட்டு சென்றிருக்கிறாள். இதுபற்றி தன் நண்பனிடம் சொல்லும் போது நடக்கும் உரையாடலை எழுத்தாளர் நாம் சிரிக்கும்படி எழுதியிருப்பார்.

அந்தச் சம்பவம் நடந்து ஆறேழு மாதங்கள் கழித்துதான் அவளது தங்கை என்று தெரியாமலேயே  இவளுடம் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. அவர்கள் இருவரையும் சந்தித்த அக்கா; அவன் தன்னிடம் செருப்படி வாங்கி சென்றவன் என்றும் இவளை கர்ப்பமாக்கிவிட்டு ஓடப்போகிறான் என்றும் சொல்லி தட்டிக்கழிக்கின்றாள். ஆனாலும் தந்தைக்கு அந்த வார்த்தைகளின் மீது நம்பிக்கை இல்லை. நேரடியாக காதலனிடம் அதுபற்றி கேட்கிறாள். நடந்ததை சொல்கிறான். இருந்தும் அவனுடம் பழகுவதை அவன் கை தன் மீது படுவதை எச்சரிக்கையாகவே கையாண்டாள்.

இதற்கிடையில் இருவருக்குள்ளும் பூத்த காதல் அடுத்த கட்டத்திற்கு நகர தயாரானது. யாருமில்லாத சமயம் வீட்டிற்கு அழைத்து அக்காவிடம் இப்போது அடி வாங்கி கொண்டிருக்கின்றாள். 

காதலி அடி வாங்குவதை தாங்காது அங்கிருந்து ஓடக்கூடாது என்று நினைத்து அக்காவை தடுக்கின்றான். அவள் என் பொண்டாட்டி என்றும் சொல்லி காதலியை தன்பக்கம் இழுக்கின்றான். 

அது அக்காவை மேலும் கோவப்படுத்தியிருக்கக்கூடும். அவனையும் கன்னத்தில் பளார் என்று அறைகிறாள். இதுவரை அக்காவிடம் அடிவாங்கி காதலனுக்கு பின்னால் மறைந்து கொண்ட காதலிக்கு சட்டென ஆவேசம் வந்துவிட்டது. ‘புருசா…புருசா..’ என மந்திரத்தை உச்சரித்தபடி அக்காவை பிடித்து இழுத்து தள்ளுகிறாள். அக்காவோ சுவரில் மோதி இரத்தம் ஒழுக கீழே விழுகிறாள் என கதை முடிகின்றது.

இச்சிறுகதையை வாசித்து முடித்தபின் மீண்டும் சிலவற்றை நினைத்துப் பார்த்தேன். தன் காதலன் தன்னை விட்டு தப்பித்து ஓடாமல் ‘அவ என் பொண்டாட்டி’ என சொன்ன பிறகுதான் அவளுக்கும் அந்தச் சூழலை எதிர்கொள்ள துணிச்சல் வந்திருக்கிறது. அங்கு இருவரையும் காதல் காப்பாற்றியது என்றும் சொல்லலாம்தான்.

ஆனால்; இன்னொன்றையும் யோசிக்கும் போதும் மனம் ஏனோ பதட்டமடைகிறது. காதலி வீட்டிற்கு அழைத்திருக்கிறாள். சமையல் அறைக்கு வரவும் அப்பாவின் கைலியைக் கட்டும் அளவிற்கு விடுகிறாள் என்றால் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள் என உறுதியாய்த் தெரிந்து வைத்திருப்பாள். அப்படி இருந்தும் அக்கா அங்கு எப்படி சரியான நேரத்திற்கு வந்தார். 

அதுவும் அதுவரை அக்கா எங்கிருந்திருப்பாள். ஏன் அக்கா அத்தனை ஆவேசம் வந்தவளாய் தங்கையைப் போட்டு அடிக்கின்றாள் என யோசிக்கும் போது; கிலுகிலுப்பு என நினைத்த கதை அதையும் தாண்டி இன்னொரு இடத்திற்கு செல்லத் தொடங்குகிறது.

 அது நாயகன் தன்னிடம் பேச வந்த முதல் நாளுக்கு பின் அவன் வராத நாட்களை நினைத்து அக்கா ஏங்கிய நாட்களாக இருக்கலாமோ என நமக்கு தோன்ற வைக்கிறது.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

டிசம்பர் 03, 2025

மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 1/20

தினம் ஒரு பெருமாள் முருகன் சிறுகதை - ஆட்டம் 1/20


முன்குறிப்பு – வரும் டிசம்பர் 21ம் நாள், ‘வல்லினம் விருது விழா’ நடைபெறுகின்றது. மலேசிய கல்விச் சூழலில் நவீன இலக்கியத்தை வலுபடுத்தியதோடு சிறுவர் இலக்கியத்தை மலேசியாவில் வளர பங்காற்றிய பி.எம்.மூர்த்தி அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. அந்நிகழ்ச்சியில் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள். இம்முறை தமிழகத்தில் இருந்து சிறப்பு வருகையளிப்பதுடன் சிறப்புரையை வழங்கவுள்ளார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.

டிசம்பர் 1 முதல் டிசம்பர் 20 வரை ‘தினம் ஒரு பெருமாள் முருகன் சிறுகதை’ என வாசிப்பு அனுபவத்தை எழுதவுள்ளேன். எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து புலங்காகிதம் அடைவதற்கு முன் அவரின் எழுத்துகளை வாசித்திருக்க வேண்டும் என்கிற பாலபாடத்தை இன்றளவும் கடைபிடித்து வருகிறேன். குறைந்தபட்சம் அவர்களது ஒரு கதையையாவது வாசித்திருக்க வேண்டியது எழுத்தாளர் என நாம் சொல்லிக்கொள்வதற்கு நியாயம் சேர்க்க கூடியது.

அதோடு; நாம் செய்ய நினைப்பதை முன்னமே செய்து அடுத்ததாய் நாம் செய்யவேண்டியதை நமக்கு வழிகாட்டும் ‘விதி சமைப்பவர்களுக்கு’ நாம் செலுத்தும் நன்றி இதுதான்.

பெருமாள் முருகன் சிறுகதைத் தொகுப்புகளில் இருந்து ஏதோ ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து வாசித்து அதுபற்றிய வாசிப்பு அனுபவத்தை இந்த இருபது நாட்களுக்கு எழுதுவேன்.

அவரது சிறந்த கதை என சொல்லப்பட்டதையும் அவரது சுமாரான கதை என சொல்லப்பட்டதையும் இந்த வாசிப்பு பயணத்தில் சேர்க்கவில்லை. தன்னிச்சையாக வாசிக்க கிடைக்கும் சிறுகதையில் எனக்கான கண்டடைதல் என்ன என்பதுதான் இதில் நமக்கு மறைந்திருக்கும் சூட்சுமம்.

 

பெருமாள் முருகன் சிறுகதை 1 – ஆட்டம்

 

உறவுகளை வைத்து நாம் கதையெழுத தொடங்கினால் அதில் பொறாமை என்னும் வலையில் எல்லா உறவுகளையுமே தள்ளிவிட முடியும். இன்னும் சொல்லப் போனால் ஒட்டுமொத்த எல்லா சிக்கல்களுக்குமே இந்தப் பொறாமை என்னும் சிறு பொறிதான் காரண கர்த்தாவாக இருக்க முடியும்.

மாமியார் மருமகளை பேசிய அளவிற்கு மாமனார் மருமகன்கள் பேசப்படவில்லை. அவர்கள் இருவருக்குமான நெருக்கமும் விலகளும் அதிகம் வெளிச்சத்திற்கு வரவில்லை.

அதற்கு இணையாக இன்னொன்றையும் சொல்லலாம். அம்மாக்களையும் மகன்களையும் பேசிய அளவிற்கு அப்பாக்களையும் மகன்களையும் பேசவில்லை. பேசியவரை அதிகமாய் இருப்பது அப்பா கண்டிப்பானவர் மகன் ஊதாறி. அப்பா குடிகாரர் மகன் பொறுப்பானவன். அதைத்தாண்டி அவர்களில் ஆண்களுக்கே உரிய ‘ஈகோ’ சீண்டப்படும் போது எப்படி எதிர்கொள்கிறார்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் யூகிக்க முடியாமல் போகிறது.

 அப்பாவிற்கும் மகனுக்கும் ஏற்படும் இம்மாதிரி சிக்கல்கள் அம்மாக்களுக்கும் மகள்களுக்குமே இருக்குமா என எப்படி தெரிந்து கொள்வது எதை வசிப்பது. இன்னமும் நாம் உறவு முறைகளில் புனிதத்தைக் காப்பாற்றி கொண்டு நடைமுறை வாழ்வில் அதற்கு எதிரான சம்பவங்களையே பார்த்தும் கேட்டும் வருகின்றோம்.

சமீபத்தில் ஒரு செய்தி. தன் மகள் விளையாட்டிலும் சமூக ஊடகங்களிலும் புகழோடும்  பிரபலத்தோடும் இருக்கிறாள் என்பதற்காக தன் மகளையே துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கிறார் ஒரு தந்தை.

பெருமாள் முருகனின் ‘ஆட்டம்’ சிறுகதை அப்பா மகனுக்கு இடையே தொடங்கும் ‘ஈகோ’ சிக்கலைக் காட்டுவதாகப் படுகிறது. அதிலும் குறிப்பாக தன் மனைவி எப்போது மகனுக்கு ஆதரவாக; அது நகைச்சுவையாக இருந்தாலும்  அப்போதே கணவனின் ஈகோ விழித்துக் கொள்கிறது. அந்தப் பதட்டத்தை இச்சிறுகதை இயல்பாகச் சொல்லியுள்ளது.

கொரானா காலகட்டம்.  பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் எடுத்துப் படிக்கும் மகன்,  அப்பா அம்மாவுடன் வீட்டில் இருந்து படிக்கும்படி  ஆகிறது.

மகன் அதிக நேரம் தூங்குவதையும், தங்களுடன் சேர்ந்து சாப்பிடாததையும் அப்பா ஒரு குறையாகவே சொல்கிறார். மகனுக்கு ஆலோசனையும் அறிவுரையும் சொல்லும் அதே சமயம் திட்டவும் செய்கிறார்.

ஒரு சமயம் மூவரும் ஒன்றாக அமர்ந்து தாயம் விளையாடும் வாய்ப்பு ஏற்படுகிறது. முதன் முதலாக விளையாடுவதால் மகனுக்கு விளையாட்டு பிடிபடவில்லை. அப்பா அவனை வழக்கம் போல வழி நடத்திச் செல்கிறார். மெல்ல மெல்ல மகனுக்கு ஒவ்வொன்றாக பிடிபடுகிறது. விளையாடும் சமயத்திலேயே இந்த விளையாட்டுக்கு எப்படி எப்படியெல்லாம் புரோகிராம் எழுதலாம் என யோசிக்கவும் செய்கிறான். அப்பாவிடம் தோற்கவும் செய்கிறான்.

மறுநாள் மகனின் ஆட்டம் சூடு பிடிக்கிறது. மெல்ல மெல்ல முன்னேறுகின்றான். அப்பா எதிர்ப்பாக்காதபடிக்கு மகன் வென்றுவிடுகின்றான். மகனின் வெற்றியால் அம்மாவும் மகிழ்கின்றார். அப்போதே வீட்டில் மீதமிருக்கும் மாவில் குலோப்ஜாமுன் செய்து கொடுக்கின்றான். மகன் சாப்பிட அப்பா தவிர்க்கின்றார்.

நகைச்சுவையான அவர்களின் உரையாடல் அப்பாவை உள்ளுக்குள் ஏதோ செய்திருக்க வேண்டும்.

மறுநாளும் வழக்கம் போல மகன் தூங்கி கொண்டிருக்க; “அவனை எழப்பி சாப்பிட சொல்லுங்க.. நீங்களும் விளையாடனும்ல..?” என சொல்கிறார் அம்மா. அம்மாவின் குரல் அரை தூக்கத்தில் இருந்த மகனுக்கும் கேட்கிறது. உடனே எழுந்து போய் அப்பாவுடன் விளையாட ஆர்வம் ஏற்படுகிறது மகனுக்கு.

இதுநாள் வரை மகனின் நீண்ட நேர தூக்கத்தை ஒரு குறையாக பார்த்த அப்பா; அவனை எழுப்ப வேண்டாம். அசந்து தூங்குகிறான். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் என்றவர் “விளையாட்டுக்கு என்ன  நாளைக்கு ஆடினாப் போவுது” என்கிறார்.

அப்பா சொல்வது மகனுக்கும் கேட்பதாக கதை முடிகிறது.

இச்சிறுகதை தொடங்கும் இடமும் முடியும் இடமும் ஒரே இடம்தான். அது மகன் நீண்ட நேரம் தூங்கிகொண்டிருப்பது ஆனால் இரு இடங்களும் ஒருமாதிரியான முடிவைச் சொல்லவில்லை. அப்பாவின் மனதில் மகன் தன்னை வென்றுவிட்டான் என்பதைவிடவும்; தனக்கு இந்த வீட்டில் இனி முதலிடம் இல்லை என்கிற பதட்டமே அதிகம் இருக்கும்’ அப்பாவிற்கும் மகனுக்குமான ‘ஈகோ’ போராட்டம் இனிதான் தொடங்குமோ என தோன்றுகிறது.

 

 

  

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்